Tuesday, July 22, 2008

சைப்பிரசில் ஓர் ஈழம்

ஒரு காலத்தில் இனப்பிரச்சினை முற்றி, ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்த போரின் பின்னர், இரண்டு தேசங்களான சைப்பிரஸ், இன்று மீண்டும் சேரத் துடிக்கின்றது. இரு வேறு மொழிகள்(கிரேக்கம்,துருக்கி), மதங்கள்(கிறிஸ்தவம்,இஸ்லாம்), ஆகியன ஒரு சிறிய தீவின் மக்களை எப்படி பிரித்ததன? தற்போது அவர்களை சேர்க்கும் காரணம் எது?  
 
ஐரோப்பாக் கண்டத்தையும், ஆப்பிரிக்கா கண்டத்தையும் பிரிக்கும் மத்தியதரைகடலில் உள்ள குட்டித்தீவு சைப்பிரஸ். அதன் கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக அன்னிய படையெடுப்புகளுக்கு அடிக்கடி ஆளானது. எகிப்து, சிரியா, பெர்சியா ஆகிய பண்டைய சாம்ராஜ்யங்கள் அதற்கு உரிமை கோரியுள்ளன. இருப்பினும் இன்றைய கிரீஸ் மட்டுமல்ல, துருக்கி, சைப்பிரஸ் என்பனவும் ஒரு காலத்தில் கிரேக்க இனங்களால் நிறைந்திருந்தன. 
 
மத்திய ஆசியாவில் இருந்து வந்த துருக்கி நாடோடிக் குழுக்களின் படையெடுப்புகள், அந்த பிரதேச மொழியியல் வரைபடத்தை அடியோடு மாற்றியது. துருக்கிய பிரதேசத்தில் வாழ்ந்த (கிரேக்க) மக்கள் மெல்ல, மெல்ல துருக்கி மொழியை தமது தாய்மொழியாக்கிக் கொண்டனர். ஒரு காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகரான பாக்தாத் நகரையே முற்றாக அழித்த துருக்கிய நாடோடிகள், பின்னர் அங்கு வாழ்ந்த மக்களின் உயர்ந்த நாகரீகம் கண்டு வியந்து, தாமும் முஸ்லீம்களாக மாறினர். இதன் பின்னர் தான் துருக்கிய சுல்தான்கள் மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினர். அவ்வாறு சென்றவிடமெல்லாம் வெற்றி கண்ட ஒஸ்மான் அலியின், ஓட்டோமான் அரச பரம்பரையினர், இன்றைய கிரீஸ், சைப்பிரஸ் ஆகிய நாடுகளையும் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்தனர். 
 
சைப்பிரஸ் துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்த காலத்தில்(250 வருடங்கள்) , துருக்கி பெருநிலப்பரப்பில் இருந்து, துருக்கி மொழி பேசும் மக்கள் சென்று குடியேறியதை மறுப்பதற்கில்லை. அதே நேரம் கணிசமான கிரேக்க மொழி பேசும் மக்களும், அரசாங்கத்திடம் சலுகைகள் பெறுவதற்காக, அல்லது தமது குடும்ப நலன் கருதி, அரச மதமான இஸ்லாத்திற்கு மாறி, அரச கரும மொழியான துருக்கியை தமது தாய் மொழியாக ஏற்றுக்கொண்டு, துருக்கியராகவே மாறியிருக்க வாய்ப்புண்டு. அல்லது துருக்கியராகியிருக்கலாம். 
 
இந்த சரித்திர உண்மையை இன்றைய கிரேக்கசைப்பிரஸ் வலதுசாரிகள் நம்ப மறுப்பார்கள். ஆனால் ஒரு சில கல்விமான்கள் சொல்வதைப்போல, மரபணு சோதனை செய்து பார்த்தால், சிப்ரியோட்(சைப்பிரஸ் மக்களை பிரிட்டிஷ் நிர்வாகம் "கிரேக்க சிப்ரியோட்", "துருக்கி சிப்ரியோட்" என பெயரிட்டழைத்தது.) என்று அழைக்கப்படும், கிரேக்கர்களுக்கும், துருக்கியருக்குமிடையில் ஒற்றுமை இருப்பதை நிரூபிக்கலாம். வெறும் மொழி அடிப்படையில் மட்டுமே, சைப்பிரஸ்- துருக்கியர் தம்மை துருக்கி- துருக்கியருடனும், அதே போல சைப்பிரஸ்- கிரேக்கர்கள் தம்மை கிரீஸ்- கிரேக்கர்களுடனும் இனம்காண்கின்றனர். இத்தகைய இனவாத சிந்தனை இன்றுவரை சைப்பிரசை பிரிக்கும் முக்கிய காரணியாகும்.  
 
19 ம் நூற்றாண்டில் உலகிலேயே சிறந்த கடற்படையை வைத்திருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம், மத்திய தரைக் கடலிலும் ஆதிக்கம் செலுத்த வந்தது. ஸ்பெயினின் தென் முனையில் உள்ள ஜிப்ரால்டர், இத்தாலிக்கு கீழே உள்ள மால்ட்டா, ஆகியனவற்றை கைப்பற்றி தனது காலனியாக்கியத்துடன் நில்லாது, சைப்பிரசை அபகரிக்கும் நோக்கில் ஓட்டோமான் அரசுடன் பேரம் பேசியது. அந்தக்காலத்தில் நலிவடைந்து "ஐரோப்பாவின் நோயாளி" என்றழைக்கப்பட்ட ஓட்டோமான் சாம்ராஜ்யம், சைப்பிரசை பிரிட்டனுக்கு விற்றுவிட்டது. 
 
1878 ல் நிர்வாக பொறுப்பை மட்டுமே ஏற்பதாக கூறிய பிரித்தானியா, முதலாம் உலகப்போரில் துருக்கி தோல்வி அடைந்த தருணத்தை பயன்படுத்தி, சைப்பிரஸ் தனது காலனி என்று அறிவித்தது. இருந்தாலும் துருக்கியர்களை தனது நண்பர்களாக பார்த்த பிரிட்டன், சைப்பிரசிலும் தனது காலனிய நிர்வாகத்தில் துருக்கி மொழி பேசுவோருக்கு பதவிகளை வழங்கியது. இதனால் அனைத்து கீழ்மட்ட நிர்வாகிகளும், அரச எழுதுவினைஞர்களும், மட்டுமல்ல காவல்துறையை சேர்ந்தோரும் துருக்கியராகவே இருந்தனர். மொத்த சனத்தொகையில் 18 வீதமேயான, துருக்கியருக்கு ஆங்கிலேயர் வழங்கிய சலுகைகள், அதே இனங்களை பிரித்தாளும் சூழ்ச்சி தான்.

நவீன கால வரலாற்றில் கிறிஸ்தவ மதம் அரசியலில் ஈடுபடவில்லை என்று, மேற்கு-ஐரோப்பிய உதாரணத்தை மட்டுமே எல்லோரும் கவனிக்கின்றனர். கிரீசிலும், சைப்பிரசிலும் அரசியலே கிறிஸ்தவ மடாலயங்களில் இருந்து தான் பிறந்தது. தனித்துவமான கிரேக்க கிறிஸ்தவ நிறுவனம், சைப்பிரசிற்கு என சுயாதீனமான தலைமை மதகுருவை கொண்டிருந்தது. அவ்வப்போது நடந்த ஓட்டோமான் அரசுக்கெதிரான, அல்லது இஸ்லாமிய ஆதிக்கத்தை எதிர்க்கும் கிளர்ச்சிகளுக்கு மதகுருக்களே தலைமை தாங்கினர். 
 
சைப்பிரஸ் பிரிட்டிஷ் காலனியாகிய போது, கிறிஸ்தவ சபைகள் அதை வரவேற்கவே செய்தன. ஆயினும் கிரீசுடன் ஒரு பகுதியாக இணையும் அபிலாசை, பிரிட்டிஷ் நிர்வாகத்துடன் முரண்பாடுகளை தோற்றுவித்தது. முதலாம் உலகயுத்த முடிவில், துருக்கியிடம் இருந்து கிரீஸ் பரிபூரண சுதந்திரம் பெற்றிருந்தது. பல தீவுகள் புதிய கிரீஸ் தேசிய அரசின் வசமான போது, சைப்பிரசில் உள்ள கிரேக்க மொழி பேசும் மக்கள் கிரீசுடன் இணைய விருப்பம் தெரிவித்ததில் வியப்பில்லை. ஆனால் பிரிட்டன் அந்த விருப்பத்திற்கு தடையாக இருந்தது. இதனால் பிரிட்டிஷாருக்கு எதிரான கலகங்கள் வெடித்த போது, இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டது. கிறிஸ்தவ மதகுருக்கள் நாடுகடத்தப்பட்டனர்.

இருப்பினும் கிரீஸ் தான் தமது தாய் நாடு என்று கருதும் கிரேக்க-சிப்ரியோட்கள் "எநோசிஸ்" என்றழைக்கப்படும் இணைப்பிற்கான கொள்கையை கைவிடவில்லை. "எயோகஸ்"(EOKAS) என்ற கிரேக்க தேசியவாத இயக்கம் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டது. சந்தேகத்திற்கிடமில்லாமல் துருக்கி-சிப்ரியோத்கள் கிரீசுடன் இணைவதை எதிர்த்தனர். ஓட்டோமான் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஒரு காலத்தில் பிரிட்டன் வெளியேறும் பட்சத்தில், சைப்பிரஸ் துருக்கிக்கு திருப்பி வழங்கப்பட வேண்டும் என்று எழுதியிருப்பதாக வாதிட்டனர். சைப்பிரஸ் தனியான சுதந்திர நாடாக வர வேண்டும் என்று எதிர்பார்த்த பிரித்தானியா, துருக்கியர் பக்கம் சாய்ந்தது. எயோகஸ் போராட்டத்தை ஒடுக்கும் நோக்கோடு, துருக்கி துணை இராணுவக்குழுவை உருவாக்கியது.

ஆரம்பத்தில் எயோகஸ் ஆங்கிலேய அதிகாரிகளையும், கிரேக்க பொலிஸாரையும் குறி வைத்து தாக்கிக் கொண்டிருந்தது. இதனால் கிரேக்கர்கள் அரச தொழில்களை கைவிட்டு ஓட, துருக்கி துணைப்படை தாக்குதல் இலக்கானது. இதனால் ஏற்பட்ட இரு இனங்களுக்கிடையிலான பதற்றம் ஒருபக்கம், கிரேக்க பேரினவாத கனவு மறுப்பக்கம், எல்லாம் சேர்ந்து துருக்கியரை பிரிவினை நோக்கி தள்ளியது. முரண்பாடுகள் கூர்மையடையும் வேளை, மிதவாத கிரேக்கர்கள் 1960 ல் சைப்பிரசை தனியான குடியரசாக்க ஒப்புக்கொண்டனர். மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட கிறிஸ்தவ தலைமை மதகுரு மகாரியோஸ் பிரதமராக வந்தார்.


சுதந்திரம் வழங்கப்பட்ட போதும், பிரிட்டன் தனது இரண்டு படைத்தளங்களை தொடர்ந்து வைத்திருக்க அனுமதி வாங்கியது. இன்றும் கூட பிரிட்டனுக்கு "சொந்தமான" அந்த நிலங்களில், பிரிட்டிஷ் இராணுவம் முகாமிட்டுள்ளது. சுதந்திரத்திற்கு பின்னரான சைப்பிரசில் இனப்பிரச்சினை பற்றி கிரேக்க-துருக்கி பிரதிநிதிகளுக்கிடையில் பலதடவைகள் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. 
 
தற்போது ஆட்சியதிகாரத்தை தம் கையில் வைத்துக்கொண்ட கிரேக்க சிப்ரியோட்கள், 78 % பெரும்பான்மையை கொண்டிருந்ததால், சிறுபான்மை துருக்கி சிப்ரியோட்கள் வைத்த அதிகாரப்பரவலாக்கல் கோரிக்கைகளை உதாசீனப்படுத்தினர். துருக்கியர் தமக்கென தனியான தன்னாட்சிப்பிரதேசத்தை கோரினர். கிரேக்க அரசியல் தலைவர்களோ அதைப்பற்றி நினைத்துப்பார்க்கவும் விரும்பவில்லை. தொடர்ந்து பலவருடங்கள் இப்படியே, பேச்சுவார்த்தைகள், சில அதிகார அலகுகளுக்கான இணக்கப்பாடுகள், நடைமுறைக்கு வராத ஒப்பந்தங்கள், என்று காலம் கழிந்ததே தவிர இனப்பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

1974 ல் அதற்கொரு முடிவு வந்தது. கிரேக்க-சிப்ரியோட் இனவாத இராணுவ அதிகாரிகள் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியதை காரணமாக காட்டி, துருக்கி சைப்ரஸ் மீது படையெடுத்தது. நடந்த போரில், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். இரண்டு பக்கமும் இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டன. கிரேக்க சிப்ரியோட்கள் வடக்கிலிருந்தும் (துருக்கி பெரும்பான்மை மாகாணங்கள்), துருக்கி சிப்ரியோட்கள் தெற்கிலிருந்தும் (கிரேக்க பெரும்பான்மை மாகாணங்கள்) விரட்டப்பட்டனர். விரைவில் போர்நிறுத்தம் ஏற்பட்டு நாடு இரண்டாகப்பிரிக்கப்பட்டது. ஐ.நா. தலையீட்டால் "பச்சைக்கோடு எல்லை" வகுக்கப்பட்டு, எல்லைகளில் கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டன. 
 
தீவின் மத்தியில் அமைந்திருக்கும் தலைநகரம் நிக்கோசியா கூட இரண்டாகப்பிரிக்கப்படது. வடக்கு சைப்பிரஸ் துருக்கியின் இராணுவ மேலாதிக்கத்தின் கீழ் வந்த போதும், இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நீடித்தன. சைப்பிரஸ் ஒரு சமஷ்டி குடியரசு ஆகும் வரை தான் வெளியேறப் போவதில்லை என்று துருக்கி அடம்பிடித்தது. 
 
அதேநேரம் துருக்கி நாட்டிலிருந்து இலட்சக்கணக்கான துருக்கி இனத்தவரை வடக்கு சைப்பிரசில் கொண்டு வந்து குடியேற்றப்பட்டனர். இது சைப்பிரசின் சனத்தொகையில், இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் நோக்கிலேயே நடைபெறுகின்றது என்பதில் சந்தேகமில்லை. தற்போது நடக்கும் பேச்சுவார்த்தைகளில் கூட, பிரச்சினை தீர்ந்தால் குறைந்தது 50000 குடியேறிகளை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக, கிரேக்க-சிப்ரியோட் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1983 ல் ஒருதலைப்பட்சமாக "வடக்கு சைப்பிரஸ் குடியரசு" பிரகடனம் செய்யப்பட்டாலும், அந்த புதிய தேசத்தை துருக்கியை தவிர, உலகில் வேறு எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. ஐரோப்பிய யூனியன் ஒன்றிணைந்த சைப்பிரசை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றது. கிரேக்க-சைப்பிரஸ் பகுதி ஐரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடாகிய பிறகு, துருக்கி-சைப்பிரஸ் மக்களுக்கு துருக்கிய இராணுவம் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதாரத்தடை அந்தப்பகுதியை வெகுவாகப் பாதித்துள்ளது. 
 
இதனால் ஒப்பீட்டளவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதால் விரக்தியுற்ற இளம்தலைமுறை, மீண்டும் சைப்பிரஸ் ஒரே நாடாக வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆயினும் இரண்டு பக்கமும் இருந்த வலதுசாரி கடும்போக்காளர்கலால் அண்மைக்காலம் வரை ஒற்றுமைக்கான முயற்சி எதுவும் கைகூடி வரவில்லை. கிரேக்க பகுதியில் கடந்த வருடம் வெற்றி பெற்ற கம்யூனிஸ்ட் கட்சி ஜனாதிபதி பதவிக்கு வந்த பிறகு தான் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த மே தினத்தன்று, நீண்ட காலத்திற்கு பிறகு, கிரேக்க-துருக்கி தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொண்டாடியுள்ளனர். இன்றைய நிலைமை இது.

துருக்கி-சிப்ரியோட் அரசியல்தலைவர்கள் சுயநிர்ணய உரிமை, அல்லது அதிக அதிகாரம் கூடிய சமஷ்டி ஆட்சிக்கு குறையாத தீர்வை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். துருக்கி அரசாங்கம், வேண்டுமென்றே பொருளாதார தடை போட்டு, தம்மோடு சேர்க்கப் பார்ப்பதாக கிரேக்க-சிப்ரியோட் பக்கம் குற்றம்சாட்டுகின்றது. அதே நேரம் துருக்கி எதிரிநாடாக இருப்பதால் (கிரேக்க)சைப்பிரஸ் சில பொருளாதார (கப்பல், விமான போக்குவரத்து) பாதிப்புகளுக்குள்ளாகியுள்ளது கிரேக்க-சிப்ரியோட் அரசியல்தலைவர்கள் சமஷ்டிக்கு மறுத்து, ஒற்றையாட்சியே நீடிக்க வேண்டும் எனக்கூறுகின்றனர். அதே நேரம் பெருமளவு துருக்கி சிப்ரியோட் மக்கள் பொருளாதார நலன் கருதி இணைப்பிற்கு ஆதரவாகவும், கிரேக்க-சிப்ரியோட் மக்கள் பேரினவாத எண்ணத்தால், சமஷ்டிக்கு எதிராகவும் உள்ளனர். துருக்கி தான் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு சைப்பிரஸ் பிரச்சினையை துருப்பு சீட்டாக பயன்படுத்துகின்றது.

ஐரோப்பிய யூனியனோ, ஐரோப்பா என்ற எதிர்கால ஏகாதிபத்தியக்கனவுகளுடன் இந்தப்பிரச்சினையை பார்க்கின்றது. ஐரோப்பிய யூனியனின் நெருக்குவாரங்களால், சைப்பிரஸ் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வரலாம். எதிர்பாராதவிதமாக இயற்கை ஒன்றிணைவுக்கு துணை செய்கின்றது. உல்லாசப்பிரயான, ரியல் எஸ்டேட் தொழிற்துறைகள், அதிக வருமானத்தை ஈட்டித்தரும் அதேநேரம், பாவனையாளர் அதிகரித்து, வரட்சியும் சேர்ந்து கொள்ள, தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதனால் கிரீசில் இருந்து கப்பல்களில் தண்ணீர் இறக்குமதி செய்யவேண்டிய நிலைமை. இதற்கு அதிக செலவாகின்றது. அதேநேரம் 83 கி.மி. தூரத்தில் இருக்கும் துருக்கியில் இருந்து, குழாய் மூலம் தண்ணீர் வாங்குவது செலவு குறைந்த வழி. ஏற்கனவே துருக்கி, குழாய் மூலம் இஸ்ரேலுக்கு தண்ணீர் விற்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. 
 
சைப்பிரஸ் துருக்கியிடம் போக தடுப்பது அரசியல் மட்டும் தான். பொதுநலன் கருதி, பழைய பகையை மறந்து செய்யற்படும் காலம் நெருங்கி வருகின்றது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, அரசியல் அல்லது இன முரண்பாடுகளால், பிரிந்துள்ள இரண்டு சைப்பிரஸ்களும், பொருளாதார காரணங்களால் ஒன்று சேர்கின்றன. ஒரு காலத்தில், பிரிட்டிஷ் காலனியாதிக்கநிர்வாகம், தனக்கெதிரான விடுதலைபோரட்டத்தை, இனங்களுக்கு இடையேயான போராக மாற்றிவிட்டது. இனவாதிகள் அதனை தமது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தினர். இறுதியில் பொருளாதார நலன்கள் எல்லாவற்றையும் மேவி நிற்பது வெள்ளிடைமலை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
(படம் 2 : நிகோசியா ஐ.நா. எல்லைக்கோடு )

 

 

 

 

 

(உயிர்நிழல் Januari-March/April -June 2008 ல் பிரசுரிக்கப்பட்டது)

_____________________________________________________________________________________ ஐரோப்பிய தீவின் நவீன அடிமைகள் சைப்பிரசில் இலங்கைப் பெண்களின் அவலம் _____________________________________________________________________________________

Thursday, June 19, 2008

"இனம்" காணப்பட்ட தேசியம்


"இலங்கைத்தமிழர்" என்ற ஒற்றை அடையாளப்படுத்தலுடன், எமது அறியாப்பருவத்திலிருந்தே தேசியபாடம் ஆரம்பிக்கிறது. இலங்கையில் சர்வசாதாரணமாகவே இனம் என்பதை குறிப்பிட, ஆங்கிலத்தில் உள்ள "Race" என்ற சொல்லை பாவிப்பது குறித்து படித்தவர்களிடம் கூட தெளிவின்மை காணப்படுகின்றது. "Sinhala race", "Tamil race" என்று கூறுவது சரியானதா?

"Race" என்ற சொல்லை உருவாகிய ஐரோப்பிய அறிஞர்கள் குறிப்பாக "வெள்ளை-ஐரோப்பிய", "கருப்பு-ஆப்பிரிக்க", "மஞ்சள்-சீன" வகை மனிதப்பிரிவுகளை குறிக்கவே பயன்படுத்துகின்றனர். இருப்பினும் ஆங்கிலேயர்கள் இலங்கையில் ஆங்கில மொழியை அறிமுகப்படுத்தியதுடன் நில்லாது, கூடவே "Racism" என்ற ஒன்றையும் கற்பித்து விட்டு சென்றுள்ளனர். சிங்களவர்கள் ஆரியரின் வழித்தோன்றல்கள், தமிழர் திராவிடரின் வழிதோன்றல்கள் என்பது கூட சில ஆங்கிலேய அறிஞர்களின் கண்டுபிடிப்பு தான். அதற்கு முன்பு தாம் சார்ந்த மன்னனுடனும், அல்லது மதத்துடனும் அடையாளம் காணப் பழகிய மக்கள் மத்தியில் ஆரிய, திராவிட கருத்தியல்கள் தூவப்பட்டதும் அந்தக்காலகட்டத்தில் தான்.

இன்று இலங்கையில், இந்தியாவில் உள்ள அனைத்து இன மக்களிடமும் மரபணு(DNA) சோதனை செய்யப்பட்டால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம். மரபணு அடிப்படையில் இலங்கைத்தமிழருக்கும், சிங்களவருக்கும் இடையில் அதிக ஒற்றுமை இருக்கும். அதேநேரம் இலங்கைத்தமிழருக்கும், இந்தியத்தமிழருக்கும் இடையில் வேற்றுமையும் இருக்கும். அதே போல கணிசமான சிங்களவர்கள், இந்திய தமிழருடன் ஒத்த மரபணுக்களை கொண்டிருப்பர். உலகின் பலபாகங்களிலும் இனங்களின் கலப்பு நடந்ததும், பின்னர் மொழியடிப்படையில் பிரிந்ததற்கும் நிறைய உதாரணங்கள் உள்ளன. ஏற்கனவே இனப்பிரச்சினை கூர்மையடைந்துள்ள அயர்லாந்தில் மரபணு சோதனை செய்த விஞ்ஞானிகள் இதுபோன்ற முடிவுகளுக்கு வந்தனர்.

மொழி அடிப்படையிலான தேசியம் கூட ஒரு ஐரோப்பிய கண்டுபிடிப்பு தான். நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இராசதானிக்குள் பல்வேறு மொழிகள் பேசும் மக்களை ஒன்றிணைக்க மதம் உதவியது போல; மன்னனின், மதத்தின் ஏகபோக அதிகாரத்திற்கெதிராக கிளர்ந்தெழுந்த மத்தியதர வர்க்கம், புதிதாக "பிரசைகள்" என்று அழைக்கப்பட்ட மக்களை ஒன்றிணைக்க மொழியை பயன்படுத்தியது. அது பின்னர் ஏகாதிபத்திய உருவாக்கத்திற்கும் தனது பங்களிப்பை செய்தது. இலங்கையில் ஏகாதிபத்திய மொழியில் கல்விகற்ற உள்ளூர் மத்தியதர வர்க்கம் பின்னர் உள்ளூர் மொழிகளை தமது நன்மைகளுக்காக வளர்க்க வேண்டிய தேவை உருவாகியது. தன்னை போலவே சிந்திக்க வைப்பதற்காக கல்வியூட்டும் ஏகாதிபத்திய நிர்வாக முறை பண்டைய எகிப்திலும் நிலவியது. ஆங்கிலேயரும் அதையே செய்தனர். எல்லாவற்றிலும் அனுகூலங்களும், பிரதிகூலங்களும் உள்ளது போலவே, இந்த கல்விமுறையும் அமைந்தது. ஒருபக்கம் ஏகாதியபத்திய நலன்களை பாதுகாக்கும் அதேநேரம், பூர்வீக மொழிகள், கலாச்சாரம் என்பன மறுமலர்ச்சி காண்கின்றன. எகிப்தில் தோன்றிய அரபு-இஸ்லாமிய மறுமலர்ச்சி, இந்தியாவில் இந்து மறுமலர்ச்சி, இலங்கையில் சிங்கள-பௌத்த மறுமலர்ச்சி என்பன பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழே தான் தோன்றின.

எல்லாவற்றையும் கற்றுகொடுத்த ஐரோப்பியர்கள், தேசியம் என்ற சொல்லை தமது தாயகங்களை குறிக்கவே நீண்ட காலமாக பயன்படுத்தினர். பிற்காலத்தில் காலனிய காலகட்டத்தில் பிரிக்கப்பட்ட நிர்வாக அலகுகள் சுதந்திர நாடுகளாக மாறியபோது, அவற்றிற்கும் தேசியம் பொருத்தப்பட்டது. அன்றிருந்த ஐரோப்பிய மையவாத கண்ணோட்டம், ஆப்பிரிக்க, ஆசியாவில் இருந்த பல்வேறுபட்ட மக்கட்குழுக்களை "இனங்கள்" என்ற வரையறைக்குள் பார்த்தது. அதனால் தான் மேற்கத்தைய ஊடகங்கள், அரசாங்கங்கள் இன்றும் இலங்கையில் நடப்பதை "இனப்பிரச்சினை" என்று குறிப்பிடும் அதே சமயம், அயர்லாந்தில், யூகோஸ்லேவியாவில் நடந்ததை "மதப்பிரச்சினை" என்றனர். ருவண்டாவில் "இனப்"படுகொலைகளில் இறங்கிய ஒரே மொழி பேசும், ஒரே மதத்தை சேர்ந்த ஹூட்டு, துட்சி பிரிவுகள் எந்த அடிப்படையில் இனங்கள் என்று அழைக்கப்படுகின்றன? ஒரே மாதிரி(கருப்பினத்தை சேர்ந்த) தோற்றமளிக்கும், சூடான் அரபு மொழி பேசுவோருக்கும், டார்பூர் பிராந்திய மொழி பேசும் மக்களுக்கும் இடையில் நடக்கும் யுத்தம், எதற்கு இனவாத பிரச்சினையாக பார்க்கப்படுகின்றது? ஒரே மொழியை பேசுபவர்கள் ஒரே இனத்தை சேர்ந்தவர்களா? அப்படியானால் "செர்போ-குரவசிய" மொழி பேசும் செர்பியரும், குரவசியர்களும் எப்படி வேறு இனங்களாகும்?

பல கேள்விகள் இவ்வாறு கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும். விடை தான் கிடைக்காது. மிகவும் பொருந்தக்கூடிய பதில் ஒன்று மட்டுமே உள்ளது. 19 ம் நூற்றாண்டில் தோன்றிய புதிய அரசியல் தத்துவமான "தேசியம்" என்ற சொற்பதம் இன்றைய பிரச்சினைகள் பலவற்றிற்கு காரணமாக உள்ளது. குறிப்பிட்ட பிரதேசத்தில் காலங்காலமாக வாழ்ந்து வரும், தமக்குள் இலகுவாக தொடர்பு ஏற்படுத்தக் கூடியதாக உள்ள மொழி பேசும் மக்கள் குழுக்கள் தாம் ஒரு தேசியமாக பரிணாம வளர்ச்சி அடைவதை விரும்புகின்றனர். ஒரு சில வேளைகளில் அது மதம் சார்ந்ததாக உள்ளது. உதாரணத்திற்கு யூகோஸ்லேவியாவில் (கத்தோலிக்கரான) குறோவசியர்கள், (கிரேக்க-கிறிஸ்தவ) செர்பியரிடம் இருந்து தம்மை வேறுபடுத்தி பார்த்தனர். வேறு சில நேரம் அது பிரதேசம் சார்ந்ததாக உள்ளது. உதாரணத்திற்கு அரபு மொழி பேசும், அதேநேரம் மதத்தால் இஸ்லாமியரும், கிறிஸ்தவர்களுமான பாலஸ்தீனியர்கள், தமக்கென "பாலஸ்தீன தேசியம்" ஒன்றை உருவாக்கினர். அதற்கு மாறாக இஸ்ரேலியர்கள் யூத மதத்தால் மட்டுமே ஒற்றுமையை கொண்டுள்ளனர். அவர்களுக்கிடையில் இருந்த பல்வேறு மொழி பேசுவோர், மறைந்த ஹீப்ரு மொழியை புதிதாக கற்றுக்கொண்டு புதிய தேசியம் படைத்தனர். யூதர்களிடையே காணப்படும் இன/நிற வேறுபாடுகள், அந்த தேசியம் வலிந்து உருவாக்கப்பட்டது என்ற கருத்துக்கு வலுச்சேர்க்கின்றது.

இனம் தொடர்பான சிக்கல்கள் இத்துடன் முடியவில்லை. அவை வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு விதமாக இனங்காணப்படுகின்றன. ஒருபக்கம் தமது "வேர்களை தேடும்" இனங்கள் தேசியங்களை உருவாக்கி நிலைநிறுத்த பட்டுபட்டுக் கொண்டிருக்கும் காலத்தில்; மறுபக்கம் இனப்பிரச்சினையின் வேர்களை தேடும் ஆய்வுகளும் தொடரட்டும்.

_____________________________________________________

Friday, June 06, 2008

ஐரோப்பிய கலாச்சாரப் புரட்சி


கத்தோலிக்க பல்கலைக்கழகம், "கார்ல் மார்க்ஸ் பல்கலைக்கழகம்" என்று மறுபெயர் சூட்டப்பட்டது. மார்க்ஸ், லெனின், மாவோ ஆகியோரது படங்கள் மேற்கு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களை அலங்கரித்தன. அவை நடந்து நாற்பது ஆண்டுகள் ஆகி விட்டன. 1968 பிரெஞ்சு மாணவர் எழுச்சி தந்த விளைவுகள் பற்றி திரும்பி பார்க்கும் வேளை, அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டே, வரலாற்றை பார்க்க மறுக்கும் பலர் எம்மிடையே உள்ளதையும் கவனிக்க வேண்டும். இன்று "ஐரோப்பிய கலாச்சாரம்" என்றும், "ஐரோப்பிய ஜனநாயகம்" என்றும் நாம் காணும் பல மேற்கு ஐரோப்பிய மாணவர் போராட்டங்களின் பலன்கள் என்பதை பலர் அறிவதில்லை. தற்போதும் சில திரைப்பட தயாரிப்பாளர்களும், இடதுசாரி எழுத்தாளர்களும் 1968 புரட்சியை பற்றி, மக்களுக்கு தவறாக காட்ட விளைகின்றனர். அன்றைய இளைஞர்கள் கட்டற்ற பாலியல் உறவு வேண்டினர் என்று கொச்சைப்படுத்தும் "ட்ரீமர்ஸ்" படம், மக்களுக்கு தவறான வரலாற்றை போதிக்கின்றது. "கனவு காண்பவர்கள்" என்ற தலைப்பே, புரட்சி என்பது வெறும் கனவு மட்டுமே என்று எடுத்தியம்புகின்றது.

உண்மையில் 1968 மே மாதம் பாரிஸ் பல்கலைக்கழகங்களில் இடம் பெற்ற மாணவர் புரட்சி, சூனியத்தில் இருந்து தோன்றவில்லை. அதற்கு முன்னரே ஜேர்மனிய மாணவர்களும், அமெரிக்க மாணவர்களும் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். "ஹிட்லரின் பிள்ளைகள் நாம், நாசிச கடந்த காலத்துடன் கணக்கு தீர்க்க வந்திருக்கிறோம்." என்ற முழக்கத்துடன் பெர்லின் மாணவர் போராட்டம், மேற்கு ஜெர்மனியில் பதவிகளில் இருந்த முன்னாள் நாசிச அனுதாபிகளை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை மட்டுமே ஆரம்பத்தில் முன்வைத்தது. பின்னர் "செம்படை பிரிவு"(RAF) என்ற ஆயுதகலச்சாரத்தை நம்பும் தீவிரவாத குழுவாகியது வேறு கதை. அதே போல தசாப்த காலம் நீடித்த வியட்நாம் போரை நிறுத்திய அமெரிக்க மாணவர் போராட்டம், பின்னர் ஹிப்பி கலாச்சாரமாக சீரழிந்தது தனிக்கதை.
பிரான்ஸ் மட்டுமே புரட்சியின் விளிம்பிற்கு சென்று மீண்டது. பாரிஸ் நகர பல்கலைக்கழக நிர்வாகத்தை கைப்பற்றிய மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர் மத்தியிலும் புரட்சியை முன்னெடுப்பது குறித்து வகுப்புகள் எடுத்து, இயக்கமாக்கினர். தொழிற்சாலைகளை கைப்பற்றிய தொழிலாளர்கள், அவற்றை தாமே நிர்வகித்தனர். இருப்பினும் வன்முறை பிரயோகிக்க தயாராக இருந்த அரச இயந்திரம், அதனோடு ஒத்துழைத்த கொம்யூனிஸ்ட் கட்சி போன்ற காரணங்களால் புரட்சி வெற்றியடையவில்லை. அன்று மாணவர் தலைவர்களாக இருந்தவர்கள், தற்போது நிர்வாகிகளாகவும், முதலாளிகளாகவும் மாறியுள்ளனர். உண்மையில் மேற்கு ஐரோப்பா அன்றும் புரட்சிக்கு தயாராக இருக்கவில்லை. அவர்கள் கேட்ட சீர்திருத்தங்களை வழங்கி விட்டு, தமது இருப்பை காப்பாற்றிக் கொண்டன அரசாங்கங்கள்.

அப்போது ஐரோப்பாவில் ஒரு கலாச்சாரப் புரட்சி (அரச ஆசீர்வாதத்துடன்) மக்களின் வாழ்க்கையை, சிந்தனையோட்டங்களை மாற்றியது. மதங்கள் நிர்ணயித்த பழமைவாத கட்டுப்பாடுகள் தளர்ந்தன. பாலியல் சுதந்திரம் ஐரோப்பிய கலாச்சாரத்தின் ஓரங்கமாகியது. மேலும் மார்க்சையும், மாவோவையும் படித்து விட்டு மாணவர்கள் கோரிய "அதிகபட்ச ஜனநாயகம்", வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பல்கலைக்கழக நிர்வாகத்தில் மாணவர்கள் பங்கு, தொழிலாளர் நலன் குறித்து தீர்மானிப்பதில் தொழிற்சங்கத்தின் பங்கு என்பன அதன் பின்னரே ஏற்பட்டன. பலர் நினைப்பது போல, இத்தகைய அம்சங்கள் "ஐரோப்பாவின் மூலவளங்கள்" அல்ல. அவை யாவும் அறுபதுகளில் இடம்பெற்ற மாணவர் புரட்சியின் பலன்கள்.

அன்று இருந்த ரஷ்ய சார்பு கொம்யூனிஸ்ட் கட்சிகள் யாவும் புரட்சிக்கு விரோதமாக இருந்ததால், மாணவர்கள் வெறுப்படைந்திருந்தனர். அதனால் தான் ஆங்காங்கே பல ஆயுதபோரட்டத்தில் நம்பிக்கை கொண்ட தீவிரவாத இயக்கங்கள் தோன்றின. பிரான்சில் Action Directe, ஜெர்மனியில் Rotte Armee Fraktion, இத்தாலியில் Red brigade, பெல்ஜியத்தில் CCC, என்பன குண்டுவெடிப்புகள், அரசியல் தலைவர்கள், முதலாளிகளை கொலைசெய்தல் போன்ற வேலைகளில் ஈடுபட்டன. ஜனநாயக வழியில் போராட நினைத்த மாணவர்கள் மாவோயிச கட்சிகளை நிறுவினர். இன்று தீவிரவாத இயக்கங்கள் மறைந்து விட்டன. மாவோயிச கட்சிகள் ஓரளவிற்கு நிலைத்து நிற்கின்றன.

அன்றிருந்த ரஷ்ய சார்பு கொம்யூனிஸ்ட் கட்சிகள், "ஸ்டாலினிச விரோத" அரசியலால் பாதிக்கப்பட்டு, மிதவாத நிலைஎடுத்ததும், புரட்சி ஏன் வெல்லவில்லை என்பதற்கான காரணம். ஸ்டாலினுக்கு பின்னர் வந்த குருஷேவ், ஏகாதிபத்திய எதிர்ப்பு போரை நிராகரித்து, "சமாதான சகவாழ்வு" என்ற புது சித்தாந்தம் வகுத்தால்; கருத்து வேறுபாடுகளை கொண்ட சீன, அல்பேனிய கொம்யூனிஸ்டுகள் மூன்றாம் கொம்யூனிச அகிலத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் ரஷ்ய வழியை பின்பற்றிய பிற கொம்யூனிஸ்ட் கட்சிகளை "திரிபுவாதிகள்" என்றழைத்தனர். தாம் மட்டுமே புரட்சிகர பாதையில் செல்வதாக கூறினர். இதனாலேயே அறுபதுகளில் மேற்கு ஐரோப்பாவில் எழுச்சியுற்ற மாணவர்கள், மாவோவை பின்பற்றினர். இந்த வரலாற்று தொடர்ச்சியை காண மறுக்கும் சில இடதுசாரி எழுத்தாளர்கள், "1968 புரட்சியின் தோல்விக்கு" வேறு காரணங்களை தேடுகின்றனர்.

உண்மையில் அன்றைய புரட்சி வெற்றியடையாவிட்டாலும், நிச்சயமாக தோல்வியடையவில்லை. காலம்காலமாக ஐரோப்பிய மக்களின் வாழ்க்கையை தீர்மானித்த பழமைவாதிகள் செல்வாக்கற்ற சிறுபான்மயினராகினர். அந்த இடத்தை தனி மனித சுதந்திரம் பிடித்துக்கொண்டது. உண்மையில் லிபரல்களுக்கும் பிடித்த விடயம் அது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தமை, பல ஜனநாயக உரிமைகள் கிடைத்தமை என்பன, அறுபதுகளில் இடம்பெற்ற மாணவர் புரட்சியின் பெறுபேறுகள். மேற்கு ஐரோப்பிய அரசுகள் அவ்வப்போது வெடிக்கும் மக்கள் போராட்டங்களை அங்கீகரித்து, சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதால் தனது இருப்பையும் தக்கவைத்துக் கொள்கின்றன. இந்த வளைந்து கொடுக்கும் தன்மை, ஆண்டாண்டு காலமாக மக்கள் போராடி பெற்ற உரிமைகளை, தான் "மனவுந்து கொடுத்த" சலுகைகள் போல காட்டிக்கொள்ள உதவுகின்றது. அதனாலே தான் இன்று உலகில் பலர், 1968 பிரெஞ்சு புரட்சியை போன்ற பல விடயங்களைப் பற்றி கேள்விப்படாதவர்களாக உள்ளனர்.

______________________________________________

Saturday, May 31, 2008

மியான்மரின் துயரமும் நிவாரண மாய்மாலமும்

மியான்மரில் (ஆங்கிலேயர் இட்ட பெயர்: பர்மா) அடித்த புயல் ஓய்ந்தாலும், அதன் பிறகான சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. நான்கு வாரங்களுக்கு முன்பு நர்கீஸ் சூறாவளி பர்மாவின் நெல்விளையும் ஐராவதி ஆற்றுமுகப் பகுதியை தாக்கியதில் பல லட்சம் மக்கள் இறந்து, லட்சக்கணக்கானோர் வீடிழந்து அகதிகளான துயரச்சம்பவம் நடந்து முடிந்த அடுத்த நாளே, உதவி நிறுவனங்களின் நிவாரணப்பணிகள் ஆரம்பமாகி விட்டன. அள்ளிக்கொடுக்கும் ஐரோப்பியரின் நாடுகளில், மீண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதி சேர்க்கும் பணி தீவிரமடைந்தது. சில நாட்களின் பின்னர், உதவி நிறுவனங்களும், அவை சார்ந்த நாடுகளும், அரசியல் சிக்கல்களில் மாட்டிக்கொண்டனர். மியான்மரை ஆளும் இராணுவ அரசு, வெளிநாடுகளில் இருந்து வரும் உதவிகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதாகவும், தன்னார்வ தொண்டர்களை நாட்டினுள் பிரவேசிக்க விடாது தடுப்பதாகவும், பல்வேறு குற்றச் சாட்டுகள் எழுந்தன. இவை ஆரம்பத்தில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும், பின்னர் ஐரோப்பிய, அமெரிக்க அரசியல் தலைவர்களாலும் முன் வைக்கப்பட்டன, பிரிட்டிஷ் பிரதமர் கோல்டன் பிரௌன், பர்மிய அரசு உதவிப்பொருட்கள் மக்களை போய் சேர விடாது தடுப்பதன் மூலம், பல ஆயிரம் உயிர்களை காவு கொள்கின்றது என்றும், இயற்கை அழித்தது போக, இப்போது மனிதனால் அழிவு உண்டாகிறது என்று பொருமினார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரோ, அதற்கும் மேலே போய், பர்மிய அரசு உதவிப்பொருட்களை ஏற்க மறுத்ததால், இதுவரை பத்தாயிரம் பேர் இறந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேற்குலக சார்பு ஊடகங்களின் செய்திகளை பார்த்து வரும் ஒருவர் பின்வரும் முடிவுகளுக்கு வருவார். மியான்மரில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கடந்த நான்கு வாரங்களாக இதுவரை எந்த ஒரு உதவியும் கிடைக்கவில்லை. மக்கள் விரோத பர்மிய அரசு, அவசர தேவை இருந்த போதும், உதவிப்பொருட்களை வேண்டாம் என்று தடுத்து வருகின்றது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள், இயற்கையால் பாதிக்கப்பட்டது போக, தற்போது அரசினால் பாதிப்புக்குள்ளாகின்றனர். அப்படியே இருக்கட்டும். அத்தகைய செய்திகள் எல்லாம் உண்மையா? இதிலே ஓரளவு தான் உண்மை. பர்மிய இராணுவ அரசு நிவாரணப்பொருட்களை ஏற்க மறுப்பதும், பன்னாட்டு தொண்டர்களுக்கு விசா கொடுக்க மறுப்பதும் உண்மை தான். ஆனால் இந்த கெடுபிடி மேற்கு-ஐரோப்பா, மற்றும் அமெரிக்க தொண்டர் நிறுவனங்களுக்கு மட்டும் தான். சீனா, இந்தியா, மற்றைய ஆசிய நாடுகளில் இருந்து வரும் நிவராணப்பொருட்களுக்கும், தொண்டர்களுக்கும் எந்த தடையும் இல்லை. ஆனால் இது பற்றி மேற்குலகை சேர்ந்த எந்த ஊடகமும் கூறவில்லை. பல நாட்கள் நெருக்கடி கொடுத்த பின்னர், அமெரிக்க இராணுவ விமானங்கள் மட்டும் நிவாரணப்பொருட்களை இறக்கி விட்டு செல்ல அனுமதித்தார்கள். அதே நேரம், எந்தவொரு அமெரிக்க தொண்டரையும் இதுவரை அனுமதிக்கவில்லை. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரின் கோபம் அதையிட்டு வந்தது தான்.

மேற்குலக தொண்டர்களை நாட்டினும் அனுமதிப்பதற்கு மியன்மார் அரசிற்கு என்ன பிரச்சினை? பல ஆண்டுகளாக மேற்குலகத்துடன் மிகக்குறைந்த அளவு உறவு வைத்திருந்த பர்மிய அரசு, "உதவி நிறுவன தொண்டர்கள்" என்ற போர்வையில் உளவாளிகள் வரலாம் என்று அஞ்சுகின்றது. தொண்டு நிறுவனங்கள் உள்நாட்டு அரசியலில் தலையிடுவது, பிற நாடுகளில் ஏற்கனவே நடந்துள்ளது. மேலும் கடந்த வருடம் தான், பெற்றோலின் விலை உயர்வை எதிர்த்து நடந்த மக்கள் போராட்டத்திற்கு, சக்தி வாய்ந்த பௌத்த பிக்குகள் தலைமை தாங்கியதை, பர்மிய அரசுக்கு எதிரான மதகுருக்களின் எழுச்சி என்று மேற்குலக ஊடகங்களும், அரசுகளும் சித்தரித்து வந்தன. ஏற்கனவே நூலிழையில் இருந்த மேற்குலக உறவு மிக மோசமான கட்டத்தை அடைந்தது. அப்போதெல்லாம் வெளிநாட்டு ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்க தடை இருந்தது. ஆனால் தற்போது சூறாவளி ஏற்படுத்திய இயற்கை அழிவு அளவு கடந்ததாக உள்ளதால், சமாளிக்க முடியாத அரசு, வேறு வழியின்றி வெளியுலக தொடர்பினால் கிடைக்கும் உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்.
ஏற்கனவே தமது நாட்டின் மீது அமெரிக்கா படையெடுக்கலாம், தம்மை பதவியில் இருந்து அகற்றலாம் என்ற அச்சம் காரணமாகத் தான், மியன்மாரின் இராணுவ அரசு நாட்டின் தலைநகரை கடலை அண்டிய ரங்கூனில் இருந்து, அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் புதிதாக கட்டப்பட்ட "நய்பிடவ்" என்ற இடத்திற்கு மாற்றினார்கள். புதிய தலைநகரத்தில் யுத்தகாலத்தில் பாதுகாப்பாக இருக்க நிலக்கீழ் சுரங்க அறைகள் கட்டப்பட்டுள்ளன. வெளிநாட்டவர் நுழைய முடியாத மர்ம நகரான நியபிடவின் நிர்மாணம் ஓரிரு நம்பகமான ஆசிய கட்டுமான நிறுவனங்களிடமே ஒப்படைக்கப்பட்டது. மியன்மார் இராணுவ அரசு ஜோதிடத்திலும், எண் சாஸ்திரத்திலும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளது. இலக்கம் 9 அவர்களுடைய அதிர்ஷ்ட எண்ணாம். அதனால் தலைநகரின் பெயர் 9 ல் வரக்கூடியதாக வைத்திருக்கிறார்கள்.

சீனாவுடனான பொருளாதார உறவுகள், பர்மிய இராணுவ அரசின் நிலையான இருப்பிற்கு வழிவகுப்பது இரகசியமல்ல. கணிசமான மனிதஉரிமை மீறல்களை புரியும் இராணுவ சர்வாதிகாரத்திற்கு சீனா வழங்கும் ஆதரவு நிறுத்தப்பட வேண்டும் என்று மேற்குலகம் கோரி வருகின்றது, அல்லது அவ்வாறு பிரச்சாரம் செய்கின்றது. உண்மையில் எல்லாமே பொருளாதாரத்தை நோக்கி தான் நகர்கின்றன. மியன்மார் இதுவரை அளவிடப்படாத, இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆங்கிலேய காலனிய காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்ட "ரங்கூன் பெற்றோலிய நிறுவனம்" தற்போது இராணுவ அரசின் கையில். அந்நாட்டின் எண்ணை தற்போது சீனாவிற்கு ஏற்றுமதியாகின்றது. பர்மாவின் எண்ணை மட்டுமல்ல, நிலகீழ் வாயுவின் இருப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
உலகின் எரிபொருள் வளங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கம் கொண்ட அமெரிக்கா, பர்மா மீது கண் வைப்பதும் அதனால் தான். ஆனால் ஆசிய வல்லரசான சீனா, பர்மாவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருவதன் காரணமாக, அமெரிக்காவின் நோக்கம் நிறைவேறுவது எளிதன்று. இதனால் மனித உரிமை மீறல்களை காட்டி பிரச்சாரம் செய்து சர்வதேச ஆதரவை திரட்டி வருகின்றது. அதைபோலத்தான் மியான்மரில் பேரழிவை ஏற்படுத்திய சூறாவளி, புதிய வாய்ப்புகளை வழங்கும் வரப்பிரசாதமாக பார்க்கப்பட்டது. உண்மையில் அமெரிக்காவிற்கு பர்மிய மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை. பர்மிய பொருளாதாரம் மீது உள்ள அக்கறை வேறு வடிவத்தில் வெளிப்படுகின்றது. தனது வீட்டை பார்க்காதவன், ஊருக்கு தொண்டு செய்வது போலத்தான் அமெரிக்க அரசின் நிலைப்பாடு. இரு வருடங்களுக்கு முன்னர் தான், அமெரிக்க மாநிலமான நியூ ஒர்லின்சை சூறாவளி தாக்கிய பின்னர் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், பல்லாயிரம் மக்கள் பாதிக்கப்பட்ட போது, பாராமுகமாக இருந்த அரசின் செயல் பலரது கண்டனத்திற்குள்ளானது. அப்போதும் கியூபா, வெனிசுவேலா போன்ற நாடுகள் அனுப்பிய நிவாரணப் பொருட்களையும், தொண்டர்களையும் (அரசியல் காரணங்களுக்காக) ஏற்க மறுத்தது அமெரிக்க அரசு.

_________________________________________

Thursday, May 22, 2008

வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்

"தாய்நாடு, சோஷலிசம் இல்லையேல் மரணம்", வெனிசுவேலா நாட்டு மாணவர்கள், பாடசாலைகளிலும், அதற்கு வெளியிலும் சொல்லும் கோஷம் இது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், "வணக்கம் ஐயா/அம்மா" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிரியர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். லத்தீன் அமெரிக்க புரட்சியாளர் சேகுவேராவின் படம் வகுப்பறைகளை அலங்கரிக்கின்றது. மாணவர்கள் சே போன்று வாழ வேண்டுமென சபதமேற்கின்றனர்.


பெரும்பான்மை வாக்கு பலத்தில் பத்து வருடங்களுக்கு முன்னர், ஆட்சிக்கு வந்த அதிபர் சாவேஸ், அண்மைக்காலமாகவே தன்னை ஒரு மார்க்ஸிஸ்ட் என்று பகிரங்கமாக அறிவித்த காலத்தில் இருந்து, அந் நாட்டில் கலாச்சார பொருளாதார மாற்றங்கள் மெதுவாக நடைமுறைக்கு வருகின்றன. ஜனநாயக பொதுத்தேர்தல், ஜனநாயக வழியில் நடந்தால், உலகம் முழுவதும் சாவேஸ் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் பெரும்பாலான வறிய(மூன்றாம் உலக நாடுகளில்) பெரும்பான்மை மக்கள் வறியவர்களாக இருப்பதால், அவர்கள் தமது நலன் குறித்து பேசும் ஒருவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியமென்ன? பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகள், குறிப்பாக வெனிசுவேலா, ஈகுவடோர், பிரேசில், பராகுவை, ஆர்ஜென்டீனா, பொலிவியா, நிகரகுவா.... இப்படி நீண்டு கொண்டே போகும் பட்டியலில் உள்ள நாடுகளில் எல்லாம், சோஷலிசம் பேசுபவர்களையே பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இவைகளில் வெனிசுவேலா, பொலிவியா தவிர பிற நாடுகள் சோஷலிச சீர்திருத்தங்களை(கவனிக்கவும், ஜனநாயக வழியில்) நடைமுறைப்படுத்த தயக்கம் காட்டி வருகின்றன.

வெனிசுவேலாவில் சாவேஸ் துணிவுடன் நடந்து கொள்வதற்கு, அந்நாட்டின் எண்ணை வளம் முக்கிய காரணம். எண்ணை ஏற்றுமதி செய்யும் ஒபெக் அங்கத்துவ நாடான வெனிசுவேலாவின் அதிகளவு எண்ணை அமெரிக்காவிற்கே இன்றுவரை ஏற்றுமதியாவது முரண்நகை. வெனிசுவேலா, அமெரிக்காவிற்கு இடையில் கசப்பான உறவே தொடர்கின்றது. 2002 ம் ஆண்டு சாவேசை ஓரிரு நாட்கள் பதவியகற்றிய சதிப்புரட்சியில் அமெரிக்காவின் பங்களிப்பு, மக்கள் ஆதரவுடன் மீண்ட சாவேசை நிரந்தர அமெரிக்க எதிரியாக மாற்றவே வழிவகுத்தது. அதன் பின்னர், ஐ.நா.சபையில் உரையாற்றிய சாவேஸ், அமெரிக்கா அதிபர் புஷ் ஒரு பிசாசாக சித்தரித்து கலகலப்பூட்டினார். அமெரிக்க அரசுக்கு எரிச்சலூட்டும் விதமாக, கியூபா, ஈரான், ஆகிய நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டார். ஒரு காலத்தில் "சர்வதேச பயங்கராவாதி" என்று பெயரெடுத்த, தற்போது பிரெஞ்சு சிறையில் தண்டனை அனுபவிக்கும், வெனிசுவேலாவை சேர்ந்த கம்யூனிச புரட்சிக்காரன் கார்லோஸ் தேசிய நாயகன் என்று கௌரவித்தார்.

இன்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் இலட்சக்கணக்கான மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்துள்ள சாவேஸ், தனது நாட்டில் சோஷலிச சீர்திருத்தங்களை மிக மிக மெதுவாகவே நடைமுறைக்கு கொண்டு வருவதாக விமர்சனங்கள் உள்ள அதே நேரம், அந் நாட்டின் பணக்கார மத்தியதர வர்க்கம் சாவேசை பதவியை விட்டகற்ற, பேயோடு கூட்டுச்சேரவும் தயாராக உள்ளது. இருப்பினும் அவர்கள் நலன் காக்கும் கட்சிகள், ஊடகங்கள், தனியார் கல்விநிறுவனங்கள் என்பன தொடர்ந்தியங்க சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் வர்த்தக நிலையங்கள், பெற்றோலிய நிறுவனங்கள் என்பன அரசியல்-பொருளாதாரத்தை தீய நோக்கத்துடன் பயன்படுத்த நினைத்த போது மட்டும் தான், அவை தேசியமயமாக்கப் பட்டன.

தற்போது பணக்கார பிள்ளைகள் மட்டுமே படிக்கும், தனியார் கல்வி நிறுவனங்கள் அரசாங்கத்தினால் தடைசெய்யப்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. அதற்கு காரணம் இந்த வருடம் வந்துள்ள புதிய கல்வித்திட்டம். ஆர்ஜென்டீன புரட்சியாளர் சே குவேரா கூறியதை போல, "ஒரு புதிய மனிதனை உருவாக்கும்" சோஷலிச அடிப்படையில் அமைந்த கல்வி, தற்போது அனைத்து அரச பாடசாலைகளிலும் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் படி பிள்ளைகள், "வெனிசுவேலா சரித்திரம் பற்றி, பூர்வீக செவ்விந்தியர் பற்றி, எண்ணை வளம் இருந்தும் அபிவிருத்தியடையாத காரணம் பற்றி, சர்வதேச விடுதலை இயக்கங்கள் பற்றி...", இன்ன பிறவெல்லாம் கவனம் செலுத்தி கற்க வேண்டும்.

நிச்சயமாக, மத்தியதர வர்க்கம் இதுகுறித்து மகிழ்ச்சியடைய போவதில்லை. "அவர்கள் தங்கள் அரசியல் சித்தாந்தங்களை எங்கள் பிள்ளைகள் மீது திணிக்கப் பார்க்கின்றனர்." என்று கூப்பாடு போடுகின்றனர். மொத்த சனத்தொகையில், மிகச் சிறுபான்மையான பணக்கார மத்தியதர வர்க்கம், மக்கள் ஆதரவின்றி நலிந்து போய்க்கொண்டிருக்கின்றது. "உலகில் அனைத்து நாடுகளிலும் போதிக்கப்படும் கல்வியில் அரசியல் கலந்துள்ளது. சுயநலம், தனியார்மயம், முதலாளித்துவம் சார்பான சிந்தனைகள் கல்வி என்ற பெயரில் மாணவர்கள் மீது திணிக்கப்பட்டு வருகின்றன. அது பற்றி கண்டுகொள்ளாதவர்கள், சோஷலிசம் கற்பது பிழை என்று சொல்ல என்ன அருகதை உள்ளது?" இவ்வாறு கேட்கின்றனர் பல அரச பாடசாலை அதிபர்கள்.

புதிய கல்வித்திட்டம் மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. ஒரு காலத்தில் வகுப்பறைக்குள் ஆசிரியர் வந்தால், "வணக்கம் ஐயா/அம்மா" சொன்ன காலம் மலையேறிவிட்டது. தற்போது ஆசிரியர்களின் பேர் சொல்லி அழைக்கின்றனர். ஆசிர்யர்களும் மாணவர்களை கண்டிப்புடன் எட்டத்தில் வைத்திருந்த காலம் போய், தற்போது நண்பர்களாக பாடம் சொல்லிக்கொடுக்கின்றனர். அதிபரிடம் சென்று முறையிடுவதானால், கதவை தட்டாமலே நேரே போகலாம். இதையெல்லாம் பல பெற்றார்கள் வரவேற்கும் அதே வேளை, ஒரு சில மத்தியதர வர்க்க பெற்றோர் மட்டும், "எங்கள் பிள்ளைகளை கெடுக்காதே!" என்று பெற்றோர் ஆசிரியர் சங்க கூட்டத்தில் கூச்சல் போடுகின்றனர்.

ஜனாதிபதி சாவேஸ், சோஷலிச புரட்சி பாடசாலைகளில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும், என்று கூறி வருகின்றார். "ஒரு சமூகத்தின் நெறிகளை தீர்மானிக்கும் நிறுவனங்களை பொறுப்பெடுத்து, அவற்றில் முதலாளித்துவ ஆதிக்கத்திற்கு மாற்றீடாக சோஷலிச ஆதிக்கத்தை கொண்டுவருவதன் மூலமே, சமூகத்தை மாற்ற முடியும்." என்று மார்க்சிய அறிஞர் அன்டோனியோ கிராம்சியின் கூற்றை அடிக்கடி மேற்கோள் காட்டுகிறார்.

__________________________________________________________
வெனிசுவேலா சம்பந்தமான பிற பதிவுகள்:
ஏழைகளின் எழுச்சி ஒளிபரப்பப்படுவதில்லை


_________________________________________________