Thursday, November 10, 2011

அடிமை வாழ்வுக்கு அவசியமான அதிர்ஷ்ட எண்கள்


எண் சோதிட நம்பிக்கையாளர்கள், மியான்மர் (பர்மா) நாட்டின் முன்னாள் கொடுங்கோல் சர்வாதிகாரி "எம்மவர்" என்று கூறிப் பெருமைப் படலாம். நியுமரலோஜி அல்லது எண்சோதிடம் என்று அழைக்கப்படும் சாத்திரத்திற்கும், பர்மாவின் சர்வாதிகாரிக்கும் என்ன தொடர்பு? உலகிலேயே பர்மாவில் மட்டும் தான், எண்சோதிடம் "தேசிய சாஸ்திரமாக" ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்தது.

தேசத்தை இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த சர்வாதிகாரி ஜெனரல் நீவின், எண் சோதிடத்தில் நம்பிக்கையுள்ள ஒருவர். அவரது அதிர்ஷ்ட இலக்கம் ஒன்பது என்பதால், அரச அலுவல்களில் எல்லாம் அந்த இலக்கம் வரும். சிறுபான்மை இன மக்களையும், அரசியல் எதிரிகளையும் கொன்று குவிக்கும் பொழுதும், "கூட்டெண் ஒன்பது" வருமாறு பார்த்துக் கொள்வார் போலும். எண் சோதிடம் குறித்து எழுதப்பட்ட எந்த நூலிலும், இந்தத் தகவல் வந்திராது. எமது சோதிட அறிஞர்கள், பர்மா சர்வாதிகாரியின் ஆதரவை கண்டு கொள்ளாதது போல நடிக்கின்றனர். சோதிடம் கேட்க வருபவர், "பில்கேட்ஸ் மாதிரி" வர விரும்புவானே ஒழிய, பர்மாவின் இராணுவ ஆட்சியாளர்கள் மாதிரி வர விரும்புவானா? அப்படி வர விரும்புகிறவர்களுக்கு இரகசியமாக சாஸ்திரம் பார்க்கிறார்களோ, என்னவோ?

"எண்கள் எமது துணையை, நண்பர்களை மட்டுமல்ல வெற்றி- தோல்விகளையும் தீர்மானிக்கின்றன." இவ்வாறு நம்பும், என்னையும் நம்ப வேண்டுமென்று வற்புறுத்தும் பலரை பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு எண் சோதிடத்தின் அபத்தங்களை எடுத்து விளக்கியும், சிந்திக்க வைக்க முடியாதளவு, அந்த மூட நம்பிக்கை அவர்களை ஆட்கொண்டுள்ளது. கடந்த இருபது வருடங்களாக, ஐரோப்பாவில் வாழும் காலங்களில், பல்வேறு நாட்டவர்களிடமும் எண் சோதிடம் குறித்து விசாரித்தேன். தமிழர்களைத் தவிர வேறு யாருக்கும், அப்படி ஒன்று உலகில் இருப்பதே தெரியவில்லை. அதிலும் குறிப்பாக, ஆங்கில எழுத்துகளுக்கு (அல்லது லத்தீன் எழுத்துகளுக்கு) மட்டுமே "அந்த மந்திர சக்தி" இருப்பதாக எண் சாஸ்திரம் கூறுகின்றது. ஐரோப்பாவில், பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் லத்தீன் எழுத்துகளை பாவிக்கின்றன. அந்த மக்களுக்கெல்லாம், தமது மொழிகளின் சக்தி தெரியவில்லை. நினைக்கவே பரிதாபமாக உள்ளது.

பண்டைய கால வரலாற்றைப் படித்த பொழுது, சுமேரியர்களே எண் சாஸ்திர அறிவியலை முதன் முதலில் உருவாக்கியவர்கள், என்று அறிந்து கொண்டேன். ஆனால், சுமேரியர்களின் மொழியில் பாவிக்கப்பட்ட வரி வடிவங்கள், இலக்கங்கள் வேறு. அவற்றை தற்காலத்தில் எந்தவொரு மொழியுடனும் ஒப்பிட முடியாது. இந்த தகவலை, தமிழில் எழுதப்பட்ட எந்தவொரு எண் சோதிடப் புத்தகத்திலும் காண முடியாது. அவர்கள் இதனை, முழுக்க முழுக்க மேலைத்தேய இறக்குமதியாகவே காட்ட முனைகின்றனர். சந்தேகமும் அது தான். அதாவது, தமிழர்கள் மனதில், மேற்கத்திய கலாச்சாரத்தை திணிப்பதே எண் சோதிடத்தின் தலையாய நோக்கம். "ஆங்கில மொழி, கலாச்சாரமே சிறந்தது." எனும் காலனிய கால கலாச்சார திணிப்பின் நீட்சியாகவே, எண் சாஸ்திரத்தை கருதுகின்றேன். பாமரர் முதல் படித்தவர் வரை, எவ்வாறு மூளைச் சலவை செய்யப் படுகின்றனர், என்று ஆராய்வதே கட்டுரையின் நோக்கம்.

எண் சாஸ்திரம் பார்த்து பெயர் வைப்பவர்களின் கோமாளிக் கூத்துகளைப் பார்த்தால், அவர்கள் தங்களைத் தாங்களே இழிவு படுத்திக் கொள்வது தெரியும். தமிழில் ஒரு மாதிரியும், ஆங்கிலத்தில் வேறு மாதிரியும் அழைக்க வேண்டியிருக்கும். ஆங்கிலத்தில் கூட, அவர்களது பெயரை அப்படியே உச்சரிக்க முடியாது. அதனால் பெயரே மாறி விடுகின்றது. இது ஒரு அடிமைத்தனத்தின் வெளிப்பாடாகும். அடிமைத்தனம் இன்று மனதளவில் இருந்தாலும், காலனியாதிக்க காலத்தில் அது பலவந்தமாக திணிக்கப் பட்டது. எனது நண்பர் ஒருவர் சுரினாம் நாட்டிலிருந்து வந்த ஒரு நண்பரின் பெயர் "கான்பட்"(Ganpat). அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த, இந்து சுரினாமியர். உண்மையில் அவரது பெயர் கணபதி என்றிருக்க வேண்டும். ஆனால், அவரது முப்பாட்டன் மாரை கூலிகளாக அழைத்து சென்ற ஒல்லாந்துக்காரர்கள், தங்கள் உச்சரிப்புக்கு ஏற்றவாறு பெயரை மாற்றி விட்டார்கள். இவ்வாறு தான் சுரினாம் இந்தியர்களின் பெயர்கள், டச்சு மயப்பட்டு காணப்படுகின்றன. அந்தப் பெயர்கள் இன்னமும் தொடர்கின்றன.

ஆங்கில எழுத்துகளை கொண்டு நமது பெயர்களை எழுதினால் தான், அதிர்ஷ்ட தேவதை எட்டிப் பார்ப்பாள். தமிழிலும், பிற மொழிகளிலும் பெயர்களைக் கொண்டவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். அவர்களால், அதிர்ஷ்ட எங்களுக்கு ஏற்றவாறு பெயர்களை மாற்றியமைத்து வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. பெரும்பாலான சீனர்களும், ரஷ்யர்களும் தமது மொழியின் வரி வடிவங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அந்த சமூகங்களில் இருந்து விஞ்ஞானிகளும், அறிஞர்களும், சிறந்த வர்த்தகர்களும் உருவாகவில்லையா?

எண் சோதிட நம்பிக்கையாளர்கள் பாவிக்கும் "ஆங்கில எழுத்துகள்" கூட, உண்மையில் ஆங்கில மொழிக்கு சொந்தமானதல்ல. அவை லத்தீன் மொழியில் இருந்து கடன் வாங்கப் பட்டவை. லத்தீன் எழுத்துகளும், கிரேக்க எழுத்துகளை பார்த்து தான் வடிவமைக்கப் பட்டன. இன்றைக்கும் பயன்பாட்டில் உள்ள கிரேக்க எழுத்துகள் சற்று வித்தியாசமாக இருக்கும். சில நேரம், ரஷ்ய எழுத்துக்கள் போலிருக்கும். ஆனால், கிரேக்க எழுத்துகளை பயன்படுத்தி நமது பெயரை எழுதினால், அவற்றிற்கு அதிர்ஷ்ட எண்கள் துணை புரிய மாட்டா! ஒரு காலத்தில், லத்தீன் மொழியில் மட்டுமே ஆண்டவரை வணங்க வேண்டும் என்று கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் போதித்தது. ஏனெனில், கடவுளுக்கு லத்தீன் மொழி மட்டுமே புரியுமாம். மத்திய காலத்தில், மக்களை ஏய்க்க, பாதிரிகள் சொன்ன கட்டுக் கதைகளை, எண் சோதிட ஆராய்ச்சியாளர்கள் எம் மேல் அவிழ்த்து விடுகின்றனர்.

பிறந்த தேதி, மாதம், வருடம், ஆகிய இலக்கங்களை கூட்டி பலன் சொல்லுமளவுக்கு எண்சாஸ்திரம் படித்தவர்கள் அதிகம் உள்ளனர். "நீங்களாகவே வீட்டிலேயே செய்து பாருங்கள்" என்று வர்த்தகர்கள் விளம்பரம் செய்வதைப் போல, மக்கள் மயப் படுத்தப்பட்ட சாஸ்திரம் இது ஒன்று தான். மற்ற எல்லா சாஸ்திரங்களையும், அது குறித்து படித்த பண்டிதர்களிடம் மட்டுமே, காணிக்கை செலுத்தி அறிந்து கொள்ளலாம். (அதிலும் குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே படிக்கலாம் என்றும், இந்து மதம் கூறுகின்றது.) அதற்கு மாறாக, எண் சோதிடத்தில், ஒன்பது இலக்கங்களின் பலன்களை மட்டும் சிறிது படித்து விட்டால் போதும்.

அது சரி, ஒருவரின் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியன வெவ்வேறு நாட்காட்டிகளில் (கலண்டர்) வேறு இலக்கங்களில் வருமல்லவா? கிரகோரியன் கலண்டர், இந்து கலண்டர், இஸ்லாமியக் கலண்டர், சீனக் கலண்டர், திருவள்ளுவர் கலண்டர் என்று பலவகையான நாட்காட்டிகள் இன்றைக்கும் புழக்கத்தில் உள்ளனவே. ஈரானில் இஸ்லாமியக் கலண்டர் தான் உத்தியோகபூர்வமானது. நாம் ஒரு குறிப்பிட்ட நாளில் பிறந்திருப்போம். ஆனால், அதைக் குறிப்பிடும் எண்கள் (திகதி, மாதம், வருடம்) மாறுபடுமல்லவா? நாம் இன்றைக்கு பாவிக்கும் ஐரோப்பிய- கிறிஸ்தவ கலண்டர் மட்டுமே சரியானது என்று வாதிடுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.

கிரகோரியன் என்ற கிறிஸ்தவ மதகுரு தான், நாம் இன்றைக்கு பாவிக்கும் கலண்டரைக் கண்டுபிடித்தவர். இது பயன்படுத்துவதற்கு இலகு. ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், ஒரு காலத்தில் எமது பூமியின் முக்கால்வாசி நாடுகளை ஆட்சி செய்தார்கள். அங்கெல்லாம் அவர்கள், கிரகோரியன் கலண்டரின் பாவனையை அறிமுகப் படுத்தினார்கள். ஐரோப்பாவை மையப்படுத்தி உலகமயமாகிய சர்வதேச சமூகம் அதனை ஏற்றுக் கொண்டது. விஞ்ஞான, அறிவியல் கண்டுபிடிப்புகளும், அந்தக் கலண்டரின் பாவனையை சர்வதேச மயப் படுத்தின. நான் சந்தித்த வெள்ளையின கிறிஸ்தவ மதப்பற்றாளர் ஒருவர் கூறினார்: "இன்று உலகம் முழுவதும், கிறிஸ்தவ கலண்டரைத் தானே பயன்படுத்தின்றனர்? ஆகவே கிறிஸ்தவ மதம் மட்டுமே ஆண்டவரினால் இரட்சிக்கப்பட்ட உண்மையான மதம் என்பதை நிரூபிக்க இது போதுமானதல்லவா?" அவர் அதிகம் படித்திராத சாதாரணக் குடிமகன் தான். உலக நாடுகள் முழுவதும், மறுக்கவியலாது ஐரோப்பிய மையவாதக் கருத்துகளே கோலோச்சுகின்றன.

"முனிவர்களால் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட சாஸ்திரங்கள்" என்றெல்லாம் பழம் பெருமை பேசுவதற்கு, எண் சாத்திர அபிமானிகளாலும் முடியும். சுமேரியர்கள் கண்டுபிடித்த சாஸ்திரம் இதுவென்று விளம்பரம் செய்யலாம். இதிலே என்ன பிரச்சினை என்றால், எமது பெயர்களை சுமேரிய எழுத்துகளில் எழுதிப் பார்த்து பலன் சொல்வது அவர்கள் நோக்கமல்ல. சுமேரியர் பயன்படுத்திய கலண்டர், நமது காலத்து கிரகோரியன் கலண்டர் போன்று நுட்பமாக கணிக்கப் பட்டுள்ளது. அதாவது 365 நாட்களும், லீப் வருடமும் பற்றிய அறிவு சுமேரியர்களுக்கும் இருந்தது. சுமேரிய கலண்டரின் படி, எமது பிறந்த திகதியும், வருடமும் மாறுபடலாம். ஆனால் இங்கே அதுவல்ல பிரச்சினை. எண் சாத்திரப் பண்டிதர்கள், இது மேற்குலகில் இருந்து வந்த நவீன அறிவியல் கண்டுபிடிப்பு என்றே விதந்துரைக்கின்றனர்.

மேற்குலகில் இருந்து, எந்தக் குப்பையை இறக்குமதி செய்து விற்றாலும், அதனை நம்பி வாங்குவது எம்மவர் பண்பாடு. எண் சோதிட விற்பன்னர்களும், அந்த நம்பிக்கையை வைத்து தான் "விஞ்ஞான ஜோஷ்யம்" சொல்கின்றனர். பண்டைய காலத்தில், சுமேரியரின் எண் சோதிடம் குறித்து, கிரேக்கர்களும், அரேபியர்களும் அறிந்திருக்க வாய்ப்புண்டு. சுமேரியா இன்றைய இராக்கை சேர்ந்தது என்பது குறிப்பிடத் தக்கது. இஸ்லாமிய மத நம்பிக்கையின் படி, இவை எல்லாம் மூட நம்பிக்கைகள் என்பதால், அரேபியர்கள் அதிலே அதிக அக்கறை செலுத்தவில்லை. பிற்காலத்தில், அரேபியர் எழுதி வைத்த குறிப்புகளை பிரதியெடுத்த ஐரோப்பியர்களும் அது குறித்து அறிந்து கொண்டனர். ஆனால், எண்களை நம்பும் சோதிடத்தை விவிலிய நூல் எதிர்த்ததால், கிறிஸ்தவ ஐரோப்பியர்களுக்கு அது தேவைப் படவில்லை. ஆங்கிலேயர்கள், தந்திரமாக அதனை தமிழர்களுக்கு விற்று விட்டார்கள். எண் சோதிடம் இன்று, தமிழர்கள் மத்தியில் சூடாக விற்பனையாகும் பண்டமாக உள்ளது. தமது மக்களுக்கு தேவையற்ற மூட நம்பிக்கைகளை, காலனிய நாடுகளை சேர்ந்த மக்கள் மனதில் புகுத்தி விடுவது ஐரோப்பியருக்கு கை வந்த கலை.

5 comments:

Vetirmagal said...

எண் சோதிடம், சாதி மதம் இவைகளை துருவித் தருவிப் பார்த்தால் , கடைசியில் கிடப்பது சூன்யமே. இதைப்பற்றி கவலைப்படாமல் மந்தை புத்தி கொண்டுள்ள மக்கள் , என் வழி , எல்லோர் பின்னே என்று செல்கிறனர்.
வாழையடி வாழையாக பெருமையுடன் பின் பற்றுவதை பற்றி எத்தனை வாய் கிழிய கத்தினாலும் பயனில்லை.

Egos Eno said...

Watch Sourashtra First Movie egos eno Trailer
Thank You
http://www.youtube.com/watch?v=x60jdgLve70

வலிப்போக்கன் said...

படித்தவர்கள் மத்தியில் எண் சோதிடமும்
படிக்காதவர்கள் மத்தியில் ஜாதக குறிப்பு
களுமே வாழ்க்கையின் கஷ்டநஷ்டங்களக்கு தீர்வாக கொள்கிறார்கள்.அவ்வளவு சீக்கிரத்தில்
ஒழிப்பது கஷ்டமான காரியம்

எஸ் சக்திவேல் said...

எண் சாத்திரம் மட்டுமல்ல, எந்தச் சாத்திரமும் அபத்தம்தான்.

Anand said...

வாழ்க்கை நன்றாக இருக்கும், செல்வம் கொழிக்கும் என சொன்னால் போதும், படித்தவர்கள் உட்பட அனைவரும் அப்படியே நம்புவார்கள்.