Showing posts with label போர்க்குற்றங்கள். Show all posts
Showing posts with label போர்க்குற்றங்கள். Show all posts

Friday, April 04, 2014

இனப் படுகொலை விசாரணை: தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி!


இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றங்கள் பல இயங்கி வந்துள்ளன. வரலாறு எப்போதும் வென்றவர்களால் எழுதப்படுகின்றது என்று சொல்வார்கள். அதே மாதிரி, இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணைகளும் வென்றவர்களால் மட்டுமே நடத்தப் படுகின்றன. எங்கேயும், எப்போதும், தோற்றவர்கள் மட்டுமே குற்றவாளிக் கூண்டில் ஏற்றி தண்டிக்கப் பட்டுள்ளனர். வென்றவர்கள் நீதிபதி ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு தீர்ப்புக் கூறி உள்ளனர். 

உள்நாட்டுப் போர்களில் வென்ற பிரிவினர், போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் சம்பந்தமாக எந்தவிதமான தண்டனையையும் அனுபவிப்பதில்லை. உலகம் முழுவதும் இதுவே பொதுவான நடைமுறையாக இருந்து வந்துள்ளது. பத்து வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றமும், நீதியானது அல்ல. கம்போடியா, ருவாண்டா, சியாரா லியோன், யூகோஸ்லேவியா ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களை விசாரித்த சிறப்பு நீதிமன்றங்கள், வென்றவர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டுள்ளன. 

இந்த உண்மையை, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்ற வழக்குகளில் பங்கெடுத்த Geert Jan Knoops என்ற வழக்கறிஞர் ஒரு புத்தகமாக எழுதி இருக்கிறார். சர்வதேச நீதிமன்றத்தின் இருண்ட பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும் அந்த நூலில் எழுதப்பட்டுள்ள தகவல்கள், தமிழர்களுக்கும் பிரயோசனப் படும். அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

இலங்கையில் நடந்த ஈழப்போரின் இறுதியில் இனப்படுகொலை நடந்துள்ளது என்றும், அதனை சர்வதேச சமூகம் விசாரித்து குற்றவாளிகளை தண்டிக்கும் என்றும் பல தமிழர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, மேற்கத்திய ஆதரவு வலதுசாரித் தமிழ் தேசியவாதிகள் அதனை ஒரு அரசியல் பிரச்சாரமாக முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர். போர்க்குற்றங்கள் என்ற சொற்பதத்தை பாவிப்பதைக் கூட அவர்கள் விரும்புவதில்லை.

"இனப்படுகொலை விசாரணை நடத்து!" என்று, உலகத் தமிழர்கள் எல்லோரும் ஒன்றாக ஒரே குரலில் உரத்துச் சொன்னால் போதும். சர்வதேச சமூகம் செவி கொடுக்கும். யூகோஸ்லேவியா, ருவாண்டா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிப்பதற்காக, விசேட சர்வதேச நீதிமன்றங்கள் அமைக்கப் பட்டன. அதே மாதிரி, இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை விசாரிப்பதற்கும், எதிர்காலத்தில் ஒரு சர்வதேச நீதிமன்றம் அமைக்கப் படும் என்று உறுதியாக நம்புகின்றனர். இவ்வாறு நம்புவோர் மத்தியில், மெத்தப் படித்த அறிவுஜீவிகளும், சட்டத் துறை நிபுணர்களும் அடங்குவார்கள்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான நவீன உலகம், முன்னரை விட நாகரிகமடைந்து விட்டதாகவும், மேற்கத்திய நாடுகள் மனித உரிமைகளை பாதுகாப்பதில் குறிப்பிடத் தக்க வெற்றி பெற்றுள்ளதாகவும் பலர் நம்புகின்றனர். ஆனால், உண்மை நிலைமையோ, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக உள்ளது. அண்மைக் கால உலக வரலாற்றில், சிறிதும் பெரிதுமாக முப்பதுக்கும் மேற்பட்ட போர்கள் நடந்துள்ளன, சில இப்போதும் தொடர்கின்றன.

யுத்தத்தில் ஈடுபடும் அரச படைகளோ, அல்லது ஆயுதக் குழுக்களோ மனித உரிமைகளை மதிப்பதில்லை. உலகில் எந்தவொரு இராணுவமும், ஆயுதக் குழுவும் ஐ.நா. போர் விதிகளை மதித்து யுத்தம் செய்ததாக சரித்திரமே கிடையாது. ஆகவே, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச நீதிமன்றம், சர்வதேச சட்டங்கள் இவற்றை சரியாக நடைமுறை படுத்தி விட்டால் போதும், உலகம் முழுவதும் பாதுகாப்பானதாக மாறிவிடும் என்று நம்புவதற்கு இடமில்லை. இன்றைய உலகில், அது ஒரு கற்பனாவாதமாகவே இருக்கும்.

உலகில் சர்வதேச சட்டம் என்ற ஒன்று இருக்கிறதா? அதாவது ஒரு நாட்டிற்குள் எல்லா இடங்களிலும் செல்லுபடியாகும் சட்டம் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறோம். அதே மாதிரி, உலகம் முழுவதும் எல்லா நாடுகளையும் கட்டுப்படுத்தும் பொதுவான சட்டம் இருக்கிறதா? சட்ட வல்லுனர்கள் மத்தியில் அது தொடர்பாக மிகுந்த குழப்பம் நிலவுகின்றது. ஏனென்றால், புரிந்துணர்வின் அடிப்படையில் நாடுகள் தமக்குள் சில உடன்படிக்கைகளை செய்துள்ளன. பெரும்பாலான தருணங்களில், அதையே நாம் சர்வதேச சட்டம் என்று புரிந்து கொள்கிறோம்.

சூடான் நாட்டு ஜனாதிபதி பஷீர், டாபூர் இனப்படுகொலை குற்றச்சாட்டில் தேடப்படுகிறார் என்று, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்தது. அந்த உத்தரவானது, ஆரம்பித்த நாளில் இருந்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் செயற்பாடுகளில் குறிப்பிடத் தக்க சாதனையாக கருதப் பட்டது. ஆனால், அதில் ஏற்பட்ட சிக்கல்களை பலர் அவதானிக்கவில்லை.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கான ஒப்பந்தத்தில் சூடான் கைச்சாத்திடவில்லை. அந்த வகையில், பஷீரை கைது செய்ய வேண்டுமென்றால், ஐ.நா. பாதுகாப்புச் சபையின் ஒத்துழைப்பு அவசியம். இதிலே வேடிக்கை என்னவென்றால், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும், மூன்று வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா கூட, அந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை.

பஷீருக்கு எதிரான பிடிவிறாந்து அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக கொடுக்கப் பட்டது என்பது இரகசியம் அல்ல. இந்த விடயத்தில் அமெரிக்காவின் அரசியல் இலாபம் இருப்பதை உணர்ந்து கொண்ட ஆப்பிரிக்க ஒன்றிய நாடுகள் ஒத்துழைக்க மறுத்தன. ஏற்கனவே, சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றங்கள், ஆப்பிரிக்கர்களை மட்டுமே தண்டிப்பதில் குறியாக இருப்பதாக பலத்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், பஷீரை கைது செய்யும் பொறுப்பை, சூடான் அரசிடம் ஒப்படைக்குமாறு, ஆப்பிரிக்க ஒன்றியம் சர்வதேச நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது.

இதற்கிடையே, அமெரிக்காவின் "பஷீர் எதிர்ப்புக் கொள்கை" ஒரு முடிவுக்கு வந்தது. அதாவது, எண்ணை வளம் நிறைந்த தெற்கு சூடானை பிரிப்பதே, அமெரிக்காவின் நோக்கமாக இருந்துள்ளது. டாபூர் இனப்படுகொலை விவகாரம், பஷீருக்கு அழுத்தம் கொடுக்கவே பயன்பட்டது. தற்போது, தெற்கு சூடான் தனி நாடாகி விட்டதால், பஷீரை கைது செய்வதற்கான பிடிவிறாந்து கிடப்பில் போடப் பட்டு விட்டது.

இனப்படுகொலைகளை விசாரிக்கும் சர்வதேச விசேட நீதிமன்றங்கள், மேற்கத்திய நாடுகளின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே நிறுவப் படுகின்றன. அதனால், நீதிமன்றங்கள் அரசியல் மன்றங்களாகி விடுகின்றன. அங்கே நீதிக்குப் பதிலாக, அரசியல் கருத்துக்களே தீர்ப்புக்களாக கூறப் படுகின்றன. போர்க்குற்ற, இனப்படுகொலை விசாரணை நீதிமன்றம் ஒவ்வொன்றையும் விரிவாக ஆராய்ந்தால், இந்த உண்மை புலப்படும். 

கம்போடியாவில் நடந்த இனப்படுகொலையை விசாரிப்பதற்கு, கம்போடிய விசேட நீதிமன்றம் அமைக்கப் பட்டது. 15000 பேர் கொன்று குவிக்கப் பட்ட, சித்திரவதைக் கூடம் ஒன்றிற்கு பொறுப்பாக இருந்த ஒருவருக்கு, இருபது வருட தண்டனை வழங்கப் பட்டது. பலியானவர்களின் குடும்பத்தினர் திருப்தியடையா விட்டாலும், அது அன்று பெரிதாக சிலாகித்துப் பேசப் பட்டது. ஆனால், பல முக்கிய புள்ளிகள் தண்டனையில் இருந்து தப்பி விட்டனர்.

கம்போடியாவில் நடந்த இனப்படுகொலைக்கு, இறுதியில் நீதி வழங்கப் பட்டு விட்டது என்று பலர் கூறலாம். ஆனால், இதிலே ஒரு முக்கியமான விடயத்தை கவனிக்கத் தவறி விடுகிறோம். கம்போடியாவில் நடந்த உள்நாட்டுப் போரில் தோல்வியடைந்த பொல்பொட் ஆதரவு கமர் ரூஜ் இயக்கத்தவர் மட்டுமே தண்டிக்கப் பட்டனர். அவர்களுடன் கூடவிருந்த, இனப்படுகொலையில் பங்கெடுத்த ஒரு பிரிவினர், இன்றைய கம்போடிய அரசாங்கத்தில் உயர்ந்த பதவிகளில் உள்ளனர். அந்தப் பிரிவினரை, சிலர் எதிரிக்கு காட்டிக் கொடுத்த துரோகக் கும்பல் என்று தூற்றலாம். ஆனால், சர்வதேச சமூகம் அத்தகைய துரோகக் கும்பல்களுடன் ஒத்துழைப்பதில் திருப்தி அடைகின்றது.

கமர் ரூஜில் இருந்து பிரிந்து சென்ற ஹூன் சென் தலைமையிலான குழுவினர், வியட்நாம் படைகளுடன் சேர்ந்து ஆட்சியை கைப்பற்றினார்கள். அவர்களின் ஆட்சியதிகாரம் இன்று வரை நிலைத்திருக்கிறது. ஒரு நாள், தங்களையும் இனப்படுகொலை குற்றச்சாட்டில் தண்டிப்பார்கள் என்று, கம்போடியாவின் இன்றைய ஆட்சியாளர்கள் அஞ்சுவார்களா? அதற்கான சாத்தியமே கிடையாது. ஏனென்றால், இன்றைய ஆட்சியாளர்கள் தான் கம்போடிய சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கு துணை நின்றுள்ளனர். அதாவது, இது தோற்றவர்களுக்கு எதிரான வென்றவர்களின் நீதி.

சியாரா லியோன் போர்க்குற்றங்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், லிபியாவின் ஆதரவைப் பெற்ற சாங்கோவின் படையினரை மட்டுமே தண்டித்தது. ஏனென்றால் அவர்கள் தான் சியாரா லியோன் போரில் தோல்வி அடைந்தவர்கள். அவர்களுக்கு உதவியாக இருந்த அயல் நாட்டு லைபீரியாவின் ஜனாதிபதியாக இருந்த சார்ல்ஸ் டெயிலர் பதவியில் இருந்து அகற்றப் பட்டார். பின்னர் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் நிறுத்தப் பட்டார்.

சியாரா லியோன் போர்க்குற்ற விசாரணையின் முடிவில், டெயிலர் இறுதி வாக்குமூலம் கொடுக்கும் நேரம், நீதிபதிகள் அதை பதிவு செய்ய மறுத்தனர். அதற்கு காரணம், விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க தூதரகத்தின் இரகசிய ஆவணங்களை, டெயிலர் தனது வாக்குமூலத்தில் மேற்கோள் காட்டி இருந்தார். "டெயிலர் விடுதலை செய்யப் பட்டால், புதியதொரு போர் வெடிக்கும்" என்று அமெரிக்க தூதரகம் எச்சரித்திருந்தது. விசாரணை முழுமையடையாமலே, நீதிபதிகள் தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிப்பதைக் கண்ட டெயிலர் வெளிநடப்புச் செய்தார்.  

ருவாண்டாவில் நடந்த இனப்படுகொலை உலகம் முழுவதையும் உலுக்கியது. அந்த நாட்டில் இனப்படுகொலை தொடங்குவதற்கு முன்பே, அங்கே ஒரு ஐ.நா. சமாதானப் படை நிலை கொண்டிருந்தது. "இன்னும் இரண்டாயிரம் போர்வீரர்களை உடனடியாக அனுப்பினால், பேரழிவு ஏற்படுவதில் இருந்து தடுத்து நிறுத்த முடியும்" என்று, சமாதானப் படை தளபதி Romeo Dallaire கேட்டிருந்தார். ஐ.நா. தலைமையகம் அதற்கு எந்தப் பதிலும் கூறவில்லை. மேலதிக நிதி கொடுப்பதற்கு அமெரிக்கா மறுத்து விட்டது. அதனால், ஏற்கனவே ருவாண்டாவில் இருந்த அமைதிப் படையினரின் எண்ணிக்கை குறைக்கப் பட்டது. அதற்குப் பிறகு தான், அந்த நாட்டில் பல இலட்சம் மக்கள் இனப்படுகொலைக்கு பலியானார்கள்.

2004 ம் ஆண்டு, அன்றைய ஐ.நா. செயலதிபர் கோபி அனன், ருவாண்டாவில் நடந்த தவறுக்காக வருத்தம் தெரிவித்தார். இனிமேல், "அது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாக" கூறினார். "உலகில் எந்த நாட்டில் இனப்படுகொலை நடந்தாலும், ஐ.நா. அங்கே உடனடியாக தலையிடும்" என்று உறுதி மொழி அளித்தார். "குடிகாரன் பேச்சு விடிஞ்சாப் போச்சு", என்றொரு தமிழ்ப் பழமொழி உண்டு. 2009 ம் ஆண்டு, ஈழத்தில் இனப்படுகொலை நடந்த நேரம், ஐ.நா.வின் உறுதிமொழி காற்றோடு பறக்க விடப் பட்டது. 

"எது எப்படி இருந்தாலும், ருவாண்டா இனப்படுகொலை விடயத்தில், இறுதியில் நீதி நிலைநாட்டப் பட்டு விட்டது தானே?" என்று சிலர் கேட்கலாம். அதுவும்,  தோற்றவர்களை தண்டிக்கும், வென்றவர்களின் நீதி தான். ருவாண்டாவில் முன்பிருந்த ஹூட்டு இனத்தவரின் அரசை தூக்கியெறிந்து  விட்டு, அந்த இடத்தில் துட்சி இனத்தவரின் அரசு அமைந்துள்ளது. அங்கு நடந்த உள்நாட்டுப் போரில், முன்பு ஆட்சியதிகாரத்தை வைத்திருந்த ஹூட்டு இராணுவம் தோல்வியடைந்தது. துட்சிகளின் கிளர்ச்சிப் படை வென்றது.

ருவாண்டா இனப்படுகொலையினை விசாரிக்கும், சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டவர்களில் பெரும்பாலானோர், போரில் தோற்ற ஹூட்டு இனத்தை சேர்ந்த குற்றவாளிகள் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. விரல் விட்டு எண்ணக் கூடிய துட்சி இன குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப் பட்டனர். (அவர்களும் முக்கியமான புள்ளிகள் அல்ல.) அது ஒரு சர்வதேச நீதிமன்றத்தின் நடுநிலைமை நாடகம். கடந்த இருபதாண்டுகளாக ஆட்சியில் அமர்ந்திருக்கும், துட்சி அரசு அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. இன்றைய ருவாண்டா அரசாங்கத்தில் பதவி வகிக்கும் சிலர், ருவாண்டா ஜனாதிபதி போல் ககாமே உட்பட, நடந்த போரில் இனப்படுகொலை தொடர்பான குற்றங்களை புரிந்திருந்தாலும், அவர்கள் யாரும் தண்டிக்கப் படவில்லை. இனிமேலும் தண்டிக்கப் படுவார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.

"யூகோஸ்லேவியா நீதிமன்றம் வித்தியாசமானது, அது போரில் வென்றவர்களை தானே தண்டித்தது?" என்று யாராவது வாதாடலாம். யூகோஸ்லேவிய குடியரசுகளில் நடந்த போர்களில், ஆரம்பம் முதலே அமெரிக்க, ஐரோப்பிய அரசுகள் தலையிட்டு வந்தன. அனைத்துப் போர்களிலும் செர்பிய பெரும்பான்மை இனம் வென்று கொண்டிருந்ததாக, மேற்கத்திய ஊடகங்கள் எம்மை நம்ப வைத்தன. ஒரு கட்டம் வரையில் மட்டுமே அந்தக் கருதுகோள் சரியாகும்.

இறுதியாக நடந்த கொசோவோ போரிலும், நேட்டோ படைகள் விமானக் குண்டுகள் போட்டு தான் போரை முடித்து வைத்தன.  நேட்டோ நாடுகள் தான், செர்பியரின் மேலாதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தன. சேர்பியப் படைகள் கொசோவோவை விட்டு பின்வாங்கிச் சென்றன. நேட்டோ படைகளும், அல்பேனிய கிளர்ச்சிக் குழுவும், வெற்றி வீரர்களாக கொசோவோவுக்குள் பிரவேசித்தனர். 

ஆகவே, யூகோஸ்லேவியப் போர்கள் அனைத்திலும் தோற்றவர்கள்: செர்பியர்கள். வென்றவர்கள்: மேற்கத்திய நேட்டோ நாடுகள். போரில் வென்ற நேட்டோ நாடுகள் தான், யூகோஸ்லேவியாவுக்கான சர்வதேச நீதிமன்றத்தை உருவாக்கினார்கள். அவர்களே அதற்கு நிதி வழங்கினார்கள். அந்த நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, தண்டிக்கப் பட்டவர்கள் எல்லோரும் செர்பிய குற்றவாளிகள் தான். கண்துடைப்புக்காக, விரல் விட்டு எண்ணக் கூடிய குரோவாசிய குற்றவாளிகளும் தண்டிக்கப் பட்டனர். யூகோஸ்லேவியாவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைகள் அரசியல் முலாம் பூசப் பட்டிருந்தன. வேண்டுமென்றே ஊடகங்களின் கவனத்தை கவரும் வகையில் வழக்குகள் நடத்தப் பட்டன.

யூகோஸ்லேவியாவுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றது. அரசதரப்பு சட்டத்தரணிகள் சாட்சிகளை மிரட்டி சாட்சியம் பெற்றனர். அவர்கள் விரும்பியவாறு சாட்சி சொல்ல வேண்டுமென நிர்ப்பந்திக்கப் பட்டனர், மிரட்டப் பட்டனர், அல்லது சலுகைகள் தருவதாக ஆசை காட்டினார்கள். ஒரு சாட்சிக்கு, அமெரிக்காவில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித் தருவதாக கூறியிருந்தனர்.

யூகோஸ்லேவியா நீதிமன்றம் மூலம் உலகப் புகழ் பெற்ற, அரச தரப்பு சட்டத்தரணி கார்லா டெல் போந்தே, இன்னும் இரண்டு பேர் மீது, சாட்சிகளை மிரட்டியதாக குற்றஞ் சாட்டப் பட்டது. இறுதியாக, சர்வதேச நீதிமன்றம் அரச தரப்பு சட்டத்தரணிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஒவ்வொரு உலக நாட்டிலும் நடந்த, போர்க்குற்றங்கள், இனப் படுகொலைகள், சர்வதேச நீதிமன்றத்தினால் ஒழுங்காக விசாரிக்கப் பட்டு, நீதி வழங்கப் பட்டால், உலகம் திருந்தி விடும் என்று நினைப்பது வெகுளித்தனமானது. உலக நாடுகளின் பிரச்சினைகளும், சட்டங்களும் அந்தளவு இலகுவானது அல்ல. மேலும், அரசியல் தலையீடு இன்றி, நீதித்துறை செயற்பட முடியாத நிலைமை உள்ளது.

கடந்த கால வரலாறு முழுவதும், சர்வதேச நீதியானது, "வென்றவர்களின் நீதியாக" இருந்து வந்ததை, கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இனி வருங்காலத்திலும், போர்க்குற்றம், இனப்படுகொலை பற்றி விசாரிக்கும் சர்வதேச நீதிமன்றம், வென்றவர்களுக்கு சாதகமாகவும், தோற்றவர்களுக்கு பாதகமாகவும் தான் நடந்து கொள்ளப் போகின்றது.

ஈழப் போரின் இறுதியில், வென்றவர்கள் அமைக்கப் போகும் சர்வதேச நீதிமன்றம், எவ்வாறு தோற்றுப் போன தமிழர்களுக்கு ஆதரவாக நீதி வழங்கப் போகிறது? தமிழ் மக்கள் இந்த உண்மையை புரிந்து கொள்ளாத வரையில், தொடர்ந்தும் இலவு காத்த கிளியாக ஏமாற்றப் படுவார்கள் என்பது மட்டும் உறுதி.


(பிற்குறிப்பு: Geert Jan Knoops, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றிய வழக்கறிஞர். அவர் எழுதிய "Bluf Poker, De Duistere Wereld van het Internationaal Recht" என்ற நூல், இந்தக் கட்டுரை எழுதுவதற்கு பெரிதும் உதவியுள்ளது. அவருக்கு எனது நன்றிகள்.)  



இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

Sunday, October 06, 2013

போர்க்குற்றவாளிகளை காப்பாற்றும் "சர்வதேச சமூகம்" பற்றிய திரைப்படம்


அண்மையில், தொலைக்காட்சியில் "The Hunting Party" என்ற திரைப்படத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. போர்க்குற்றவாளிகளை பிடிப்பதில் மேற்கத்திய நாடுகள் காட்டி வரும் மெத்தனப் போக்கு, அதற்குப் பின்னால் உள்ள அரசியல் நோக்கங்களை தோலுரித்துக் காட்டும் படம். பொஸ்னியாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை வைத்து, கற்பனையான திரைக்கதை எழுதி இருக்கிறார்கள். இந்தப் படம் சொல்ல வரும் செய்தி தான் முக்கியமானது. "போர்குற்ற விசாரணைகள் என்பன எல்லாம் மேற்கத்திய நாடுகளின் நாடகங்கள். உண்மையில், ஐ.நா., சர்வதேச நீதிமன்றம், அமெரிக்கா போன்றவற்றிற்கு, போர்க்குற்றவாளிகளை பிடித்து தண்டிக்கும் எந்த நோக்கமும் கிடையாது. சில நேரங்களில், இந்த "மரியாதைக்குரியவர்கள்" போர்க்குற்றவாளிகளை பாதுகாக்கும் கடமையையும் செய்து வருகின்றனர்." 

Simon Hunt, Duck இருவரும் நண்பர்கள். அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்காக, போர் நடக்கும் நாடுகளுக்கு சென்று செய்தி சேகரிப்பது அவர்களது பணி. எல் சல்வடோர், பொஸ்னியா என்று கடுமையான யுத்தம் நடக்கும் பிரதேசங்களில் உயிரை துச்சமாக மதித்து வேலை செய்கின்றனர். பொஸ்னிய யுத்த களத்தில் இருந்து அமெரிக்க தொலைக்காட்சிக்கு நேர்முக வர்ணனை செய்யும் சைமன், ஐ.நா. மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றார். இதனால் சங்கடத்திற்குள்ளாகும் தொலைக்காட்சி நிலையம் தொடர்பை துண்டித்து விடுகின்றது. அதற்குப் பிறகு, பிரபல செய்தியாளர் சைமனுக்கு என்ன நடந்தது என்பது யாருக்கும் தெரியாது. அவர் போர்க்களத்தில் கொல்லப் பட்டிருக்கலாம் என்றே எல்லோரும் நினைக்கின்றனர்.  

ஐந்து வருடங்களுக்குப் பின்னர், டக் இன்னொரு இளம் ஊடகவியலாளருடன் பொஸ்னியா திரும்புகின்றார். தற்போது பொஸ்னியாவில் யுத்தம் முடிந்து, சமாதானம் நிலவுகின்றது. ஆனால், "போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதே தனது கடமை" என்று, சர்வதேச சமூகம் புளுகிக் கொண்டு திரிகின்றது. பொஸ்னியா திரும்பும் ஊடகவியலாளர்கள், நேட்டோப் படைகளால் தேடப்படும் "நரி" என்ற பட்டப் பெயர் கொண்ட, Radoslav Bogdanović என்ற செர்பிய போர்க்குற்றவாளியை கண்டு பேட்டி எடுக்க வேண்டும் என நினைக்கின்றனர். எதிர்பாராத விதமாக, காணாமல்போன பழைய நண்பன் சைமனை சந்திக்கின்றனர். நரி இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று கூறும் சைமன், அவர்களை தன்னுடன் வருமாறு கூறுகின்றான். சைமன் போகும் வழியில், அந்தப் போர்க்குற்றவாளியை பிடித்துக் கொடுத்து சன்மானம் பெற விரும்புவதாக நண்பர்களிடம் தெரிவிக்கின்றான். இதனால் வழியில் பல ஆபத்துக்களை சந்திக்கின்றனர். 

Radoslav Bogdanović  போர் நடந்த காலத்தில், பல்லாயிரம் பொஸ்னிய முஸ்லிம்களை இனப்படுகொலை செய்த, பெண்களை வல்லுறவு செய்த குற்றங்களுக்கு காரணமானவன். (கராச்சிச் என்ற செர்பிய படைத் தலைவனை மனதில் வைத்து பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.) சைமன் "நரி" யை கண்டுபிடிப்பதற்கு, ஒரு தனிப்பட்ட காரணம் உள்ளது. அவனது பொஸ்னிய முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த காதலி, அவளது ஊருக்கு சென்றிருந்த நேரம், நரியின் படையினரால் சுட்டுக் கொல்லப் படுகின்றாள். அப்போது அவள் நிறைமாதக் கர்ப்பிணி. அந்தத் தருணத்தில் கோபத்தை அடக்கும் சைமன், தற்போது கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நரியை பிடித்துக் கொடுக்க நினைக்கிறான். 

பொஸ்னியாவில் நிலை கொண்டுள்ள சர்வதேச பொலிஸ், நேட்டோ படையணி போன்றவற்றிடம், போர்க்குற்றவாளிகள் பற்றிய விபரங்களை விசாரிக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, சர்வதேச படைகளிடம் போர்க்குற்றவாளிகள் சம்பந்தமான எந்த ஆவணமும் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர். அது மட்டுமல்ல, போர்க்குற்றவாளிகளை பிடிப்பதற்கான எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடவில்லை. பொஸ்னிய போரின் பின்னர் சமாதானத்தை நிலைநாட்டும் கடமையில் ஈடுபட்டுள்ள சர்வதேச படையினர், ஊடகவியலாளருடன் ஒத்துழைக்க மறுக்கின்றனர்.

சைமனும் நண்பர்களும், தமக்குத் தெரிந்த வழியில் போர்க் குற்றவாளிகளை பிடிக்கக் கிளம்புகின்றனர். வழியில் அவர்களுக்கு பல இன்னல்கள் ஏற்படுகின்றன. செர்பிய பொதுமக்கள் தமது நாயகனை காட்டிக் கொடுக்க மறுக்கின்றனர். இறுதியில், இரகசியமாக தகவல் கொடுப்போரிடம், சி.ஐ.ஏ. என்று பொய் சொல்லி, "நரி" யின் இருப்பிடத்தை கண்டுபிடிக்கின்றனர். ஆனால், சி.ஐ.ஏ. என்ற அடையாளம், அவர்களை ஆபத்தில் மாட்டி விடுகின்றது. அதற்காகவே, நரியின் ஆட்கள் அவர்களை கடத்திச் சென்று சித்திரவதை செய்கின்றனர்.  

 "நரி" யின் மறைவிடத்தில் கட்டி வைக்கப் பட்டிருந்த, ஊடகவியலாளர்களின் உயிர் ஊசலாடும் தருணத்தில், அங்கு திடீரென வந்திறங்கும் அமெரிக்க-நேட்டோப் படையினர், அவர்களை விடுவித்து அழைத்துச் செல்கின்றனர். நேட்டோ கமாண்டோக்களின் அதிகாரி, அவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடுகின்றனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், அந்தச் சந்தர்ப்பத்தில் கைக்கெட்டிய தூரத்தில் நின்ற போர்க்குற்றவாளியை, படையினர் (வேண்டுமென்றே) பிடிக்காமல் வாயைப் பிளந்து கொண்டு நிற்கின்றனர். அதை சைமன் நேரடியாகவே கேட்டு விடுகின்றான். "நீங்கள் ஐந்து வருடங்களாக தேடியும் கிடைக்காத போர்க்குற்றவாளியை, நாங்கள் இரண்டே நாட்களில் கண்டுபிடித்தது எப்படி? எதற்காக இத்தனை படைபலம் இருந்தும் போர்க்குற்றவாளியை தப்ப விட்டீர்கள்?"  ஆனால், அந்தக் கேள்விக்கு பதிலளிக்காமல், "சி.ஐ.ஏ. போன்று நடித்ததற்காக உங்கள் மேல் வழக்குப் போட்டு உள்ளே தள்ளுவேன்" என்று மிரட்டும் அமெரிக்க படையதிகாரி, அவர்கள் உடனடியாக ஊர் திரும்புவதே புத்திசாலித்தனம் என்று எச்சரிக்கிறான். 

மூன்று ஊடகவியலாளர்களும், நேட்டோ படை அதிகாரியின் உத்தரவுக்கிணங்க நாட்டை விட்டு வெளியேற விரும்பவில்லை. தாங்கள் மூவரும் நினைத்தால், போர்க்குற்றவாளியை சுலபமாக பிடித்து விடலாம் என்று எண்ணுகின்றனர். "நரி" காட்டுக்குள் வேட்டையாடச் செல்லும் பொழுது, கூடவே நிறைய மெய்ப்பாதுகாவலர்களை அழைத்துச் செல்ல வாய்ப்பில்லை. அதனால் தனியாக நிற்கும் போர்க்குற்றவாளியை பிடிப்பது இலகு என்று திட்டம் போடுகின்றனர். போட்ட திட்டம் நிறைவேறி, மூன்று நண்பர்களும் சேர்ந்து போர்க்குற்றவாளியை பிடிக்கின்றனர். அந்தத் தருணத்திலும் கலங்காமல், "சர்வதேச சமூகம்" தன்னை காப்பாற்றும் என்று நரி கூறுகின்றான். "என்னை பிடித்துக் கொடுத்ததற்காக, உங்களுக்கு சன்மானம் கிடைக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு சர்வதேச சமூகம் எப்படி நடந்து கொள்ளும் என்பது உங்களுக்குத் தெரியாது. ஏனென்றால், அவர்கள் தான் எனக்காக அஞ்சுகின்றார்கள்." ஏற்கனவே அந்தப் பதிலை எதிர்பார்த்த சைமன் கூறுகின்றான்: "அது தெரிந்து தான் நாங்கள் சட்டத்தை மாற்றி விட்டோம்..." 

அதாவது, ஒரு போர்க்குற்றவாளியை ஐ.நா.விடமோ, அமெரிக்காவிடமோ ஒப்படைப்பதால் எந்தப் பிரயோசனமும் இல்லை. அதற்குப் பதிலாக, "நரி" யின் கொலைவெறியாட்டத்திற்கு பலியான பொஸ்னிய முஸ்லிம்கள், அவனுக்கு தகுந்த தண்டனை கொடுப்பார்கள் என்று முடிவெடுக்கின்றனர். கைகள் கட்டப்பட்ட "நரி"யை, சைமனின் காதலியின் ஊருக்குள் கொண்டு சென்று இறக்கி விடுகின்றனர். இனி, ஒரு போர்க்குற்றவாளிக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பது, அவனால் பாதிக்கப்பட்ட பொஸ்னிய முஸ்லிம்களின் பொறுப்பு. 

படத்தின் முடிவில், பார்வையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி தெரிவிக்கப் படுகின்றது. "ஒருநாளும், மேற்கத்திய நாடுகள் போர்க்குற்றவாளிகளை தண்டிப்பதில்லை. அந்த அக்கறையும் அவர்களுக்கு கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களே அந்தக் கடமையை செய்ய வேண்டும்," என்ற உண்மையை திரைப்படம் வலியுறுத்துகின்றது. இதையே நாங்கள் "மேற்கத்திய நாடுகளிடம் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கும்" தமிழ் மக்களுக்கும் கூறி வருகின்றோம். 

அமெரிக்கா, மற்றும் ஐ.நா. பொஸ்னிய போர்க்குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டிய காரணம் என்ன? பொஸ்னிய யுத்தம் நடந்த காலங்களில், கிறிஸ்தவ செர்பிய படைகள், பெருமளவு பொஸ்னிய முஸ்லிம் மக்களை இனப்படுகொலை செய்தன. அமெரிக்காவும், மேற்கு ஐரோப்பாவும் முஸ்லிம்கள் அழிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன. ஐரோப்பிய, அதாவது பொஸ்னிய முஸ்லிகள் இனவழிப்பு செய்யப்படுவது அவர்களுக்கு உவப்பானதாக இருந்திருக்கலாம். ஆனால், ஊடகங்களில் பொஸ்னிய முஸ்லிம் மக்களை எண்ணி இரக்கப் படுவதாக முதலைக் கண்ணீர் வடித்தார்கள். அமெரிக்கா, செர்பிய படைத் தலைவர்களுடன் எட்டப் பட்ட உடன்பாட்டின் பின்னர் தான், பொஸ்னிய போர் முடிவுக்கு வந்தது. செர்பிய போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் பட மாட்டார்கள் என்பதும், உடன்படிக்கையில் இருந்திருக்கலாம்.  

அமெரிக்கா "செர்பிய போர்க்குற்றவாளிகளை தேடுவதாக", ஒரு முழுப் பக்க விளம்பரம் செர்பிய பத்திரிகைகள் எல்லாவற்றிலும் பிரசுரமானது. அமெரிக்கா அதனை படமெடுத்து ஊடகங்களுக்கு கொடுத்தது. அதாவது, அமெரிக்கர்கள் மிகத் தீவிரமாக போர்க் குற்றவாளிகளை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். அதனை உலகம் நம்ப வேண்டுமாம். அன்றைய வருடத்தின் சிறந்த நகைச்சுவை அதுவாகத் தான் இருக்கும். பொஸ்னிய பத்திரிகைகளில் வெளியான விளம்பரத்தில், போர்க்குற்றவாளிகளை பிடிப்பதற்கான தகவல் தெரிந்தோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் ஒன்று கொடுக்கப் பட்டிருந்தது. ஆனால், அந்த தொலைபேசி இலக்கம் அமெரிக்க நாட்டு எல்லைக்குள் மட்டுமே செயற்படும்!

பொஸ்னியா தொடர்பான முன்னைய பதிவு:
பொஸ்னியா: வல்லரசுகள் அரங்கேற்றிய துன்பியல் நாடகம்

Wednesday, August 31, 2011

யூகோஸ்லேவியா படுகொலைகள், மேற்குலகின் பொம்மலாட்டம்

பொஸ்னியாவில் இறுதிக் கட்ட போர் நடந்து கொண்டிருந்த நேரம், சிரபெனிச்சா நகரில், 8000 முஸ்லிம் பொதுமக்களை சேர்பியப் படைகள் இனப்படுகொலை செய்தன. சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் நடந்த போர்க்குற்றங்களுக்காக, சேர்பியப் படைகளின் தளபதி மிலாடிச் கைது செய்யப்பட்டவுடன், நீதி வென்றது என்பது போன்ற பிரமை தோற்றுவிக்கப் பட்டது.

மேற்கத்திய செய்தி ஊடகங்கள், மிலாடிச் கைதானதை, மாபெரும் சாதனையாக குறிப்பிட்டு எழுதியிருந்தன. எமது தமிழ் தேசிய வணிக ஊடகங்களும், அந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டன. மிலாடிச் கைது செய்யப்பட்டதைப் போல, தமிழ் இனப்படுகொலைகளுக்காக ராஜபக்ஷ கைது செய்யப்படலாம் என்று நம்பிக்கை துளிர் விட்டதால் ஏற்பட்ட மகிழ்ச்சி அது. "இலங்கை அரசு கொஞ்ச காலம் மேற்கத்திய கனவான்களை ஏமாற்றினாலும், நீதிமான்கள் இறுதியில் உண்மையை உணர்ந்து நீதி வழங்குவார்கள்...." என்று தமிழர்கள் நம்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டன.

யூகோஸ்லேவிய போர்களின் போது மேற்குலகம் காட்டிய அக்கறை, அதன் அரசியல் பின்னணி, உள்நோக்கம் என்பன போன்ற கேள்விகளை ஒரு பக்கம் வைத்து விடுவோம். அங்கே நடந்த இனப்படுகொலைகளில் மேற்கத்திய நாடுகளின் பங்களிப்பு எவ்வளவு? எதிரி இனத்தை படுகொலை செய்வதற்கு கருவியாக பயன்படுத்தப் பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப் பட்டது. இந்தக் கருவிகளை ஏவிய குற்றவாளிகள் நீதிபதிகளாக வீற்றிருக்கின்றனர். இந்த உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?

மேற்கத்திய நாடுகளின் தலையீடானது, யூகோஸ்லேவியாவில் இருந்து புதிய குடியரசுகள் பிரிந்த பின்னர் ஆரம்பிக்கவில்லை. டிட்டோவின் சோஷலிச யூகோஸ்லேவியா, மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளுடன் தொடர்பை பேணி வந்தது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், டிட்டோ, ஸ்டாலினுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து யூகோஸ்லேவியா "COMINTERN" அமைப்பில் இருந்து விலகியது. இதனால் சோவியத் யூனியனின் கடன்கள் வருவது நின்று போனது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அமெரிக்கா IMF கடன்களை பெற்றுக் கொடுத்தது.

ஒரு கம்யூனிச கட்சி ஆண்ட நாட்டில், சோஷலிசப் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஐ.எம்.எப். உதவியது என்பதை நம்புவது கஷ்டமாக இருக்கும். ஆனால் வரலாற்றில் அந்த அதிசயம் நடந்தது. ஐ.எம்.எப். விதித்த நிபந்தனைகள் இட்டுச் சென்ற பொருளாதார சீர்கேடுகள் கண்ணுக்கு புலனாக பல தசாப்தங்கள் எடுத்தன. டிட்டோவின் மறைவிற்குப் பிறகு, மிலோசொவிச் பதவி ஏற்றதும், குறைபாடுகள் மெல்ல மெல்ல வெளித் தெரிய ஆரம்பித்தன. ஒவ்வொரு இனத்திலும், தீவிரவாதிகள் உருவெடுத்தனர். மொழி அடிப்படையிலான குருந்தேசியவாதிகளின் செல்வாக்கு அதிகரித்தது. மிலோசொவிச் கூட, அமெரிக்காவுடன் தொடர்பில் இருந்த, ஐ.எம்.எப். உத்தரவுகளை வேத வாக்காக ஏற்றுக் கொண்ட ஒருவர் தான்.

தற்போது மீண்டும் பொஸ்னியா வருவோம். சிரபெனிச்ச இனப்படுகொலை பற்றிய பின்னணியை முதலில் ஆராய்வோம். போஸ்னியாவில் செர்பிய, குரோவாசிய, முஸ்லிம் இனத்தவர்கள் பரவலாக எல்லா இடங்களிலும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கிடையில் எந்தவித இனக்குரோதங்களும் இன்றி ஒற்றுமையாக வாழ்ந்தனர். சிரபெனிச்சா நகரம் மத்திய காலத்தில் இருந்து முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்டது.

டிட்டோ காலத்தில், சிரபெனிச்சா நகரத்திலும் தொழிற்புரட்சி நடந்தது. ஆலைகளில் வேலை செய்வதற்காக, பெருமளவு செர்பிய தொழிலாளர்கள் கிராமங்களில் இருந்து வந்து குடியேறினார்கள். அவர்களுக்கென நவீன அடுக்குமாடி வீடுகளைக் கொண்ட புற நகரங்கள் உருவாகின. இதனால் சிரபெனிச்சா நகரம் விரிவடைந்தாலும், அதற்குள்ளே செர்பிய வட்டாரங்களும் உருவாகின.

யுத்தம் வெடித்தவுடன், செர்பிய பகுதிகள் யாவும், செர்பிய படைகளின் கட்டுப்பாட்டில் வந்தன. அதே போன்று, முஸ்லிம் பகுதிகள் முஸ்லிம் படைகளினால் கட்டுப்படுத்தப் பட்டன. இரண்டு இராணுவங்களும், மற்ற இனத்தவர் வாழ்ந்த பகுதிகள் மீது ஷெல் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இரண்டு பக்கமும், செர்பிய, முஸ்லிம் பொது மக்கள் பலியாகியுள்ளனர்.

ஆனால், மேற்குலக ஊடகங்கள், நமக்கு அந்த உண்மைகளை கூறவில்லை. "முஸ்லிம் மக்களின் சிரபெனிச்சா நகரை சேர்பியப் படைகள் முற்றுகையிட்டு தாக்கிக் கொண்டிருக்கின்றன. சேர்பியரின் வெறித்தனமான தாக்குதல்களில் அப்பாவி முஸ்லிம் மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றனர்...." இவ்வாறு தான் செய்திகள் வாசிக்கப் பட்டன.

இலங்கையில், வன்னியில் நடந்த இறுதிப்போரில், ஐ.நா. அமைதிப் படை தலையிட்டிருந்தால், தமிழ் இனப்படுகொலை நடந்திருக்காது என்று, இன்றைக்கும் பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பொஸ்னிய யுத்தத்தில் இருந்து எந்தப் பாடத்தையும் படிக்கவில்லை என்பது வெள்ளிடை மலை.

முள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல, சிரபெனிச்சாவில் கூட இனப்படுகொலை நடக்கப் போகின்றது என்று ஐ.நா.வுக்கு முன்பே தெரிந்திருந்தது. இன்னும் சொன்னால், அது நடக்க வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். 

பொஸ்னிய யுத்தம் பற்றிய செய்திகள், மேற்கத்திய நாடுகளில் பெரும் உணர்வலைகளை உருவாக்கியிருந்தது. ஐரோப்பிய ஒன்றியமும், அமெரிக்காவும் சேர்ந்து ஐ.நா. சமாதானப் படைகளை அனுப்பி வைத்தன. சிரபெனிச்சா நகரம் பாதுகாப்பு வலையமாக பிரகடனப் படுத்தப் பட்டது. நெதர்லாந்தை சேர்ந்த அமைதிப் படையினர் பாதுகாப்புப் பொறுப்புகளை ஏற்றிருந்தனர். ஐ.நா. அமைதிப் படை வந்து விட்டதால், இனி எந்தப் பிரச்சினையும் இல்லை என்று தான் முஸ்லிம்களும் நம்பினார்கள். ஐ.நா. ஆணையின் பிரகாரம், முஸ்லிம் படைகள் ஆயுதங்களை ஒப்படைத்திருந்தன. அதற்குப் பிறகு அந்தப் பிரளயம் அரங்கேறியது.

பொஸ்னிய போர் ஒரு இனப்படுகொலையுடன் முடிய வேண்டும் என்பது, மேற்குலகின் விருப்பம் போலும். தருணம் பார்த்து பாதுகாப்பு வலையங்கள் திறந்து விடப்பட்டன. சிரபெனிச்சா நகரை கைப்பற்றுவதற்காக, சேர்பியப் படைகள் தாக்குதல் தொடுத்த நேரம்.... ஐ.நா. அமைதிப்படை ஒன்றுமே செய்யவில்லை. ஐ.நா. டச்பட் படையணிக்கு பொறுப்பான Thomas Karremans சேர்பியப் படைகளிடம் சரணடைந்தார். 

தமது சொந்தப் படையினரைக் காப்பாற்றக் கூட, ஐ.நா. தயாராக இருக்கவில்லை. மேலிடத்து உத்தரவு காரணமாக, விமானத் தாக்குதல்கள் நடைபெறவில்லை. பிறகென்ன? மிலாடிச் தலைமையிலான சேர்பியப் படைகள், தமது விருப்பம் போல நடந்து கொள்ள அனுமதி வழங்கப் பட்டது. நிராயுதபாணிகளான எண்ணாயிரம் முஸ்லிம்களை, சேர்பியப் படைகள் கொன்று குவித்தன. "சிரபெனிச்சா மீது படையெடுக்கும் எண்ணம் மிலாடிச்சுக்கு இருக்கவில்லை." என்று கரமேன்ஸ் ஒரு விசாரணையில் தெரிவித்தார்.

போஸ்னியப் போரில், ஊடகங்கள் எப்போதும் செர்பியர்களை வெறித்தனமான வில்லன்களாகவும், முஸ்லிம்களை ஒடுக்கப் பட்டோராகவும் காட்டி வந்துள்ளன. சிரபெனிச்சா முஸ்லிம் படைகள், அயலில் இருந்த செர்பியக் கிராமங்களை எரித்து தரைமட்டமாக்கிய செய்திகள் எதுவும் சொல்லப்படவில்லை. இனக்குரோதங்கள் உச்சத்தில் இருந்த போரில், பழிவாங்கும் கொலைகள் நடக்கும் என்று "பரலோகத்தில் இருக்கும் தேவர்கள்" கணித்திருப்பார்கள்.

செர்பிய தலைவர்களான மிலாடிச், கராசிச், மிலோசெவிச்; குரோவாசிய தலைவர் துஜ்மான்; முஸ்லிம் தலைவர் இசபெகொவிச், இவர்கள் எல்லோரும் போர்க்குற்றவாளிகள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களை பொம்மைகள் போல பின்னால் இருந்து ஆட்டுவித்துக் கொண்டிருந்த கரங்கள் யாருடையவை? ஒருவரை ஒருவர் எதிர்த்து போரிட வைக்க நடந்த சூழ்ச்சிகள் எத்தனை? Jaques Monsieur என்ற பெல்ஜிய ஆயுத வியாபாரி, துஜ்மானின் குரோவாசியப் படைகளுக்கும், இசபெகொவிச்சின் முஸ்லிம் படைகளுக்கும் ஆயுத விநியோகம் செய்துள்ளார்.

இதே காலகட்டத்தில் தான், கிழக்கு ஜெர்மனியும் மேற்கு ஜெர்மனியும் இணைந்தன. முன்னாள் சோஷலிச ஜெர்மனியை பொறுப்பேற்ற மேற்கு ஜெர்மனி, அந் நாட்டின் ஆயுதக் களஞ்சியங்களை பொறுப்பேற்றது. அங்கிருந்த ஆயுதங்கள் எல்லாம் வண்டி வண்டியாக குரோவேசியா நோக்கி அனுப்பப் பட்டன.

அந்த நாட்களில், யூகோஸ்லேவிய போரை நிறுத்த முயற்சித்த இராஜதந்திரிகளின் கைகள் கட்டப் பட்டிருந்தன. அன்றைய பெல்ஜிய வெளிவிவகார அமைச்சர் Mark Eyskens, ஜேர்மனிய வெளிவிவகார அமைச்சர் Hans Dietrich Genscher இனால் அடக்கி வைக்கப் பட்டார். "ஜெர்மனி, யூகோஸ்லேவியாவில் போர் நடக்க வேண்டுமென்று விரும்பினால், அந்த ஆசை நிறைவேறும்..." என்று விரக்தியுடன் தெரிவித்தார் Mark Eyskens .

யூகோஸ்லேவியப் போரில் நடந்த இன்னொரு இனப்படுகொலை, சர்வதேசத்தின் கவனத்தைப் பெறவில்லை. "கிராயினா", குரோவாசிய குடியரசில் செர்பியர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம். குரோவாசிய யுத்தம் முடிவுக்கு வரும் வேளை, குரோவாசியப் படைகள் துஜ்மானின் ஆணையின் பேரில் இனச் சுத்திகரிப்பில் இறங்கின.

ஆயிரக்கணக்கான செர்பிய பொதுமக்களை கொன்று குவித்தனர். அங்கே ஒரு செர்பியரைக் கூட விட்டு வைக்காமல் துரத்தி அடித்தார்கள். அசையும், அசையா சொத்துக்கள் எல்லாவற்றையும் கொள்ளையடித்தார்கள். குரோவாசிய படைகளை நடத்திச் சென்ற Ante Gotovina என்ற தளபதி, பிற்காலத்தில் போர்க்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். நெதர்லாந்தில், யூகோஸ்லேவியா போர்க்குற்ற நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்ட முக்கியமான குரோவாசியர், அவர் மட்டும் தான்.

Ante Gotovina, பிரான்சின் கூலிப்படையான வெளிநாட்டவர் படையணியை (French Foreign Legion) சேர்ந்த சிப்பாய். அவருடனான பிரெஞ்சு அரசின் தொடர்புகள் யாவும், புலனாய்வுப் பிரிவான DGSE மூலமாக நடைபெற்றன. ஆனால், அன்று குரோவாசியப் படைகளுக்கு தலைமை தாங்கிய இன்னொருவர், அமெரிக்கரான Peter Galbraith என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இவர் தான் பிற்காலத்தில் குரோவாசியாவுக்கான அமெரிக்க தூதுவராக பதவி வகித்தார்.

இந்த அமெரிக்கர், போர்க்களத்தில் நேரடியாக நின்று கட்டளைகளை பிறப்பித்ததுடன், இனப்படுகொலையை மேற்பார்வை செய்துள்ளார். Peter Galbraith தின் சேவையை பாராட்டி, அவரது நண்பர், அன்றைய துணை ஜனாதிபதி Joe Biden ஈராக்கிற்கு அனுப்பி வைத்தார். ஈராக் குர்திஸ்தானில், அமெரிக்க கம்பனிகளுக்கு எண்ணை வர்த்தக ஒப்பந்தங்கள் கிடைக்குமாறு, பீட்டர் பார்த்துக் கொண்டார்.

இங்கே கூறப்பட்ட உண்மைகளை அறிந்து கொள்வதற்கு எமக்கு ஆர்வமில்லாமல் இருக்கலாம். அடியாட்களுக்கு தண்டனை கொடுக்கப் படுவதை பார்த்து விட்டு, நீதி பிழைத்தது என்று திருப்திப் படலாம். ஆனால், எதிர்காலத்தில் இன்னொரு நாட்டில் இன்னொரு இனப்படுகொலை நடப்பதை எம்மால் தடுக்க முடியாது. முதன்மைக் குற்றவாளிகளை நீதிபதி ஸ்தானத்தில் ஏற்றி வைத்து விட்டு, அடியாட்களை பிடித்து தண்டனை கொடுப்பதால் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை.

Thursday, April 28, 2011

மக்கள் நீதிமன்றத்தில் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்படும்

[ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்]
(பகுதி : மூன்று)


ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கி மூன் நியமித்த நிபுணர் குழுவுக்கு இலங்கை செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்ட அரசு, அவர்களுடன் ஒத்துழைத்தது. நிபுணர் குழு தயாரித்தளித்த அறிக்கையை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்தது. பகுதி பகுதியாக ஊடகங்களுக்கு கசிய விட்டது. ஒரு வாரத்திற்குப் பின்னர் முழுமையான அறிக்கையை வெளியிட்டது. எல்லாமே ஒரு நாடகமாகத் தெரிகின்றது. போர்க்குற்றத்தை விசாரிக்கும் பொறுப்பை இலங்கை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபை எதிர்பார்க்கின்றது. அதற்கப்பால், எந்தத் திட்டமும் அதனிடம் இல்லை. நிபுணர் குழு சமர்ப்பித்த போர்க்குற்ற அறிக்கையை வெளியிட வேண்டாம் என்று கூறிய இலங்கை அரசு, அதனை விசாரிக்க முன்வரப் போவதில்லை.

தமிழ் ஊடகங்களில் அதிகம் பேசப்படாத இன்னொரு நாட்டின் போர்க்குற்ற அறிக்கையும் சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. காஸாவில் இஸ்ரேல் புரிந்த போர்க்குற்றங்களை ஆவணப்படுத்திய அறிக்கையை குப்பைக் கூடையில் போடுமாறு, இஸ்ரேலிய பிரதமர் நெத்தன்யாகு கூறியிருக்கிறார். இஸ்ரேலிய விசுவாசிகளான தமிழ் தேசியவாதிகள் அந்த அறிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காததையிட்டு ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஆனால், பாலஸ்தீனர்களும், தமிழர்களும் ஒரே தலைவிதியை பங்கு போடும் சகோதர இனங்கள் என்ற உண்மையை அடிக்கடி மறப்பது தான் துரதிர்ஷ்டமானது. இஸ்ரேலும், இலங்கையும், பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாள் முதல் இன்று வரை, காலனிய எஜமானின் அடிச்சுவட்டை பின்பற்றி வருகின்றன. இலங்கையில் எத்தனை பிரச்சினை வந்தாலும், பிரிட்டிஷ் காரன் கற்றுக் கொடுத்த பாராளுமன்ற ஜனநாயகம் ஒழுங்காக செயற்படுகின்றது. அந்நிய கடனுதவியையும் முகம் கோணாமல் வாங்கிக் கொள்கிறது. தகப்பன் சொல் கேட்கும் சமர்த்துப் பிள்ளையாக நடந்து கொள்கிறது. அப்படியான நாட்டின் மீது போர்க்குற்ற விசாரணை செய்வதும், பொருளாதாரத் தடை விதிப்பதும் அவர்களுக்கு தேவையற்ற ஒன்று. அதனால் தான் போர்க்குற்ற நிபுணர் குழு அறிக்கையையும், பான் கி மூன் தனது நண்பனான ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்து கருத்துக் கேட்டார்.

யூகோஸ்லேவியா, ஈராக் போன்ற நாடுகளில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தான், ஆயுத விநியோகத் தடை, பொருளாதாரத் தடை எல்லாம் கொண்டு வந்தார்கள். சர்வதேச சமூகம் நினைத்திருந்தால், இலங்கையின் இறுதிப் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே, தடைகளை போட்டிருப்பார்கள். ஆனால் நடந்ததோ வேறு. சீனா, ரஷ்யா மட்டுமல்ல, பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், இஸ்ரேல்,செக், இந்தியா உட்பட பல உலக நாடுகள் ஆயுத விநியோகம் செய்தன. ஆயுத விநியோகம் செய்த நாடுகளுக்கு போர்க்குற்றத்தில் பங்கில்லையா? இலங்கையில் செயற்பட்ட ஐ.நா. பிரதிநிதிகள், மனித பேரழிவை குறைவாக மதிப்பிட்டிருந்தனர். உயிரிழப்புகளை குறைத்துக் கூறி கொண்டிருந்தனர். நிபுணர் குழு அறிக்கையே ஐ.நா. வின் செயற்பாடுகளை விமர்சித்துள்ளது. ஐ.நா. உயர் அதிகாரி சம்பந்தப்பட்ட "வெள்ளைக் கொடி" விவகாரம், எல்லாம் பகிரங்கப் படுத்தப் படுமானால், குற்றவாளிக் கூண்டில் ஐ.நா.வும் நிறுத்தப் படும். ஒருவேளை, ராஜபக்ஷ சகோதரர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினால், ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்தின் வண்டவாளங்களை ஊரறியச் செய்ய மாட்டார்களா? ஏற்கனவே மிலோசொவிச், சதாம் ஹுசைன் வழக்கில் முக்காடு போட்டுக் கொண்டு ஒளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

போர் முடிந்து இரண்டு வருடங்கள் கழித்து வந்துள்ள போர்க்குற்ற நிபுணர் குழு அறிக்கை, IMF பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும் நேரம் பார்த்து வந்துள்ளது. இதனால் இந்த அறிக்கையின் நோக்கம் குறித்த சந்தேகம் கிளம்புவது இயல்பானது. "ஜனாதிபதி ராஜபக்ஸ IMF உத்தரவுகளுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும். இல்லாவிட்டால், போர்க்குற்ற விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்," என்ற மிரட்டலாகவே பார்க்க வேண்டியுள்ளது. 2007 ம் ஆண்டு, இலங்கையில் இருந்த IMF அலுவலகத்தை மூடி விடுமாறு, ராஜபக்ஷ அரசு உத்தரவு போட்டது. IMF அதிகாரிகள், பல்வேறு தொண்டு நிறுவன பிரதிநிதிகளை அழைத்து அரசுக்கு அழுத்தம் கொடுக்க கோரினார்கள். ஆனால் அழுத்தம் பலிக்காமல் வெளியேறி விட்டார்கள். IMF இட்ட நிபந்தனைகள் மிகவும் கடுமையாக இருந்தன. IMF கடன்களுக்கான வட்டியும் மிக அதிகம். அவர்கள் சொல்வது போல பட்ஜெட் போட வேண்டும். அரசு நிதித்துறையின் கணக்கு வழக்குகளை காட்ட வேண்டும். அவர்கள் சொல்வது போலத் தான் அரசாங்கம் நடத்த வேண்டும். IMF போட்ட நிபந்தனைகளின் தொல்லை தாங்காமல் தான், இலங்கை அரசு மேற்குலக நாடுகளை விட்டு விலகத் தொடங்கியது. சீனா, ஈரான் ஆகிய நாடுகளிடம் குறைந்த வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அவர்கள் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை. இதைத் தான், "இலங்கை சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டது." என்று சிலர் எமக்கு பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தார்கள்.

இந்த சீனாப் பூச்சாண்டி எல்லாம், எம்மைப் போன்ற அரசியல் அறிவற்ற தற்குறிகளை ஏமாற்ற மட்டுமே பயன்படும். சக்தி வாய்ந்த மேற்கத்திய நாடுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். போர்க்குற்ற மிரட்டல் நன்றாகவே வேலை செய்கின்றது. கடந்த வருடம், இலங்கை அரசு மீண்டும் IMF இடம் கடன் வாங்க ஒப்புக் கொண்டது. அவர்கள் வந்தவுடனேயே நாட்டாமை செய்யக் கிளம்பி விட்டார்கள். கல்வியைத் தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது முதலாவது கட்டளை. இன்றைக்கும் இலங்கையில் பல்கலைக்கழகம் வரை அனைவருக்கும் கல்வி இலவசம் என்ற விபரம், வெளியில் அதிகமானோருக்கு தெரியாது. அதிலும், ஆங்கில வழிப் பாடசாலைகள் அரிது என்பதும், மாணவர்கள் தாய்மொழியிலேயே (சிங்களம் அல்லது தமிழ்) கல்வி கற்கின்றனர் என்பதும், IMF க்கு பிடிக்காத விஷயம். சிறிது காலம் பொறுங்கள், ஐயா. IMF காலால் இட்ட பணியை ராஜபக்ஷ தலையால் செய்து முடிப்பார். பணக்காரத் தமிழரின் பிள்ளைகள் மட்டுமே ஆங்கில வழிக் கல்வி கற்கும் காலம் வரும். ஏழைத்தமிழர்கள் ஈழம் கேட்க வலுவான காரணம் ஒன்று கிடைத்து விடும். இப்போதும் தமிழ்ப் பகுதிகளில் காலூன்றி வரும் அரச, தனியார் நிறுவனங்களில் ஆங்கிலம்/சிங்களம் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைக்கு எடுக்கிறார்கள். இதனால் அந்தப் பிரதேச மக்கள் தொழில் வாய்ப்பின்றி வருந்துகையில், தெற்கில் இருந்து வந்து வேலை செய்கின்றனர். மேலைத்தேய பொருளாதார நிபுணர்கள் கட்டமைத்த உலகமயமாக்கல் திட்டத்தில் இதெல்லாம் சகஜம், ஐயா.

இரண்டாம் உலகப்போரின் பின்னர் உருவான ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வை செய்த முதலாவது போர்க்குற்ற விசாரணை ஜெர்மனியில் இடம்பெற்றது. போரில் வெற்றி பெற்ற நேசநாடுகள், தோல்வியடைந்த ஜெர்மனியை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரித்தன. போரில் ஈடுபட்ட நேசநாடுகளின் போர்க்குற்றங்கள் அன்று கவனத்தில் எடுக்கப் படவில்லை. பனிப்போர் காலத்தில், உலக நாடுகள் ஒன்றில் அமெரிக்க முகாமில், அல்லது சோவியத் முகாமில் சேர்ந்திருந்தன. அதனால், நீதி விசாரணையை விட, அவரவர் முகாமை காப்பாற்றிக் கொள்வதே முக்கியமாக கருதப் பட்டது. இன்றைக்கும் பனிப்போர் கால சிந்தனை, பலர் மனதை விட்டு அகலவில்லை. சிலவேளை, தமது சொந்த குறைபாடுகளை மறைப்பதற்காக, அவ்வாறான மாயை உருவாக்கப் படுகின்றது. இலங்கை அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு ரஷ்யாவும், சீனாவும் எதிர்க்கும் என்பதால், பாதுகாப்புச் சபையின் அங்கீகாரம் பெறச் சாத்தியமில்லை. இதனை ஐ.நா. செயலாளர் பான் கி மூன் தெரிவிக்கிறார். அந்த நாடுகள், இலங்கையைக் காப்பாற்றுவதை விட, மேற்குலக நாடுகளின் வியூகங்களை தடுப்பதிலேயே குறியாக இருக்கின்றன. ஏனெனில், ஐ.நா. மன்றத்தில் இலங்கைக்கு ஆதரவாக கையை உயர்த்தும் நாடுகள் எல்லாம், தமது நாடுகளிலும் அது போன்ற பிரச்சினைகளைக் கொண்டுள்ளன. "உள்நாட்டுக் குழப்பம் இல்லாத, அமைதியான" மேற்குலக நாடுகள் மட்டுமே நல்லவர்கள் போல காட்டிக் கொள்ள இது வழி வகுக்கின்றது.

உலக நாடுகள் அனைத்தும் பங்கெடுக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஒன்றை அமைக்கும் திட்டம் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. அமெரிக்கா போன்ற சக்தி வாய்ந்த நாடுகள், அந்த யோசனையை எதிர்த்து வருகின்றன. பொதுவாக வெற்றி பெற்றவர்களும், வல்லரசுகளும் தண்டனையில் இருந்து தப்பிக் கொள்கின்றனர். இது வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம். அதன் அர்த்தம், போர்க்குற்றம் புரிந்தவர்களை தப்பிக்க விட வேண்டும் என்பதா? நிச்சயமாக இல்லை. குற்றம் புரிந்தவர் யாராகவிருப்பினும் தண்டனையில் இருந்து தப்பக் கூடாது. ஆனால், இன முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ள இன்றைய சூழலில் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவதையும் தவிர்க்க முடியாது. ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையில், இலங்கை இராணுவத்தையும், விடுதலைப் புலிகளையும் போர்க்குற்றம் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா அரச தரப்பு, தனது இராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை என்றும், தவறான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றும் கூறுகின்றது. மறு பக்கத்தில் தமிழ் தேசியவாதிகள், மிகத் தீவிரமாக சிறிலங்கா அரசை அம்பலப் படுத்திக் கொண்டே, புலிகளின் குற்றங்களை மூடி மறைக்கின்றனர். சிறிலங்கா அரசும், தமிழ் தேசியவாதிகளும் ஐ.நா. நிபுணர்களின் அறிக்கையை குறை கூறுகின்றனர். இரண்டு தரப்புமே, தாங்கள் கூறுவது போலத் தான் அந்த அறிக்கை எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். தமது தரப்பு நியாயத்தை நிலைநாட்ட பல்வேறு விளக்கங்களை முன்வைக்கின்றனர். "எமது இனத்தை சேர்ந்தவர்கள் எந்தத் தவறையும் செய்யாத நல்லவர்கள். ஆனால் எதிரி இனத்தை சேர்ந்தவர்கள் கொடுமைக்காரர்கள்." என்ற புராதன கால தத்துவமே இன்றைக்கும் கோலோச்சுகின்றது. இலங்கையில் மட்டுமல்ல, யூகோஸ்லேவியா, ருவாண்டா என்று இனப்பிரச்சினை கூர்மையடைந்த நாடுகளில் எல்லாம் இது தான் நிலைமை.

உண்மையிலேயே ஐ.நா. போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் நிறுவப்படுமானால் அது பிரச்சினையை தீர்க்கும் என்று கருதவில்லை. "ஐ.நா. தமிழ் தேசியவாதிகளின் விளக்கத்தை சரி என்று ஏற்றுக் கொள்கின்றது," என்று வைத்துக் கொள்வோம். போர்க்குற்றம் புரிந்த சிறிலங்கா படையினரையும், பாதுகாப்பு அமைச்சரையும், ஜனாதிபதியையும் விசாரித்து தண்டனை வழங்குகின்றது என்று வைத்துக் கொள்வோம். பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் எத்தகைய எதிர்வினைகளை தோற்றுவிக்கும்? தண்டனை வழங்கப்பட்ட மகிந்த ராஜபக்ஷ, கோத்தபாய, மற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு "தேசத்தின் வீர புருஷர்கள்" அந்தஸ்து கிடைத்து விடும். அவர்களின் பெயரை வைத்தே சிங்கள இனவெறி அரசியல் தீவிரமடையும். யார் அதிக இனவாதம் பேசுகின்றனரோ, அவருக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கும்.

நிச்சயமாக, இலங்கையில் வாழும் தமிழ் மக்கள், "சிங்கள எழுச்சி" கண்டு கலக்கமடையவே செய்வர். சிங்கள மக்கள் மத்தியில், தமது "தேசிய நாயகர்களை" காட்டிக் கொடுத்த, "தமிழ்த் தேசத் துரோகிகள்" மீது வன்மம் அதிகரிக்கும். அது மீண்டும் ஒரு இனப்படுகொலைக்கு இட்டுச் சென்றாலும் ஆச்சரியப் பட ஒன்றுமில்லை. அமெரிக்க தூதரகம் இலங்கைத் தமிழர் பிரதிநிதிகளுடன் பேசிய பொழுது, அவர்கள் தெரிவித்த கருத்துகளே இவை. (விக்கிலீக்ஸ் கசிய விட்ட கேபிளில் குறிப்பிடப்பட்டது.) "அப்படி எல்லாம் நடக்கும் என்று நம்பவில்லை," என்று புறக்கணிப்பவர்கள், செர்பியா சென்று பார்ப்பது விட்டு வருவது நன்று. அங்கே செர்பிய இனவெறியை பரப்பும் கட்சிகளுக்கான மக்கள் ஆதரவு அதிகரித்து வருகின்றது. போர்க்குற்ற நீதிமன்றம் தண்டனை வழங்கிய மிலோசொவிச், கராசிச் ஆகியோரின் உருவப்படங்களை தங்கிய பெருந்திரள் மக்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு குறைவில்லை. எவ்வளவு தான் மேற்குலக நாடுகளின் ஆதரவு இருந்த போதிலும், பிற கட்சிகளால் மக்களின் மனதை மாற்ற முடியவில்லை.

இரண்டு வருடங்களுக்கு பிந்தி வந்துள்ள போர்க்குற்ற அறிக்கையானது, இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் பழைய ரணங்களை கிளறி விட்டுள்ளது. இழந்த வாழ்க்கையை மீளக் கட்டமைத்துக் கொண்டு, எதிர்காலத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கும் தம்மை இறந்த காலத்தில் தள்ளுவதாக உணருகின்றனர். தமிழகத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் "தமிழ் உணர்வாளர்கள்" இந்த உண்மையை ஒத்துக் கொள்ள மாட்டார்கள். ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை, அவர்களது பொறுப்பற்ற நடவடிக்கைகளையும் தான் கண்டித்துள்ளது. (வழமை போல தமிழ் ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்து விட்டன.) "சிங்களவர்கள் எல்லோரும் இனவெறியர்கள். சிங்களவனோடு சேர்ந்து வாழ முடியுமா?" என்று பழைய பல்லவியைத் தான், அவர்கள் இப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றனர். இலங்கைக்கு வெளியே, சிங்களவனையே கண்ணால் காணாத இடத்தில் இருந்து கொண்டு, அதைக் கூறுவது எளிது. இன முரண்பாடுகள் வளர்வதை தடுத்து நிறுத்துவது, அவசரமாக செய்யப்பட வேண்டிய கடமை. "நீ தான் இனவெறியன்... நீ தான் கெட்டவன்... நீ தான் கொலைகாரன்..." சிறு பிள்ளைகள் போல சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் இவ்வாறு தான் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படியே பேசிக் கொண்டிருந்தால், போர்க்குற்றங்களை யார் விசாரிப்பது? குற்றவாளிகள் மன்னிக்கப் பட வேண்டுமா? ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா, குவாத்தமாலா போன்ற நாடுகளில் நடந்த வழிமுறையை பின்பற்றுவது நடைமுறைச் சாத்தியமானது. போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும், பொது மக்கள் முன்னிலையில் தாங்கள் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டார்கள். இதனால் மேலாதிக்கம் செய்த சமூகத்தை சேர்ந்தவர்கள் கூட, தமது ஆட்கள் செய்த குற்றங்களுக்காக வெட்கித் தலை குனிந்தனர். மற்ற சமூகத்தை அரவணைத்துக் கொண்டனர். ஆனால், அங்கெல்லாம் அத்தகைய தீர்வை எட்ட வேண்டிய தேவை ஏகாதிபத்தியத்திற்கு இருந்தது. தென் ஆப்பிரிக்காவில், வெள்ளையினம் மேலாதிக்க சமூகமாக இருந்து பெரும்பாலான போர்க்குற்றங்களை புரிந்தது. குவாத்தமாலாவில் மேட்டுக் குடியை சேர்ந்தவர்கள், ஏழை உழைக்கும் வர்க்கத்தை அடக்குவதற்காக போர்க்குற்றம் புரிந்தனர். அந்த சமூகங்களை சேர்ந்தோர் போர்க்குற்றத்தில் தண்டிக்கப் பட்டால், அது ஏகாதிபத்தியத்தின் அத்திவாரத்தை ஆட்டம் காணச் செய்து விடும்.

இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பொறுத்த வரையில், பல்லின மக்களின் ஆதிக்கப் போட்டிக்குள் சிக்கித் தவித்த யூகோஸ்லேவியா உதாரணத்தை பின்பற்றலாம். இரண்டாம் உலகப்போர் காலத்தில் செர்பிய பாசிஸ்டுகளும் (Chetnics), குரோவாசிய பாசிஸ்டுகளும் (Ustashe) பிற இனங்களை அடக்கி கொடுங்கோன்மை புரிந்தனர். அப்போது நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் எல்லாவற்றிற்கும் அவர்கள் காரணமாக இருந்தனர். யூகோஸ்லேவியாவின் அனைத்து தேசிய இனங்களையும் பிரதிநிதித்துவப் படுத்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர், இனப்படுகொலையாளர்களும், போர்க்குற்றவாளிகளும் தண்டிக்கப் பட்டனர். போர்க்குற்றவாளிகள் எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், மக்கள் நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு தண்டனை வழங்கப் பட்டது. யூகோஸ்லேவியா சோஷலிச நாடாக திகழ்ந்த நாற்பதாண்டு காலத்தில் இனப்பிரச்சினை எந்த வடிவத்திலும் தலை தூக்கவில்லை. இலங்கையை சேர்ந்த சிங்கள, தமிழ் மக்கள் யூகோஸ்லேவியாவில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய தருணம் இது. இனக்குரோதத்தை வளர்க்கும் சிங்கள இனவாதமும், தமிழ் இனவாதமும் மக்களுக்கு மீட்சியைத் தரப்போவதில்லை. உழைக்கும் மக்களின் புரட்சியும், மக்கள் நீதிமன்றங்களுமே போர்க்குற்றவாளிகளை விசாரித்து தண்டனை வழங்க முடியும்.

(முற்றும்)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
2.
சிறிலங்கா அரசவைக் கோமாளி, "சிங்கள வைகோ"!
1.
ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்

Tuesday, April 26, 2011

சிறிலங்கா அரசவைக் கோமாளி, "சிங்கள வைகோ"!


[ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்]

(பகுதி : இரண்டு)


2008 ம் ஆண்டின் தொடக்கம், மன்னார் மாவட்டத்தை கைப்பற்றுவதற்காக சிறிலங்கா படைகள் போரிட்டுக் கொண்டிருந்த நேரம். இலங்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த, நெதர்லாந்தை சேர்ந்த தொண்டு நிறுவன முகாமையாளரை சந்தித்த போது, பல தகவல்களைக் கூறினார். தசாப்த காலமாக மேற்கத்திய நிதியுதவில் இயங்கி வரும் தொண்டு நிறுவனங்கள் ராஜபக்ச அரசினால் அவமானப் படுத்தப் பட்டனர். புலிகள் அமைப்பிற்கு நிதியளித்ததாக, ஆயுதங்களைக் கூட கடத்தி வந்ததாக, அந்த நிறுவனங்கள் மேல் குற்றம் சாட்டப்பட்டது. அரசின் விஷமத்தனமான பிரச்சாரம் காரணமாக, சிங்கள மக்கள் தொண்டு நிறுவனங்களை தேசத் துரோகிகளாக கருதினார்கள். இதனால் அவற்றில் வேலை செய்து வந்த பல வெளிநாட்டவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

அரசு புரியும் மனித உரிமை மீறல்களை, இந்த நிறுவனங்களை சேர்ந்தோரே ஆவணப் படுத்திகின்றனர் என்று, ராஜபக்ச அரசு சந்தேகப் பட்டது. இதனால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த வன்னி பெரு நிலப்பரப்பை விடுவிக்கும் போரின் தொடக்கத்திலேயே வெளியாருக்கு அனுமதி மறுக்கப் பட்டது. தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்ல, ஐ.நா. நிறுவனங்களைக் கூட போர்ப் பிரதேசத்தில் இயங்க அனுமதிக்கவில்லை. தவிர்க்கவியலாது, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மட்டும் இயங்க அனுமதி வழங்கப் பட்டது. பக்கச்சார்பற்ற தன்மையை உறுதிப் படுத்துவதற்காக செஞ்சிலுவைச் சங்கம் மிக அவதானமாக வேலை செய்ய வேண்டியிருந்தது. சிறிலங்கா அரசு நடத்தும் ஊடகத் துறையை சேர்ந்தவர்களை மட்டுமே, போர்ச் செய்திகளை வெளியிட அனுமதித்தார்கள். இறுதி யுத்தத்தில், போர்க்குற்றங்கள் நடைபெறப் போகின்றன என்பதை அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். சிறிலங்கா அரசானது, தனது இராணுவத்தின் குற்றங்களுக்கான தடயங்கள் யாருக்கும் போகாத வண்ணம் பார்த்துக் கொண்டது. ஆனால், அதையும் மீறி பல குற்றங்கள் குறித்த விபரங்கள் வெளியுலகை சென்றடைந்தன.

நெதர்லாந்து நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர், அன்று ஒரு விடயத்தை உறுதியாகச் சொன்னார். "ராஜபக்ச அரசை, இதற்கு முந்திய இலங்கை அரசுகள் போன்று குறைத்து மதிப்பிட முடியாது. ராஜபக்ச சகோதரர்கள், சொன்னதைச் செய்பவர்கள். முல்லைத்தீவில் சிங்கக்கொடி ஏற்றுவோம் என்று சொல்கிறார்கள். வெகுவிரைவில் அது நடக்கலாம்." ஆனால், இன்னொரு எதிர்வுகூறல் பிழைத்துப் போனது. கடந்த காலத்தைப் போன்று, புலிகள் காடுகளுக்குள் மறைந்திருந்து கெரில்லா யுத்தத்தை தொடர்வாகள், என்று அவர் எதிர்பார்த்தார். அதற்கு மாறாக, புலிகள் மூன்று லட்சம் போது மக்களையும் வைத்துக் கொண்டு, போர் நிறுத்தத்தை கோரினார்கள். வெற்றி நிச்சயம் என்று உறுதியாக இருந்த, சிறிலங்கா அரசு போர்நிறுத்தத்திற்கு சம்மதிக்கவில்லை. நாற்பதாயிரம் தமிழர்களை கொன்றாவது, புலிகளை அழித்து விட வேண்டும் என்று திடமான மனதுடன் இருந்தது.

இந்திய மத்திய அரசும் புலிகளின் அழிவை விரும்பியிருந்ததை, முன்னாள் ஐ.நா. அதிகாரி கோர்டன் வைஸ் தெரிவித்தார். சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில், புலிகள் மட்டுமே தீர்வுக்கு தடையாக இருக்கின்றனர் என்று, சிறிலங்கா அரசு சர்வதேச சமூகத்தை நம்ப வைத்திருந்தது. (ஸ்கண்டிநேவிய கண்காணிப்பாளர்கள் பதிவு செய்த யுத்த நிறுத்த மீறல்களில் அதிகமானவை புலிகளுடையவை.) சமாதானப் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் உடன்படிக்கையின் பிரகாரம், புலிகளும், அரசும் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்த்தது. புலிகள் மீண்டும் போருக்கு தயாரானால், தாங்கள் சிறிலங்கா அரசுக்கு வேண்டிய உதவிகளை செய்யப் போவதாக அமெரிக்க தூதுவர் அறிவித்திருந்தார். "எத்தனை ஆயிரம் மக்கள் மடிந்தாலும் பரவாயில்லை. ஈழப்போர் இனிமேல் தொடரக் கூடாது." என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடாக இருந்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளும் அதனை எதிர்பார்த்தன. உலகில் தீராத போர் நடக்கும் நாடுகளில் இருந்து அகதிகள் வந்து குவிவதை தடுப்பது, அவர்களது முக்கிய நோக்கமாக இருந்தது. ஏற்கனவே அதிக அகதிகளை உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்த பொஸ்னியா, ஈராக், ஆப்கானிஸ்தான், சியாரா லியோன் போன்ற நாடுகளில் நடந்த போர்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

விடுதலைப் புலிகள் யாருடைய சொல்லுக்கும் கட்டுப்படாமல் சுதந்திரமான முடிவுகளை எடுக்கும் திறனைக் கொண்டிருந்தமை, மேற்கத்திய நாடுகளை எரிச்சலூட்டியது எனலாம். புலிகள் அமைப்பை வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள் தூக்கிப் போட வேண்டும் என்று, அவை முடிவெடுத்தன. உலகில் எந்தவொரு நாடும் புலிகளை ஆதரிக்கவில்லை. ஆனால், அந்த அமைப்பின் உயிர்நாடியான நிதி சேகரிப்பு முதலாளித்துவ நாடுகளிலேயே இடம்பெற்றது. சர்வதேச மூலதனத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவுக்கு அதனை தடுப்பது மிகவும் இலகுவானது. மேற்குலக நாடுகள் எடுத்த புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் , சிங்கள பேரினவாத சக்திகளை உற்சாகப் படுத்தின. அதே சர்வதேச மூலதனத்துடன் பின்னிப் பிணைந்துள்ள சிறிலங்கா அரசின் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டு வருவதும் இலகுவானது என்பதை அவர்கள் அன்று உணரவில்லை. ஐ.நா. நிபுணர் குழு சமர்ப்பித்த போர்க்குற்ற அறிக்கை, அந்த சூட்டைக் கிளப்பியுள்ளது.

ராஜபக்சவின் அரசவைக் கோமாளியான, "சிங்கள வைகோ"விமல் வீரவன்ச: "ஐ.நா. நிபுணர் குழுவுக்கு புலி ஆதரவு அமைப்புகள் லஞ்சம் கொடுத்திருப்பதாக..." வாய்க்கு வந்த படி உளறுகிறார். பணக்கார நாடுகளே ஐ.நா.வுக்கு நிதியுதவியளிக்கின்றன என்பது ஆரம்ப பாடசாலை மாணவனுக்கே தெரிந்த விடயம். மேற்குலகை நேரடியாக எதிர்க்க திராணியற்ற சிங்களப் பேரினவாதிகளின் வாய்ச் சவடால்களுக்கு ஐ.நா. மிரண்டு விடப் போவதில்லை. சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் உண்மையான பிரச்சினையை மக்களுக்கு அறிய விடாமற் செய்வதில் வல்லவர்கள். "ஐ.நா. சபை தமிழர்கள் மீது இரக்கப்பட்டு போர்க்குற்ற விசாரணை நடத்தப் போவதாக", தமிழ் இனவாதிகள் பரப்புரை செய்கின்றனர். "ஐ.நா. விசாரணை, தேசத்திற்காக போராடி மரித்த இராணுவவீரர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்துவதாக", சிங்கள இனவாதிகள் பரப்புரை செய்கின்றனர். "அமெரிக்காவினால் கூட வெல்ல முடியாத பயங்கரவாதத்தை நாங்கள் அழித்து விட்டதால் பொறாமை கொண்ட நாடுகளின் செயல்", என்று இலங்கை அரசு விளக்கம் கொடுக்கின்றது. எல்லோருக்கும் அவரவர் நியாயம் மட்டுமே முக்கியமாகப் படுகின்றது.

உள்நாட்டுப் பிரச்சினையில் அந்நிய நாடுகளோ, ஐ.நா.வோ தலையிடுவதை விரும்பா விட்டால், முன் கூட்டியே அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். அரசு ஏற்படுத்திய நல்லிணக்க ஆணைக்குழுவின் மெத்தனப் போக்கையும், இயலாமையையும் ஐ.நா. சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத் தக்கது. தனது படையை சேர்ந்தவர்கள் ஆயினும், குற்றம் செய்தவர்களை தண்டிக்கும் பொறுப்பை இலங்கை அரசு ஏற்றிருக்க வேண்டும். வேடிக்கை என்னவென்றால், அரச படைகளால் கைது செய்யப்பட்ட புலி உறுப்பினர்கள் மீது கூட போர்க்குற்ற வழக்குகள் போடப்படவில்லை. ஏற்கனவே மேற்கத்திய நாடுகளில் அத்தகைய வழக்குகள் நடந்துள்ளன. அந்த நாடுகளில் அகதியாக தஞ்சம் கோரிய முன்னாள் புலிகள் உறுப்பினர்கள் சிலரும், சிங்கள இராணுவவீரர்கள் சிலரும், போர்க்குற்றவாளிகளாக இனங்காணப் பட்டுள்ளனர். அவர்களை குற்றவாளிகளாக கருதி, பிற அகதிகளிடமிருந்து வேறு படுத்தி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இலங்கையில் இன்னும் தோன்றவில்லை. சிறிலங்கா படையினரின் குற்றங்களை ஒப்புக் கொண்டால் அது புலி ஆதரவுப் பிரச்சாரமாக கருதப்படும். புலிகளின் குற்றங்களை ஒப்புக் கொண்டால் அது சிறிலங்கா அரசு ஆதரவுப் பிரச்சாரமாக கருதப்படும். இரண்டு தரப்பினரும் எதிரும் புதிருமாக நிற்கும் நிலையில், மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.

ஐ.நா. அத்தகைய நல்லெண்ணத்துடன் நடவடிக்கை எடுத்து வருகின்றதா? தற்போது சமர்ப்பிக்கப் பட்டுள்ள நிபுணர் குழு அறிக்கை ஒரு ஆலோசனை மட்டுமே. போர்க்குற்ற விசாரணை குறித்த முடிவு இனிமேல் தான் எடுக்கப் பட வேண்டும். ஆனால் தன்னிடம் அதற்கான அதிகாரம் இல்லை என்கிறார், ஐ.நா. செயலாளர் பான் கி மூன். இலங்கை அரசு புரிந்த போர்க்குற்றங்கள் பற்றிய விசாரணையோ, குற்றவாளிகளுக்கான தண்டனையோ இன்னும் பல வருடங்கள் போனாலும் நிறைவேறுமா என்பது கேள்விக்குறி தான். அநேகமாக, அடுத்த தேர்தலில் மகிந்த ராஜபக்ச பதவி விலகும் வரையில் காத்திருக்கிறார்கள் போலும். ஐ.நா. பாதுகாப்புச் சபையில் அரை மனதுடன் சமர்ப்பிக்கப் படும் விசாரணைக்கான திட்டத்தை, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் எதிர்க்கலாம். அந்த எதிர்ப்பைக் காட்டியே, விசாரணை நடத்தப் படாமல் இழுத்தடிக்கப் பட்டு, இறுதியில் யோசனையை குப்பைக் கூடையில் வீசி விடலாம். யாராவது கேட்டால், ரஷ்யா, சீனா எதிர்த்தன என்று சாட்டுச் சொல்லலாம். ஐ.நா. இலங்கை போர்க்குற்றம் பற்றிய அறிக்கை தயாரிக்க வேண்டுமென, பிரிட்டனும், அமெரிக்காவும் வலியுறுத்தி வந்தன. உலகில் பலம் வாய்ந்த நாடுகளான, தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடிய பிரிட்டனும், அமெரிக்காவும் ஐ.நா. பாதுகாப்புச் சபையை மதிப்பதில்லை. ரஷ்யாவோ, சீனாவோ வீட்டோ அதிகாரம் பாவித்து தடுத்தாலும், திட்டத்தை நடைமுறைப் படுத்தும் வல்லமையைக் கொண்டுள்ளன.

சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை தமிழ் மக்கள் மன்னித்து விடலாம், ஆனால் மறக்கப் போவதில்லை. போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப் படுவதால், தங்களுக்கு கிடைக்கப்போகும் நீதியை விட, இனப்பிரச்சினை தீர்க்கப் படுவதையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர். அமெரிக்க அரசும், பிரிட்டனும் தமது நாடுகளில் வதியும் தமிழர் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியுள்ளது. புலிகளின் கொள்கைகளை புலத்தில் முன்னெடுக்கும் அமைப்புகளை சேர்ந்தவர்கள், சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை காட்டும் ஆதாரங்களை வைத்திருப்பார்கள் என்ற எண்ணத்திலேயே அவ்வாறு நடந்து கொண்டுள்ளது. போர் நடந்த காலத்தில் சிறிலங்கா அரசுக்கு துணை நின்று புலிகளை அழித்த நாடுகளுக்கு, தமிழர்கள் மேல் திடீர் கரிசனை வந்து விட்டது, என்று சிலர் நினைக்கலாம். முன்னாள் ஆங்கிலேயக் காலனியான இலங்கையில், சிங்களத் தேசியத்தையும், தமிழ்த் தேசியத்தையும் அவர்களே வளர்த்து விட்டார்கள். இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் கொதிநிலைக்கு வந்து, யுத்தம் நடந்து கொண்டிருக்கையில் ஆயுதம் விற்று இலாபம் சம்பாதித்தார்கள். அமெரிக்காவும், பிரிட்டனும் தங்கள் நலன் சார்ந்தே சிந்திக்கின்றனர், செயற்படுகின்றனர். போர்க்குற்ற குற்றச்சாட்டில் சிறிலங்கா அரசை சிக்க வைப்பது கூட, தமிழர் நலன் சார்ந்தல்ல. நாம் எப்போதும் இனத்தை மையப் படுத்தியே சிந்தித்துக் கொண்டிருப்பதால், பொருளாதாரப் பிரச்சினைகளை புறக்கணிக்கின்றோம்.




(தொடரும்...)



தொடரின் முதலாவது பகுதியை வாசிக்க:
ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்

Monday, April 25, 2011

ஒரு போர்க்குற்றவாளி நீதிபதியாகிறார்

பொஸ்னியாவில் செர்பிய மொழி பேசும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் மூர்க்கமாக மோதிக் கொண்டிருந்த காலத்தில் நடந்த கதை இது. செர்பியப் படைகளால் முற்றுகையிடப் பட்ட சிரபெனிச்சா நகரம். சிரபெனிச்சா நகரினுள் அகப்பட்டுக் கொண்டவர்கள் பொஸ்னிய முஸ்லிம்களும், அவர்களை பிரதிநிதித்துவப் படுத்திய இராணுவமும். நகரை விட்டு வெளியேறுவதற்கு ஒரேயொரு சுரங்கப் பாதை மட்டுமே இருந்தது. ஆனால் அந்தப் பாதையை கட்டுப்படுத்திய முஸ்லிம் படைகள், தமது மக்களை வெளியேற அனுமதிக்கவில்லை. மாதக்கணக்காக உணவும், மருந்தும் இன்றி துன்பப் பட்ட மக்கள் மீது, கிறிஸ்தவப் படைகள் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கிக் கொண்டிருந்தன.

இந்தச் சம்பவங்கள், தமிழ் மக்களுக்கு வன்னிப்போரை நினைவு படுத்தலாம். நந்திக் கடலுக்கும், இந்து சமுத்திரத்திற்கும் இடையில் இருந்த சிறு நிலப்பகுதி, சிறிலங்கா இராணுவத்தின் முற்றுகைக்குள்ளாகி இருந்தது. சிரபெனிச்சாவில் நடந்ததைப் போன்றே, பல லட்சம் தமிழ் மக்கள் உணவின்றி, மருந்தின்றி, ஷெல் வீச்சுகளால் மரணித்துக் கொண்டிருந்தனர். சிரபெனிச்சாவுக்கும், முள்ளிவாய்க்காலுக்கும் இடையில் ஒரு வேறுபாடு இருந்தது. முன்னையதில் ஐ.நா. அமைதிப் படை நிலை கொண்டிருந்தது. பின்னையதில் "சர்வதேச சமூகம் தலையிடும்" என்ற வாக்குறுதி மட்டுமே வழங்கப் பட்டிருந்தது. ஆனால் முடிவு என்னவோ இரண்டுக்கும் ஒரே மாதிரி தான் அமைந்திருந்தது. வரலாறு எங்காவது ஒரு இடத்தில் திரும்பிக் கொண்டிருக்கிறது. எங்களுக்குத் தான் வரலாற்றுப் பாடம் என்றால் வேப்பங்காயாக கசக்கிறது.

"சர்வதேச சமூகம் தலையிட்டு, அன்னியப் படைகள் பாதுகாப்பு வழங்கியிருந்தால், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்திருக்காது..." என்று பலர் வாதித்துக் கொண்டிருக்கின்றனர். சிரபெனிச்சாவில் சர்வதேச சமூகம் நேரடியாக தலையிட்டது. நெதர்லாந்து இராணுவம், ஐ.நா. அமைதிப்படை என்ற பெயரில் பாதுகாப்பு வழங்கியிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக மேற்குலக ஊடகங்கள், அரசாங்கங்கள், நிலைமையை மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தன. இத்தனை "பாதுகாப்புகளுக்கு" மத்தியிலும், சிரபெனிச்சாவில் நடந்த இனப்படுகொலையை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. முஸ்லிம் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிய ஐ.நா. அமைதிப்படை, முன்னேறிய கிறிஸ்தவப் படைகளை எதிர்த்துப் போரிடவில்லை. மாறாக, அவர்கள் தான் முதலில் மிரண்டு ஓடினார்கள். தப்பியோடிக் கொண்டிருந்த மக்களையும் ஐ.நா. அமைதிப்படை தாங்கிகள் மிதித்து கொன்றுள்ளன. அந்தளவு பயந்தாங்கொள்ளிப் படையினரை தான், ஐ.நா. முஸ்லிம் மக்களைப் பாதுகாக்க அனுப்பி வைத்திருந்தது. இந்த லட்சணத்தில், ஐ.நா. அமைதிப்படை முள்ளிவாய்க்கால் வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?, என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

ஈழப்போரின் இறுதியில் வன்னி மண்ணில் நடந்த அதே போன்ற அவலம், 1995 ம் ஆண்டு சிரபெனிச்சா நகரில் அரங்கேறியது. 24000 மக்களைக் கொண்ட சிரபெனிச்சா நகரில், பிற இடங்களை சேர்ந்த அகதிகளும் வந்து சேர்ந்து விட்டதால், மக்கட்தொகை 60000 த்தை தாண்டியது. குறைந்தது 8000 (செர்பிய) முஸ்லிம்கள், மிலாடிச் தலைமையிலான (செர்பிய) கிறிஸ்தவப் படைகளால் படுகொலை செய்யப் பட்டனர். இனப்படுகொலை நடந்து சில வருடங்களுக்குப் பின்னர், பல இரகசியங்கள் வெளியாகின. சிரபெனிச்சாவின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த நெதர்லாந்து ஜெனரல் கரெமென்ஸ், இனப்படுகொலையாளனான மிலாடிச்சுடன் விருந்துண்டு மகிழ்வதைக் காட்டும் வீடியோ வெளியாகியது. சிரபெனிச்சாவை கைப்பற்ற உதவியதற்காக ஐ.நா.படையினருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக மிலாடிச் பரிசளித்து கௌரவித்தார். ஏற்கனவே சிரபெனிச்சாவில் நிலை கொண்டிருந்த முஸ்லிம் படையினர், ஐ.நா. அமைதிப் படையிடம் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டியிருந்தமை குறிப்பிடத் தக்கது.

மேற்குறிப்பிட்ட சம்பவங்களை அறிந்து கொள்ளும் போது, சர்வதேச சமூகம் செர்பிய பேரினவாதிகளை ஆதரித்துள்ளமை புலனாகும். ஆனால் அந்த ஆதரவு போர் முடியும் வரையில் தான். யூகோஸ்லேவியா போர்கள் எல்லாம் முடிந்து சில வருடங்களின் பின்னர், ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆதரவுடன் போர்குற்ற விசாரணை ஆரம்பமாகியது. அப்போது போர்க்குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப் பட்டவர்களில் பெரும்பான்மையானோர் (கிறிஸ்தவ) செர்பியர்கள்.
பொஸ்னிய ஜெனரல் மிலாடிச், யூகோஸ்லேவியாவின் கடைசி ஜனாதிபதி மிலோசொவிச் எல்லோரும் போர்க்குற்றவாளிகளாக கருதப்பட்டு தண்டனை வழங்கப் பட்டது. போர்க்குற்றத்தில் சம்பந்தப்பட்ட, 400 சிப்பாய்களை சிரபெனிச்சாவுக்கு அனுப்பிய நெதர்லாந்து நாட்டில் தான் போர்க்குற்ற விசாரணைகள் நடைபெற்றன. யூகோஸ்லேவிய ஜனாதிபதி வரையிலான பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்ட வழக்கில், ஐ.நா.அமைதிப்படையை சேர்ந்த எவரும் போர்க்குற்றவாளிகளாக கருதப் படவில்லை. இருந்த போதிலும், முதலாவது விசாரணையிலேயே ஐ.நா., மற்றும் மேற்குலக நாடுகளும் சம்பந்தப்பட்டுள்ளமை தெரிய வந்தது. யூகோஸ்லேவிய இனப்படுகொலைகளில், போர்க்குற்றங்களில், மேற்குலக நாடுகள் வகித்த பங்கு குறித்த தகவல்கள் ஓரளவுக்கேனும் ஊடகங்களில் வெளியாகியிருந்தன. ஆயினும் என்ன? நீங்கள் யாராவது அவர்களை குற்றவாளிகளாக பார்க்கிறீர்களா?

"பொஸ்னியாவில் நடந்த போர்க்குற்றத்திற்கும், இலங்கையில் நடந்த போர்க்குற்றத்திற்கும் இடையில் என்ன தொடர்பு?" என்று சிலர் மேதாவித்தனமாக கேட்கலாம். மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, "சிறுபான்மை இனத்தை அழிக்க முயன்ற பேரினவாதத்தின் கோரத்தாண்டவம்," என்று ஒரே வரியில் பதில் சொல்லி விட்டுப் போகலாம். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல, இன முரண்பாடுகள் எனும் நெருப்பில் குளிர் காயும் மேலைத்தேய கூத்தாடிகள் எமது கண்களுக்கு தெரிவதில்லை. பொம்மலாட்டம் பார்க்கும் பார்வையாளரின் நிலையில் தான் எமது அரசியல் அறிவு இருக்கின்றது. யூகோஸ்லேவிய உதாரணத்தையே எடுத்துக் கொள்வோம். அங்கே நடந்தது மதப்போர், அல்லது இனப்போர், என்று தான் ஊடகங்கள் கதை பரப்பின. "தென் ஸ்லாவிய மக்களின் சமஷ்டிக் குடியரசு", கம்யூனிச நாடாக இருந்த காலத்தில் இந்தப் பிரச்சினை எதுவும் தலைகாட்டவில்லை. மேற்கத்திய முகவரான மிலோசொவிச் ஆட்சிக்கு வந்த பின்னர் தான், மறைந்திருந்த தேசியவாதிகள் (அல்லது இனவெறியர்கள்) ஒருவரைப் பார்த்து ஒருவர் ஆயுதம் ஏந்தினார்கள். மிலோசொவிச் அமெரிக்காவின் ஆலோசனையின் பேரில், ஸ்லோவேனியா, குரோவாசியா, பொஸ்னியா ஆகிய நாடுகளை அங்கீகரித்தார். கடைசியாக கொசோவோ பிரிவினையுடன், மிலோசொவிச் தேவையற்ற ஒருவராக தூக்கியெறியப் பட்டார்.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட மகிந்த ராஜபக்ஷ ஒரு கடும்போக்காளராக தன்னைக் காட்டிக் கொண்டார். ராஜபக்ஷ மிகத் தீவிரமான சிங்கள பேரினவாதி, அதனால் மேற்குலகம் தமிழருக்கு ஆதரவாக நடந்து கொள்ளும் என்று, தமிழ் தேசியவாதிகள் கணக்குப் போட்டனர். ஆனால், "தான் ஆட்சிக்கு வந்தால் புலிகளை அழித்து போரை நிறுத்துவதாக," சூளுரைத்த ஒருவரே தமக்கேற்றவர் என்று, இந்தியாவும், மேற்குலகமும் கணக்குப் போட்டன. "புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்து நடக்க வேண்டும். மீறினால் கடுமையான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும்...." என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவரே எச்சரிக்கை விடுத்தார். மீண்டும் போர் தொடங்கினால், அமெரிக்கா போன்ற சக்தி வாய்ந்த நாடுகளின் ஆதரவு கிடைக்கும் என்று, இலங்கை அரசு கணித்து வைத்திருந்தது. சமாதானப் பேச்சுவார்த்தையில் பங்குபற்றிய பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வழங்கிய நேர்காணல் இங்கே குறிப்பிடத் தக்கது.
Professor G.L.Peiries said that “The US told the LTTE very clearly that she had been following developments in this country and that she had credible reports the LTTE were recruiting child soldiers and bring in arms. The US explained to the LTTE that if they broke the cease-fire, the consequences would be extreme against the backdrop of an international thrust against terrorism. This shows that we have powerful friends. It is an enormous source of strength to the government and the people." (http://www.island.lk/2002/03/15/news12.html)

இறுதிப்போர் தொடங்குவதற்கு முன்னரே, புலிகளின் சர்வதேச செயற்பாடுகளை முடக்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்திருந்தது. அமெரிக்காவில் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்க முயன்றவரை FBI கைது செய்தது. இந்தோனேசியாவிலும் ஒரு ஆயுத விநியோகஸ்தர் கைதானார். வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை ஏற்றிச் சென்ற கப்பல்களை அமெரிக்க செய்மதிகள் கண்காணித்தன. செய்மதிப் படங்களை பெற்றுக் கொண்ட இலங்கை கடற்படை, சில கப்பல்களை சர்வதேச கடற்பரப்பில் வைத்தே தாக்கி அழித்தது. அமெரிக்கா எதற்காக புலிகளை அழிக்க நினைக்க வேண்டும்? அதற்கான பதிலையும் தூதுவரே கூறுகின்றார். "ஆயுதமேந்திய வன்முறைப் போராட்டம் உலக நாடுகளால் நிராகரிக்கப் பட்டு வரும் காலத்தில், புலிகள் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வைக் காண முனைய வேண்டும்."
(The US statement further said: “The US understands that both sides, not just the LTTE, have responsibilities under the terms of the ceasefire accord. In the current international context, however, in which terrorism is being condemned in more and more countries, the LTTE should be especially vigilant about observing the terms of the ceasefire accord. If it does not, it will increase its international isolation and do harm to the group it claims to represent, Sri Lanka’s Tamils, who earnestly want an end to the war.”)

"புலிகளின் தாக்குதல் முறைகளை அல்கைதா பின்பற்றி வருகின்றது." என்று தமிழ்ச் செல்வன் ஒரு முறை பெருமையாக தெரிவித்தார். ஏடன் துறைமுகத்தில் அமெரிக்க போர்க்கப்பல் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதலை குறிப்பிட்டிருக்கலாம். முரண்நகையாக, "புலிகள் அமைப்பினர் சர்வதேச தீவிரவாத இயக்கங்களுக்கு முன்மாதிரியாக திகழக் கூடாது." என்பது தான் அமெரிக்காவின் கவலையும். எப்போதும் ஒருவரிடம் இருந்து மற்றவர் கற்றுக் கொள்வது உலகின் வழமை. "இலங்கையில் ஒரு இயக்கம் முப்பதாண்டுகளாக வெற்றிகளைக் குவித்த வண்ணம் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது." என்ற செய்தி பிற ஆயுதபாணி அமைப்புகளை உற்சாகப் படுத்த போதுமானது.

(தொடரும்)

Tuesday, December 21, 2010

கொசோவோ: பயங்கரவாதமே வெல்லும்!

சமீபத்தில் சர்வதேச செய்திகளில் அடிபட்ட விடயம் கொசோவோ பொதுத் தேர்தல் பற்றியது. செர்பியாவிடம் இருந்து பிரிந்த குட்டி நாடான கொசோவோவின் சுதந்திரத்தை குறிப்பிட்ட சில மேலைத்தேய நாடுகள் மட்டுமே அங்கீகரித்துள்ளன. கொசோவோ பிரிவினைக்கு நேட்டோ படைகளின் இராணுவ பலம் மட்டுமல்ல, கொசோவோ விடுதலைப் படையின் (Ushtia Çlirimtare ë Kosovës) ஆயுதப்போராட்டமும் ஒரு காரணம். (கொசோவோ மக்களுக்கு யார் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார்கள் என்று அவர்களே முரண்பட்டுக் கொள்வது வேறு விடயம்.)
கூட்டாக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டதால், KLA தலைவர் ஹாசிம் தாச்சி பிரதமராக வர வேண்டும் என்று நேட்டோ தலைமை எதிர்பார்த்தது. ஆனால் விதி வேறு விதமாக தீர்மானித்தது. சுதந்திர கொசோவோவில் நடந்த பொதுத் தேர்தலில், ஆயுதம் ஏந்தாத மிதவாத கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனால் தீவிரவாத KLA ஆட்சி அமைக்கும் வாய்ப்பு தவறிய போதிலும், உண்மையான அதிகாரம் அவர்கள் கைகளில் இருந்தது. முன்னால் KLA போராளிகள், புதிய கொசோவோ போலிஸ் படையினராக மாற்றப்பட்டனர். என்ன வித்தியாசம்? சீருடை மட்டும் தான் மாறியது. கொசோவோ விடுதலைப் படை, கொசோவோ ஜனநாயகக் கட்சியாகியது.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ஹாசிம் தாச்சியின் கட்சி வெற்றியீட்டியதால், அவர் பிரதமராக தெரிவானார். முன்னை நாள் ஆயுதக்குழுவின் தலைவர், இன்று ஜனநாயக பாராளுமன்றத் தலைவரானார். ஆனால் ஆயுதப்போராட்ட கால அக்கிரமங்களின் ஊழ்வினைப்பயன் இன்னும் விரட்டுகின்றது. ஹாசிம் தாச்சியை ஒட்டு மொத்த கொசோவோ மக்களின் காவிய நாயகனாக கொண்டாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் கமிஷன் கூட, அவரை குற்றவாளி என்கிறது. சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமைகள் கமிஷன் வெளியிட்ட அறிக்கை, ஹாசிம் தாச்சியின் இருண்ட மறுபக்கத்தை காட்டுகின்றது. Parliamentary Assembly of the Council of Europe (PACE) அமைப்பின் சுவிஸ் பிரதிநிதி வெளியிட்ட உண்மைகள், புதிய பிரதமரின் முகத்தில் கரியைப் பூசியது. "90 களில் இயங்கிய Drenica என்ற மாபியா கிரிமினல் குழுவின் முக்கிய புள்ளி, இன்றைய பிரதமர் ஹாசிம் தாச்சி.
கொசோவோ அல்பேனிய கிரிமினல்களைக் கொண்ட Drenica வின் முக்கிய தொழில், மனிதர்களைக் கடத்துவது, கொலை செய்வது, அவர்களின் உடல் உறுப்புகளை எடுத்து விற்பது. அநேகமாக இந்த கிரிமினல்களால் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி செர்பிய பொதுமக்கள். இந்த செய்திகள் எல்லாம் பத்து வருடங்களுக்கு முன்னமே செர்பிய ஊடகங்களில் வெளிவந்திருந்தன. ஆனால் மனித உரிமைகளின் காவலர்களான அமெரிக்காவும், ஐரோப்பாவும் அவற்றை அலட்சியப் படுத்தின. அன்று சர்வாதிகாரி மிலோசொவிச்சை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஹாசிம் தாச்சி மேற்குலகில் ஹீரோவாக பார்க்கப்பட்டார்.
முன்னாள் யூகோஸ்லேவிய போர்க்குற்ற நீதிமன்ற நீதிபதி கார்லா டெல் பாண்டே ஒரு புத்தகம்("The Hunt") எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவிக்கும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. கொசோவோவை சேர்ந்த அல்பேனிய மாபியா குழுவினர், செர்பியர்களை அயல்நாடான அல்பேனியாவுக்கு கடத்திச் சென்றுள்ளனர். அங்கே அவர்களை கொன்று, உடல் உறுப்புகளை அறுவைச் சிகிச்சை செய்து வெட்டி எடுத்துள்ளனர். அல்பேனியாவின் திரானா விமான நிலையம் ஊடாக, உடல் உறுப்புகள் இஸ்ரேலுக்கும், மேற்குலக நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. அன்று அல்பேனியர்களின் குற்றங்களை விசாரிப்பதற்கு, மேற்குலக நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. செர்பியர்கள் என்ன குற்றம் இழைத்திருக்கிறார்கள் என்று விசாரிப்பது மட்டுமே, யூகோஸ்லேவிய போர்க்குற்ற நீதிமன்றத்தின் கடமையாக இருந்துள்ளது.

கொசோவோ யுத்தம் வெடித்த பொழுது, சேர்பியப் படைகள் போர்க்குற்றங்கள் புரிந்துள்ளதை யாரும் மறுக்கவில்லை. செர்பியப்படைகள் அல்பேனிய பொது மக்களை கொலை செய்து, வீடுகளை எரித்து, அவர்களை வெளியேற்றியது. இவை எல்லாம் சர்வதேச ஊடகங்களில் விலாவாரியாக பேசப்பட்டன. உலகத்தில் எல்லோரும் சேர்பியர்களின் கொடுமைகளை மட்டும் கேள்விப்பட்டனர். ஆனால் கொசோவோவை நேட்டோப் படைகள் ஆக்கிரமித்த பின்னர் என்ன நடந்தது? அதைப் பற்றி எந்த ஊடகமும் பேசவில்லை. ஹாசிம் தாச்சி தலைமையிலான KLA ஆயுதபாணிகள், இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். செர்பியர்கள் மட்டுமல்ல, ஜிப்சி இன மக்களும், அடித்து விரட்டப்பட்டனர். அல்பெனியர்களைத் தவிர்ந்த வேறு எந்த இனத்தவருக்கும், "சுதந்திர கொசோவோவில்" இடம் இல்லை என்பதே KLA யின் கொள்கை.

ஹாசிம் தாச்சியின் KLA ஆரம்ப காலத்தில் ஒரு பயங்கரவாத குழுவாகவே செயற்பட்டு வந்தது. செர்பிய அரசு மட்டும் இதனை கூறவில்லை, அமெரிக்க அரசும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் KLA பெயரை சேர்த்திருந்தது. பயங்கரவாத இயக்கமாக கருதப்பட்ட KLA யின் ஆரம்ப கால தாக்குதல்கள் சில:
பொதுமக்கள் பயணம் செய்த பேரூந்து வண்டி மீது தாக்குதல். 40 பேர் பலி. செர்பிய பாடசாலை மீது தாக்குதல், 6 சிறுவர்கள் பலி. 1999 ல் Prizren நகரில் KLA தாக்குதலில் 300 செர்பியர்கள் படுகொலை செய்யப்படனர். அவர்களில் கிறிஸ்தவ பாதிரிகளும் அடக்கம். கன்னியாஸ்திரிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். கிறிஸ்தவ தேவாலயங்களில் இருந்த சுருவங்கள் நொறுக்கப்பட்டன. ஒரு சேர்பியப் பொதுமகனின் வெட்டப்பட்ட தலையுடன் KLA ஆயுதபாணிகள் நிற்கும் போட்டோ மேலே உள்ளது. இது மட்டுமல்ல, சொந்த அல்பேனிய இனத்தை சேர்ந்த இளம்பெண்களை கடத்திச் சென்று, இத்தாலி விபச்சார விடுதிகளில் விற்றுள்ளனர்.

இன்று ஹாசிம் தாச்சியை குற்றவாளியாக காட்டும் தகவல்கள், மேற்குலகின் ஒப்புதல் இன்றி கசியவில்லை. ஐரோப்பிய ஒன்றியம், கொசோவோவை சுதந்திர நாடாக அங்கீகரிக்குமாறு செர்பியாவை நிர்ப்பந்தித்து வருகின்றது. செர்பியர்களை திருப்திப் படுத்தவும், தாம் நடுநிலையானவர்கள் என்பதைக் காட்டவும், இப்போது இந்தக் தகவல்களை பகிரங்கப் படுத்தியிருக்கலாம்.
மேலதிக தகவல்களுக்கு:
Serbian Prosecutor Investigating Reports of Organ Trafficking During War in Kosovo
The horrors of the yellow house in Burrel N Albania.

Thursday, December 02, 2010

விக்கிலீக்ஸ்: ராஜபக்ச குற்றவாளி, விசாரணைக்கு தமிழர் தயாரில்லை

"ராஜபக்ச சகோதரர்களும், சரத் பொன்சேகாவும் போற்குற்றத்திற்கு பொறுப்பாளிகள். ஆனால் போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு இந்த அரசாங்கம் பதவியில் இருக்கும் வரையில் எந்தவொரு விசாரணையும் நடைபெறப் போவதில்லை. அதே நேரம், தமிழர் தரப்பிலும் போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு கிட்டவில்லை. இன்றைய நிலையில் போர்க்குற்ற விசாரணை நடக்குமாகில், அதனால் தமிழரே அதிகமாக பாதிக்கப்படுவர் என்று அஞ்சுகின்றனர். இந்த விடயத்தில் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் இடையில் தெட்டத் தெளிவான வேறுபாடு காணப்படுகின்றது." - இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் PATRICIA A. BUTENIS
(விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரகசிய ஆவணங்களில் இருந்து)

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், அமெரிக்க அரசுக்கு அனுப்பிய கேபிள் தகவல்களின் சுருக்கம்:
அரசுத் தலைவர்கள் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்பதாலே, இலங்கை அரசு போர்க்குற்றங்களை விசாரணைக்கு எடுக்கத் தயங்குவதன் காரணம். இலங்கை அரசுப் படைகள் புரிந்த போர்க்குற்றம் சம்பந்தமான விசாரணைகள், இந்த அரசு பதவியில் இருக்கும் வரை நடக்கப்போவதில்லை. போர்க்குற்ற விசாரணையை, போரில் வெற்றியீட்டிய வீர நாயகர்களுக்கு எதிரான சர்வதேச சதியாகவே, இலங்கை அரசு கருதுகின்றது. இலங்கையின் இராணுவ, அரச அதிகாரிகளும், ஆட்சியில் இருக்கும் ராஜபக்ச சகோதரர்களும், எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகாவும் போர்க்குற்றங்களுக்கான பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கும். புலிகள் அமைப்பின் சிரேஷ்ட தலைவர்கள் பெருமளவில் கொல்லப்பட்டு விட்டனர். கனிஷ்ட தரத்திலான ஆயிரக்கணக்கான புலிகள் அரச படைகளினால் சிறைப்பிடிக்கப் பட்டுள்ளனர். எதிர்காலத்தில் போர்க்குற்ற விசாரணைக்கு, அரசு இவர்களையும் கொண்டு வந்து நிறுத்துமா என்பது குறித்த தெளிவில்லை. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அறிவிப்புக்கு பின்னர், "குற்றங்களை விசாரிக்கும் ஆணைக்குழு" ஒன்றை இலங்கை அரசு நியமித்தது.

வேறுபட்ட காரணங்களுக்காக, இலங்கையில் வாழும் தமிழர்கள் போர்க்குற்ற விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அமெரிக்க தூதுவர் உரையாடிய தமிழ் அரசியல் தலைவர்கள், அதனை நீண்ட கால நடவடிக்கையாக பின்போட விரும்பினார்கள். இது சம்பந்தமாக அதிக அழுத்தம் கொடுப்பது, தமிழர்களையே பாதிக்கும் என்றனர். ஜனாதிபதி வேட்பாளராக நின்ற (முன்னை நாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.) சிவாஜிலிங்கம் மட்டுமே இது குறித்து பகிரங்கமாக பேசிய தலைவர் ஆவார். தமிழர் பிரச்சினையை அரசோ, அல்லது எதிர்க்கட்சிகளோ கவனிப்பதில்லை என்று சாடினார். சிவாஜிலிங்கம், சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் தனித்தனியான பிரதமர்களைக் கொண்ட சமஷ்டி அமைப்பு தீர்வைக் கோரினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடனான உரையாடலில், புலம்பெயர்ந்த தமிழரும், சர்வதேச சமூகமும் இந்தப் பிரச்சினையை முன்னெடுப்பதை வரவேற்றார். ஆனால், அவர் கூட, விசாரணையால் தமிழர்களுக்கே பாதிப்பு என்றார். பின் விளைவுகளுக்கு அஞ்சிய சம்பந்தர், பிரச்சினையை பாராளுமன்ற விவாதத்திற்கு கொண்டு செல்லவும் விரும்பவில்லை. அரசு தானாகவே விசாரணையை நடத்தாது, என்ற யதார்த்தத்தை சம்பந்தர் புரிந்து கொண்டாலும், உண்மை என்றோ ஒரு நாள் வெளிவருவது தேச நலனுக்கு உகந்தது என்றார்.

மேல் மாகாண தமிழ் அரசியல் தலைவர் மனோ கணேசன், ராஜபக்சவுக்கு எதிராக தேசத்தை ஒன்றிணைப்பதை முக்கியமாக கருதினார். TNA MP பத்மினி சிவசிதம்பரம், "உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். ஆனால் போர்க்குற்ற விசாரணைக்கு இது ஏற்ற தருணமல்ல." என்றார். தமிழ் அரசியல்வாதிகள் போர்க்குற்ற விசாரணைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அதற்குப் பதிலாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதிலும், தமிழரின் பூர்வீக பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றத்தை தடுப்பதிலும் அக்கறையாக இருந்தனர்.

(விக்கிலீக்ஸ் வெளியிட்ட முழுமையான ஆவணங்கள் கீழே.)


S E C R E T SECTION 01 OF 03 COLOMBO 000032
SIPDIS
DEPARTMENT FOR SCA/INSB
EO 12958 DECL: 01/15/2020
TAGS PGOV, PREL, PREF, PHUM, PTER, EAID, MOPS, CE
SUBJECT: SRI LANKA WAR-CRIMES ACCOUNTABILITY: THE TAMIL
PERSPECTIVE
REF: A. 09 COLOMBO 1180 B. COLOMBO 8
COLOMBO 00000032 001.2 OF 003
Classified By: AMBASSADOR PATRICIA A. BUTENIS. REASONS: 1.4 (B, D)

1. (S) SUMMARY: There have been a few tentative steps on accountability for crimes allegedly committed by Sri Lankan troops and civilian officials during the war with the LTTE. President Rajapaksa named a committee to make recommendations to him on the U.S. incidents report by April, and candidate Fonseka has discussed privately the formation of some form of "truth and reconciliation" commission. Otherwise, accountability has not been a high-profile issue -- including for Tamils in Sri Lanka. While Tamils have told us they would like to see some form of accountability, they have been pragmatic in what they can expect and have focused instead on securing greater rights and freedoms, resolving the IDP question, and improving economic prospects in the war-ravaged and former LTTE-occupied areas. Indeed, while they wanted to keep the issue alive for possible future action, Tamil politicians with whom we spoke in Colombo, Jaffna, and elsewhere said now was not time and that pushing hard on the issue would make them "vulnerable." END SUMMARY.

ACCOUNTABILITY AS A POLITICAL ISSUE

-----------------------------------

2. (S) Accountability for alleged crimes committed by GSL troops and officials during the war is the most difficult issue on our bilateral agenda. (NOTE: Both the State Department Report to Congress on Incidents during the Conflict and the widely read report by the University Teachers for Human Rights (Jaffna) also detailed many incidents of alleged crimes perpetrated by the LTTE. Most of the LTTE leadership was killed at the end of the war, leaving few to be held responsible for those crimes. The Government of Sri Lanka (GSL) is holding thousands of mid- and lower-level ex-LTTE combatants for future rehabilitation and/or criminal prosecution. It is unclear whether any such prosecutions will meet international standards. END NOTE.) There have been some tentative steps on accountability on the GSL side. Soon after the appearance of the State Department report, President Rajapaksa announced the formation of an experts' committee to examine the report and to provide him with recommendations on dealing with the allegations. At the end of the year, the president extended the deadline for the committee's recommendations from December 31 until April. For his part, General Fonseka has spoken publicly of the need for a new deal with the Tamils and other minorities. Privately, his campaign manager told the Ambassador that Fonseka had ordered the opposition campaign to begin work planning a "truth and reconciliation" commission (ref B).

3. (S) These tentative steps notwithstanding, accountability has not been a high-profile issue in the presidential election -- other than President Rajapaksa's promises personally to stand up to any international power or body that would try to prosecute Sri Lankan war heroes. While regrettable, the lack of attention to accountability is not surprising. There are no examples we know of a regime undertaking wholesale investigations of its own troops or senior officials for war crimes while that regime or government remained in power. In Sri Lanka this is further complicated by the fact that responsibility for many of the alleged crimes rests with the country's senior civilian and military leadership, including President Rajapaksa and his brothers and opposition candidate General Fonseka.

THE TAMIL PERSPECTIVE

---------------------

COLOMBO 00000032 002.2 OF 003

4. (S) For different reasons, of course, accountability also has not been a top priority for most Tamils in Sri Lanka. While Tamils have told us they would like to see some form of accountability, they have been pragmatic in what they can expect and have focused instead on securing greater rights and freedoms, resolving the IDP question, and improving economic prospects in the war-ravaged and former LTTE-occupied areas. Indeed, while they wanted to keep the issue alive for possible future action, Tamil leaders with whom we spoke in Colombo, Jaffna, and elsewhere said now was not time and that pushing hard on the issue would make them "vulnerable."

5. (S) The one prominent Tamil who has spoken publicly on the issue is Tamil National Alliance (TNA) MP, self-proclaimed presidential candidate, and Prabhakaran relative M.K. Sivajilingam. Breaking from both the TNA mainstream and the pro-government Tamil groups, he launched his campaign because he believed neither the government nor the opposition was adequately addressing Tamil issues. Sivajilingam has focused on creating a de-centralized federal structure in Sri Lanka with separate prime ministers for the Sinhalese and Tamils, but he also has spoken about accountability, demanding an international inquiry to get justice for the deaths and suffering of the Tamil people.

6. (S) Other Tamil politicians have not made public statements on accountability and are generally more pragmatic in their thinking. In our multiple recent discussions with TNA leader R. Sampanthan, he said he believed accountability was important and he welcomed the international community's -- especially the diaspora's -- interest in the issue. But Sampanthan was realistic about the dim prospects for any Sri Lankan government to take up the issue. Granting that governments in power do not investigate their own, Sampanthan nevertheless said it was important to the health of the nation to get the truth out. While he believed the Tamil community was "vulnerable" on the issue and said he would not discuss "war crimes" per se in parliament for fear of retaliation, Sampanthan would emphasize the importance of people knowing the truth about what happened during the war. We also have asked Sampanthan repeatedly for his ideas on an accountability mechanism that would be credible to Tamils and possible within the current political context, but he has not been able to provide such a model.

7. (S) Mano Ganesan, MP and leader of the ethnic Tamil Democratic People's Front (DPF), is a Colombo-based Tamil who counts as supporters many of the well-educated, long-term Colombo and Western Province resident Tamils, and was an early supporter of Fonseka. The general made promises that convinced him that if Fonseka were to win, ethnic reconciliation issues would then be decided by parliament, not the Executive President. On accountability, Ganesan told us that while the issue was significant XXXXXXXXXXXX accountability was a divisive issue and the focus now had to be on uniting to rid the country of the Rajapaksas.

8. (S) TNA MP Pathmini Sithamparanathan told us in mid-December that the true story of what happened in the final weeks of the war would not go away and would come out eventually, but she also said now was not the time for war crimes-type investigations. Finally, on a recent trip to Jaffna, PolOff found that local politicians did not raise accountability for events at the end of the war as an issue of immediate concern, focusing instead on current bread-and-butter issues, such as IDP releases, concerns about Sinhala emigration to traditional Tamil regions, and

COLOMBO 00000032 003.2 OF 003

re-developing the local economy.

COMMENT

-------

9. (S) Accountability is clearly an issue of importance for the ultimate political and moral health of Sri Lankan society. There is an obvious split, however, between the Tamil diaspora and Tamils in Sri Lanka on how and when to address the issue. While we understand the former would like to see the issue as an immediate top-priority issue, most Tamils in Sri Lanka appear to think it is both unrealistic and counter-productive to push the issue too aggressively now. While Tamil leaders are very vocal and committed to national reconciliation and creating a political system more equitable to all ethnic communities, they believe themselves vulnerable to political or even physical attack if they raise the issue of accountability publicly, and common Tamils appear focused on more immediate economic and social concerns. A few have suggested to us that while they cannot address the issue, they would like to see the international community push it. Such an approach, however, would seem to play into the super-heated campaign rhetoric of Rajapaksa and his allies that there is an international conspiracy against Sri Lanka and its "war heroes." BUTENIS

(http://www.guardian.co.uk/world/us-embassy-cables-documents/243811)

Sunday, December 20, 2009

ஸ்ரீ லங்கா ஜனாதிபதியை கைது செய்வது தொடர்பாக...

(2001 ம் ஆண்டு, சந்திரிக்கா குமாரதுங்க சிறி லங்கா ஜனாதிபதியாக வீற்றிருந்த காலத்தில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டது. ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் நெதர்லாந்து வந்திருந்த சந்திரிக்காவை கைது செய்யுமாறு வழக்குப் போடப்பட்டது. அன்றிருந்த சர்வதேச சூழ்நிலை இன்றும் பெரிதாக மாறிவிடவில்லை என்பதை இந்த ஆய்வு எடுத்துக் கூறும். "உயிர்நிழல்" (மார்ச்-ஏப்ரல் 2001 ) சஞ்சிகைக்கு எழுதிய கட்டுரை. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.)

பிரிட்டனில், விடுதலைப் புலிகள் உட்பட உலகெங்கும் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 21 அமைப்புகள், "பயங்கரவாத இயக்கங்களாக" அப்போது தான் அறிவிக்கப்பட்டு பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டிருந்தது. இது தொடர்பாக பிரிட்டனில் வாழும் தமிழ் சமூகம் மட்டுமல்ல, பல்வேறு தேசங்களை சேர்ந்த முஸ்லிம் சமூகமும் அதிருப்தி தெரிவித்திருந்த போதிலும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.இதுவரை காலமும் மேற்கைரோப்பிய நாடுகள், தத்தமது நாடுகளில் தத்தமது அரசாங்கங்களுக்கு எதிராக வன்முறைப் போராட்டங்களில் ஈடுபடும் இயக்கங்களையே தடை செய்து வந்தன. உதாரணமாக, பிரிட்டனில் IRA , ஸ்பெயினில் ETA என்பனவற்றை சொல்லலாம். ஆனால் அமெரிக்காவின் "புதிய உலக ஒழுங்கு" மற்ற நாடுகளின் அரசியலிலும் மூக்கை நுழைப்பதன் நிமித்தம், "உலகப் பயங்கரவாத இயக்கங்களின்" பட்டியலை தயாரித்தது போல, தனது சகோதர நட்பு நாடான பிரிட்டனையும் செய்யத் தூண்டியதன் விளைவே மேற்குறிப்பிட்ட தடைச்சட்டம்.

இத்தகைய பின்னணியிலேயே புதிய ஒழுங்கை ஏற்றுக் கொண்ட இலங்கையின் (முன்னாள்) ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஐரோப்பிய விஜயமும் அமைந்திருந்தது. ஐரோப்பாவில் வாழும் முன்னாள், இந்நாள் தமிழ் அகதிகளின் திட்டுகளையும், வசைகளையும், அதிருப்தியையும் ஒரு பொருட்டாக மதிக்காது, ஐரோப்பிய ஒன்றியம் சந்திரிக்காவுடன் வர்த்தகம் செய்வது பற்றி பேசியது. நாட்டில் சமாதானம் வந்துவிட்டால் தனது முதலீடுகள் அதிகரிக்கும் என உறுதி கூறியது. ஐரோப்பாவின் சக்தி வாய்ந்த நாடான ஜெர்மனியில் தனது விஜயத்தை முடித்துக் கொண்டு, சந்திரிக்கா ஹொலன்ட் வந்து சேர்ந்தார். அப்போது அவரைக் கைது செய்யுமாறு கோரும் டச்சு வழக்கறிஞர் ஒருவரின் மனு, நீதி அமைச்சுக்கு அனுப்பப்பட்டது. சர்வதேச சித்திரவதை தடுப்புச் சட்டத்தில் இலங்கை அரசும் ஒப்பமிட்ட போதும், அங்கே சித்திரவதை நடக்கின்றது. இதற்கு முப்படைகளின் தலைவி என்ற வகையில் சந்திரிகா பொறுபேற்க வேண்டும். எனக்கோரி பாதிக்கப்பட்ட இரு அகதிகளின் பெயரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. எனினும் "ஆதாரம் போதாது", "தெளிவில்லை" எனச் சாட்டு சொல்லி நீதியமைச்சு மனுவை நிராகரித்து விட்டது. இதைப்பற்றியோ அல்லது மனித உரிமைகள் பற்றியோ எதுவும் அலட்டிக் கொள்ளாது, நெதர்லாந்து இராணியும், பிரதமரும், இருநாடுகளுக்கு இடையே உள்ள நானூறு ஆண்டு கால உறவை மெச்சியபடியே சந்திரிக்காவுடன் விருந்துண்டு மகிழ்ந்தனர்.

மேற்கைரோப்பிய நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே நிலவும் அன்னியோன்யமான உறவு இன்று பகிரங்கமாகிவிட்ட போதும், இந்தக் கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்ள எம்மில் பலருக்கு கஷ்டமாக இருக்கலாம். மேற்கைரோப்பாவின் "ஜனநாயக, மனிதாபிமான" முகத்தைக் கண்டு மதி மயங்கி, அந்த மாயையில் இருந்து விடுபட முடியாதவர்கள், பற்பல சமாதானங்களை தமக்குள்ள கூறிக்கொள்ளலாம். ஆனால் இந்த நாடுகள் எப்போதாவது ஜனநாயகம், மனித உரிமைகள் பற்றிப் பேசினால், அது எப்போதும் தமது நலன் சார்ந்தது தான் என்பதைப் புரிந்து கொள்ள அதிக காலம் எடுக்காது.

இலங்கையைப் போலவே யூகோஸ்லேவியாவில் (இன்று செர்பியா) அல்பேனியர்களை பெரும்பான்மையாக கொண்ட கொசோவோ மாநிலம் பிரிவினை வேண்டிப் போராடியது எல்லோருக்கும் தெரியும். அங்கிருந்த ஆயுதக்குழுவான "கொசோவோ விடுதலை இராணுவம்" (KLA ) மேற்கைரோப்பாவினால் ஆதரிக்கப்பட்டது. ஜெர்மனி ஆயுதத் தளபாடங்களை வழங்கியது. ஐரோப்பா எங்கும் KLA ஆதரவுப் பிரச்சாரம் நடந்தது. யூகோஸ்லேவிய ராணுவத்தின் பொது மக்கள் மீதான அடக்குமுறை, மனித உரிமை மீறல்கள், என்பன பற்றி எல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் தாக்கத்தால் உலக மக்கள் செர்பிய ராணுவத்தையும், ஜனாதிபதி மிலோசோவிச்சையும் வெறுத்தனர். யூகோஸ்லேவியா மீது ஆயுத விநியோகத்தடை, பொருளாதாரத் தடை என்பன ஏற்படுத்தப்பட்டன. மிலோசோவிச்சை மனிதப்படுகொலைகளுக்கு காரணமான குற்றவாளியாக இன்டர்போல் அறிவித்தது. பதவியிழந்த முன்னாள் ஜனாதிபதியை போர்க்கால குற்றங்களுக்காக விசாரிப்பதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு இன்றுள்ள அரசு மீது நிர்ப்பந்திக்கப்பட்டது.

மிலோசோவிச்சும் சந்திரிக்கா போன்றே தேர்தலில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி தான். இருவரும் தத்தமது நாடுகளில் எழுந்த சிறுபான்மையினத்தின் போராட்டத்தை அடக்குவதற்கு இராணுவ வன்முறையை ஏவிவிட்டவர்கள் தான். இரண்டு நாடுகளிலும் ராணுவத்தால் நடத்தப்பட்ட படுகொலைகளுக்கு ஆதாரங்கள் உள்ளன. அனால் மிலோசொவிச்சுக்கு சிறைத்தண்டனை, சந்திரிக்காவுக்கு விருந்துபசாரம்! ஏன் இந்தப் பாரபட்சம்?

இதன் பதில் மேற்குலகின் இராணுவ பொருளாதார நலன்களில் தங்கியுள்ளது. கொசோவோ பிரச்சினை தொடங்க முன்பு, "யூகோஸ்லேவியாவில் நேட்டோ படைகளுக்கு தளமமைக்க விட வேண்டும்," என முன்னால் அதிபர் மிலோசோவிச்சை கேட்ட பொழுது அவர் அதற்கு மறுத்து விட்டார். மேலும் அந்த நாட்டின் முக்கிய வர்த்தக நிறுவனங்கள் அரசின், அல்லது அரசுக்கு சார்பான உள்ளூர் முதலாளிகளின் வசம் இருந்தன. இந்த நிலை மாறவேண்டுமானால் மிலோசோவிச்சை அகற்ற வேண்டும். இதன் விளைவே கொசோவோ யுத்தமும், மிலோசோவிச் கைதும். ஆனால் இலங்கை நிலைமை அப்படியல்ல. சந்திரிகா மேற்குலகின் தாளத்திற்கு ஏற்ப ஆடுவதால், அவர் கேட்கும் போதெல்லாம் தமிழ் பேசும் இனத்திற்கு எதிரான போருக்கு தேவைப்படும் ஆயுத தளபாடங்களோ நிதி உதவியோ அனுப்பி வைக்கப்பட்டன.

மேற்குலக அரசுகளுக்கும், மக்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடும் சர்வாதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல. காலங்காலமாக இருந்து வரும் உறவு தான். சிலி நாட்டில் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த சர்வாதிகாரி பினோச்சே, கொன்றழித்த சொந்த நாட்டு மக்களின் தொகை 20000 என சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன. சதிப்புரட்சியில் அமெரிக்க சி.ஐ.ஏ.யின் பங்கும், பின்னர் தொடர்ந்த சர்வாதிகார ஆட்சிக்கு ஆட்சிக்கு அமெரிக்க, மேற்கைரோப்பிய ஆதரவும் இரகசியமல்ல. பதவி விலகிய பினோச்சே 20 வருடங்களுக்கு பின்னர் மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்து வந்த போது கைது செய்யுமாறு வேண்டுகோள்கள் வந்தன. மனித உரிமை நிறுவனங்களின் கூச்சல்களுக்கு செவி கொடுக்காத பிரித்தானிய அரசு, பினோச்சேயை பத்திரமாக நாட்டுக்கு அனுப்பி வைத்தது.

சிலி போலவே ஆர்ஜன்தீனாவிலும் இராணுவம் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன் பின்பு, கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் தொகை 30000 க்கும் மேல். சித்திரவதையில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை இராணுவம் விமானத்தில் கொண்டு போய் கடலில் கொட்டியது. இதைத் தவிர அரச எதிர்ப்பு அமைப்புகளை சேர்ந்தோரின் பிள்ளைகள் பலவந்தமாக பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு வேறு இடங்களில் வளர்க்கப்பட்டனர். இந்த அக்கிரமங்களுக்கு காரணமாக இருந்த அமைச்சர் ஒருவரின் மகள், இன்று நெதர்லாந்தின் வருங்கால மன்னன் வில்லெம் அலெக்சாண்டரின் மனைவி!

ஒரு பக்கத்தில் சர்வாதிகாரிகளுடனும், அடக்குமுறையாளருடனும் கொஞ்சிக் குலாவும் மேற்குலக நாடுகள், மறுபக்கத்தில் தமக்கு விரோதமான நாடுகளின் தலைவர்களை கைது செய்யுமாறு கோரிக்கை விடவும் தயங்குவதில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், கைதுக்கு காரணமாக மனித உரிமை மீறல்களை குறிப்பிடுகிறார்கள். அதே நேரம் தமது நட்பு நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாதது போல பாசாங்கு செய்கின்றனர். இதற்கு உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். ஸ்கொட்லாந்து "லோக்கர்பீ" விமானக் குண்டுவெடிப்புக்கு காரணமான கடாபியை கைது செய்யுமாறு பிரிட்டன் அரசு கோரியது. ( அந்த விமானத்தில் குண்டு இருப்பதாக ரஷ்ய உளவுத் துறையால், அமெரிக்க அரசுக்கு தெரிவிக்கப்பட்டும், அது அசட்டை செய்யப்பட்டது.) அதே போல கியூப வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த இரு விமானங்களை சுட்டு வீழ்த்திய குற்றச் சாட்டில் காஸ்ட்ரோவை கைது செய்யுமாறு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது.

பனிப்போர் முடிவில் கலைக்கப்பட்ட கிழக்கு ஜெர்மன் அரசின் கடைசி ஜனாதிபதி கிரென்ஸ் இப்போது வசிப்பது ஜெர்மன் சிறைச்சாலையில். அன்றைய கிழக்கு ஜெர்மனியில் இருந்து வெளியேற விரும்பிய நான்கு அகதிகளை எல்லையில் சுட்டுக் கொன்ற குற்றச் சாட்டில் (நேரடியாக சம்பந்தப்படாத போதிலும்) கிரென்ஸ் சிறை வைக்கப்பட்டார். வட இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி ஓடிய அப்பாவி தமிழ் அகதிகளை இலங்கை கடற்படை கடலில் வைத்து சுட்டுக் கொன்றது. ஜெர்மன் நீதித்துறையின் நியாயப்படி பார்த்தாலும், முப்படைகளின் தலைவியான சந்திரிகா கைது செய்யப்பட வாய்ப்புண்டு. ஆனால் அது நடக்கப் போவதில்லை. கிரென்ஸ் மேற்கு ஜெர்மனியுடன் சித்தாந்த அடிப்படையில் முரண்பட்ட சோஷலிச கிழக்கு ஜெர்மனியின் அதிபராக இருந்தவர். ஆகையால் அவர் ஜெர்மனியின் எதிரி. ஆனால் ஜெர்மன் அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் அப்படி எந்த சித்தாந்த முரண்பாடும் இல்லையே.

அரசியலில் எப்போதும் "நிரந்தர எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர நலன்கள் மட்டுமே உண்டு." அது மீண்டும் மீண்டும் உறுதிப் படுத்தப் படுகின்றது. மேற்குலக நாடுகளைப் பொறுத்தவரை அவர்களது சொந்த பொருளாதார நலன்களே எப்போதும் முன்னிறுத்தப் படுகின்றன. எந்தவொரு நாட்டின் அரசோ, ஆயுதக் குழுவோ, அவர்களின் பாதையில் தடைக்கல்லாக இருப்பின் அது அகற்றப்பட வேண்டும். அவர்களின் கட்டளைகளுக்கு அடிபணியாத பயங்கரவாதிகளுக்கு, முரண்படும் முரட்டு நாடுகளுக்கு எதிராக மூர்க்கமான போர் கட்டவிழ்த்து விடப்படும். எங்காவது இயல்பாக எழும் மக்கள் எழுச்சிகள் ஈவிரக்கமின்றி நசுக்கப்படும். இதுவே இன்றைய புதிய ஒழுங்கின் நியதி. இதற்கு நீங்கள் ஒத்துப் போகிறீர்களா அல்லது எதிர்க்கிறீர்களா என்பதே, அடக்கப்படும் அனைத்து மக்களின் முன்னாள் உள்ள கேள்வி. இங்கே இப்போது கேள்விகள் மட்டுமே கேட்கப் பட்டுள்ளன. விடைகளை நீங்களாகவே தேடி அறிந்து கொள்வீர்கள்.
(உயிர்நிழல் மார்ச்-ஏப்ரல் 2001 )