Showing posts with label முகாபே. Show all posts
Showing posts with label முகாபே. Show all posts

Wednesday, November 15, 2017

சிம்பாப்வே இராணுவ சதிப்புரட்சி - பின்னணித் தகவல்கள்


சிம்பாப்வே தலைநகர் ஹராரேயில், இராணுவம் அரச கட்டிடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனாலும் "அது சதிப்புரட்சி இல்லையாம்!" என்று இராணுவத் தளபதி தெரிவித்தார். 93 வயதான ஜனாதிபதி முகாபேயும், அவரது குடும்பத்தினரும் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர்.

சமீப காலங்களில் முகாபே சுகயீனமுற்று இருந்த படியால், தேசத்தின் உண்மையான நிர்வாகத்தை அவரது 52 வயதான மனைவி கிரேஸ் தான் கவனித்து வந்தார். முகாபே குடும்பத்தினர் முன்னிலைப் படுத்தப் பட்டதற்கு ஆளும் ZANU-PF கட்சிக்குள் அதிருப்தி இருந்ததையும் மறுக்க முடியாது.

கடந்த சில வாரங்களாக, சிம்பாப்வே ஆளும் கட்சிக்குள் களையெடுப்புகள் நடந்து வந்தன. "களையெடுப்பு தொடர்ந்தால் இராணுவ சதிப்புரட்சி நடக்கும்" என்று ஒரு இராணுவ ஜெனரல் நேற்றுத் தான் எச்சரித்து இருந்தார். இன்று நடந்துள்ள சதிப்புரட்சிக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதை ஊகித்தறிவது கடினமான விடயம் அல்ல.

நேற்று முன்தினம், திங்கட்கிழமை தான், துணை அதிபர் எமர்சன் (Emmerson Mnangagwa) பதவி விலக்கப் பட்டார். "அதிபர் பதவியை கைப்பற்ற சூனியம் செய்ததாக" முகாபே அவர் மீது குற்றம் சாட்டி இருந்தார். (ஆப்பிரிக்காவில் இன்றும் பல மக்கள் சூனியம் செய்வதை உண்மை என்று நம்புகிறார்கள்.) ஆகவே, துணை அதிபர் எமர்சன் "தனக்கு பாதுகாப்பு இல்லை" என்று கூறி, அன்றைய தினமே நாட்டை விட்டு வெளியேறி இருந்தார்.

சதிப்புரட்சி நடந்த தினமான இன்று, பதவியிறக்கப் பட்ட முன்னாள் துணை ஜனாதிபதி எமர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கி உள்ளார். அவரே சிம்பாப்வே ஆட்சியை பொறுப்பேற்று நடத்துவார் என ஊகிக்கப் படுகின்றது. "முகாபேயின் சர்வாதிகாரம் ஒழிந்தது" என்று மகிழ்ச்சி தெரிவிப்போர் ஒரு விடயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

இதே எமர்சன் தான் முகாபேயின் இரும்புக் கரமாக செயற்பட்டவர். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு எதிராக நடந்த விடுதலைப் போராட்டத்தின் போது, எமர்சன் முகாபேயின் நம்பிக்கைக்குரிய தோழராக இருந்தவர். சுதந்திர சிம்பாப்வே அரசில் எமர்சன் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலத்தில் தான், 1983 ம் ஆண்டு, நிதேபெலே(Ndebele) இனப்படுகொலை நடந்தது.

சிம்பாப்வே தெற்கில் வாழும் நிதேபெலே மொழி பேசும் சிறுபான்மை இனத்தவர்கள், பெரும்பான்மை மொழியான ஷோனா பேசும் முகாபே அரசுக்கு அச்சுறுத்தலாக இருந்தனர். இது இரண்டு மொழிகளைப் பேசும் மக்களுக்கு இடையிலான இனப்பிரச்சினையாகவும் இருந்த படியால், அரச பயங்கரவாத நடவடிக்கை மூலமே அந்த மக்களை பணிய வைக்க முடிந்தது. 

அன்று குறைந்தது இருபதாயிரம் நிதேபெலே மக்கள் இனப்படுகொலை செய்யப் பட்டனர். இராணுவத்தின் ஐந்தாவது படைப்பிரிவான, குகுரஹண்டி (Gukurahundi) என்ற பெயர் தாங்கிய சிறப்புப் படையணியினரே படுகொலைகளில் ஈடுபட்டனர். ஷோனா மொழியில் குகுரஹன்டி என்றால் "குப்பைகளை ஒதுக்கும் மழை" என்று அர்த்தம். இதுவே அன்றைய இனப்பிரச்சினையின் தீவிரத் தன்மையை புரிய வைக்கப் போதுமானது.

சிம்பாப்வேயில் நடந்த இராணுவ சதிப்புரட்சியை, மேற்கத்திய நாடுகளும், அவற்றின் அடிவருடிகளும் ஆதரிப்பதாகத் தெரிகின்றது. பதவியிறக்கப் பட்ட ஜனாதிபதி ரொபேர்ட் முகாபே, அங்கு நடந்த பொதுத் தேர்தல்களில் மக்களால் தெரிவு செய்யப் பட்டவர். ஆனால், மேற்குலகம் முகாபேயை ஒரு "சர்வாதிகாரி" என்று சொல்கிறது! அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளருக்கு, மேற்குலகம் தாராளமாக உதவிய போதிலும் தேர்தலில் வெல்ல முடியவில்லை.

மேற்குலகின் பார்வையில் "சிம்பாப்வே மக்களால் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியை அகற்றி விட்டு, சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றியுள்ள இனப்படுகொலையாளி" சிறந்த நண்பராக தெரிகிறார். ஆட்சியில் இருப்பது சர்வாதிகாரி, இனப்படுகொலையாளி யாராக இருந்தாலும், மேற்குலக பொருளாதார  நலன்கள் பாதுகாக்கப் பட்டால் சரி தானே?

சிம்பாப்வே நாட்டில் ஆயிரக் கணக்கான ஆங்கிலேய, டச்சு "விவசாயிகள்" வாழ்கிறார்கள். காலனிய காலத்தில் குடியேறிய அவர்களை விவசாய- தொழில் அதிபர்கள் என்று அழைப்பது தான் முறையானது. ஆயிரக்கணக்கான ஏக்கர்களை சொந்தமாக வைத்திருந்து, அவற்றில் புகையிலை பயிர் செய்து மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். பதினேழு வருடங்களுக்கு முன்னர், "முன்னாள் விடுதலைப் போராளிகள்" வெள்ளையரின் நிலங்களை வன்முறை மூலம் பறித்து வந்தனர்.

தற்போது பதவியிறக்கப் பட்டுள்ள ரொபேர்ட் முகாபேயும் முன்னாள் போராளிகளின் நடவடிக்கையை ஆதரித்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மேற்குலக நாடுகள் சிம்பாப்வேக்கு எதிராக பொருளாதாரத் தடை கொண்டு வந்தன. குறிப்பாக, அந்நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளான புகையிலையை வாங்க மறுத்து வந்தன. அதனால், சிம்பாப்வே பொருளாதாரம் பாதாளத்தை நோக்கி சென்றது. அதன் பணம் மதிப்பிறங்கி செல்லாக் காசாகியது. இதனால் அந்நிய நாணயங்களை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டது.

அட்சி மாற்றத்தின் பின்னர் இராணுவ சதிப்புரட்சியாளர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. முகாபேயின் மனைவியும் அரசியல் வாரிசுமான கிரேஸ் முகாபேயின் ஆதரவாளர்கள் வேட்டையாடப் படுகின்றனர். அதைத் தவிர நிலைமை சுமுகமாக உள்ளது. பொது மக்கள் தமது அன்றாட கடமைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம், அங்கு நடந்த சதிப்புரட்சிக்கும் தமக்கும் சம்பந்தம் இல்லை என்பதையும் மக்கள் உணர்த்தி உள்ளனர். 


சிம்பாப்வே தொடர்பான மேலதிக தகவல்களுக்கு 
எனது முன்னைய பதிவுகளையும் வாசிக்கவும் :

Tuesday, June 23, 2009

சிம்பாப்வே: வெள்ளையனே வெளியேறு!

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 9

"படுகொலை, படுகொலை" என அலறின பிரிட்டிஷ் பத்திரிகைகள். முன்பக்கத்தில் ஒரு இரத்தம் வழியும் வெள்ளைக்காரனின் முகம், கீழே சிம்பாப்வேயில் "கறுப்பு இன வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி விவசாயி" என தடித்த எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. சிம்பாப்வே பிரச்சினை பற்றிய பிரிட்டிஷ் பத்திரிகைகளின் செய்தியறிக்கைகள் ஒரளவு காலனிய ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்தியது. அப்போது சுதந்திரப் போராளிகளால் வெள்ளையின அதிகாரிகள் கொல்லப்பட்டபோது அதனைப் பயங்கரவாதமென்றும், இனவாதப் படுகொலைகள் என்றும் பத்திரிகைகள் சித்தரித்தன. அதேநேரம், வெள்ளை அதிகாரிகளால் கறுப்பினப் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை திட்டமிட்ட முறையில் மூடிமறைத்தன, "அரசு சாராத சுதந்திர" ஊடகங்கள். இவையெல்லாம், காலனித்துவக் கால கட்டம் இன்னமும் தொடர்கிறதா என ஐயமுறவைக்கின்றன.

ஐரோப்பியர் காலனியக் காலங்களில் சில நாடுகளை நிரந்தரமாகக் குடியேறவென தேர்ந்தெடுத்தனர். அவற்றில் "தென்னாபிரிக்கா", "சிம்பாப்வே", ஆகியன முக்கியமானவை. 19 ம் நூற்றாண்டில், தென்னாபிரிக்காவில் ஏற்கெனவே தனது அதிகாரத்தை நிலைநிறுத்திவிட்ட பிரிட்டிஷ் காலனித்துவப் படைகள், வடக்கு நோக்கி முன்னேறின. துப்பாக்கியேந்திய பலமான பிரிட்டிஷ் படைகளுடன் மோதமுடியாத, அம்பு-வில் போன்ற புராதன போர்க் கருவிகளை பயன்படுத்திய கறுப்பர்களின் படைகள் தோல்வியுற்றுச் சரணடைந்தன. தோற்றவர்களின் நிலங்களை வென்றவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். தாய்நாடான பிரிட்டனிலிருந்து "விவசாயிகள்" வந்து குடியேறினர்.இவ்வாறு வெள்ளையின ஆதிக்கத்தின் கீழ் வந்த நிலங்களை இணைத்து "ரொடீஷியா" என்ற நாடு உருவாக்கப்பட்டது.

தென்னாபிரிக்காவிலிருந்து படையெடுப்பு நடாத்தி வென்ற ஆங்கிலேயத் தளபதி "சிசில் ரோட்ஸ்" ன் தலைமையில் இங்கு வெள்ளையாட்சி நடாத்தப்பட்டது. இவனது பெயர் காரணமாகவே இந்நாட்டிற்கு "ரொடீசியா" என்ற பெயரும் சூட்டப்பட்து. சோவியத் ஒன்றியம் லெனின் கிராட் என்று பெயர் வைத்தால், அதனை அரசியல் பிரச்சாரம் என்று கண்டித்த மேற்குலக புத்திஜீவிகளுக்கு, ரொடீசியா கண்ணில் படவில்லை. தற்கால அரசியலின் அடிப்படையில் சொன்னால்: ரோட்ஸ் ஒரு சர்வாதிகாரி, நிறவெறியன், இனப்படுகொலை செய்தவன், நாகரிக உலகம் ஏற்காத இனவாத ஆட்சி நடத்தியவன். இந்த இனவாதச் சர்வாதிகார ஆட்சி 1980 வரை நீடித்தது. உலகெங்கும் நடந்த, காலனியாதிக்க எதிர்ப்பு சுதந்திரப் போராட்டங்களால் உந்தப்பட்ட ரோடீசியாவின் படித்த கறுப்பின இளைஞர்கள், ZANU-PF ஏன்ற பெயரில் நிறுவனமயமாகினார்கள். ரொபேட் முகாபே தலைமையில் நிறவெறி அரசுக்கெதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சி நடைபெற்றது. கொரில்லாப் போர்த்தந்திரங்கள் பாவிக்கப்பட்டன. இறுதியில் பிரிட்டிஷ் ரொடீசிய அரசுகள் நிபந்னையடிப்படையிலான சுதந்திரம் கொடுக்க ஒப்புக்கொண்டன. அதாவது, பதவியேற்கும் கறுப்பின அரசாங்கம் வெள்ளையின விவசாயிகளை , முதலாளிகளை அவர்களின் போக்கில் விடவேண்டுமென்பதே முன்வைக்கப்பட்ட நிபந்தனையாகும். நீதித்துறையில் பிரிட்டிஷ் அரசு வகுத்திருந்த சட்டங்களே தோடர்ந்தும் பேணப்படவேண்டும் (இந்தச் சட்டங்களும் வெள்ளையின முதலாளிகளுக்கு வேண்டிய சுதந்திரத்தை உறுதிப்படுத்தன.) என்பதும் நிபந்தனையாகவிருந்தது. இவ்வடிப்படையிலேயே அபிவிருத்தி உதவிகளும் வழங்க பிரிட்டிஷ் நிர்வாகம் உடன்பட்டது. நிபந்தனைகளையேற்று, ரொடீசிய அரசிற்கெதிரான ஆயுதப்போராட்டத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்த ZANU-PF, "லங்கஸ்டர்" ஒப்பந்த்தில் கைச்சாத்திட்டது. இதையடுத்து ரொடீசியா, "சிம்பாப்வே" என ஆப்பிரிக்கமயப்படுத்தப்பட்டது.

சுதந்திரத்தின் பின்னர் வந்த அரசாங்கம் இந்த ஒப்பந்த்திற்கேற்ப, அதாவது பிரிட்டிஷார் விருப்பத்திற்கிணங்க அமைக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் மாக்ஸீயத்தைத் தனது கட்சியின் சித்தாந்தமாக அறிவித்த ZANU-PF அதை நடைமுறைக்குக் கொண்டுவரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. நாட்டில் அரசுத் துறைகள் மட்டுமே கறுப்பினத்தவர் வசம் வந்தன. பொருளாதாரத்தில் வெள்ளையினத்தவரின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்தது. தம்மை "விவசாயிகள்" எனக் கூறிக்கொள்ளும் இவர்கள், உண்மையில் விவசாய முதலாளிகளாவர். நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான புகையிலை, தேயிலை போன்றவற்றை நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் உற்பத்தி செய்வதுடன், ஏற்றுமதி வர்த்தகத்தையும் தமது கைகளில் வைத்திருந்தனர். இவ்வகையில் இவர்கள் அனைவருமே செல்வந்தர்களாகவும் இருந்தனர். இதற்கு மாறாக, காலனித்துவ காலத்தில் நிலங்களைப் பறிகொடுத்த கறுப்பின மக்கள் இன்று வரை ஏழைகளாக வெள்ளை முதலாளிகளுக்குச் சொந்தமான நிலங்களில் வேலை செய்து வாழும் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். காலத்தின் மாற்றத்திற்கேற்ப வெள்ளையின முதலாளிகள் தாம் "நிற வேற்றுமை பார்க்காதவர்கள்", "கறுப்பினத் தொழிலாளர்களைச் சமத்துவமாக நடாத்துபவர்கள்" என்றெல்லாம் காட்டிக்கொள்கின்றனர். இவர்கள் சிம்பாப்வே என்ற புதிய நாட்டின் குடியுரிமையை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமல்ல , உள்ளூர் மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடியவர்கள். சில வெள்ளையினப் பிள்ளைகளுக்கு ஆபிரிக்கப் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.

எது எப்படியிருத்தபோதும், எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது சொத்துரிமை என்பதை மறந்துவிடலாகாது. இவர்கள் அப்போது இனவாதிகளாக நிறவேற்றுமை காட்டியதும் சொத்துரிமையைப் பாதுகாக்கத்தான். இன்று சிம்பாப்வே தேச பக்தர்களாகக் காட்டிக் கொள்வதும் அதே நோக்கத்தோடுதான். அவர்களின் விவசாய உற்பத்தியில் ஏகபோகம், காலனிய ஸ்தாபனத்தை நிறுத்தும் பணி என்பனவற்றுக்காகத்தான், மேற்கத்திய தொடர்பூடகங்கள் வெள்ளையின விவசாயிகள் ஆதரவுப் பிரச்சாரம் செய்கின்றன. "நாம் இந்த விவசாயிகளைக் கைவிட முடியாது. எனெனில் நாம்தான அவர்களை அங்கு அனுப்பினோம்" என இதனை பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேரடியாகவே சொன்னார். பிரிட்டனில் ஒருபுறம் மூன்றாம் உலக நாடுகளின் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் சிம்பாப்வேயிலிருந்து வரும் "வெள்ளை அகதி" களுக்கு வந்த உடனேயே வீடும், வேலைவாய்ப்பும், தேவையேற்படின் நிலமும் வழங்கப்படுகின்றன. "மனிதாபிமானமிக்க, இனவெறியற்ற, ஜனநாயக" பிரிட்டிஷ் அரசின் இரட்டை வேடமிது.

சிம்பாப்வேயில் மொத்தச் சனத்தொகையில் ஒரு வீதமான வெள்ளையினத்தவருக்கு, 80 வீதமான நிலங்கள் சொந்தமாகவிருக்கின்றன. அதே வேளை பெரும்பான்மை மக்கள் சொந்த நிலமின்றி இருப்பது எந்த வகையில் நியாயமென, எந்தவொரு "ஜனநாயகவாதி"யும் கேட்டதாகத் தெரியவில்லை. ஆண்டாண்டு காலம் அனுபவித்த பெரும் நிலப்பிரபுக்களான வெள்ளையர்கள், உள்ளூர் கறுப்பின மக்களிடமிருந்து தமது மூதாதையர் பறித்த நிலங்களை நேர்மையாக அவர்களிடம் திருப்பிக் கொடுக்காதது ஏன்? என்றும் எந்தவொரு மனித உரிமைவாதியும் கேட்கவில்லை. ஆனால் சில புரட்சியாளர்கள், வெள்ளையினத்தவருக்குச் சொந்தமான நிலங்களைத் திடீரென முற்றுகையிட்டுப் பலவந்தமாகப் பறித்து, அவற்றை நிலமற்ற கறுப்பின விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தபோது மட்டும், "ஜனநாயகம், மனித உரிமைகள்" என்று மேற்கில் சிலர் சாமியாடத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் மனித உரிமைகள் என்ற பெயரில் மேற்கத்தைய அரசியல் ஆதிக்கம் பரப்பப்படுவதாக ஆப்பிரிக்காவில் சிலர் விமர்சிக்கின்றனர்.

முகாபேயின் அரசாங்கம் ஊழல்வாதிகளால் நிரம்பி வழிவதும், தமக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பதவிகள் கொடுப்பதும் உண்மைதான். சரிந்துவரும் செல்வாக்கை மீளப்பெறுவதற்காகத்தான் முகாபே நிலச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்ததும் மறுப்பதற்கில்லை. இருப்பினும், தனியாக நின்று ஏகாதிபத்தியத்துடன் மோதும் துணிச்சலைப்பாராட்ட வேண்டும். கடந்த பதினைந்து ஆண்டுகளாக உலகவங்கியோ, அல்லது வேறெந்தச் சர்வதேச நிதிநிறுவனமோ சிம்பாப்வேக்கு நிதியுதவி வழங்குவதில்லை. தென்னாபிரிக்காவையும், லிபியாவையும் விட்டால் வேறு குறிப்பிடத்தக்க வர்த்தகக் கூட்டாளிகள் கிடையாது. இப்படியான கடினமான நேரத்திலும் சிம்பாப்வே இன்றுவரை ஏகாதிபத்திய உத்தரவுகளுக்கு அடிபணியவில்லை. ஒரு வருடம் வெளிநாட்டு கடனுதவி கிடைக்காவிட்டால் பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடும் என்று, நமது அரசாங்கங்கள் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பது இங்கே நினைவுகூறத்தக்கது.

அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் நீங்காத அச்சமென்னவெனில், சிம்பாப்வேயின் "புரட்சிகர நிலச்சீர்திருத்த அலை" பிற ஆபிரிக்க நாடுகளிலும் பரவலாம் என்பதே. தென்னாபிரிக்கக் குடியரசிலும், நமீபியாவிலும் பெரும்பான்மை விவசாய நிலங்கள், தேசியப் பொருளாதாரம் என்பன, இன்னமும் வெள்ளையினத்தவரின் கைகளில் இருக்கின்றன. தென்னாபிரிக்க நிலமற்ற கறுப்பின விவசாயிகள் சிம்பாப்வேயில் நடந்தது போல அங்கேயும் நிலச்சீர்திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமென எதிர்பார்க்கின்றனர். தென்னாபிரிக்க வெள்ளையின விவசாயிகள் இனறும் கூட சட்டபூர்வமற்ற, ஆனால் அரசு தலையிடாத தனியான சுயாட்சிப் பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் பாஸிஸ அமைப்புகள் செல்வாக்குச் செலுத்துவதுடன், ஆயுதபாணிகளாகவும் இருக்கின்றனர். வெளியில் சொல்லப்படாது பாதுகாக்கப்படும் இரகசியங்களில் ஒன்று; இந்த வெள்ளையினத் தீவிர வாதக்குழுக்கள் இரசாயன, உயிரியல் ஆயுதங்களையும் பதுக்கி வைத்திருப்பதுதான்.

இஸ்ரேல்-பலஸ்தீன பிரச்சினை போன்றதொரு சூழ்நிலை தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் முன்னர் நிலவியது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளையினக் குடியேறிகளால் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, ரொடீசியக் குடியரசுகளில் வெள்ளையர்கள் சிறுபான்மையாகவிருந்தனர். அத்துடன் நாடுமுழுவதும் பரவலாக பெருமளவு நிலங்களைக் கைப்பற்றி காலனிகளை அமைத்தும் இருந்தனர். இந்த வெள்ளைக் காலனிகளைச் சேர்ந்தோர் மட்டும் அனைத்து உரிமைகளையும் பெற்று முதற்தரப் பிரஜைகளாகவிருந்தனர். இதே நேரம், பெரும்பான்மைக் கறுப்பினத்தவர் இரண்டாந்தரப் பிரஜைகளாக பின்தங்கிய நிலையில் வைக்கப்பட்டனர். கல்வி, மருத்தவ வசதி, என்பனகூட வெள்ளையினத்தவருக்கே வழங்கப்பட்டன. முன்னாள் ரொடீசியா பின்னர் சிம்பாப்வேயாக மாறி முகாபேயின் ZANU-PF ஆட்சிக்கு வந்தபின்னர் தான் கருப்பினத்தவரை முன்னேற்றும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் கட்டப்பட்ட மருத்துவமனைகள், பாடசாலைகள் என்பன சமுக முன்னேற்றத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள். பிரிட்டன் முன்மொழிந்த "லங்கஸ்டர்" சுதந்திர ஒப்பந்தம், சமுக அபிவிருத்திக்கு பணம் ஒதுக்குவதைக் குறைக்க விரும்பியதை இவ்விடத்தில் கூறவேண்டும்.

சிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சிக்கு, முகாபேயின் நிலச்சீர்திருத்தக் கொள்கைதான் காரணம் என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் உலகவங்கி, சர்வதேச நாணய சபை போன்றவற்றின் பொருளாதாரத்திட்டங்கள் ஏற்கெனவே நாட்டைப் பாழ்படுத்தியிருந்தன. தொன்னூறுகளில் இந்த நிறுவனங்களின் தவறான முகாமைத்துவம் குறித்து முகாபே விமர்சித்த போது பிரச்சினை கிளம்பியது. தொடரும் நில அபகரிப்புக் காரணமாக, பெருமளவு வெள்ளையின முதலாளிகள் தமது வர்த்தகச் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளுக்குப் போய் தங்கிவிட்டனர். சர்வதேச வர்த்தகம் வெள்ளையினத்தவர் ஆதிக்கத்தில் இருந்ததால், பொருளாதார வீழ்ச்சியேற்பட்டது. அவர்கள் வெளியேறிய பின்னர், சர்வதேச சமூகம் தொடர்பை முறித்துக்கொண்டது. ஆனால் இவை எல்லாம் மேற்கத்தைய தொடர்பூடகங்களால் மூடிமறைக்கப்பட்டு, எல்லாவற்றிற்கும் முகாபேயின் தவறான அரசியல்தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. "பயங்கரவாத்திற்கெதிரான போர்" சிம்பாப்வே மீதும் தொடுக்கப்பட வேண்டுமென பிரிட்டன் எதிர்பார்க்கிறது. சிம்பாப்வேயில் எதுவித பொருளாதார-இராணுவ நலன்களும் இல்லாதபடியால் அமெரிக்கா இதைத் தட்டிக் கழித்தபடியுள்ளது. இருப்பினும் நிலைமை இப்படியே நீடிக்க பிரிட்டன் விடவில்லை. இராஜதந்திர, பொருளாதார அழுத்தங்களின் மூலம் உள் நாட்டு கிளர்ச்சிகள் தூண்டிவிடப்பட்டன. நவ காலனித்துவம் என்றால் என்ன என்பதற்கு சிம்பாப்வே ஒரு சிறந்த உதாரணம். வெள்ளையர்கள் வெளியேறி விட்டனர் தான், ஆனால் அவர்களது மூலதனம் நம்மை இப்போதும் ஆண்டுகொண்டிருக்கிறது.

(தொடரும்)

Wednesday, March 05, 2008

சிம்பாப்வே: கறுப்பர்களின் கடமை

“வெள்ளையர்கள் எமது நாட்டுக்கு வந்த போது, அவர்கள் கையில் பைபிள் இருந்தது. எம்மிடம் நிலம் இருந்தது. எம்மை கண் மூடி
தியானம் செய்ய சொன்னார்கள். கண் விழித்து பார்த்த போது,அவர்கள் கைகளில் நிலங்களும், எமது கைகளில் பைபிளும் இருந்தது.” - ஒரு தென் ஆப்பிரிக்க கவிஞர்.

மேற்கத்திய ஊடகங்கள் ஜிம்பாப்வே நாட்டு ஜனாதிபதி முகாபே பற்றி ஒரு போதும் நல்லதாக சொல்வதில்லை. அவர்கள் பார்வையில் முகாபே ஒரு சர்வாதிகாரி, கொடுங்கோலன், பைத்தியக்காரன், அவன் தொலைந்தால் தான் அன் நாடு மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். இந்த “பத்திரிகாதர்மம்”, ஜிம்பப்வேயில் காலங்காலமாக, கறுப்பர்களின் நிலங்களை ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடிய வெள்ளையின “விவசாயிகளை” ( அவர்கள் விவசாயிகளா அல்லது நில உடமையாளர்களா?) முகாபே விரட்டியதால் வந்த இனப்பாசம். உலகம் முழுக்க மேலைத்தேய ஊடகங்களின் பிரச்சாரம் எடுபட்ட போதும், ஆபிரிக்க கண்டத்தில் மட்டும் நிலைமை வேறு விதமாக உள்ளது. முகாபெக்கு உள் நாட்டிலயே, அவரை வெறுக்கும் மக்கள் இருக்கின்றனர் தான். இருந்தாலும், ஜிம்பாப்வேக்கு வெளியே பிற ஆபிரிக்க நாடுகளில் நல்ல செல்வாக்கு உள்ளது. பெரும்பான்மை ஆபிரிக்கர்கள் முகாபெயை தமது ஆதர்ச நாயகனாக பார்க்கின்றனர். இன்னும் சொன்னால், மேற்கத்தைய நாடுகளின் சட்டாம்பிள்ளைதனத்தை எதிர்க்க திராணியற்ற தமது நாட்டு தலைவர்களை விட முகாபே மீது நிறைய மதிப்பு வைத்துள்ளனர். அந்தக் கண்டத்தில் பலம் பொருந்திய தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி மட்டுமல்ல, வேறு எந்த ஆப்பிரிக்க நாட்டு தலைவரும் முகபெக்கு எதிராக கதைக்க துணிவற்று உள்ளனர். அதற்கு காரணம், தம் நாட்டு மக்களே அதை விரும்பபோவதில்லை என்பதுடன் , எதிர்ப்பவர்கள் யாவரும் ஐரோப்பிய எஜமானர்களின் வேலைக்காரர்களாக கருதப்படுவதும் தான்.

சிம்பாவே அதிபருக்கான தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் முடிவுகளை அறிவிக்க ஆளும் ZANU-PF கட்சி மறுத்து வருகின்றது. ஜனநாயகம் என்பது தமக்கு எதிராக ஒரு நேரம் திரும்பும் என்று கண்ட தற்போதைய அதிபர் முகபேயும், அவரதும்கட்சியும் அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நிற்கின்றன. இதே நேரம் தேர்தலில், கணிசமான வாக்குகளை பெற்ற எம்.டி.சி. என்ற எதிர்கட்சி, தேர்தலில் வென்றதாக அறிவித்ததும், அதனை மேலைத்தேய ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்ததும் அண்மைக்கால செய்திகள். நீண்ட காலம் ஜனாதிபதி பதவியில் உள்ள ZANU-PF தலைவர் முகபெக்கும், எதிர்கட்சி எம்.டி.சி. தலைவர் ஷங்கரைக்கும் இடையில் நடந்த போட்டியில், இருவரும் கிட்டதட்ட சம அளவு வாக்குகளை பெற்றுள்ளதாகவும், அதனால் இரண்டாவது தேர்தல் அவசியமென்றும் கருதப் படுகின்றது. முன்னால் கொலனியவாதியான பிரிட்டனுக்கும், பிற மேற்கத்திய நாடுகளுக்கும், அது அவசியமில்லை. ஆட்சியதிகாரத்தை எதிர்கட்சி தலைவர் ஷங்கரையிடம் கொடுத்து விட்டு, முகபே பதவி விலக வேண்டும். அவர்களைப் பொறுத்த வரை, தமது சொல் கேட்டு நடக்கும் ஒருவர் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற அவசரம். ஷங்கரையும் ஆளும் கட்சி அதிகாரத்தை தங்கத் தட்டில் வைத்து தரும் என்று எதிர்பார்க்கின்றது. அப்படி நடக்கா விட்டால்? அவர்களிடம் வேறு எந்த திட்டமும் இல்லை. சர்வகட்சி ஜனநாயகம் ஜிம்பாப்வேயில் இருந்தாலும், ZANU-PF கட்சி தமது விடுதலைப் போராட்டம் அதற்கனது அல்ல என்று கூறியுள்ளது. அந்தக் கட்சி நூற்றாண்டு காலம் நீடித்த வெள்ளையின ஆட்சிக்கு எதிராக ஆயுதமேந்திய போராட்டம் நடத்தி அதிகாரத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அதிகாரத்துக்கு வந்த பத்தாண்டுகளுக்கு மார்க்சிய அடிப்படையில் ஆட்சி நடத்தியது. பின்னர் உலகில் சோஷலிச நாடுகளின் வீழ்ச்சி, வெளிநாட்டு உதவியையும், நண்பர்களையும் குறைத்ததால், தவிர்க்க இயலாமல் மேற்கத்திய ஐ.எம்.எப்., உலக வங்கி போன்றவற்றிடம் அபிவிருத்தி நிதி கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிதி நிறுவனங்கள் கொடுத்த கடன்களை விட, போட்ட நிபந்தனைகள் அதிகம். அதனால் எமக்கு கடன் உதவியே வேண்டாம் என்று சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. முகபெக்கும், குறிப்பாக பிரிட்டனுக்கும் இடையேயான முறுகல் நிலை முற்றி, காலனிய காயங்களை மீண்டும் கிளறி விட்டது.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளும் பிரிட்டிஷ் காலனிகளாக இருந்த போதிலும், அங்கே பிரிட்டிஷார் நிரந்தரமாக குடியேறி இருக்க நினைக்கவில்லை . தென் ஆபிரிக்காவிலும், ஜிம்பப்வேயிலும் அவர்கள் நிரந்தரமாக குடியேறி, பெருமளவு காணி நிலங்களை தமது சொத்துகளாக வைத்திருந்தனர். இந்த நிலங்கள் யாவும் உள்ளூர் மக்களிடம் இருந்து அடித்து பறித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அந்நியர்கள்(வெள்ளயினத்தவர்) நிலவுடமையாளர்களாக விவசாயம் செய்த நிலத்தில், உள்ளூர் மக்கள் (கறுப்பினத்தவர்) விவசாயக் கூலிகளாக வேலை செய்தனர். வெள்ளையின ஆக்கிரமிப்பை எதிர்த்தவர்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டனர். அன்றைய நிறவெறி பிடித்த ஆங்கிலேய ஜனாதிபதி, கறுப்பர்களுக்கு தம்மை தாமே ஆளும் பக்குவம் இன்னும் வரவில்லை, என்று கூறி வந்தார்.

இன்று மெத்தப் படித்த அறிவாளிகள் பலர் வரலாறு முக்கியமில்லை என்று கூறுவார்கள். அப்படி சொல்வது யார்? கடந்தகாலத்தில் தமது முன்னோர் செய்த கொடுமைகள், தவறுகள், தீய வழிமுறைகள் என்பன இன்றைய தலைமுறையினருக்கு தெரியக்கூடாது என்று கவனமாக இருப்பவர்கள். ஏனெனில் அவர்களின் நல்வாழ்வும், அதிலே தானே தங்கியுள்ளது? ஜிம்பாப்வே பிரச்சினையையும் இந்த அடிப்படையிலேயே பார்க்க வேண்டும். ஆட்சிக்கு வந்த முதலாவது கறுப்பின ஜனாதிபதியும், ZANU-PF தலைவருமான ராபர்ட் முகாபே, தனது அரசியல் நலன் கருதி நடந்தாலும்; வெள்ளையின விவசாயிகளிடம் இருந்து நிலங்களை பறித்த செயலை, பல ஆப்பிரிக்கர்கள் வரவேற்கின்றனர். ஒரு காலத்தில், ஜிம்பாப்வே சுதந்திரம் அடைந்த பின்பும், அந்த நாட்டு பொருளாதாரம் வெள்ளையரின் கைகளில் தான் இருந்தது. தென் ஆப்ரிக்கவிலும் இது தான் நிலைமை. இதனால் சந்தேகத்திற்கு இடமின்றி, பெரிய கோடிஸ்வரர் எவரும் வெள்ளை இனத்தவராகவே இருப்பார். இதைக்கேட்ட உடனே, யாராவது ஒரு அறிவாளி, சோம்பேறி கறுப்பர்களுக்கு சுறுசுறுப்பான வெள்ளையர்கள் மீதுபொறாமை என்று சொல்லலாம். அது திருடர்களுக்கு நியாயம் கற்பிப்பது போலாகி விடாதா?

முன்னால் ZANU-PF போராளிகளும், அந்த கட்சியின் இளைஞர் பிரிவும் சேர்ந்து, வெள்ளையின விவசாயிகளை வன்முறையினால் வெளியேற்றி, அவர்களிடம் நிலங்களை கைப்பற்றி, கறுப்பின விவசாயிகளுக்கு வழங்கிய போது, பிரிட்டனுக்கும், மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்கும், அதன் நியாயத்தன்மையை புரிந்து கொள்ள முடியவில்லை. அதுவரை கண்ணியமான நடுநிலை ஊடகங்களாக காட்சி தந்தவை; அநியாயம், அக்கிரமம், வெள்ளையர் மீது கறுப்பர்கள் நிறவெறியாட்டம் என்றெல்லாம் வர்ணித்தன. பிரிட்டிஷ் அரசாங்கமோ வெள்ளையின ஜிம்பாப்வே “அகதிகளுக்கு” நிலமும் வீடும் கொடுத்து வரவேற்றது. அதே நேரம், ஜிம்பாப்வே எதிர்கட்சி ஆதரவாளர்களான கறுப்பினத்தவர் பலருக்கு, அகதி அந்தஸ்து கூட வழங்கவில்லை. அரச மட்டத்தில், பத்திரிகை துறையில் காணப்படும், பகிரங்கமான நிறுவனமயப் படுத்தப்பட்ட நிறவாதம், “தனி மனித உரிமை” என்ற பெயரில் நியாயப் படுத்தப் படுகிறது. ஆப்கனிஸ்தான், ஈராக் மீது படையெடுத்து போன்று, அமெரிக்கா ஜிம்பாப்வே மீது படையெடுக்க வேண்டும் என்று பிரிட்டன் நிர்பந்தித்து வருகின்றது. உலக வல்லரசான அமெரிக்காவிற்கு அங்கே எந்த பொருளாதார நலன்களும் இல்லாததால் அக்கறையின்றி உள்ளது.

இதனால் வேறு வழிகளில் முகாபெயை பதவி இறக்கும் நோக்கில், பொருளாதார தடைகளை ஏற்படுத்தி, சர்வதேச சந்தையின் கதவுகள் மூடப்பட்டன. நாணய பெறுமதி இறக்கம், விலைவாசி உயர்வு போன்றவற்றில், சர்வதேச சந்தையை கட்டுபடுத்தும் அன்னிய நாடுகளின் பங்கு கணிசமாக உள்ளது. இதனால் அயல் நாட்டில் இருந்து கூட இறக்குமதி செய்ய முடியாத நிலையில், பாவனைப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. (ஏற்றுமதி பற்றி கூறத் தேவையில்லை). முக்கிய ஏற்றுமதியான புகையிலை தோட்டங்கள் யாவும் வெள்ளையின விவசாயிகள் கைகளில் இருந்தன. அவர்கள் வெளியேற்றப்பட்ட பின்பு சர்வதேச சந்தை சிம்பாப்வே புகையிலை வாங்குவதை நிறுத்தியது. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் தனியார்மயம் இருந்ததால், சர்வதேச நிர்ப்பந்தத்திற்கு கட்டுபட்டு, செயற்கையான உணவுத்தட்டுபாடை ஏற்படுத்தினர். உலகின் பிற நாட்டு மக்களை போல, பாவனையாளர் கலாச்சரத்திற்கு பழக்கப்பட்ட ஜிம்பாப்வே மக்கள், பட்டினி கிடக்கும் நிலைக்கு வந்தனர். முகாபே நிர்வாகம், மேற்குலக நாடுகளை பகைத்து கொண்டதற்கு, பெரிய விலை கொடுத்து, கடைசியில் அதிகாரத்தை பறிகொடுக்கும் நிலைக்கு வந்துள்ளது. சீனா மட்டும் தான் தற்போது ஜிம்பாப்வேயின் பொருளாதார நண்பன். அனைத்து பொருட்களும் சீனாவில் இருந்து இறக்குமதியாகின்றது. இருப்பினும் சீனா ஒரு ஏகாதிபத்திய நாடில்லை என்பதால், சர்வதேச நெருக்குவாரத்திற்கு கட்டுபட்டே நடக்க வேண்டியுள்ளது.

காலனிய காலகட்டத்தில் இருந்து தேசத்தை முழுமையாக விடுவிப்பது எவ்வளவு கடினமானது என்று, ஜிம்பாப்வே அனுபவரீதியாக உணர்ந்து வருகின்றது. முகாப்வே நிர்வாகம் அரசியல் அதிகாரம் தமது கையில் இருந்தால் போதும், எல்லாம் சரிவரும், என்று நினைத்து நடந்ததன் பலன்களை அனுபவித்து வருகின்றது. பல கட்சி ஜனநாயகத்திற்கு இடம்கொடுத்தமை, கருத்து சுதந்திரத்திற்கு அனுமதித்தமை, லிபரல் பொருளாதாரத்தை தன்பாட்டிலே விட்டமை போன்ற காரணிகள் தற்போது மேற்குலக (முகாபேயின் மொழியில் : காலனியவாதிகள்) சக்திகள், தமக்கு சார்பாக பயன்படுத்த வாய்ப்பளித்தது போலாகி விட்டது.

இன்றுள்ள நிலை, முகாபே எந்த வித நிர்ப்பந்தத்திற்கும் அடிபணியப் போவதில்லை. வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைநகர் ஹராரேயில் சுதந்திரப்போராட்ட தியாகிகளின் ஊர்வலம் நடந்துள்ளது. எதிர்புரட்சியாளர்களை வன்முறை கொண்டு அடக்க தயாராக இருப்பதாக சூளுரைத்துள்ளனர். அப்படி வன்முறை வெடித்தால், மேற்குலக நலன்களுக்கான உள்நாட்டு முகவராக செயற்படும் எதிர்கட்சி எம்.டி.சி.யும், அதன் தலைவர் ஷங்கரையும், தமது உறுப்பினர்கள், ஆதரவாளர்களை இழக்க வேண்டி ஏற்படும். ஜிம்பாப்வே இதற்கு முன்னரும் இதுபோன்ற காட்சியை கண்டுள்ளது. எண்பதுகளில், ZANU-PF அதிகாரத்திற்கு வந்து ஒரு சில வருடங்களே இருந்த நிலையில், அன்றிருந்த இன்னொரு விடுதலை இயக்கம் , அதன் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இன்றுள்ள எதிர்க்கட்சியான எம்.டி.சி. வன்முறையை எதிகொள்ள கூடிய நிலையில் இல்லை.

முகாபே ஒரு புரட்சிக்காரன் அல்ல. சுயநலம் உள்ள அரசியல்வாதி தான். இருப்பினும், தனது ஆதரவுத்தளம் புரட்சிக்காக தமது உயிரை துச்சமாக மதித்து போராடிய, முன்னால் விடுதலைப்போரளிகளிடம் உள்ளது என்பது நன்றாக தெரியும். வெள்ளையின விவசாயிகளின் நிலங்களை பறித்தமை, கடந்த காலத்தில் பூர்த்தி செய்ய படாத, இதே முகாபெயினால் உறுதிமொழி வழங்கப்பட்ட, புரட்சியின் தொடர்ச்சியாகவே கருதப்படுகின்றது. ஜிம்பாப்வே இன்றும் நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கிறது என்றால், அது புரட்சி இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப் படவில்லை என்றே காரணம் கூறுகின்றனர். மேற்கத்திய நாடுகள், பழியை முகாபே மீது போடுகின்றன. உள்ளூர் முகாமைத்துவ குறைபாடுகள், பிழையான பொருளாதார திட்டங்கள், போன்றன தான் பிரச்சினைக்கு காரணிகள் என்கின்றன. அதன் அர்த்தம் என்ன? கறுப்பர்களுக்கு நிர்வகிக்க தெரியாது, வெள்ளையரிடம் விட்டு விடுங்கள், சிறப்பாக நடத்தி காட்டுவார்கள் என்ற காலனிய மனப்பான்மையா?

முன்னால் காலனிய நாடுகள் பேசுவது போல, ஜிம்பாப்வே எப்படி தேர்தல் நடத்த வேண்டும்? ஜனநாயகம் என்றால் என்ன? என்றெல்லாம் நாமும் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க தேவையில்லை. அந்த பொறுப்பை அந்நாட்டு மக்களிடமே விட்டு விடுவோம். அவர்கள் எதையும் தாமாகவே கற்றுக் கொள்ளட்டும். ஆனால் அதே நேரம் கறுப்பர்களின் கடமை ஒன்று உள்ளது. முன்பு ஆப்பிரிக்காவை காலனிப் படுத்திய போது, அதனை ஐரோப்பியர்கள் தமக்கு “கறுப்பர்களை நாகரீகப்படுத்த வேண்டிய கடமை” இருப்பதாக தமது செயல்களை நியாயப்படுத்தினர். நூற்றாண்டுகளுக்கு முன்பு அபகரித்த நிலங்களை, இப்போதாவது உரியவர்களிடம் ஒப்படைக்கும் நாணயம் வெள்ளையருக்கு வரவேண்டும் என்று சொல்லிக்கொடுக்க வேண்டிய கடமை கறுப்பருக்கு உண்டு.

______________________________________________

கலையகம்