Showing posts with label போர்த்துக்கல். Show all posts
Showing posts with label போர்த்துக்கல். Show all posts

Sunday, April 26, 2015

25 ஏப்ரல், பாசிஸ எதிர்ப்பு போராட்ட வரலாற்றில் குறிப்பிடத் தக்க தினம்


ஒரு மேற்கு ஐரோப்பிய நாடான போர்த்துக்கல்லில், 1974 ம் ஆண்டு, ஒரு துளி இரத்தம் சிந்தாமல், ஒரு வெற்றிகரமான சோஷலிசப் புரட்சி நடந்த விடயம் எத்தனை பேருக்குத் தெரியும்?

அதற்கு முன்னர் போர்த்துக்கல் நாட்டில் ஜனநாயகம் இருக்கவில்லை. பல தசாப்த காலமாக, பாசிஸ சர்வாதிகாரி சலசாரின் கொடுங்கோல் ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்ற விடயமாவது தெரியுமா?

கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகளின் புரட்சிக்குப் பின்னர், சுமார் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு, போர்த்துக்கல்லில் ஜனநாயக பாராளுமன்ற தேர்தல்கள் நடத்தப் பட்டன என்ற உண்மை தெரியுமா? இன்றைக்கும் மறைக்கப் பட்டு வரும் ஐரோப்பாவின் வரலாற்று உண்மைகளில் செவ்வரத்தம் பூ புரட்சியும் ஒன்று.

போர்த்துக்கல் இராணுவத்திற்குள் இருந்த கம்யூனிச, சோஷலிச அல்லது ஜனநாயக ஆதரவு சக்திகள், இரகசியமான சதிப்புரட்சி ஒன்றின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றினார்கள். வெறும் நான்கு உயிரிழப்புகள் மட்டுமே ஏற்பட்டன. சலசாரின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்தது.

படையினர் தமது துப்பாக்கி முனைகளில், செவ்வரத்தம்பூ செருகி வைத்திருந்த படியால், அது இன்றைக்கும் செவ்வரத்தம் பூ புரட்சி என்றே அழைக்கப் படுகின்றது. அதற்கு பெருமளவு மக்கள் ஆதரவு இருந்தது.

புரட்சிக்குப் பின்னர், அரசமைப்பு, பொருளாதாரம் தொடர்பாக, வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டன. கம்யூனிஸ்ட் கட்சியின் கை ஓங்கியிருந்த சில இடங்களில் நிலச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப் பட்டன.

அதே நேரம், போர்த்துக்கல் அரசாங்கத்தில் கம்யூனிஸ்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்டதாக குற்றஞ் சாட்டி, நேட்டோ படையெடுக்கப் போவதாக மிரட்டியது. அட்லாண்டிக் கடலில் நேட்டோ கடற்படைக் கப்பல்கள் நிறுத்தப் பட்டிருந்தன.

இறுதியில், 1976 ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்து, சமூக ஜனநாயகக் கட்சியும், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியும் கூட்டரசாங்கம் அமைத்த பின்னர், நேட்டோ அழுத்தம் விலக்கிக் கொள்ளப் பட்டது.


******


25 ஏப்ரல், பாசிஸ எதிர்ப்பு போராட்டத்தில் குறிப்பிடத் தக்க சரித்திர தினம். இன்று அது இத்தாலியின் சுதந்திர தினமாக கொண்டாடப் பட்டு வருகின்றது. முசோலினியின் இருபதாண்டு கால பாசிஸ கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக, இத்தாலி கம்யூனிஸ்ட் கட்சி ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தது. இறுதிக்காலத்தில், ஜெர்மன் நாஸிப் படைகள் உதவிக்கு வந்த போதிலும், முசோலினியின் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை.

இத்தாலியின் வட பகுதி மாகாணங்களை, தமது சொந்தப் பலத்தில் விடுதலை செய்த கம்யூனிசப் போராளிகள், 25 ஏப்ரல் சுதந்திர தினமாக பிரகடனப் படுத்தினார்கள். இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வந்திறங்கிய அமெரிக்க-பிரிட்டிஷ் படைகள், தென் இத்தாலி பகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.

2ம் உலகப் போர் முடிந்த பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது. அமெரிக்காவால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. வத்திக்கானுடன் சேர்ந்து சதி செய்தார்கள். கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஓட்டுப் போடுவோர், கத்தோலிக்க மதத்தில் இருந்து விலத்தி வைக்கப் படுவார்கள் என்று அறிவித்தார்கள். திரும்பவும் தேர்தல் நடத்தினார்கள். அதில் வத்திக்கான் ஆதரித்த கிறிஸ்தவ ஜனநாயக்கட்சி வென்றது. அதற்குப் பிறகு இத்தாலியில் கம்யூனிஸ்ட் கட்சியை தலையெடுக்க விடவில்லை.

மேலும், மேற்குலகின் கடுமையான ஸ்டாலின்/ஸ்டாலினிச எதிர்ப்பு பிரச்சாரம் காரணமாக, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. தற்போது இருப்பது சீர்திருத்தப்பட்ட, சமூக- ஜனநாயக கம்யூனிஸ்ட் கட்சி.