Saturday, August 02, 2025

JVP இன் சிங்கப்பூர் பாணி "சகோதரத்துவ தினம்" - கறுப்பு ஜூலைக்கு வெள்ளை அடிக்கிறதா?


ஜூலை 21-23; சிங்கப்பூர், இலங்கையில் நடக்கும் "இன சகோதரத்துவ தினம்" கறுப்பு ஜூலைக்கு வெள்ளையடிக்கும் செயலா?  

இலங்கையில் கறுப்பு ஜூலை படுகொலை நினைவுகூரும் அதே காலகட்டத்தில் ஆளும் NPP(JVP) அரசாங்கம் "சகோதரத்துவ நாள்" என்ற பெயரில் பேரணி நடத்தியதை பலர் கண்டித்தனர் அல்லது கடுமையாக விமர்சித்தனர். இது "ஜூலை படுகொலைக்கு வெள்ளை அடிக்கும் செயல்" என்றும், "ஜேவிபி யின் பேரினவாத மனநிலை" என்றும், தமிழ்த் தேசிய வாதிகள் மட்டுமல்லாமல் சில தமிழ் அறிவுஜீவிகள் கூட குற்றஞ்சாட்டினார்கள். வேறு சிலர் இதன் நோக்கம் நல்லதாக இருந்தாலும், அதை நடத்த தேர்ந்தெடுத்த காலகட்டம் தவறு என்றார்கள். அதை விட "தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டார்கள்" என்பன போன்ற எதிர்ப்புக் குரல்களும் கேட்டன.

உண்மையில் இலங்கையில் சிறுபான்மை இனமான தமிழர்கள் இந்த "இன சகோதரத்துவ பேரணியை" முன்னெடுத்து இருக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் சிங்கப்பூர் உதாரணம் காட்டுவது தமிழ்த் தேசியவாதிகளின் வாடிக்கை. உண்மையில் இவர்கள் சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி குறித்து சிந்திக்கிறார்களே தவிர சிங்கப்பூர் எவ்வாறு இன முரண்பாடுகளை தீர்த்து கொண்டு முன்னேறியது என்பதை கவனிக்க தவறுகிறார்கள். தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்த செல்வநாயகம் ஒரு மலேசிய பிரஜை. அவராவது இந்த வரலாற்றை கூறி இருக்கலாம். சரி, அதை விடுவோம். 

ஒரு காலத்தில் சிங்கப்பூர் இனப்பிரச்சினையால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு. 1964 ம் ஆண்டு மிகப்பெரிய இனக் கலவரம் நடந்தது. அது வரை காலமும் நட்புடன் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்த சீனர்களும், மலேயர்களும் ஜென்ம பகைவர்களாக நடந்து கொண்டனர். சீனர்களின் பிரதேசத்தில் மலேயர்களுக்கு பாதுகாப்பு இல்லை. மலே பிரதேசத்தில் சீனர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அன்றைய கலவரத்தில் நூற்றுக்கணக்கான கொலைகள், சொத்து அழிவுகள் நடந்துள்ளன. 

1964 இனக்கலவரத்தின் பின்னர் சிங்கப்பூர் ஆட்சியில் இருந்த பிரதமர் லீ குவான் யூ பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஒவ்வொரு இனமும் தனித் தனியாக தமக்கான பிரதேசங்களில் வாழ்ந்த நிலையை மாற்றியமைக்க புதிய நவீன அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாக்கப் பட்டன. அங்கு எல்லா இன மக்களும் கலந்து வாழும் வகையில் குடியமர்த்த பட்டனர். புதிய அரசமைப்புச் சட்டம் இன அடிப்படையில் அரசியல் கட்சிகள் இருப்பதை தடுக்கிறது. இதன் மூலம் சீன பெரும்பான்மை இன கட்சியாக இருந்தாலும், மலே அல்லது தமிழ் சிறுபான்மை இனங்களை "பிரதிநிதித்துவ படுத்தும்" கட்சிகளாக இருந்தாலும் ஏனைய இனங்களை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். 

சிங்கப்பூரில் ஜூலை 21 இன நல்லிணக்க தினம் என அறிவிக்கப் பட்டது. அந்த நாளில் தான் 1964 ம் ஆண்டு இனக் கலவரம் நடந்தது. அதனை "மலே சிறுபான்மையினர் மீது சீன பெரும்பான்மையினர் நடத்திய வன்முறை வெறியாட்டம் அல்லது இனவழிப்பு" என்று தான் மலே தேசியவாதிகள் கூறி வந்தனர். அவர்களைப் பொறுத்த வரையில் "ஜூலை 21 இன நல்லிணக்க நாள்" என்பது "கறுப்பு ஜூலைக்கு வெள்ளை அடிக்கும் செயல்!" தான். ஆனால் காலப் போக்கில் சிங்கப்பூரில் வாழும் மூவின மக்களாலும் இன நல்லிணக்க தினம் ஏற்றுக் கொள்ள பட்டு விட்டது. 

சிங்கப்பூரில் சீனர்களை பெரும்பான்மையாக கொண்ட PAP, இலங்கையில் சிங்களவர்களை பெரும்பான்மையாக கொண்ட JVP ஆகிய இரண்டு கட்சிகளும் சிறுபான்மையின தேசியவாதிகள் பார்வையில் "பேரினவாத கட்சிகள்" என அழைக்கப் படலாம். ஆனால் அது தவறு. சிங்கப்பூர் PAP, இலங்கை JVP இரண்டுமே இடதுசாரிய கண்ணோட்டத்தில் இனங்களுக்கு இடையிலான நல்லுறவை உண்டாக்கும் நோக்கம் கொண்ட கட்சிகள். இன முரண்பாடுகளை கடந்த பொருளாதார முன்னேற்றம் சிங்கப்பூரில் சாத்தியம் என்றால் ஏன் இலங்கையில் சாத்தியம் இல்லை?

Saturday, April 12, 2025

மலேசியாவின் "ஈழப் பிரச்சனை"! பலர் அறியாத மலே பேரினவாத ஒடுக்குமுறை!!

 
இனப்பிரச்சினை விடயத்தில் இலங்கைக்கும், மலேசியாவுக்கும் இடையில் சில அதிசயப் படத் தக்க ஒற்றுமைகள் உள்ளன. இரண்டு நாடுகளிலும் இனப்பிரச்சனைக்கான மூல காரணம், தேர்தலில் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவ படுத்திய ஆட்சியாளர்களின் பேரினவாத கொள்கை, சிறுபான்மை இனத்தவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் எல்லாமே ஒரே மாதிரி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

👇👇👇


1. தேசிய இனங்கள்:

இலங்கை/மலேசியா

72% பௌத்த சிங்களவர்/ இஸ்லாமிய மலேயர்.

12% இந்து தமிழர்/ பௌத்த சீனர் 

7% முஸ்லிம்கள்/ இந்துக்கள் (தமிழர்கள்). 

இரண்டு நாடுகளிலும் இரண்டாவது பெரும்பான்மை இனம் தான் பெரும்பான்மை இனத்தின் பேரினவாத அடக்குமுறையால் பாதிக்கப் பட்டது. அதாவது இலங்கையில் தமிழர்கள் மாதிரி மலேசியாவில் சீனர்கள். பெரும் நகரங்களில் அரசுத் துறைகளில், வணிகத்தில் சிறந்து விளங்கியதால் நாட்டுப் புறங்களில் வாழ்ந்த பெரும்பான்மை இனத்தவரின் பொறாமைக்கும், வெறுப்புக்கும் ஆளாகினர். எங்கேயும் இனப் பிரச்சினைக்கு பின்னால் இருப்பது பொருளாதார பிரச்சினை தான்.

2. ஆட்சி மொழி:

இலங்கையிலும்,  மலேசியாவிலும் ஆரம்பத்தில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக இருந்தது. 

இலங்கையில் 1956 தேர்தலில் பெருமளவு சிங்கள வாக்குகளை வென்ற SLFP சிங்களத்தை ஆட்சி மொழி ஆக்கியது. அதே மாதிரி மலேசியாவில் 1967 தேர்தலில் பெருமளவு மலேயா வாக்குகளைப் வென்ற Pan- Malayan Islamic Party மலே மொழியை ஆட்சி மொழி ஆக்கியது. 

3. இனக் கலவரம்:

இலங்கையில் 1956 தேர்தலுக்கு பின்னரான ஆட்சி மாற்றத்தின் விளைவாக கொழும்பு நகரில் தமிழர்களுக்கு எதிரான இனக் கலவரம் நடந்தது. அதே மாதிரி மலேசியாவில் 1967 தேர்தலுக்கு  பின்னரான ஆட்சி மாற்றத்தின் விளைவாக கோலாலம்பூர் நகரில் சீனர்களுக்கு எதிரான இனக் கலவரம் நடந்தது. நூற்றுக்கணக்கான சீனர்கள் கொல்லப்பட்டனர். அது மலே- சீன இனங்களுக்கு இடையில் மிகப்பெரிய விரிசலை உண்டாக்கியது. 

உண்மையில் இலங்கையை விட மலேசியாவில் தான் சிறுபான்மை இனத்தவர் மீதான ஒடுக்குமுறை மிகக் கடுமையாக உள்ளது. 

குறிப்பாக, மலேசிய பிரஜைகள் அனைவரும் அரசமைப்பு சட்டத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். (பெரும்பான்மை இனத்தவருக்கு சிறப்புரிமை வழங்குகிறது என்றெல்லாம் விமர்சிக்க முடியாது.) பிற மதத்தவர்களும் 

இஸ்லாமிய மதத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும். (முன்னுரிமை அல்ல, அதற்கும் மேலே!) 

அதை விட, "சர்ச்சைக்குரிய" விஷயங்களை பற்றி பேசுவதும், எழுதுவதும் தடைசெய்யப் பட்டுள்ளது. அதாவது மலே இனத்தவரின் உரிமைகள் தொடர்பாக யாரும் கேள்வி எழுப்ப முடியாது. மொழிப் பிரச்சினை பற்றி பேச முடியாது. 


பிற்குறிப்பு:

இவ்வளவு அடக்குமுறை இருந்திருந்தால் ஏன் மலேசியாவில் சீனர்கள் தனி நாடு கேட்டு ஆயுத போராட்டம் நடத்தவில்லை என்று யாராவது கேட்கலாம். 2 ம் உலகப் போர் காலத்தில் இருந்து ஒரு தசாப்த காலமாக கம்யூனிஸ்டுகளின் ஆயுத போராட்டம் நடந்தது. கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும்பான்மையாக இருந்தவர்கள் சீனர்கள். கணிசமான அளவில் மலேயர், தமிழர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். இன வேற்றுமை கடந்த வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்பதில் மலேசிய அரசும், முன்னாள் பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களும் உறுதியாக இருந்தனர். அயல் நாடுகளான வியட்நாம், லாவோஸ், கம்போடியாவில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வந்த மாதிரி மலேசியாவில் நடக்கலாம் என்ற அச்சம் நிலவியது. 

சீனர்களை பெரும்பான்மையாக கொண்ட சிங்கப்பூரில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறும் வாய்ப்பு காணப் பட்டதால் தான் சிங்கப்பூரை தனி நாடாக பிரித்து கம்யூனிச எதிர்ப்பாளர் லீ குவான் யூவிடம் கொடுத்தனர். மலேசிய அரசும் அதை தனக்கு சாதகமான விஷயமாக பார்த்தது. அப்போது தானே இஸ்லாமிய- மலே பேரினவாத கொள்கையை முழு வீச்சில் செயற்படுத்த முடியும்?

அனுர தமிழர்களுக்கு எதிரானவரா? விஷமிகளின் இனவாத பிரச்சாரம்!


ஜனாதிபதி அனுர குமார, முன்னொரு காலத்தில், அதாவது அரசும் புலிகளும் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய காலத்தில், "தமிழின படுகொலையை ஆதரித்து", அல்லது "தமிழ் மக்களுக்கு எதிரான" ஆர்ப்பாட்டத்தில் கல‌ந்து கொண்டதாக ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் செய்யப் படுகிறது.

அதற்கு "ஆதாரமாக" இந்தப் படத்தை பகிர்ந்து உள்ளனர். சரி, இந்தப் படத்தில் ஆர்ப்பாட்டத்தில் இருந்த பதாகைகளில்  என்ன எழுதி இருக்கிறது என்று யாராவது வாசித்து கூற முடியுமா? 

//வன்னிப் புலிகளுக்கு எதிராக சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சக்தியை கட்டி எழுப்புவோம்.// என்று ஒன்றில் எழுத பட்டுள்ளது. 

கவனிக்கவும்: "தமிழர்களும்"!

//LTTE தலைவர்களை Hague(ICC) இல் விசாரி// என்று இன்னொன்றில் உள்ளது. 

கவனிக்கவும்: "தலைவர்களை"! 

இது எப்படி தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு ஆகும்? கண்ணுக்கு எட்டிய வரையில் "தமிழர்களை அழிக்க வேண்டும்" என்பது மாதிரியான எதையும் காணவில்லை. 

இப்போது எழும் கேள்வி, புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால் அதை எப்படி தமிழர்களுக்கு எதிரானதாக கருத முடியும்? ISIS க்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தால் அதை முஸ்லிம்களுக்கு எதிரானதாக கருத முடியுமா? 

"ஏன் புலிகள் தமிழர்கள் இல்லையா?" என்று யாராவது ஒரு அறிவாளி கேள்வி கேட்க கூடும். அப்படி பார்த்தால் "அரச படையினர் சிங்களவர்கள்...", "ISIS உறுப்பினர்கள் முஸ்லிம்கள்..." இப்படி ஏதாவது சாட்டுபோக்கு சொல்லி தப்பிக்கலாம்.  மேற்குறிப்பிட்ட ஆயுதபாணிகளை எதிர்த்தால் அது ஒட்டு மொத்த இனத்திற்கு எதிரான நடவடிக்கை என்று கருதுவது கூட இனவாதக் கண்ணோட்டம் தான். 

அதை விட ஈழப் போர் (இதையும் "ஈழ போராட்டம்" என்று திரிப்பார்கள். போராட்டம் அல்ல போர்) நடந்த காலத்தில் ஒரு பக்கம் அரச படையினரும் மறுபக்கம் புலிகளும் போரில் ஈடுப்பட்ட இரண்டு தரப்பினர் ஆவர். ஒரு தரப்பான புலிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் அது "தமிழின அழிப்பு ஆதரவு" என்று ஒரு தற்குறி மட்டுமே சொல்ல முடியும். இப்படி பாருங்கள். 

அரச படையினரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தால் அது "சிங்கள இன அழிப்பு ஆதரவு" என்று கூற முடியுமா? எப்போதுமே இனவாதிகள் அவ்வாறு தான் திரிப்பார்கள். 

மக்கள் தான் இனவாதிகள் விரித்த வலையில் விழுந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும்.

Saturday, March 29, 2025

ஆனையிறவு தொழிற்சாலை திறப்பு, தமிழ்த்தேசிய தற்குறிகள் கதறல்!

30 வருட கால யுத்தம் முடிந்த பின்னர் வடக்கில் இயங்காமல் இருந்த தொழிற்சாலைகள் மீண்டும் கட்டி எழுப்ப படுகின்றன. முதலாவதாக ஆனையிறவு உப்பு தொழிற்சாலை இன்று திறந்து வைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் வடக்கில்  நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.  உள்ளூர் உற்பத்தியை பெருக்குவதன் மூலம் இலங்கை முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்யலாம். சில மாதங்களுக்கு முன்னர் உப்பு இறக்குமதி செய்த நிலைமையை நினைத்து பாருங்கள். 

மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ் இன உணர்வு பேசும் தமிழ்த் தேசிய போலிகளுக்கு இதைக் கண்டு பொறுக்க முடியவில்லை. பேஸ்புக்கில் இனமொன்றின் குரல் என்ற பெயரில் இனவாத பரப்புரை செய்யும் ஒரு நபர் மகிந்த, மைத்திரி, ரணில் ஆகியோர் ஏற்கனவே இதை செய்திருந்தனர் என்று செம்பு தூக்கி தனது வலதுசாரிய விசுவாசம் காட்டுகிறார். கூடவே புலிகள் ஆனையிறவை கைப்பற்றிய பின்னர் UNICEF உதவியில் உப்பளத்தை இயக்கினார்கள் என்று புளுகி தள்ளுகிறார். 

அட லூசுப்பயலே! உப்பள தொழில் துறைக்கும் UNICEF க்கும் என்ன சம்பந்தம்? முதலில் UNICEF என்றால் என்னவென்று தெரியுமா? அதை விட, பாதுகாப்பற்ற, கடுமையான யுத்தம் நடக்கும் ஒரு இடத்தில் முதலிட எந்த மடையன் முன்வருவான்? பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும். 

அது போகட்டும். "நானும் ரவுடி தான்" பாணியில், அண்மையில் தான் இடதுசாரியாக ஞானஸ்நானம் பெற்று விட்டதாக கூறும் ஒரு நண்பர், 30 வருடங்களுக்கு பின்னர் திறக்கப்பட்ட உப்புத் தொழிற்சாலை பற்றி வாயே திறக்கவில்லை. அங்கு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் தமிழர்கள் தானே என்று மகிழ்ச்சி அடையவில்லை. அதற்கு மாறாக தொழிற்சாலை தயாரித்த உப்பு பாக்கெட்டில் தமிழ் இல்லை என்று மயிர் பிளக்கும் விவாதம் செய்கிறார். அதாவது ஆங்கிலம், சிங்களம், தமிழ் ஆகிய மூன்று மொழியில் "ரஜ சோல்ட்" (Raja salt) என்ற brand name உள்ளது. அது ஒரு பிரச்சினை? ஒரு பெயரை வைத்தே பிழைப்பு அரசியல் செய்யும் மேதாவிகள் இவர்கள். 

சிலருக்கு தொட்டது எல்லாவற்றுக்கும் இனவாத லேபிள் ஒட்டினால் தான் நிம்மதியான தூக்கம் வரும்.  "உங்களுக்கு தெரியாது தோழர்... இப்படித்தான் சிங்களவன் ஆக்கிரமிக்கிறான்..." என்று வகுப்பு எடுப்பார்கள்.  இவ்வளவு காலமும் தெற்கு பொருளாதாரத்தில் வளர்ந்து கொண்டிருந்தது, வடக்கு பின்னடைவை கண்டு கொண்டிருந்தது. ஏற்கனவே இருந்த ஒன்றிரண்டு தொழிற்சாலைகளையும் யுத்தம் காரணமாக மூடி விட்டார்கள். 

இதனால் வடக்கின் பொருளாதார உற்பத்தி இலங்கையிலேயே மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. ஏதாவது வெளிநாட்டு நிறுவனம் முதலிட வந்தாலும் தமிழ்த் தேசிய கட்சிகள் போராட்டம் நடத்தி விரட்டி அடித்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஏனென்று கேட்டால், தாயகத்தின் வளங்களை கொள்ளை அடிக்கிறார்கள் என்பார்கள். இவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழர்களுக்கு தானே வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கேட்டால் வெளிநாடுகளுக்கு போகலாம் என்பார்கள். 

அந்நிய கம்பனிகள் முதலிட விடாமல் விரட்டி அடித்த காரணத்தால் தவறவிட்ட பொருளாதார உற்பத்தி துறை குறித்து இந்த அறிவுஜீவிகள் வாய் திறக்க மாட்டார்கள். இப்போது ஆட்சியில் உள்ள NPP அரசு நேரடியாக தலையிட்டு ஆனையிறவு உப்புத் தொழிற்சாலையை இயங்க வைத்துள்ளது. அது குறித்து நல்லது சொல்லா விட்டாலும் குறை கூறாமல் இருக்கலாம் தானே? நீங்கள் இவ்வளவு காலமும் "எமது தாயகம்... எமது தமிழ் இனம்..." என்றெல்லாம் பிதற்றியது பகல் வேஷமா? 

பேஸ்புக்கில் இனவாதத்தின் குரல் Fake ID சொல்கிறது, "தமிழ் முதலீட்டாளர்கள் வந்து கேட்ட நேரம் கொடுக்கவில்லையாம்!" ஒரு முதலீட்டாளர் தமிழனாக இருந்தால் என்ன, சிங்களவனாக இருந்தால் என்ன? எந்த முதலாளியும் இலாபம் இல்லாமல் எதையும் செய்ய மாட்டார்கள். தொழிலாளர் உழைப்பை சுரண்டி வருவது தான் இலாபம். ஒரு தனியார் நிறுவன முதலாளி, அவன் தமிழனாக இருந்தாலும் இலாபம் மட்டுமே குறிக்கோள். 

அது போகட்டும். தமிழ் முதலீட்டாளர்கள் மீது இந்தளவு அக்கறை உள்ள தாங்கள் தமிழ் தொழிலாளர்களை கண்டுகொள்ளாத காரணம் என்ன? இது தானா உங்களது வர்க்க பாகுபாடு காட்டும் தமிழ்த் தேசியம்? கங்கையில் குளித்தாலும் காகம் காகம் தான். தமிழ்த் தேசியம் பேசினாலும் வலதுசாரி வலதுசாரி தான்.

Sunday, February 16, 2025

இலங்கையில் இறுதியில் கம்யூனிசம் வென்றது!

 



இலங்கையில் இறுதியில் கம்யூனிசம் வென்றது! 

யாழ்ப்பாணத்திற்கு சென்ற பிரதமர் ஹரிணி, மறைந்த கம்யூனிச தோழர் மணியம் வீட்டுக்கு விஜயம் செய்துள்ளார். தோழர் மணியம், சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுபினர். அதே கட்சியில் இருந்து பிரிந்த இளைஞர் அணி தான் பிற்காலத்தில் JVP என்ற பெயரில் இயங்கியது.

இருப்பினும், அன்றைய JVP யினருக்கு, தாய்க் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுடன் நட்பு ரீதியிலான தொடர்புகள் இருந்துள்ளன. யாழ்ப்பாணத்தில், குறிப்பாக சுன்னாகம் பகுதியில் JVP செயற்பட்டு வந்தது. பிற்காலத்தில், JVP யின் ஆயுதமேந்திய கிளர்ச்சியை ஈவிரக்கமின்றி ஒடுக்கிய அரச அடக்குமுறை காரணமாக யாழ்ப்பாண கம்யூனிஸ்ட் தோழர் களுடனான தொடர்புகள் முற்றாக துண்டிக்கப் பட்டு விட்டன. 

அண்மைக்காலமாக JVP பல வெகுஜன அமைப்புகளை இணைத்து NPP என்ற பெயரில் தேர்தலில் போட்டி இட்டதும், பிரதமர் ஹரிணி NPP சார்பில் போட்டியிட்டு அதிகப் படியான மக்களின் விருப்பு வாக்குகளை பெற்றவர் என்பதும் அனைவரும் அறிந்ததே.

தோழர் மணியம் குறித்து பேஸ்புக்கில் விஜய பாஸ்கரன் எழுதிய சுருக்கமான பதிவு:


தோழர் மணியம் மறுபடியும் வந்துவிட்டார்.

//தோழர் கே ஏ சுப்பிரமணியம் வட இலங்கையின் முக்கியமான கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர். ஒரு முழுமையான கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்து மறைந்தவர். அவருடைய திருமணத்தால் சொந்தங்களை இழந்தார். சொந்த தாயின் மரணத்துக்கும் அழைக்கப்படவில்லை. தெரிவிக்கப்படவும் இல்லை. போராட்டங்களால் இருந்த வேலைகளையும் இழந்தார். வறுமை வரவேற்று இறுக அணைத்தபோதும் கொள்கை மாறாத மனிதராக வாழ்ந்து மறைந்தவர். அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லத்தை பிள்ளைகள் பொதுமக்கள் பாவனைக்கான நூலகமாக மாற்றி பயன்பாட்டுக்கு விட்டுள்ளனர்.

சில தினங்கள் முன்பாக அமிர்தலிங்கம் நினைவாக அவரது பிள்ளைகள் அவர் வாழ்ந்த வீட்டை நினைவு சின்னமாக மாற்றி ஆளுனர் வேதநாயகன் அவர்களால் திறந்து வைத்தனர். இந்த இரண்டு நிலையங்களும் ஒரே பகுதிகளில் அமைந்துள்ளன.

1966 ஒக்டோபர் 21 இல் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் தோழர் மணியம் அவர்களும் முக்கியமானவர். இதற்காக நடந்த ஊர்வலத்தில் மணியம் பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டார். இந்த பொலிஸ் படையை தாக்குதலுக்கு எஸ்.பி. சுந்தரலிங்கம் முக்கிய காரணம். அதன் பின்னணியில் அமிர்தலிங்கம்,  அன்றைய அமைச்சர் எம் திருச்செல்வம்( நீலனின் அப்பா) இருந்தார்கள்.

இந்த போராட்டம் உச்சம் பெற மணியம் போன்ற தோழர்களும் பின்னணியில் நின்றார்கள். இதை அறிந்த அமிர்தலிங்கம் இது கம்யூனிச போராட்டம் என பாராளுமன்றத்தில் கத்தினார்.

சங்கானை சங்காயாக மாறிவிட்டதாக பேசினார்.இந்த சூழ்ச்சிகரமான பேச்சு தோழர் மணியத்தையும் உள்ளடக்கியதாக இருந்தது.1970 தேர்தலில் வட்டுக்கோட்டையில் அமிர்தலிங்கம் தோற்கடிக்கப்பட்டார். அதற்கு தோழர் மணியமும் ஒரு காரண கர்த்தா.

காலம் செல்ல கம்யூனிச அமைப்புகள் உடைந்தபோதும் மணியம் வறுமையோடு அதே பாதையில் பயணித்தார். பல உயிராபத்துகளையும் சந்தித்தார்.

அன்று தோழர்கள் மீது பொலிஸ் ஏவ காரணமாக இருந்த அமிர்தலிங்கம் பின்னாளில் அதே பொலிஸ் அராஜகத்தை எதிர்த்து நிற்கும் நிலைக்கு ஆளானார். இறுதியில் சுட்டுத் தள்ளப்பட்டார். அந்தக் கொலைக்காக பரிதாபம் கொள்ள இன்றுவரை யாருமே இல்லை.

ஆனால் இன்று மணியம் வாழ்ந்த இடத்தைத் தேடி கடற்தொழில் அமைச்சர் நாட்டின் பிரதமர் என தேடி வந்துள்ளனர். மறைந்துபோன தோழர் மணியம் மீண்டும் எழுந்துவிட்டார். மணியம் அவர்களின் வரலாறு மீண்டு வருகிறது. அவரோடு கூடவே பயணித்த அம்மாவுக்கு இறுதிக் காலத்தில் வாழ்ந்த வாழ்வுக்கு அர்த்தம் கொடுத்துள்ளது.//


நன்றி:

- Vijaya Baskaran