Saturday, April 04, 2009

கறுப்பர்களுக்கு தனியான பஸ் சேவை: இத்தாலியின் இனஒதுக்கல்


கறுப்பர்களுக்கும், வெள்ளையருக்கும் வெவ்வேறு பேரூந்து சேவை. இது நடப்பது நிற வெறி தென் ஆப்பிரிக்காவில் அல்ல. நாகரிக உச்சியில் இருக்கும் மேற்கு ஐரோப்பிய நாடான இத்தாலியில். நவ-பாசிச கட்சியுடன், வலதுசாரிக் கட்சிகள் கூட்டுச் சேர்ந்து ஆட்சி நடத்தும் இன்றைய இத்தாலியில்; வெளிநாட்டு குடியேறிகளுக்கு எதிரான சட்டங்கள், நடவடிக்கைகள் இத்தாலியில் புதிது புதிதாக அறிமுகப் படுத்தப் படுகின்றன. உலகம் கண்களை மூடிக் கொண்டிருக்கையில், இன ஒதுக்கல் கொள்கை செயல் வடிவம் பெறுகின்றது. நாங்கள் அதை இனவாதம் என்று சொன்னால், அவர்கள் "தேசப் பாதுகாப்பு" என்று காரணம் சொல்கின்றனர்.

இத்தாலியின் தென் கிழக்கு கரையில் இருக்கும் நகரம் பொஜ்ஜியா(Foggia). ஆப்பிரிக்காவில், ஆசியாவில் இருந்து கடல் மார்க்கமாக வந்து குவியும் அகதிகள், நகருக்கு வெளியே அமைந்திருக்கும் முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான அகதிகள், தமது அத்தியாவசிய தேவைகளுக்காக தொலைவில் இருக்கும் பொஜ்ஜியா நகரத்திற்கு வந்து செல்ல வேண்டும். நகரில் இருந்து முகாம் வரை வந்து செல்லும் 24 ம் இலக்க பேரூந்து சேவை, வெள்ளையின உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் குடியிருப்பை தாண்டித் தான் வர வேண்டும். இதனால் அகதிகள் அந்தப் பகுதி பஸ் நிறுத்துமிடங்களுக்கு வந்தும், 24 ம் இலக்க வண்டியைப் பிடிப்பது வழக்கம்.

பொஜ்ஜியா நகர பேரூந்து சேவையை நடத்தும் Ataf என்ற தனியார் நிறுவனம், இந்த மாதம் தொடக்கம் 24/i என்ற புதிய சேவையை ஆரம்பித்துள்ளது. இதில் விசேஷம் என்னவென்றால், இந்தப் புதிய பஸ் சேவை அகதிகளை மட்டுமே ஏற்றிச் செல்லும். வெள்ளையினத்தவர்கள் வழக்கம் போல 24 ம் இலக்க பஸ்ஸில் பயணம் செய்யலாம். ஒரே வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இரண்டு வண்டிகளும், வெவ்வேறு நிறுத்துமிடங்களில் நிற்கும். அதாவது, கறுப்பர்களுக்கும், வெள்ளையருக்கும் அருகருகே இரு வேறு நிறுத்துமிடங்கள். அகதிகள் இனிமேல், (வெள்ளையினத்தவர்கள் வாழும்) குடியிருப்புப் பகுதிக்கு வந்து, பஸ் பிடிக்கத் தேவையில்லை, 24/i நேரடியாக முகாமிற்கு வரும்.

இந்த திட்டம் இனவாத கொள்கை அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்று, சம்பந்தப்பட்ட பஸ் கம்பனியும், நகர மேயரும் மறுத்துள்ளனர். இத்தாலிய பிரசைகளுக்கும், வெளிநாட்டு குடியேறிகளுக்கும் இடையில் அடிக்கடி ஏற்படும் கைகலப்பு தான் தம்மை இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்தக் காரணம் என தெரிவித்தனர். அப்படியே சச்சரவுகள் ஏற்பட்டிருந்தாலும், அதற்கு இது தீர்வல்ல, என வெளிநாட்டவர் நலன் காக்கும் அமைப்பொன்று கண்டித்துள்ளது. அது மேலும் கூறுகையில், "அரசின் இன ஒதுக்கல் கொள்கையானது, நவ-பாசிச காடையர்கள் வெளிநாட்டவர் மீது தாக்குதல் தொடுக்க ஊக்குவிக்கும். இனிமேல் கொலையே நடந்தாலும் இத்தாலிய சமூகமும், ஊடகங்களும் அக்கறைப்படாத ஆபத்து அதிகரிக்கின்றது."

மேலதிக விபரங்களுக்கு:
Storm over plan to provide separate buses for immigrants

2 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

ஹம்ம்ம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இங்கு நேப்பால் மியன்மார் போன்ற நாடுகளில் இருந்து பணி புரிய வருகிறார்கள். உள்ளாட்டு மக்கள் இவர்களோடு கலந்து பழக விரும்புவதில்லை. இது போக சில சமயங்களில் இவர்களோடு மோதலும் ஏற்படுவதுண்டு. இதற்கு காரணம் என்னவாக இருக்கும்? வாழ்க்கை முறையில் காணும் வேறுபாடுகளா?

Kalaiyarasan said...

கருத்திற்கு நன்றி, விக்னேஷ்.

நீங்கள் சொன்னது மாதிரி ஐரோப்பா முதல் மலேசியா வரை இந்தப் பிரச்சினை உள்ளது. இதற்குக் காரணம் வாழ்க்கை முறையில் வேறுபாடு என்று பொதுவாக கூறி விட்டுப் போவார்கள். அதாவது மலேசியர்கள் தாங்கள் சிறந்த வாழ்க்கைத்தரம் கொண்டவர்களாகவும், பர்மியர்கள் தம்மை விட குறைவு என்று சொல்வார்கள். இது இன அடிப்படையிலான கருத்து.

உண்மையான காரணம் பொருளாதாரம். மலேசியாவிலும், ஐரோப்பாவிலும் வசதி குறைந்த உழைக்கும் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களது வேலை பறிபோகும் போதோ, அல்லது சம்பளம் உயர்த்தப்படாத போதோ, அதற்கெல்லாம் வெளிநாட்டவர்களே காரணம் என்று இலகுவாக புரிந்து கொள்கின்றனர். பிரச்சினை அவ்வளவு இலகுவானது அல்ல. குறைந்த கூலியில் அதிக வேலை வாங்கலாம் என்பதற்காக முதலாளிகள் வெளிநாட்டு தொழிலாளரை பயன்படுத்திக் கொள்கின்றனர். அதே நேரம் மலேசியர்கள்/ஐரோப்பியர் செய்ய விரும்பாத வேலைகளை தான் வெளிநாட்டு தொழிலாளர்கள் செய்கின்றனர். இருப்பினும் பொருளாதார பிரச்சினை வரும் போது இனவாதக் கருத்துகள் இலகுவாக பரவுகின்றன.