Showing posts with label சமூக வலைத்தளங்கள். Show all posts
Showing posts with label சமூக வலைத்தளங்கள். Show all posts

Wednesday, November 23, 2016

சமூக வலைத்தளங்களில் வெளிப்படும் ஈழத் தமிழரின் வர்க்க முரண்பாடுகள்

"ஈழத் தமிழர் மத்தியில் வர்க்க முரண்பாடு கிடையாது" என்று பாசாங்கு செய்பவர்கள் அனைவரும் வசதியான நடுத்தர வர்க்கத்தினராக இருப்பது அதிசயமல்ல. நிரந்தரமான வருமானம், வசதியான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தமக்கு கீழே உள்ள மக்களின் பிரச்சினைகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள். 

"சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காத" சதிகாரர்களின் முகத்திரை கிழியும் போதெல்லாம் இனவாத போர்வைக்குள் ஒளிந்து கொள்வார்கள். "ஐயோ! தமிழர்களுக்குள் பிரிவினையை உண்டாக்குகிறார்களே...." என்று ஊளையிடுவார்கள். இவர்களது "இனப் பற்று" பணக்காரர்களை பாதுகாக்கும் கவசம் என்பதை மக்கள் உணர விடாது ஒப்பாரி வைப்பார்கள். 

சமூக கட்டமைப்பில் மேலே உள்ள முதலாளிய வர்க்கத்தையும், கீழே உள்ள உழைக்கும் வர்க்கத்தையும் சமரசப் படுத்தி வைத்து ஆதாயம் அடைந்தவர்கள். போலியான வர்க்க சமரசத்தை உடைய விடாமல் பாதுகாக்கும் நோக்கில் "இன ஒற்றுமை", "மத உணர்வு", "கலாச்சார பாரம்பரியம்" போன்ற முகமூடிகளை அணிந்து கொள்வார்கள்.

(ஈழத்) தமிழர்கள் தமக்கிடையிலான வர்க்க முரண்பாடுகளை மறைத்து வந்தாலும், சில நேரங்களில் அவர்களை அறியாமலே வெளிக் கிளம்பி வருகின்றன. புலம்பெயர் நாடொன்றில் வாழும் புதுப் பணக்காரர், தமது மகளின் சாமத்திய (மஞ்சள் நீராட்டு) சடங்கை ஆடம்பரமாக நடத்திய விடயம், சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

சாமத்திய சடங்கு சரியா, பிழையா என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இது போன்ற பணக்காரர்கள் பகட்டுக் காட்டும் ஆடம்பரமான விழாக்கள் பெரும்பான்மை மக்களின் கண்களை உறுத்துவதை மறுக்க முடியாது.

ஆடம்பரத்தை எதிர்ப்பவர்கள், "எம்மக்கள் வறுமையில் வாழ்கையில் இத்தகைய ஆடம்பரம் தேவையா? அந்தப் பணத்தை கஷ்டப் படுவோருக்கு கொடுக்கலாமே?" என்று நியாயம் கூறுகின்றனர்.

அதே நேரம், ஆடம்பரத்தை ஆதரிப்பவர்களும் தமக்கென நியாயம் வைத்திருக்கிறார்கள். "அவனுடைய பணம்... அவன் காசு வைத்திருக்கிறான் அதனால் செலவு செய்கிறான்... நீங்க ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும். கேள்வி எல்லாம் கேட்க கூடாது!" என்று பணக்காரத் திமிருடன் நியாயம் பேசுகின்றார்கள்.

உலகில் உள்ள எல்லா இனங்களைப் போன்றும், (ஈழத்) தமிழர்களும் இரண்டு வர்க்கங்களாக பிளவு பட்ட சமுதாயம் தான். நீண்ட காலமாகவே பரம்பரைப் பணக்காரர்கள் தமது ஆடம்பர விழாக்களை மற்றவர்கள் கண்களுக்கு தெரியா வண்ணம் மூடி மறைத்து வந்தனர். அதனால், எஞ்சிய உழைக்கும் வர்க்க மக்களுக்கும் பணக்காரர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்பது தெரியாமல் இருந்தது.

எண்பதுகளுக்குப் பின்னர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றவர்கள் மத்தியில் இருந்து புதிய பணக்கார வர்க்கம் ஒன்று தோன்றியது. அவர்களின் எண்ணிக்கை குறைவு தான். இருப்பினும், "அற்பனுக்கு பவுசு வந்த மாதிரி" புதிய பணக்காரர்கள் தமது செல்வத்தை விளம்பரம் செய்து பெருமை தேடிக் கொண்டனர். அதில் ஒரு வகை தான் மகளின் சாமத்திய சடங்கை ஆடம்பரமாக நடத்துவது.

பரம்பரைப் பணக்காரர்கள் ஒரு மூடுண்ட சமூகமாக தமது வர்க்கத்தை சேர்ந்தவர்களுடன் மட்டும் பழகுவார்கள். ஈழத்தில் பரம்பரைப் பணக்காரர்களாக இருந்த சமூகம் புலம்பெயர்ந்து, பல தசாப்த காலமாகவே இங்கிலாந்தில் வாழ்கின்றது. அவர்களது வீடுகளில் நடக்கும் ஆடம்பர விழாக்களின் படங்கள், வீடியோக்கள் வெளியே கசிவதில்லை. அந்தளவுக்கு இரகசியம் பேணப் படுகின்றது. அதற்குக் காரணம் அவர்களது வர்க்கத்தினரை தவிர, வெளியில் யாருடனும் பழகுவதில்லை.

ஆனால், புதுப் பணக்காரர்களால் அப்படி நடக்க முடிவதில்லை. பத்து, அல்லது இருபது வருடங்களுக்கு முன்னர் அவர்களும் சாதாரண உழைக்கும் வர்க்கமாக இருந்திருப்பார்கள். அவரது சமூகத்தில் அவர் மட்டும் ஏதோ ஒரு குறுக்கு வழியில் செல்வம் சேர்த்தவராக இருப்பார். முன்பொரு தடவை தனது மகளை சாமத்திய சடங்கிற்கு ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்றவர், புலிகளுக்காக சேர்த்த பணத்தை சுருட்டியவர் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருப்பினும் புதுப் பணக்காரர்களின் ஆடம்பரமான விழாக்களுக்கு பழைய பணக்காரர்கள் செல்வதில்லை. அதனால் இன்னமும் தொடர்பில் உள்ள உழைக்கும் வர்க்க உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. அப்படி அழைக்கப் படுபவர்கள் தமது உறவினர்/நண்பரின் ஆடம்பர களியாட்டத்தை அம்பலப் படுத்தும் வீடியோ, படங்களை வெளியே கசிய விடுகின்றனர்.

அவர்கள் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்? இதை பொறாமை என்று சொன்னாலும் அதுவும் வர்க்க முரண்பாட்டில் இருந்து தான் எழுகின்றது. இதற்கு முன்னர் அவர்கள் தமக்குள் புழுங்கிக் கொண்டிருந்தார்கள். தற்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்.

வர்க்க முரண்பாடுகளால் ஏற்படும் இது போன்ற சச்சரவுகள் ஏனைய இனங்களிலும் நடக்கிறது. ஐரோப்பிய மொழிகளைப் பேசும் சமூகங்களில் கூட இந்தப் பிரச்சினை உள்ளது. டச்சு மொழியில் ஒரு பழமொழி சொல்வார்கள். "Doe maar normaal, dan doe je al gek genoeg!" அதன் மொழிபெயர்ப்பு: "நீ சாதாரணமாக நடந்து கொள், அதுவே மற்றவர்களை கிறங்க வைக்கப் போதுமானது!"

பந்தா காட்டுவது, பகட்டுக் காட்டுவது, இதுவே வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கும் எத்தனை பேர் நம்மிடையே உண்டு? "அந்தஸ்து", "கெளரவம்" முக்கியம் என்பதற்காக பலர் தம்மையறியாமலே ஆடம்பரமாக செலவு செய்கிறார்கள். இப்படியான அந்தஸ்து பார்க்கும் செயல்கள் வர்க்க முரண்பாடுகளை அதிகரிக்கும். அதன் விளைவை தான் மேலே பார்த்தோம்.

இந்த வர்க்க முரண்பாடு புலம்பெயர்ந்த நாடுகளில் மட்டுமல்லாது, யாழ்ப்பாணத்திலும் உள்ளது. ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த வழியில் வர்க்க முரண்பாட்டை வெளிப்படுத்துகிறார்கள். கீழே உள்ளது யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர் ஒருவரின் முகநூல் பதிவு. புட்சிட்டி எனப்படும் நவீன சூப்பர் மார்க்கெட்டில் மரக்கறி வாங்கச் சென்ற தமிழ்த் தேசிய அரசியல்வாதி கஜேந்திரகுமாரை ஒருவர் படம் பிடித்து போட்டிருந்தார்.
 

//ஏன்டா டேய் நீ எங்களை மாதிரி சந்தையிலை மரக்கறி வாங்க மாட்டிய டா பூட்சிற்றில வாங்கினாத்தான் சாப்பிடுவியா?//

இது யாழ்ப்பாணத்தில் வாழும் ஒருவரது முகநூல் பதிவு. இதைக் கண்டித்த எல்லோரும் "பிரபலங்களை பின்தொடர்ந்து படம் பிடிக்கும் தவறை" மட்டுமே சுட்டிக் காட்டினார்கள். இந்தப் பதிவை இட்டவர் ஒரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளராக இருக்கலாம். கஜேந்திரகுமார் கட்சியுடன் நடக்கும் குடுமிப்பிடி சண்டையின் ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால், அதையும் மீறி அவர் சொல்ல வரும் வர்க்க வேறுபாட்டை யாரும் கணக்கெடுக்கவில்லை. இதில் த.தே.கூ. ஆதரவாளர்களும் அடக்கம்.

ஈழப்போருக்கு பின்னரான உலகமயமாக்கல் காரணமாக தற்போது யாழ்ப்பாணத்திலும் Food City என்ற நவீன பல்பொருள் அங்காடிகள் வந்து விட்டன. முன்னொரு காலத்தில், யாழ்ப்பாணத்தவர்கள் அவற்றைப் பார்ப்பதற்கு, மேற்குலகிற்கு செல்ல வேண்டி இருந்தது. இப்போது மேற்குலகு அங்கே செல்கின்றது. அது தான் உலகமயமாக்கல்.

இலங்கையில் இன்று இரண்டு முரண்பாடு கொண்ட வர்க்கங்கள் இருப்பது முன்னரை விட துலக்கமாகத் தெரிகின்றது. நகரங்களில் முளைக்கும் நவீன அங்காடிகளில் ஐரோப்பாவில் உள்ள அத்தனை பாவனைப் பொருட்களும் கிடைக்கும். விலையும் ஐரோப்பிய மட்டத்திற்கு உள்ளது. அதனால் வசதி படைத்தவர்கள், பணக்காரர்கள் மட்டுமே அங்கு சென்று பொருட்களை வாங்க முடியும்.

ஏழைகள், வசதி குறைந்தவர்கள் இன்றைக்கும் வழமையான மரக்கறி சந்தைகளை நம்பி வாழ்கின்றனர். சிலபேர் சாதாரண மரக்கறி சந்தையை விட, புட்சிட்டியில் விலை மலிவு என்று வாதாடலாம். சிலநேரம் இருக்கலாம்.

இருப்பினும், இலங்கையில் வர்க்கம் சார்ந்த இரண்டு வகையான பொருளாதாரங்கள் சமாந்தரமாக சென்று கொண்டிருக்கின்றன. அது தான் இங்கே முக்கியம். பணக்காரர்கள் செல்லும் கடைகள், ஏழைகள் செல்லும் கடைகள் என்று வித்தியாசம் வந்துவிட்டது. அதற்கு இந்தப் பதிவே சாட்சியம்.

கஜேந்திரகுமார் கட்சியுடன் முரண்படும் கூட்டமைப்பு ஆதரவாளர்களும் இந்தப் பதிவை கண்டித்த காரணமும் அது தான். அவர்களும் பணக்கார மேல்தட்டு வர்க்கத்தின் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள் தான். என்ன தான் எதிர்ப்பு அரசியல் பேசினாலும், கடைசியில் எல்லோரும் சங்கமிக்கும் இடமும் இது தான்.

சூப்பர் மார்க்கெட் எனப்படும் பல்பொருள் அங்காடிகள், யாழ்ப்பாணத்தில் சிறிய நகரங்களுக்கும் வந்து விட்டன. அவற்றில் விற்பனையாகும் பொருட்களின் விலைகளும் ஐரோப்பிய தரம் அளவிற்கு அதிகமாக உள்ளன. "ஐரோப்பிய தரத்திற்கு விலை இருந்தாலும் அது ஒரு பிரச்சினை இல்லை" என்று அங்கு வாழும் முதலாளித்துவ ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். யாழ்ப்பாணத்து ஏழைகளும் அங்கு பொருட்களை வாங்கும் அளவிற்கு வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாம்.

அடடே... இலங்கையும் ஒரு பணக்கார நாடாகி விட்டது என்பதை அறியும் பொழுது மெய்சிலிர்க்கிறது. பிறகெதற்கு அங்கிருப்பவர்கள் வேலை தேடி வெளிநாடுகளுக்கு ஓடுகிறார்கள்? ஒரு பணக்கார நாடான இலங்கை, எதற்காக IMF, உலகவங்கியிடம் கடன் வாங்குகிறது?

இலங்கையில் விலைவாசி பல மடங்கு அதிகரித்துள்ளது. பொருட்களின் விலைகள் ஐரோப்பிய விலைகளை ஒத்துள்ளன. உதாரணத்திற்கு ஒரு தரமான சட்டையின் விலை 1600 ரூபாய்கள். அதாவது சரியாகப் பத்து யூரோ! அண்மைக் கால விலையேற்றத்தின் பின்னர், மதுபானங்களின் விலை ஐரோப்பாவை விட அதிகம் என்பது வேடிக்கையானது.

பணக்காரர்களும், மத்திய தர வர்க்கத்தினரும் விலைவாசி உயர்வு குறித்து கவலைப் படாமல் இருக்கலாம். ஆனால், வருமானம் குறைந்த ஏழைகளின் நிலைமை? பெரும்பாலான உழைக்கும் மக்கள் விலைவாசியை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறார்கள்.

பெட்டிக் கடை வைத்திருக்கும் சிறு வணிகர்கள் கூட விலைவாசி உயர்வு குறித்து முறையிடுகிறார்கள். பொருட்களின் விலைகள் ஏறி விட்டதால், கடைக்கு வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் குறைந்து விட்டது. அதனால் முன்னரை விடக் குறைந்த அளவில் விற்பனையாகின்றது. அதை விட தமக்குக் கொடுக்கும் கமிஷனின் அளவையும் குறைத்து விட்டதாக தெரிவிக்கின்றனர்.

பொருட்களின் விலை ஐரோப்பிய தரத்திற்கு உயர்ந்திருந்தால், அங்கு வேலை செய்பவர்களின் சம்பளமும் ஐரோப்பிய தரத்திற்கு சமமாக இருப்பது தானே நியாயம்? விலைவாசியை உயர்த்தியது மாதிரி சம்பளத்தையும் உயர்த்துவது தானே முறை?

இந்தக் கேள்வியை கேட்டால் இனப் பற்றாளர்கள், கருத்துக் கந்தசாமிகள், மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடுகிறார்கள்.


Saturday, July 16, 2016

மாற்று சமூக வலைத்தளங்கள்; இணையத் தணிக்கையை முறியடிப்போம்


கடந்த ஆறு வருடங்களுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருந்த "Tharmalingam Kalaiyarasan" என்ற பெயரிலான எனது முகநூல் கணக்கு, தற்போது நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கான விசேட காரணம் எதையும் தெரிவிக்கவில்லை.

இது மட்டுமே பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ள காரணம்: //We've reviewed your account and determined that it hasn't followed the Facebook Statement of Rights and Responsibilities. The violation of these terms has resulted in the permanent loss of your account. One of our main priorities is the comfort and safety of the people who use Facebook, and we don't allow credible threats to harm others, support for violent organizations or exceedingly graphic content on Facebook. To learn more about Facebook's policies, please review the Facebook Community Standards://

காஷ்மீர் பிரச்சினை பற்றிய பதிவொன்றின் பின்னரே, இந்திய அரசின் அழுத்தம் காரணமாக முடக்கப் பட்டுள்ளது எனத் தெரிகின்றது. (பார்க்க:முகநூல் தணிக்கை செய்த காஷ்மீர் பற்றிய பதிவு) ஏனெனில், அதே பதிவுகளை இட்ட வேறு சிலரின் முகநூல் கணக்குகளும் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ முடக்கப் பட்டுள்ளன. இதனால் பலர் முகநூலில் வேறு பெயரில் இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
எனது புதிய முகநூல் கணக்கு :Kalai Marx (https://www.facebook.com/kalaimarx)
இந்த விபரத்தை உங்களது நட்புப் பட்டியலில் இருப்பவர்களுக்கு தெரியப் படுத்தவும். நன்றி.

அமெரிக்க நிறுவனமான பேஸ்புக் கருத்துச் சுதந்திர மறுப்பில் ஈடுபடுவதும், அடக்குமுறை அரசுக்களுடன் ஒத்துழைப்பதும் இதுவே முதல் தடவை அல்ல. இவ்வளவு காலமும் வணிக ஊடகங்கள் மூலம் மக்களை மூளைச்சலைவை செய்து வந்த அரசுகள், இணையத்தில் கிடைக்கும் சுதந்திரம் குறித்து கவலையடைந்துள்ளன. ஒரு சாமானியனும் தனது கருத்துக்களை உலகிற்கு எடுத்துரைப்பது ஆபத்தான விடயமாக கருதுகின்றன. ஜனநாயகத்தின் பெயல் இயங்கும் அரசுகள், உண்மையில் ஜனநாயக மறுப்பாளர்கள் என்பது நிரூபணமாகின்றது.

ஆகவே, முகநூல் தணிக்கையில் இருந்து தப்புவதற்கு நாம் வேறு வழிகளை நாட வேண்டியுள்ளது. அதாவது "மாற்று முகநூல்" ஒன்றின் தேவை எழுந்துள்ளது. எனக்குத் தெரிந்த வரையில் தற்போதைக்கு இரண்டு தெரிவுகளை அறிமுகப் படுத்த முடியும். நீங்களும் அதில் இணைந்து கொள்வதுடன், உங்கள் நண்பர்களையும் அதில் சேருமாறு ஊக்குவிக்க வேண்டுமென எதிர்பார்க்கிறேன்.

“Minds.com” என்ற மாற்று சமுக வலைத்தளம் Bill Ottman மற்றும் அவரது நண்பர்களால் தொடங்கப்பட்டது. அவர் அமெரிக்காவைச் சார்ந்த “சுதந்திர மென்பொருள்”, “சுதந்திர இணையம்” ஆகியவற்றில்  நம்பிக்கை கொண்ட ஒருவர். (https://en.wikipedia.org/wiki/Minds).

அதில் வெளியிடப் படும் எமது தகவல்கள் பாதுகாக்கப் படுகின்றன. அரசுக்களோ, அல்லது வணிக நிறுவனங்களோ அவற்றை பார்வையிட முடியாது. இதற்கு மாறாக, பேஸ்புக் நிறுவனம், எமது தகவல்களை அரசுகளும், வணிக நிறுவனங்களும் பார்வையிட தாராளமாக அனுமதித்து வருகின்றது. அதன் மூலம் இலாபம் சம்பாதிக்கிறது. அந்த அவலத்தில் இருந்து பாவனையாளர்களை மீட்பதே, மைன்ட்ஸ் உருவாக்கியவர்களின் நோக்கமாக உள்ளது.

மேலதிக தகவல்களுக்கு பத்திரிகையில் வந்த இந்தக் கட்டுரையை வாசிக்கவும்:

பேஸ்புக் மாதிரி ரஷ்ய மொழி பேசும் மக்களிடையே பிரபலமான சமூக வலைத்தளம். ரஷ்யாவை தளமாக கொண்டு இயங்குவதால், இது "ரஷ்ய பேஸ்புக்" என்றும் அழைக்கப் படுகின்றது. ஆங்கிலம் மற்றும் பிற உலக மொழிகளிலும் பாவிக்க முடிகின்றது. தமிழ் மட்டும் இல்லை. தமிழ் பேசும் பாவனையாளர்கள் மிக மிகக் குறைவு. எதிர்காலத்தில் அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்போம்.

மேற்குறிப்பிட்ட இரண்டு மாற்று சமூகவலைத்தளங்களிலும் ஏற்கனவே எனது கணக்குகள் உள்ளன. ஆகவே நீங்களும் என்னோடு நண்பர்களாக இணைந்து கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். 

Minds இல் எனது கணக்கு:https://www.minds.com/Kalaiyarasan 

VK இல் எனது கணக்கு:https://vk.com/kalaiyarasan

எனது பழைய முகநூல் கணக்கு முடக்கப் பட்டதை விமர்சித்து சில நண்பர்கள் பதிவிட்டுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றிகள்.

நண்பர்களின் ஆதரவுப் பதிவுகள்:

Nandha Kumaran: நெதர்லாந்தை சேர்ந்த தோழர் கலையரசனின் பேஸ்புக் கணக்கு பேஸ்புக் நிர்வாகத்தால் முடக்கப்பட்டுள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பேஸ்புக் இந்த செயலை செய்துள்ளதாக தெரிகிறது. பேஸ்புக்கின் இந்த நடவடிக்கை கருத்து சுதந்திரத்தின் மீது கார்ப்பரேட்டுகளின் குறிப்பாக பேஸ்புக்கின் கைவரிசையாக பார்க்க வேண்டியுள்ளது. சாதி, மதவெறி ஊட்டும் பிரச்சாரங்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் பேஸ்புக், சமூக நலன் சார்ந்த பதிவுகளை முடக்குவதன் பொருள், அதன் வர்க்க பாசத்தை காட்டுவதல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும் ? (July 13)

Chinthan Ep: செய்தி: தோழர் கலையரசனின் பேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தைப் பொருத்தவரையில், நாம்தான் அவர்களது "விற்பனைப் பொருள்". அதிகமான பயனர்கள் அவர்களுக்குத் தேவை. அதனால்தான் யாராவது ஒருவரின் கருத்து பிடிக்காமல் ஏராளமானோர் எதிர்த்து பேஸ்புக்கிற்கு ரிப்போர்ட் செய்தால், உடனடியாக அந்த நபரின் அக்கௌன்டை முடக்குகிறது. ஏனெனில் பேஸ்புக்கிற்கு எண்ணிக்கைதானே முக்கியம். காசா? கருத்துசுதந்திரமா? என்றால், காசுதான் என்பார்கள் கார்ப்பரேட்டுகள்.
பின்குறிப்பு: தேசப்பற்றாளர்களே(?!?) காஷ்மீர் குறித்து என்ன சொன்னாலும் இப்படி டென்ஷன் ஆனா எப்படி? (July 13)

Joshua Isaac Azad: Facebook has permanently disabled the accounts of Marxist writer Kalaiyarasan and brother Ilyas Muhammed for their stand against Indian state terrorism on Kashmiris. Let's stand against Facebook censorship. Their new accounts Kalai Marx; Ilyas. 
‪#‎StandWithKashmir‬ ‪#‎KashmirUprising‬ ‪#‎MartyrBurhanWani‬

Facebook has disabled the accounts of comrades Tharmalingam Kalaiyarasan, Subha D and blocked brother Ilyas Muhammed Raffiudeen for their stand against war crimes committed by the Indian state on Kashmiris. They've been exposing the Brahmindia's lies about Kashmir in the Tamil space. Recently they shared my post on martyr Burhan Wani for which I was blocked earlier, now they are. ‪#‎StandWithKashmir‬ ‪#‎TamilsWithKashmiris‬
Martyr ‪#‎BurhanWani‬
இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவு:
முகநூல் தணிக்கை செய்த காஷ்மீர் பற்றிய பதிவு

Saturday, December 20, 2014

வேலை வெட்டி இல்லாமல் அல்லது காசுக்காக இதை எழுதவில்லை


சமூகவலைத் தளங்களில் எழுதும் என்னைப் போன்ற பலர், வேலை வெட்டி இல்லாதவர்கள் அல்ல. எங்கள் எல்லோருக்கும் வாரத்திற்கு நாற்பது மணிநேர வேலையும், குடும்பப் பொறுப்புகளும் இருக்கின்றன. ஏனென்றால், நாங்கள் எல்லோரும் உழைத்து வாழ வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்ட உழைக்கும் வர்க்க மக்கள். எங்களில் யாரும், வேலையே செய்யாமல் பணத்தாள்களை மட்டும் எண்ணிக் கொண்டிருக்கும் சோம்பேறி முதலாளிகள் அல்ல.

 "உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் நேரங்களில், சமூக வலைத் தளங்களில் எழுதுங்கள்" என்று, சில தினங்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு சிலர் பின்வருமாறு எதிர்வினையாற்றி இருந்தனர்:
//எங்களுக்கு யாராவது காசு கொடுத்தால் எழுதுகிறோம்!//

இந்தக் கூற்றின் மூலம் அவர்கள் தெரிவிக்க விரும்புவது இது தான்:

//நாங்கள் அடிமைகள் தான். மறுக்கவில்லை. யார் பணம் கொடுத்தாலும் உழைப்பை விற்கத் தயாராக இருக்கிறோம். எங்களுக்கென்று ஒரு தனித்தன்மை, சுயகெளரவம் கிடையாது. சுதந்திரத்தை பற்றியும் அக்கறை இல்லை.//

"நீங்கள் யாருடைய ரொட்டியை சாப்பிடுகிறீர்கள்? அவருடைய வார்த்தைகளைப் பேசுகின்றீர்கள்." என்பது ஒரு பழமொழி. எங்களுக்கு காசு கொடுப்பவர் யாராக இருந்தாலும், அவர்கள் சொல்வதை மட்டும் தான் எழுத முடியும். அதனால் தான், வணிக நோக்கில் இயங்கும் ஊடகங்கள் எல்லாம், குறிப்பிட்ட தகவல்களை மட்டுமே வெளியிடுகின்றன. ஏனென்றால், அவர்களுக்கு காசு கொடுக்கும் விளம்பரதாரர்கள் விரும்புவதை மட்டுமே வெளியிட முடியும். மற்றவை சுயதணிக்கை செய்யப்படும்.

உதாரணத்திற்கு, ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் இனவாதமாக கூட இருக்கலாம். இனவாதம் கவர்ச்சிகரமாக இருப்பதால், அதற்கு சந்தையில் கேள்வி அதிகமாக இருக்கின்றது என்பதால் தான், முதலாளிகளும் விளம்பரம் கொடுத்து ஊக்குவிக்கிறார்கள்.

இலங்கையில் உள்ள சிங்கள அரசியல்வாதிகள் மத்தியில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் இன்று இனவாதம் பேசுபொருளாக உள்ளதற்கு காரணம், அதற்கான சந்தை மதிப்பு அதிகம் என்பதால் தான். எப்படியான அரசாங்கம் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதையும், மக்களது அரசியல் கருத்து எதுவாக இருக்க வேண்டும் என்பதையும், சந்தை தான் தீர்மானிக்கிறது.

"முதலாளித்துவம் தனது சவக்குழியை தானே தோண்டுகின்றது." என்றார் கார்ல் மார்க்ஸ். பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூகவலைத் தளங்கள் யாவும், முதலாளித்துவத்தின் இலாபவெறிக்காக உருவாக்கப் பட்டவை தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், மறுபக்கத்தில் அது ஜனநாயகத்திற்கான அசைவியக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.

முதலாளிகள் விரும்பும் தகவல்களை மட்டுமே வெளியிட்டு வந்த வணிக ஊடகங்கள், தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக நின்று பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. மேலை நாடுகளிலேயே, பல பிரபலமான பத்திரிகைகள் நடத்த முடியாமல் முடங்கிப் போயுள்ளன. அந்த இடத்தை சமூக வலைத்தளங்கள் மெல்ல மெல்ல ஆக்கிரமித்து வருகின்றன.

இன்று பிரபலமான வணிக ஊடகங்களே, தமது தகவல்களை இணையத்தில் இருந்து பெற்றுக் கொள்கின்றன என்பது இரகசியம் அல்ல. இணையத் தொடர்பு வைத்திருக்கும் மக்கள், தமது சொந்தப் பிரச்சினைகள் பற்றியும், சுற்றாடலில் நடக்கும் மாற்றங்கள் பற்றியும் எழுதி வருகிறார்கள். அதன் மூலம், முன்னொருபோதும் இல்லாத சமூக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது.

மீண்டும் ஒருமுறை கூறுகிறேன். சமூகவலைத் தளங்களில் சமூகப் பிரச்சினைகள் பற்றிப் பேசும் யாரும் "வேலை வெட்டி இல்லாத சோம்பேறிகள்" அல்ல. உழைத்துக் களைத்து வீடு வந்து, எமது சொந்த அரசியல் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் உழைக்கும் வர்க்கம். இவ்வளவு காலமும் வணிக ஊடகங்களால் ஒதுக்கப்பட்டு வந்த குரலற்றவர்கள்.

தங்களது ஆன்மாவைத் தொலைத்த அடிமைகள், யாரோ ஒரு முதலாளி கொடுக்கும் பணத்திற்காக விபச்சாரம் செய்யலாம். ஆனால், நாங்கள் சுதந்திரமான மனிதர்கள் என்ற தன்முனைப்பு எங்களுக்கு இருக்கிறது. அதனால் தான் எழுதுகின்றோம். ஏனென்றால், ஜனநாயகம் என்பது மக்களுக்காக மக்களால் நடத்தப் படும் நிர்வாகக் கட்டமைப்பு ஆகும். பெரும்பான்மை மக்களின் பெயரில், ஒரு சிறு மேட்டுக்குடியினர் தீர்மானிப்பது ஜனநாயகம் ஆகாது. அதை வேண்டுமானால் "பண நாயகம்" என்று அழைக்கலாம்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்: