Saturday, January 24, 2015

தாமஸ் பிக்கெட்டி, யார் இவர்?


தாமஸ் பிக்கெட்டி. யார் இவர்? பிரான்ஸ் நாட்டின் பொருளியல் அறிஞர். அவர் எழுதிய 21 ம் நூற்றாண்டின் மூலதனம் எனும் நூல், 27 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. அவர் செல்லுமிடமெங்கும் ஒரு சினிமா நட்சத்திரத்திற்கு உரிய வரவேற்புக் கிடைக்கிறது. நெதர்லாந்து அரசாங்கம் அவரை அழைத்து பாராளுமன்றத்தில் பேச வைக்கிறது. ஆம்ஸ்டர்டாம் நகரில் அவர் சொற்பொழிவாற்றிய மண்டபம் ஜனத்திரளால் நிறைந்து காணப் பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே டிக்கட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

 21 ம் நூற்றாண்டின் மூலதனம் நூல், கார்ல் மார்க்ஸ் எழுதிய காலத்தால் அழியாத மூலதனம் நூலை நினைவுபடுத்தினாலும், தாமஸ் பிக்கெட்டி ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. அவர் இடதுசாரியோ, அல்லது வலதுசாரியோ அல்ல. ஆனால், இடதுசாரிகள் அவரைக் கொண்டாடினார்கள். வலதுசாரிகள் அவரை கௌரவித்தார்கள். இத்தனைக்கும் காரணம், பணக்கார மேற்கத்திய நாடுகளிலும் சமூக ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருவதை, ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளார்.

நெதர்லாந்து தொலைக்காட்சியில், பொருளாதாரம் சம்பந்தமான முற்போக்கான நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் Tegenlicht, தாமஸ் பிக்கெட்டியை பேட்டி கண்டு ஒளிபரப்பியது. அதில் அவர் தெரிவித்த சில கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தாமஸ் பிக்கெட்டி செல்லுமிடமெங்கும், முற்போக்கான வரி அறவிடப் பட வேண்டும் என்று கோரி வருகின்றார். அது என்ன முற்போக்கு வரி? இன்றைக்கும் பெரும்பாலான நாடுகளில், அரசுகள் வருமான வரி அறவிட்டு வருகின்றன. உழைப்பவர்கள் எல்லோரும், தாம் பெற்ற ஊதியத்திற்கு செலுத்த வேண்டிய வரி, இனிமேல் தேவையில்லை. ஏனென்றால் அது வறுமையை அதிகரிக்கின்றது.

அதற்குப் பதிலாக, சொத்து வரி அதிகரிக்கப் பட வேண்டும். சொத்து என்பது பணக்காரர்களின் அசையும், அசையா சொத்துக்கள் மட்டுமல்ல. பெரும் நிறுவனங்களின் மூலதன திரட்சியும் சொத்து தான். அரசாங்கம் அவற்றிற்கு மிகக் குறைந்த அளவு வரி தான் அறவிட்டு வருகின்றது.

வேலை செய்யும் எல்லோரும் கட்டும் வருமான வரியும், பணக்காரர்களின் சொத்துக்களுக்கான மிகக் குறைந்தளவு வரியும் தான் சமூகத்தில் ஏற்றத் தாழ்வை அதிகரிக்க வைக்கிறது. பணக்காரன் மென்மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மென்மேலும் ஏழை ஆகிறான். 

நிலைமை இப்படியே தொடர்ந்து கொண்டிருந்தால், மீண்டும் ஒரு புரட்சி வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஆகையினால், அரசாங்கங்கள் உடனடியாக முற்போக்கான வரி அறவிடும் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும். உழைப்பவர்கள் மீதான வருமான வரியை நிறுத்தி விட்டு, சொத்துக்கள் மீதான கூடுதல் வரி அறவிடப் பட வேண்டும்.

"பிரெஞ்சுப் புரட்சி மாதிரி ஒரு வன்முறைப் புரட்சியை எதிர்பார்க்கிறீர்களா?" என்று கேட்ட கேள்விக்கு பிக்கெட்டி அளித்த பதில்: 
"இன்று உலகம் முழுவதும் பல இடங்களில் நடந்துள்ள மக்கள் எழுச்சியும் புரட்சியின் ஒரு கட்டம் தான். புரட்சி என்பது என்ன? சிலநேரம் மாற்றத்திற்கு வன்முறை அவசியம் என்ற உண்மையை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், அது வன்முறையற்ற பரிணாம வளர்ச்சிக் கட்டமாகவும் இருக்கலாம். வன்முறை பிரயோகிக்கப் படும் புரட்சி வெற்றி பெற்றாலும், அடுத்த கட்டம் என்னவென்பதை பற்றி சிந்திக்க வேண்டும். சமூகத்தை மாற்றியமைப்பதற்கான திட்டம் என்ன? ஒரு புரட்சியை வெல்வதை விட, அதை தக்க வைத்திருப்பது தான் முக்கியமானது.

"கம்யூனிசம் தோற்றுப் போன சித்தாந்தம்..." என்று இப்போதும் அறியாமை காரணமாக சொல்லித் திரிபவர்கள், "முதலாளித்துவம் வெற்றி அடைந்த சித்தாந்தம்" என்று சொல்லிக் கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றனர். முதலாளித்துவத்தின் லிபரல் கொள்கை தோற்றுப் போனதால், பிற்காலத்தில் நவ- லிபரலிச கொள்கை வந்தது. Trickle down economy எல்லோருக்கும் நன்மை பயக்கும் என்றார்கள்.

அதாவது, நெல்லுக்கு இறைக்கும் நீர் புல்லுக்கும் பாய்வது மாதிரி, பணக்காரர்களை வாழவைத்தால் ஏழைகளுக்கும் நன்மை கிடைக்கும் என்ற தத்துவம். ஆனால், பல தசாப்தங்களுக்குப் பின்னரும், பணக்காரன் மேலும் பணக்காரனாவதும், ஏழை மேலும் ஏழையாவதும் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. 

Trickle down economy ஆல் நன்மை அடைந்தவர்கள் பணக்காரர்கள் மட்டுமே. இதை நாங்கள் ஏன் முதலாளித்துவத்தின் தோல்வி என்று சொல்லிக் கொள்வதில்லை? உண்மையில் முதலாளித்துவம் தோல்வியின் விளிம்பில் நின்ற படியால் தான், தாமஸ் பிக்கெட்டியை கௌரவிக்கின்றது.

நெதர்லாந்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப் படத்தை பார்ப்பதற்கான இணைப்பு கீழே. தாமஸ் பிக்கெட்டி ஆங்கிலத்தில் பேசுவதால், டச்சு மொழி தெரியாதவர்களும் பார்த்துப் புரிந்து கொள்ள முடியும்.



இது தொடர்பான முன்னைய பதிவு:

Wednesday, January 21, 2015

அப்போது அங்கே பிக்கெட்டி தோன்றினார்...


 பிரான்ஸ் நாட்டு பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டி எழுதிய, "21 ம் நூற்றாண்டு மூலதனம்" நூல் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. அது இலகுவாக வாசித்தறியக் கூடிய நூல் இல்லையென்றாலும், அதை வாசிப்பதற்கு பொருளாதாரம் பற்றிய முன் அறிவு தேவையில்லை. 

நெதர்லாந்தில், வருமானம் குறைந்தோருக்கும், ஏழைகளுக்கும் இலவசமாக விநியோகிக்கப் படும் MUG சஞ்சிகையில் (ஜனவரி 2015), அந்த நூல் பற்றிய விமர்சனம் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் ஒரு காலத்தில் சமத்துவ சமுதாயம் இருந்ததாக கருதப் பட்ட நெதர்லாந்து பொருளாதாரம் குறித்தும் தனியாக ஆய்வு செய்யப் பட்டுள்ளது. 

பணக்கார மேற்கு ஐரோப்பிய நாடுகளைப் பற்றிய மாயைகளை கொண்டிருக்கும் தமிழர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் அவை. தாமஸ் பிக்கெட்டி பற்றிய கட்டுரையை, தமிழ் வாசகர்களுக்காக மொழிபெயர்த்து தருகிறேன்.
 -------------------------------------------------------------

தாமஸ் பிக்கெட்டி பற்றி பலர் ஏற்கனவே கேள்விப் பட்டிருப்பார்கள். பிரெஞ்சு பொருளியல் அறிஞர், உலகம் முழுவதும் ஒரு சினிமா நட்சத்திரம் போன்று வரவேற்கப்பட்டார். 21 ம் நூற்றாண்டு மூலதனம் எனும் ஒரு தடிமனான, கடுமையான நூல் ஒன்றை எழுதிய சமூக விஞ்ஞானியை பொருத்தவரையில் அது குறிப்பிடத் தக்க விடயம்.

அவர் ஒரு புதிய கார்ல் மார்க்ஸ் என்று அழைக்கப் பட்டார். ஆனால், பிக்கெட்டி அதை விரும்பவில்லை. அவர் கம்யூனிசத்தை வெறுக்கிறார். ஆயினும், இந்த நூல் சொல்ல வரும் செய்தி இடதுசாரியக் கருத்தியல் என்பதை மறுக்க முடியாது. உலகத்தில் ஏற்றத்தாழ்வு மிக வேகமாக அதிகரிக்கின்றது. நாங்கள் எதுவுமே செய்யாவிட்டால், 19 நூற்றாண்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டி இருக்கும். அப்போது கையளவு முதலாளிகள் மட்டுமே பணம் வைத்திருந்தார்கள். பாட்டாளிகள் வருந்தி செத்துக் கொண்டிருந்தார்கள்.

இந்த முன்னறிவிப்பு தேவையற்ற விடயம் அல்ல. பிக்கெட்டி சில தோழர்களுடன் சேர்ந்து, மிகவும் விரிவான ஆய்வொன்றை செய்துள்ளார். கடந்த இரு நூறாண்டுகளாக, ஐரோப்பா, அமெரிக்காவில் மாற்றமடைந்து வரும் வருமானம், சொத்து அதிகரிப்பை ஆராய்ந்துள்ளனர். அந்த ஆராய்ச்சிக்காக, அவருக்கு ஆதரவாக இடதுசாரி முகாமில் இருந்தும், வலதுசாரி முகாமில் இருந்தும் பலத்த கரகோஷம் எழுந்தது.

அவர் ஒரு இடதுசாரி ஆதரவாளர் என்று யாரும் புறக்கணிக்க முடியவில்லை. தற்காலத்தில் நாங்கள் உழைத்து சம்பாதிப்பதை விட, பணத்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என்பது தான் பிக்கெட்டியின் கூற்றின் சாராம்சம் ஆகும். யாராவது பரம்பரைச் சொத்து வைத்திருந்தால், அவர் பங்குகள், வட்டிகள் மூலம் அதிகம் சம்பாதிக்க முடியும். அவ்வாறு தான், பணக்காரன் மேலும் பணக்காரன் ஆகிறான். ஏழை மேலும் ஏழை ஆகிறான்.

1980 க்குப் பிறகு தான், மிகப்பெரிய ஏற்றத்தாழ்வு உருவானது. நம்ப முடியாத அளவு சம்பளம் வாங்கிய உயர்மட்ட நிர்வாகிகள் வந்தார்கள். கடந்த சில தசாப்த காலமாக, குறிப்பாக நிதித் துறையில், அதி கூடிய சம்பள விகிதம் 700 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், மத்திய தர வர்க்கத்தின் வருமானம் வருடத்திற்கு ஓரிரு சதவீதமே கூடியது. அமெரிக்காவில், 10 சதவீதமாக உள்ள பணக்காரர்கள் அந்த நாட்டின் மொத்த வருமானத்தில் அரைவாசியை சொந்தமாக்கிக் கொள்கின்றனர்.

அளவுக்கு அதிகமாக சம்பாதிப்பவர்கள் குறித்து, பிக்கெட்டி நல்லெண்ணம் கொண்டிருக்கவில்லை. அவர்களது திறமைக்கு மதிப்புக் கொடுத்து அந்த ஊதியம் வழங்கப் படவில்லை. அதிகம் சம்பாதிப்போரின் வர்க்கம் ஒன்று உருவானது. அவர்கள் தமது சம்பளத்தை தாமாகவே தீர்மானித்துக் கொண்டார்கள். அவர்கள் மிகக் குறுகிய காலத்திற்குள் மிகப் பெரிய சொத்துக்களை சேர்த்ததுடன், அவற்றை வரியில்லாத சொர்க்கபுரிகளுக்குள் பதுக்கி வைத்தார்கள். அத்தகைய பணக்காரர்களின் பிள்ளைகள், அந்த செல்வத்தை நிர்வகித்து வந்தாலே போதுமானது. அவர்கள் மென்மேலும் பணக்காரர்கள் ஆகி விடுவார்கள். ஏனென்றால், சொத்து எந்தளவுக்கு அதிகமோ, அந்தளவுக்கு அது கூடிக் கொண்டே செல்லும்.

இதெல்லாம் அமெரிக்காவில் தான் என்று பலர் நினைக்கிறார்கள். நெதர்லாந்து ஒரு சமத்துவ சமுதாயத்தைக் கொண்ட நாடு. இங்கே அது பொருந்தாது என்று நினைக்கலாம். பிக்கெட்டி தனது நூலில் நெதர்லாந்தைப் பற்றி மிகச் சொற்பமாகவே எழுதி இருக்கிறார். ஆனால், டச்சு சமூக விஞ்ஞானிகள் அதை விரிவாக ஆராய்ந்துள்ளனர். வருமானத்தை பங்கிடுவதை பற்றி மட்டுமே ஆராய்ந்தால், சமத்துவ சமுதாயம் என்பது ஓரளவு சரியாக கருதப் படலாம். ஆனால், சொத்துக்களை பார்த்தோமானால், நெதர்லாந்து நாட்டிலும் மிகப் பெரிய ஏற்றத்தாழ்வு நிலவுவதை அவதானிக்கலாம். 10 சதவீத பணக்காரர்கள், இந்த நாட்டில் உள்ள மொத்த சொத்துக்களில் 60 சதவீதத்தை சொந்தமாக வைத்திருக்கின்றனர். Van Landschot வங்கியின் தகவலின் படி அது முக்கால்வாசிப் பங்கு.

சொத்து அளவீட்டின் படி, நெதர்லாந்தும் ஏற்றத்தாழ்வு அதிகமான ஐரோப்பிய நாடுகளில் ஒன்று தான். குறைந்தளவு செல்வம் வைத்திருக்கும், அல்லது கடன்களை நம்பி வாழும், சனத்தொகையின் அரைவாசி மக்களுக்கும், பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி இங்கேயும் அதிகமாகும். இந்த நாட்டிலும் வறுமை அதிகரிக்கின்றது. ஒவ்வோர் ஆண்டும் அது குறித்து ஆய்வு செய்யும் Sociaal Cultureel Planbureau, Central Bureau voor de Statistiek ஆகிய நிறுவனங்கள் 2014 ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையிலேயே அது குறிப்பிடப் பட்டுள்ளது.

பெரும்பாலான டச்சுக் காரர்களுக்கு, அந்த தகவல் அதிர்ச்சியாக இருக்கும். இன்றைய வயோதிபர்கள், அவர்களது காலத்தில், ஓரளவு ஏற்றத்தாழ்வற்ற சமுதாயம் ஒன்றில் வளர்ந்து வந்தனர். முப்பதுகளில் ஏற்பட்ட மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி, இரண்டு உலகப் போர்கள், மற்றும் பணக்கார காலனியான இந்தோனேசியாவின் இழப்பு என்பன, எதிர்பாராத அளவிற்கு மூலதனத்தை நொறுக்கி இருந்தன. பலரது தனிப்பட்ட சொத்துக்கள் காற்றில் கரைந்தன. 

1950 க்குப் பின்னர், பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையிலான வித்தியாசம் முன்னெப்போதும் இல்லாதவாறு குறைந்திருந்தது. மீள் கட்டுமானத்தில் அனைவரும் கடுமையாக உழைத்தார்கள். நாட்டின் பொருளாதாரம் வருடத்திற்கு 4 - 5 சதவீதம் என உயர்ந்தது. அதனால் சம்பளங்களும் கூடிக் கொண்டிருந்தன. 1980 வரையில் அப்படியே நடந்து கொண்டிருந்தது. அப்போது வந்த பொருளாதார நெருக்கடி, எல்லாவற்றிற்கும் முடிவு கட்டியது.

1950 க்கும் 1980 க்கும் இடைப்பட்ட காலம் தனித்துவமானது. பொதுவாக பொருளாதாரம், வருடத்திற்கு அதிக பட்சம் 1 அல்லது 2 சதவீதம் தான் உயரும் என்று பிக்கெட்டி கூறுகின்றார். சொத்துக்கள் வருடத்திற்கு 5 சதவீதம் உயரும். சொத்துடமையாளர்களுக்கும், உடைமைகள் அற்ற பிரிவினருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு தவிர்க்க முடியாமல் உயர்ந்து கொண்டு செல்லும். நலன்புரி அரசு சிதைக்கப் பட்டதும், பணக்காரர்கள் குறைந்தளவு வரி கட்டுவதும், ஏற்றத்தாழ்வை அதிகரிக்கும் காரணிகள் ஆகும். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகின்றனர். அரசு கூட ஏழையாகின்றது.

19 ம் நூற்றாண்டை திரும்பிப் பார்ப்போம். சமுதாய ஏற்றத்தாழ்வு அபாயகரமானது என்று பிக்கெட்டி எச்சரிக்கை விடுக்கிறார். ஜனநாயகம் அப்போது அகற்றப் பட்டது. அதீத பணக்காரர்கள் அரசியலில் செல்வாக்குச் செலுத்தினார்கள். சொத்துக்கள் ஏதும் வைத்திராதவர்கள், சமுதாயத்திற்கு வெளியே நிற்பதாக உணர்ந்தனர். தாமஸ் பிக்கெட்டி : "மேட்டுக்குடியினருக்கு எதிரானவன் என்று என் மேல் குற்றஞ் சாட்டப் பட்டது. ஆனால், உச்சியை விட அடித்தளம் மிகவும் முக்கியமானது என்று நான் கருதுகிறேன்."

இதற்கொரு தீர்வு இருக்கிறதா? உலகளாவிய முற்போக்கான சொத்து வரி ஒன்றை பிக்கெட்டி முன் மொழிகின்றார். அப்படியான வரி அறவிடுவதற்கு உலகம் முழுவதும் ஒத்துழைக்கும் என்று எதிர்பார்ப்பது ஒரு மாயை தான். அது பிக்கெட்டிக்கும் தெரியும். இருப்பினும், அவர் தனது ஆலோசனையை, வரி சீர்திருத்தம் தொடர்பான விவாதங்களுக்கெல்லாம் ஒரு அளவீடாக குறித்து வைத்திருக்கிறார். அது யதார்த்தமானது.

(நன்றி: Mug Magazine, Januari 2015)

Monday, January 19, 2015

ஹார்கிஸ் : பிரெஞ்சு அடிவருடிகளான அல்ஜீரிய ஒட்டுக் குழுவினரின் கதை


"ஹார்கிஸ்": இவர்கள் யார் என்று தெரியுமா? தெரியாவிட்டால் ஒரு புலி ஆதரவாளரிடம் கேட்டுப் பாருங்கள். "ஒட்டுக்குழு" என்று பதில் சொல்வார். அல்ஜீரிய விடுதலைப் போரை நசுக்குவதற்காக, பிரெஞ்சு பேரினவாத அரசு பயன்படுத்திய துணைப் படையின் பெயர் தான் ஹார்கிஸ். அல்ஜீரியாவில் அவர்களின் பெயர் "ஒட்டுக் குழு!" 

அதாவது, எஜமான விசுவாசம் காரணமாக பிரான்சுக்கு சேவை செய்த அல்ஜீரிய துணைப் படையினர். விடுதலைக்காக போராடிய அல்ஜீரிய மக்களின் பார்வையில்: "இனத் துரோகிகள்". பிரெஞ்சு இராணுவம், தமது சொந்த இன மக்களை இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்த நேரத்திலும், ஹார்கி ஒட்டுக் குழுவினர் எஜமானனின் காலை நக்கிக் கொண்டிருந்தனர்.

சார்லி எப்டோ தாக்குதலுக்குப் பின்னர், பிரான்ஸில், பிரெஞ்சு பேரினவாத அரசுக்கு அடிவருடும் தமிழ் ஒட்டுக் குழுக்கள் பெருகி விட்டன. பிரெஞ்சு ஏகாதிபத்திய எஜமான் வீசும் எலும்புத் துண்டுகளுக்காக, தாங்களும் வெள்ளையர்கள் போன்று பாவனை செய்து கொள்கின்றனர். 

"பிரெஞ்சுக் கனவான்கள் தமிழர்களின் "உண்மையான" நண்பர்கள்... பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசி, பிரெஞ்சு சமுதாயத்தில் ஒன்று கலக்க வேண்டும்... பிரெஞ்சு அரசுக்கு விசுவாசமாக சேவை செய்து நற்பெயரை சம்பாதிக்க வேண்டும்..." என்று, அடிமைகள் போன்று எஜமான விசுவாசம் காட்டும் இவர்கள், ஹார்கிஸ் ஒட்டுக் குழுவின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

சிறிலங்காவும், ஈழமும் தமிழ் தேசியவாதிகளினால் இரண்டு தேசங்களாக கருதப் படுகின்றன. "சிங்கள சிறிலங்கா, தமிழீழப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கிறது..." என்று அவர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். அல்ஜீரியா உண்மையிலேயே, நூறு வருடங்களுக்கும் மேலாக, பிரான்சின் ஒரு மாகாணமாக ஆளப் பட்டு வந்தது. 

அதன் அர்த்தம், குறைந்த பட்சம் காகிதத்திலாவது, அல்ஜீரியர்களும் பிரெஞ்சுப் பிரஜைகளாக கருதப் பட்டனர். ஆனால், இரண்டாந்தர பிரஜைகளாக உரிமைகள் இன்றி அடக்கப் பட்டனர். "பிரான்சில் வாழும் தமிழர்கள் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசி, பிரெஞ்சு சமுதாயத்தில் ஒன்று கலக்க வேண்டும்" என்று, இன்றைக்கு நேற்று பிரான்சுக்கு வந்த தமிழ் அடிவருடிகள் கனவு காண்கின்றனர். பிரான்சில் வாழும் அல்ஜீரியர்கள், கடந்த 150 வருடங்களாக, பிரெஞ்சு மொழியை சரளமாகப் பேசிக் கொண்டிருக்கும், பிரெஞ்சு பிரஜைகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.

அல்ஜீரிய- முஸ்லிம் போர் வீரர்கள், பிரெஞ்சு இராணுவத்தில் சேவை செய்வது, ஏற்கனவே பல வருட காலமாக நடந்து வந்துள்ளது. பிரான்சின் காலனியப் போர்களிலும், அல்ஜீரிய வீரர்கள் போரிட்டுள்ளனர். ஆசியாவில் பிரெஞ்சுச் காலனியாகவிருந்த, வியட்நாம், கம்போடியாவில் நடந்த போர்களிலும் ஏராளமான அல்ஜீரிய வீரர்கள் பலியானார்கள்.

ஐரோப்பாவில் நடந்த முதலாம் உலகப் போரில் மட்டும், கிட்டத் தட்ட ஒரு இலட்சம் அல்ஜீரிய வீரர்கள் பலியானார்கள். இரண்டாம் உலகப் போரிலும் பல்லாயிரக் கணக்கான அல்ஜீரிய வீரர்கள், பிரான்சின் விடுதலைக்காக மரணத்தை தழுவியுள்ளனர். உண்மையில், பல இலட்சம் அல்ஜீரிய படையினரின் உயிர்த் தியாகம், இரண்டு உலகப் போர்களிலும் பிரான்சின் வெற்றியை தீர்மானித்தது.

தமிழீழம் போன்று, அல்ஜீரியா பிரான்சில் இருந்து பிரிந்து தனி நாடாக வேண்டுமென்று கோரிக்கை எழுந்த பின்னர் தான், ஹார்கிஸ் ஒட்டுக்குழு உருவானது. ஏனெனில், அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானதும், அல்ஜீரிய வீரர்கள் ஏதாவது ஒரு பக்கத்தை தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல முன்னாள் பிரஞ்சுப் படை வீரர்கள், FLN விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டனர். 

FLN (Front de Liberation Nationale) தமிழீழம் கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் போன்று ஒரு தேசிய விடுதலை இயக்கம் ஆகும். ஈழத்தில் தோன்றிய தமிழ் தேசிய அலை காரணமாக, தமிழர்கள் புலிகளை ஆதரித்தது போன்று, அல்ஜீரியாவில் உருவான அல்ஜீரிய தேசிய அலை காரணமாக, அரேபியர்கள் FLN இயக்கத்தை பெருமளவில் ஆதரித்தனர்.

அதனால், பிரான்ஸ் தனக்கு விசுவாசமான ஒட்டுக்குழுவை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது. அது தான் ஹார்கிஸ். ஆரம்பத்தில், பிரான்சுக்கு விசுவாசமான ஊர்க்காவல் படையாக அது தோன்றியது. பின்னர், பிரெஞ்சு ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணைப் படை ஆகியது.

இன்றைக்கு பிரான்சில் வாழும் பல தமிழர்கள் தம்மையும், பிரெஞ்சு வெள்ளையராக பாவனை செய்து கொள்வதைப் போன்று, அன்றைக்கு பல அல்ஜீரியர்கள் தம்மையும் பிரெஞ்சு வெள்ளையர் என்று கருதிக் கொண்டனர். அப்படியானவர்கள் எஜமான விசுவாசம் காரணமாக ஹார்கிஸ் படையில் சேர்ந்து கொண்டனர்.

ஹார்கி வீரர்கள் பல தரப் பட்ட சமூகப் பின்னணி கொண்டவர்கள். பலர் பரம்பரை பரம்பரையாக பிரெஞ்சு எஜமானுக்கு சேவை செய்து சலுகைகளை அனுபவித்த குடும்பங்களை சேர்ந்தவர்கள். இருப்பினும், FLN பழிவாங்கல் நடவடிக்கைகளினால் பாதிக்கப் பட்டவர்கள் (ஈபிடிபி போன்றவர்கள்), FLN இயக்கத்தினுள் முரண்பட்டு பிரிந்தவர்கள்(கருணா குழு போன்றவர்கள்), போன்றவர்களும் ஹார்கிஸ் ஒட்டுக் குழுவில் சேர்ந்து கொண்டனர்.

பிரான்சில் இருந்து அல்ஜீரியா சுதந்திரம் அடைந்ததும், பிரெஞ்சு அரசுக்கு ஹார்கிஸ் ஒட்டுக் குழுவின் தேவை இருக்கவில்லை. அதனால், பிரெஞ்சு இராணுவத் தளபதிகள் ஹார்கிஸ் படையினரிடம் இருந்த ஆயுதங்களை திருப்பி வாங்கிக் கொண்டு, அல்ஜீரியாவில் தவிக்க விட்டு ஓடி விட்டனர். அல்ஜீரியாவில் முன்பிருந்த பிரெஞ்சு குடியேற்றங்களில் (ஈழத்தில் சிங்களக் குடியேற்றம் மாதிரி) இருந்து வெளியேறிய பல இலட்சம் வெள்ளையின பிரெஞ்சுக் காரர்கள் மட்டுமே பிரான்சினுள் அனுமதிக்கப் பட்டனர். 

தங்களையும் நாயகர்கள் போன்று வரவேற்பார்கள் என்றெண்ணி, பிரான்சுக்கு சென்ற ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அங்கே அவர்களை வரவேற்க யாரும் இருக்கவில்லை என்பது மட்டுமல்ல, வருடக் கணக்காக தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டனர். அவர்கள் பிரஞ்சு அரசினால் புறக்கணிக்கப் பட்டார்கள். தற்போது, பிரெஞ்சு சமூகத்தில் ஒன்று கலந்து வாழ்ந்த போதிலும், பிரெஞ்சு தேசத்திற்காக அவர்கள் புரிந்த தியாகம் உதாசீனப் படுத்தப் படுகின்றது.

அதே நேரம், அல்ஜீரியாவில் தங்கி விட்ட ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினர், மற்றும் அவர்களது குடும்பத்தினர், வெற்றி மமதையில் இருந்த FLN போராளிகளினால் கொல்லப் பட்டனர். மக்களுக்கு முன்னிலையில் மானபங்கப் படுத்தப் பட்டனர். சித்திரவதை செய்யப் பட்டனர். சில இடங்களில், பிரெஞ்சு அடக்குமுறையினால் ஆத்திரமுற்ற பொது மக்களே, முன்னாள் ஹார்கிகளை அடித்துக் கொன்றனர். 

ஆயிரக் கணக்கான ஹார்கி படையினர், முன்பு பிரெஞ்சு அரசு அவர்களுக்கு வழங்கி இருந்த, வீரப் பதங்கங்களை விழுங்கி தற்கொலை செய்து கொண்டனர். அல்ஜீரியா முழுவதும், மொத்தம் ஒரு இலட்சம் ஹார்கிஸ் ஒட்டுக் குழுவினர், மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப் பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப் படுகின்றது.

அல்ஜீரியா விடுதலைப் போராட்ட கால கட்டத்தின் போது, பிரெஞ்சுப் படையினரால் கொல்லப் பட்ட அல்ஜீரிய மக்களின் எண்ணிக்கை பத்து இலட்சத்திற்கும் அதிகமாகும். ஹார்கி அல்ஜீரியர்களே, தமது சொந்த இனத்தவரை கொன்ற சம்பவங்களும் நடந்துள்ளன. சித்திரவதைகள் போன்ற மனித உரிமை மீறல்களிலும், போர்க் குற்றங்களிலும், பிரெஞ்சுப் படையினருடன் ஹார்க்கி ஒட்டுக்குழுவினரும் பங்கெடுத்துள்ளனர். 

அன்று அல்ஜீரியாவில் நடந்த போரில், பல இடங்களில் நடந்த சம்பவங்கள், போர்க் குற்றங்கள் அல்லது இனப்படுகொலை என்று நிரூபிக்கத் தக்கன. அந்த நேரம், ஐ.நா. மன்றம் அவற்றை விசாரிக்கவில்லை. ஏனென்றால், பிரான்ஸ் ஐ.நா. பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட மேற்கத்திய வல்லரசு நாடு.

இன்றைக்கு, பிரெஞ்சு பேரினவாத அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும், தமிழ் ஒட்டுக் குழுவினர், ஹார்கி ஒட்டுக்குழுவின் வரலாற்றில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், ஒரு காலத்தில் தமிழ் மக்கள் அவர்களை துரோகிகள் என்று ஒதுக்கும் பொழுது, அல்லது பிரெஞ்சு அரசு தனது தேவை முடிந்தவுடன் கை விடும் நேரத்தில், அவர்களுக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள்.


மேலதிக தகவல்களுக்கு:

Sunday, January 18, 2015

"கருத்துச் சுதந்திரவாதிகள்" உங்களுக்கு கூறாமல் மறைத்த உண்மைகள்


இவரது பெயர் Maurice Sinet. ஐந்து வருடங்களுக்கு முன்னர், சார்லி எப்டோ பத்திரிகையில் கேலிச்சித்திரங்கள் வரைந்தவர். 2009 ம் ஆண்டு, பத்திரிகை நிர்வாகம் இவரை வேலையே விட்டு நீக்கி விட்டது. இவர் செய்த குற்றம் என்ன?

பத்திரிகையில் Sine என்ற புனைபெயரில் எழுதிய கட்டுரை, "யூதர்களுக்கு எதிரானது" என்ற குற்றச்சாட்டில் பணிநீக்கம் செய்யப் பட்டார். அன்றைய பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோசியின் மகனின் திருமணம் பற்றிய அரசியல் விமர்சனக் கட்டுரை அது.

சார்கோசியின் மகன் அப்போது தான் ஒரு யூத தொழிலதிபரின் மகளை திருமணம் முடித்திருந்தார். அவர் பணத்திற்காக யூதராகவும் மாறிவிடுவார் என்று அந்தக் கட்டுரையில் விமர்சிக்கப் பட்டிருந்தது.
French cartoonist Sine on trial on charges of anti-Semitism over Sarkozy jibe 

தற்போது கருத்துச் சுதந்திரத்திற்காக வக்காலத்து வாங்கும் போராளிகள், இது போன்ற சுதந்திர மறுப்புகளை கண்டுகொள்ளாத மர்மம் என்னவோ?

மேற்கத்திய வெகுஜன ஊடகங்கள் எவ்வாறு தவறான தகவல்களைப் பரப்பி, மக்களை மூளைச் சலைவை செய்கின்றன என்பது, சில அடிமை விசுவாசிகளின் கருத்துக்களை வாசிக்கும் பொழுது தெரிகின்றது.

Charlie Hebdo தாக்குதல் கருத்துச் சுதந்திரத்தை வெறுப்பவர்களின் பயங்கரவாதம் என்ற கருத்தியலே அபத்தமானது. அமெரிக்காவில் 9/11 தாக்குதலின் பின்னர், "அவர்கள் எமது சுதந்திரத்தை வெறுக்கிறார்கள்..." என்று புஷ் சொன்னதைப் பிரதிபலிக்கின்றது.

இதனை வெறுமனே மதம் சார்ந்த பிரச்சினையாக பார்ப்பது, "கலாச்சாரங்களின் மோதல்" என்ற காலாவதியான மேலைத்தேய கோட்பாட்டை மீளுருவாக்கம் செய்கின்றது. கலாச்சாரங்களின் மோதல் குறித்து கோட்பாட்டு விளக்கம் கொடுத்த அமெரிக்க பேராசிரியர் பூக்கியாமா கூட, தான் அன்று தப்புக் கணக்கு போட்டு விட்டதாக ஒப்புக் கொண்டார். அமெரிக்காவின் ஈராக் மீதான படையெடுப்பு தனது கண்களை திறந்துள்ளதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்செயலாக மேற்குலகில் கிறிஸ்தவ கலாச்சாரமும், மத்திய கிழக்கில் இஸ்லாமிய கலாச்சாரமும் இருப்பதால், அது அடிப்படையில் கலாச்சாரங்களின் மோதல் ஆகாது. இன்று மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பல பிரச்சினைகள், ஐரோப்பிய காலனிய கால கட்டத்தின் தொடர்ச்சியாகவே நடக்கின்றன. தங்கள் நாட்டு ஆட்சியாளர்கள், ஐரோப்பிய வல்லரசுகள் ஆட்டுவிக்கும் பொம்மைகள் என்பதை, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் பலர் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

சார்லி எப்டோ விவகாரம் தொடர்பாக எழுந்து வரும் பிரச்சினைகள் யாவும், "கிறிஸ்தவ - முஸ்லிம் பிரச்சினை" என்று தவறாக புரிந்து கொள்ளப் படுகின்றன. அந்த அபத்தமான கருத்தை பல தமிழர்களும் எதிரொலிக்கின்றனர். உண்மையில், இவற்றை மதப் பிரச்சினையாக கருதிய மதத் தலைவர்கள், இரண்டு மதங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை ஒழுங்கு படுத்தி இருந்தனர். போப்பாண்டவரும் அவர்களில் ஒருவர்.

ஆனால், மதங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் தொடங்கி சில நாட்களிலேயே, தாங்கள் பிரச்சினையை தவறாக புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டார்கள். உண்மையில், இங்குள்ள அடிப்படை பிரச்சினை மதம் அல்ல. நவ காலனித்துவம், வெள்ளையர்களின் நிறவெறி, ஐரோப்பிய இனத் துவேஷம், பொருளாதார மேலாண்மை, குடியேறிகளின் பிரச்சினை... இன்ன பிற ஆகும்.

தமிழீழம் கோரிப் போராட்டம் நடத்திய புலிகளும், அவர்களை ஆதரித்த மக்களும், இலங்கையின் இனப் பிரச்சினையானது சிங்கள - தமிழ் முரண்பாடு என்று தான் புரிந்து கொள்வார்கள். அவர்களுக்கு நவ காலனித்துவம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால், அவர்களுக்கு தெரிந்த அரசியல் மொழியான தமிழ் தேசியம் ஊடாக எதிர்ப்புக் காட்டத் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

அதே மாதிரித் தான், முன்னாள் காலனிய அடிமை நாடுகளில் வாழும் மக்கள் முஸ்லிம்கள் என்பதால், மதத்தின் ஊடாக தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றனர். ஆனால், அடிப்படைப் பிரச்சினை நவ காலனித்துவம். நைஜர் நாட்டில் நடந்த, சார்லி எப்டோ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது பிரெஞ்சு கலாச்சார நிலையம் எரித்து நாசமாக்கப் பட்டது. (French centre in Niger set ablaze in Charlie Hebdo protests http://www.france24.com/en/20150116-niger-zinder-french-cultural-centre-set-ablaze-charlie-hebdo-protest-prophet-mohammed-cartoon/)

நைஜர் நாட்டில் நிலை கொண்டுள்ள பிரெஞ்சு படையினர் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது. பல ஆப்பிரிக்க நாடுகளில், பிரெஞ்சு காலனியாதிக்கம் இன்னமும் தொடர்கின்றது. ஆனால், உள்ளூர் ஆட்சியாளர்கள், காலனியாதிக்கத்தை மறைக்கும் முகமூடியாக பயன்படுகின்றனர். (Why Charlie Hebdo attack is not about Islam http://www.aljazeera.com/indepth/opinion/2015/01/charlie-hebdo-islam-cartoon-terr-20151106726681265.html)

கருத்துச் சுதந்திர அடிப்படைவாதிகள், நிச்சயமாக இந்த உண்மைகளை உங்களுக்கு சொல்லப் போவதில்லை. பிரான்ஸ் நாட்டு பிரஜைகளில், அண்ணளவாக அரைவாசிப் பேர், "முஸ்லிம்களின் இறைதூதர் முகமதுவை கேலி செய்யும் கார்ட்டூன்கள் தவிர்க்கப் பட வேண்டியவை" என்று கருத்துக் கூறியுள்ளனர். அதாவது, அரைவாசி பிரெஞ்சு மக்கள், சீண்டிப் பார்க்கும் வக்கிரமான கேலிச் சித்திரங்கள் கருத்துச் சுதந்திரத்திற்குள் அடங்காது என்று நம்புகிறார்கள். (Caricatures de Charlie Hebdo : Plus de 4 Français sur 10 estiment qu'il faut éviter les dessins de Mahomet; http://www.huffingtonpost.fr/2015/01/18/caricatures-charlie-hebdo-francais-eviter-dessins-mahomet_n_6495204.html?ncid=fcbklnkfrhpmg00000001

மேலும், Charlie Hebdo பத்திரிகையின் ஸ்தாபகர்களில் ஒருவரான முன்னாள் ஆசிரியர், பத்திரிகை நிர்வாகம் தவறான பாதையில் சென்று கொண்டிருந்ததாக குற்றஞ் சாட்டியுள்ளார். ஒரு கேலிச்சித்திரத்தை ஒரு தடவை போட்டால் அது அந்தப் பத்திரிகையின் கருத்துச் சுதந்திரம். ஆனால், ஒரே மாதிரியான கார்ட்டூன்களை திரும்பத் திரும்ப போடுவதும், உச்ச கட்ட வக்கிர புத்தியுடன் வரைவதும், குறிப்பட்ட சிலரை வேண்டுமென்றே ஆத்திரமுற வைக்கும் நோக்குடன் நடந்துள்ளது. இதையும் அந்த முன்னாள் ஆசிரியர் கூறியிருக்கிறார்.

அநேகமாக, ஒரு குறிப்பிட்ட அரசியல் இலக்குடன், அல்லது வர்த்தக நோக்கில் செயற்பட்ட யாரோ சிலரின் சதியாலும் இந்தத் தூண்டுதல்கள் இடம்பெற்று இருக்கலாம். அதற்கு ஊடகவியலாளர்கள் பலியாகி உள்ளனர். தாக்குதலில் கொல்லப் பட்ட, Charlie Hebdo பத்திரிகை ஆசிரியர் உட்பட சில ஊடகவியலாளர்கள், போலிக் கம்யூனிசக் கட்சியான PCF அனுதாபிகள். (l'Humanité, 14 ஜனவரி 2015) தாம் கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்புக் கொடுப்பதாக அப்பாவித்தனமாக நம்பி உள்ளனர். (படுகொலைகள் பிரெஞ்சு சமுதாயத்தை உணர்வு ரீதியாக ஒன்றிணைத்தன் காரணம் புரிந்து கொள்ளத் தக்கதே.)

இந்தத் தாக்குதலை அல்கைதா நடத்தி இருக்கிறது என்று பிரெஞ்சு அரசு கூறுகின்றது. ஆனால், அல்கைதாவுக்கும் சிஐஏ க்கும் இடையிலான தொடர்புகள் ஊர் அறிந்த இரகசியம். பொலிஸ் நடவடிக்கையில் கொல்லப் பட்ட பயங்கரவாதி, தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறான். அதில், 2009 ல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து அமெரிக்காவுக்கு கிளம்பிய விமானத்தில், பாதணிக்குள் குண்டு வைத்துக் கொண்டு சென்ற நபருடன், யேமனில் ஒன்றாக தங்கியிருந்ததாக கூறியுள்ளான். அந்த நபர் சி.ஐ.ஏ. உளவாளி என்பது ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மை.

2006 ம் ஆண்டு, பிரான்ஸ் அரசாங்கத்தில் ஆளும் கட்சியாக இருந்த வலதுசாரி UMP கட்சி, மத நிந்தனை தடுப்புச் சட்டம் ஒன்றை கொண்டு வர விரும்பியது. ஆனால், கடும் எதிர்ப்புக் காரணமாக அந்த யோசனை பின்போடப் பட்டது. (l'Humanité, 15 ஜனவரி 2015) தற்போது நடந்து முடிந்துள்ள, பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல், அந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை கொடுத்துள்ளது.

மத நிந்தனை தடைச் சட்டம் அமுல்படுத்தப் பட்டால், அதனால் பலனடையப் போவது முஸ்லிம்கள் அல்ல. மாறாக, கிறிஸ்தவ - வெள்ளையின கலாச்சார மேலாதிக்கத்திற்காக பாடுபடும், தீவிர வலதுசாரி சக்திகள் தான். ஆகவே, பாரிஸ் தாக்குதலை நடத்திய சூத்திரதாரிகள், ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடித்து விழுத்தி உள்ளனர் என்பது தெளிவாகின்றது.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. "யார் அந்தப் பாவி?" - தேசியம் பேசும் உழைக்கும் வர்க்கத்திற்கு ஒரு திறந்த மடல்

Thursday, January 15, 2015

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஈழத்தில் இருந்து ஒரு கடிதம்

அன்புள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு,

இலங்கை அரசும், பிரெஞ்சு அரசும் ஒன்றா? இந்தக் கேள்வியே சிறுபிள்ளைத் தனமானது. அரசு என்பதே அடிப்படையில் ஓர் அடக்குமுறைக் கருவி தான். இலங்கையிலும், பிரான்சிலும் அரசு இயந்திரம் ஒரே மாதிரித் தான் செயற்படும். இரண்டு நாடுகளிலும், அரசுக்கு விசுவாசமாக நடக்கும் பிரிவினரால் அந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியாது.

பிரான்ஸ் போன்ற மேலைத்தேய காலனியாதிக்க நாடுகள் உருவாக்கியது தான், இலங்கை அரச நிர்வாகம். இன்றைக்கும் ஆங்கிலேயர் எழுதிய அதே யாப்பு சில மாற்றங்களுடன் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. அரசு நிர்வாகம், இராணுவம், பொருளாதாரக் கட்டமைப்புகள் யாவும் பிரிட்டனை பின்பற்றித் தான் அமைந்துள்ளன. 

1978 ம் ஆண்டு உருவான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை குறித்த சட்டத் திருத்தம், பிரான்ஸ் நாட்டை பின்பற்றித் தான் எழுதப் பட்டது. பத்தாண்டுகள் ஈழப்போருக்கு தலைமை தாங்கி நடத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பாரிஸ் சார்போன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர். பிரான்சில் இன்றைக்கும் அது ஒரு மேட்டுக்குடியினரின் பல்கலைக்கழகம் என்றே அறியப் படுகின்றது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில், ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடப்பதால் அவை ஜனநாயக நாடுகள் என்று தான் மேற்கத்திய அரசுக்கள் கூறிக் கொள்கின்றன. இடையிடையே மனித உரிமை மீறல்கள் குறித்து விமர்சனம் வைப்பதும், அந்த நாடுகளின் அரசுத் தலைவர்களை மிரட்டி தமது வழிக்கு கொண்டு வருவதற்காகத் தான். 

எது எப்படி இருப்பினும், மேற்கத்திய நாடுகள் கடைசியில் இலங்கை அரசுக்கு தமது ஆதரவை தெரிவித்து விடும். அதனை நிரூபிப்பதற்கு அதிகம் சிரமப் படத் தேவையில்லை. உங்களுக்குத் தெரிந்த புலி ஆதரவாளரிடம் விசாரித்துப் பாருங்கள். "ஈழப்போரின் இறுதியில், பிரான்ஸ் உட்பட, பத்து உலக நாடுகள் ஒன்று சேர்ந்து புலிகளை அழித்தன...." என்று அவர்களுக்கு தெரிந்த அரசியல் மொழியில் விளங்கப் படுத்துவார்கள்.

சார்லி எப்டோ தாக்குதலுக்குப் பின்னர், பிரான்சில் வாழும் இஸ்லாமிய அல்ஜீரியர்களுக்கு எதிரான இனக் கலவரம் எதுவும் நடக்கவில்லை. இதுவே இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடாக இருந்திருந்தால், இந்நேரம் அங்கே ஒரு கலவரம் இடம்பெற்றிருக்கும். ஆகையினால், பிரெஞ்சு ஐரோப்பியர்கள் "நாகரிகமைந்து விட்டனர்" என்று கூற முடியாது. உண்மையில், முஸ்லிம் எதிர்ப்பு இனக்கலவரம், உலகத்தின் முன்னிலையில் பிரான்சை தலைகுனிய வைத்திருக்கும். 

பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல், சுமார்  நூறு வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தால், நிச்சயமாக அங்கே முஸ்லிம்களுக்கு எதிரான இனக் கலவரம் ஒன்று நடந்திருக்கும். இரண்டாம் உலகப்போர் வரையில், ஐரோப்பாவில் பல நாடுகளில் யூதர்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் நடந்துள்ளன. யூதர்கள் அதனை "Pogrom" என்று அழைக்கிறார்கள்.

21 ம் நூற்றாண்டில் வாழும் பிரெஞ்சுக் காரர்கள், தாங்கள் நாகரிகமடைந்து விட்டதாக காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால், அந்த நிலைமை விரைவில் மாறலாம். பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர், பிரெஞ்சு இனவெறியர் மாரி லெ பென் தலைமையிலான FN கட்சியின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். பிரான்சில் ஒரு இனக்கலவரம் நடந்தால், அது அல்ஜீரியர்களுக்கு எதிரானதாக மட்டும் இருக்கப் போவதில்லை. பிரான்சில் வாழும் தமிழர்களும் பாதிக்கப் படுவார்கள்.

பிரான்ஸ் ஏற்கனவே அல்ஜீரிய சிறுபான்மை இனத்தவரை படுகொலை செய்த வரலாற்றைக் கொண்டுள்ளது. அல்ஜீரியாவை காலனிப் படுத்திய பிரான்ஸ், அதனை தனது நாட்டின் மாகாணமாக ஆக்கியிருந்தது. பாரிஸ் நகரில் உள்ள பிரெஞ்சு பாராளுமன்றத்திற்கு, அல்ஜீரியாவில் இருந்து பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டனர். மேலும், அல்ஜீரியாவில் பத்து இலட்சத்திற்கும் குறையாத பிரெஞ்சுக்காரர்கள் குடியேற்றப் பட்டிருந்தனர். இலங்கையின் வடக்கு, கிழக்கில் சிங்களவர்கள் குடியேற்றப் பட்டத்தை நீங்கள் இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

வடக்கு இலங்கையை சேர்ந்த ஈழத் தமிழர்கள், சிறிலங்காவின் தலைநகரமான கொழும்பில் குடியேறி வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதே மாதிரி, அல்ஜீரியர்கள் பாரிஸ் நகரில் குடியேறி இருந்தனர். 1961 ம் ஆண்டு, பாரிஸ் நகரில் வாழ்ந்த அல்ஜீரிய மக்கள், அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்தை கலைத்த பிரெஞ்சுப் போலீசார் தாக்கியதில், குறைந்தது 600 அல்ஜீரிய பொது மக்கள் கொல்லப் பட்டனர்.இனவெறிப் போலீசார் பலரை செயின் நதிக்குள் வீசிக் கொன்றார்கள். அவர்களில் பலர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

பாரிஸ் நகரில் நடந்த அல்ஜீரிய இனப் படுகொலை, 1977 ம் ஆண்டு கொழும்பு நகரில் நடந்த தமிழ் இனப் படுகொலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது. இலங்கையில் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி, 1977 ம் ஆண்டு, "தமிழீழம் வேண்டுமென்று கோரிக்கை வைத்து" வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. "உங்களுக்கு தமிழீழம் வேண்டுமா?" என்று கேட்டுத் தான், சிங்கள இனவெறியர்கள் கொழும்பில் தமிழர்களை கொன்றார்கள்.

அதே மாதிரி, அல்ஜீரியாவில் FLN கட்சி, 1961 ம் ஆண்டு, அல்ஜீரியா தனி நாடாக வேண்டுமென்று கோரிக்கை நிறைவேற்றி இருந்தது. 1961 ம் ஆண்டு, பாரிஸ் இனப்படுகொலையின் போதும், "உங்களுக்கு அல்ஜீரியா என்ற தனி நாடு வேண்டுமா?" என்று கேட்டுத் தான், பிரெஞ்சு இனவெறியர்கள் அல்ஜீரியர்களை கொன்றார்கள்.

இலங்கையிலும், பிரான்சிலும் நடந்த சம்பவங்கள் ஒன்று தான், இனப் பிரச்சினையும் ஒன்று தான். பிரெஞ்சு அரசும், இலங்கை அரசும் ஒரே மாதிரித் தான் சிறுபான்மை இனத்தின் உரிமைப் போராட்டத்தை ஒடுக்கி வந்துள்ளன. ஆயினும், ஒடுக்கப்பட்ட இனங்களான அல்ஜீரியர்களும், ஈழத் தமிழர்களும் தமக்குள் ஒன்று சேராத காரணம் என்ன? ஏன் பிரான்ஸ், சிறிலங்கா அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகிறீர்கள்?

யாழ்பாணத்தில் புலிகள் 13 சிங்களப் படையினரைக் கொன்ற பின்னர் தான், அரச அடக்குமுறைகள் அதிகரித்தன. இலங்கையில் இன முரண்பாடுகள் கூர்மையடையும் வரையில், அங்கேயும் கருத்துச் சுதந்திரம் கொடுக்கப் பட்டிருந்தது.

எழுபதுகளில் மெல்ல மெல்ல பத்திரிகை தணிக்கைகளை அமுல் படுத்தி வந்த அரசு, எண்பதுகளில் ஒரேயடியாக சட்டம் போட்டு தடை செய்தது. கொடுங்கோல் ஆட்சி வந்தது. பிரிவினை கோருவதும், அதற்கு ஆதரவாகப் பேசுவதும் குற்றமாக்கப் பட்டது. 

பிரான்சிலும் அதே கதை தான் நடக்கிறது. பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதலில் 12 பேர் கொல்லப் பட்டத்தை காரணமாகக் காட்டி, மக்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப் பட்டு வருகின்றது. உலகிலேயே முதல் நாடாக, பிரான்சில் தான் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டன.

இலங்கையில் பிரிவினை கோருவதும், ஆதரிப்பதும் சட்டம் போட்டு தடை செய்யப் பட்டதைப் போன்று, பிரான்சில் யூதர்களுக்கு, யூத மதத்திற்கு எதிராக எழுதுவதும், பேசுவதும் சட்டம் போட்டு தடை செய்யப் பட்டுள்ளது. மேலும், இலங்கையை மாதிரி, பிரான்சிலும் "பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள்" சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

எது பயங்கரவாத ஆதரவுக் கருத்து என்பதை, இரண்டு நாடுகளிலும் சட்டம் சரியாக வரையறுக்கவில்லை. இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல்கொடுப்பது பயங்கரவாதம் ஆகலாம். அதே மாதிரி, பிரான்சில் தற்போது பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது பயங்கரவாதமாக கருதப் படலாம். அது பின்னர் விரிவுபடுத்தப் பட்டு, எதிர்காலத்தில் பிரான்சில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சனைகளை பற்றிப் பேசுவதே பயங்கரவாதம் என்று கூறும் நிலை வரலாம்.

எதற்காக, பிரான்சில் வாழும் தமிழர்கள் பலர், அரச அடக்குமுறைகள் குறித்து எந்த உணர்வுமற்று இருக்கிறார்கள்? எந்த அரசும் அனைத்து சிறுபான்மை இனங்களையும் ஒரே நேரத்தில் அடக்குவதில்லை. இலங்கையில் தமிழ்ச் சிறுபான்மை இனம் அடக்கப் பட்ட நேரம், சிறிலங்கா அரசு முஸ்லிம் சிறுபான்மை இனத்துடன் இணக்கமாக நடந்து கொண்டது. முஸ்லிம்களுக்கு சலுகைகள் கொடுத்து, நன்மதிப்பை சம்பாதித்து இருந்தது.

இலங்கையில் முஸ்லிம் மக்களும், "தமிழீழம் கேட்கும் தமிழர்களை தானே அரசு அடக்கி வருகின்றது? நாங்கள் அப்படி எந்தக் குற்றமும் செய்யவில்லையே...?" என்று திருப்திப் பட்டனர். அதே தான் பிரான்சிலும் நடக்கிறது.

பிரான்சில் வாழும் இந்து- தமிழர்கள், இலங்கை முஸ்லிம்களின் நிலையில் வைக்கப் பட்டுள்ளனர். "இஸ்லாமிய கடும்போக்கு ஷரியா சட்டம் கேட்பவர்களை தானே அரசு அடக்கி வருகின்றது? நாங்கள் அப்படி எந்தக் குற்றமும் செயவில்லையே...?" என்று திருப்திப் பட்டுக் கொள்கின்றனர்.

மேலும், இந்தக் காலத்தில், இன, மத உணர்வுகளுக்கு அப்பால் மக்களிடையே வேறெந்த ஒற்றுமையும் இல்லாமல் இருப்பதும், ஒடுக்கும் அரசுக்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. இலங்கையில், குறிப்பாக கொழும்பில் ஏராளமான மாலைதீவு அகதிகள் வாழ்கிறார்கள். அவர்கள் மத்தியில், தமிழர்களுக்கு ஆதரவான எந்தக் கருத்தும் கிடையாது. ஏனென்றால், தமிழர்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பு எதுவும் கிடையாது.

மாலைதீவு அகதிகள், பொதுவாக, தமிழ் இனப்பிரச்சினையில் சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து தான் பேசுவார்கள். அதே நேரம், தமது மாலைதீவு அரசின் ஒடுக்குமுறைகளை விரிவாகப் பேசுவதுடன், அதையும் இதையும் ஒப்பிட மாட்டார்கள். "இலங்கை அரசும், மாலைதீவு அரசும் ஒன்றா?" என்று நமது தமிழ் கருத்துச் சுதந்திரக் கண்மணிகள் மாதிரிக் கேட்பார்கள்.

இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் பலர், காஷ்மீர் நிலவரம் குறித்து எத்தகைய கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களில் பெரும்பாலானோர், காஷ்மீர் பயங்கரவாதத்தை குறை கூறுவதுடன், இந்திய அரசின் ஒடுக்குமுறைகளை நியாயப் படுத்தி பேசுவார்கள். மறுபக்கத்தில், பெரும்பாலான காஷ்மீரிகள் தமிழ்ப் பயங்கரவாதத்தை குறை கூறி, சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறைகளை நியாயப் படுத்தி பேசுவார்கள். ஏனென்றால், காஷ்மீரிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான ஒற்றுமை கிடையாது.

இதே நிலைமை தான் பிரான்சிலும் நிலவுகின்றது. பிரான்சில் வாழும் தமிழர்களுக்கும், அல்ஜீரியர்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான ஒற்றுமை கிடையாது. அல்ஜீரியர்களைப் பொருத்தவரையில், இலங்கையில் உள்ளது பயங்கரவாதப் பிரச்சினை தான். தமிழர்களைப் பொறுத்தவரையில், பிரான்சில் உள்ளது பயங்கரவாதப் பிரச்சினை மட்டும் தான்.

அல்ஜீரியர்கள், தமிழர்கள், இரண்டு இனங்களும், ஊடகங்களினால் தவறாக கையாளப் படுகின்றனர். தவறான தகவல்கள் கொடுத்து மூளைச்சலைவை செய்யப் படுகின்றனர். இந்த உண்மையை உணர்ந்து கொள்ளும் அல்ஜீரியர்களும், தமிழர்களும் விழிப்படைந்து தமக்குள் ஒன்று பட்டால், அது ஒடுக்கும் அரசுக்களுக்கு நெருக்கடியாக அமைந்து விடும். ஆகவே, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை குலைப்பதற்கு, அரசு இயந்திரம் தன்னாலான முயற்சிகளை செய்து கொண்டிருக்கும்.

ஆகவே, பிரான்சில் வாழும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு இடையிலான ஒற்றுமை மட்டும் தான், பிரெஞ்சு ஏகாதிபத்தியம், அதன் கைக்கூலியான சிறிலங்கா அரசின் எதேச்சாதிகாரத்தை முறியடிக்கும். இந்த அறைகூவலை வாசித்த பிறகாவது, அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகாமல் பிரான்சில் அல்ஜீரியர் - தமிழர்களுக்கு இடையிலான உழைக்கும் வர்க்க ஒற்றுமையை கட்டியெழுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு,
ஓர் ஈழத் தமிழன்

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்: