Wednesday, November 16, 2011

இத்தாலி தடுப்பு முகாம்களில், இத்தனை கொடுமைகள்

இத்தாலியில் தஞ்சம் கோரும் அகதிகள், பல இடங்களில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். ஊடகங்களை சேர்ந்தவர்கள் இந்த தடுப்பு முகாம்களை பார்வையிடுவதை, அரசு சட்டம் போட்டு தடுத்துள்ளது. இருப்பினும், தற்செயலாக Repubblica.it ஊடகவியலாளர் ஒருவர், நகரசபையிடம் அனுமதி பெற்று சென்றுள்ளார். தென் இத்தாலியில் Basilicata பிராந்தியத்தில் உள்ள Palazzo எனும் கிராமத்தில் இந்த முகாம் அமைந்துள்ளது. "இத்தாலியின் குவாந்தனமோ சிறை முகாம்" என்று அது அழைக்கப் படுகின்றது. அங்கே அந்த ஊடகவியலாளர் கண்ட காட்சிகள், அதிர்ச்சியில் உறைய வைத்தன. "நாகரீகமடைந்த மேற்கு ஐரோப்பிய நாடொன்றில்", காவல் துறை இந்தளவு மிருகத் தனமாக நடந்து கொள்ளும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. சுமார் தொண்ணூறு துனிசியா அகதிகள், கோழிகளை போன்று கூண்டுக்குள் அடைத்து வைத்து துன்புறுத்தப் பட்டனர். கைதிகள் போன்று சிறை வைக்கப் பட்டிருப்பவர்கள், இத்தாலியில் அகதித் தஞ்சம் கோரியதை தவிர வேறெந்த குற்றமும் செய்யவில்லை. தடுப்பு முகாம் கொடுமைகளை காட்டும் இந்த வீடியோ, இத்தாலியின் தேசிய தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பானது. இத்தாலியில் இவ்வாறான மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடப்பதை எண்ணி மக்கள் வருத்தப் பட்டனர். பாராளுமன்றத்திலும், இந்தப் பிரச்சினை விவாதிக்கப் பட்டது.

"இத்தாலியின் குவாந்தனமோ" சிறைக் கொடுமைகளை காட்டும் வீடியோ:

இதற்கிடையே, செப்டம்பர் 20 ம் தேதி, பெருமளவு அகதிகளை தடுத்து வைத்துள்ள Lampadusa தீவு போர்க்களமாக காட்சியளித்தது. பொலிஸ், மாபியா, உள்ளூர் மக்களுடன் சேர்ந்து, இரகசியமாக அகதிகளை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக வதந்திகள் பரவின. இதனால், கலவரமடைந்த துனீசியா அகதிகள் முகாமுக்குள் கலகம் செய்தனர். படுக்கைக்கு விரிக்கும் போர்வைகளில் அரசியல் சுலோகங்களை எழுதி மதில் சுவரில் மாட்டினார்கள். "Freedom Libertà", "Sorry Lampedusa" போன்ற வாசகங்கள் அவற்றில் காணப்பட்டன. ஆனால், இந்தக் குரல்கள் அந்தத் தீவில் யார் காதிலும் ஒலிக்கவில்லை. கலகம் குறித்து கேள்விப்பட்டு வந்த பத்திரிகை நிருபர்களை, பொலிஸ் தடுத்து நிறுத்தியது. தீவில் வசிக்கும் இத்தாலியர்கள், பொலிஸ் பாதுகாப்புடன் அகதிகளை சுற்றி வளைத்து கல் வீசித் தாக்கினார்கள். தாக்குதலுக்கு அஞ்சி ஓடிய அகதிகள், மூன்று மீட்டர் உயரமான முள்வேலியில் தாவிக் குதிக்கும் காட்சிகள் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளன.



இத்தாலியில் மனித உரிமை மீறல்கள் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.இத்தாலி தக்காளி தோட்டங்களில் வதைபடும் அடிமைகள்
2.கறுப்பர்களுக்கு தனியான பஸ் சேவை: இத்தாலியின் இனஒதுக்கல்
3.இத்தாலியன் குடுமி சும்மா ஆடாது

2 comments:

வலிப்போக்கன் said...

சேரி நாயா இருந்தாலும்,பங்களா நாயாக
இருந்தாலும் கடிக்காமல் இருக்குமா? நாகரிக(நாய்) பொலீசு

Kannan said...

கலை, நீங்கள் சில விஷயங்களை சரியாக கருத்தில் கொள்ளாமல் முடிவு செய்கின்றீர்களோ என தோன்றுகிறது. அகதிகள் மற்றும் பொருளாதார அகதிகள் / குடியேறிகள் என இருவகை உள்ளதாக நான் நினைக்கின்றேன். உதாரணமாக நீங்கள் அகதிகள் என்று படத்தில் காணும் மக்களிடம் நான் வைத்து இருப்பதாய் விட விலை உயர்ந்த செல் பேசிகள் காண முடிகின்றது. அகதிகள் என்ற பெயரில் தற்போது ஐரோப்பா வரும் பெரும்பான்மை மக்கள் பொருளாதார முன்னேற்றத்தை குறி வைத்து அகதிகள் போர்வையில் உலா வருகின்றனர். இதை எதிர் கட்சிகள் வியாபாரம் செய்கின்றன. அதை நீங்கள் வாங்கி எங்களுக்கு வழங்கிக்கொண்டு இருக்கின்றீர் என எனக்கு தோன்றியது. என் பார்வை தவறாக இருக்க கூடும். மன்னியுங்கள்.

டென்மார்க்கிலிருந்து

பாலா