Sunday, November 13, 2011

உலகப் போரை தடுக்க முனைந்த, ஜெர்மன் கம்யூனிச போராளி

யொஹான் கெயோர்க் எல்செர் (Johann georg Elser), இந்தப் பெயரை ஜெர்மனிக்கு அப்பால் அறிந்தவர் அரிது. ஜெர்மன் நாட்டின் தெருக்கள் பலவற்றிற்கு இவர் ஞாபகார்த்தமாக பெயரிடப் பட்டுள்ளது. அந்தப் பெருமைக்குரிய மனிதர் செய்த சாதனை என்ன? ஹிட்லரை கொலை செய்ய எத்தனித்தது. 1939 ம் ஆண்டு. இரண்டாவது உலகப்போர் அப்பொழுது தான் ஆரம்பமாகியிருந்தது. 8 ம் தேதி நவம்பர் மாதம் 1939, மியூனிச் நகரில், ஹிட்லர் வழக்கமாக கலந்து கொள்ளும் கூட்டத்திற்கு அன்று வருகை தந்திருந்தார். NSDAP கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கூட்டம் அது. அன்றும் ஹிட்லர் இரவு பத்து மணி வரை உரையாற்றுவதாக ஏற்பாடாகியிருந்தது. சரியாக, பிற்பகல் 9 .20 க்கு ஒரு குண்டு வெடிக்கின்றது. அந்த மண்டபத்தில் அரைவாசி சேதமாகியது. எட்டுப் பேர் கொல்லப் பட்டனர். ஹிட்லர் எங்கே? குண்டு வெடிப்பதற்கு பத்து நிமிடம் முன்பு, புறப்பட்டு சென்று விட்டான். திட்டமிட்ட படி, அன்று ஹிட்லர் மட்டுமல்ல, கோயபல்ஸ் கூட கொல்லப் பட்டிருந்தால், ஒரு உலகப்போர் தடுக்கப் பட்டிருக்கும்.

மிகவும் துணிச்சலாக நாட்டு வெடிகுண்டை தயாரித்து, நேரம் கணித்து பொருத்திய மாவீரனின் பெயர் யொஹன் கெயோர்க். 4 -1 -1903 அன்று, ஒரு ஏழை உழைக்கும் வர்க்க குடும்பத்தில் பிறந்த தச்சுத் தொழிலாளி. ஒரு கம்யூனிஸ்ட். கடிகாரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்த யொஹான், அங்கே தான் நேரக் கணிப்பு வெடிகுண்டு செய்யும் கலையை கற்றுக் கொண்டான். மியூனிச் குண்டுத் தாக்குதலை நிகழ்த்தி விட்டு தப்பி ஓடும் பொழுது, சுவிட்சர்லாந்து எல்லையில் வைத்து பிடிபட்டான். கெஸ்டபோ இரகசியப் பொலிசாரின் சித்திரவதை காரணமாக, குண்டு வைத்ததை ஒப்புக் கொண்டான். அதன் பிறகு, டாஷவ் தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப் பட்டு சிறை வைக்கப் பட்டான். நேச நாடுகளின் படையணிகள் ஜெர்மனியை கைப்பற்றிய நேரம், ஹிட்லர் தற்கொலை செய்வதற்கு சில தினங்களுக்கு முன்னர், யொஹான் சுட்டுக் கொல்லப் பட்டான்.

யொஹான், தலைமறைவாக இயங்கிய சிவப்பு முன்னணி போராளிகளின் அமைப்பு (Rotfrontkämpferbund) என்ற ஆயுதபாணி இயக்கத்தின் உறுப்பினர். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் இராணுவப் பிரிவு அது. நாஜிக் கட்சிக் குண்டர்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டனர். "நாஜிக் கட்சிக் கூட்டத்தில் ரகளை செய்த, தெருச் சண்டையில் ஈடுபட்ட மார்க்சிஸ்டுகள்" பற்றி, ஹிட்லரும் தனது "மைன் கம்ப்" நூலில் எழுதியுள்ளான். ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக பதவியேற்றதும் செய்த முதல் வேலை, நாட்டில் உள்ள கம்யூனிஸ்டுகளை பிடித்து சிறையில் அடைத்தது தான். ஜெர்மன் நாடாளுமன்றம், இனந் தெரியாதவர்களால் எரிக்கப் பட்ட சம்பவத்தை அதற்கு சாட்டாக பயன்படுத்தினான். பெர்லினில் தங்கியிருந்த வெளிநாட்டு கம்யூனிஸ்டுகளும் கைது செய்யப் பட்டனர். பிற்காலத்தில் பல்கேரியாவின் ஜனாதிபதியான, டிமித்ரோவும் அவர்களில் ஒருவர்.

ஹிட்லரை கொலை செய்யும் நோக்குடன் பல தாக்குதல்கள் நடந்துள்ளன. பிற்காலத்தில், இராணுவத்திற்குள் நடந்த சதியை மையமாக வைத்து, Valkyrie என்ற ஹாலிவூட் திரைப்படம் வெளியானது. உலகப்போர் முடியும் தறுவாயில், 1944 ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு பற்றி உலகம் முழுவதும் அறிந்து வைத்துள்ளது. ஆனால், 1939 ல் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி எந்தவொரு சரித்திர நூலிலும் நீங்கள் வாசித்திருக்க சந்தர்ப்பமில்லை. ஹிட்லரின் காலத்தில் நடந்த சம்பவங்களை இன்றைக்கும் அசைபோடும் ஊடகங்களும் அது பற்றிப் பேசுவதில்லை. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், (முதலாளித்துவ) மேற்கு ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டது. அதனால், கம்யூனிஸ்டுகளின் ஹிட்லர் மீதான தாக்குதல் பற்றிய தகவல்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டன.

சரித்திர ஆசிரியர்களினதும், ஊடகங்களினதும் ஒட்டுமொத்த புறக்கணிப்புக்கு காரணம் என்ன? தாக்குதல் நடத்திய யொஹான் எல்சர் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் என்பதாலா? நாசிஸ கொடுங்கோன்மைக்கு எதிராக, கம்யூனிஸ்டுகள் நடத்திய ஆயுதப் போராட்டம் குறித்து, உலகம் அறிந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வா? எது எப்படி இருந்த போதிலும், சமூகப் பொறுப்புணர்வு இதனால் மறைக்கப் படுகின்றது. யொஹான் எல்செர் எதற்காக ஹிட்லரை கொலை செய்யத் திட்டமிட்டான்? "எனது செயல் மூலம், மேலதிக இரத்தக் களரியை, மனிதப் பேரழிவை தடுத்து நிறுத்த விரும்பினேன்." இது யொஹான் எல்சரின் வாக்குமூலம். அந்த தீர்க்கதரிசனம் வெகுவிரைவில் சரியென மெய்ப்பிக்கப் பட்டது. குண்டுவெடிப்பில் இருந்து மயிரிழையில் தப்பிய ஹிட்லரினால், இரண்டாம் உலகப்போர் வெடித்தது. அதுவரை உலகம் காணாத மனிதப் பேரழிவு ஏற்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உருவான சோஷலிச நாடுகளில்,"எதிர்கால உலகில் போர்களை இல்லாது ஒழிப்பதற்காக, நாம் இன்று போராடுகின்றோம்" என்று பாடசாலை மாணவர்களுக்கு கற்பிக்கப் பட்டது. "Ich habe den krieg verhindren wollen" (நான் யுத்தம் வருவதை தடுக்க விரும்புகிறேன்.)- Johann Georg Elser

யொஹான் எல்சர் பற்றிய விபரங்கள் ஜெர்மன் மொழியில் மட்டுமே காணப்படுகின்றன.

4 comments:

ADMIN said...

அரிய பல விஷயங்களை தெரிந்துகொள்ள முடிந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி..!!


எனது வலையில் இன்று:
இலவச ஆன்லைன் பிடிஎப் கோப்பு உருவாக்க , மாற்றம் செய்ய(Theni)

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

வலையுகம் said...

புதிய தகவல் பகிர்வுக்கு நன்றி
இந்த பதிவை படிப்பதற்கு முன்பு வரை எனக்கு அவரை யாரேன்றே தெரியாது

வலிப்போக்கன் said...

புதிய தகவல் மாவீரன் பகத்சிங்கின் முன்னோடியா என்பது தெரியவில்லை.
நன்றி!

MANO நாஞ்சில் மனோ said...

அட இது எல்லாம் புது தகவலா இருக்கே...!!!