Thursday, May 06, 2010

ஏதென்சில் மீண்டும் மக்கள் எழுச்சி

ஏதென்ஸ் நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களால் இரண்டு வங்கிகள் தாக்கப்பட்டன. தாக்குதலால் எரிந்து கொண்டிருந்த வங்கி ஒன்றினுள் (Marfin bank)சில ஊழியர்களும் அகப்பட்டுக் கொண்டனர். மூன்று பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். "சர்வதேச பொருளாதார நெருக்கடிக்கு முதல் பலி!" அலறின ஐரோப்பிய நாளேடுகள். மரணத்திற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன்நிறுத்துவதாக சூளுரைத்தார் அதிபர் பபன்ற்றேயு. முதலாளித்துவஊடகங்களும்ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பழி சுமத்த ஆரம்பித்தன. ஆனால் வங்கி எரிப்பில் பலியான ஊழியர்களின் உடலைப் பார்க்க வந்த வங்கி மேலாளரை சுற்றிவளைத்தனர் பொது மக்கள். அவரை நோக்கி "கொலைகாரன்" என்று கோஷம் எழுப்பினர். (பார்க்க: வீடியோ 1)

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி திவாலாகும் நிலையில் இருந்த கிரீசுக்குகடன் உதவி வழங்குவதென்று ஐரோப்பிய ஒன்றியம், .எம்.எப். என்பன தீர்மானித்துள்ளன. ஆனால் அதற்குப் பதிலாக கிரேக்க அரசாங்கம் சமூகநல செலவினங்களைக் குறைக்க வேண்டும். வேலை செய்து கொண்டிருந்தவர்கள், தமது சம்பளத்தில் திடீரென 300 யூரோ குறைந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். ஓய்வூதியம் பெறுவோரின் வருமானத்தில் 100 யூரோ குறைந்தது. அதிகரித்துவரும் வேலையற்றோரின் நிலைமை கவலைக்கிடமானது. அவர்களுக்கு அரசு வழங்கி வந்த காப்பீடு ஏறக்குறைய கைவிடப்பட்டுவிடும். பொதுநலத்திட்டங்களான கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் இனிமேல் அரசசெலவினம் வெகுவாகக் குறைக்கப்படும். 110 பில்லியன் கடனுதவிக்கு பதிலாக, சுற்றுலாப்பயணிகளைக் கவரும் அழகான கிரேக்க தீவுகளை அரசாங்கம் விற்றுவிடும் என்று பொது மக்கள் மத்தியில்வதந்தி உலாவுகின்றது.

மே 5 ம் தேதி, ஐரோப்பிய கடனுதவியை ஏற்றுக் கொள்வதைப் பற்றி விவாதிக்க கிரேக்க பாராளுமன்றம் கூடியது. குறிப்பாக அரச செலவினங்களைக் குறைக்கும் நிபந்தனைகளை சுற்றியே விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நூறாண்டுகாலம் போராடிப் பெற்ற சமூக உரிமைகள், ஒரே இரவில் பறிபோவதைகண்டு வெகுண்டெழுந்த மக்கள் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டனர். "நெருக்கடியால் ஏற்பட்ட செலவை பணக்காரர்களிடம் இருந்து அறவிடு!", "அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் திருடர்கள்" போன்ற சுலோகங்களைக் கொண்ட பதாகைகள் காணப்பட்டன. "(தேசம்) விலை போய்விட்டது" என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தட்டி எல்லோர் கைகளிலும்இருந்தது. ஏறத்தாள மூன்று லட்சம் மக்கள் ஏதென்ஸ் நகரில் குழுமியிருந்ததாக வெகுஜனஊடகங்களே தெரிவிக்கின்றன. விமான நிலையத்தில் எந்த விமானமும் பறக்கவில்லை. துறைமுகத்தில் படகுச் சேவைகள் யாவும் நிறுத்தப்பட்டதால், தீவுகள் வெளியுலகில் இருந்து துண்டிக்கப் பட்டன. உல்லாசப்பயணிகள் அதிகளவில் விஜயம் செய்யும் புராதன "அக்ரோபோலிஸ்" நகரம் கம்யூனிஸ்ட்கட்சியை (KKE) சேர்ந்த போராட்டக் காரர்கள் கட்டுப்பாட்டில்வைத்திருந்தனர். சுருக்கமாக, ஏதென்ஸ் நகரம் முழுவதும் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

மக்கள் திரள் பாராளுமன்றத்தினுள் நுழைய முயன்ற போதிலும், கலவரத்தடுப்பு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். பாராளுமன்ற வளாகத்தில் கடுமையான சண்டை நடந்தது. மக்கள் எழுச்சியின் முன்னர் அதிகாரத்தை இழந்துகொண்டிருந்த காவலர்கள், இடதுசாரிக் கட்சிகளின் அலுவலகங்களை உடைத்துநொறுக்கி தமது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டனர். (பார்க்க: வீடியோ 2 ) ஆர்ப்பாடக் காரர்கள் போலிஸ் வாகனம் ஒன்றையும், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆடம்பரக் கார்களையும் எரித்து நாசமாக்கினார்கள். தேசிய வரித்திணைக்களக் கட்டிடமும் பெட்ரோல் குண்டுவீச்சுக்கு இலக்காகி எரிந்தது. "வன்முறையில் ஈடுபடும் ஆர்ப்பாட்டக் காரர்கள், ஸ்கூட்டரில் வந்து தாக்குதல் நடத்துகின்றனர். செல்லிடத் தொலைபேசிகளை பயன்படுத்தி சிறந்த வலைப்பின்னலை ஏற்படுத்தி உள்ளனர். மக்கள் திரளை தமது கவசமாகபாவிக்கின்றனர்." இவ்வாறு தனது இயலாமைக்கு சப்பைக் கட்டுகட்டியது ஏதென்ஸ் போலிஸ் நிர்வாகம்.

கிரேக்க பொருளாதார பிரச்சினைகளும், அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டாங்களும் ஐரோப்பிய பங்கு சந்தை வர்த்தகத்தில் கிலியைதோற்றுவித்துள்ளது. யூரோநாணயத்தின் பெறுமதியை குறைத்துள்ளது. கிறீஸ், வழியில் போர்த்துக்கல், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளும் பாரியபொருளாதார பிரச்சினைகளை சந்தித்துள்ளன. திவாலாகும் நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து கழற்றிவிட்டு விட்டால் நல்லது, என்றும் சிலபொருளாதார நிபுணர்கள் ஆலோசனை கூறி வருகின்றனர். அப்படி செய்யாவிட்டால் டாலரை அடுத்து, யூரோநாணயமும் வீழ்ச்சியை நோக்கி செல்வதை தடுக்க முடியாது என்று எச்சரிக்கின்றனர்.

Video 1


Video 2

ஆப்பிரிக்காவில் பிணம் திண்ணும் அமெரிக்க கழுகுகள்

"வறிய நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள கடன்களை, செல்வந்த நாடுகள் ரத்து செய்ய வேண்டும்." மூன்றாமுலக நாடுகள் மீது கரிசனை கொண்ட, மேற்கத்திய தொண்டு நிறுவனங்களின் அயரா முயற்சிக்கு இறுதியில் பலன் கிடைத்தது. சில வருடங்களுக்கு முன்னர், பிரபல பாடகர்கள் இணைந்து "வறுமையை கடந்த காலமாக்குவோம்" என்ற கோஷத்தின் கீழ் இசைக் கச்சேரி நடத்தி உலகின் மனச்சாட்சியை தட்டி எழுப்பினார்கள். கச்சேரியின் முடிவில் சில ஆப்பிரிக்க நாடுகளின் கடன்களை ரத்து செய்வதாக பிரிட்டன் போன்ற செல்வந்த நாடுகள் தொலைக்காட்சி கமெராக்களுக்கு முன்னர் அறிவித்தன. ஏழைகளின் தோழர்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ம்ம்ம்...கொஞ்சம் பொறுங்கள்! செல்வந்த நாடுகளின் பெருந்தன்மையைப் பாராட்டுவதற்கு முன்னர் இதையும் கேளுங்கள்!!

செல்வந்த நாடுகள் ரத்து செய்த ஆப்பிரிக்க நாடுகளுக்கான கடன் பத்திரங்களை அடி மாட்டு விலைக்கு வாங்கின சில அமெரிக்க நிதி நிறுவனங்கள். (BBC America: Palast Hunts the Vultures ) கடன் பத்திரம் முழுவதும் அவர்கள் கைகளுக்கு வந்த பிறகு, "வல்லூறுகள்" என அழைக்கபடும் நிதி நிறுவனங்கள் தாமே கடனை வசூல் செய்யக் கிளம்பின. அதுவும் தாம் வாங்கிய அடி மாட்டு விலைக்கு அல்ல! பத்திரத்தில் எழுதியிருந்த அசல் கடன் எதுவோ, அதை திருப்பிக் கேட்டார்கள். அதுவும் வட்டியோடு. லைபீரியா போன்ற நாடுகள் உள்நாட்டுப் போரில் சிக்கி சின்னாபின்னமாகியிருந்த காலத்தில், அந்த நாடு செலுத்த வேண்டிய கடனுக்காக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். லைபீரியா சார்பில் எந்தப் பிரதிநிதியும் சமூகமளித்திருக்கவில்லை. ஆயினும் லைபீரியா கடனை திருப்பி செலுத்தியே தீர வேண்டும் என்று தீர்ப்பு வந்தது. ஏழை மக்களின் ரத்தம் குடித்து உயிர் வாழும் அமெரிக்க கழுகுகளைப் பற்றிய ஆவணப்படங்கள் கீழே.


BBC America: Palast Hunts the Vultures

Wednesday, May 05, 2010

காலனிய காலத்தில் வாழும் தமிழ் அகதிகள்


(சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள் - இறுதிப் பகுதி)

இலங்கைத் தமிழ் அகதிகளுக்கோ, அல்லது மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கோ, மேற்குறிப்பிட்ட அகதி அரசியல் வரலாறு பற்றி எதுவும் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை, மேற்கு ஐரோப்பா மற்றும் கனடா, அமெரிக்கா போன்ற நாடுகள் யாவும் பணக்கார நாடுகள் என அறிந்திருந்தனர். அங்கே மக்கள் அனைத்து வசதிகளுடனும் வாழ்வதாக அறிந்திருந்தனர். சுருக்கமாக சொன்னால், "தேனும் பாலும் ஆறாக ஓடும் நாடுகளைப்" பற்றி கேள்விப்பட்டிருந்தனர். நான் ஒரு முறை இந்தியா சென்றிருந்த போது, நெதர்லாந்தில் உறவினர்களைக் கொண்ட ஒருவர் கேட்டார்: "அந்த நாட்டில் மாடுகள் போவதற்கு என்று தனியாக பாதை போட்டிருக்கிறார்கலாமே?" வெளிநாடுகளில் வாழும் பலர் தமது தாயக உறவுகளுக்கு தவறான தகவல்களை வழங்கி வருகின்றனர். இங்கிலாந்தில் சாதாரண துப்பரவுப் பணியாளர் கூட கோட்,சூட் அணிந்து செல்வார் என்பது போல கற்பனை செய்துகொள்வார்கள். இந்த புனைகதைகள் பின்னர் பிற ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளைக் குறித்தும் பரவியது.

மேற்கு ஐரோப்பாவில் வாழும் அனைவருமே சொந்தமாக வீடு, கார் வைத்திருப்பார்கள் என்று பலரும் நினைத்துக் கொள்கின்றனர். இந்தியாவில் சந்தித்த குடும்பத் தலைவி ஒருவர் சொன்னார்: "நானும் நெதர்லாந்தில் வசித்தால் மாதம் ஒரு தங்க நகை வாங்குவேன்." பலருக்கு இந்த ஆடம்பரங்களுக்கு அப்பால் வேறெதுவும் தெரியாது. அவர்களது மட்டுப்படுத்தப்பட்ட அறிவை, அன்றைய சோஷலிச நாடுகளில் இருந்து சென்ற அகதிகளின் அறிவுடன் ஒப்பிடலாம். ஆனால் ஒரேயொரு வித்தியாசம். சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கி பெரும் பணச் செலவில் பிரச்சாரம் செய்யப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளில் அப்படி எந்தப் பிரச்சாரமும் செய்ய வேண்டிய தேவை இருக்கவில்லை. அனேகமாக அனைத்து நாடுகளும் எதோ ஒரு ஐரோப்பிய வல்லரசின் காலனியாக இருந்தவை தாம். ஐரோப்பிய எஜமானர்கள் அறிமுகப்படுத்திய கல்வி முறை அந்தப் பணியை ஏற்கனவே செவ்வனே செய்திருந்தது.

ஒரு காலத்தில் இலங்கையில் வெளிநாடு போவதென்றால் இங்கிலாந்து பலரின் நினைவுக்கு வரும். லண்டனில் படித்தவர்கள், அல்லது ஆங்கிலம் பேசுபவர்கள என்றால் மதிப்பு உயரும். இதனால் வெளிநாடுகளில் எல்லாம் ஆங்கில மொழியே பேசப்படுவதாக பலர் அப்பாவித்தனமாக நம்பினார்கள். பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்கள் கூட அப்படிப்பட்ட மூட நம்பிக்கைகளை கொண்டுள்ளனர். இலங்கையில் செயலாளராக பணியாற்றும் பெண்ணொருவருக்கு, (நெதர்லாந்தில்) எமது நிறுவனத்தின் வருடாந்த கூட்டம் டச்சு மொழியில் நடைபெற்றது என்ற செய்தியை நம்பமுடியவில்லை. "ரஷ்யா சென்றிருந்த போது ஆங்கிலத்தில் தானே பேசியிருப்பேன்." என்று ஒரு கேள்வியைப் போட்டார். "ரஷ்யர்கள் யாருக்கும் ஆங்கிலம் தெரியாது. அங்கே ரஷ்ய மொழி தெரியாவிட்டால், சைகை காட்டித்தான் புரிய வைக்க வேண்டும்" என்ற உண்மையை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.

காலனிய வரலாற்றுத் தொடர்பு காரணமாக, பிரிட்டிஷ் அரசு தனது சொந்த மக்களுக்கு அடுத்ததாக தம் மீது நன்மதிப்பு வைத்திருப்பதாக, பல தமிழர்கள் நம்பினார்கள். இங்கிலாந்து சென்றால், சொந்தப் பிள்ளை போல உபசரிப்பார்கள், என்று நினைத்துக் கொண்டனர். உலகில் தாங்கள் மட்டுமே இனப்பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள், அதனால் தமக்கு விசேஷ கவனிப்பு இருக்கும் என்ற நினைப்பில் விமானமேறியவர்கள் பலர். நான் பின்னர் பிற நாட்டினருடன் உரையாடிய போது, அவர்களுக்கும் அதே சிந்தனை இருந்ததை அவதானித்தேன்.

ஈராக்கை சேர்ந்த அகதி ஒருவர், தான் எந்தவொரு மேற்கு ஐரோப்பிய நாட்டிற்கு சென்றாலும், அங்கே ஈராக்கியர்கள் மட்டுமே அகதிகளாக தஞ்சம் கோரி இருப்பார்கள் என்று நினைத்ததாக தெரிவித்தார். தனது தோல் நிறம் வெள்ளையாக இருப்பதால், ஐரோப்பியர்கள் சகோதர பாசத்துடன் ஏற்றுக் கொள்வார்கள் என்று நினைத்திருந்தார். குறிப்பாக இங்கிலாந்து சென்றால், தம்மை சொந்தப் பிள்ளை போல வரவேற்பார்கள் என்று நம்பியதாக சொன்னார். ஆனால் இங்கு வந்து சேர்ந்த பின்னர் தான், உலகின் பல பாகங்களில் இருந்தும் அகதிகள் வந்து சேருவதை புரிந்து கொண்டதாக கூறினார். அதே நேரம் தனது கறுப்புத் தலைமுடி காரணமாக பாகுபாடு காட்டும் யதார்த்தை ஐரோப்பாவில் தரிசிக்க நேர்ந்த அவலத்தையும் சொன்னார்.

அகதிகளாக வரும் ஈழத் தமிழர்களில் பலர், தாமே உண்மையான அகதிகள் என்றும், மற்றவர்கள் அனைவரும் வேறு காரணங்களுக்காக வருவதாகவும் கருதிக் கொள்கின்றனர். ஒவ்வொருவரும் தனியான உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஈழத்தமிழர்கள் வெள்ளைக்காரனுக்கு சூது,வாதற்ற வெள்ளை மனசு என்று கருதி வந்தார்கள். இது போன்ற மனப்பான்மைக்கு, ஆங்கிலேய காலனிய ஆட்சி ஒரு காரணம். காலனிய காலத்தில் ஆங்கிலேயர்கள் நேரடியாக ஆட்சி செய்யவில்லை. உள்ளூர் சமூகத்தில் இருந்து ஒரு மத்தியதர வர்க்கத்தை உருவாக்கி, அதைக் கொண்டு முழு இலங்கையையும் நிர்வகித்து வந்தார்கள்.

ஆங்கிலேயர்கள் இதற்கென யாழ்ப்பாணத் தமிழர்களை (அதிலும் உயர்சாதி வெள்ளாளர்கள்) விசேஷமாக தெரிவு செய்தார்கள். சிறுபான்மை மொழி பேசும், நிலவுடமைச் சமுதாயம் ஆங்கிலேயரின் கடைக்கண் பார்வைக்கு உட்பட்டத்தில் வியப்பில்லை. பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இலங்கையர்கள் பலியானார்கள். காலனிய ஆட்சிக்கு சேவை செய்வதன் பரிகாரமாக, சைவ வெள்ளாளர்கள் தமது பிரதேசத்தில் மத அனுஷ்டானங்களையும், சாதிய பாகுபாட்டையும், நிலப்பிரபுவத்தையும் ஆங்கிலேயர்கள் தடுக்கவில்லை. இதனால் காலனிய அடக்குமுறையை கண்டு, கேட்டிராத சமூகம் ஒன்று அன்று ஆங்கிலேய பிரபுக்கள் மீதும், இன்று மேற்குலக கனவான்கள் மீதும் பெரு மதிப்பு வைத்திருப்பது வியப்புக்குரியதல்ல. இந்த அளவு கடந்த மதிப்பானது, வெள்ளையினத்தவரின் கபடத்தனத்தை இனங்காணத் தவறிவிட்டது. ஐரோப்பியர் பற்றிய தப்பெண்ணம் இறுதியில் ஈழத்தமிழரின் தேசிய அரசியல் தோல்விகளுக்கும் காரணமாக அமைந்தது.

(முற்றும்)

Tuesday, May 04, 2010

இன அடிப்படையில் அடைக்கலம்

(சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள் - தொடரின் ஐந்தாம் பகுதி)

நவீன அரசியல் தஞ்சம் கோரும் கொள்கையை நிறுவனமயப்படுத்தியது மேற்கு ஜெர்மனி(ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு) தான். தஞ்சம் கோருபவரின் விண்ணப்பத்தை பரிசீலித்தல், அவர்களுக்கு வசிப்பதற்கு வீடுகளை பார்த்துக் கொடுத்தல், வேலை தேடிக் கொடுத்தல் அனைத்தையும் ஒழுங்கு முறைப்படி செய்ய ஆரம்பித்தது. அதற்கு பிரதான காரணம், மேற்கு ஜெர்மனி எல்லையில் பல சோஷலிச நாடுகள் இருந்தன. கிழக்கே இருந்து தரைமார்க்கமாக தப்பி வரும் அகதிகள் முதலில் ஜெர்மனி வர வேண்டும். மேலும் ஜெர்மன் மொழி பேசும் மக்கள், ருமேனியா, ரஷ்யா போன்ற நாடுகளிலும் பரந்து வாழ்ந்து வந்தனர். என்றோ ஒரு நாளைக்கு அவர்கள் "தாயகம்" திரும்புவார்கள் என்ற நம்பிக்கை.

ஜெர்மன் அகதி அரசியல் ஹிட்லர் கால கொள்கையின் நீட்சியாகவும் அமைந்திருந்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனி மட்டுமே இனரீதியாக அகதிகளை ஏற்றுக்கொள்ள விரும்பியது. அந்த நிலைப்பாடு இன்று வரை தொடர்கிறது. 1991 ம் ஆண்டிற்குப் பின்னர், கம்யூனிசம் மறைந்த பிறகு ரஷ்யா உட்பட அனைத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் இருந்து பெருமளவு ஜெர்மன் இன அகதிகள், ஒன்றிணைந்த ஜெர்மனியில் வந்து தஞ்சம் கோரினார்கள். பெரும்பாலானோர் பொருளாதாரப் பிரச்சினைகளால் இடம்பெயர்ந்தவர்கள்.

பலருக்கு ஜெர்மன் மொழியில் ஒரு வார்த்தை கூட தெரிந்திருக்கவில்லை. இருப்பினும் அந்த "ஜெர்மன் இனத்தவர்கள்" யாவரும் அங்கீகரிக்கப்பட்டார்கள். 1991 ம் ஆண்டு வரை ஜெர்மனி உட்பட, மேற்கு ஐரோப்பிய நாடுகள் எல்லாம், சோஷலிச நாடுகளில் இருந்து வரும் அனைத்து அகதிகளையும் ஏற்றுக் கொண்டு வந்தன. அதுவரை எந்தவொரு அகதியும் திருப்பி அனுப்பப் படவில்லை. ஆனால் 1991 ம் ஆண்டிற்குப் பின்னர் நிலைமை தலைகீழாக மாறியது. தற்போது ஜனநாயகமயமாகியுள்ள கிழக்கு ஐரோப்பிய மக்கள் பொருளாதாரக் காரணங்களால் வருவதாகக் கூறி திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

பணக்கார ஐரோப்பிய நாடுகள் நிறைய பொருள் வளங்களைக் கொண்டிருந்த போதிலும், மிகக் குறைந்த அளவு அகதிகளையே பெற்று வருகின்றன. விசா, மற்றும் எல்லைக் கட்டுப்பாடுகள், பெருந்தொகைப் பணத்தை பயணச் செலவிற்காக செலவிட வேண்டிய நிலை, இது போன்ற காரணங்களால் மிகச் சிறிய அளவு அகதிகள் மட்டுமே மேற்கத்திய நாடுகளை வந்தடைகின்றனர். அதே நேரம் மூன்றாம் உலகைச் சேர்ந்த வறிய நாடுகள் பெருமளவு அகதிகளை மனிதாபிமான காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன. ஈரான்,பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான ஆப்கான் அகதிகள் தஞ்சம் புகுந்துள்ளனர். பாலஸ்தீன அகதிகளின் ஐம்பது வருடங்களாக லெபனானில் முகாம்களில் வசித்து வருகின்றனர். கென்யா லட்சக்கணக்கான சோமாலிய அகதிகளை பராமரித்து வருகின்றது. இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே.

தனது நாட்டு மக்களையே கவனிக்க முடியாத வறிய நாடுகளுக்கு, அயல் நாட்டு அகதிகளின் வருகை பெருஞ்சுமையை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. ஐ.நா.சபையும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இந்த அகதிகளை பராமரிக்க உதவி செய்கின்றன. ஆனால் அந்த உதவி கூட, பணக்கார நாடுகளின் சுயநல நோக்கத்திற்காக வழங்கப்படுகின்றது. அகதிகளை பராமரிக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கு தேவையான நிதி வழங்குவது பணக்கார நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் அப்படி நிதி உதவி செய்யாவிட்டால், அந்த அகதிகள் எல்லாம் தமது நாடுகளுக்குள் வந்து விடுவார்களோ என்று அவை அஞ்சுகின்றன.

ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஸ்தானிகராலய (UNHCR) தலைவராக பணியாற்றிய லுபர்ஸ் என்பரின் அரசியல் பின்னணி குறித்து சில தகவல்களைத் தருகிறேன். இது எப்படிப்பட்டவர்கள் சர்வதேச அகதி அரசியலை தீர்மானிக்கிறார்கள் என்பதற்கு ஓர் எடுத்துக் காட்டு. 1984 ம் ஆண்டு முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு பெருமளவு ஈழத்தமிழ் அகதிகள் நெதர்லாந்து நாட்டிற்கு வந்து கொண்டிருந்தார்கள். அப்போதெல்லாம் நெதர்லாந்தில் அகதி முகாம்கள் இருக்கவில்லை. அதே நேரம் அரசு தமிழர்களை அகதிகளாக கருதவில்லை. இதனால் அவர்களை திருப்பி அனுப்பும் நோக்கோடு, தற்காலிகமாக தேவாலயங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அப்போது நெதர்லாந்து பிரதமராக பதவி வகித்த லுபெர்ஸ், ஈழத் தமிழ் அகதிகளை எப்படியும் திருப்பி அனுப்பியே தீருவேன் என கங்கணம் கட்டிக் கொண்டு நின்றார். அவரது கொள்கை இனப்பாகுபாடு கொண்டதாக சில தொண்டு நிறுவனங்கள் குற்றஞ்சாட்டின. அதற்குக் காரணம், அப்போதும் உலகம் முழுக்க இருந்தும் அகதிகள் வந்திருந்தாலும், லுபெர்ஸ் அரசு ஈழத் தமிழர்களை மட்டுமே திருப்பி அனுப்பும் முயற்சியில் இறங்கியது. அன்று தனது நாட்டினுள் அகதிகள் வருவதை தடுத்த அதே லுபர்சுக்கு, பிற்காலத்தில் UNHCR தலைவர் பதவி வழங்கி "கௌரவிக்கப்பட்டது." ஆழ்ந்து கவனித்தால், இதில் எந்த முரண்பாடும் இருப்பதாக தெரியாது. மேற்குலக நாடுகளுக்கு மூன்றாமுலக அகதிகள் செல்வதைத் தடுக்க வேண்டுமானால், அவர்களுக்கு அந்தந்த நாடுகளிலோ, அல்லது அயல்நாடுகளிலோ தற்காலிக தங்குமிட வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். ஆகவே "வருமுன் காக்கும்" பணியை UNHCR செவ்வனே நிறைவேற்றி வருகின்றது.

(தொடரும்)

4.சர்வதேச கம்யூனிச அகதிகள்
3.அங்கீகரிக்கப்பட்ட பனிப்போர் அகதிகள்
2.ஐரோப்பியர் அகதிகளாக அலைந்த காலங்கள்
1.சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள்

Monday, May 03, 2010

சர்வதேச கம்யூனிச அகதிகள்

(சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள் - தொடரின் நான்காம் பகுதி)

மேற்குலகில் வாழும் அல்லது மேற்குலக சிந்தனை கொண்டவர்களுக்கு, முன்னாள் கம்யூனிச நாடுகளிலும் அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கப்பட்ட விஷயம் தெரியாது. அவை பெரும்பாலும் கம்யூனிச அரசியல் சார்ந்த அகதிகளையே ஏற்றுக்கொண்டு வந்தன. சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் போரினால் பாதிக்கப்பட்ட உஸ்பெக்கிய, தஜிக்கிய அகதிகள் அனைவருக்கும் தற்காலிக தங்குமிட வசதி செய்து கொடுத்திருந்தது. ஆப்கானிஸ்தானும் சோஷலிச நாடாக இருந்த காலத்தில், சோவியத் யூனியனில் உயர் கல்வி கற்கும் வாய்ப்பு தாராளமாக கிடைத்தது. மாணவர்கள் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டனர். இதனால் படித்த நடுத்தர வர்க்க இளைஞர்கள் பலர், சோவியத் யூனியனுக்கு கல்வி கற்க சென்று, பின்னர் உள்நாட்டுப் பெண்களை திருமணம் செய்து அங்கேயே தங்கி விட்டிருந்தனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு, இவர்களில் பலர் நெதர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரினார்கள்.

சோவியத் யூனியனும், பிற சோஷலிச நாடுகளும் அகதிகளை அங்கீகரிக்கும் ஐ.நா. ஆணையில் கைச்சாத்திட்டிருந்தன. இருப்பினும் கிரீஸ், சிலி போன்ற குறிப்பிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்களுக்கே தஞ்சம் வழங்கப்பட்டன. கிரீஸ் அகதிகளின் வருகையுடன் கம்யூனிச நாடுகளின் அகதி அரசியல் ஆரம்பமாகியது. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த நேரம், கிரீசின் பெரும்பாலான பகுதிகளை கம்யூனிச போராளிகள் விடுவித்திருந்தனர். அப்போது பிரிட்டனும், சோவியத் யூனியனும் ஒரே அணியில் இருந்ததால். கிரீசை விடுவிக்க பிரிட்டிஷ் படைகள் சென்றன. இருப்பினும் சில வருடங்களுக்குப் பின்னர் கிரேக்க கம்யூனிஸ்ட்களுக்கும், பிரிட்டிஷாருக்குமிடையில் போர் மூண்டது. பிரிட்டனை பகைத்துக் கொள்ள விரும்பாமல், ஸ்டாலின் கம்யூனிஸ்ட் போராளிகளுக்கு உதவி வழங்க மறுத்து விட்டார்.

கம்யூனிஸ்ட்களால் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. போராட்டத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரிட்டிஷ் மற்றும் தேசியவாதிகளின் படையினரால் பழிவாங்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக, நாட்டை விட்டு ஓட வேண்டிய நிலைமை. கம்யூனிஸ்ட் தலைவர்கள், போராளிகள், அவர்களது குடும்பங்கள் அனைவரும் சுற்றி இருந்த சோஷலிச நாடுகளில் அடைக்கலம் கோரினர். கிரேக்க அகதிகள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்டு, அரசே முன்னின்று வீடுகளையும் வழங்கியது. செக்கொஸ்லோவாகியா போன்ற நாடுகளில் இப்போதும் கணிசமான அளவு முன்னாள் கிரேக்க அகதிகள் வாழ்ந்து வருகின்றனர். அந்த நாடுகளின் சொந்த மக்களை விட, அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் இன்றும் சோஷலிசத்திற்கு விசுவாசமாக இருப்பதைக் காணலாம். மேற்குலகிலும் இதே போன்ற நிலைமை உள்ளது. அகதிகளாக குடியேறியவர்கள் மேற்கத்திய நாகரீகத்தை அளவுக்கதிகமாகவே பின்பற்றுவதைக் காணலாம்.

ஒரு மூன்றாமுலக வறிய நாடான கியூபா கூட பன்னாட்டு அகதிகளை ஏற்றுக்கொண்டுள்ளது. சிலி போன்ற தென் அமெரிக்கர்களுக்கும், அல்ஜீரியா, அங்கோலா, நமீபியா போன்ற பல ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த அகதிகளுக்கும் அடைக்கலம் வழங்கியது. ஒரு முறை கியூபா கப்பல்கள், அல்ஜீரிய தேசிய விடுதலைப் போராளிகளுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு, அங்கிருந்து போரினால் பாதிக்கப்பட்ட அனாதைப் பிள்ளைகளை ஏற்றிவந்தன. ஒரு காலத்தில் அமெரிக்காவை சேர்ந்த கறுப்பின மாவோயிச இயக்கமான Black Panthers உறுப்பினர்களுக்கு அரசியல் தஞ்சம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவருக்கும் வீடு, வேலைவாய்ப்பு, கல்வி போன்ற அடிப்படை வசதிகளை வழங்கி, முழுமையான கியூப பிரசைகளாக உள்வாங்கப்பட்டு விட்டனர். அகதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், சில நேரம் கியூப மக்களையும் பொறாமை கொள்ள வைத்தன.

(தொடரும்)

3.அங்கீகரிக்கப்பட்ட பனிப்போர் அகதிகள்
2.ஐரோப்பியர் அகதிகளாக அலைந்த காலங்கள்
1.சதுரங்க அரசியலில் சர்வதேச அகதிகள்