Thursday, July 10, 2014

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன்னொரு ஈழப் போர்


ஈழப் போராட்டம் தொடங்கிய எழுபதுகளில், பாலஸ்தீனர்கள் மட்டுமே தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவாக இருந்தார்கள். ஈழ விடுதலைக்காக போராடப் புறப்பட்டவர்களுக்கு லெபனானில் போர்ப் பயிற்சி கொடுத்தார்கள். ஒரே ஆசியக் கண்டத்தில் உள்ள, இரண்டு நவ- காலனித்துவ நாடுகளில் நடக்கும் ஈழப் போராட்டமும், பாலஸ்தீன போராட்டமும் ஒன்று என்று உளப்பூர்வமாக நம்பினார்கள்.

அன்றைக்கு தமிழ்நாட்டில் கூட அந்தளவு ஈழ ஆதரவு இருக்கவில்லை. "இந்தியாவில் இருந்து பிழைக்கப் போனவர்கள் தனி நாடு கேட்பது நியாயமா?" என்று தமிழர்கள் கூட கேட்டார்கள். தமிழகத்தில் புகலிடம் கோரிய ஈழப் போராளிகள், தங்குவதற்கு இடம் தேடித் திரிந்த காலம் ஒன்றிருந்தது. தமிழினப் பெருமை பேசிய அரசியல்வாதிகள் கூட ஆதரிக்கவில்லை.

அந்த வரலாற்றை பலர் இன்று மறந்து விட்டதற்கு, பிற்காலத்தில் ஊடுருவிய மொசாட், ரோ உளவாளிகளின் சூழ்ச்சிகளும் ஒரு காரணம். இடை நடுவில் புகுந்து, ஈழப் போராட்டத்தை கடத்திச் சென்றுள்ள இந்துத்துவா வாதிகள், ஈழத் தமிழர்களையும், பாலஸ்தீனர்களையும் நிரந்தரமாக பிரித்து விடப் பார்க்கிறார்கள்.


இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, காஸாவில் வாழும் பாலஸ்தீன மக்கள் மத்தியில், மீண்டும் ஹமாஸ் மீதான ஆதரவு அதிகரித்து வருகின்றது. முன்பு ஈழத்தில் வன்னிப் பிரதேசத்தில் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவை தெரிந்தவர்களுக்கு, இன்றைய காஸா நிலைமையை புரிந்து கொள்வது எளிது.

காஸா போரை ஹமாஸ் தான் ஆரம்பித்து வைத்தது என்று இஸ்ரேல் வழமை போல குற்றம் சாட்டியுள்ளது. முன்னர் ஈழப்போர் நடந்த காலங்களிலும், சிறிலங்கா அரசு எப்போதும் புலிகள் யுத்தத்தை ஆரம்பித்தார்கள் என்று குற்றம் சாட்டுவது வழமை. ஆனால், மிகவும் சக்தி வாய்ந்த இராணுவத்தை வைத்திருக்கும் அரசுகள், போரின் போக்கை நிச்சயிக்கும் வல்லமை பெற்றிருக்கின்றன.

2009 ம் ஆண்டு, இறுதிப் போரில் புலிகள் அழிக்கப் பட்டது மாதிரி, இந்த வருடம் காஸாவில் ஹமாஸ் அழிக்கப் படா விட்டாலும், ஒரேயடியாக அங்கிருந்து விரட்டியடிக்கப் படலாம். ஏனெனில், அந்தளவுக்கு ஹமாஸ் பலவீனமாக உள்ளது. இந்தப் போரை ஹமாஸ் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது தான் உண்மை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில், ஹமாஸ் கிளர்ச்சிப் படையினரை ஆதரித்தது. அதனால், ஆசாத் அரசு ஹமாசுக்கு வழங்கிய உதவிகளை நிறுத்திக் கொண்டது. கூடவே ஈரானும் கைவிட்டு விட்டது. அடுத்ததாக, அயல்நாடான எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில் ஹமாசுக்கு நிறைய உதவிகள் கிடைத்தன. ஆனால், புதிய எகிப்திய அரசாங்கம், எந்த உதவியும் செய்யாதது மட்டுமல்ல, ஆயுதங்கள், அத்தியாவசியப் பொருட்களை கடத்துவதற்கு பயன்பட்டு வந்த இரகசிய சுரங்கப் பாதைகளையும் மூடி விட்டது. ஈழத்தில் இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, இந்தியா, வெளிநாடுகளில் இருந்து வன்னிக்கு சென்ற விநியோகப் பாதைகள் தடுக்கப் பட்டமை இங்கே நினைவுகூரத் தக்கது.

ஈழத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த சமாதான காலத்தில், வன்னியில் புலிகளின் நிர்வாகம் குறித்து, அங்கு வாழ்ந்த தமிழ் மக்களுக்கு பல விமர்சனங்கள் இருந்தன. சமாதான காலங்களில் மக்களை தம்மோடு வைத்திருப்பதற்காக புலிகள் பெரும்பாடு பட வேண்டி இருந்தது. வழமையாக, போர் நடக்கும் காலங்களில், புலிகளுக்கான தமிழ் மக்களின் தார்மீக ஆதரவு உச்சத்தில் இருக்கும். பாலஸ்தீனத்திலும் அது தான் நிலைமை.

வன்னியில் புலிகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள், காஸாவில் ஹமாசுக்கு ஏற்பட்டன. 2006 ம் ஆண்டு நடந்த தேர்தலில், காஸாவில் ஹமாஸ் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. அந்தக் காலங்களில், ஹமாஸ் மட்டுமே தங்களுக்காக ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள் என்று மக்கள் அவர்கள் மேல் பெரும் மதிப்பு வைத்திருந்தார்கள்.

ஆயினும், ஹமாஸ் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர், காஸாவில் பல பொருளாதாரப் பிரச்சினைகள் தலைகாட்டின. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடைகள், எரிபொருள், தண்ணீர் தட்டுப்பாடுகள், இது போன்ற குறைகளை ஹமாஸ் நிவர்த்தி செய்ய முடியவில்லை. அதனால், காஸா மக்களுக்கும், ஹமாசுக்கும் இடையில் விரிசல் காணப் பட்டது. ஆனால், தற்போது இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையானது அந்த நிலைமையை மாற்றியுள்ளது. 

ஈழப்போர் நடந்த காலங்களில் தமிழ் மக்கள் புலிகளை ஆதரித்தது போன்று, இன்று மீண்டும் காஸா மக்கள் பெருமளவில் ஹமாஸை ஆதரிக்கின்றனர். அவர்களுக்கும் வேறு வழியில்லை. இஸ்ரேலிய படையினரின் மிருகத்தனமான தாக்குதல்களுக்கு எதிராக, ஏதாவது செய்யக் கூடியவர்கள் ஹமாஸ் மட்டுமே என்பது அந்த மக்களின் நம்பிக்கை. முன்பு வன்னியில் வாழ்ந்த தமிழ் மக்களும், அவ்வாறு தான் தங்களை பாதுகாப்பதற்காக புலிகள் மட்டுமே இருப்பதாக நம்பிக் கொண்டிருந்தார்கள்.

வன்னி மீதான ஆக்கிரமிப்பு யுத்தம் நடந்த காலங்களில், புலிகளை விட்டு மக்கள் விலகி இருக்க வேண்டுமென கோரும் துண்டுப் பிரசுரங்களை, சிறிலங்கா வான் படையினர் தூவினார்கள். அதே மாதிரி, இன்று காஸா பகுதியில் இஸ்ரேலிய வான் படையினர் செய்கின்றனர். ஹமாஸ் உறுப்பினர்களை விட்டு விலகி இருக்குமாறு மக்களை எச்சரிக்கும் துண்டுப் பிரசுரங்கள் விசிறப் படுகின்றன. ஆனால், யார் ஹமாஸ் உறுப்பினர் என்று யாருக்குத் தெரியும்? மேலும் காஸா பிராந்தியத்தில் ஹமாஸ் நிர்வாகம் தான் நடக்கின்றது. அதனால், எல்லா இடங்களிலும் ஹமாஸ் உறுப்பினர்கள் பரவலாக காணப் படுவார்கள்.

காஸா என்பது ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலை. இஸ்ரேலுடனான அனைத்து எல்லைகளும் மூடப் பட்டுள்ளன. கடலிலும் இஸ்ரேலிய கடற்படை ரோந்து சுற்றித் திரிகின்றது. எகிப்துடனான சிறு துண்டு எல்லைப் பிரதேசத்திலும் யாரையும் வர விடாமல், எகிப்திய இராணுவம் கண்காணித்துக் கொண்டிருக்கிறது. அப்படியான ஒரு பிரதேசத்தில் இருந்து, யாரும் அகதியாகக் கூட வெளியேற முடியாது.

பாலஸ்தீனத்தில் நடப்பது போரல்ல. அது ஓர் இனப்படுகொலை. ஆனால், உலக நாடுகள் அதைப் பற்றிக் கவலைப் படாமல், உலக கால்பந்தாட்டப் போட்டிகளை கண்டுகளித்துக் கொண்டிருக்கின்றன.

Monday, July 07, 2014

மேற்குலகில் ஜிகாத் ஆதரவுக்கு காரணமான பொருளாதார பிரச்சினை

இன்று சிரியா, ஈராக்கில் ஒரு பெரும் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS அமைப்பில், மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் ஏராளமான முஸ்லிம் இளைஞர்களும் சேர்ந்திருக்கின்றனர். மேற்கு ஐரோப்பாவில், சமீபத்திய பொருளாதார நெருக்கடி காரணமாக, வெளிநாட்டு குடியேறிகள் பெருமளவில் பாதிக்கப் பட்டுள்ளனர். 

வறுமையில் வாழும் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். நாட்டில் பெருகி வரும் குற்றங்களை குறைப்பது என்ற பெயரில், குறிப்பிட்ட சமூகத்தினரை பாகுபாடு காட்டி ஒதுக்கும், அரசு அடக்குமுறை பிரயோகிக்கப் படுகின்றது. போலிஸ் அடக்குமுறை காரணமாக, ஒரு பக்கம் குற்றச் செயல்கள் குறைந்த போதிலும்,  மறு பக்கம் கடும்போக்கு மதவாதம் அதிகரிக்கின்றது. ஜிகாத் போராளிகளின் சமூக- பொருளாதாரக் காரணிகளை இந்தக் கட்டுரை அலசுகின்றது.

நெதர்லாந்தில் டெல்ப்ட் (Delft) நகரத்தில் இருந்து மட்டும், சுமார் 14 இளைஞர்கள், குறிப்பாக மொரோக்கோ சமூகத்தை சேர்ந்தவர்கள், சிரியாவில் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் நான்கு பேர் வீர மரணம் அடைந்து விட்டனர். எதற்காக டெல்ப்ட் நகரில் இருந்து இத்தனை பேர் ஜிகாத் போராளிகள் ஆனார்கள்? அதனை ஆராய்ந்து உண்மை அறிவதற்காக சென்ற டச்சு ஊடகவியலாளரின் ஆய்வுக் கட்டுரை:

*******

"நாங்கள் அங்கே ஓர் ஆசீர்வதிக்கப் பட்ட நாட்டில் இருந்தோம்"
(Andreas Kouwenhoven)

சொர்க்க வாசல் (Paradijspoort) என்ற பெயர் கொண்ட  கடைவீதி டெல்ப்ட் நகரத்தில் பிரசித்தமானது. பல பெரிய வணிக நிறுவனங்கள் அங்கே கடை போட்டுள்ளன. சில வருடங்களுக்கு முன்னர், அந்தத் தெருவில் வேலை வெட்டி இல்லாமல் சுற்றிக் கொண்டு திரிந்த காவாலிகளுக்கும் "சொர்க்க வாசல் பையன்கள்" என்ற பட்டப் பெயர் சூட்டப் பட்டிருந்தது. அவர்களில் பலர், பதினாறு வயது மதிக்கத் தக்க, மொரோக்கோ சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் கில்லிஸ்பியூர்ட்  (Gillisbuurt) பகுதியில் வசிப்பவர்கள். கில்லிஸ்பியூர்ட், டெல்ப்ட்  நகரில் மிகவும் பின்தங்கிய பகுதி. 

அந்த விடலைப் பையன்கள், கடைத்தெருவில் பிரயோசனமான எந்த வேலையிலும் ஈடுபடவில்லை. அவர்கள் எந்த நேரமும் அங்கே தான் நின்று கொண்டிருப்பார்கள். நண்பர்களுடன் கூடிக் கும்மாளம் அடிப்பதுடன், தெருவில் போகும் இளம் பெண்களை சீண்டிக் கொண்டிருப்பார்கள். ஸ்கூட்டர்களில் முறுக்கி சத்தம் எழுப்பிக் கொண்டிருப்பார்கள். சொர்க்கவாசல் பையன்களில் நான்கு பேர் இப்போது உயிரோடு இல்லை. சிரியாவில் நடந்த யுத்தத்தில் கொல்லப் பட்டு விட்டனர். AIVD (நெதர்லாந்து புலனாய்வுத் துறை) அந்தத் தகவலை அறியத் தந்துள்ளது.

கில்லிஸ்பியூர்ட் பகுதி, "டெல்ப்ட்  நகரின் காசா பிரதேசம்" என்று அழைக்கப் படுகின்றது. அங்கு வசிப்பவர்களில், ஐந்தில் ஒருவருக்கு வேலை இல்லை. பாடசாலைக் கல்வியை இடை நடுவில் நிறுத்துபவர்கள் அங்கே அதிகம். அந்த இடத்தில் தான் அதிகளவு குற்றங்கள் நடைபெறுகின்றன. அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் கூட, பாதுகாப்பின்மையை உணர்கின்றனர். ஐம்பது பேரளவிலான இளைஞர் குழுக்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடிவதில்லை. தெருப் பொறுக்கிகளில் பலர் முதலில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களில் சிலர் திடீரென மனம் திருந்தி, சிரியாவுக்கு போராடச் சென்றார்கள். கில்லிஸ்பியூர்ட் எந்த இடத்தில் தவறிழைத்தது? 

சில வருடங்களுக்கு முன்னர், கலாச்சாரம் பேணும் இளைஞர் மன்றங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. எல்லா இளைஞர்களும் அங்கே சமூகம் அளித்தார்கள். மொரோக்கர்கள் மட்டுமல்ல, சுரினாமியர்கள், துருக்கியர்கள், சோமாலியர்கள், இவர்களுடன் டச்சு இளைஞர்களும் அங்கே ஒன்று கூடுவார்கள். பெரும்பாலும் 12 வயது தொடக்கம் 30 வயது வரையிலான இளைஞர்கள். எல்லோரும் ஒன்றாக கால்பந்து விளையாடுவார்கள். ஒன்றாக உணவருந்துவார்கள், வீடியோ கேம் விளையாடுவார்கள். 

அந்த இளைஞர்கள் எல்லோரும் ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்கள். அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருப்பது கஷ்டமானது. ஆனால், பொருளாதார பிரச்சினையை காரணமாகக் காட்டி, அரசாங்கம் சமூக சேவைகளுக்கான கொடுப்பனவுகளை குறைத்து விட்டது. அதனால், பல சமூக சேவையாளர்கள் இளைஞர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை. விளைவு? ஒரு பகுதி இளைஞர்கள் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்டனர். 

"மகிழ்ச்சியான தருணங்கள்" என்று, அந்தக் கால நினைவுகளை இரைமீட்கும் 25 வயது மொரோக்கோ இளைஞர் ஒருவர், தனது நண்பர்கள் மக்களுக்கு தொந்தரவு செய்ததை ஒத்துக் கொள்கிறார். பருவ வயது இளைஞர்கள், 16 அல்லது 17 வயதை அடையும் காலத்தில், நிஜ உலகை தரிசிக்க வேண்டியுள்ளது. அதிலிருந்து தான் எல்லாத் தவறுகளும் ஆரம்பமாகின. 

அந்த வயதில் எல்லோரும் பாடசாலைக் கல்வியை முடித்து விட்டிருப்பார்கள். எங்காவது சென்று தொழில் பயிற்சி பெறுவதற்கு நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பார்கள். அப்போது தான், "நாங்கள் வேறு விதமானவர்கள்" என்ற உண்மை அவர்களுக்கு உறைக்கும். களியாட்ட விடுதிகளில் அனுமதி மறுக்கப்படும். பகுதி நேர வேலை கூட கிடைக்காது. "பெண்கள் முக்காடு போடக் கூடாது" என்று அறிவுரை கூறுபவர்களை சந்திக்க வேண்டியிருக்கும். அவை எல்லாம் எங்களது ஆத்திரத்தை தூண்டி விடும். 

"அந்த இளைஞர்கள், சமூகத்தில் இருந்து அந்நியப் படுத்தப் பட்டு வாழ்கின்றனர்." சிரியா போராளிக் குடும்பங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து வைத்திருக்கும் நகரசபை உறுப்பினர் அப்துல் மனாயுய்  கூறுகின்றார். அவரைப் பொருத்தவரையில், பல இளைஞர்கள் தாங்கள் இரண்டாந் தரப் பிரஜைகளாக நடத்தப் படுவதாக உணர்கின்றனர். அவர்களின் கருத்தை ஆமோதிக்கும் வகையில் ஓர் ஆதாரத்தைக் காட்டுகின்றார். பெரும்பான்மையாக (வேலை வாய்ப்பற்ற) வெளிநாட்டு குடியேறிகள் வசிக்கும் ஒரு பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் அங்காடிகளில் வேலை செய்பவர்கள் எல்லோரும் பூர்வீக டச்சுக் காரர்கள். 

சிரியாவுக்கு போராடச் சென்ற இளைஞர்களில் பெரும்பாலானோருக்கு ஆரம்பத்தில் மதத்தின் மேல் பற்று எதுவும் இருக்கவில்லை. கொஞ்சம் வயதான சுக்ரி மட்டும் விதிவிலக்கு. அஸ்ஸுன்னா மசூதியில் நடக்கும் வகுப்புகளுக்கு ஒழுங்காக சென்று வந்தான். கில்லிஸ்பியூர்ட் பகுதியில் சமுதாயத்தை நிராகரிக்கும் போக்கு வளர்ந்து வருகின்றது. "இந்த நாடு நாசமாகப் போக... இது எனது வீடல்ல..." என்று ராப் பாடல் இசைக்கிறார்கள். 

சில வருடங்களுக்கு முன்னர், இளைஞர்கள் கூடிக் கும்மாளம் அடித்த இடம் பறிபோனது. 2008 ம் ஆண்டு, அவர்களை அங்கிருந்து விரட்டுவதற்காக, நகரசபை அந்த இடத்தை கூறு போட்டது. அதனால், இளைஞர்களின் அட்டகாசம் அந்தப் பிரதேசம் எங்கும் பரவியது. புதுவருடக் கொண்டாடத்தின் போது, அங்கிருந்த வயோதிபர் மடத்தின் ஜன்னல்கள் கல் வீசி உடைக்கப் பட்டன. ஒரு குழு பொலிஸ்காரர்களுடன் மோதியது. அவர்களை நோக்கியும் கற்கள் பறந்தன. இறுதியில், மிலிட்டரி பொலிஸ் வந்து நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.  

ஒரு வருடத்திற்குப் பிறகு, பத்துக்கும் குறையாத இளைஞர்கள் கிரிமினல் வேலைகளில் ஈடுபடுவதாக நகரசபைக்கு தகவல்கள் கிடைத்தன. போதைவஸ்து வியாபாரம் சூடு பிடித்திருந்தது. அதே நேரம், பொலிஸ் அடக்குமுறைகளும் அதிகரித்தன. அந்தப் பகுதி இளைஞர்கள் ஒரு சிறிய தவறு செய்தாலும், அளவுக்கு மிஞ்சிய தண்டப்பணம் அறவிட்டு தண்டித்தார்கள். அடிக்கடி அடையாள அட்டை கேட்டு சோதனை செய்தார்கள். 

அந்த நடவடிக்கைகள் எல்லாம், இளைஞர்களின் கோபாவேசத்தை கூட்டியது. "பொலிஸ் எங்கள் எதிரி" ஓர் இளைஞன் சொன்னான். "அவர்கள் எங்களை ​---- மொரோக்கர்கள் என்று கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்கள். உண்மையில் அவர்கள் இனவெறியர்கள் தான். எங்களிடம் இருந்து தண்டப் பணம் அறவிடும்  பொழுது அவர்களுக்கு போதை ஏறுகின்றது."  பொது இடத்தில் சத்தம் போட்டது, கூட்டம் கூடியது, அடையாள அட்டை வைத்திருக்காதது, இப்படியான அற்பக் காரணங்களுக்காக எல்லாம், தண்டப் பணம் செலுத்த வேண்டி இருப்பதாக, இன்னொரு இளைஞன் கூறினான். 

சிரியாவுக்கு போராடச் சென்ற இளைஞர்கள் சிலரும், அற்பத்தனமான அத்துமீறல்களுக்காக பொலிசிற்கு தண்டம் கட்டியிருக்கிறார்கள். அதிகார வர்க்கத்தினால் அவமதிக்கப் பட்டவர்கள், சிரியாவில் போராடுவதன் மூலம் தமது இழந்த கௌரவத்தை மீட்டுக் கொள்கிறார்கள். சிரியா யுத்தத்தில் கொல்லப் பட்டவர்களுக்காக, உள்ளூர் பள்ளிவாசலில் இறுதிச் சடங்குகள் நடந்த பொழுது, ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். 

"இந்த நாட்டில் செத்தால் எங்களை கிரிமினல்கள் என்று தூற்றுவார்கள், ஆனால் சிரியாவில் செத்தால் எங்களை போராளிகள் என்று மதிப்பார்கள்..." என்று சில இளைஞர்கள் வெளிப்படையாகவே பேசுகின்றனர். பல இளைஞர்கள் கால்பந்து விளையாடுவதை நிறுத்தி விட்டு, தாடி வளர்க்கத் தொடங்கினார்கள். பலர் சுக்ரியை தமது ஆதர்ச நாயகனாக பின்பற்றத் தொடங்கினார்கள். தந்தையின் திடீர் மரணத்தினால் பாதிக்கப் பட்டிருந்த சுக்ரி, மத மார்க்கத் தேடுதலில் மனதை திசை திருப்பி இருந்தான். 

சுக்ரியின் பாதையை பின்பற்றிய சில இளைஞர்கள், ஒழுங்காக மசூதிக்கு சென்று வந்தனர். ஆனால், கடும்போக்கு மதவாதக் கருத்துக்களை நிராகரித்த பள்ளிவாசல் நிர்வாகம் அவர்களை வெளியேற்றி விட்டது. அதற்குப் பின்னர், டெல்ப் நகரில் உள்ள துருக்கி பள்ளிவாசலுக்கு சென்றார்கள். அங்கேயும் அதே பிரச்சினை. ஆனால், இம்முறை பள்ளிவாசல் நிர்வாகம் அந்த இளைஞர்கள் பற்றிய தகவலை பொலிசுக்கு  அறிவித்தது. பொலிஸ் அந்த விபரங்களை நகரசபைக்கு அறிவித்தது. இது நடந்தது 2012 ம் ஆண்டு. 

அந்த தகவல்களின் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? "ஒன்றுமேயில்லை!" நகர சபை அதிகாரி ஒருவர் பதிலளிக்கும் பொழுது: "நாங்கள் அப்போது எந்த நடவடிக்கையும் எடுத்திருக்கவில்லை. அந்த இளைஞர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவதை தடுப்பதே எமது பிரதான நோக்கமாக இருந்துள்ளது. மதத் தீவிரவாதிகளாவதை நாங்கள் ஒரு பிரச்சினையாகக் கருதவில்லை." அன்று தாங்கள் தப்பெண்ணம் கொண்டிருந்ததை அந்த அதிகாரி ஒப்புக் கொண்டார். 

(நன்றி : NRC WEEKEND, zaterdag 5 juli & zondag 6 juli 2014)

Saturday, July 05, 2014

விரும்பிய நேரத்தில் வேலை! இப்படியும் ஒரு நிறுவனம் இருக்கிறது!!

நீங்கள் வேலைக்குச் செல்லும் நிறுவனத்தின் விதி முறைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 

1. எத்தனை மணிக்கு வேலை தொடங்க வேண்டும்? எத்தனை மணிக்கு    முடிக்க வேண்டும்? எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும்?
  - அதை நீங்களாகவே தீர்மானித்துக் கொள்ளலாம். வேலைக்கு நடுவில் சிறிது நேரம் ஓய்வெடுக்கலாம். மன நிலை சரியில்லை என்றால் வீட்டில் நிற்கலாம்.

2. என்ன வேலை செய்ய வேண்டும்?
  - உங்களது தகுதி, திறமைக்கு ஏற்ற வேலையை தெரிந்தெடுத்துக் கொள்ளலாம்.

3. எவ்வளவு சம்பளம் வேண்டும்?
- சம்பளத்தின் அளவையும் நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

4. எந்த நேரமும் கண்காணிக்கும் மேற்பார்வையாளர்கள் இருப்பார்களா?
- நீங்கள் வேலை செய்கிறீர்களா என்று பார்ப்பதற்கு யாரும் வரப் போவதில்லை. உங்களிடம் ஒப்படைத்த வேலையை பொறுப்புடன் செய்து முடித்துக் கொடுத்தால் போதும்.

5. முகாமையாளர் உங்களுக்கு மேலே அதிகாரம் செலுத்தும் ஒருவராக இருப்பாரா?
- இல்லை. முகாமையாளரை தொழிலாளர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். பிடிக்காத முகாமையாளரை வேலையை விட்டு தூக்கும் அதிகாரம் தொழிலாளர்களிடம் உண்டு.

இதை வாசிக்கும் சிலர், ஒரு நகைச்சுவையாகக் கருதி வாய் விட்டுச் சிரிக்கலாம். அப்படி ஒரு நிறுவனம் கனவில் கூட சாத்தியமில்லை என்று நினைக்கலாம். "தொழிலாளர்களுக்கு இந்த அளவு சுதந்திரம் கொடுத்தால், அந்த நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி திவாலாகும்" என்று, பொருளாதார மேதைகள் கூட பரிகசிக்கலாம்.

நம்பினால் நம்புங்கள். நான் இங்கே எழுதியது எதுவும் கற்பனை அல்ல. மேற்குறிப்பிட்ட விதிகளை கடைப்பிடிக்கும் ஒரு நிறுவனம் (Semco SA) பிரேசில் நாட்டில் இருக்கிறது. அது ஒரு சிறிய நிறுவனம் அல்ல. 250 பேருக்கு மேற்பட்ட பணியாட்களைக் கொண்ட மிகப் பெரிய நிறுவனம். அதன் நிகர இலாபம் வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அதன் உரிமையாளர் பிரேசிலில் அதிக செல்வம் படைத்த கோடீஸ்வரர்களில் ஒருவர். அவர் பெயர் : ரிக்கார்டோ செம்லர் (Ricardo Semler)

சுமார் 25 வருடங்களுக்கு முன்னர், ரிக்கார்டோ Semco SA  நிறுவனத்தை, அவரது தந்தையிடம் இருந்து பொறுப்பெடுத்தார். அப்போது அந்த நிறுவனம், நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. தந்தையிடம் இருந்து நிர்வாகத்தை பொறுப்பெடுத்த ரிக்கார்டோ செய்த முதல் வேலை, மூன்றில் இரண்டு பங்கு முகாமையாளர்களை வீட்டிற்கு அனுப்பியது தான். அதில் பல உறவினர்களும் அடங்குவார்கள். 

செம்கோ நிறுவனம் முழுமையாக மறு சீரமைக்கப் பட்டது. அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்கள், மகிழ்ச்சியின்றி கட்டாயத்தின் பேரில் வேலை செய்வதைக் கண்டார். ரிக்கார்டோ, தனது மனதில் தோன்றிய புதிய சிந்தனைகளை நடைமுறைப் படுத்தினார். தொழிலாளர்கள் என்ன வேலை செய்ய வேண்டும் என்று யாரும் வற்புறுத்தப் போவதில்லை. அவர்களுக்கு பூரண சுதந்திரம் வழங்கப் படும். தொழிலகத்தின் நிர்வாகத்தில் பங்கு வகிப்பார்கள். 

தொழிலாளர்கள் அனைவரும் செம்கோ தமது சொந்த நிறுவனம் என்று உணரத் தொடங்கினார்கள். ஒவ்வொரு நாளும் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை அவர்களே தீர்மானித்தார்கள். யாரும் அவர்களுக்கு உத்தரவிடவில்லை. யாரும் அவர்களை கண்காணிக்கவில்லை. அவர்களுக்கு விரும்பிய நேரத்தில் வேலை செய்தார்கள். களைத்து விட்டால் சிறிது ஓய்வெடுத்தார்கள். 

தொழிலாளர்கள் தாம் விரும்பிய நேரத்தில் வேலை செய்த போதிலும், அந்த தொழிலகத்தின் உற்பத்தி எந்த விதத்திலும் பாதிக்கப் படவில்லை. மாறாக, அது பல மடங்கு அதிகரித்தது. ஒரு காலத்தில் நஷ்டத்தில் இயங்கிய நிறுவனம், இலாபம் சம்பாதிக்கத் தொடங்கியது. அதனால், நிறுவனத்தில் வேலை செய்யும் அத்தனை பேருக்கும் இலாபத்தில் பங்கு கிடைத்தது. தொழிலாளர்கள் மத்தியில் அது அவர்களது சொந்த நிறுவனம் என்ற உணர்வு ஏற்பட்டது. அவர்கள் மகிழ்ச்சியுடன் மனம் விரும்பி வேலை செய்தார்கள். 

தொழிலாளர்கள் மகிழ்ச்சியுடன் மனம் விரும்பி வேலை செய்தால், அவர்களுக்கும் நன்மை, அதே நேரம் முதலாளிக்கும் நன்மை. ஒரு நிறுவனத்தின் வெற்றியின் இரகசியம் அது தான். இந்த உண்மையை உலகின் பிற பாகங்களில் உள்ள முதலாளிகள் என்றைக்கு உணர்ந்து கொள்ளப் போகிறார்கள்? 

மேலதிக விபரங்களுக்கு:
De kapitale kracht van geluk;
http://tegenlicht.vpro.nl/afleveringen/2012-2013/Semler.html

வீடியோ: 
பிரேசில் நாட்டு தொழிலதிபர் ரிக்கார்டோ செம்லர்  டச்சு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு (ஆங்கிலத்தில்) வழங்கிய பேட்டி :



Friday, July 04, 2014

யாழ்ப்பாணம் கேரளாவுக்கு இடையிலான புகையிலைக் கொடி உறவு


யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர், தங்களையும் மலையாளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பெருமைப் படுவதுண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் பல. சொற்களில் மட்டுமல்ல, பேச்சு மொழியிலும் ஒரே மாதிரியான தன்மைகள் காணப் படுகின்றன. தமிழ் நாட்டுத் தமிழர்கள் அறிந்திராத குழல் புட்டு போன்ற சமையல் முறைகள். இவற்றுடன் உருவத் தோற்றத்திலும் ஒற்றுமை இருப்பதாக சொல்லிப் பெருமைப் படுவார்கள். 

யாழ்ப்பாணிகளின் "கேரளத்துடனான தொப்புள் கொடி உறவு" தவறென மறுத்துரைத்த, ஈழத்து தமிழ் தேசியவாதி யாரையும், நான் இன்று வரையில் காணவில்லை. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினர்கள், இன்னமும் கேரளாவில் வாழ்வதாக ஓர் இந்தியத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதையும் யாரும் பொய்யென மறுக்கவில்லை. அதே நேரம், அவர்களுடன் கொள்கை உடன்பாடு கண்ட தமிழகத்து தமிழ் இன உணர்வாளர்கள், மலையாளிகளை பகைவர்களாக கருதுகிறார்கள். இந்த முரண்பாட்டை எப்படிக் களைவது என்ற பிரச்சினையை, நாங்கள் தமிழ் தேசியவாதிகளிடமே விட்டு விடுவோம்.

யாழ்ப்பாணத் தமிழரின் கேரளா உரிமை கோரல், முழுக்க முழுக்க கற்பனையானது என்று ஒதுக்கித் தள்ளி விட முடியாது. யாழ் குடாநாட்டின் பல பாகங்களிலும், தங்களை மலையாள வம்சாவளியினர் என்று அடையாள படுத்திக் கொள்ளும் குடும்பங்கள் இன்றைக்கும் வாழ்கின்றன. கொழும்பு, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணத்தை சேர்ந்த மலையாள வம்சாவளியினர் சிலரை எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரியும்.

காலனிய காலத்தில், மலையாளிகள் இலங்கையின் பல பகுதிகளிலும் குடியேறியுள்ளனர். இலங்கை சுதந்திரமடைந்த காலம் வரையில், அரசு ஆவணங்களில் மலையாளிகள் என்று ஒரு இனம் தனியாக குறிப்பிடப் பட்டு வந்தது. பிற்காலத்தில் பல மலையாளிகள் தங்களை, சிங்களவர் என்றோ அல்லது, தமிழர் என்றோ, வாழும் இடத்தைப் பொறுத்து அடையாளப் படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தமது "தாய் மொழியையும்" பேச மறந்து விட்டார்கள்.

யாழ் குடாநாட்டில் வாழ்ந்த மலையாளிகள், டச்சு காலனிய காலத்தில் குடியேறியதாக சில வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆர்வமுள்ளவர்கள் அது குறித்து ஆராய்ந்து பார்க்கலாம். யாழ்ப்பாண, கேரளாவுக்கு இடையிலான தொடர்புக்கு ஆதாரமாக புகையிலை விவசாயம் உள்ளது. யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதி வலிகாமம் என்று அழைக்கப் படுகின்றது. இருபாலை, கோப்பாய், அச்சுவேலி, மானிப்பாய், போன்ற வலிகாமப் பகுதி கிராமங்களில், இன்றைக்கும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் புகையிலைத் தோட்டங்கள் தான் காணப்படும்.

வலிகாமம், யாழ் குடாநாடு முழுவதிலும் மக்கட்தொகை பெருக்கம் அதிகமாக உள்ள பிரதேசம் ஆகும். புகையிலை விவசாயம் காரணமாக பணக்காரர் ஆனவர்கள் பலருண்டு. இலங்கை முழுவதும் வாழும் தமிழ் சமூகங்களில், செல்வந்தர்களின் விகிதாசாரம் வலிகாமம் பிரதேசத்தில் அதிகம். பெரும்பாலும் புகையிலைச் செய்கையினால் கிடைத்த வருமானம் தான், பலரின் செல்வச் செழிப்புக்கு காரணம்.

ஐம்பதுகளில், இலங்கை முழுவதும் கூட்டுறவு உற்பத்தி முறை ஊக்குவிக்கப் பட்டது. அப்போது, யாழ் புகையிலை செய்கையாளர்கள் தமக்குள் கூடி சங்கம் ஒன்றை அமைத்துக் கொண்டனர். அதன் பெயர் "யாழ்ப்பாணம் - மலையாள புகையிலை விற்பனைச் சங்கம்" (ஆதாரம்: கூட்டுறவு இயக்கத்தின் 1959 ம் ஆண்டு நிர்வாக அறிக்கை. P. E. வீரமன்) அந்த சங்கத்தினர் பல தசாப்தங்களாக, கேரளாவில் உள்ள திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் வர்த்தகத் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள். 

அனேகமாக, அறுபதுகளில் இருந்த சிறிமாவோ அரசு, ஏற்றுமதி - இறக்குமதி வணிகத்திற்கு கட்டுப்பாடுகள் விதித்த பின்னர் தான், யாழ்ப்பாண - கேரளா தொடர்பு அறுந்து விட்டிருக்க வேண்டும். ஆயினும், அந்தத் தடைகள் புகையிலை விவசாய உற்பத்தியை பாதிக்கவில்லை. யாழ் விவசாயிகள், தென்னிலங்கைக்கு புகையிலை ஏற்றுமதி செய்து பெருமளவு இலாபம் சம்பாதித்தார்கள்.

1977 ம் ஆண்டு, ஜே.ஆர். ஜெயவர்த்தனா கொண்டு வந்த தாராளவாத பொருளாதாரம், யாழ் குடாநாட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பொருளான புகையிலையின் உற்பத்தி வீழ்ச்சி அடைய வழிவகுத்தது. அதே காலகட்டத்தில் ஈழப்போரும் ஆரம்பித்ததால், தென்னிலங்கையுடனான வர்த்தகத் தொடர்பு துண்டிக்கப் பட்டது. புகையிலை விவசாயிகளின் பிள்ளைகள், பெருமளவில் வெளிநாடுகளுக்கு புலம்பெயரவும், அந்த அரசியல் - பொருளாதார மாற்றங்கள் வழிவகுத்தன.

புகையிலை இலங்கை மண்ணுக்கு உரிய பயிர் அல்ல. அது ஐரோப்பிய காலனியாதிக்க காலத்தில் தான் அறிமுகப் படுத்தப் பட்டது. தேயிலை, கோப்பி, ரப்பர் போன்று ஐரோப்பியரால் கொண்டு வரப் பட்ட பிற பயிர்கள், பெருந்தோட்டங்களாக செய்யப் பட்ட அளவிற்கு புகையிலைச் செய்கை இருக்கவில்லை. இருப்பினும், யாழ் குடாநாட்டைப் பொறுத்த வரையில், ஏற்றுமதியை கருத்தில் கொண்டே புகையிலை பெருமளவில் பயிரிடப் பட்டு வந்தது. 

டச்சுக் காரர்கள் ஆட்சி செய்த காலத்தில், தென்னிந்திய வெள்ளாள சாதியை சேர்ந்த பெருமளவு விவசாயிகள் யாழ்ப்பாணத்தில் குடியேறியதாக சில வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அது குறித்து விரிவான ஆய்வு அவசியம். இன முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள இன்றைய காலத்தில், வரலாற்று ஆய்வுகள் திரிக்கப் படுவதற்கும், மறைக்கப் படுவதற்கும் இடமுண்டு. 

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Thursday, July 03, 2014

"பாபிலோனின் புதல்வன்" : ஈழத்தின் துயரத்தை நினைவுபடுத்தும் ஈராக் திரைப்படம்


ஹாலிவூட்டில் செட் போட்டு, ஈராக் பற்றி செயற்கையான காட்சிப் படுத்தல்களுடன் தயாரிக்கப் படும் அமெரிக்கத் திரைப் படங்களுக்கு மத்தியில், ஓர் உண்மையான ஈராக் திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. நெதர்லாந்தில் வாழும் ஈராக்கிய இயக்குனர் Mohamed Al Daradji தயாரித்து, 2009 ம் ஆண்டு வெளியான "பாபிலோனின் புதல்வன்" (Son of Babylon) திரைப்படம், பல சர்வதேச பரிசுகளை வென்றுள்ளது. 

"பாபிலோனின் புதல்வன்", ஈராக்கில் நடந்த சம்பவங்களை வைத்து பின்னப் பட்ட கதை என்றாலும், ஈழப் போரில் நடந்த சம்பவங்களுடனும் அது பொருந்துகின்றது.

நாம் வாழும் நாடுகளும், பேசும் மொழிகளும் மட்டுமே வேறு வேறு. உலகம் முழுவதும், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் கதைகளும், அனுபவங்களும் ஒன்று தான். 

தமிழகத்தில், ஏராளமான ஹாலிவூட் குப்பைகளை டப் பண்ணி வெளியிடும் நேரத்தில், இது போன்ற நல்ல படங்களை தமிழில் டப் பண்ணி வெளியிட்டால், தமிழ் மக்களுக்கு பிரயோசனமாக இருக்கும். ஒரு சினிமாவினால் சமூக விழிப்புணர்வை உண்டாக்கிய திருப்தியும் கிடைத்திருக்கும். கோடம்பாக்கம் சினிமாத் துறையினருக்கு இதை ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.

Son of Babylon படத்தின் கதை இது தான்:

2003 ம் ஆண்டு, ஈராக்கில் சதாமின் ஆட்சி கவிழ்ந்து அமெரிக்க ஆக்கிரமிப்பு தொடங்கிய சில வாரங்களில் இந்தக் கதை நடக்கிறது. அஹ்மத் என்ற 12 வயது சிறுவன், தனது பாட்டியுடன் காணாமல் போன தந்தையை தேடிப் பயணத்தை தொடங்குகிறான். பயணத்தின் நடுவில் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை உண்டாக்குகின்றனர்.

ஈராக்கின் வடக்கே உள்ள குர்திஸ்தானில் இருந்து, தெற்கே சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள நஸ்ரியாவை நோக்கி, அவர்களதுஆரம்பமாகின்றது.  அஹ்மத்தின் தாய் இறந்து விட்டாள். பாட்டியின் மகன் தான், அவனது தந்தை. மகனைத் தேடும் தாயினதும், தந்தையைத் தேடும் மகனினதும் உணர்வுகளுடன் நாங்களும் ஒன்று கலக்க முடிகின்றது.

1991 ம் ஆண்டு, குர்திஸ்தான் மீது தாக்குதல் நடத்திய சதாமின் ஈராக் இராணுவம், அஹ்மத்தின் தந்தையை கைது செய்து கொண்டு சென்றுள்ளது. அதற்குப் பிறகு அவர் காணாமல்போயுள்ளார். வட இலங்கையில் நடந்ததைப் போன்று, வட ஈராக்கில் வாழும் குர்து மொழி பேசும் சிறுபான்மை இன மக்கள், குர்திஸ்தான் விடுதலைப் போராட்டம் நடத்திய காலகட்டம் அது. அன்றைய ஈராக்கிய சர்வாதிகாரி சதாம் ஹுசைனின் இராணுவம், அரபு மொழி பேசும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த படையினரைக் கொண்டிருந்தது. 

ஈராக் இராணுவத்தின் அடக்குமுறை காரணமாக, பெண்களும், குழந்தைகளுமாக பல ஆயிரம் குர்திஷ் மக்கள் படுகொலை செய்யப் பட்டனர். அதைவிட பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் கைது செய்யப் பட்டு, தெற்கு ஈராக்கிய சிறைகளில் அடைக்கப் பட்டனர். அவர்களில் பலர் காணாமல்போயினர். அதாவது, இரகசியப் புதைகுழிகளுக்குள் கொன்று புதைக்கப் பட்டனர்.

ஈழப் போரிலும், அதே போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை, நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. வட இலங்கையில் கைது செய்யப் பட்டு கொண்டு செல்லப்பட்ட ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்கள், தென்னிலங்கையில் பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டனர். சிறி லங்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல்போய், பின்னர் புதைகுழிகளுக்குள் கண்டெடுக்கப் பட்ட இளைஞர்கள் ஏராளம்.

இப்போது மீண்டும் படத்திற்கு வருவோம். அஹ்மத்தின் பாட்டி, நஸ்ரியாவில் உள்ள சிறையில் தனது மகன் தடுத்து வைக்கப் பட்டிருப்பதாக கேள்விப் பட்டு, பேரனையும் அழைத்துக் கொண்டு அங்கே செல்கிறாள். அவர்கள் வடக்கே குர்திஸ்தானில் வாழும், குர்திய சிறுபான்மை இனத்தவர்கள். பாட்டிக்கு குர்து மொழி மட்டுமே தெரியும். பெரும்பான்மை அரபி மொழி பேசும் பிரதேசத்தில் மொழி தெரியாது தவிக்கிறாள். அந்த நேரத்தில், அரபி பேசத் தெரிந்த சிறுவன் அஹ்மட் உதவுகிறான். 

அந்தக் காட்சிகள், வட இலங்கையில் வாழும் தமிழர்கள், தென்னிலங்கைக்கு சிறைப் பிடித்து கொண்டு செல்லப்பட்ட உறவுகளை தேடிச் செல்வதை நினைவு படுத்துகின்றன. அவர்களும் சிங்களம் மட்டும் பேசும் பிரதேசங்களில் மொழி தெரியாமல் தவிப்பதுண்டு. ஈராக்கில் அரேபியருக்கு குர்து மொழி தெரியாத மாதிரி, இலங்கையில் சிங்களவர்களுக்கு தமிழ் பேசத் தெரியாது. உலகின் எல்லா நாடுகளிலும் பெரும்பான்மை இனத்தவர்கள் ஒரே மாதிரி தான் நடந்து கொள்கின்றனர். இவ்வாறு திரைப்படக் காட்சிகள் முழுவதும், ஈழத் தமிழரின் இன்னல்களையும் நமது மனக் கண் முன்னால் கொண்டு வருகின்றது.

அஹ்மத்தும் பாட்டியும் பாக்தாத் செல்லும் வழியில், அமெரிக்கப் படையினரின் சோதனைச் சாவடியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. வழி நெடுகிலும் புகை மண்டலமும், இடிந்த கட்டிடங்களும் போர் இன்னும் ஓயவில்லை என்பதைக் காட்டுகின்றது. பாக்தாத் நகரில், ஒரு தனியார் பஸ் வண்டியை பிடித்து, நஸ்ரியா நோக்கிச் செல்கின்றனர். 

நீண்ட பயணத்திற்குப் பின்னர், நஸ்ரியா நகரை வந்தடையும் அஹ்மட்டும், பாட்டியும், அங்கேயிருந்த சிறைச்சாலை வெறுமையாக இருப்பதைக் காண்கின்றனர். ஒரு சில அதிகாரிகள் மட்டும் காணாமல்போனவர்களின் பட்டியலுடன் காத்திருக்கின்றனர். அந்த இடத்தில் அவர்களைப் போன்று, இன்னும் பல பெண்கள் தமது காணாமல்போன உறவுகளைத் தேடி வந்திருப்பதைக் காண்கின்றனர்.

காணாமல்போனவர்களை தேடி வரும் உறவினர்களுக்கு, அதிகாரிகள் தமது பட்டியலில் இல்லாத பெயர்கள், மனிதப் புதைகுழிகளுக்குள் புதைக்கப் பட்டிருக்கலாம் என அறிவுறுத்துகின்றனர். சதாம் ஆட்சிக் காலத்தில் கொன்று புதைக்கப் பட்டவர்களின் புதைகுழிகள் தற்போது தோண்டப் பட்டு வருகின்றன. 

அஹ்மத்தும், பாட்டியும், வழியில் கண்ட மற்றவர்களுடன், மனிதப் புதைகுழிகளை தேடிச் செல்கின்றனர். தமது கணவன் மாரை இழந்த பெண்கள், மகன் மாரை  இழந்த பெண்கள், இவ்வாறு ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு துயரக் கதை ஒளிந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக சிலர் தமது உறவுகளின் சடலங்களை கண்டெடுக்கிறார்கள். மற்றவர்கள் அடுத்த புதைகுழியை தேடிச் செல்கிறார்கள்.

இதற்கிடையே பயணத்தின் போது சந்திக்கும் ஓர் அந்நிய வாலிபன், வழியில் அஹ்மட்டுடன் நட்பு கொள்கிறான். அவனது தந்தையை கண்டுபிடிப்பதற்கு, புதைகுழிகள் இருக்குமிடத்தை கூட்டிக் கொண்டு சென்று காட்டுவதற்கு, தானாகவே உதவி செய்ய முன்வருகிறான். அந்த நண்பருக்கு கொஞ்சம் குர்து மொழி பேசத் தெரிந்திருக்கிறது. அவனுக்கு எப்படி குர்து தெரியும் என்று பாட்டி கேட்கிறாள்.

அதற்கு அவன், குர்திஸ்தானில் நடந்த போரில், சதாமின் இராணுவத்தில் பணியாற்றிய அனுபவத்தை சொல்கிறான். உடனே துணுக்குற்ற பாட்டி, அவன் குர்திஷ் மக்களை கொன்று குவித்த முன்னாள் போர்வீரன் என்பதை அறிந்து கொண்டு வெறுக்கிறாள். அஹ்மத்தையும் அவனோடு பேச வேண்டாம் என்று தடுக்கிறாள். ஆனால், அரசியலை விட அந்த அந்நிய ஆடவனின் தன்னலம் கருதாத உதவி, 12 வயது சிறுவனான அஹ்மத்தை பெரிதும் கவர்ந்து விடுகின்றது.

கடந்த கால இனக் குரோத போரினால் பாதிக்கப்பட்ட ஒருவரும், அடக்குமுறைக் கருவியாக செயற்பட்ட ஒருவரும், சந்திக்க நேரும் சந்தர்ப்பம், ஈராக்கில் மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளிலும் நடக்கலாம். ஒரு காலத்தில், தன்னால் ஈவிரக்கமின்றி ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனையை, தற்போது சாதாரண மனிதனாக மாறியிருக்கும் முன்னாள் போர்வீரன் உணர்ந்து கொள்கிறான். "உண்மையில் குர்து மக்களை கொல்வதற்கு தான் மேலிடத்தால் நிர்ப்பந்திக்கப் பட்டதாகவும், போரில் நடந்த குற்றங்களுக்காக வருந்துவதாகவும்," அந்த முன்னாள் போர்வீரன் நடந்த தவறுகளுக்காக மன்னிப்புக் கோருகிறான். ஆரம்பத்தில், அவனது மன்னிப்பை ஏற்றுக் கொள்ள அஹ்மத்தின் பாட்டி மறுக்கிறாள். 

ஆயினும், எதிர்பாராமல் சந்தித்த அரபி நண்பனின் உதவியால் தான், அவர்களால் புதைகுழிகள் இருக்குமிடத்திற்கு செல்ல முடிகின்றது. படத்தின் முடிவில் அவன் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் பாட்டி, போர் நடந்த காலத்தில் கட்டாயப் படுத்தப் பட்டதன் காரணமாக தவறிழைத்த முன்னாள் போர்வீரனை பெருந்தன்மையுடன் மன்னித்து விடுவதாக கூறுகின்றாள். அந்த முன்னாள் அரபுப் படைவீரனின் இடத்தில், ஒரு சிங்கள படையினனை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அந்த குர்து மூதாட்டியின் இடத்தில், ஒரு ஈழத் தமிழ் மூதாட்டியை ஒப்பிட்டுப் பார்க்கலாம். அங்கே குர்திஸ்தான், இங்கே ஈழம். நாடுகள் தான் வேறு, கதை ஒன்று தான்.

காணாமல்போன உறவு தற்போது உயிருடன் இல்லை என்ற உண்மையை உணர்ந்து கொண்ட அஹ்மத்தும், பாட்டியும் ஊருக்கு திரும்பிச் செல்கின்றனர். அத்துடன் படம் முடிகின்றது. ஈராக்கில் கடந்த நாற்பது வருடங்களில் ஒரு மில்லியன் பேரளவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. நாடு முழுவதும் சுமார் 250 மனிதப் புதைகுழிகள் உள்ளன. பலரது சடலங்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. இன்னமும் பலர் காணாமல் போனவர்களாக உள்ளனர்.

"பாபிலோனின் புதல்வன்" (Son of Babylon)படத்தின் வீடியோ: