Showing posts with label நாகர்கள். Show all posts
Showing posts with label நாகர்கள். Show all posts

Monday, August 20, 2012

காஷ்மீரில் மறைந்த நாகர்களின் நாகரீகம்

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 14]

(பதினான்காம் பாகம்)

19 ம் நூற்றாண்டில், பிரிட்டிஷ் காலனியாக இருந்த இந்தியாவில் தான், முதன்முதலாக "ஆரிய சித்தாந்தம்" தோன்றியது.  இந்தியா என்ற தேசத்திற்காக, அரசியல் நிர்ணய சட்டம் எழுத வேண்டிய நேரம் வந்தது. அதற்காக ஒரு பிரிட்டிஷ் நீதிபதி சமஸ்கிருதம் படித்தார். சமஸ்கிருதத்தில் ஆழ்ந்த புலமையடைந்த நீதிபதிக்கு, ஒரு கலாச்சார அதிர்ச்சி காத்திருந்தது. ஆங்கிலம், ஜெர்மன், லத்தீன், கிரேக்கம், ஆகிய ஐரோப்பிய மொழிகளுக்கும் சமஸ்கிருதத்திற்கும் இடையில் நிறைய ஒற்றுமை இருந்ததை கண்டுபிடித்தார்.  அந்த தகவல், ஐரோப்பிய அறிவுஜீவிகள் மத்தியில் ஆர்வத்தை உண்டாக்கியது. பல ஐரோப்பிய தத்துவ அறிஞர்கள், இந்திய தத்துவ இயல், இந்து மதம், பௌத்த மதம், ஆகியவற்றை பற்றி அறிந்து கொள்வதற்காக இந்தியாவுக்கு படையெடுத்தார்கள்.

அவர்களின் தேடல் இந்தியாவுடன் மட்டும் நிற்கவில்லை. இலங்கை, திபெத் (அன்று சுதந்திரமான தனிநாடு) ஆகிய  நாடுகளுக்கும் சென்றார்கள். சமஸ்கிருதம், பாளி மொழிகளில் எழுதப் பட்ட இலக்கியங்களை எல்லாம் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்த்தனர். அவர்கள் கற்றறிந்த பண்டைய இலக்கியங்களில் இருந்து, தாமாகவே சில முடிவுகளுக்கு வந்தார்கள். அவர்களது ஆராய்ச்சி பெரும்பாலும் தொல்பொருள் துறை, அகழ்வாராய்ச்சி, பண்டைய வரலாறு, போன்ற "நாகரிக உலகிற்கு சம்பந்தமற்ற" விடயங்களாக இருந்தன. ஆனால், எமது இன்றைய கருத்துருவாக்கம், சிந்தனை முறை, அரசியல்-மத நம்பிக்கைகள், எல்லாம், குறிப்பிட்ட சில ஐரோப்பிய அறிவுஜீவிகளால் உருவாக்கப் பட்டவை என்பதை பலர் அறிவதில்லை. 

ரிக் வேதத்தை மொழிபெயர்த்தவர்கள், அதனை முதலில் இந்துக்களின் புனித நூல் என்றார்கள். ஆனால், விரைவிலேயே அது ஆரியர்களின் வரலாற்று நூலாக புரிந்து கொள்ளப்பட்டது. வேத நூல்களில் எந்த ஒரு இடத்திலும், இந்து என்ற சொல்லே எழுதப் பட்டிருக்கவில்லை. அதனால், அதனை ஆரியர்கள் என்ற இனத்தை சேர்ந்த மக்களின் நூல் என்று கருதலாமா? பைபிளை (பழைய ஏற்பாடு) "யூதர்களின் வரலாற்றைக் கூறும் நூல்", என்று படித்தவர்களால் அப்படித் தான் புரிந்து கொள்ள முடியும். இந்திரனும், அவனது மக்களும், குதிரை வண்டிகளில்,  கால்நடைகளை ஓட்டிக் கொண்டு வந்த கதைகள் செய்யுள்களாக இயற்றப் பட்டுள்ளன. ஆனால், அவர்கள் ஆரியர்கள் என்றால், அந்த இன மக்கள் எங்கிருந்து வந்தார்கள்? அவர்களின் தாயகம் எங்கேயுள்ளது? அதைப் பற்றி எந்த தகவலும் இல்லை.

ரிக் வேதத்தில் எழுதப் பட்டுள்ள அரசர்கள்/தலைவர்கள்  எல்லாம் ஆரியர்களும் அல்ல.  ஆரிய இனக்குழுக்களுக்கு திராவிட அரசர்கள் தலைமை தாங்கியுள்ளமை, அவர்களின் பெயர்களைப் பார்த்தாலே தெரிகின்றது. (The Horse, the Wheel, and Language: How Bronze-Age Riders from the Eurasian Steppes Shaped the Modern World, David W. Anthony) ஆகவே, இங்கே ஒரு குழப்பம் எழுகின்றது. ஆரியர்கள் என்றால் யார்? அது ஒரு இனத்தைக் குறிக்கும் சொல்லா?  முக்கியமாக, ஆரியர் என்பது வெள்ளையினத்தைக் குறிக்கும் சொல்லா? 19 ம் நூற்றாண்டு, ஐரோப்பிய அறிவுஜீவிகளுக்கு அந்தக் குழப்பம் இருக்கவில்லை.  "ஆரியர் என்பது வெள்ளயினத்தைக் குறிக்கும்.வெள்ளையினக் குடியேறிகளின் இந்தியப் படையெடுப்புகளைப் பற்றிய கதைகள் தான் ரிக் வேதத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளன." இத்தகைய ஒரு தலைப்பட்சமான முடிவுகள் தான், பிற்காலத்தில் நிறவெறிக் கொள்கை வகுப்பாளர்களால் ஹிட்லருக்குப் போதிக்கப் பட்டன.

"இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது" என்று, அர்த்தமில்லாமல் எழுந்தமானமாக தலைப்பிடவில்லை. இந்து என்ற சொல், இந்தியாவில் வாழ்ந்த புராதன மத நம்பிக்கைகளை கொண்ட மக்களைக் குறிப்பதற்காக, பிரிட்டிஷ் காரர்களால் சூட்டப் பட்ட பெயராகும். முன்பு இஸ்லாமிய-அரேபியர்கள் பாவித்த சொல்லை, பிரிட்டிஷார் கடன் வாங்கி இருந்தனர். இந்துக்களின் புனித சின்னமாக கருதப்படும் ஸ்வாஸ்திகா, ஹிட்லரினால் நாஜிக் கட்சியின் சின்னத்திற்காக கடன் வாங்கப் பட்டது. அது தொடர்பாக, இந்துக்களின் பூர்வீகத்தை ஆராய அக்கறை கொண்டிருந்தார். அதற்காக சில தூதுவர்களை திபெத் வரை அனுப்பினார். (1938–1939 German expedition to Tibet, http://en.wikipedia.org/wiki/1938%E2%80%931939_German_expedition_to_Tibet) அவர்கள், திபெத்தில் இந்துக்களின் தாயகத்தை கண்டுபிடித்தார்களா, இல்லையா என்பது தெரியாது. அதற்குள் நாஜி ஜெர்மனி போரில் தோற்று விட்டது. சில வருடங்களில், தீபெத் சீனாவினால் ஆக்கிரமிக்கப் பட்டது. உண்மையில், ஜெர்மனியர்கள் மத்திய ஆசியாவிலும்  இந்துக்களின் வேர்களை தேடிச் சென்றிருப்பார்கள். ஆனால், அன்று அந்தப் பகுதி முழுவதும், எதிரியான சோவியத் யூனியனின் பகுதியாக இருந்தது. 

"இந்து மதம் உலகிலேயே மிகவும் பழமையான மதம். அதனை தோற்றுவித்தவர் யார் என்பது தெரியாது." என்று இந்துக்கள் பெருமையாக கூறிக் கொள்கின்றனர். சரி, பழமையான மதம் என்பதற்கு எதை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்?  ரிக் வேதத்தை விட, காலத்தால் பழைமையான வேறு நூல்கள் ஏதாவது கிடைக்கின்றனவா? ரிக் வேதம், இந்துக்களின் புனித நூல் என்றால், ஆரியர்களின் வரலாறும் அதில் மட்டுமே எழுதப் பட்டுள்ளது. ஆகவே, இந்து மதம் ஆரியர்களின் மதம் என்ற முடிவுக்கு வருகின்றனர். ஆனால், அது சரியா? இந்து மதம் ஆரியர்களுடையது என்றால், ஆரியர்கள் வெள்ளையினத்தவர் என்றால், அவர்களின் பூர்வீகம் எது? சீனாவில் உள்ள திபெத்தில் தான், இந்து மத சின்னங்கள் இன்றைக்கும் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றன.

யாரும் எளிதில் நெருங்க முடியாத, இமய மலை உச்சியில் இருக்கும் நாடு என்பதால், அந்நிய நாகரீகங்களால் பாதிக்கப்படவில்லை. மேலும், "சிவபெருமான் வசிக்கும்" கைலாய மலை, "சிவனின்  உச்சந் தலையில் இருந்து உற்பத்தியாகும்" கங்கை நதியின் மூலம், போன்ற பல புனித ஸ்தலங்கள் திபெத்தில் உள்ளன. சிவபெருமான் கழுத்தை சுற்றி இருக்கும் பாம்பு பற்றிய கதையும், அந்தப் பிரதேசத்தில் பிரசித்தமானது. முன்னொரு காலத்தில், கருட இனத்தவர்களுக்கும், நாக இனத்தவர்களுக்கும் இடையில் கடும் போர் நடந்தது. போரில் நாக இனத்தை அழிய விடாமல், சிவன் பாதுகாத்ததாக ஒரு கர்ணபரம்பரைக் கதை உலாவுகின்றது.  (சில புராணங்கள் நூல் வடிவில் எழுதப் படாமல் மறைந்து விட்டன. அப்படி ஒரு புராணத்தில் இருந்த கதை.) அந்தக் கதைகளை, காஷ்மீர், திபெத் பகுதியில் வாழும் மக்கள் சொல்லக் கேட்டு சிலர் எழுதியுள்ளனர்.

காஷ்மீரின் பண்டைய சரித்திரம், நாகர்  இன மக்களே காஷ்மீரின் பூர்வகுடிகள் என்று கூறுகின்றது. காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம்களும், இந்துக்களும் அதனை நம்புகின்றனர். இன்றைக்கும் காஷ்மீரில், நதி நீர் உற்பத்தியாகும் மூலத்தை "நாகா" என்ற பெயரில் அழைக்கின்றனர். அந்த இடங்களில் நாகதேவதைகள் வசிப்பதாக நம்புகின்றனர். அது மட்டுமல்ல, வருடத்தின் முதலாவது பனிப் பொழிவை, "நிலா பண்டிகை" என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். காஷ்மீர் மக்களுக்கு மட்டுமே சிறப்பான, இந்துக்கள், முஸ்லிம்களுக்கு பொதுவான பண்டிகை அது.  நமது காலத்தில், எழுத்து வடிவில் வாசிக்கக் கிடைக்கும் பண்டைய இலக்கியம் ஒன்றின் பெயர், "நிலா மத புராணம்". (The Nilamata Purana, http://www.koausa.org/Purana/index.html)  பிற்போக்கான இந்து மத புராணங்களோடு ஒப்பிடும் பொழுது, நிலா மத புராணம் ஒரு இனத்தின் அல்லது நாட்டின், அனைத்து அம்சங்களையும் கூறுகின்றது. அதாவது, கடவுளரின் வீரசாகசக் கதைகளும் உண்டு. அதே நேரம், வரலாறு, சட்டம், பூகோளம், சமூகவியல், மதச் சுதந்திரம், பெண் சுதந்திரம், போன்ற பல துறைகளைப் பற்றி குறிப்பிடுகின்றது. 

அதை வாசிக்கும் பொழுது, இன்றைய "மேற்கத்திய ஜனநாயக சமூகம்" போன்றதொரு நாகரிக சமுதாயம், காஷ்மீரில் இருந்துள்ளமை தெரிய வருகின்றது.  பிராமணர்களுக்கு உயர்ந்த அந்தஸ்து கொடுத்தாலும், சூத்திரர்களை கீழானவர்களாக கருதவில்லை. மன்னனின் முடிசூட்டு விழாவில் அவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. பெண்கள் பொது இடங்களில் நடக்கும் பண்டிகைகளில் கலந்து கொள்ள முடிந்தது. விசேட தினங்களில் நடக்கும் நீர் விளையாட்டுகளில், ஆண்களோடு பெண்களும் சேர்ந்து பங்குபற்றினார்கள். நாக தெய்வத்தை வழிபடும் மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டாலும், பிரம்மா, சிவன், விஷ்ணு, புத்தர்  போன்ற தெய்வங்களை வழிபடுபவர்களுக்கும், மதச் சுதந்திரம் இருந்தது. மன்னன் எப்போதும் நாக இனத்தை சேர்ந்தவனாக இருந்த போதிலும், "மன்னன் சட்டத்திற்கு கீழ்ப்படிய வேண்டும்!" இத்தகைய "சட்டத்தின் ஆட்சி", 19 ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பா முழுவதும் நடைமுறைக்கு வந்தது என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. 

நிலாமத்த புராணத்தில் குறிப்பிடப் படும், நாகர்களின் மன்னனின் பெயர் நிலா. (வாசுகி என்பதும் ஒரு நாக இன மன்னனின் பெயர் தான். நிலா, வாசுகி இருவரும் நாக (பாம்புத்) தெய்வங்களாக மக்களால் வழிபடப் பட்டு வந்தனர்.) நிலா வின் தந்தை, காசியப்ப முனிவர். அவரின் பெயரில் இருந்து காஷ்மீர் (காஷ்யப்பா) என்ற பெயர் வந்ததாக கூறுகின்றனர். ஆதி காலத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும், மலைகளால் அணைக்கட்டு போல சூழப்பட்ட நீரேரி போன்று காணப்பட்டதாம். நீர் அகற்றப் பட்ட பின்னர், நாகா இன மக்கள் வந்து குடியேறினார்கள். இது ஒரு காலத்தில், ஐரோப்பாவில் இருந்து ஆசியா வரையிலான பகுதி, பனியினால் மூடப்பட்டு கிடந்ததது என்ற விஞ்ஞான அறிவியலை நினைவு படுத்துகின்றது. பனி உருகும் பொழுது, பெரும் நீர்ப் பெருக்கெடுத்து, மலைகளை ஊடறுத்து ஓடிய அடையாளங்களை கிரேக்க நாட்டில்  இப்பொழுதும் காணலாம். 

பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர், காஷ்மீரில் குடியேறிய நாகா இன மக்கள், புதிய குடியேறிகளான மனுவின் மக்களுடன் (ஆரியர்கள்) கூடி வாழ வேண்டியேற்பட்டது. மேற்கே இருந்து வந்த மணவர்கள் என்ற இன்னொரு இனம் பற்றியும் குறிப்பிடுகின்றது. அவர்களோடு மோதல் ஏற்பட்டு, பின்னர் (கடவுளர் தலையிட்டு) சமரசம் செய்து வைத்தார்கள்.  (நிலாமத்த புராணம், Glimpses of Kashmiri Culture, The Nilamata Purana,  http://ikashmir.net/glimpses/nilmatapurana.html )  இந்த மணவர்கள், ஆப்பிரிக்காவில் இருந்து வந்த திராவிடர்களாக இருக்கலாம்.  ஆப்பிரிக்க திராவிடர்கள் இந்திய உப கண்டத்தில் குடியேறிய காலத்தில், அங்கே நாகா இன மக்கள் வாழ்ந்து வந்தனர். ஒரு சில இடங்களில் மோதல்கள் இடம்பெற்றாலும், பல இடங்களில் இரண்டு இனங்களும் கூடிக் கலந்து வாழ்ந்தன. நாகர்-திராவிடர் இனக்கலப்பு, இலங்கைத் தீவு வரையில் இடம்பெற்றுள்ளது. (பார்க்க: The Ruling Races of Prehistoric Times in India, South- Western Asia, and Southern Europe, By James Francis Katherinus Hewitt) பண்டைய காலத்தில், திராவிடர் என்ற சொல் இருக்கவில்லை. ரிக் வேதத்தில் தாசர்கள், மகாவம்சத்தில் இயக்கர்கள், இவ்வாறு பல பெயர்களால் அழைக்கப் பட்டு வந்தனர். 

இந்து புராணங்களுக்கும், சீனப் புராணங்களுக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் காணப்படுவது ஒன்றும் புதினமல்ல. உதாரணத்திற்கு சில: விஷ்ணுவின் இரண்டாவது அவதாரம் ஆமை. சிருஷ்டிப்பு பற்றிய சீனக் கதையிலும் ஆமை முக்கிய பாத்திரம் வகிக்கின்றது. சீன பௌத்த நம்பிக்கையிலும், பூமியை தாங்கிப் பிடிக்கும் அண்ட வெளி ஆமை முக்கிய இடம் வகிக்கின்றது. சுன் வுகொங் (Sun Wukong) என்ற குரங்கு அரசன் பற்றிய சீனப் புராணக் கதை, இராமாயணத்தில் வரும் அனுமானை நினவு படுத்துகின்றது. அனுமான் சீதையை தேடிச் சென்றால், சுன் வுகொங் பௌத்த சூத்திர நூல்களை தேடிச் செல்கிறான். அனுமான் போன்று, சுன் வுகொங் மலையைத் தூக்குமளவு பலம் பொருந்தியவன். நினைத்த நேரம், உருவத்தை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் பெற்றவன். எமக்கு நன்கு தெரிந்த வேலேந்திய முருகன் போன்று, வாளேந்திய மஞ்சு ஸ்ரீ  (Manjushri) தெய்வம் சீனாவில் பிரசித்தமானது. மஞ்சுஸ்ரீ தெய்வத்தை வழிபடும் மந்திரமான, "ஓம் அர பசா நாதின்..."(Oṃ A Ra Pa Ca Na Dhīḥ)    உங்கள் காதில் "ஓம் அரஹரா நாதா" என்று ஒலிக்கலாம். முருகன் சிவனுக்கும், மஞ்சுஸ்ரீ புத்தனுக்கும், "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை சொல்லிக் கொடுத்தனர் என்பது ஐதீகம். 

இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், நாடுகளின் சர்வதேச எல்லைகளும், அவற்றுக்கு இடையிலான தொடர்புகளும், வேறு விதமாக இருந்தன. வட இந்தியப் பிரதேசங்களுக்கும், மத்திய ஆசியா, ஆப்கானிஸ்தான், சீனாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளன. பட்டு வாணிபமும், அதனோடு தொடர்பான நகரங்களும், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே, வட சீனாவில் இருந்து வட இந்தியா வரையில், ஒரு நாகரிக உலகை சிருஷ்டித்து இருந்தன. அந்த மக்களுக்கிடையில் வர்த்தகத் தொடர்பு மட்டுமல்ல, மத, கலாச்சாரத் தொடர்புகளும் ஏற்பட்டன. எந்த மத நம்பிக்கையும், யாரும் யாரையும் அடிமைப் படுத்தி பரவவில்லை.

இன்றைய உலகில், ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் மற்ற மதங்களை கீழாகப் பார்க்கின்றனர். மதச் சகிப்புத் தன்மை குறைந்து வருகின்றது. ஆனால், நாங்கள் "நாகரீகமடைந்த மனிதர்கள்" என்று பெருமையடித்துக் கொள்கிறோம். வடக்கே சமர்கண்ட் (இன்று உஸ்பெகிஸ்தான்) நகரில் இருந்து, தெற்கே காஷ்மீர் வரையில், மக்கள் தாம் விரும்பிய மதத்தை பின்பற்றும் சுதந்திரம் இருந்தது. யாரும் யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. அதனால், மக்கள் விரும்பினால் பிற மதத்தவரின் தெய்வங்களையும் வழிபட்டார்கள். ஆட்சியாளர்களும் தமது மதங்களை மக்கள் மேல் திணிக்கவில்லை. (பார்க்க: Lost Cities of China, Central Asia and India, by David Hatcher Childress)

ஆரியர்கள் இந்திய உபகண்டத்திற்கு வந்த காலம், கி.மு. 1000 க்கும் 5000 க்கும் இடைப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர். ஆனால், ஆரியர்களின் படையெடுப்பு,  ஒரே நேரத்தில் நடந்திருக்க முடியுமா? உலக வரலாற்றில் பல பொய்கள் புனையப் பட்டுள்ளன என்பதை, இன்று பல சரித்திர ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆரியர்கள் என்ற வெள்ளையின மக்களின் இந்தியா நோக்கிய இடப்பெயர்வு, வரலாற்றில் ஒரு தடவை மட்டும் நடந்திருக்குமா? இந்திய உபகண்டத்தில் வெள்ளையின மக்களின் குடியேற்றம், கி.மு. 5000 ஆண்டிலிருந்து, 20 ம் நூற்றாண்டு வரையில் தொடர்ந்து கொண்டிருக்கிறது! இந்த உண்மையை எல்லா வரலாற்று நூல்களும் மறைத்து வந்துள்ளன. எதற்காக?


(தொடரும்)

மேலதிக தகவல்களுக்கு:
1.The Nilamata Purana, http://www.koausa.org/Purana/index.html
2.Glimpses of Kashmiri Culture, The Nilamata Purana,  http://ikashmir.net/glimpses/nilmatapurana.html
3.Sun Wukong, http://en.wikipedia.org/wiki/Sun_wukong
4.Manju Shri,  http://en.wikipedia.org/wiki/Manjusri
5.China's Tocharian mummies - Silent witnesses of a forgotten past, http://video.google.com/videoplay?docid=-1362674044731979808

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
10.எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"
11. புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்
12.நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்
13. விஷ்ணுவின் வாகனமான, "ஷாருக்கான்" என்ற கருடன்!

Wednesday, December 28, 2011

நாக நாட்டு குகைக் கோயில் மர்மம்

[இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது! - 12]
(பன்னிரண்டாம் பாகம்)


யூதம், கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகிய மும்மதங்களும் ஒன்றுக்கொண்டு தொடர்பு கொண்டவை. ஒரே மாதிரியான கதைகள், மும்மதங்களுக்கு உரிய புனித நூல்களில் எழுதப் பட்டுள்ளன. ஆதி மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து, தீர்க்கதரிசிகளின் காலம் வரையில் எழுதப்பட்டுள்ள கதைகள், ஒரே இன மக்களுக்குரியவை, என்பது போன்ற மாயையை ஏற்படுத்துகின்றன. அதனால் தான், யூதர்களைப் பற்றிய தவறான கணிப்புகள், இன்றைய அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. யூதர்கள் கூட, பாபிலோனியாவில் வாழ்ந்த காலத்தில் அந்தக் கதைகளை அறிந்து கொண்டதாக, அண்மைய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப் பட்ட பாபிலோனிய களிமண் தட்டுகளில், பாபிலோனியரின் புராணக் கதைகள் எழுதப் பட்டுள்ளன. அவை, பைபிள் கதைகளை பெரிதும் ஒத்துள்ளன. பெயர்கள் மட்டுமே வித்தியாசம். பாபிலோனிய நாகரீகம், பைபிள் காலத்திற்கு முந்தியது. ஆகவே, விவிலிய நூலில் எழுதப் பட்டுள்ள கதைகள், யூதரல்லாத வேற்றினத்தவரின் கதைகளாகவும் இருக்க வாய்ப்புண்டு. ஆதி கால கிறிஸ்தவர்கள் பற்றிய, "குகை மனிதர்களின் கதை", பண்டைய கால இலங்கையுடன் தொடர்புடையதா?

கி.பி. 250 ம் ஆண்டளவில், ரோம ஆட்சியாளர்களால் கிறிஸ்தவர்கள் ஒடுக்கப் பட்ட காலத்தில், அந்தக் கதை நடந்ததாக கூறப் படுகின்றது. எபெசுஸ் என்ற நகரத்தில் வாழ்ந்த ஏழு கிறிஸ்தவ இளைஞர்கள், ரோம அதிகாரிகளின் கைக்குள் அகப்படாமல், ஒரு குகைக்குள் மறைந்து வாழ்ந்தனர். சுமார் இருநூறு வருடங்களாக, குகைக்குள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். கிறிஸ்தவ மதம் ஆட்சிபீடமேறிய பின்னர் தான், கண் விழிந்து எழுந்து வந்து வெளியுலகைத் தரிசித்தனர்.

ஆதிக் கிறிஸ்தவர்களின் மதப்பற்றுக்கும், ஓரிறைக் கொள்கைக்கும் சான்றாக கூறப்படும் இந்தக் கதை, வேறெங்கேயோ நடந்திருக்க வாய்ப்புண்டு. ஏனெனில், கிறிஸ்தவத்திற்கு முந்திய மக்கள் மத்தியிலும் அது போன்ற கதைகள் நிலவின. பைபிளுக்கு பிந்திய, இஸ்லாமியரின் குர் ஆனில், இந்தக் கதை விரிவாக எழுதப்பட்டுள்ளது. நிச்சயமாக, அந்தக் கதையில் வருபவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. ஆனால், ஓரிறைக் கொள்கையில் பற்றுக் கொண்டவர்கள். "ஓரிறைக் கொள்கையில் பற்றுக் கொண்ட மனிதர்கள் சிலர், ஆட்சியாளர்களின் மத அடக்குமுறை காரணமாக நகரத்தை விட்டோடி, குகை ஒன்றினுள் தஞ்சம் புகுந்தனர். சுமார் 300 வருடங்கள் அங்கேயே உறக்கத்தில் ஆழ்ந்து விட்டனர். அவர்களை சூழவுள்ள பகுதிகள் யாவும், ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட பிற்பாடு, விழிப்படைந்தனர்." (Surat Al -Kahf, 9 – 26)

திருக்குரானில் வரும் Al -Kahf (குகை) என்ற அத்தியாயம், இலங்கை பற்றி எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இருப்பினும், சில தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அந்தக் குகை இலங்கையில் இருப்பதாக நம்புகின்றனர். இதே Al - Khaf அத்தியாயத்தில் வரும், இன்னொரு கதையான Al - Khidir என்ற ஞானி, கதிர்காமத்துடன் தொடர்பு படுத்திப் பேசப் படுகின்றார். மேற்கில் இருந்து கிழக்கே பயணம் செய்த, "அல்- கிதிர்" என்ற ஞானியினால் தான், "கதிர்காமம்" என்ற பெயர் வந்ததாக, இலங்கை முஸ்லிம்கள் நம்புகின்றனர். கதிர்காமத்தில் இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றுண்டு. ஒவ்வொரு வருடமும் கதிர்காமத் திருவிழாவின் கொடியேற்றம், பள்ளிவாசலில் நடைபெறும்! மத அடிப்படைவாத முஸ்லிம்கள் எதிர்த்தாலும், சாதாரண முஸ்லிம் மக்கள் இன்றைக்கும் கதிர்காமம் சென்று வழிபடுகின்றனர். ஆகவே, இஸ்லாமுக்கு முந்திய புராதன கால நம்பிக்கை ஒன்றை, இலங்கை முஸ்லிம்கள் பாதுகாத்து வைத்திருக்கலாம் என்றே நம்பப் படுகின்றது. குர் ஆனில் வரும் அல்- கிதிர் என்ற தீர்க்கதரிசிக்கும், கதிர்காமக் கந்தனுக்கும் என்ன தொடர்பு, என்று வேறொரு இடத்தில் பார்ப்போம்.

தம்புள்ள, இலங்கையின் மாத்தளை மாவட்டத்தில், கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் A9 பாதையில் இருக்கிறது. தம்புள்ளையில் ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த குகைகள், இன்று சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாக உள்ளன. எத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், அந்தக் குகைகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்தனர் என்று தெரியவில்லை. கி.மு. முதலாம் நூற்றாண்டில் இருந்து, அதாவது பௌத்த மதம் பரவிய காலத்தில் இருந்து தான், குகையின் நவீன கால வரலாறு ஆரம்பிக்கின்றது. இன்றைக்கு அந்த குகைகளுக்குள் புத்தர் சிலைகளும், விஷ்ணு போன்ற இந்துக் கடவுளரின் சிலைகளும் மட்டுமே காணப்படுகின்றன.

இவை எல்லாம் பிற்காலத்தில், பௌத்த மன்னர்கள் காலத்தில் செதுக்கப்பட்டவை. தம்புள்ள குகைகளை (அது இன்று குகைக் கோயில் என்று அழைக்கப் படுகின்றது.) யுனெஸ்கோ பொறுப்பேற்று பராமரித்து வருகின்றது. ஆசியக் கண்டத்திலேயே, இது போன்ற ஆதி கால மனிதர்கள் வாழ்ந்த விசாலமான குகைகள் மிக அரிது என்று கூறப் படுகின்றது. உண்மையில் அது ஒரு குகை அல்ல. குறைந்தது ஐந்து குகைகள் ஒன்றுக்கொன்று தொடர்பாக உள்ளன. இந்தக் குகைகளை இணைக்கும் சுரங்கப் பாதைகள் உள்ளன. ஒரு காலத்தில், அந்தக் குகைகள் எல்லாம் ஒரு நகரம் போன்று உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டு இருந்திருக்கலாம். அதாவது மனிதர்கள் வாழ்ந்த பாதாள உலகம்!

அந்த பாதாள உலகத்தில் யார் வாழ்ந்திருப்பார்கள்? இன்றைக்கு, அந்தக் குகைகளின் உள்ளே, பௌத்த மத சின்னங்கள் காணப்பட்டாலும், அவை அந்தக் குகைக்கு உரியன அல்ல. இவை எல்லாம் ஆதிக்கத்தின் குறியீடுகள். பண்டைய இலங்கை மக்களின் மத, கலாச்சார அடையாளங்கள் மீதான, வேற்று மத ஆக்கிரமிப்பு. பூர்வீக இலங்கையரின் மத நம்பிக்கைகள், இன்று இருந்த இடம் தெரியாமல் அழிந்து விட்டன. சில கலாச்சாரக் கூறுகள் மட்டுமே, புதிய மதத்துடன் ஒட்டிக் கொண்டுள்ளன. பௌத்த மதம் மட்டுமல்ல, இந்து மதமும் பிற்காலத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதியான மதங்கள் தான். இலங்கையின் பூர்வ குடிகள் சிங்களவருமல்ல, தமிழருமல்ல. இவ்விரண்டு இனங்களும் தோன்றுவதற்கு முன்னரே, நாகர்கள், இயக்கர்கள் என்ற இரண்டு இனங்கள், இலங்கையை தமது தாயகமாகக் கொண்டிருந்தனர். (இயக்கர்களும், நாகர்களும், சிங்களவர், தமிழர் இரண்டு இனங்களிலும் கலந்துள்ளனர்.) அந்த மக்கள் பேசிய மொழிக்குப் பெயர் எலு. அது கூட அன்னியர்கள் இட்ட பெயர் தான். எலு என்ற மூலச் சொல்லில் இருந்து தான், ஈழம், சிங்களம் (ஹெல) ஆகிய சொற்கள் பிறந்தன.

வட இலங்கையில், நாகநாடு இருந்ததாக மணிமேகலை எனும் தமிழ்க் காப்பியம் கூறுகின்றது. நாகதீபத்தில் (இன்று: நயினா தீவு) இருந்த ஆலயம் பற்றிய குறிப்புகளும் காணப்படுகின்றன. ஈழத்தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில், நாக தம்பிரான் கோயில்கள் காணப்படுகின்றன. இன்றைக்கும் திருவிழா நடக்கும் பிரபலமான கோயில்கள் அவை. "இந்து மதத்தில் இல்லாத, இந்து மதம் அங்கீகரிக்காத," நாக வழிபாடு, நாகர்கள் என்ற இனத்திற்கு உரியது.

தற்கால நாக இனத்தவர்கள், இன்றைக்கு வட கிழக்கு இந்திய மாநிலங்களில் மட்டுமே வாழ்கின்றனர். ஆனால், ஒரு காலத்தில், வங்காளம், ஒரிசா, தமிழகம், போன்ற கிழக்கு இந்திய மாநிலங்களிலும் பரவி வாழ்ந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே, இலங்கைத் தீவில் நாகர்களின் குடியேற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும். இந்திய உப கண்டத்தை விட, சீனாவின் தென் பகுதி, கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளிலும் நாகர் இன மக்கள் வாழ்ந்துள்ளனர். நாகர்கள் தோற்றத்தில், தாய்லாந்து, மலேய மக்களுக்கு நெருக்கமானவர்கள். சமூக- விஞ்ஞானிகள், நாகர்களை தீபெத்தோ- இந்திய இனம் என்று வகைப் படுத்தி உள்ளனர்.

கிறிஸ்தவர்களாலும், முஸ்லிம்களாலும் நம்பப் படும், "ஓரிறைக் கொள்கை மீது பற்றுக் கொண்ட குகை மனிதர்கள்" பற்றிய கதை, நாகர் இன மக்களின் மத நம்பிக்கைகளுடன் ஒத்துப் போகின்றதா? இந்துப் புராணங்களிலும், நாகர்கள் பற்றிய குறிப்புகள் காணப் படுகின்றன. விஷ்ணு சயனித்திருக்கும் ஆதி சேஷன், பாற்கடலைக் கடைய பயன்பட்ட வாசுகி போன்ற பிரபலமான நாகங்களைப் பற்றிய கதைகள் புராணங்களில் வருகின்றன. புத்தர் தியானம் செய்யும் பொழுது குடையாக விரிந்து பாதுகாப்பளித்த மூச்சலிந்தா நாகம், பௌத்த மதத்தில் பிரசித்தமானது.

பல கோயில்களில்,விகாரைகளில் நாக பாம்புப் படுக்கையின் மேல் படுத்திருக்கும் புத்தர் சிலையும், விஷ்ணு சிலையும் ஒரே மாதிரி வடிவமைக்கப் பட்டுள்ளன. இலங்கையின் தென் முனையான, தேவேந்திர முனையில் ஒரு விஷ்ணு கோயில் இருந்தது. அந்த விஷ்ணு கோயில் ஆதி காலத்தில் நாகர்களின் கோயிலாக இருந்தது. பிற்கால இந்துக்கள் அதனை விஷ்ணு கோயிலாக மாற்றி விட்டனர். நீண்ட காலமாக, தமிழ் வணிகர்களால் பராமரிக்கப் பட்டு வந்தது. தேவேந்திர முனை விஷ்ணு கோயிலை, கத்தோலிக்க மத அடிப்படைவாத போர்த்துக்கேயர்கள் இடித்து தரைமட்டமாக்கி விட்டனர். அதன் மூலம், இலங்கையின் தென் முனையில், தமிழர்கள் வாழ்ந்த தடயமும் அழிந்து விட்டது. தென் மாகாணத்தில், ஆயிரம் ஆண்டு காலமாக வாழ்ந்து வந்த தமிழ்க் குடும்பங்கள், இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு வெளியேறி விட்டன.

பௌத்த மதத்தைப் பொறுத்த வரையில், புத்தரையும், வேறெவரையும் கடவுளாக ஏற்றுக் கொள்வதில்லை. (புத்தரே தன்னை கடவுளாக வழிபடுமாறு கூறவில்லை என்பது வேறு விடயம்.) இருப்பினும், இலங்கையில் பௌத்த மதம் பரவுவதற்கு முன்பிருந்த மக்களின் மத நம்பிக்கைகளையும் உள்வாங்கிக் கொண்டுள்ளது. அது இந்து மத நம்பிக்கையாக இருக்கலாம், அல்லது நாக மத நம்பிக்கையாக இருக்கலாம். அவர்களிற்கு விருப்பமான தெய்வங்களையும் வழிபட அனுமதித்தது. அந்த வகையில், நாகர்களின் கடவுள், விகாரைகளை காவல் காக்கும் தெய்வமாக மாற்றப் பட்டார்.

இன்றைக்கும், இலங்கையில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு முன்னால், நாக தேவதை சிற்பங்கள் காணப் படுகின்றன. இங்கே இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். பௌத்த மதம், இந்து மத தெய்வங்களை வழிபடும் சுதந்திரத்தைக் கொடுத்தாலும், ஓரிறைக் கொள்கையையும் வலியுறுத்தி வருகின்றது. இன்றைக்கும், மத அடிப்படைவாத பௌத்தர்கள், புத்தரைத் தவிர வேறெந்த தெய்வத்தையும் வணங்குவதில்லை. பௌத்த மதம் பரவுவதற்கு முன்னர் வாழ்ந்த நாகர்கள், இன்று பௌத்த மதத்தை பின்பற்றும் சிங்களவர்களாக மாறி விட்டனர். பௌத்த மதத்தினுள் முழுமையாக ஒன்று கலப்பதற்கு, நாகர்களின் ஓரிறைக் கொள்கை காரணமாக அமைந்திருக்குமா?

பொதுவாகவே, பல தெய்வ வழிபாட்டைக் கடைபிடிக்கும் இந்துக்கள் வாழ்ந்த பூமியில், ஒரே இறைவனை மட்டும் வழிபடும் மதத்தை பின்பற்றும் மக்கள் வாழ்ந்தனரா? இந்தியாவில், நாகலாந்து மாநிலத்தில் சேமே இன நாகர்கள் என்றொரு பிரிவுண்டு. சேமே இன நாகர்கள், பல தெய்வ வழிபாட்டைக் கைவிட்டு விட்டு, காலப்போக்கில் தாமாகவே ஓரிறைக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவர்கள். வட-கிழக்கு இந்தியாவில் வாழ்ந்த Bnei Menashe பழங்குடி இன மக்களை, "தொலைந்து போன யூத இனக் குடிகளில் ஒன்று" என யூதர்கள் நம்புகின்றனர். இன்று அந்த மக்கள், இஸ்ரேலில் குடியேறி முழுமையான யூதர்களாக மாறி விட்டனர். இந்த தகவலும், நாகர்களின் ஓரிறைக் கோட்பாட்டிற்கு வலுச் சேர்க்கின்றது.

"ஓரிறைக் கோட்பாட்டை பின்பற்றிய நாகர்கள்", எதற்காக குகைகளில் வசித்தார்கள்? தொன்று தொட்டு நிலவி வரும் மூட நம்பிக்கை காரணமாகவே, நாகர்கள் குகை வாழ்வை தேர்ந்தெடுத்தனர் என்று, நாகர்கள் பற்றிய புராணக் கதைகள் கூறுகின்றன. அதாவது, வேட்டையாடும் கருடனிடமிருந்து தப்பிப் பிழைப்பதற்காக, நாகங்கள் பாதாள லோகத்தில் வாழ்வதாக ஐதீகம் ஒன்றுண்டு. கருடனும், பாம்பும் ஜென்ம விரோதிகள் என்பது எமக்கெல்லாம் தெரிந்தது தான். ஆனால், நாங்கள் இங்கே விலங்கினங்களைப் பற்றிப் பேசவில்லை. நாகர்கள் என்பது ஒரு மனித இனத்தை சேர்ந்தவர்களைக் குறிக்கும் பெயர். அப்படியானால், கருடன் என்பதும் இன்னொரு மனித இனத்தைக் குறிக்கும் பெயரா?

நாகர் இனம் போன்று, கருட இனத்தவர்களும் இந்த மண்ணில் வாழ்ந்திருப்பார்களா? ஆதி காலத்தில், கருட இனத்தவருக்கும், நாக இனத்தவருக்கும் இடையில் கடும் யுத்தம் நடைபெற்றிருக்குமா? யுத்தத்தில் இருந்து பாதுகாப்புத் தேடுவதற்கும், மறைந்திருந்து தாக்குவதற்கும் வசதியாக, நாகர்கள் குகைகளில் வசித்திருப்பார்களா? ஆன்னிய ஆக்கிரமிப்பாளர்களினால் ஒடுக்கப்பட்ட சிறுபான்மையின மக்கள், காடுகளிலும், மலைகளிலும் புகலிடம் தேடுவது சரித்திர காலம் தொட்டு நடந்து வரும் நிகழ்வு ஆகும். இந்தியாவிலும், இலங்கையிலும் வாழ்ந்த நாகர் இன மக்களை அழிக்கத் துடித்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் யார்? அவர்களுக்கும் கருடனுக்கும் என்ன தொடர்பு? யார் அந்தக் கருடர்கள்? அவர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்?

(தொடரும்)

மேலதிக தகவல்களுக்கு :
Al Kahf
Seven Sleepers
Dambulla cave temple
Zeme Nagas, from Polytheism to Monotheism
Bnei Menasche
Qur'an, Surat Al- Kahf

-----------------------------------------------

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:
1.இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது!
2.திபெத்தில் தோன்றிய இந்து மத சின்னங்கள்
3.சீனாவுடைய சிவனே போற்றி! தாந்திரிய மதத்தின் இறைவா போற்றி!!
4.சிவபெருமானின் "சைவ மத பாலியல் புரட்சி"
5.காஷ்மீரத்து திருமூலரின் சோஷலிச திருமந்திரம்
6.தமிழ் இலக்கணம் எழுதிய சீன தேச முனிவர்
7.பழனி முருகன்: தமிழக- சீன நட்புறவுக் கடவுள் !
8.கந்தசாமி, எத்தனை இனத்திற்கு சொந்தம் சாமி?
9.தமிழர் தொலைத்த விமானம் செய்யும் தொழில்நுட்பம்
10.எல்லாளனை வீழ்த்திய, "தமிழ்த் துரோகக் கடவுள் கந்தன்!"
11. புத்தரின் பல்லுக்காக போரிட்ட, சிங்கள-தமிழ் மன்னர்கள்