Monday, June 13, 2011

நமீபியாவின் விடுதலை எனும் நவீன அடிமை சாசனம்

மேற்குலக நாடுகளின் தயவில் கிடைக்கும் ஈழம், காலனிய சுரண்டலுக்கு வழி சமைக்கும் என்பதை நமீபியாவின் விடுதலை விளக்குகின்றது. நமீபியா, ஆப்பிரிக்க கண்டத்தின் இளைய தேசம். நிறவெறி தென்னாபிரிக்காவிடம் இருந்து விடுதலை அடைவதற்காக போராடிய ஸ்வாபோ (SWAPO) இயக்கம், தற்போது ஆளும் கட்சியாகவுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன்னர், பனிப்போர் முடிந்த பின்னர், நமீபியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. நமீபியாவின் விடுதலைக்கு சர்வதேச ஆதரவும் கிட்டியிருந்தது. கிழக்கு தீமோர், கொசோவோ போன்ற நாடுகள் ஐ.நா.வினால் அங்கீகரிக்கப் பட்ட வேளை, ஈழம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தது போன்று தான் அப்போதும் நடந்தது. நமீபியாவின் விடுதலையை கண்டவுடன், ஈழத்தின் விடுதலை வெகு தூரமில்லை என்று, தமிழ்த் தேசியவாதிகள் நம்பினார்கள். இதனால், இருபதாண்டுகளுக்கு பின்னர், நமீபியாவின் இன்றைய நிலை குறித்து ஆராய்வது அவசியமாகியுள்ளது. நமீபியாவுக்கு கிடைத்தது ஒரு போலிச் சுதந்திரம் என்பதும், முன்னாள் காலனிய எஜமானர்களே உண்மையான ஆட்சியாளர்கள் என்பதும் பலருக்கு தெரியாது.


முதன்முதலாக நமீபியா செல்லும் ஒருவர், ஐரோப்பாவில் கால் பதித்து விட்டதாக எண்ணுவார். பெரும்பான்மையான நமீபியர்கள் வாழும் தலைநகரத்தில் இருந்து ஆரம்பிப்போம். Windhoek (மூலம், டச்சு மொழி. உச்சரிப்பு:"வின்ட் ஹூக்") என்ற பெயரே, முன்னை நாள் தென்னாபிரிக்க நிறவெறி ஆட்சியை நினைவுபடுத்தும். 1915 முதல் 1990 வரையில் தென் ஆப்பிரிக்காவினால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசமாக இருந்தது. வெள்ளையின ஆட்சியாளர்களால், நிறவேற்றுமை பாராட்டும் சட்டங்கள் புகுத்தப்பட்டன. வின்ட் ஹூக் நகரின் விசாலமான தெருக்களும், தெளிவான அறிவிப்புப் பலகைகளும், சுத்தமான நடைபாதைகளும், இது ஆப்பிரிக்கா தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும். வின்ட் ஹூக் ஆபிரிக்காவின் அழகான நகரம் மட்டுமல்ல, மிகவும் சுத்தமான நகரமும் கூட. கட்டிடங்களும் ஒரு ஐரோப்பிய நகரத்தினுள் பிரவேசிப்பது போன்ற பிரமையை ஏற்படுத்தும். ஆப்பிரிக்காவின் பணக்கார நாடும் இது தானோ, என்ற எண்ணம் தோன்றும். ஆடம்பரமான வீடுகளும், பணக்கார வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் வணிக மையங்களும் நகரை ஆக்கிரமித்துள்ளன. அது மட்டுமல்ல, தெருக்களில் பெருமளவு வெள்ளையினத்தவர்கள் உலாவுவதையும் காணலாம்.


நமீபியா, ஆப்பிரிக்காவின் சிறந்த நாடாவதற்கு, அந்நாட்டை தாயகமாகக் கொண்ட ஜெர்மன் வம்சாவழியினர் காரணம் என்று பலர் கருதுகின்றனர். "ஒழுக்கத்தில் சிறந்த" ஜெர்மன் காலனியாதிக்கவாதிகளின் பிள்ளைகள் நமீபிய பிரஜைகளாக உள்ளனர். அவர்கள்
சிறுபான்மையினராக இருந்த போதிலும், அனைத்து சலுகைகளையும் அனுபவிக்கும்
முதலாந்தர குடிமக்களாக நடத்தப் படுகின்றனர். குறிப்பாக வின்ட் ஹூக் நகராட்சி அவர்கள் ஆதிக்கத்தில் உள்ளது. அதனால் நகரின் கட்டுமானப் பணிகளை, ஐரோப்பிய கம்பனிகளிடம் ஒப்படைக்கின்றனர். இன்னமும், வின்ட் ஹூக் நகரின் பல தெருக்களுக்கு ஜெர்மன் பெயர்கள் இடப்பட்டுள்ளன. இத்தனைக்கும் நமீபியாவை ஆள்வது, பெரும்பான்மை கறுப்பினத்தவர்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம். காலனிய காலகட்டத்தின் எச்சங்களை அகற்றுவதற்கு, ஆளும் ஸ்வாபோ அரசு முயற்சித்தது. ஆனால், வெளிநாட்டு அழுத்தம் காரணமாக முயற்சியை கைவிட்டது. ஒரு பெயரைக் கூட மாற்ற முடியாவிட்டால், அந்த சுதந்திரத்தின் அர்த்தம் என்ன? நமீபியா இன்னமும் காலனிய காலகட்டத்தில் இருப்பதாக, கறுப்பின மக்கள் நம்புகின்றனர். அன்று இந்த வெள்ளையர்கள் நமீபியாவை ஆண்டார்கள், இன்று அவர்கள் முழு நாட்டையும் தனி உடமையாக மாற்றிக்
கொண்டுள்ளார்கள்.

நமீபியா உலகில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. வடக்கில் இருந்து தெற்காக, அண்ணளவாக நாலாயிரம் கி.மி. தூரத்தைக் கொண்டது. நாட்டின் பெரும்பான்மையான
நிலம், மனிதர்கள் வாழ முடியாத பாலைவனம். ஆனால், பெறுமதியான வைரக் கற்களும்,
யுரேனியமும், வேறு கனிம வளங்களும் நிறைந்த செல்வம் கொழிக்கும் பாலைவனம். இந்த கனிம வளங்களை அகழும் வேலையில் மேற்கத்திய நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. மிக நீண்ட கடல் எல்லையைக் கொண்ட நமீபியாவின் கடல் வளங்களையும், அவை தான் அள்ளிச் செல்கின்றன. நமீபியாவின் மொத்த சனத்தொகை வெறும் இரண்டு மில்லியன்கள். ஆயினும், குறைந்தது 50 % மான மக்கள், வேலை வாய்ப்பின்றி வறுமையில் வாடுகின்றனர். அவர்களில் அநேகமானோர் கறுப்பின மக்கள் என்பதை இங்கே சொல்லத்
தேவையில்லை. இந்தியா போன்ற நாடுகளில் ஏழைகள் அதிகமாக இருப்பதற்கு, சனத்தொகைப் பெருக்கத்தைக் காரணமாகக் காட்டுவார்கள். நமீபியாவின் இரண்டு மில்லியன் மக்களின் வாழ்வை மேம்படுத்துவது முடியாத காரியமா? உண்மையில் அவர்கள் மறைக்க விரும்புவது, பெருமளவு செல்வத்தை ஒரு சிறிய பணக்காரக் கும்பல் மட்டுமே அனுபவிக்கிறது என்பதைத் தான். நமீபியாவின் மொத்த சனத்தொகையில் 6 % மாக உள்ள வெள்ளையர்கள், 90 % தேச உற்பத்தியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

வந்தேறுகுடிகளான ஐரோப்பியர்கள் மாளிகை வீடுகளில் வசிக்கையில், மண்ணின் மைந்தர்களான கறுப்பின நமீபியர்கள் இன்னமும் சேரிகளில் வசிக்கின்றனர். வின்ட் ஹூக் நகரின் ஒதுக்குப்புறமாக உள்ள Katutura எனுமிடத்தில், பெருமளவு கறுப்பினத்தவரின் குடியிருப்புகள் அமைந்துள்ளன. Katutura என்றால், உள்ளூர் மொழியில் "நாங்கள் வாழ விரும்பாத இடம்" என்று அர்த்தம்! ஐ.நா.அபிவிருத்தி நிலையத்தின் அறிக்கை கூட, சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வை சுட்டிக் காட்டியுள்ளது. 5 % மேட்டுக்குடியினர், தேசத்தின் மொத்த வருமானத்தில் 70 % தை அனுபவிக்கின்றனர். நாட்டிற்கு அதிகளவு வருவாய் ஈட்டித் தரும், வைரம், யுரேனியம் போன்றவற்றிற்கு பன்னாட்டு நிறுவனங்கள் சொந்தம் கொண்டாடுகின்றன. இவற்றை ஏற்றுமதி செய்வதால் கிடைக்கும் இலாபத்தில் பெரும்பகுதி, மேற்கத்திய நாடுகளில் தங்கி விடுகின்றது. நமீபியாவின் கறுப்பின மக்களுக்கு இலாபத்தின் ஆயிரத்தில் ஒரு பங்கு கூடப் போய்ச் சேர்வதில்லை.

1844 முதல் 1915 வரையில் நமீபியாவை ஆண்ட ஜெர்மனியர்கள், கறுப்பின மக்களை இனப்படுகொலை செய்து,பெருமளவு நிலங்களை சொந்தமாக்கிக் கொண்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை அது தான். சுமார் என்பதாயிரம் ஹெறேரோ மக்கள் இனவழிப்புச் செய்யப்பட்டனர்.(http://www.ppu.org.uk/genocide/g_namibia.html) இனவாத சட்டங்களை நடைமுறைப் படுத்தியும்,அவர்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டார்கள். கொள்ளையடிக்கப் பட்ட நிலங்கள் யாவும் அளக்கப்பட்டு, வெள்ளையின குடியேற்றக்காரர்களுக்கு தானமாக வழங்கப்பட்டன. பிற்காலத்தில் தென் ஆப்பிரிக்கா ஆண்ட காலங்களிலும் அந்த நிலைமை மாறவில்லை. இன்று 40 % நமீபிய நிலங்கள், வெள்ளையின சிறுபான்மையினரின் தனிப்பட்ட சொத்தாக காணப்படுகின்றது. பல
உரிமையாளர்கள் நமீபியாவிலேயே வசிப்பதில்லை. ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில்
சொகுசாக வாழ்வார்கள். அதே நேரம், அவர்களது நிலங்கள் பயன்படுத்தப் படாமல் தரிசாகக்
கிடக்கும்.

நமீபியாவில் தொடரும் அநீதியை சர்வதேச சமூகம் தட்டிக் கேட்காத காரணம் என்ன? சுதந்திரம், ஜனநாயகம் பேசும் மேற்குலக நாடுகளின் முகமூடி இங்கே கிழிகின்றது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், கனடா ஆகிய ஐந்து நாடுகள் மத்தியஸ்தம் வகித்தமையினால் தான், நமீபியா சுதந்திரம் அடைந்தது. அப்போது அவர்கள் ஒரு நிபந்தனை விதித்தார்கள். தனியார் சொத்துரிமை பாதுகாக்கப் பட வேண்டும் என்ற வாக்குறுதியை, புதிய அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொண்டன. இதனை நிச்சயப்படுத்தும், நமீபிய அரசமைப்பு சட்டத்தின் மூன்றாவது பிரிவில் எழுதப்பட்ட வாசகங்களை, எக் காரணம் கொண்டும் மாற்றக் கூடாது என்று உறுதிமொழி வாங்கிக் கொண்டன. கறுப்பின மக்கள், தமது இனத்தவரின் ஆட்சி நடப்பதாக பெருமைப்பட ஏதுமில்லை. கறுப்பின அரசாங்கத்தை திரையாகப் பயன்படுத்திக் கொண்டு, காலனிய சுரண்டல் தொடர்கின்றது. "மேற்கத்திய நாடுகளின் தயவில் ஈழம் கிடைக்கும்" என்று கனவு காணுவோர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது. மேலைத்தேய கனவான்கள் பெற்றுக்
கொடுக்கும் தனி நாடு, எப்போதும் காலனிய அடிமை நாடாகவே இருக்கும்.

நமீபியாவின் ஆளும் கட்சியான ஸ்வாபோ மார்க்சிய பாரம்பரியத்தில் இருந்து வந்தது. அதனால், சமதர்மம், புரட்சி குறித்த சிந்தனை கறுப்பின மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகின்றது. தெருக்களுக்கும், பண்ணைகளுக்கும் பிடல் காஸ்ட்ரோ, சே என்று பெயரிடுவதை எதிர்ப்பு நடவடிக்கையாக கருதுகின்றனர். ரொபேர்ட் முகாபே கூட இங்கே பிரபலம். சிம்பாப்வேயில் வெள்ளையின பண்ணையாளர்களின் நிலங்களைப் பறித்து, கறுப்பின விவசாயிகளுக்கு வழங்கிய முகாபே நமீபியாவில் போற்றப் படுகின்றார். நமீபியாவிலும் அது போன்ற புரட்சி ஏற்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

4 comments:

ADMIN said...

கட்டுரைகளின் பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி பாராட்டுதல்கள்..!!

JesusJoseph said...

மிகவும் பயன்னுள்ள தகவல்!. பகிர்ந்தமைக்கு நன்றி

நன்றி,
ஜோசப் (http://www.tamilcomedyworld.com)

செங்கதிரோன் said...

very nice post..I would like to know about Rwanda..Plz write about it..

Kalaiyarasan said...

செங்கதிரோன், ருவாண்டா குறித்து ஏற்கனவே ஒரு விரிவான கட்டுரை எழுதியிருக்கிறேன்.

கறுப்பர்களுக்கு இனவெறி கற்பித்த வெள்ளையின கனவான்கள்