Saturday, September 06, 2008

ஏழைகளின் எழுச்சி ஒளிபரப்பப்படுவதில்லை

வெனிசுவேலா, தென் அமெரிக்க கண்டத்தில் எண்ணை வளம் மிக்க நாடு. எண்ணை ஏற்றுமதியால் கிடைக்கும் லாபம், மொத்த அரச வருமானத்தின் அரைவாசியாக உள்ளது. அந்நாட்டில் இன்னும் 74 மில்லியன் பரல்கள் எண்ணை கையிருப்பில் உள்ளது. அமெரிக்காவின் பெட்ரோலிய தேவையின் 14 %, வெனிசுவேலாவில் இருந்து ஏற்றுமதியாகின்றது. இருப்பினும் அதன் பலன்களை மொத்த சனத்தொகையில் 20 % ஆன பணக்கார அல்லது உயர் மத்தியதர வர்க்கமே அனுபவித்து வந்தது. மிகுதி 80% மக்கள் வறுமையில் வாடினர். அங்கே நடந்த பொதுத்தேர்தலில், ஏழை மக்களின் சார்பில் போட்டியிட்ட சாவேஸ் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர், இந்த சமூக அநீதிக்கு முடிவு வந்தது. எண்ணை ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானம், ஏழை மக்களுக்கும் போய்ச் சேர வேண்டுமென்பதே சாவேஸ் முன்மொழிந்த "பொலிவாரிய புரட்சி" யின் நோக்கம்.

பொலிவாரிய புரட்சியின் முதற்கட்டமாக, மக்கள் நலனை முதன்மைப்படுத்தும் புதிய அரசியல் நிர்ணய சட்டம் அமுலுக்கு வந்தது. ஏழை மக்களுக்கு இலவச மருத்துவம், கல்வி, கடனுதவிகள் போன்ற வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டதால், அவர்களும் முன்னேற வழியேற்பட்டது. மேலும் முதன்முறையாக ஒரு தேசத்தின் அதிபர், பொது மக்களின் பிரச்சினையை நேரடியாக கேட்கும் "Alo Presidente" (ஹலோ ஜனாதிபதி) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி, சாவேசை "மக்களின் ஜனாதிபதி"யாக காட்டியது. அரச யாப்பு பற்றி சாதாரண மக்களுக்கும் எடுத்து சொல்லப்பட்டதால், அரசியல் அறிவு பெற்ற மக்கள், தாமும் ஜனநாயகத்தில் பங்குபற்றுவதன் மூலம், தமது தலைஎழுத்தை மாற்றலாம் என கண்டு கொண்டனர்.

ஆனால் ஏழைகளின் முன்னேற்றத்திற்கான செலவை பணக்கார வர்க்கம் கொடுக்க வேண்டியேற்பட்டது. அதாவது அவர்களது ஆடம்பர வாழ்க்கை, ஏழைகளுக்கு பங்கிட மறுத்த செல்வத்தின் மூலமே ஏற்பட்டதால், அதனை விட்டுக் கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேவைகள் யாவும் சாவேசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டன. ஜனநாயக தேர்தல் மூலம் பதவியில் அமர்ந்துள்ள சாவேஸ், தனக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடும் எதிர்க்கட்சிகளையும், ஊடகங்களையும் தடை செய்ய நினைக்கவில்லை. வசதியான சிறுபான்மையினரே எதிர்ப்புரட்சி சக்திகளின் ஆதரவு தளமாக இருப்பதாலும், அதற்கு மாறாக பெரும்பான்மை மக்கள் சாவேசை ஆதரிப்பதாலும், சாவேஸ் எதிரிகள் தமது ஜனநாயக உரிமைகளை அனுபவித்து வருகின்றனர்.

12 April 2002 ம் ஆண்டு, பெரிய தொழிலதிபர்களின் ஏற்பாட்டில் ஓர் ஆர்ப்பாட்டப் பேரணி ஜனாதிபதி மாளிகை நோக்கி நகர்த்தப்பட்டது. சாவேஸ் ஆதரவாளர்கள் எதிரணியில் திரண்டனர். திடீரென்று இனம்தெரியாதவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் சிலர் கொல்லப்பட, துப்பாக்கி சன்னங்கள் வந்த திசை நோக்கி சாவேஸ் ஆதரவாளர்கள் சுடுவதை படம்பிடித்த தொலைக்காட்சி கமெராக்கள், அதனை சாவேஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஊர்வலம் மீது சுட்டதாக காட்டி செய்தியை திரித்தன. சர்வதேச ஊடகங்களும் அப்படியே நம்பின.

ஏற்கனவே திட்டமிட்டபடி, குழப்பநிலையை பயன்படுத்தி இராணுவத்தில் ஒரு படைப்பிரிவு, சாவேசின் எதிரிகளுடன் சேர்ந்து, ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியது. சாவேசை பதவி விலக சொல்லி வற்புறுத்தியும், அவர் மறுத்ததால் தொலைதூர தீவொன்றுக்கு கொண்டு சென்று தடுத்து வைக்கப்பட்டார். (சி.ஐ.ஏ. மறைமுகமாக ஆதரவளித்த) சதிப்புரட்சி தலைவர்கள், அரச பதவிகளை பொறுப்பு எடுப்பதாக அறிவித்தனர். முதலாளிகள், பணக்காரர்கள் மற்றும் அவர்களை சார்ந்து வாழும் மத்தியதர வர்க்கத்தினர், தமது இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெற்ற மகிழ்ச்சியில் திளைத்தனர். அதுவரை வெனிசுவேலாவில் நடந்த அரசியல் மாற்றங்களை கண்டுகொள்ளாத சர்வதேச ஊடகங்கள், அப்போது மட்டும் திடீரென விழித்துக் கொண்டு சதிப்புரட்சி பற்றிய செய்தியை வெளியிட்டன.

சதிப்புரட்சி பற்றி கேள்விப்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்த போது, பொலிஸ் அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. இருப்பினும் சாவேஸ் பதவி விலகவில்லை என்றும், சதிகாரர்களால் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் வந்த செய்தி, மக்களை கிளர்ந்தெழப் பண்ணியது. அடக்குமுறைக்கு அஞ்சாத லட்சக்கணக்கான மக்கள் சாவேசை திருப்பி கொண்டு வருமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். பெருந்திரளாக அதிபர் மாளிகையை, அங்கிருந்த புதிய அரசாங்கத்தை, முற்றுகையிட்டனர். இது தான் தருணம் என்று, சாவேசுக்கு விசுவாசமான படைகள் ஜனாதிபதி மாளிகையை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மக்கள் சக்தியை கண்டு அஞ்சிய சதிப்புரட்சியாளர்கள், வேறு வழியின்றி சாவேசை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

சதிப்புரட்சி நடந்த வேளை, ஜனாதிபதி மாளிகைக்குள் தற்செயலாக சிக்கிக் கொண்ட ஆவணப்படங்கள் தயாரிக்கும் குழுவொன்று, நடந்த சம்பவங்களை தமது கமெராவில் பதிவு செய்து கொண்டனர். வெனிசுவேலாவில் (அமெரிக்க சார்பு) ஆட்சிமாற்றத்தை எதிர்பார்த்து ஏமாந்து போன சர்வதேச ஊடகங்கள் காண்பிக்காத அரிய படங்களை தொகுத்து "The Revolution will not be Televised" என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப் பட்டது. அந்தப்படத்தை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
The Revolution will not be Televised


_________________________________________________________________________

வெனிசுவேலா: சோஷலிச குழந்தைகள் உருவாகிறார்கள்
_____________________________________________________________________________________

1 comment:

arul said...

this info was not at all shown in media