Thursday, January 15, 2015

பிரான்ஸ் வாழ் தமிழர்களுக்கு ஈழத்தில் இருந்து ஒரு கடிதம்

அன்புள்ள பிரான்ஸ் வாழ் தமிழ் மக்களுக்கு,

இலங்கை அரசும், பிரெஞ்சு அரசும் ஒன்றா? இந்தக் கேள்வியே சிறுபிள்ளைத் தனமானது. அரசு என்பதே அடிப்படையில் ஓர் அடக்குமுறைக் கருவி தான். இலங்கையிலும், பிரான்சிலும் அரசு இயந்திரம் ஒரே மாதிரித் தான் செயற்படும். இரண்டு நாடுகளிலும், அரசுக்கு விசுவாசமாக நடக்கும் பிரிவினரால் அந்த உண்மையை உணர்ந்து கொள்ள முடியாது.

பிரான்ஸ் போன்ற மேலைத்தேய காலனியாதிக்க நாடுகள் உருவாக்கியது தான், இலங்கை அரச நிர்வாகம். இன்றைக்கும் ஆங்கிலேயர் எழுதிய அதே யாப்பு சில மாற்றங்களுடன் நடைமுறைப் படுத்தப் படுகின்றது. அரசு நிர்வாகம், இராணுவம், பொருளாதாரக் கட்டமைப்புகள் யாவும் பிரிட்டனை பின்பற்றித் தான் அமைந்துள்ளன. 

1978 ம் ஆண்டு உருவான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை குறித்த சட்டத் திருத்தம், பிரான்ஸ் நாட்டை பின்பற்றித் தான் எழுதப் பட்டது. பத்தாண்டுகள் ஈழப்போருக்கு தலைமை தாங்கி நடத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, பாரிஸ் சார்போன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றவர். பிரான்சில் இன்றைக்கும் அது ஒரு மேட்டுக்குடியினரின் பல்கலைக்கழகம் என்றே அறியப் படுகின்றது.

இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில், ஜனநாயக முறையில் தேர்தல்கள் நடப்பதால் அவை ஜனநாயக நாடுகள் என்று தான் மேற்கத்திய அரசுக்கள் கூறிக் கொள்கின்றன. இடையிடையே மனித உரிமை மீறல்கள் குறித்து விமர்சனம் வைப்பதும், அந்த நாடுகளின் அரசுத் தலைவர்களை மிரட்டி தமது வழிக்கு கொண்டு வருவதற்காகத் தான். 

எது எப்படி இருப்பினும், மேற்கத்திய நாடுகள் கடைசியில் இலங்கை அரசுக்கு தமது ஆதரவை தெரிவித்து விடும். அதனை நிரூபிப்பதற்கு அதிகம் சிரமப் படத் தேவையில்லை. உங்களுக்குத் தெரிந்த புலி ஆதரவாளரிடம் விசாரித்துப் பாருங்கள். "ஈழப்போரின் இறுதியில், பிரான்ஸ் உட்பட, பத்து உலக நாடுகள் ஒன்று சேர்ந்து புலிகளை அழித்தன...." என்று அவர்களுக்கு தெரிந்த அரசியல் மொழியில் விளங்கப் படுத்துவார்கள்.

சார்லி எப்டோ தாக்குதலுக்குப் பின்னர், பிரான்சில் வாழும் இஸ்லாமிய அல்ஜீரியர்களுக்கு எதிரான இனக் கலவரம் எதுவும் நடக்கவில்லை. இதுவே இலங்கை, இந்தியா போன்ற மூன்றாமுலக நாடாக இருந்திருந்தால், இந்நேரம் அங்கே ஒரு கலவரம் இடம்பெற்றிருக்கும். ஆகையினால், பிரெஞ்சு ஐரோப்பியர்கள் "நாகரிகமைந்து விட்டனர்" என்று கூற முடியாது. உண்மையில், முஸ்லிம் எதிர்ப்பு இனக்கலவரம், உலகத்தின் முன்னிலையில் பிரான்சை தலைகுனிய வைத்திருக்கும். 

பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதல், சுமார்  நூறு வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தால், நிச்சயமாக அங்கே முஸ்லிம்களுக்கு எதிரான இனக் கலவரம் ஒன்று நடந்திருக்கும். இரண்டாம் உலகப்போர் வரையில், ஐரோப்பாவில் பல நாடுகளில் யூதர்களுக்கு எதிரான இனக் கலவரங்கள் நடந்துள்ளன. யூதர்கள் அதனை "Pogrom" என்று அழைக்கிறார்கள்.

21 ம் நூற்றாண்டில் வாழும் பிரெஞ்சுக் காரர்கள், தாங்கள் நாகரிகமடைந்து விட்டதாக காட்ட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது. ஆனால், அந்த நிலைமை விரைவில் மாறலாம். பாரிஸ் தாக்குதலுக்குப் பின்னர், பிரெஞ்சு இனவெறியர் மாரி லெ பென் தலைமையிலான FN கட்சியின் ஆதரவாளர்கள் அதிகரித்து வருகின்றனர். பிரான்சில் ஒரு இனக்கலவரம் நடந்தால், அது அல்ஜீரியர்களுக்கு எதிரானதாக மட்டும் இருக்கப் போவதில்லை. பிரான்சில் வாழும் தமிழர்களும் பாதிக்கப் படுவார்கள்.

பிரான்ஸ் ஏற்கனவே அல்ஜீரிய சிறுபான்மை இனத்தவரை படுகொலை செய்த வரலாற்றைக் கொண்டுள்ளது. அல்ஜீரியாவை காலனிப் படுத்திய பிரான்ஸ், அதனை தனது நாட்டின் மாகாணமாக ஆக்கியிருந்தது. பாரிஸ் நகரில் உள்ள பிரெஞ்சு பாராளுமன்றத்திற்கு, அல்ஜீரியாவில் இருந்து பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டனர். மேலும், அல்ஜீரியாவில் பத்து இலட்சத்திற்கும் குறையாத பிரெஞ்சுக்காரர்கள் குடியேற்றப் பட்டிருந்தனர். இலங்கையின் வடக்கு, கிழக்கில் சிங்களவர்கள் குடியேற்றப் பட்டத்தை நீங்கள் இதனோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

வடக்கு இலங்கையை சேர்ந்த ஈழத் தமிழர்கள், சிறிலங்காவின் தலைநகரமான கொழும்பில் குடியேறி வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்ததே. அதே மாதிரி, அல்ஜீரியர்கள் பாரிஸ் நகரில் குடியேறி இருந்தனர். 1961 ம் ஆண்டு, பாரிஸ் நகரில் வாழ்ந்த அல்ஜீரிய மக்கள், அல்ஜீரியாவுக்கு சுதந்திரம் வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது ஆர்ப்பாட்டத்தை கலைத்த பிரெஞ்சுப் போலீசார் தாக்கியதில், குறைந்தது 600 அல்ஜீரிய பொது மக்கள் கொல்லப் பட்டனர்.இனவெறிப் போலீசார் பலரை செயின் நதிக்குள் வீசிக் கொன்றார்கள். அவர்களில் பலர் பெண்களும், குழந்தைகளும் ஆவர்.

பாரிஸ் நகரில் நடந்த அல்ஜீரிய இனப் படுகொலை, 1977 ம் ஆண்டு கொழும்பு நகரில் நடந்த தமிழ் இனப் படுகொலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது. இலங்கையில் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணி, 1977 ம் ஆண்டு, "தமிழீழம் வேண்டுமென்று கோரிக்கை வைத்து" வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றி இருந்தது. "உங்களுக்கு தமிழீழம் வேண்டுமா?" என்று கேட்டுத் தான், சிங்கள இனவெறியர்கள் கொழும்பில் தமிழர்களை கொன்றார்கள்.

அதே மாதிரி, அல்ஜீரியாவில் FLN கட்சி, 1961 ம் ஆண்டு, அல்ஜீரியா தனி நாடாக வேண்டுமென்று கோரிக்கை நிறைவேற்றி இருந்தது. 1961 ம் ஆண்டு, பாரிஸ் இனப்படுகொலையின் போதும், "உங்களுக்கு அல்ஜீரியா என்ற தனி நாடு வேண்டுமா?" என்று கேட்டுத் தான், பிரெஞ்சு இனவெறியர்கள் அல்ஜீரியர்களை கொன்றார்கள்.

இலங்கையிலும், பிரான்சிலும் நடந்த சம்பவங்கள் ஒன்று தான், இனப் பிரச்சினையும் ஒன்று தான். பிரெஞ்சு அரசும், இலங்கை அரசும் ஒரே மாதிரித் தான் சிறுபான்மை இனத்தின் உரிமைப் போராட்டத்தை ஒடுக்கி வந்துள்ளன. ஆயினும், ஒடுக்கப்பட்ட இனங்களான அல்ஜீரியர்களும், ஈழத் தமிழர்களும் தமக்குள் ஒன்று சேராத காரணம் என்ன? ஏன் பிரான்ஸ், சிறிலங்கா அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகிறீர்கள்?

யாழ்பாணத்தில் புலிகள் 13 சிங்களப் படையினரைக் கொன்ற பின்னர் தான், அரச அடக்குமுறைகள் அதிகரித்தன. இலங்கையில் இன முரண்பாடுகள் கூர்மையடையும் வரையில், அங்கேயும் கருத்துச் சுதந்திரம் கொடுக்கப் பட்டிருந்தது.

எழுபதுகளில் மெல்ல மெல்ல பத்திரிகை தணிக்கைகளை அமுல் படுத்தி வந்த அரசு, எண்பதுகளில் ஒரேயடியாக சட்டம் போட்டு தடை செய்தது. கொடுங்கோல் ஆட்சி வந்தது. பிரிவினை கோருவதும், அதற்கு ஆதரவாகப் பேசுவதும் குற்றமாக்கப் பட்டது. 

பிரான்சிலும் அதே கதை தான் நடக்கிறது. பாரிஸ் பத்திரிகை அலுவலக தாக்குதலில் 12 பேர் கொல்லப் பட்டத்தை காரணமாகக் காட்டி, மக்களின் கருத்துச் சுதந்திரம் பறிக்கப் பட்டு வருகின்றது. உலகிலேயே முதல் நாடாக, பிரான்சில் தான் பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் தடை செய்யப் பட்டன.

இலங்கையில் பிரிவினை கோருவதும், ஆதரிப்பதும் சட்டம் போட்டு தடை செய்யப் பட்டதைப் போன்று, பிரான்சில் யூதர்களுக்கு, யூத மதத்திற்கு எதிராக எழுதுவதும், பேசுவதும் சட்டம் போட்டு தடை செய்யப் பட்டுள்ளது. மேலும், இலங்கையை மாதிரி, பிரான்சிலும் "பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்கள்" சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்.

எது பயங்கரவாத ஆதரவுக் கருத்து என்பதை, இரண்டு நாடுகளிலும் சட்டம் சரியாக வரையறுக்கவில்லை. இலங்கையில் தமிழர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல்கொடுப்பது பயங்கரவாதம் ஆகலாம். அதே மாதிரி, பிரான்சில் தற்போது பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது பயங்கரவாதமாக கருதப் படலாம். அது பின்னர் விரிவுபடுத்தப் பட்டு, எதிர்காலத்தில் பிரான்சில் வாழும் சிறுபான்மையின மக்களின் பிரச்சனைகளை பற்றிப் பேசுவதே பயங்கரவாதம் என்று கூறும் நிலை வரலாம்.

எதற்காக, பிரான்சில் வாழும் தமிழர்கள் பலர், அரச அடக்குமுறைகள் குறித்து எந்த உணர்வுமற்று இருக்கிறார்கள்? எந்த அரசும் அனைத்து சிறுபான்மை இனங்களையும் ஒரே நேரத்தில் அடக்குவதில்லை. இலங்கையில் தமிழ்ச் சிறுபான்மை இனம் அடக்கப் பட்ட நேரம், சிறிலங்கா அரசு முஸ்லிம் சிறுபான்மை இனத்துடன் இணக்கமாக நடந்து கொண்டது. முஸ்லிம்களுக்கு சலுகைகள் கொடுத்து, நன்மதிப்பை சம்பாதித்து இருந்தது.

இலங்கையில் முஸ்லிம் மக்களும், "தமிழீழம் கேட்கும் தமிழர்களை தானே அரசு அடக்கி வருகின்றது? நாங்கள் அப்படி எந்தக் குற்றமும் செய்யவில்லையே...?" என்று திருப்திப் பட்டனர். அதே தான் பிரான்சிலும் நடக்கிறது.

பிரான்சில் வாழும் இந்து- தமிழர்கள், இலங்கை முஸ்லிம்களின் நிலையில் வைக்கப் பட்டுள்ளனர். "இஸ்லாமிய கடும்போக்கு ஷரியா சட்டம் கேட்பவர்களை தானே அரசு அடக்கி வருகின்றது? நாங்கள் அப்படி எந்தக் குற்றமும் செயவில்லையே...?" என்று திருப்திப் பட்டுக் கொள்கின்றனர்.

மேலும், இந்தக் காலத்தில், இன, மத உணர்வுகளுக்கு அப்பால் மக்களிடையே வேறெந்த ஒற்றுமையும் இல்லாமல் இருப்பதும், ஒடுக்கும் அரசுக்களுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றது. இலங்கையில், குறிப்பாக கொழும்பில் ஏராளமான மாலைதீவு அகதிகள் வாழ்கிறார்கள். அவர்கள் மத்தியில், தமிழர்களுக்கு ஆதரவான எந்தக் கருத்தும் கிடையாது. ஏனென்றால், தமிழர்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பு எதுவும் கிடையாது.

மாலைதீவு அகதிகள், பொதுவாக, தமிழ் இனப்பிரச்சினையில் சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து தான் பேசுவார்கள். அதே நேரம், தமது மாலைதீவு அரசின் ஒடுக்குமுறைகளை விரிவாகப் பேசுவதுடன், அதையும் இதையும் ஒப்பிட மாட்டார்கள். "இலங்கை அரசும், மாலைதீவு அரசும் ஒன்றா?" என்று நமது தமிழ் கருத்துச் சுதந்திரக் கண்மணிகள் மாதிரிக் கேட்பார்கள்.

இந்தியாவில் வாழும் ஈழத் தமிழர்கள் பலர், காஷ்மீர் நிலவரம் குறித்து எத்தகைய கருத்தைக் கொண்டிருக்கிறார்கள்? அவர்களில் பெரும்பாலானோர், காஷ்மீர் பயங்கரவாதத்தை குறை கூறுவதுடன், இந்திய அரசின் ஒடுக்குமுறைகளை நியாயப் படுத்தி பேசுவார்கள். மறுபக்கத்தில், பெரும்பாலான காஷ்மீரிகள் தமிழ்ப் பயங்கரவாதத்தை குறை கூறி, சிறிலங்கா அரசின் ஒடுக்குமுறைகளை நியாயப் படுத்தி பேசுவார்கள். ஏனென்றால், காஷ்மீரிகளுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான ஒற்றுமை கிடையாது.

இதே நிலைமை தான் பிரான்சிலும் நிலவுகின்றது. பிரான்சில் வாழும் தமிழர்களுக்கும், அல்ஜீரியர்களுக்கும் இடையில் உணர்வுபூர்வமான ஒற்றுமை கிடையாது. அல்ஜீரியர்களைப் பொருத்தவரையில், இலங்கையில் உள்ளது பயங்கரவாதப் பிரச்சினை தான். தமிழர்களைப் பொறுத்தவரையில், பிரான்சில் உள்ளது பயங்கரவாதப் பிரச்சினை மட்டும் தான்.

அல்ஜீரியர்கள், தமிழர்கள், இரண்டு இனங்களும், ஊடகங்களினால் தவறாக கையாளப் படுகின்றனர். தவறான தகவல்கள் கொடுத்து மூளைச்சலைவை செய்யப் படுகின்றனர். இந்த உண்மையை உணர்ந்து கொள்ளும் அல்ஜீரியர்களும், தமிழர்களும் விழிப்படைந்து தமக்குள் ஒன்று பட்டால், அது ஒடுக்கும் அரசுக்களுக்கு நெருக்கடியாக அமைந்து விடும். ஆகவே, இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை குலைப்பதற்கு, அரசு இயந்திரம் தன்னாலான முயற்சிகளை செய்து கொண்டிருக்கும்.

ஆகவே, பிரான்சில் வாழும் உழைக்கும் வர்க்க மக்களுக்கு இடையிலான ஒற்றுமை மட்டும் தான், பிரெஞ்சு ஏகாதிபத்தியம், அதன் கைக்கூலியான சிறிலங்கா அரசின் எதேச்சாதிகாரத்தை முறியடிக்கும். இந்த அறைகூவலை வாசித்த பிறகாவது, அரசுக்களின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகாமல் பிரான்சில் அல்ஜீரியர் - தமிழர்களுக்கு இடையிலான உழைக்கும் வர்க்க ஒற்றுமையை கட்டியெழுப்புவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

இப்படிக்கு,
ஓர் ஈழத் தமிழன்

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

No comments: