Showing posts with label கொலம்பியா. Show all posts
Showing posts with label கொலம்பியா. Show all posts

Wednesday, November 14, 2012

கொலம்பிய புரட்சி இயக்கத்தில் ஒரு ஐரோப்பிய பெண் போராளி


கொலம்பியாவில் ஒரு ஆயுதப் புரட்சி மூலம் மார்க்சிய-லெனினிச அரசை அமைப்பதற்காக, கடந்த பல தசாப்தங்களாக போராடிக் கொண்டிருக்கும் FARC இயக்கம், தற்பொழுது அரசுடன் சமாதான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றுகின்றது. நோர்வே, கியூபாவின் மத்தியஸ்தத்துடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ஒரு நெதர்லாந்து பெண்மணியும் கலந்து கொள்கிறார்.

தான்யா நைமையர் (Tanja Nijmeijer), பல்கலைக்கழக பட்டப் படிப்பை முடித்த பின்னர், கொலம்பியா சென்று FARC  இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இயக்கத்தில் அவரது பெயர் அலெக்சான்ட்ரா. ஒரு தடவை, கொலம்பிய இராணுவ நடவடிக்கையின் பின்னர், கைப்பற்றப்பட்ட FARC முகாமில் இருந்து, தான்யாவின் தினக்குறிப்பேடு கண்டுபிடிக்கப் பட்டது. அது ஊடகங்களுக்கு பகிரங்கப் படுத்தப் பட்ட பின்னரே, நெதர்லாந்து பெண் போராளி பற்றி உலகம் அறிந்து கொண்டது. கொலம்பியா தலைநகர் பகொட்டாவில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்றில் சம்பந்தப் பட்டதற்காக, கொலம்பிய அரசினாலும், அமெரிக்க அரசினாலும் தேசப்படும் பயங்கரவாத சந்தேகநபரான தான்யா, ஒஸ்லோவில் நடந்த முதலாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்குபற்ற தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்த வாரம் கியூபாவில் நடைபெறும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள அனுமதிக்கப் பட்டார். கியூபா வந்த தான்யாவை, நெதர்லாந்து பத்திரிகையாளர்கள் சந்தித்து பேட்டி கண்டனர். அந்தப் பேட்டியில் பேசப்பட்ட விடயங்களை இங்கே மொழிபெயர்த்து தருகிறேன். 
----------------------------------------------------------------------------------------------------------

(நெதர்லாந்து நாட்டை சேர்ந்த FARC பெண் போராளி தான்யா நைமையர், முதல் தடவையாக நெதர்லாந்து ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்)

FARC இயக்கத்தில், அலெக்சான்ட்ரா என்று அழைக்கப் படுபவர், அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க தயாராக இருக்கிறார். தான்யா நைமையர் (34 வயது), ஒரு வாரம் கியூபாவில் தங்கியிருக்கும் வேளை, இணையம் ஊடாக அவரைப் பற்றியும், கொலம்பிய நிலைமை, FARC  இயக்கம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கிறார்.

FARC  இயக்கம் குறித்து, ஊடகங்கள் எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருப்பதையிட்டு அவர் அறிந்திருக்கிறார். "பல வருடங்களாக, ஊடகங்கள் FARC  எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. நாங்கள் ஏன் போராடுகின்றோம் என்று, எமது பக்க நியாயம் குறித்து பேசுவதற்கு, எமக்கு சந்தர்ப்பம் வழங்கப் படவில்லை." குண்டுத் தாக்குதல்கள், கடத்தல்கள் இவற்றை சுற்றித் தான் அந்த உருவகம் கட்டமைக்கப் படுகின்றது, என்று அவர் கருதுகிறார். "எவராவது அரசுக்கு வரி செலுத்தா விட்டால், சிறைக்கு செல்ல வேண்டும். எவராவது எமது இயக்கத்திற்கு புரட்சிகர வரி கட்டா விட்டால், எங்களது சிறையில் அடைத்து வைப்போம். நாம் அப்படிச் செய்தால், அதனை ஆட் கடத்தல் என்று கூறுகின்றனர்." தான்யா இங்கே புரட்சிகர வரி என்று குறிப்பிடுவது, வணிக நிறுவனங்கள் FARC  இயக்கத்திற்கு மாதாமாதம் கட்ட வேண்டிய தொகையை ஆகும். 

"(குண்டுத்) தாக்குதல்கள் பற்றிய எமது நிலைப்பாடு இது: நாங்கள் ஒரு இராணுவம். உயிர்களைக் கொல்லும்  ஆயுதங்களுக்கு எதிராக நாங்களும் ஆயுதங்களை பாவிக்கிறோம். நாங்கள் இராணுவம், துணைப்படை, பொலிஸ் ஆகிய அரச படைகளை எதிர்த்து போராடி வருகின்றோம். அந்தப் போராட்டத்தில் மரணங்கள் சம்பவிக்கின்றன. ஏனென்றால் இது ஒரு யுத்தம். அவர்கள் எங்களை தாக்குகிறார்கள். நாங்கள் அவர்களை தாக்குகின்றோம்." ஆயுதப் போராட்டம் பின்னடைவை அடையவில்லை என்று அந்த நெதர்லாந்து பெண்மணி கருதுகின்றார். கொலம்பியாவில் அமைதியான வழியில் அரசியல் நடத்துவதற்கு இடமில்லை. எண்பதுகளில் எமது அரசியல் கட்சி, முற்று முழுதாக அழித்தொழிக்கப் பட்டது. இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் கொன்றொழிக்க பட்டனர். அது நியாயமானது அல்ல. மக்களுக்கு எதிராக அளவுக்கதிகமான அடக்குமுறையை பிரயோகிக்கும் நாட்டில் ஜனநாயகம் பற்றி பேச முடியாது. ஒரு வேளை உணவுக்காக, தமது ஓட்டுக்களை விற்குமளவிற்கு வறுமை அங்கே தாண்டவாடுகின்றது. இப்படியான நிலைமையில், அந்த நாட்டில் ஜனநாயக அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் இருப்பதாக கூற முடியாது. 

தான் சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது, சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக என்ற கூற்றை தான்யா மறுக்கின்றார்.  "பத்து வருடங்களாக FARC  இயக்கத்தில் போராளியாக இருப்பதாலும், ஆங்கிலம் பேசுவதாலும், ஆவணங்களை மொழிபெயர்க்க முடியுமென்பதாலும்...." கலந்து கொள்வதாக அவர் தெரிவித்தார். ஒரு வசதியான செல்வந்த நாட்டில் வாழ்ந்த, பட்டதாரியான தான்யா, தான் ஒரு கெரில்லா போராளியாக கொலம்பிய நாட்டிற்கு வேண்டிய உதவிகளை செய்யலாம் என நம்புகின்றார். "எல்லா வகையான போராட்டங்களும் முக்கியமானவை. ஒரு கெரில்லா போராளியாவதை நானாகவே தெரிவு செய்து கொண்டேன். பிற போராளிகளுடன் உணர்வுத் தோழமையை வகுத்துக் கொண்ட மன நிறைவை அளிக்கின்றது. நான் ஒரு ஊடகவியலாளர் ஆக இருந்திருந்தால், சிலநேரம் நடுநிலையான செய்திகளை பகிர்ந்திருக்கலாம். ஆனால், அதனால் நான் அடையப் போவது என்ன?" 

கொலம்பியாவில் நடந்த தாக்குதல்களுக்காக குற்றம் சாட்டப் பட்டுள்ளதால் தனது எதிர்கால வாழ்வுக்கு எந்தவித இடையூறும் வராது என்று தான்யா நம்புகின்றார். "பேரூந்து ஒன்றில் நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில், எவருமே கொல்லப்படவோ, காயப்படவோ இல்லை. வரி செலுத்த மறுக்கும் வணிக நிறுவனங்கள் மீதான தாக்குதல்களும், நாடு இரவில் தான் இடம்பெறுகின்றன. அந்த தாக்குதல்களில் ஒரு பொதுமகனும் கொல்லப் படவில்லை என்பதை, நான் நூறு சதவீதம் உறுதியாக கூற முடியும்." சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்டாலும், தான்யா கொலம்பியாவில் தங்கி விடவே விரும்புகின்றார். "FARC  ஒரு புரட்சிகர இராணுவம் என்பதற்கு அப்பால், ஒரு அரசியல் கட்சி ஆயுதமேந்தியுள்ளது என்றும் கூறலாம். சமாதானம் வந்தால், ஒரே இலக்கை நோக்கி அமைதியான வழியில் போராடுவோம். நான் எனது வாழ்நாள் முழுவதும் அந்த நாட்டிலேயே தங்கியிருப்பேன். எனது கனவு நனவாகும் வரையில், நான் அதற்காக போராட விரும்புகின்றேன்." 

(நன்றி: Het Parool, 12 november 2012)

(மொழிபெயர்ப்பு: கலையரசன்) 


கொலம்பியா பற்றிய முன்னைய பதிவுகள்:
1.கொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்
2.FARC கெரில்லாக்களுடன் 10 நாட்கள்


Thursday, June 30, 2011

கொலம்பியா FARC கெரில்லாக்களின் பயிற்சி முகாம்

கொலம்பியாவின் FARC புரட்சி இயக்கத்தின் முகாம் ஒன்றில், போராளிகளின் அன்றாட வாழ்க்கையைக் காட்டும் வீடியோ. போராளிகளுக்கு வழங்கப்படும் இராணுவ பயிற்சி, அரசியல் வகுப்புகள், மற்றும் நூலகம் ஆகியனவற்றை இந்த வீடியோவில் காணலாம்.



கொலம்பியா நாட்டின் FARC அமைப்பு பற்றிய மேலதிக விபரங்களுக்கு, எனது முன்னைய பதிவுகளை வாசிக்கவும்.
1.கொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்
2.ஒரு பெண் போராளியின் கதை
3.FARC கெரில்லாக்களுடன் 10 நாட்கள் (வீடியோ)

Friday, December 11, 2009

FARC கெரில்லாக்களுடன் 10 நாட்கள் (வீடியோ)

ஸ்பானிய ஊடகவியலாளர் David Beriain கொலம்பிய FARC கெரில்லாக்களின் முகாமில் 10 நாட்கள் தங்கியிருந்த அனுபவங்களை ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்பானிய மொழி பேசும் அந்த வீடியோவை இங்கே இணைத்துள்ளேன்.


பிரான்ஸ் 24 ஒளிபரப்பிய ஆங்கில செய்திச் சுருக்கம்.


நெதர்லாந்து நாட்டை சேர்ந்த FARC இயக்க பெண் போராளி பற்றிய தகவல்கள்:


Thursday, November 12, 2009

அமெரிக்காவுடன் போருக்கு தயாராகிறது வெனிசுவேலா


"தவறு செய்யாதீர்கள், ஒபாமா! வெனிசுவேலா மீதான படையெடுப்பு நூறாண்டு கால போருக்கு அடிகோலும். முழு லத்தீன் அமெரிக்க நாடுகளையும் இழுத்து விடும்." அமெரிக்காவுடனான போருக்கு தயாராக இருப்பதாக, வெனிசுவேலா ஜனாதிபதி சாவேஸ் அறிவித்தார். அன் நாட்டு அரச தொலைக்காட்சியில் வாராந்த "அலோ பிரேசிடேண்டே" நிகழ்ச்சியிலேயே மேற்குறிப்பிட்ட வீராவேசப் பேச்சு வெளிப்பட்டது. சாவேசின் போர்ப் பிரகடனத்திற்கு காரணம் இல்லாமலில்லை. அயல் நாடான கொலம்பியா கடந்த மாதம் 30 ம் திகதி, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், ஏழு கொலம்பிய இராணுவ தளங்கள் அமெரிக்காவுக்கு என ஒதுக்கப்படும். கொலம்பிய தளங்களில் நிலை கொள்ளும் அமெரிக்க படைகள் போதைவஸ்து கடத்தலுக்கு எதிராகவும், இடதுசாரி தீவிரவாதிகளுக்கும் எதிராக போரிடுவர். அவ்வாறு கொலம்பிய அரசு கூறுகின்றது. ஆனால் சாவேஸ் இந்த ஒப்பந்தம், வெனிசுவேலா மீதான படையெடுப்புக்கான முகாந்திரமாக கருதுகின்றார். (வலதுசாரி அரசால் நிர்வகிக்கப்படும்) கொலம்பியா அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாகி வருவதாக குற்றஞ்சாட்டுகின்றார்.

கொலம்பியாவில் நிலை கொண்டிருக்கும் அமெரிக்க படைகள், சாவேஸ் அரசை தூக்கியெறியும் சதிகார எண்ணத்துடன் வந்திருப்பதாக வெனிசுவேலா அரசு நம்புகின்றது. இதனால் கொலம்பிய எல்லையோரமாக வெனிசுவேலா துருப்புகள் குவிக்கப்பட்டு வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளது. வெனிசுவேலா எல்லையோர கிராமமான "பாரினாஸ்"ல் காணப்பட்ட நூற்றுக்காக்கான கொலம்பிய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். அடையாள பத்திரம் எதுவும் இன்றி தங்கி இருந்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

சாவேசின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள கொலம்பிய அரசு, வெனிசுவேலா FARC இடதுசாரி தீவிரவாதிகளுக்கு உதவுவதாக தன் பங்கிற்கு குற்றம் சுமத்தியது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வருவதால், போர் மூளுவது சாத்தியமாகலாம். எனினும் இரு வருடங்களுக்கு முன்னரும் இது போன்றதொரு கொந்தளிப்பான சூழ்நிலையில், பிற லத்தீன் அமெரிக்க நாடுகள் தலையிட்டு பிரச்சினையை தீர்த்தன. இதற்கிடையே வெனிசுவேலா, ரஷ்யாவுடன் நெருக்கமாகி வருவதுடன், ரஷ்ய ஆயுதங்களையும் இறக்குமதி செய்கின்றது.


U.S. Military Documents Show Colombia Base Agreement Poses Threat to Region

Thursday, February 26, 2009

கொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்


அமெரிக்கக் கண்டத்தைக் 'கண்டுபிடித்த' கிறிஸ்டோபர் கொலம்பஸின் நினைவாக அந்த நாட்டிற்குக் கொலம்பியா எனப் பெயர் சூட்டப்பட்டது. அதன் தலைநகர் போகோட்டாவில் இன்றைய ஜனாதிபதி தனது பதவியேற்பு வைபவத்தை கொண்டாடிக் கொண்டிருந்தார். நாட்டின் தீராத பிரச்சினையான தீவிரவாத இயக்கங்களை ஒழிப்பேன் என புதிய ஜனாதிபதி விழாமேடையில் சூளுரைத்துக் கொண்டிருந்த சமயம் , எங்கிருந்தோ வந்த செல்கள் விழா நடந்த இடத்திற்கு அருகாமையில் விழுந்து வெடித்தன. ஜனாதிபதி தீவிரவாதிகளை ஒழிக்க காடுகளுக்குப் போக முன்னர் அவர்களாகவே தலைநகருக்கு வந்துவிட்டனர்.

இது நடந்து ஒரு வருடம் பூர்த்தியாகவில்லை. தலைநகரின் மத்தியில் பணக்காரக் குடும்பங்கள் தமது ஆர்ப்பாட்டமான கொண்டாட்டங்களை நடத்தும் மண்டபம் குண்டுவெடிப்பில் சேதமாகியது. இன்னொரு நகரில் ஒரு வீட்டில் தீவிரவாதிகளின் ரகசியக் கூட்டம் நடைபெறுவதாகத் தகவல் கிடைத்துப்போன பொலிஸ் அதிகாரிகள், அது தமக்கு வைத்த பொறி என்றுணர்வதற்குள் குண்டுவெடித்துக் கொல்லப்பட்டனர். நிலைமையை இன்னும் மோசமாக்குவதாக கொலம்பியப் படைகளுக்கு அலோசனை வழங்கும் அமெரிக்க சி.ஐ.ஏ அதிகாரிகள் இருவர் சென்ற விமானம் இயந்திரக் கோளாறினால் அடர்ந்த காட்டிற்குள் விழுந்து விபத்தில் உயிர் தப்பிய அமெரிக்கர்களை கெரில்லாக்கள் பிடித்துக்கொண்டு போய்விட்டார்கள். தனது பிரஜைகளை மீட்பதற்காக கொலம்பியாமீது படையெடுக்கப்போவதாக அமெரிக்க அரசு மிரட்டி வந்தது.

கொலம்பியா ஒழுங்காக தேர்தல்கள் நடாத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படும் ஜனநாயக நாடுதான். இருப்பினும் நகரங்களில் மட்டுமே ஜனநாயகத்தைப் பார்க்கக் கூடியதாகவுள்ளது. நாட்டுப்புறங்களில் ஒன்றில் இராணுவத்தின் அல்லது துணைப்படைகளின் ஆட்சி நடக்கும் பிரதேசமாகவிருக்கும் அல்லது கெரில்லா இயக்கங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். இவற்றைவிட மூன்றாவது சக்தியாக போதைவஸ்துக் கடத்தும் மாபியாக் குழுக்கள் தமக்கென தனிப்படைகளுடன் சிறிது காலம் சில தசாப்தங்களாக அட்டகாசம் புரிந்து வந்தன. அரசபடைகளுடனான மோதலில் இறுதியில் பலம் குறைந்து போன மாபியாக் குழுக்கள் இராணுவத்துடன் உடன்பட்டு துணைப்படையை உருவாக்கினார்கள். இதனால் தற்போது இரண்டு சக்திகள் மட்டுமே களத்தில் உள்ளன

இரண்டாவது சக்தியான மார்க்ஸீய கொரில்லாக் குழுக்களின் போராட்டம் நீண்ட வரலாற்றைக் கண்டுள்ளது. தென் அமெரிக்கக் கண்டத்தில் கடந்த 30 ஆண்டு காலமாகத் தோல்வியடையாமல் சளைக்காமல் போரிட்டு வரும் கெரில்லாக்களை கொலம்பியாவில் காணலாம். அவர்களின் வெற்றிக்கு பல காரணங்களிருந்தபோதும் நாட்டில் நிலவும் ஆழமான சமூக ஏற்றத்தாழ்வான ஏழை-பணக்கார வர்க்க வித்தியாசம் மிக முக்கியமான காரணி.

1946 ல் நாட்டில் எழுந்த குழப்ப நிலையே இன்றைய கெரில்லாக்குழுக்களின் ஆரம்பம். விவசாயிகள் நில உரிமைக்காகப் போராடினர். தொழிற்சங்கங்கள் ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தம் செய்தனர். ஆட்சியிலிருந்த கென்சர்வேட்டிவ் கட்சி நிலவுடைமையாளரின் பக்கம் நின்று போராட்டத்தை நசுக்கியது. தொழிற்சங்கத் தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். எதிர்க்கட்சியான லிபரல் கட்சியில் இருந்த இடதுசாரிகள் ஆயுதம் ஏந்தினர்.

லிபரல் கட்சி ஆரம்பத்தில் போராட்டத்திற்கு அதரவளித்தது. இருப்பினும் சந்தர்ப்பவாதப் போக்குடைய அந்தக்கட்சி ஆயுதப் போராட்டத்தை அரசுடன் பேரம் பேசப் பயன்படுத்தியது. இதன் விளைவாக 1970 ல் இருகட்சிகளிடையே உடன்பாடு ஏட்பட்டு தேசிய முன்னணி அமைத்தனர். இடதுசாரிகள் இதனைத் தமக்கிழைத்த துரோகமாகப் பார்த்தனர். தேசிய முன்னணி அரசு தெரிவு செய்யப்பட்ட தேர்தல் தினத்தின் பெயரில் எம்-19 என்ற இயக்கம் உருவாகியது. இந்த இயக்க உறுப்பினர்களில் பலர் நகர்ப்புறப் படித்த இளைஞர்கள். இதைத்தவிர நாட்டுப்புறத்தில் உதிரிகளாக இருந்த கொரில்லாக் குழுக்களை இணைத்து இன்னொரு பலம் வாய்ந்த இயக்கம் உருவானது. "கொலம்பிய புரட்சிகர இராணுவம்" (FARC) மிகவும் கட்டுக்கோப்பான மிகப்பெரிய கெரில்லா இயக்கம். இதற்கும் சட்டபூர்வ கொம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நெருங்கிய தொடர்பிருப்பதாக நம்பப்படுகிறது. லிபரல் கட்சியுடன் அதிருப்தியுற்று வெளியேறிய இடதுசாரி லிபரல்கள்தான் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்தனர்.

கம்யூனிஸ்ட் கட்சி அந்தக்காலத்தில் சோவியத் சார்புடையதாக இருந்ததால், சீனச்சார்பு மாவோயிஸக் கம்யூனிஸ்ட்டுகள் தமக்கென "மக்கள் விடுதலைப் படை" (EPL) என்ற கெரில்லா இயக்கத்தை அமைத்தனர். கொலம்பியாவின் ஆயுதப் போராட்டத்திற்கு கியூபப்புரட்சியும் தனது பங்களிப்பை வழங்கியுள்ளது. கியூபப்புரட்சியரல் கவரப்பட்ட சில கொலம்பியர்கள் ஒன்றிணைந்து 'தேசிய விடுதலை இராணுவம்' (ELN) என்ற கெரில்லா இயக்கத்தை ஸ்தாபித்தனர். இந்த இயக்கத்திற்கு கியூபா பல வழிகளிலும் உதவி வந்தது. ELN ன் தனிச்சிறப்பு, அது மாக்ஸீயத்துடன் 'விடுதலை இறையியலையும்' தனது சித்தாந்தமாக வரித்துக் கொண்டுள்ளது. தேவாலயங்களில் மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்த கத்தோலிக்க மதகுருமார் ஆயுதம் ஏந்தி கெரில்லா இயக்கக் கொமாண்டர்களாக மாறிய அதிசயம் கொலம்பியாவில் நடந்தது. சமுக அநீதிகளுக்கெதிராக ஏழைமக்கள் ஆயுதமேந்திப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை எனக்கூறிய பாதிரியார் கமிலோ தொரஸ் அதனைச் செயலிலும் காட்டி ELN இயக்கத்துடன் இணைத்துக்கொண்டார். ஆயுதப்புரட்சியில் நம்பிக்கையுற்ற பல மதகுருக்கள் அவரின் வழியைப் பின்பற்றினர். புரட்சி, சமூக நீதி பற்றிப்பேசுபவர்கள் நாஸ்திகர்களாக இருக்கத்தேவையில்லை என்பதை முதன்முதலாக கடவுள் நம்பிக்கையுள்ள மக்கள் புரிந்து கொண்டார்கள்.

இந்தக் கெரில்லாக்குழுக்களின் தோற்றத்தில் மட்டுமல்ல, அவற்றின் செயற்பாடுகளிலும் வேறுபாடுகள் தெரிகின்றன. தற்போது ஓய்ந்திருக்கும் எம்-19 பல அதிரடி நடவடிக்கைகளுக்குப் பெயர் பெற்றது. ஒருமுறை டொமினிக்கா நாட்டுத் தூதுவராலயத்தைக் கைப்பற்றிப் பல நாட்டுத் தூதுவர்களை இரண்டுமாதகாலமாக பயணக்கைதிகளாக வைத்திருந்தனர்.இன்னொருமுறை பால் லொறியைக் கடத்திச் சென்று சேரிவாழ் ஏழைமக்களுக்கு இலவசப் பால் விநியோகம் செய்தனர். ELN பொருளாதார இலக்குகளைக் குறிவைக்கிறது. எண்ணைவிநியோகப் பாதையில் குண்டுவைத்து நாசம் செய்தல், மின்மாற்றிகளை நகர்த்தல் போன்றவற்றின் விளைவாகப் பெற்ரோலிய கூட்டுத்தாபனம் இறுதியில் இயக்கத்திற்கு நிதியுதவி செய்து தன்னைக் காத்துக்கொண்டது. இதுதவிர முக்கிய புள்ளிகளைக் கடத்திச் சென்று பணயக்கைதியாக வைத்திருந்து பணம் கறப்பதையும் ELN தனது நிதி சேகரிப்பு நடவடிக்கையாகக் கருதுகிறது. பணக்காரரிடமிருந்து பணம் கறப்பதற்கு அது(கடத்தல்) சிறந்த வழி என்று நியாயப்படுத்தப்படுகின்றது.

FARC சிறு கெரில்லாக்குழுவாக ஆரம்பித்த இயக்கம். இன்று பெரிய இராணுவமாக வளர்ந்துள்ளது. இதனால் சிறு இராணுவ முகாம்கள் காவல் நிலையங்கள் ஆகியவற்றைத் தாக்கியழித்து, குறிப்பிடட்ட பிரதேசத்தைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். 1995 க்கும் 1999 க்கும் இடைப்பட்ட காலத்தில் பெரிய இராணுவ முகாம்களும் அடுத்தடுத்து வீழ்ந்தன. அரசபடைகள் பின்வாங்கி ஓடின. இறுதியில் சுவிட்சர்லாந்து அளவிலான பிரதேசத்தை FARC இடம் விட்டுக்கொடுத்துவிட்டு, அரசாங்கம் பேச்சுவார்தை நடாத்தியது. கொலம்பியாவின் மத்திய, தென்பகுதிகளில் பல FARC ன் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களாக அறியப்பட்டுள்ளன. அங்கே பகலில் இராணுவத்தினர் ஆட்சியும் இரவில் FARC ன் ஆட்சியும் நடக்கிறது. கொலம்பியாவின் வடக்குப்பகுதியில் ELN ஆதிக்கம் செலுத்துகிறது. ELN க்கும் FARC க்கும் இடையில் நட்புரீதியான புரிந்துணர்வு இருந்து வருகிறது. இதுவரை இரண்டுக்குமிடையில் எந்த வகையான பகைமுரண்பாடுகளும் வெடிக்கவில்லை.

FARC ன் 30 வீதமான போராளிகள் பெண்கள். போர்முனைகளில் ஆண்களுக்கு நிகராகச் சண்டையிடுகின்றனர். இராணுவப்பயிற்சியும் சமமாகவே வழங்கப்படுகின்றது. பல பெண்கள் கொமாண்டர் தரத்திற்கு உயர்ந்துள்ளனர். ஆண்-பெண் போராளிகளுக்கிடையிலான திருமண பந்தம் தொடர்பான விதிகள் சிக்கலானவை. இயக்கத்திற்குள் காதலிப்பதற்கும், ஒன்றாகச் சேர்ந்து வாழ்வதற்கும் அனுமதிக்கப்படுகின்றது. சம்பந்தப்பட்டவர் தனது காதலை பகிரங்கப்படுத்தவேண்டும். தொடர்ந்து அவர்களின் விருப்பப்படி சேர்ந்துவாழ விடப்படுவர். ஆனால் அது நிலையானதல்ல. கடமை அழைக்கும்போது தமது உறவை முறித்துக்கொண்டு களத்திற்குச் செல்ல வேண்டும். இதன் காரணமாக குழந்தை பெற்று வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தனது துணைவி மீது வன்முறை பிரயோகிக்கும், அல்லது வல்லுறவு செய்யும் ஆண்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுகின்றனர்.

கொலம்பியாவின் அரசியல் அமைப்பை "இரு கட்சி ஜனநாயக முறை" என்று அழைக்கின்றனர். இதுவரை ஒன்றில் கென்சர்வேட்டிவ் கட்சி அல்லது லிபரல் கட்சி என்று மாறிமாறி ஆட்சி செய்து வருகின்றன. நாட்டின் உள்நாட்டுப்போர் அடிக்கடி தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்ப்படுகின்றது. ஒவ்வொரு தேர்தலிலும் எதிர்க்கட்சியினர் தாம் ஆட்சிக்கு வந்தால் சமாதானம் கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுப்பார்கள். வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பின்னர் சிறிதுகால யுத்த நிறுத்தம் ஏற்பட்டுப் பேச்சுவார்த்தை நடக்கும். பின்னர் ஏதோ ஒரு காரணத்தால் பேச்சுவார்த்தை குழம்பி பழையபடி யுத்தம் நடக்கும். கடந்த முப்பது வருடங்களாக சண்டையும் சமாதானமும் இதே பாணியில் தொடர்கிறது. அரச படைகளின் ஜெனரல்கள் பொதுவாகவே கெரில்லா இயக்கங்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பதை எதிர்த்து வருகின்றனர். இந்தக் கடும் போக்காளரின் பின்னால்தான் அமெரிக்க அரசும் நிற்கிறது. கடந்த ஆண்டு "Plan Colombia" என்ற பெயரில் அமெரிக்கக் காங்கிரஸ் அனுமதியுடன் பெருமளவு பணம் கொலம்பிய இராணுவத்தை பலப்படுத்தச் செலவிடப்பட்டது. அதிநவீன black Hawk ஹெலிகப்டர்கள், இரவில் பார்க்கும் உளவுவிமானங்கள் என்பன இந்த உதவியில் அடக்கம். மேலும், அமெரிக்கா கொலம்பியப் போரை "பயங்கரவாத்திற்கெதிரான போர்" என்றே சொல்லி வருகின்றது.

பெருமளவு எதிர்பார்ப்புகளுடன் முன்னெடுக்கப்பட்ட கடைசிச் சமாதானப் பேச்சுவார்த்தைகள் (FARC தலைவர் மருலண்டாவும், அன்றைய ஜனாதிபதி பஸ்த்ரானாவும் காட்டுக்குள் சந்தித்துக் கதைத்தனர்) குழம்பிய பின்னர் கெரில்லாக்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை விட்டுவிட்டு காடுகளுக்குள் பின்வாங்கினர். போகும்போது எந்தவொரு அரசாங்க நிர்வாகத்தையும் விட்டுவைக்காமல் அழித்துவிட்டுச்சென்றனர். படைப்பிரிவுகளின் கொமாண்டர்கள் வௌ;வேறு இடங்களில் இருந்தாலும் தமக்கிடையிலான ரேடியோத் தொடர்புகளைக் குறைத்துக்கொண்டனர். புதிய யுக்தியாக கொலம்பியாவில் மட்டுமல்லாது எல்லை கடந்து பிறேசிலிலும் வெனிசுலாவிலும் தமது நடவடிக்கைகளை விரிவுபடுத்தினர். உள்நாட்டில் யுத்த தந்திரத்தை மாற்றிக் கொண்டனர். வழக்கமான இராணுவ முகாம் தாக்குதல்களைவிட்டு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைக் குண்டு வைத்து தகர்க்கும் வேலைகளைச் செய்கின்றனர். குறுகிய காலத்திற்குள் குறைந்தது 50 பாலங்களாவது தகர்க்கப்பட்டள்ளன.

இத்தகைய நடவடிக்கைகளால் அரசாங்கம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. நாற்பதாயிரம் போர்வீரர்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டுள்ளனர். கெரில்லாக்கள் பெருமளவு வெடிமருந்துப் பொருட்களை இறக்குமதி செய்துள்ளதாக அமெரிக்கக் காங்கிரஸ் அறிக்கை தெரிவிக்கின்றது. இதைவிட அதிர்ச்சியைக் கொடுத்த விடயம், FARC கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் பல வெளிநாட்டவர்களும் காணப்படுவதாக வரும் செய்திகள். மூன்று ஐரிஸ்காரர்கள் இராணுவத்தால் பிடிபட்டபின்புதான், ஐரிஸ் குடியரசு இராணுவ (IRA) உறுப்பினர்கள் கொலம்பியக் கெரில்லாக்களுக்குக் குண்டு வைப்பதில் பயிற்சியளிப்பது தெரியவந்துள்ளது.

அரசபடைகளுடன் தொடர்புடைய துணைப்படையான AUC க்கு அமெரிக்க, இஸ்ரேலிய இராணுவ நிபுணர்கள் பயிற்சியளித்து வருகி;ன்றனர். சில வெளிநாட்டுக் கூலிப்படைகளும் தமது சேவையை வழங்கி வருகின்றனர். அரசாங்கத்திற்குக் கட்டுப்படாத துணைப்படைக்கு நிலப்பிரபுக்களும், பெருமுதலாளிகளும் தாராளமான நிதி வழங்கி வருகின்றனர். பெருமளவு மனித உரிமை மீறல்களுக்கு துணைப்படையே பொறுப்பு எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கெரில்லாக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் கிராம மக்கள் ஆயிரக்கணக்கில் துணைப்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.

"ஒன்று, இரண்டு, மூன்று... வியட்னாம்களை உருவாக்குவோம்" என்றார் ஆர்ஜென்தீனப் புரட்சியாளர் சே குவேரா. இரண்டாவது வியட்நாம் கொலம்பியாவில் நிதர்சனமாகி வருகின்றது. நிலைமை இப்படியே போனால் இன்னும் ஐந்து ஆண்டுகளில்கெரில்லாக்கள் நாடு முழுவதையும் பிடித்துவிடுவார்கள் என்று உண்மை நிலையைச் சொல்லியது அமெரிக்கக் காங்கிரஸ் அறிக்கை. என்ன விலை கொடுத்தாகிலும் அதைத் தடுக்க அமெரிக்க அரசு பெரும் பிரயத்தனம் எடுத்து வருகின்றது. பல ஆண்டுகளாகவே "போதைப் பொருளுக்கெதிரான போர்" என்ற பெயரில் அமெரிக்க உதவி கொலம்பிய அரசுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது. இந்தப் போர்வையின் கீழ் நடக்கும் கதையோ வேறு. அமெரிக்காவின் போதைப்பொருள் தடுப்புச் சிறப்புப் படைப்பிரிவு கெரில்லாக்கள் நடமாட்டத்தையும் கண்காணித்தது. அவர்களின் அக்கறை முழுக்க வேறு எங்கோ இருந்ததாக கொலம்பிய அரச அதிகாரிகளே குறைப்பட்டனர். ஹெரோயின் உற்பத்திக்கான கொக்கோச் செடிகளை அழிக்க அனுப்பப்பட்ட விமானங்கள் விசிறிய மருந்து, பிற உணவுப்பயிர்களையும் அழித்துவருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதுவரைகாலமும் பின்னால் நின்று உதவிய அமெரிக்க அரசு தற்போது நேரடியாகத் தலையிடப்போவதாகப் பயமுறுத்தி வருகின்றது. வரப்போகும் அமெரிக்க இராணுவத்தை எதிர்பார்த்துக் கொண்டு கொலம்பியப் போராளிகள் காத்திருக்கின்றனர்.


FARC தொடர்பான வீடியோ ஆவணப்படங்கள்:


தென் அமெரிக்க ஏழைகளின் விடுதலை போராளிகள் FARC
ஒரு பெண் போராளியின் கதை

Wednesday, February 25, 2009

தென் அமெரிக்க ஏழைகளின் விடுதலை போராளிகள் FARC

கொலம்பியா நாட்டின் FARC போராளிகள் பயங்கரவாதிகளல்லர், அவர்கள் ஏழைகளின் விடுதலைப் போராளிகள். Al Jazeera ஊடகவியலாளர் Phil Rees, FARC இயக்கத்தினுள் இருந்து வழங்கும் உள்ளக அறிக்கை. சி.ஐ.ஏ. ஒரு காலத்தில் பயங்கரவாதிகள் கையேடு ஒன்றை பிரசுரித்ததை நினைவு கூறுகின்றார். ஒருவரின் பயங்கரவாதி இன்னொருவரின் விடுதலைப் போராளி எனற தத்துவத்தை நினைவு கூறுகின்றார்.


America's Backyard. 17 Feb 09 - Pt 1


Part 2:

Friday, October 24, 2008

ஒரு பெண் போராளியின் கதை

Guerrillera (பெண் போராளி) ஆவணப் படம். 
கொலம்பியா நாட்டின் புரட்சி இராணுவமான FARC இல் இணைந்த ஒரு பெண் போராளியின் கதை, படமாக்கப்பட்டிருக்கிறது. அடர்ந்த காட்டுக்குள், அந்த இயக்கத்தின் இராணுவப்பயிற்சி, அரசியல் வகுப்புகள், மற்றும் போராளிகளின் நாளாந்த வாழ்க்கை ஆகியவற்றை இந்த படத்தில் பார்க்கலாம். ஸ்பானிய மொழி பேசும் படம் ஆங்கில உப தலைப்புகளுடன்.

Guerrillera



The translation of the introduction
___________________________________
Two hundred years ago
Simon Bolivar lead an uprising of
indians and african slaves
against the Spaniard empire in Southamerica.

Bolivar defeated spaniard army
but his social and revolutionary dream
was beatrayed for Colombian landowners.

Today,
a guerrilla called FARC-EP
keep fighting in Bolivar ideals
against Colombian oligarchy

FARC controls a big part of Colombia
and the foreign investor consider it as
a dangerous threat.

For Colombian and U. S. Goverments
guerrilas are kidnappers, drug-traders
and Terrorist

no other confict in western hemisphere
has the same bloody and suffering consequenses

Military and paramilitary death squadas
mutilate, kill and jail civilians suspected
of shimpaties with rebelds.

In hidden jungle training camps
FARC teachs to new recruits Simon Bolivar,
Carl Marx and Valdimir Lenin ideals, and
prepare them to fight.

when anyone decides fight
his/her compromise is for life time.

_______________________________________
Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy