Showing posts with label அல்கைதா. Show all posts
Showing posts with label அல்கைதா. Show all posts

Friday, October 10, 2014

யேமன் குண்டுவெடிப்பு : அமெரிக்காவுக்கு ஆபத்தில் உதவும் அல்கைதா நண்பன்


அல்கைதாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் அப்படி என்ன நெருக்கமோ தெரியவில்லை. அடிக்கடி அமெரிக்காவுக்கு, ஆபத்தில் உதவும் நல்ல நண்பனாக அல்கைதா இருக்கின்றது. அதற்கு இன்னொரு உதாரணம், சானா நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பும், அதிலே ஐம்பதுக்கும் அதிகமான பொதுமக்கள் பலியான சம்பவமும். அண்மையில் யேமனில் நடந்து வரும் அரசியல் மாற்றங்கள், அமெரிக்காவுக்கு அல்கைதாவின் உதவி என்றென்றும் தேவைப்படும் என்பதை உணர்த்தி நிற்கின்றன.

யேமன் நாட்டில், கடந்த சில மாதங்களாக, ஷியா இஸ்லாமிய சமூகத்தின் விடுதலைக்காக போராடும் ஹூதி கிளர்ச்சிப் படைகள், பெருமளவு பகுதிகளை பிடித்துள்ளன. வட யேமனில் வாழும் செய்யிடி இஸ்லாமிய பிரிவினரின் இயக்கமான "அன்சர் அல்லா" (அல்லாவின் உதவியாளர்கள்), வெளிநாடுகளிலும், பொது மக்களாலும் ஹூதி கிளர்ச்சிப் படை என்று அழைக்கப் படுகின்றது. அதற்குக் காரணம், இறைதூதர் முகமது நபியின் வழித்தோன்றல்கள் என்று கூறிக்கொள்ளும் ஹூதி குலத்தை சேர்ந்தவர்களே, அந்த இயக்கத்திற்கு தலைமை தாங்குகின்றனர். செய்யிடி இஸ்லாமியர்கள், முன்னர் பல நூறாண்டுகளாக யேமனை ஆண்டு வந்தனர்.

உலகம் முழுவதும், சிரியா, ஈராக்கில் நடக்கும் யுத்தங்களை பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ஹூதி கிளர்ச்சிப் படையினர், தலைநகர் சானா வரையில் முன்னேறி வந்து விட்டனர். வெளிநாட்டு ஊடகங்கள் அதிக கவனம் செலுத்தா விட்டாலும், யேமனில் நடக்கும் அரசியல் மாற்றங்களை, அமெரிக்கா பதற்றத்துடன் கவனித்துக் கொண்டிருந்தது. ஓர் அமெரிக்க எதிர்ப்பு இயக்கம், யேமனின் ஆட்சியை கைப்பற்றுவதா? கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் தனது ஆதிக்கத்தை வைத்திருக்க விரும்பும் அமெரிக்கா அதனை எவ்வாறு அனுமதிக்கும்? அமெரிக்காவுக்கு அது ஒரு கெட்ட கனவாகவே இருக்கும்.

அமெரிக்கா திடுக்கிட்டு அலறித் துடித்தமைக்கு காரணம் இருக்கின்றது. கடந்த வாரம் தலைநகர் சானா, ஹூதி கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அதைத் தொடர்ந்து, சானாவில் இருக்கும் அரசு அலுவலகங்கள் எல்லாம் ஹூதி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. நகரமெங்கும் ஹூதி போராளிகள் மட்டுமே ஆயுதங்களுடன் நடமாடுகின்றனர். யேமன் இராணுவம் பெயருக்குக் கூட அங்கே இல்லை. அது மட்டுமல்ல, நகரில் எல்லா இடங்களிலும், அமெரிக்க எதிர்ப்பு கோஷங்களைக் கொண்ட சுவரொட்டிகள் முளைத்தன. "அமெரிக்கா ஒழிக! இஸ்ரேல் ஒழிக!" போன்ற வாசகங்கள் காணப்பட்டன.

யேமனில் இன்னொரு ஈரான் உருவாகிக் கொண்டிருப்பதாக நினைத்து அமெரிக்கா அஞ்சியது. அதனால் ஐ.நா. வை அனுப்பி மத்தியஸ்தம் செய்து வைத்தது. ஐ.நா. ஆலோசனையின் படி, முன்பிருந்த யேமன் அரசாங்கம், ஹூதி கிளர்ச்சியாளர்களுடன் ஒரு பொது உடன்பாட்டிற்கு வந்தது. முந்திய அரசுப் பிரதிநிதிகள், அன்சார் அல்லா இயக்கத்துடன் அரசு அதிகாரத்தை பங்கிட்டுக் கொண்டனர்.

ஹூதி கிளர்ச்சியாளர்கள், யேமன் அரசில் பங்கெடுப்பது, பலருக்குப் பிடிக்கவில்லை. ஷியா கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் உதவி வருவதால், யேமன் ஈரானின் செல்வாக்கு மண்டலத்திற்குள் வந்து விடும் என்று அஞ்சினார்கள். குறிப்பாக அமெரிக்காவும், அல்கைதாவும் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. இருவருக்கும் பொது எதிரி ஈரான். அதனால், அல்கைதாவும், அமெரிக்காவும் ஒன்று சேர்ந்ததில் வியப்பில்லை.

அல்கைதா முழுக்க முழுக்க சன்னி முஸ்லிம் பிரிவை சேர்ந்த, ஒரு சில மதவெறியர்களின் இயக்கமாக உள்ளது. யேமனில் அல்கைதா என்பது வெளிநாடுகளுக்கு தெரியப் படுத்துவதற்கான பெயர் மட்டுமே. உள்ளூர் மக்கள் அவர்களை "சலாபி தீவிரவாதிகள்" என்று அழைக்கின்றனர். அனேகமாக எல்லா அரபு நாடுகளிலும் நடக்கும் சமூக விடுதலைப் போராட்டத்தை, மதவாத கலவரங்களாக திசைதிருப்பி விடுவது தான், அல்கைதாவின் குறிக்கோள். அந்த விடயத்தில், அமெரிக்காவுக்கும், அல்கைதாவுக்கும் இடையில் புரிந்துணர்வு நிலவுகின்றது.

கடந்த சில நாட்களாக, ஐ.நா. அனுசரணையுடன் கொண்டு வரப்பட்ட சமாதான ஒப்பந்தத்தை குழப்புவதற்கு, அமெரிக்கா சதி செய்து வந்தது. அந்த சதியின் விளைவாக Ahmed Awad bin Mubarak பிரதமராக நியமிக்கப் பட்டார். ஆனால், ஹூதி கிளர்ச்சியாளர்கள், அந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். பின் முபாரக் ஓர் அமெரிக்கக் கைக்கூலி என்பதால், அந்நிய தலையீடு அதிகரிக்கும் என்ற காரணத்தைக் காட்டி நிராகரித்து வந்தது.

தலைநகர் சானாவில், பின் முபாரக்கிற்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. அதனால், (அமெரிக்காவால்) பிரதமராக நியமிக்கப்பட்ட பின் முபாரக் பதவி விலகி உள்ளார். அந்த சம்பவம் நடந்து ஒரு மணித்தியாலம் கூட ஆகவில்லை. சானாவில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நடுவில் நுளைந்த அல்கைதா தற்கொலைக் கொலையாளி, ஒரு கார்க் குண்டை வெடிக்க வைத்துள்ளார். அந்தக் குண்டுவெடிப்பில் ஐம்பதுக்கும் அதிகமானோர் கொல்லப் பட்டனர். யேமனில் தொடர்ந்தும் பதற்றம் நிலவி வருகின்றது. அனேகமாக, சிரியாவில் நடப்பதைப் போன்று, யேமனில் ஒரு உள்நாட்டுப் போரை கொண்டு வருவது, அமெரிக்காவினதும், அல்கைதாவினதும் நோக்கமாக இருக்கலாம்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1.சவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்
2.யேமன்: நேற்று நண்பர்கள், இன்று எதிரிகள்
3.அரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்
4.வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது, அல்கைதா பாய்கிறது!
5.ஈழத்தில் இடி முழங்கினால் யேமனில் மழை பொழிகிறது

Saturday, July 12, 2014

சன்னி - ஷியா இனப் பிரச்சினையில் தோன்றிய ISIS எனும் மதவாதப் பூதம்

சிரியா சென்று ISIS தலைவர்களை சந்தித்த செனட்டர் மக் கெய்ன்
ISIS இனுடைய நதிமூலம் என்னவென்று ஆராய்வதற்கு, நாங்கள் சிரியா உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலத்திற்கு செல்ல வேண்டும். குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்னராவது, ISIS பற்றிய பலரது கணிப்பீடு மிகவும் மாறுபட்டிருந்தது. அப்போது இஸ்லாமியர் அல்லாத தமிழர்கள் கூட அந்த இயக்கத்தை ஆதரித்தார்கள். அவர்கள் எல்லோரும் அமெரிக்க/மேற்கத்திய ஆதரவு தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னாள் "ISIS ஆதரவு தமிழர்களில்" பலர், புலிகளையும் தீவிரமாக ஆதரிப்பவர்கள். அப்படியான சிலருடன் வாதாடி இருக்கிறேன். ISIS ஒரு மதவாத அமைப்பு என்று கூறினேன். அப்போது யாரும் நான் சொன்னதை கேட்கும் நிலையில் இருக்கவில்லை. ஆதாரம் கொண்டு வந்து காட்டுமாறு அடம் பிடித்தார்கள். ஆதாரத்தை காட்டினாலும் நம்ப மறுத்தார்கள். "ISIS ஒரு மதவாத இயக்கம் அல்ல, சிரியாவில் ஆசாத் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடும் விடுதலை இயக்கம்" என்று வாதாடினார்கள். அதற்குக் காரணம், அன்று மேற்கத்திய ஊடகங்கள் செய்து வந்த பிரச்சாரம். அவர்களது அரசியல் கொள்கைகள் ஏற்கனவே நாம் அறிந்தவை தான். அமெரிக்கா எதை ஆதரிக்க சொன்னாலும் ஆதரிப்பார்கள், எதை எதிர்க்க சொன்னாலும் எதிர்ப்பார்கள்.

அன்றைக்கு ISIS பலரின் கண்களுக்கு விடுதலைப் போராளிகளாக தெரிந்தார்கள். இன்னும் சொல்லப் போனால், புலிகளுக்கு கூட அந்தளவுக்கு மேலைத்தேய ஆதரவு இருக்கவில்லை. அமெரிக்கா வெறும் அரசியல் பிரச்சாரத்துடன் நின்று விடாது, ஆயுதங்கள், நிதி கொடுத்து ஆதரித்து வந்தது. முன்பொரு தடவை, தமிழ்நாட்டில் இருந்து வைகோ வன்னிக்கு சென்று புலிகளை சந்தித்து விட்டு திரும்பியது போன்று, செனட்டர் மக்கெய்ன் அமெரிக்காவில் இருந்து துருக்கி ஊடாக சிரியா சென்று ISIS தலைவர்களை சந்தித்து விட்டு திரும்பி இருந்தார்.

ISIS ஆசாத் அரசின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடியதால் மட்டும், அதற்கு சிரிய மக்கள் ஆதரவளித்தனர் என்று, அங்குள்ள நிலைமையை கறுப்பு, வெள்ளையாக பார்க்க முடியாது. ISIS மட்டுமல்லாது, FSA, அல் நுஸ்ரா என்று பத்துக்கும் குறையாத ஆயுதபாணி இயக்கங்கள் ஆசாத் அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தன. அவற்றிற்கு இடையில் ஒரு கொள்கை ஒற்றுமை இருந்தது. இஸ்லாமிய மத அடிப்படைவாதம் எல்லோருக்கும் பொதுவான கோட்பாடாக இருந்தது. 

FSA, வெளிநாட்டு உதவி பெறுவதற்காக தன்னை ஒரு மதச் சார்பற்ற மிதவாத இயக்கமாக காட்டிக் கொண்டது. ஆனால், உண்மையில் அதுவும் ஒரு மதவாத இயக்கம் தான். ஆசாத் அரசு, தீவிரமான மதச் சார்பற்ற அரசாக இருந்தது. ஒரு மேற்கு ஐரோப்பிய நாடு போன்று சுதந்திரமான கலாச்சாரத்தை பின்பற்றியது. கிளர்ச்சியாளர்களின் மதவாத நிலைப்பாட்டிற்கு, அதுவும் ஒரு முக்கிய காரணம். அதுவும் ஒரு வகை எதிர்ப்பு அரசியல் தான்.

சிரியாவில் ஆசாத் அரசை எதிர்த்துப் போராடிய இயக்கங்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் மட்டும் ஆதரவுத் தளத்தை கொண்டிருந்தன. சிரியாவில் வாழும் பெரும்பான்மை சமூகமான, சன்னி முஸ்லிம்கள் மட்டுமே, அந்த இயக்கங்களின் உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்தனர். ஆசாத் அரசும், இராணுவமும் பெரும்பாலும் ஷியா முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தின. (கிறிஸ்தவ சமூகமும் அரசை ஆதரிக்கின்றது.) உண்மையில், சிரிய ஆளும் வர்க்கத்தினர், ஷியா முஸ்லிம்களில் இன்னொரு உப பிரிவான அலாவி சமூகத்தை சேர்ந்தவர்கள். 

யார் இந்த அலாவி முஸ்லிம்கள்? இந்தியாவில் உள்ள ஒரு தாழ்த்தப் பட்ட சாதி போன்றது தான் அலாவி சமூகம். ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக, பெரும்பான்மை சன்னி முஸ்லிம்களால் ஒடுக்கப் பட்டு வந்த சமூகம் அது. இராணுவ சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய, அலாவி சமூகத்தை சேர்ந்த ஆசாத் ஆட்சியில் தான், அவர்கள் மேன் நிலைக்கு வந்தனர். அதற்கு முன்னர், உயர்த்தப் பட்ட சமூகமாக இருந்த சன்னி முஸ்லிம்கள், தாம் அனுபவித்து வந்த சலுகைகளை இழந்தனர். அவர்கள் இப்போது சிரியாவில் ஒடுக்கப்பட்ட சமூகமாக உள்ளனர். பொருளாதாரப் பிரச்சினை அவர்களைத் தான் முதலில் பாதித்தது. 

சிரியாவில் அண்மைய உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முன்னர், சன்னி முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வகாபிச முஸ்லிம் சகோதரத்துவ கட்சி செல்வாக்குப் பெற்றிருந்தது. ஹோல்ம்ஸ் நகரத்தில், சன்னி முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையாக வாழ்கின்றது. அதனால் ஹோம்ஸ் அன்றும், இன்றும் இஸ்லாமியவாதிகளின் கோட்டையாக கருதப் படுகின்றது. எண்பதுகளில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் தூண்டி விட்ட எழுச்சியை, அரச படையினர் அடக்கிய போது சுமார் இருபதாயிரம் மக்கள் பலியானார்கள். கொல்லப் பட்டவர்கள் : சன்னி முஸ்லிம்கள். கொன்றவர்கள் : ஷியா முஸ்லிம் படையினர். தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரிலும் அந்த நிலைமை மாறவில்லை. 

சிரியாவில், சன்னி முஸ்லிம்களை பொருத்தவரையில், ISIS போன்ற இயக்கங்கள், அந்த சமூகத்தை பாதுகாப்பதற்காக, அதாவது "இன விடுதலைக்காக" போராடுகின்றன. (அதனால் தான் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள், சன்னி முஸ்லிம் கிளர்ச்சிப் படைகளை "விடுதலைப் போராளிகள்" என்று அழைத்தனர்.) FSA க்கும், ISIS க்கும் இடையில் ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. 

ISIS இல் நிறைய வெளிநாட்டு ஜிகாதிகள் உள்ளனர். அந்த ஜிகாதி போராளிகள் அனைவரும் சன்னி முஸ்லிம்கள். சிரியா சன்னி முஸ்லிம்களும், "ஷியா ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை செய்ய வந்த சகோதரர்களை" வரவேற்றார்கள். புலிகள் அமைப்பில் தமிழ்நாட்டு தமிழர்கள் போராளிகளாக சேர்ந்திருந்தால், ஈழத் தமிழர்கள் வேண்டாம் என்று மறுக்கப் போகிறார்களா? அதே மாதிரியான நிலைமை தான் சிரியாவிலும் உள்ளது. 

FSA உறுப்பினர்கள் பெரும்பாலும், முன்னாள் சிரிய இராணுவ வீரர்கள். முன்பு சிரிய இராணுவத்தில் கடமையில் இருந்த சன்னி முஸ்லிம் அதிகாரிகள், போர்வீரர்கள். யுத்தம் தொடங்கியவுடன் இராணுவத்தை விட்டோடி விட்டார்கள். தங்களது சொந்த இன மக்களை (அதாவது, சன்னி முஸ்லிம் சமூகம்) கொல்ல விரும்பவில்லை என்பது ஒரு காரணம்.  அதை இலங்கை நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முன்னொரு காலத்தில், சிறிலங்கா இராணுவத்தில் தமிழர்களும் இருந்தனர். ஆனால், ஈழப்போர் ஆரம்பித்தவுடன், ஒன்றில் அவர்கள் ஒதுக்கப் பட்டனர், அல்லது தாமாகவே விலகிச் சென்று விட்டனர்.

சன்னி-ஷியா பிரச்சினையை, வெறுமனே மதப் பிரச்சினையாக பார்ப்பது தவறு. அவை இரண்டு வெவ்வேறு சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. அதுவும் ஒரு இனப் பிரச்சினை தான். சன்னி முஸ்லிம் சமூகமும், ஷியா முஸ்லிம் சமூகமும் இரண்டு வேறுபட்ட கலாச்சாரங்களை கொண்டவை. ஒருவரது கலாச்சாரத்தை மற்றவர் மதிக்காத போக்கும் காணப் படுகின்றது. சன்னி - ஷியா சமூகங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வு, சிங்கள - தமிழ் வெறுப்புணர்வுக்கு சற்றிலும் குறைந்தது அல்ல. 

இனம் என்னும் பொழுது, நாங்கள் எப்போதும் மொழியை புரிந்து கொள்கிறோம். அது தவறு. ஈராக், சிரியாவில் வாழும், சன்னி, ஷியா முஸ்லிம்கள் ஒரே மொழி பேசலாம், ஒரே மதத்தை பின்பற்றலாம். ஆனால், ஆயிரக் கணக்கான வருடங்களாக இரண்டு வேறு இனங்களாக பிரிந்து வாழ்கின்றன. அரேபியரின் இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு முன்னர் ஈராக்கில் வாழ்ந்த வேற்றின மக்கள், ஷியா சமூகமாக மாறியிருக்க வாய்ப்புண்டு. (அதன் அர்த்தம் இனக் கலப்பு நடக்கவில்லை என்பதல்ல. ஆனால், கலாச்சார வேறுபாட்டுக்கு அது காரணமாக இருக்கலாம்.)  அதற்கு உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம். பஸ்ரா நகருக்கும் ஈரானுக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழும், "சதுப்பு நில அரேபியர்கள்" இஸ்லாத்திற்கு முந்திய புராதன கலாச்சாரத்தை, இன்றைக்கும் பின்பற்றுகின்றனர்.

சிரியா அல்லது ஈராக்கில், யார் சன்னி, யார் ஷியா என்று பெயரை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கலாம். உதாரணத்திற்கு, "அலி" என்று பெயர் வைத்துக் கொள்ளும் எல்லோரும் ஷியாக்கள் என்று இலகுவாக கண்டுபிடிக்கலாம். இரண்டு சமூகங்களும், தனித் தனியாக வெவ்வேறு பிரதேசங்களில் பிரிந்து வாழ்கின்றன. நகரங்கள் மட்டும் விதிவிலக்கு. இருப்பினும், பாக்தாத் நகரில் தனியே ஷியா முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதி ஒன்றுள்ளது. அது ஒரு சேரிப் புறம் போன்றது. பாக்தாத் நகரில் பின் தங்கிய பகுதி. மும்பையில் தாராவி பகுதியுடன் அதனை ஒப்பிடலாம்.

சன்னி முஸ்லிம்களும், ஷியா முஸ்லிம்களும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால், ஒருவருக்கொருவர் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. கலப்பு மணம் செய்து கொள்பவர்கள், முரண்பாடுகள் தீவிரமடையும் காலங்களில், சமூகத்தால் ஒதுக்கப் படும் ஆபத்து உள்ளது. அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்தில், ஈராக்கில் பல தடவைகள் இனக் கலவரங்கள் வெடித்துள்ளன. ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பிழையான சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக கொல்லப் பட்டார்கள். பரஸ்பரம் பழிக்குப் பழி வாங்கும் கொலைகள் நடந்தன. ஆயுதமேந்திய குண்டர்கள், வழியில் செல்லும் வாகனங்களை மறித்து, பயணிகளை சன்னி - ஷியா என்று பிரித்தறிந்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இரண்டு தரப்பிலும் இது போன்ற படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

வரலாறு முழுவதும் ஒரு சமூகம், மற்ற சமூகத்தை அடக்கி ஆண்டு வந்துள்ளது. ஈராக்கில் சதாம் ஹுசைன் காலம் வரையில், சன்னி முஸ்லிம்கள் மேலாண்மை பெற்றிருந்தனர். ஷியா முஸ்லிம்கள் இரண்டாந் தரப் பிரஜைகளாக நடத்தப் பட்டனர். அமெரிக்கப் படையெடுப்புக்கு பின்னர், நிலைமை தலை கீழாக மாறியது. புதிய ஈராக் அரசில், ஷியா முஸ்லிம்கள் மேலாண்மை பெற்றனர். பிரதமர் மாலிக் கூட ஒரு ஷியா தான். இம்முறை சன்னி முஸ்லிம்கள் அடக்கப் பட்டனர். இரண்டாந் தரப் பிரஜைகள் ஆக்கப் பட்டனர்.

சிரியாவில் நிலைமை நேரெதிராக உள்ளது. அங்கே ஆசாத் அரசை ஆதரிப்பது ஷியா முஸ்லிம்கள். கடந்த நாற்பது வருடங்களாக, அவர்கள் அங்கு மேலாண்மை பெற்றுள்ளனர். இன்று நடக்கும் உள்நாட்டுப் போரில், ஷியா அரச படைகளினால் கொல்லப் படுபவர்கள் சன்னி முஸ்லிம்கள் மட்டும் தான். அதனால் தான் சன்னி முஸ்லிம்கள் ISIS போன்ற இயக்கங்களை, அவற்றின் மத அடிப்படைவாதம் தெரிந்திருந்தும் ஆதரித்தார்கள். அரச படைகள் புரிந்த படுகொலைகளுக்கு பழிவாங்குவதற்காக, கிளர்ச்சியாளர்கள் ஷியா கிராமங்களில் தாக்குதல் நடத்தி ஷியா முஸ்லிம்களை கொன்றுள்ளனர்.

ஈராக்கில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS, அங்கிருந்த ஷியா மசூதிகளை இடித்தது உண்மை தான். அதையும் இரண்டு சமூகங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வாக தான் புரிந்து கொள்ள வேண்டும். அது ஈராக்கில் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் இனக் குரோத போரின் தொடர்ச்சி. சில வருடங்களுக்கு முன்னர், சமரா நகரில் ஷியாக்களின் மிக முக்கியமான புனித ஸ்தலம் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. அது இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட நிகழ்வுடன் ஒப்பிடத் தக்கது.

ISIS அமைப்பினர், ஒரு பக்கத்தில் சன்னி முஸ்லிம் சமூகத்தின் விடுதலை இயக்கமாக காட்டிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களது அரசியல் நிலைப்பாடு, பெருமளவு இனவாதம், மதவாதம் கொண்டதாக உள்ளது. சன்னி முஸ்லிம்கள் எல்லோரும் ISIS இயக்கத்தை ஆதரிக்கவில்லை. ஈராக்கில் அல்லது சிரியாவில் வாழும் மதச் சார்பற்ற சன்னி முஸ்லிம் மக்கள், இது போன்ற மதவாத இயக்கங்களை ஆதரிக்கப் போவதில்லை. ஈராக்கில் உள்ளூர் நிலப்பிரபுக்களின் விசுவாசிகள், அல்லது சதாம் ஹுசைனின் பாத் கட்சி அனுதாபிகள்,  சன்னி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்திருந்த போதிலும், ISIS இனை நிபந்தனை இன்றி ஆதரிக்கப் போவதில்லை. 

வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமிய மத உணர்வாளர்கள் பலர் ISIS இயக்கத்தை ஆதரிக்கின்றனர். அந்த ஆதரவாளர்கள் எல்லோரும் சன்னி முஸ்லிம்கள். கிலிபாத் என்ற  "இஸ்லாமியத் தாயகக் கோட்பாடு" அந்த ஆதரவுக்கு ஒரு முக்கிய காரணம். அது ஒரு இழந்த சொர்க்கம் பற்றிய கனவு. "ஒரு காலத்தில், ஸ்பெயின் முதல் இந்தோனேசியா வரை, முஸ்லிம்கள் ஆண்டார்கள். இன்று ஐரோப்பியருக்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறார்கள்" என்று கூறி, இதை ஒரு வகை மத விடுதலைப் போராட்டமாக கருதுகிறார்கள்.

ISIS உரிமை கோரும் அகண்ட இஸ்லாமியத் தாயகம் 

இஸ்லாமியத் தாயகம் உருவாக்கும் நோக்கத்தோடு உலகில் பல ஆயுதமேந்திய இயக்கங்கள் தோன்றின. ஆனால், ISIS அவற்றை எல்லாம் ஓரங் கட்டி விட்டு, பெரிதாக வளர்ந்து வந்து விட்டது. சிலநேரம் சகோதர யுத்தங்களை நடத்தியும், ISIS அதிகாரத்தை கைப்பற்றியது. ஒரே கொள்கைக்காக போராடிய பிற இயக்க போராளிகளை கொன்றுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வாழும் ஆதரவாளர்களுக்கு, ISIS போர்களில் குவித்த வெற்றிகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன. அது ISIS ஐ யாராலும் வெல்ல முடியாது என்ற உணர்வை அவர்கள் மனதில் உண்டாக்கி உள்ளது.


ISIS தொடர்பான முன்னைய பதிவுகள்:

சிரியா தொடர்பான முன்னைய பதிவுகள்: 

Friday, June 20, 2014

அமெரிக்கா வரும் பின்னே, அல்கைதா வரும் முன்னே!


உங்களுக்குத் தெரியுமா? ஈராக்கிய அல்கைதாவான ISIS இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் பாக்தாதி, சில வருடங்களுக்கு முன்னர் தான், அமெரிக்கர்களால் சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டிருந்தார். கடும்போக்கு இஸ்லாமியவாதிகளை, "விடுதலைப் போராளிகள்" என்று அங்கீகரித்திருந்த அமெரிக்கா, ஜோர்டானில் இராணுவப் பயிற்சி வழங்கியது.

ஈராக்கில் பல பிரதேசங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS எனும் கடும்போக்கு இஸ்லாமியவாத இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப் போவதாக ஒபாமா அறிவித்துள்ளார். ஈராக்கிய அல்கைதா என்று அழைக்கப் படும் ISIS இயக்கத்தின் தலைவர் யார்? அபு பக்கர் அல் பாக்தாதி என்பது அவரது இயக்கப் பெயர். நிஜப் பெயர் : இப்ராஹீம் அவ்வத் அலி பத்ரி அல் சமாரி. இசிஸ் போராளிகள் மத்தியில் அவர் "அல் பாக்தாதி" என்றே அழைக்கப் படுகிறார்.

அமெரிக்க படையெடுப்புகளினால் சதாம் ஆட்சி கவிழ்க்கப் பட்ட பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி, ஈராக்கில் அல்கைதா என்றொரு ஆயுதக் குழு ஒன்று இயங்கி வந்தது. அமெரிக்கப் படைகளுடனான மோதலில் அதன் தலைவர்கள் கொல்லப் பட்டனர். அப்போது அமெரிக்கப் படைகளினால் சிறைப் பிடிக்கப் பட்ட போராளிகளில் ஒருவர் தான் அல் பாக்தாதி.

2005 முதல், Camp Bucca எனும் அமெரிக்க தடுப்பு முகாமில் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த அல் பாக்தாதி, 2009 ம் ஆண்டு திடீரென விடுதலை செய்யப் பட்டார். அப்போது, "உங்களை நியூ யோர்க்கில் சந்திக்கிறேன்!" என்று சிறைக் காவலர்களிடம் கூறி விட்டுச் சென்றுள்ளார். விடுதலையான பின்னர் எஞ்சியிருந்த போராளிகளை ஒன்று திரட்டி இயக்கம் கட்டியுள்ளார்.

2011ம் ஆண்டு, அல் பாக்தாதி, அமெரிக்கர்களால் "தேடப்படும் பயங்கரவாதி" என்று அறிவிக்கப் பட்டார். அவரது தலைக்கு விலையாக பத்து மில்லியன் டாலர் சன்மானம் வைக்கப் பட்டது.  அந்தக் காலகட்டத்தில் சிரியா உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி விட்டது. அல் பாக்தாதி குழுவினர், சிரியாவில், அரச படைகளை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது சிரியாவில், இன்னொரு இஸ்லாமிய கடும்போக்கு இயக்கமான அல் நுஸ்ரா இயங்கிக் கொண்டிருந்தது. அல் பாக்தாதி குழுவினர், அல் நுஸ்ராவுடன் கூட்டுச் சேர்ந்து, "ஈராக், சிரியாவுக்கான இஸ்லாமிய அரசு" (ISIS) என்ற பெயரில் ஒரு புதிய இயக்கத்தை உருவாக்கினார்கள். இரண்டு வருடங்களுக்குப் பின்னர், இரண்டு இயக்கமும் ஒரு சகோதர யுத்தத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமிய தனி அரசுக்காக ஐக்கிய முன்னணி அமைத்தவர்கள், எதிரிகளாக தமக்குள் மோதிக் கொண்டார்கள். அது வேறு விடயம். 

அல் நுஸ்ரா, சிரியாவில் ஆசாத் அரசை கவிழ்ப்பதை மட்டும் நோக்கமாக கொண்டிருந்தது. ISIS, லெபனான் முதல் ஈராக் வரை, ஒரு இஸ்லாமிய அரசு அமைப்பதை நோக்கமாக கொண்டிருந்தது. அதனால் அது ஒரு சர்வதேச அமைப்பாக பரிணமித்தது. மேற்கு ஐரோப்பாவிலும், பிற அரபு நாடுகளிலும் இருந்து, ஜிகாத் மீது பற்றுக் கொண்ட புதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

அல் நுஸ்ரா, ISIS ஆகிய இயக்கங்களுக்கு தேவையான நிதியுதவி, கட்டார், சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் இருந்து தாராளமாக கிடைத்து வந்தது. அவர்களுக்கு ஆயுத விநியோகம் செய்த நாடு எது? வேறு யார், அமெரிக்கா தான்! இசிஸ் போராளிகளுக்கு, ஜோர்டானில் வைத்து அமெரிக்க இராணுவத்தினால் பயிற்சியளிக்கப் பட்டது. சண்டையில் காயமடைந்த போராளிகளுக்கு, துருக்கியிலும், இஸ்ரேலிலும் மருத்துவ சிகிச்சை அளிக்கப் பட்டது.

அல் நுஸ்ரா, இசிஸ் ஆகிய இயக்கங்கள், சவூதி நிதியும், அமெரிக்க ஆயுதங்களும் பெற்று, பலமான இயக்கங்களாக வளர்ந்து, சிரியாவின் வடக்குப் பகுதியில் தமக்கென கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை வைத்திருந்தார்கள். அந்தப் பகுதிகளில் ஷரியா சட்டத்தை அமுல்படுத்தினார்கள். முன்னர் ஆப்கானிஸ்தானில் தாலிபான் நடத்தியது போன்றதொரு ஆட்சியை அமைத்தார்கள். 

இசிஸ் அமைப்பின் செயற்பாடுகள், ஒரு வணிக நிறுவனம் போன்று அமைந்திருந்தன. சிரிய அரச படைகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆவணப் படுத்தினார்கள். மாவீரர்களான போராளிகளின் பெயர்களை பதிவு செய்து வைத்தனர். வெளிநாடுகளில் பரப்புரை செய்வதற்கு உதவியாக, ஊடக தொடர்புகளை விரிபு படுத்தினார்கள். இசிஸ் போராளிகள் சிலர், வீடியோ படப் பிடிப்பாளர்களாக களப் பயிற்சி பெற்றனர். அவர்கள் இணையத்தில், சமூக வலைத் தளங்களிலும் இயங்கினார்கள்.

யுத்த களங்களில், சிரிய இராணுவத்தை எதிர்த்துப் போரிடும் காட்சிகளை வீடியோ படமாக்கி, இணையத் தளங்களில் பரப்பினார்கள். மேற்கத்திய ஊடகங்கள் அவற்றை எடுத்து ஒளிபரப்பின. வீடியோ போராளிகள் போர்க்கள காட்சிகளை மட்டும் படம் பிடிக்கவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட சிரிய மக்கள் படும் துன்பங்களை, வீடியோவில் பதிவு செய்து வெளியிட்டார்கள். அந்த வீடியோக்கள், வெளிநாடுகளில் "விடுதலைப் போராட்டத்திற்கு" ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்கு பெரிதும் உதவின. அந்தக் காலங்களில், மேற்குலகில் இசிஸ் ஒரு "விடுதலை இயக்கமாக" கருதப் பட்டது.

இசிஸ் இயக்கம், திடீரென ஒரு சில நாட்களுக்குள் ஈராக்கின் பல நகரங்களை கைப்பற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தமை, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. "இஸ்ரேலை யாராலும் வெல்ல முடியாது" என்பது போன்ற மாயை, இசிஸ் இயக்கத்தை சுற்றியும் பின்னப் பட்டது. உண்மையில், அமெரிக்காவின் உதவியின்றி, இசிஸ் மட்டுமல்ல இஸ்ரேல் கூட, ஒரு திடீர் யுத்தத்தில் வெற்றி மேல் வெற்றியை குவித்திருக்க முடியாது. தற்போது, ஈராக்கிய நலன்களை பாதுகாப்பதற்காக, "இசிஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில்" அமெரிக்கா குதித்துள்ளது. அதுவும் ஒரு கண்துடைப்பு நாடகம் தான்.

ஏற்கனவே, இசிஸ் இயக்கத்தினர் எண்ணைக் கிணறுகளை கொண்ட மொசுல் நகரை கைப்பற்றிய நாளில் இருந்து, சர்வதேச சந்தையில் எண்ணையின் விலை உயர்ந்துள்ளது. இதனால், சவூதி அரேபியாவுக்கும், அமெரிக்காவுக்கும் மேலதிக வருமானம் கிடைக்கின்றது. அது அவர்களது பொருளாதாரத்திற்கு நல்லது. மேலும், ஈராக்கில் பிரச்சினை இருப்பதாகவும், அமெரிக்காவை தவிர வேறு யாரும் அதனை தீர்த்து வைக்க முடியாதென்றும் "நிரூபிப்பதன்" மூலம், ஈராக்கை தொடர்ந்தும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முடியும்.


மேலதிக தகவல்களுக்கு:
Americans are training Syria rebels in Jordan
The fierce ambition of ISIL's Baghdadi
ISIS Leader: ‘See You in New York’
How al-Qaeda Changed the Syrian War


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
1. அமெரிக்க நலன்களுக்கான ஈராக்கிய அல்கைதா : சி.ஐ.ஏ. ஏவிவிட்ட பூதம்
2. ஈராக்கில் தாலிபான் அரசாங்கம் : இதற்குத் தானா ஆசைப் பட்டாய் அமெரிக்கா? 

Sunday, June 15, 2014

அமெரிக்க நலன்களுக்கான ஈராக்கிய அல்கைதா : சி.ஐ.ஏ. ஏவிவிட்ட பூதம்


சி.ஐ.ஏ., ஆப்கானிஸ்தானில் தாலிபான் என்ற பூதத்தை உருவாக்கி விட்டதைப் போன்று, சிரியா, ஈராக்கில் ISIS (அல்லது ISIL) என்ற இன்னொரு பூதத்தை உருவாக்கி விட்டுள்ளது. அல்கைதா கூட சிஐஏ உருவாக்கிய இயக்கம் தான் என்பதும், ஒசாமா பின்லேடன் ஒரு சிஐஏ உளவாளி என்பதும், ஏற்கனவே நிரூபிக்கப் பட்ட உண்மைகள். அமெரிக்கர்கள், ஆரம்ப காலங்களில் ISIS இயக்கத்தினை AQI (ஈராக்கிய அல்கைதா) என்று குறிப்பிட்டு வந்தனர்.

ஈராக்கில் அமெரிக்கப் படையெடுப்பு நடந்த சில மாதங்களின் பின்னர், பதவியிறக்கப் பட்ட சதாம் விசுவாசிகளும், பாத் தேசியவாதிகளும் ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தை நடத்தி வந்தனர். அந்தப் போராட்டத்தை முறியடிப்பதற்காக, AQI களத்தில் இறக்கி விடப் பட்டது. 

கடும்போக்கு சுன்னி இஸ்லாமிய மதவாதிகளாக காட்டிக் கொண்ட ISIS, ஷியா இஸ்லாத்தை பின்பற்றும் மக்களை கொன்று குவித்தது. சமாரா நகரில் ஷியா நம்பிக்கையாளர்களின் புனிதஸ்தலமான தங்க மசூதியை குண்டு வைத்து தகர்த்தது. இதன் மூலம், ஈராக்கில் சுன்னி- ஷியா மதக் கலவரங்களை தூண்டி விட்டது. இவை எல்லாம் சிஐஏ யின் பிரித்தாளும் சூழ்ச்சியுடன் ஒத்துப் போகின்றது.

ஈராக்கிய அல்கைதாவில் இருந்து பிரிந்ததாக கூறிக் கொள்ளும் ISIS, சிரிய உள்நாட்டுப் போர் வெடித்ததும், சிரியாவுக்கு நகர்ந்து சென்றது. ஈராக் எல்லையோரம் இருக்கும், எண்ணைக் வளம் உள்ள ஒரேயொரு சிரியப் பகுதியை கைப்பற்றிக் கொண்டது. "ISIS அங்கிருந்து கிடைக்கும் எண்ணையை கடத்திச் சென்று விற்று இயக்கத்திற்கு நிதி சேகரித்ததாக," சிஐஏ அறிக்கை கூறுகின்றது.

உண்மையில், சிரியாவில் ஆசாத் அரசை கவிழ்க்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளுடன், பணத்தை தாராளமாக வாரியிறைத்த சவூதி அரேபியா, கட்டார் மற்றும் மேற்குலக நாடுகளின் நிதியில் பெருமளவு பங்கு, ISIS வசம் சென்றுள்ளது. அவர்கள் அந்தப் பணத்தை மிகத் திறமையாக ஊடக பிரச்சாரங்களில் செலவிட்டு, உலகம் முழுவதும் இருந்து இளம் ஜிகாதியர்களை கவர்ந்திழுத்தனர்.

இன்று, ISIS அமைப்பின் முக்கால்வாசி உறுப்பினர்கள் வெளிநாட்டு தொண்டர்கள் என்றால் அது மிகையாகாது. முப்பது வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானில் நடந்த அதே வரலாறு, இன்று மீண்டும் சிரியா/ஈராக்கில் நடந்து கொண்டிருக்கிறது. அல்கைதாவுக்கும், அமெரிக்காவுக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல, மேற்கத்திய ஊடகங்கள் செய்யும் பரப்புரைகளை நம்பும் மக்கள் இருக்கும் வரையில், ஒரே வரலாறு மீண்டும் மீண்டும் திரும்பி வந்து கொண்டே இருக்கும்.

தற்போது விரைவாக முன்னேறிக் கொண்டிருக்கும் ISIS படையினர், பாக்தாத் நகரை அண்மித்து விட்டார்கள். ஈராக்கின் மொத்த சனத்தொகையில் பாதியைக் கொண்டிருக்கும் பாக்தாத் நகரம் வீழ்ச்சி அடைந்தால், அது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். ஏனென்றால், ஈராக் அரசு அமெரிக்க இராணுவ உதவி கேட்டிருந்தும், ஒபாமா நிர்வாகம் அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்த மௌனம் ஒரு தந்திரோபாயாமாக இருக்கலாம். ஏனெனில் அமெரிக்க இராணுவ உதவியின்றி, மாலிக்கின் ஈராக் அரசு நின்று பிடிக்க முடியாது. அந்த தருணத்தில், ஈரான் இராணுவ உதவி செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகும்.

இன்றைய ஈராக்கிய பிரச்சினை, மீண்டும் சுன்னி - ஷியா பிரச்சினையாக மாறி விட்டது. ISIL இயக்கம் முழுக்க முழுக்க சுன்னி முஸ்லிம்களை மட்டும் கொண்ட மதவாத இயக்கம். அது வெளிப்படையாகவே ஷியாக்களுக்கு எதிரான துவேஷத்தை காட்டி வருகின்றது. 

இன்று வரையில் ISIL கைப்பற்றிய ஈராக்கிய பிரதேசங்களில் சுன்னி முஸ்லிம் பிரிவினர் மட்டுமே பெரும்பான்மையாக வாழ்கின்றனர். அந்த மக்கள், ISIS இயக்கத்தினரை, விடுதலை வீரர்களாக வரவேற்றுள்ளனர். உள்ளூர் மக்களின் ஆதரவின்றி, ISIS அந்தளவு விரைவாக முன்னேறி இருக்க முடியாது. ISIS கைப்பற்றியுள்ள பகுதிகளில், தாலிபான் பாணி ஆட்சி நடப்பது வேறு விடயம்.

ISIS கைப்பற்றிய மொசுல் போன்ற நகரங்களில் இருந்த ஈராக்கிய படையினர், பெரும்பாலும் ஷியா முஸ்லிம்கள். அதனால், ஏற்கனவே ஈராக்கிய படையினர், பொது மக்களின் ஆதரவை இழந்து விட்டிருந்தனர். ISIS முன்னேறிக் கொண்டிருந்த நேரம், ஈராக்கிய அரச படையினர் முகாம்களுக்குள் முடங்கிக் கிடந்தனர். பொது மக்களின் இலக்குகள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக எறிகணைத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதனால், பெரும்பான்மையான பொது மக்கள் போர் நடந்த பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்து சென்றனர்.

அண்மைக் காலத்தில் விரைவாக மாறிக் கொண்டிருக்கும் அரசியல் கள நிலைமை காரணமாக, எதிர்காலத்தில் ஈராக் மூன்று துண்டுகளாக பிரிக்கப் பட்டாலும் ஆச்சரியப் பட எதுவுமில்லை. ஏற்கனவே பத்து வருடங்களுக்கு முன்னர், அமெரிக்க இராணுவத் தலைமை மட்டத்தில் அத்தகைய திட்டம் ஒன்று ஆராயப் பட்டது. வடக்கு ஈராக்கில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வாழும் குர்திஸ்தான் தனி நாடாகி விடும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இன்றைய குழப்பகரமான சூழ்நிலையை பயன்படுத்தி, எண்ணை வளம் நிறைந்த கிர்குக் நகரத்தை, குர்து பிராந்திய இராணுவம் கைப்பற்றியுள்ளது.

பலவீனமான நிலையில் உள்ள ஈராக்கின் மாலிக் அரசுக்கு, ஈரானிய இராணுவ உதவி கிடைக்குமாக இருந்தால், ஷியா அரேபியர் வாழும் தெற்குப் பகுதி தனியாக பிரிந்து விடும். ஆகவே, ISIS கட்டுப்பாட்டில் உள்ள சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மத்திய ஈராக், சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய தனி நாடாக மாறி விடும். தற்போதைய நிலைமையும், ஏறக்குறைய அப்படித் தான் உள்ளது. இன்னும் யாரும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியை தனி நாடாக பிரகடனப் படுத்தவில்லை என்பது மட்டும் தான் வித்தியாசம்.

தற்போது ஈராக்கில் நிலவும் பதற்ற நிலை காரணமாக, உலகச் சந்தையில் எண்ணையின் விலை அதிகரித்துள்ளது. இதனால்,அமெரிக்கா, சவூதி அரேபியா, கட்டார் ஆகிய வளைகுடா நாடுகளின் காட்டில் நல்ல மழை பெய்கிறது. பெற்றோலின் விலை அதிகரிப்பினால் கிடைக்கும் இலாபம், அவர்களது கஜானாவை நிரப்பும் என்பதால், அந்த நாடுகளில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். 

ஈராக்கில் ISIS இயக்கத்தின் முன்னேற்றம், எதிர்பாராத விதமாக திடீரென நடந்தது போன்று, அமெரிக்கா பாசாங்கு செய்கின்றது. சிரியாவில் போரிட்டுக் கொண்டிருந்த பெரும்பாலான ISIS போராளிகள், ஈராக் எல்லையோரம் நகர்த்தப் பட்டு வருவதாக, லெபனான் பத்திரிகைகளில் தகவல் வந்திருந்தது. ஒரு ஊடகத்தில் வெளிப்படையாக வந்த தகவலை, சிஐஏ கவனிக்காமல் விட்டது என்று சொல்ல முடியாது. அமெரிக்கர்களுக்கு எல்லாம் தெரியும். தெரிந்தாலும் கண்ணை மூடிக் கொண்டிருந்தார்கள்.

அது சரி, யார் அந்த அல்கைதா? சிரியா, ஈராக்கில் கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னேறி, உலகில் யாராலும் வெல்ல முடியாத இயக்கம் என்று மார் தட்டிக் கொள்கிறது. மொசுல் நகர மத்திய வங்கியை சூறையாடிய பின்னர், உலகிலேயே பணக்கார இயக்கமாகி உள்ளது. அங்கிருந்த அமெரிக்க ஆயுத தளபாடங்களை அபகரித்த பின்னர், உலகிலேயே மிகவும் பலமான இராணுவக் கட்டமைப்பு கொண்ட இயக்கம். இன்றைய உலகில் மிகவும் பலமான இயக்கமான அல்கைதா, இன்று வரையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தாத காரணம் என்ன? யாருக்காவது விடை தெரியுமா?


Thursday, June 12, 2014

ஈராக்கில் தாலிபான் அரசாங்கம் : இதற்குத் தானா ஆசைப் பட்டாய் அமெரிக்கா?


வரலாறு திரும்புகிறது? ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆசீர்வாதத்துடன் இஸ்லாமிய கடும்போக்காளர்களான தாலிபான்களின் ஆட்சி உருவானது போன்று, ஈராக்கிலும் நடந்துள்ளது. மேற்கு ஈராக்கிய பகுதிகள், கடும்போக்கு இஸ்லாமியவாத இயக்கமான ISIS கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. கடந்த ஆறு மாத காலமாக, அந்தப் பகுதிகளில் ஒரு "தாலிபான் ஆட்சி" நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ரமாடி, பலூஜா போன்ற பல நகரங்கள், அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் தான் இருக்கின்றன. சிரியா எல்லையோரம் உள்ள அன்பர் மாகாணம் முழுமையாக அவர்களது ஆட்சியில் கீழ் உள்ளது. இன்று வடக்கே உள்ள மொசுல் நகரத்தை கைப்பற்றி விட்டனர்.

Islamitische Staat in Irak and Shām, (ஷாம் என்பது சிரியா, லெபனானை குறிக்கும் அரபு பெயர்) என்ற ஜிகாதி இயக்கம், அமெரிக்கப் படைகள் ஈராக்கை "விடுதலை செய்து ஜனநாயகத்தை கொண்டு வந்த பின்னர்" உருவானது. இரண்டு, மூன்று நாடுகளை சேர்த்து தாயகமாக உரிமை கூறுவதால், வெளிநாட்டு ஜிகாதியர்களும் நிறையப் பேர் அந்த இயக்கத்தில் சேர்ந்துள்ளனர்.

ISIS உருவான ஆரம்ப காலத்தில் ஈராக்கில் போரிட்டு வந்தாலும், சிரியா உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகிய பின்னர் தான் வெளியுலகில் பிரபலமானது. (சவூதி, கட்டார், மேற்கத்திய நாடுகளின் உதவியை சாதுரியமாக பயன்படுத்தி வளர்ந்து வந்தது.) தற்போதும் சிரியாவில் ராக்கா பகுதி, ISIS கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அங்கு தாலிபான் ஆட்சி போன்று, கடுமையான இஸ்லாமிய மத சட்டங்கள் பின்பற்றப் படுகின்றன.

சதாம் ஹுசைன் என்ற சர்வாதிகாரியின் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து மக்களை விடுதலை செய்து, ஈராக்கில் ஜனநாயகத்தை மலரச் செய்யவே படையெடுத்ததாக அமெரிக்கா அறிவித்தது. இப்போது அந்த நாட்டில் மெல்ல மெல்ல "ஒரு தாலிபான் ஆட்சி" ஏற்பட்டு வருகின்றது. அமெரிக்கா கொண்டு வர விரும்பிய ஜனநாயகம் இது தான் போலிருக்கிறது.

ஈராக்கில் முன்னேறிக் கொண்டிருக்கும் ஜிகாதி இயக்கமான ISIS, வட ஈராக்கில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மொசுல் நகரை கைப்பற்றிய பின்னர், அது உலகிலேயே பணக்கார இயக்கமாக மாறி விட்டது. ISIS போராளிகள், மொசுல் நகர மத்திய வங்கியை சூறையாடி, 429 மில்லியன் டாலர் பெறுமதியான ஈராக்கிய டினார்களை அபகரித்துள்ளனர். அதை விட, ஈராக்கிய இராணுவம் விட்டுச் சென்ற ஹெலிகாப்டர்கள், விமானங்கள், கவச வாகனங்கள் எல்லாம் அவர்களுக்கு சொந்தமாகியுள்ளன. உலகில் எந்தவொரு ஆயுதபாணி இயக்கமும், இந்தளவு பண பலம், ஆயுத பலம் கொண்டதாக இருக்கவில்லை.

மொசுல் நகரமும், அதை சுற்றியுள்ள பகுதிகளும் எண்ணை வளம் நிறைந்தது. அதனால், ஈராக்கை எண்ணைக்காக ஆக்கிரமித்த அமெரிக்கர்கள், பல கோடி டாலர் செலவில், ஈராக்கிய இராணுவத்திற்கு பயிற்சி அளித்து, தம்மிடம் இருந்த சிறந்த அமெரிக்க ஆயுத தளபாடங்களையும் ஒப்படைத்து விட்டு வெளியேறினார்கள். ஆனால், அமெரிக்கர்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. அமெரிக்கர்கள் ஈராக் மீள் கட்டுமானத்திற்காக செலவிட்ட மில்லியன் கணக்கான டாலர்கள் விழலுக்கு இறைத்த நீராகிப் போயின. ISIS போராளிகள் மொசுல் நகரை கைப்பற்றியதும், அமெரிக்கப் பயிற்சி பெற்ற ஈராக்கிய படையினர் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.

சதாம் ஹுசைனின் வீழ்ச்சிக்குப் பின்னர், சுன்னி முஸ்லிம் பிரிவினர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் ஒரு நீண்ட விடுதலைப் போராட்டம் நடந்தது. அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளை எதிர்த்தும், ஷியா முஸ்லிம் பிரிவினர் ஆதிக்கம் செலுத்திய புதிய ஈராக் அரசையும் எதிர்த்து போராடினார்கள். அமெரிக்கப் படையினர், அன்றைய விடுதலை இயக்கங்களை ஒழித்துக் கட்டி விட்ட மகிழ்ச்சியில் ஈராக்கை விட்டு வெளியேறி இருந்தனர்.

ஈராக்கில் விடுதலைப் போராட்டம் ஒடுக்கப் பட்டாலும், சுன்னி முஸ்லிம் மக்கள் புதிய ஈராக் அரசுக்கு விசுவாசமாக மாறவில்லை. தற்போது கடும்போக்கு இஸ்லாமியவாத ISIS இந்தளவு விரைவாக முன்னேறியதற்கு, அந்தப் பகுதி மக்களின் ஆதரவு ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில், கடந்த சில மாதங்களாக, ஈராக்கிய இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடங்கி இருக்கும் அளவிற்கு, ஈராக் அரசுக்கு எதிரான மக்களின் வெறுப்பு அதிகரித்து காணப் பட்டது. விடுதலை இயக்கங்களை அழிக்க முடிந்தது. ஆனால், மக்களின் விடுதலை வேட்கையை அழிக்க முடியவில்லை. அண்மைக் காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு கிடைத்த ஒரு மிகப் பெரிய அடி இதுவாகும்.

இதற்குத் தானா ஆசைப் பட்டாய் அமெரிக்கா?


ஈராக் தொடர்பான முன்னைய பதிவுகள்:

Monday, May 27, 2013

சிரியா போர்க் களத்தில் இருந்து சில குறிப்புகள்

  
இங்கேயுள்ள படத்தில், மேற்கத்திய நாடுகளால் ஆதரிக்கப் படும், சிரியாவின் "அல்கைதா விடுதலைப் போராளிகள்", சிரிய கிறிஸ்தவப் பெண் ஒருவரை வன்புணர்ச்சி செய்து, கோரமாக கொலை செய்த காட்சி. இந்த செய்திகள், உலகில் எந்த கிறிஸ்தவரது மனச்சாட்சியையும் உலுக்கவில்லை. சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில், சிரிய அரச படைகளும், கிளர்ச்சிக் குழுக்களும் மனித உரிமைகளை மீறுவதுடன், பொது மக்களையும் துன்புறுத்தி, பலி வாங்கி வருவதும் ஏற்கனவே தெரிந்த விடயங்கள். போரில் ஈடுபடும் இரண்டு தரப்பினரும் பாரிய போர்க்குற்றங்களை புரிந்துள்ளன. ஆனால், மேற்கத்திய ஊடகங்கள் ஒரு பக்கச் சார்பான தகவல்களை மட்டுமே உலகிற்கு தெரிவித்து வருகின்றன.

சிரிய உள்நாட்டுப் போருக்கு காரணமான, மத ரீதியிலான சமூகப் பிரிவினைகள், அவற்றிருக்கு இடையிலான முரண்பாடுகள் யார் கண்ணுக்கும் தெரிவதில்லை. கிறிஸ்தவ சிறுபான்மையினர் சிரியாவின் அசாத் அரசை ஆதரவளிப்பதால், கிறிஸ்தவ மக்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் வேட்டையாடிக் கொலை செய்யப் படுகின்றனர். அல்கைதா தீவிரவாதிகள், கிறிஸ்தவர்களை படுகொலை செய்த சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகின்றன. ஆனால், "கிறிஸ்தவ நாடுகள்" என்று கருதப்படும் மேற்கத்திய நாடுகள், சிரிய கிறிஸ்தவர்களின் அவலங்களை புறக்கணித்து வருவதுடன், தொடர்ந்தும் இஸ்லாமிய அடிப்படைவாத அல்கைதா தீவிரவாதிகளை ஆதரித்து வருகின்றன. உலகத்தில் எங்காவது கிறிஸ்தவர்களுக்கு அநீதி இழைக்கப் பட்டால், "கிறிஸ்தவ நாடுகள்" தட்டிக் கேட்கும் என்ற மாயை இங்கே உடைக்கப் படுகின்றது.

*****************


சிரியாவில் ஆசாத் ஆட்சி கவிழ்ந்தால், அங்கே அல்கைதா ஆட்சியை கைப்பற்றி விடும். அதற்குப் பிறகு, இஸ்ரேல் மீதான ஜிகாத் அறிவிக்கப் பட்டாலும் ஆச்சரியம் இல்லை. முகம் தெரியாத பிசாசை விட, இவ்வளவு காலமும் பழகிய பிசாசே பரவாயில்லை என்ற முடிவுக்கு இஸ்ரேலிய இராணுவம் வந்துள்ளது. ஆசாத் அரசு பலவீனமாக இருந்தாலும், இஸ்ரேலுடன் சமாதானமாக இருக்கும் என்று நினைக்குமளவிற்கு நிலைமை வந்துள்ளது. இதைத் தான், கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது என்று சொல்வார்கள்.

எகிப்தில் ஆட்சியில் இருப்பதைப் போன்ற, முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி சிரியாவில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், அது ஆசாத் (இன்றைய அதிபரின் தந்தை) காலத்தில் தடை செய்யப் பட்டிருந்தது. எண்பதுகளில், ஹோல்ம்ஸ் நகரில் இடம்பெற்ற ஆயுதக் கிளர்ச்சி, ஈவிரக்கமின்றி நசுக்கப் பட்டது. ஆயிரக் கணக்கான முஸ்லிம் சகோதரக் கட்சி உறுப்பினர்கள் மாண்டனர். அதற்குப் பிறகு, அந்தக் கட்சி தலைமறைவாக இயங்கிக் கொண்டிருந்தது. குறிப்பாக, சிரியாவில் பெரும்பான்மை சமூகமான சுன்னி முஸ்லிம்கள் மத்தியில் அதன் ஆதரவுத்தளம் இருந்தது.

2010 ல் சிரிய அரசுக்கு எதிராக மக்கள் எழுச்சி இடம்பெற்றது. அந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம் சகோதரத்துவ கட்சி பயன்படுத்திக் கொண்டது. அப்போது உருவான ஆயுதக் குழுவுக்கு, சவூதி அரேபியாவும், கட்டாரும் நிதியும், ஆயுதங்களும் வழங்கின. இதே நேரம், ஆயுதக் குழுக்கள் இயங்கவும், பயிற்சி பெறவும், துருக்கி இடம் கொடுத்தது. எண்பதுகளில் நடந்ததைப் போன்று, 2010 போராட்டமும், சுன்னி முஸ்லிம்களின் எழுச்சியாக கருதப் பட்டது. (ஷியா, கிறிஸ்தவ சமூகங்களை சேர்ந்த சிரியர்கள், அந்தக் கிளர்ச்சியில் பங்கு பற்றவில்லை. அவர்கள் இன்றைக்கும் ஆசாத் அரசை ஆதரிக்கின்றனர்.)

2010 ல் சிரிய அரசுக்கு எதிரான, சுன்னி முஸ்லிம் சமூக போராளிகளின் ஆயுதப் போராட்டம் தீவிரமடைந்தது. தமது சமூகத்தை சேர்ந்த போராளிகளை எதிர்த்து போரிட விரும்பாத, சிரிய தேசிய இராணுவத்தில் பணியாற்றிய சுன்னி முஸ்லிம் இராணுவ வீரர்கள் மத்தியில் அதிருப்தி எழுந்திருந்தது. சிரியா இராணுவத்தில் இருந்த, கணிசமான அளவு  சுன்னி முஸ்லிம் அதிகாரிகளும், படைவீரர்களும் துருக்கிக்கு தப்பி ஓடினார்கள். அவர்கள் அங்கிருந்து "சுதந்திர சிரியா இராணுவம்" (FSA) என்ற பெயரில் இயங்கினார்கள். ஆனால், மேற்கத்திய நாடுகளில் எதிர்பார்க்கப் பட்டது போன்று, சிரிய சுதந்திர இராணுவம், பலமான எதிர்ப்புச் சக்தியாக உருவெடுக்கவில்லை.

சிரியா அரசுக்கு எதிராக போராடும் போராளிக் குழுக்களுக்கு, தாராளமாக நிதி, ஆயுதங்களை அள்ளி வழங்க பல வெளிநாடுகள் முன்வந்தன. இந்த வெளிநாட்டு நிதி, ஆயுதங்கள் துருக்கி ஊடாக கிடைத்து வந்தன. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஈராக்கிய அல்கைதா சிரியாவிற்குள் ஊடுருவியது. பின்லாடனின் அல்கைதாவும், ஈராக் அல்கைதாவும் ஒன்றல்ல. ஈராக் அல்கைதா, அந்த நாட்டு சுன்னி முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவ படுத்திய அமைப்பு. பின்லாடனின் அல்கைதாவின் அரசியல் கொள்கைகளை வரித்துக் கொண்டனர். அதில் முக்கியமானது, முதலாம் உலக யுத்த முடிவில் ஏற்பட்ட பிரிட்டிஷ் - பிரெஞ்சு ஒப்பந்தம் (Syces - Picot Agreement.).

முதலாம் உலகப்போரின் முடிவில் தான், இன்றுள்ள சிரியா, ஈராக் என்ற தேச எல்லைகள் பிரிக்கப் பட்டன. எல்லை பிரிப்பது குறித்து, அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த அரபு மக்களுடனோ, அவர்களின் பிரதிதிகளுடனோ கலந்தாலோசிக்கப் படவில்லை. அதைக் காரணமாக காட்டும் அல்கைதா,  அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள மறுத்து வருகின்றது. அதனால், ஈராக் நாட்டை மட்டுமல்ல, சிரியாவையும் சேர்த்து அரசமைப்பது அவர்களின் எதிர்கால இலட்சியம். ஈராக்கிய அல்கைதா, அல் நுஸ்ரா (Jabhat al-Nusra) என்ற பெயரில் சிரியாவில் களமிறங்கியது.

அது ஒரு அல்கைதா பாணி இயக்கம். அதன் அர்த்தம், அந்த இயக்கத்தில் எந்த நாட்டவரும் உறுப்பினராக சேரலாம். அதனால், சர்வதேச ஜிகாதிகளையும் ஒன்று சேர்க்க முடிந்தது. குறிப்பாக லிபியாவில் கடாபிக்கு எதிராக போரிட்ட போராளிகள் சிரியாவில் வந்து குவிந்தார்கள். ஆட்பலம் ஆயுத பலம் மிக்க அல் நுஸ்ரா, பல இடங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. சிரியா, லெபனானில் வாழும் மக்களுக்கு இந்த விபரங்கள் தெரியும். ஆனால், மேற்கத்திய ஊடகங்கள் சிரியாவில் அல்கைதாவின் இருப்பை மூடி மறைத்து வந்தன. அல் நுஸ்ரா பெற்ற போர்க்கள வெற்றிகளை, FSA பெற்ற வெற்றிகள் என்று திரித்துக் கூறினார்கள். ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த இளைஞர்களும், சிரியாவில் போரிடுவது பற்றிய தகவல்கள், அண்மைக் காலமாக வெளிவருகின்றன. அதற்குப் பிறகு தான், சிரியாவில் அல் நுஸ்ரா என்ற அல்கைதா பாணி இயக்கம் இருக்கின்றது என்ற உண்மையை ஒத்துக் கொள்ளவாரம்பித்தன.

"அல்கைதாவும், அமெரிக்காவும் எதிரிகள்" என்று நம்பும் அப்பாவியா நீங்கள்? அமெரிக்க இராணுவத்தின், இரகசியமான துணைப்படை தான் அல்கைதா என்பது, ஏற்கனவே பல தடவைகள் நிரூபிக்கப் பட்ட விடயம். ஒரு முன்னாள் அமெரிக்க இராணுவ வீரர். இப்போது, Al Nusrah ல் சேர்ந்து போராடி வருகின்றார். Eric Harroun என்ற 30 வயது இளைஞர், முஸ்லிமாக மதம் மாறி, சிரியாவின் "விடுதலைப் போராட்டத்தில்" பங்கெடுத்து வருகிறார். சிரிய தீவிரவாதக் குழுக்கள் மத்தியில், "அமெரிக்கன்" என்று செல்லமாக அழைக்கப் பட்டவர். ஆனால், இவர் மட்டுமே ஒரேயொரு அமெரிக்கர் அல்ல. இன்று வரையில், எத்தனை அமெரிக்கர்கள் சிரிய அல்கைதாவில் சேர்ந்து போரிடுகிறார்கள் என்ற விபரம் யாருக்கும் தெரியாது.

Eric Harroun சிரியாவிலும், அமெரிக்காவிலும் பிரபலமாக அறியப்பட்ட ஒருவர். அதற்கு காரணம், சிரிய படைகளுக்கு எதிரான பல தாக்குதல்களில் பங்குபற்றியிருக்கிறார். சிரிய இராணுவ ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதைக் காட்டும் வீடியோ ஒன்றில், இவர் தலையைக் காட்டுகிறார். அதைத் தவிர, இன்னொரு வீடியோவில், சிரிய அதிபர் ஆசாத்திற்கு எதிராக கொலைப் பயமுறுத்தல் விடுக்கின்றார். (அந்த Youtube வீடியோக்களை இணைத்துள்ளேன்) சில நாட்களுக்கு முன்னர் நடந்த மோதலில், சில தீவிரவாதிகள் கொல்லப் பட்டதாகவும், எரிக் ஹரூனும் அவர்களில் ஒருவர் என்று சிரிய அரசு அறிவித்திருந்தது. ஆனால், தான் இன்னும் சாகவில்லை என்று, Eric Harroun பேஸ்புக் மூலம் அறிவித்துள்ளார். மேலும், தான் Al Nusrah வில் சேரவில்லை என்றும், (மதச்சார்பற்ற) FSA வில் சேர்ந்திருப்பதாக அறிவித்துள்ளார்.

ஆயினும், சுதந்திர சிரிய இராணுவம் என்ற FSA, முழுக்க முழுக்க முன்னாள் சிரிய படையினரையும், சிரிய பிரஜைகளையும் கொண்ட படை என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இந்த அமெரிக்கர் போன்ற வெளிநாட்டு போராளிகள், பொதுவாக அல்கைதாவின் கிளை அமைப்பான Al Nusrah போன்ற இயக்கங்களில் சேர்வது ஊரறிந்த இரகசியம் ஆகும். அமெரிக்காவுக்கும், அல்கைதாவுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறதென்பது இன்றைக்கும் பலருக்குத் தெரியாது. அதனால், ஏதாவது பொய் சொல்லி தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

சிரியாவில் போரிட்ட இன்னொரு அமெரிக்கர் பெயரும் ஊடகங்களில் அடிபட்டது. Matthew VanDyke என்ற பெயரை உடைய அந்த அமெரிக்கர், தான் ஒரு "ஊடகவியலாளர்" என்று சொல்லி சமாளிக்கப் பார்த்தார். இவர் முன்பு லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக போரிட்டவர். அங்கே வேலை முடிந்தவுடன் சிரியா வந்து விட்டார். இவரது புகைப்படமும், சிரிய அரச ஊடகங்களில் பிரசுரிக்கப் பட்டதால் தான், வெளியுலகம் இவரைப் பற்றி அறிந்து கொண்டது. இவர்களைப் போல இன்னும் எத்தனை அமெரிக்கர்கள், அல்கைதா தீவிரவாதிகள் என்ற பெயரில் உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ? அந்த ஒபாமாவுக்கே வெளிச்சம்!
(US Army veteran fighting with al Qaeda, http://www.longwarjournal.org/videos/2013/03/us_army_veteran_fighting_with.php)
(Message from U.S. Mujahid in Syria to Bashar al-Assad,  http://www.youtube.com/watch?v=2SEdheC8Yq4&feature=player_embedded)

சிரியாவில் இன்னொரு ஆப்கானிஸ்தான் உருவாகின்றது. சிரியாவில் ஆசாத் அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும் ஆயுதபாணி இயக்கங்கள், அல்கைதா போன்ற தீவிர இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள் என்பது தெரிந்ததே. அந்த இயக்கங்களுக்கு, அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் நவீன ஆயுதங்களை வழங்கி வருகின்றன. அயல்நாடான ஜோர்டானில் வைத்து, அல்கைதா போன்ற இயக்கங்களுக்கு, அமெரிக்க படைகள் இராணுவப் பயிற்சி அளிக்கின்றன. சிரியாவில் அரசுக்கு எதிராக போரிடும் இயக்கங்களில், வெளிநாட்டு போராளிகள் பெருமளவில் போரிடுவதாக சிரிய அரசு குற்றஞ்சாட்டி வந்தது. குறிப்பாக, லிபியா, ஈராக், எகிப்தை சேர்ந்த தொண்டர் அணிகள், சிரியாவில் போரிட்டு வருகின்றன. இந்த செய்திகள் எல்லாம் ஏற்கனவே தெரிந்தவை தான். ஆனால், அதனை மேற்குலக நாடுகள் மறுத்து வந்தன.

தற்போது, மேற்குலக நாடுகளை சேர்ந்த இளைஞர்களும் சிரியாவில் போரிடுவதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. பிரிட்டனை சேர்ந்த நூற்றுக் கணக்கான முஸ்லிம் இளைஞர்கள், சிரியாவில் போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதே நேரம், ரஷ்யாவில் இருந்தும் பெருமளவு செச்னிய இளைஞர்கள் சிரியாவுக்கு சென்றுள்ளனர். இந்த சம்பவங்கள் எல்லாம், ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் நடந்ததை நினைவுபடுத்துகின்றன. எண்பதுகளில், சோவியத் படைகளினால் பாதுகாக்கப்பட்ட ஆப்கான் சோஷலிச அரசுக்கு எதிராக முஜாஹிதீன் இயக்கங்கள் போராடி வந்தன. அன்றும், அமெரிக்காவும், பிரிட்டனும் அந்த இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்கள் கொடுத்து, பயிற்சியளித்து வந்தன. அன்றும், பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இருந்து தொண்டர் அணிகள், ஆப்கானிஸ்தானில் போரிட்டன. ஆப்கான் போர் முடிந்ததும், வெளிநாட்டு போராளிகள் தமது தாயகங்களுக்கு திரும்பி வந்து, தமது அரசுகளுக்கு எதிரான ஜிகாத் போராட்டங்களை நடத்தினார்கள். இவை எல்லாம் வரலாறு.

இன்று வரலாறு திரும்புகின்றது. அமெரிக்கா அன்று ஆப்கானிஸ்தானில் விட்ட அதே தவறை, இன்று சிரியாவில் விடுகின்றது. இதிலே சுவாரஸ்யமான விடயம் என்னவெனில், சிரியா எல்லையில் இஸ்ரேல் இருக்கின்றது. நாளை, சிரியாவில் ஆசாத் அரசு கவிழ்ந்த பின்னர் ஆட்சியைப் பிடிக்கப் போகும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கங்கள், இஸ்ரேலுக்கு எதிராக தமது ஆயுதங்களை திருப்ப மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம்? ஒருவேளை, சிரியாவை சேர்ந்த போராளிகள் தயங்கினாலும், வெளிநாட்டு ஜிகாதிகள் இஸ்ரேலுக்கு எதிரான போரை நடத்தப் போகின்றார்கள். இஸ்ரேலிய இராணுவத்திற்கு அது தெரியாமல் இல்லை. அதனால் தான், "முன் பின் பழக்கமில்லாத பிசாசுகளை விட, ஆசாத் போன்ற தெரிந்த பிசாசு ஆட்சியில் இருப்பதே உத்தமம்..." என்று இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளே கூறுமளவிற்கு நிலைமை உள்ளது.
          **********

சிரியா பற்றிய முன்னைய பதிவுகள்:

Wednesday, May 04, 2011

பின்லாடன்: நிழல் வேறு, நிஜம் வேறு

(குறிப்பு: இந்தக் கட்டுரை 2002 ம் ஆண்டு, அமெரிக்காவின் "பயங்கரவாத எதிர்ப்புப் போர்" உச்சத்தில் இருந்த நேரத்தில் எழுதப்பட்டது.)
செய்மதித் தொலைபேசி மூலம் பின்லாடன் தனது தயாருடன் உரையாற்றியதைக் கூட தாம் பதிவு செய்து வைத்திருப்பதாக அமெரிக்க சர்வதேச உளவு நிறுவனமான சி.ஐ.ஏ தெரிவித்து ஒரு வாரமாகவில்லை. எங்கிருந்தோ வந்த இரண்டு விமானங்கள் நியூயோர்க்கின் உலக வர்த்தக மையக் கட்டடத்தை இடித்துத் தள்ளின. இந்தச் சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திலேயே, யார் இதன் சூத்திரதாரி என்பதை ஊகித்தது அமெரிக்க அரசு. ஆப்கானிஸ்தான் மலைக்குகையொன்றிலிருந்து கொண்டே பின்லாடன்தான் இந்தக் காரியத்தைச் செய்து முடித்ததாகவும் அறிவித்தது. நடந்த சம்பவத்திற்குப் பழிவாங்குவதற்காக தாம் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து பின்லாடனைப் பிடித்து வரப்போவதாக அறிவித்தது. பெரும்பான்மையான அமெரிக்கர்களுக்கு ஆப்கானிஸ்தான் எங்கேயிருக்கிறது எனத் தெரியாவிட்டாலும் (நஷனல் ஜோக்கிராபிக் நடாத்திய கணக்கெடுப்புகளின்படி) தமது அரசின் போருக்கு ஆதரவளித்தனர். செப்டம்பர் 11 தாக்குதல் நடப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே பல நாட்டு ராஜதந்திரிகளை சந்தித்த அமெரிக்க அரசு அதிகாரிகள் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கும் திட்டத்தை முன்வைத்ததை பிரிட்டிஷ் பத்திரிகையொன்று தெரிவித்தது.

நியூயோர்க் தாக்குதல் நடத்தியவர்கள் பற்றி இன்றுவரை முன்னுக்குப்பின் முரணான தகவல்களே வந்துள்ளன. புலனாய்வு அறிக்கைகள் பல ஊகங்களை அடிப்படையாக வைத்தே தயாரிக்கப்பட்டன. எரிந்து இடிந்து நொருங்கிக் கிடந்த இடிபாடுகளிலிருந்து கடத்தல்காரரின் பாஸ்போட் கண்டெடுக்கப்பட்டதாகவெல்லாம் செய்திகள் வந்தன. இதற்கிடையே கட்டடம் எரிந்தபோது எழுந்த புகைமண்டலத்தில் சாத்தானின் முகம் தெரிந்ததாக கிறிஸ்தவ அடிப்படைவாதிகள் சிலர் புரளி கிளப்பி விட்டனர். நடந்த சம்பவம் ஆண்டவரின் தீர்ப்பு என்றும், ஓரினச் சேர்க்கையாளரும், பெண்ணிலைவாதிகளும் குற்றவாளிகள் என ஒரு கிறிஸ்த்தவ மதப்பிரசாரகர் உளறித் திரிந்தார். ஒருவேளை இது உலக அழிவின் ஆரம்பம் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.

மறுபக்கத்தில் பின்லாடனோ அல்லது அல்-கைதா இயக்கமோ தாக்குதலுக்கு எவ்வித உரிமையையும் கோரவில்லை. அதே நேரம் பாலஸ்தீனத்திலும் ஈராக்கிலும் தமது சகோதரர்களைக் கொன்று குவிக்கும் அமெரிக்காவிற்கு, "இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்," என்று கருத்துத் தெரிவித்தனர். இந்த ஒளிநாடாக்களை ஒளிபரப்பியதன் முலம் சர்வதேசப் பிரபலத்தைப் பெற்றது, "அரபு சி.என்.என்." என அழைக்கப்படும் அல்-ஜசீரா தொலைக் காட்சிச்சேவை. சி.என்.என் கூட இவர்களிடம் செய்தி கேட்டுக் கெஞ்சுமளவிற்கு அல்-ஜசீராவின் முக்கியத்துவம் உணரப்பட்டது. செய்தி வர்த்தகத்தில் நிலையான இடத்தைப்பிடிக்க விரும்பும் அல்-ஜசீரா தொடர்ந்து பல 'பின்லாடனின் வீடியோக்களை' ஒளிபரப்பிப் புகழ் தேடியது. ஆனால் வரவர அதன் நம்பகத் தன்மை குறைந்து வருவது அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. அதாவது எங்கிருந்து வருகிறது அல்லது நம்பிக்கையான இடத்திலிருந்து வருகிறதா என ஆராயாமல் கிடைக்கும் ஒளிநாடாக்களை ஒளிபரப்பி வருவதால் அவற்றின் நிஜத்தன்மை பற்றிய சந்தேகம் எழுந்துள்ளது.

இதைவிட அல்-ஜசீரா பேட்டியெடுத்ததாகச் சொல்லி மோசடித் தகவல்களும் பத்திரிகைகட்கு அனுப்பப்பட்டுள்ளன. பின்லாடனின் வலதுகரம் என்று சொல்லப்பட்ட ஒருவரின் பேட்டி பிரபலமாகப் பேசப்பட்டது. அதில் "அந்த வலதுகரம்", வெகுவிரைவில் அணுவாயுதம் பாவித்து பெருநாசம் விளைவிக்கக்கூடிய தாக்குதலை நடத்தப்போவதாக தெரிவித்திருந்தது. பின்னர் அந்தப்பெயரில் யாரும் அல்-கைதா இயக்கத்தில் இல்லை என்றும் அல்-ஜசீரா செய்தியாளர்கள் யாரும் அப்படி ஒரு பேட்டியை எடுக்கவில்லையென்றும் தெரியவந்தது. இந்தப்பேட்டி முழுக்க ஒரு மோசடிச் செய்தி என்பது அம்பலமானதும், ஒரு ஆசியப் பத்திரிகை தனது வாசகர்களிடம் மன்னிப்புக் கேட்டு விட்டு, யாரிடமிருந்து செய்தி வந்தது என்பதை ஆராய்ந்துள்ளது. இன்றுவரை செய்தியின் மூலம் மர்மமாகவேயுள்ளது. இதன்பிறகு பின்லாடன் ஆதரவாளர்கள் யாராவது அல்-கைதா பேரில் விளையாடுகிறார்களா, அல்லது வெளிநாட்டு அரசின் உளவுத்துறையொன்று இவ்வாறான செய்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து தலிபான்களும் அல்-கைதாவும் விரட்டப்பட்டவுடனேயே அமெரிக்கப் பத்திரிகையாளர்கள் அல்-கைதாவின் ஆவணங்கள் தேடி நாடு முழுவதையும் குடைந்தெடுத்தார்கள். சி.என்.என் தொலைக்காட்சிச் சேவை, அல்-கைதா அணுவாயுதங்கள் தயாரித்தது பற்றிய குறிப்புகளை கண்டெடுத்ததாகக் காட்டியது. அரபு மொழியில் எழுதப்பட்டிருந்த இரசாயனச் சூத்திரங்களும், பௌதீகக் குறிப்புகளும் அணுவைப் பற்றியும், அணுகுண்டு வெடிப்பின் விளைவுகளைப் பற்றியும் எழுதியிருந்தது உண்மைதான். ஆனால் இவையொரு பல்கலைக்கழக இரசாயன-பௌதீக பேராசிரியரின் அல்லது மாணவனின் குறிப்புப் புத்தகம்போலக் காணப்படுவதாக அவற்றை சி.என்.என் ற்கு மொழிபெயர்த்துக் கொடுத்த மொழிபெயர்ப்பாளர் கூறியுள்ளார். மேலும் இந்த 'ஆதாரம்' போர்க்கருவிகள், வெடிகுண்டுகள் தயாரிப்பது பற்றிய பிற குறிப்புப் புத்தகங்களுடனே கண்டெடுக்கப்பட்டள்ளது. இதனால் எங்கோ ஒரு பயிற்சி முகாமில் அல்-கைதா உறுப்பினர்களுக்குப் போர்க்கருவிகள் பற்றிய வகுப்புகள் நடைபெற்ற போது பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கூட மேற்படி 'ஆதாரத்தைப்' பத்திரிளையாளர் மாநாட்டில் காட்டினார்.

தென்னமெரிக்காவில் பிறேசில், ஆர்ஜன்ரீனா, பராகுவே ஆகிய நாடுகள் சந்திக்கும் எல்லைப் பகுதியில் நயாகரா போன்ற மிகப்பெரிய நீர்வீழ்ச்சியிருக்கிறது. இந்தப் பிராந்தியத்தை அடிக்கடி சுட்டிக்காட்டிய அமெரிக்க அரசு, அங்கே அல்-கைதாவின் செயற்பாடுகள் அதிகரித்துவருவதாகக் கூறியது. சி.என்.என் கூட தன்பங்கிற்கு இதுகுறித்த செய்திகளை அடிக்கடி ஒளிபரப்பியது. ஆப்கான் சென்ற சி.என்.என் செய்தியாளர் அங்கே யாருடைய வீட்டுச் சுவரிலோ மாட்டப்பட்டிருந்த நீர்வீழ்ச்சிப் படத்தைக் காட்டி, அல்-கைதாவின் தென் அமெரிக்கத் தாக்குதல் திட்டத்திற்கான ஆதாரமாக காட்டிப் பேசினார். உண்மையில் இந்த "நீர்வீழ்ச்சியின் கதை" புரியாத புதிராகவுள்ளது. இந்தப் புதிரின் முடிச்சை அவிழ்க்க தென்னமெரிக்கா சென்ற சில பத்திரிகையாளர்கள், எந்தவொரு அல்-கைதா நடமாட்டத்தையும் காணவில்லை. அவர்கள் கண்டதென்னவோ கள்ளச் சந்தை வியாபாரிகளை மட்டும்தான். அவ்விடத்தில் நீண்டகாலமாக வாழ்ந்து வரும் லெபனானிய குடியேறிகள் சிலர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். அமெரிக்காவின் விசமப் பிரச்சாரம் காரணமாக தற்போது அங்கே உல்லாசப் பிரயாணிகள் வருவது குறைந்து விட்டதாக உள்ளூர்வாசிகள் குறைப்பட்டனர்.

பத்திரிகையாளர்கள் துருவித்துருவி விசாரித்தபோது பல எதிர்பாராத தகவல்கள் கிடைத்தன. அந்த நீர்வீழ்ச்சிப் பிரதேசம் மிகப்பெரிய நல்ல தண்ணீர் சேமிப்பகத்தைக் கொண்டுள்ளது. பிரமாண்டமான நீர் மின்சார உற்பத்திச்சாலையும் இயங்கி வருகின்றது. உலகின் மூன்றாவது பெரிய சந்தையான தென் அமெரிக்கக் கண்டத்தின் மையத்தில் அந்தப் பிராந்தியம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மூன்றாம் உலகப்போர் தண்ணீருக்காக நடக்கலாம் என ஒரு எழுத்தாளர் எதிர்வு கூறினார். பெருகிவரும் உலகமக்கள் தொகைக்கு தேவையான தண்ணீர் கிடைப்பது வருங்காலத்தில் குறைந்து போகலாம். இதனால் தேசங்கடந்த வர்த்தக ஸ்தாபனங்கள் இப்போதே நீர்நிலைகளைக் கைப்பற்றப் போராடுகின்றன. தென்னமெரிக்க நீர்வீழ்ச்சியை வருங்காலத் தண்ணீர் வியாபாரத்திற்காகக் கைப்பற்றும் உள்நோக்கோடுதான் அல்-கைதாப் புரளி பரப்பப் பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்க இடமுண்டு.

இந்தோனிஷியாவில் அதிகளவு உல்லாசப் பிரயாணிகள் போகும், பாளித்தீவில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவம்கூட அல்-கைதாவின் கணக்கில் எழுதப்பட்டுள்ளது. மீண்டும் பின்லாடன் தனது வேலையைக் காட்டிவிட்டார் என்ற கருத்துப் பரப்பப்பட்டது. ஆனால், இந்தோனிசியாவில் அரச மட்டத்தில்கூட யாரும் இதை நம்பத் தயாரில்லை. எப்போதும் ஆளும்வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும், அமெரிக்காவைப் பின்பற்றும் வணிகப் பத்திரிகையொன்று, இது இந்தோனிஷியாவைச் சீர்குலைக்க அமெரிக்க சி.ஐ.ஏ யின் சதியென்று தலையங்கம் தீட்டியது. கிழக்குத் திமோர் சுதந்திர நாடாகிய காலத்திலிருந்து, இந்தோனிஷிய ஆளும் வர்க்கத்தின் மத்தியில் மேற்குலகு பற்றிய அவநம்பிக்கை, அதிருப்தி காணப்படுகின்றது. அதை நிச்சயப்படுத்துவது போல், உல்லாசப் பிரயாணிகளை இந்தோனிஷியாவைத் தவிர்க்குமாறு மேற்குலக அரசுகள் விடுத்த அறிவிப்புகள் கடுமையான கண்டனத்திற்குள்ளாகியது. "செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பின் அமெரிக்காவிற்குப் போக வேண்டாம்" என்று, தமது பிரஜைகளைத் தாம் அறிவுறுத்தவில்லையென்றும், அண்மையில் கூடிய ஆசியான் மகாநாட்டில் விசனம் தெரிவிக்கப்பட்டது.

விரும்பிய படியெல்லாம் தமது நலன்களுக்கு எதிரான நாடுகளை, இயக்கங்களை அல்கைதாவுடன் தொடர்பு படுத்திவிடுவது மேற்குலக நாடுகளின் வழக்கமாகிவிட்டது. மதசார்பற்ற ஈராக்கை அல்-கைதாவுடன் தொடர்புபடுத்த எடுத்த முயற்சிகள் தோல்வியைத் தழுவியுள்ளன. சொந்த நாட்டிலேயே யாரும் இதை நம்பத் தயாராயில்லை. இதே போல லெபனானிய ஹெஸ்புள்ளாவுடன், நேபாளிய மாவோயிஸ்டுக்களுடன் எல்லாம் தொடர்பு படுத்தி கதைகள் அவிழ்த்து விடப்பட்டன. இவற்றிற்கெல்லாம் எந்தவித ஆதாரமும் இல்லை. இதே நேரத்தில் ரஸ்யாவின் செச்சனியப் பிரிவினை வாதிகளுக்கும் அல்-கைதா இயக்கத்திற்குமிடையே உண்மையிலேயே தொடர்பிருப்பதை யாரும் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்படுகிறது. ரஸ்ய அரசு அவ்வப்போது அலறினாலும், இதை மேற்குலகச் செய்தியூடகங்கள் சிறுமைப் படுத்திவருகின்றன. ஆப்கானிஸ்தானில் வைத்து தலிபான் காலத்தில் செச்சனியப் போராளிகளுக்குப் பயிற்சியளிக்ப் பட்டதும், அல்-கைதாவின் அரபுப் போராளிகள் செச்சனியாவில் ரஸ்ய இராணுவத்தை எதிர்த்துச் சண்டையிட்டதும் மறுக்க முடியாத உண்மைகள்.

1998 வரை பின்லாடன் என்ற பெயரையும், 2001 வரை அல்-கைதா என்ற பெயரையும் உலகம் கேள்விப்பட்டிருக்கவில்லை. இந்தப் பெயர்களை உலகம் முழுக்க அறியச்செய்து பிரபலமாக்கியது சந்தேகத்திற்கிடமின்றி அமெரிக்க அரசுதான். இவ்வாறு தனது எதிரிகளுக்கு உலகப்புகழ் தேடிக்கொடுத்ததில் அமெரிக்க அரசுக்கு ஆதாயமில்லாமலில்லை. பனிப்போர்க் காலத்தில், சோவியத் யூனியனையும், "சர்வதேசக் கம்யூனிஸ்ட் சூழ்ச்சிகளையும்" காட்டி அரசியல் நடாத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்டுகள் என சந்தேகிக்கப்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். மேற்கைரோப்பாவில் நேட்டோ இராணுவம் அமைக்கப்பட்டு, ஆயுத உற்பத்தி விற்பனை அதிகரிக்கப்பட்டது.

உலகில் எந்தெந்த நாடுகளில் "கம்யூனிச அபாயம்" தோன்றியதோ, அங்கெல்லாம் அமெரிக்க இராணுவத் தலையீடு இடம்பெற்றது. தற்போது சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் கம்யூனிச அபாயமும் இல்லாமற் போய் விட்டது. அதன் அர்த்தம் எதிரிகள் இல்லையென்பது தான். ஆனால்,எதிரிகளற்ற சூழ்நிலையில் ஆயுத உற்பத்தி-விற்பனை நிறுவனங்கள் எவ்வாறு இலாபமடையமுடியும்? நோயாளிகள் பெருகினால் தானே, மருந்துக் கம்பனிகளுக்கு இலாபம் கிடைக்கும்? அதேபோல், போர்கள் நடந்தால், அல்லது உலகில் பாதுகாப்புப் பற்றிய அச்சம் நிலவும் வரையில், ஆயுதக் கம்பனிகளுக்கு ஆதாயம். எதிரிகளற்றுத் தவித்த அமெரிக்காவிற்கு, எங்கிருந்தோ வந்த பின்லாடனும் அல்-கைதா இயக்கமும் நிச்சயமாகத் திருப்தியைக் கொடுத்திருக்கும். முன்பு சோவியத் யூனியன் இருந்த இடத்திற்கு அல்-கைதாவும், கம்யூனிஸ்ட்டுகள் இருந்த இடத்திற்கு முஸ்லீம்களும் வந்து விட்டார்கள்.

பொதுவாக இந்தக்காலம் பின்லாடனை அல்லது அல்-கைதாவைப் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட செய்திகளே வந்த வண்ணமிருந்தாலும், அல்-கைதா அதிகம் அலட்டிக் கொள்ளத் தேவையற்ற ஒரு சிறு குழுவல்ல. தேசிய மட்டத்திற் செயற்படும் பிற ஆயுதபாணிக் குழுக்களிலிருந்து அல்-கைதா மாறுபட்டது. இதன் பெரும்பான்மையான உறுப்பினர்கள் சவூதி அரேபிய, எகிப்தியப் பிரஜைகளைக் கொண்டிருந்தபோதும், அவர்களது போராட்ட வாழ்வு தென்னாசியாவில் அரபு பேசாத ஆப்கானிஸ்தானில் ஆரம்பித்தது. ரஸ்யர்களின் அடக்குமுறையிலிருந்து முஸ்லீம் சகோதரர்களை விடுதலை செய்யும் நோக்கில் அங்கே போனவர்கள், இன்று ரஸ்ய இராணுவம்வெளியேறிவிட்ட நிலையில் உலகில் பிற முஸ்லீம் நாடுகள் மீது இயல்பாகவே தமது பார்வையைத் திருப்பினர்.

அன்று இவர்களின் தாய்நாடான சவூதி அரேபியாவிலும், எகிப்திலும் அமெரிக்க சார்பு ஆட்சியாளர்கள், "கடவுள் நம்பிக்கையற்ற" சோவியத் யூனியனை எதிரியாகக் காட்டி, போருக்கு அனுப்பி விட்டுக் கொண்டிருந்தார்கள். இன்று சோவியத் யூனியனின் அபாயம் கடந்த காலமாகிவிட்ட நிலையில், உள்நாட்டுப் பிரச்சினைகள் வெளியே தெரிய ஆரம்பிக்கின்றன. நாடு திரும்பிய ஆப்கான் போராளிகள், தமது நாட்டுச் சர்வாதிகார ஆட்சியாளர்கள் சொந்த மக்களை அடக்கியாண்டு வருவதையும், அதற்கு அமெரிக்கா துணையாகவிருப்பதையும் கண்டனர். இதுதான் அவர்களது கோபம் அமெரிக்காவிற்கு எதிராகத் திரும்பியதற்கான காரணம். மேலும் இன்னமும் தீர்க்கப்படாத பாலஸ்தீனப்பிரச்சனையும், இஸ்ரேலின் அடக்குமுறைகளுக்கு அமெரிக்கா நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி வருவதும் அவர்களது சீற்றத்தை அதிகரிக்கச் செய்தது.

ஒரே நாடென்றில்லாமல், பல நாடுகளிலிருந்து வந்த தொண்டர் படை உறுப்பினர்களை ஆப்கானில் வைத்துச் சந்தித்தவர்கள், தமது அனுபவங்களை, கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். அதன் அடிப்படையில் பொஸ்னியாவிலும், கொசோவாவிலும், செச்சனியாவிலும் முஸ்லீம் சகோதரர்களுக்கு உதவச் சென்ற அல்-கைதா ஒரு சர்வதேச இயக்கம் என்பதை நிரூபிக்கின்றது. இன்றுவரை இவர்களின் இயங்கு தளம் அரபு நாடுகளாகவும் மத்திய ஆசியாவாகவுமே இருந்து வருகின்றது. இந்த நாடுகளை அமெரிக்க மேலாண்மை அரசின் ஆதிக்கத்தில் இருந்து விடுதலை செய்வதையே தமது இலட்சியமாகக் கொண்டுள்ளனர். தமது போரை விரிவுபடுத்தி அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல் நடாத்தியிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. உலகில் மிகப்பெரிய வல்லரசுடன் மோத வேண்டியிருப்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. ஏனெனில் ஏற்கெனவே இன்னொரு வல்லரசான சோவியத் யூனியனுடன் மோதி அதை வீழ்த்திவிட்டதாக பெருமையோடு சொல்லித் திரிகின்றனர்.

(கலையரசன், 30.12.2002)

Saturday, March 26, 2011

விசேட அறிக்கை: மேற்குலகம் ஆதரிக்கும் லிபிய அல்கைதா

அமெரிக்க அரசுக்கு தெரிந்த ஒரு உண்மை, பொது மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்படுகின்றது. லிபியாவில் இடம்பெற்றது மக்கள் எழுச்சி அல்ல. மாறாக கடாபி அரசுக்கு எதிரான அல்கைதாவின் கிளர்ச்சி. ஏற்கனவே தொன்னூறுகளில் இதே கிழக்கு லிபிய பிரதேசத்தில் இடம்பெற்ற இஸ்லாமிய- மத அடிப்படைவாத சக்திகளின் கிளர்ச்சி அடக்கப்பட்டது. இன்று கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் உள்ள பெங்காசி நகரமும், அதன் சுற்று வட்டாரமும் அல்கைதா விசுவாசிகளைக் கொண்டது. ஈராக்கில் இஸ்லாமிய அரசமைக்கும் நோக்குடன் அனுப்பப்பட்ட லிபிய அல்கைதா உறுப்பினர்கள், இதே கிழக்கு லிபிய பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். அவர்களது பெயர், ஊர், பற்றிய விபரங்கள் ஏற்கனவே அமெரிக்க பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் உள்ளன. லிபியாவில் அல்கைதா கிளர்ச்சியை பாதுகாப்பதற்காக, நேட்டோ படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பிரான்ஸ் உட்பட சில மேற்கத்திய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட, "இடைக்கால அரசில்" அங்கம் வகிக்கும் அரைவாசிப் பேர் அல்கைதாவுடன் தொடர்புடைவர்கள். இவர்களது பெயர் விபரங்கள் "பாதுகாப்பு காரணங்களுக்காக" இன்னும் அறிவிக்கப் படவில்லை.

அக்டோபர் 2007, ஈராக்கில் சிரிய எல்லையோர நகரமான Sinjar ரில், அமெரிக்க படைகளின் இராணுவ நடவடிக்கையின் போது பல முக்கிய ஆவணங்கள் அகப்பட்டன. அமெரிக்காவை சேர்ந்த West Point Military Academy அந்த ஆவணங்களை ஆராய்ந்தது. ஈராக்கிற்கு எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்கைதாவினால் திரட்டப்பட்டனர், அவர்களின் ஊர், பெயர் விபரங்கள் அந்த ஆவணத்தில் இருந்துள்ளன.
அதிகமான போராளிகள் சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர்கள். அதற்கு அடுத்த இடத்தில் லிபியாவைச் சேர்ந்த, அதிலும் குறிப்பாக டார்ணா நகரைச் சேர்ந்த போராளிகளே அதிகம். பெங்காசிக்கும், தொவ்றுக் நகருக்கும் நடுவில் அமைந்துள்ள டார்ணா வெறும் எண்பதாயிரம் மக்கட்தொகையைக் கொண்டது. அந்த ஊரைச் சேர்ந்த 52 பேரது விபரங்கள் அந்த ஆவணத்தில் காணப்படுகின்றன. இன்று கிளர்ச்சிக் குழுக்களின் "சுதந்திர லிபியாவின் தலைநகரமான" பெங்காசியில் இருந்து 21 போராளிகள் சென்றுள்ளனர். ( West Point Military அகாடமி வெளியிட்ட அறிக்கையின் PDF கோப்பு இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது)

மேற்கத்திய தலையீட்டையும், நேட்டோ படைகளினால் லிபியா விடுதலை விடுதலை செய்யப் படுவதையும் கிளர்ச்சியாளர்கள் எதிர்த்ததில் வியப்பில்லை. கடும்போக்கு இஸ்லாமியவாதிகளான அவர்கள், அமெரிக்கர்களை கொல்வதற்காக ஈராக் சென்றவர்கள். தங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களின் ஆதரவை இழந்து விடும் அச்சம் காரணமாக மறுத்து விட்டார்கள். இருப்பினும் மக்கள் எழுச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே, எகிப்திய இராணுவ அரசு ஆயுதங்களை அனுப்பி வைத்தது. (
Egypt Said to Arm Libya Rebels, Wall Street Journal, March 17, 2011") கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் அனுப்பி உதவுமாறு, ஒபாமா சவூதி அரேபியாவை கேட்டுக் கொண்டார். (“America’s secret plan to arm Libya’s rebels,” Independent, Mach 7, 2011 )

லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக Libyan Islamic Fighting Group (LIFG) என்ற தலைமறைவு அமைப்பு இயங்கிக் கொண்டிருந்தது. 2007 ம் ஆண்டு, ஈராக்கில் அல்கைதா தொடர்பின் பின்னர் அது தனது பெயரை Al Qaeda in the Islamic Maghreb (AQIM) என்று மாற்றிக் கொண்டது.

Libyan rebel commander admits his fighters have al-Qaeda links

Thursday, June 24, 2010

"அல்கைதாவும் அமெரிக்காவும் நண்பர்கள்!" - ஒரு பயங்கரவாதியின் சாட்சியம்

"அல்கைதாவுடன் அமெரிக்காவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை." - பிடிபட்ட பயங்கரவாதியின் வாக்குமூலம். மேலும் ஈரான் போன்ற நாடுகளில் இயங்கி வரும், இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு அமெரிக்க அரசு ஆயுதங்களும், நிதி உதவியும் வழங்கி வந்துள்ளது. பெப்ரவரி மாதம் ஈரானில் பல பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பான "ஜன்டுல்லா" (அல்லாவின் சேனை) என்ற இயக்கத் தலைவர் கைது செய்யப்பட்டார். அவர் துபாயில் இருந்து கிரிகிஸ்தான் செல்லும் விமானத்தில் பறந்து கொண்டிருந்த பொழுது பிடிபட்டார். கிரிகிஸ்தான் மனாஸ் அமெரிக்க இராணுவ முகாமில் ஒரு முக்கிய புள்ளியை சந்திப்பதற்காக சென்று கொண்டிருந்த பொழுது, விமானம் ஈரானில் பலவந்தமாக தரையிறக்கப்பட்டது. ஜன்டுல்லா தலைவர் ரிகி கைது செய்யப்பட்டு நான்கு மாதங்களின் பின்னர் தூக்கில் இடப்பட்டார்.
இங்கேயுள்ள வீடியோவில் பிடிபட்ட ஜன்டுல்லா தலைவர் ரிகியின் வாக்குமூலம் பதிவாகி உள்ளது.


இது குறித்து கலையகத்தில் ஏற்கனவே வந்த செய்தி:
ஈரானிற்குள் சி.ஐ.ஏ. நடத்தும் இரகசிய யுத்தம்

Sunday, February 21, 2010

ஈழத்தில் இடி முழங்கினால் யேமனில் மழை பொழிகிறது

["அரபிக்கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்" தொடரின் இறுதிப் பகுதி.]
29 டிசம்பர் 2009 ல், கிரேக்க எண்ணைக் கப்பல் ஒன்றும், பிரிட்டிஷ் இரசாயனக் கப்பல் ஒன்றும், சோமாலியக் கடற்கொள்ளையரால் கைப்பற்றப்பட்டன. இது குறித்து ரஷ்ய RAI Novosti செய்திச் சேவையும், பிரிட்டிஷ் பத்திரிகையான The Times சும் அறிவித்திருந்தன.
2009 ம் ஆண்டு, சோமாலியாவுக்கும், யேமனுக்கும் இடையிலான கடற்பரப்பில் 174 கடற்கொள்ளை முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 42 தாக்குதல்கள் எண்ணெய்க் கப்பல்களை இலக்கு வைத்து நடந்துள்ளன. 35 கப்பல்கள் கடத்திச் செல்லப்பட்டன. சர்வதேச நாடுகளின் கடற்படைகளின் ரோந்துக்கு நடுவில் இந்த சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடற்கொள்ளையை தடுப்பதற்காக, ஏடன் வளைகுடாவில் சீனா நிரந்தர கடற்படைத் தளம் அமைக்க விரும்பியது. சீன கடற்படைத் தளபதி யின் சூ இந்தக் கோரிக்கையை முன் வைத்தார். (பார்க்க:China To Establish A Naval Base Around Somalia) நிச்சயமாக, இந்த யோசனையை மேற்குலக நாடுகள் விரும்பவில்லை. ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில், சீன, இந்திய கடற்படைக் கப்பல்கள், கடற்கொள்ளைக்காரர்களை கடலில் வைத்து விரட்டி அடித்துள்ளன. இந்த சம்பவங்கள் யாவும், அந் நாடுகளின் இறையாண்மைக்குட்பட்ட கடல் எல்லையில் இருந்து வெகு தூரத்தில் இடம்பெற்றுள்ளன.

1995 ம் ஆண்டிலிருந்து, இலங்கையில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப்படையினர், கடற்படையினரின் கப்பல்களை வெடிமருந்து நிரப்பிய படகால் மோதி நாசப்படுத்தினர். இலங்கையின் வட-கிழக்கு கரையோரம், குறிப்பாக திருகோணமலை துறைமுகத்திற்கு அருகாமையில் சில யுத்தக் கப்பல்கள் தாக்கி அழிக்கப்பட்டன. 2000 ம் ஆண்டு, யேமன் நாட்டின் ஏடன் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்ற USS Cole யுத்தக் கப்பலை, அல்கைதாவின் தற்கொலைப் படகு தாக்கி சேதப்படுத்தியது. 2002 ம் ஆண்டுக்குப் பின்னரான சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில், புலிகளின் பேச்சாளர் தமிழ்ச்செல்வனின் கூற்று ஒன்று சர்வதேசத்தின் கவனத்தைப் பெற்றது. ("எமது தற்கொலைத் தாக்குதல் செய்முறைகளை அல்கைதா பின்பற்றியது..." ஏடன் USS Cole தாக்குதலை சுட்டிக் காட்டி தமிழ்ச்செல்வன் வழங்கிய நேர்காணல்.) (Thamilchelvan, The “Smiling” Face of LTTE) ஈழத்தில் இடி முழங்கினால், யேமனில் மழை பெய்தது!

உலகில் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படாத வேறு வேறு நாடுகளில் நடைபெற்ற ஒரே மாதிரியான சம்பவங்களை சர்வதேச அரசியல் முடிச்சுப் போட்டது. ஏடனிலும், திருகோணமலையிலும் நடைபெற்ற தாக்குதல் அமெரிக்காவிலும், சீனாவிலும் எதிரொலித்தது. இரு நாடுகளினதும் கொள்கை வகுப்பாளர்கள், "சர்வதேச கடற் போக்குவரத்து எதிர்நோக்கும் அபாயம்" குறித்து அறிக்கைகளை தயாரித்தார்கள். மிக முக்கியமாக வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றுமதி ஏற்றிச் செல்லும் கப்பல்களின் பாதுகாப்பு குறித்து ஆராயப்பட்டது. அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் விட, வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட சீனாவும், இந்தியாவும் நுகரும் எண்ணெயின் அளவு அதிகரித்துச் செல்கின்றது. வளைகுடா நாடுகளில் இருந்து தென் சீனக் கடல் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் தவிர்க்கவியலாது இலங்கையை சுற்றியே செல்ல வேண்டும். இலங்கை, அம்பாந்தோட்டையில் சீனா கட்டி வரும் துறைமுகம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளையும் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் சீனக் கடற்படை அங்கே தளமமைக்கவும் சாத்தியமுண்டு. (China's Sri Lanka port raises concern)

சீனா, "முத்து மாலை" திட்டத்தின் கீழ், பர்மா, பங்களாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளிலும் கடற்போக்குவரத்து பாதுகாப்பு தளங்களை அமைக்க ஏற்பாடுகளை செய்து விட்டது. ஆனால் இந்து சமுத்திரத்தின் மேற்குக் கரையில் அமைந்திருக்கும் அரபி நாடுகளில் சீனா செல்வாக்கு செலுத்துவது சாத்தியமில்லை. ஈரான், சூடான் ஆகிய நாடுகள் சீனாவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நட்பு நாடுகள். இருப்பினும் அரபிக்கடல் நாடுகள் யாவும் அமெரிக்க சார்பானவையாக இருப்பது சிக்கலை உருவாக்கி விட்டுள்ளது. வளைகுடா நாடுகள் விற்கும் எண்ணெய் குறுகலான ஹொர்முஸ் (Hormuz) ஜலசந்தியைக் கடந்து வர வேண்டும். ஒமானுக்கு சொந்தமான ஹொர்முஸ் முனை அமெரிக்காவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் உள்ளது.

இதற்கு மாற்று வழி ஒன்றுள்ளது. மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சவூதி அரேபியாவில் இருந்து வாங்கும் எண்ணெயும், சீனாவின் அரபுத் தோழன் சூடான் வழங்கும் எண்ணெயும், செங்கடல் வழியாக கொண்டு வரப்பட முடியும். ஆனால் எண்ணெய்த் தாங்கிக் கப்பல்கள் யாவும் பாப் எல் மன்டப் (Bab el Mandab) என்ற குறுகலான ஜலசந்தியை தாண்டி வர வேண்டும். யேமனுக்கும், ஜிபூத்திக்கும் நடுவில் உள்ள, 18 மைல் நீளமான கடல் பாதை 'பாப் எல் மன்டப்'. இதன் அருகில் தான் சோமாலியா அமைந்துள்ளது. இதனால் சோமாலியா கடற்கொள்ளையரால் தாக்கப்படும் ஆபத்து அதிகம். குட்டி நாடான ஜிபூத்தியின் குடிமக்களும் சோமாலியர் தான். முன்னாள் பிரெஞ்சுக் காலனியான ஜிபூத்தியில், நிரந்தரமான பிரெஞ்சு இராணுவ தளம் உண்டு. அங்குள்ள பிரெஞ்சுப் படையினரின் வேலை, பாப் அல் மன்டப் பாதையால் செல்லும் எண்ணெய்க் கப்பல்களை கண்காணிப்பது.

யேமனில் அல்கைதாவின் பிரசன்னத்தை மிகைப்படுத்திக் காட்டுவதன் மூலம், அந்த நாட்டில் நிரந்தர இராணுவ தளம் அமைக்க அமெரிக்கா விரும்புகின்றது. நிதி நெருக்கடியால் அமெரிக்கப் பொருளாதாரம் தள்ளாடிய போதிலும், அமெரிக்க இராணுவம் இன்றும் உலகில் பலம் வாய்ந்ததாகவே விளங்குகின்றது. கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பாப் எல் மன்டப் ஜலசந்தியை அமெரிக்கக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதில் பல பொருளாதார நன்மைகள் உள்ளன. சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் மேலாண்மையை நிலைநாட்டவும் இது உதவும். யேமனில் அமெரிக்க தலையீட்டினால், எதிர்காலத்தில் உலகில் ஏற்படப் போகும் மாற்றங்கள் என்ன?

"முத்து மாலை" திட்டத்தின் கீழ் இந்து சமுத்திரத்தில் தளங்களை அமைக்க விரும்பும் சீனாவின் நோக்கம் தடைப்படும். உலகில் அதிக எரிபொருள் நுகரும் நாடான சீனா, அமெரிக்க தயவில் தங்கியிருக்க வேண்டும். சூடானும், சவூதி அரேபியாவும் அமெரிக்காவை புறக்கணித்து விட்டு சீனாவுக்கு எண்ணெய் விற்க முடியாது. பாப் எல் மன்டப் ஜலசந்தியை மூடி விட்டால், எந்தவொரு கப்பலும் அரபிக்கடலை அடைய முடியாது. மறுபக்கத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கும் இது ஒரு எச்சரிக்கை.

உலகின் அதிகளவு எண்ணையை ஏற்றுமதி செய்யும் குவைத், அபுதாபி, ஈராக் எல்லாம் பாரசீக வளைகுடாக் கடலை ஒட்டி அமைந்துள்ளன. இந்த நாடுகளில் இருந்து எண்ணெய் ஏற்றி செல்லும் கப்பல்கள், ஹொர்முஸ் முனையை கடந்து, பாப் எல் மன்டப் ஊடாக சுயஸ் கால்வாயை அடைய வேண்டும். அந்தக் கப்பல்கள் ஐரோப்பாவிற்கான பயணத்தை சுயஸ் கால்வாய் ஊடாக தொடர வேண்டும். ஒரு வேளை, "யேமன் அல்கைதா பிரச்சினை" காரணமாக பாப் எல் மன்டப் பாதை மூடப்படுகிறது என வைத்துக் கொள்வோம். அப்படியாயின், அனைத்து எண்ணெய்க் கப்பல்களும் 6000 மைல் பயணம் செய்து, ஆப்பிரிக்க கண்டத்தை சுற்றியே செல்ல வேண்டும்.

யேமனின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் மட்டும் அமெரிக்காவின் தலையீட்டுக்கு காரணமல்ல. முன்னொரு காலத்தில் கம்யூனிச நாடாக இருந்த தென் யேமனின் ஏடன் நகரில் சோவியத் படைத் தளம் ஒன்று இருந்தது. இன்றைய ரஷ்யாவின் "புட்டின்/மெட்வெடேவ் நிர்வாகம்" பழைய வெளிநாட்டு தளங்களை புதுப்பிக்க விரும்புகின்றது. சிரியாவில் மீண்டும் ரஷ்ய இராணுவ தளம் வரும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ஏடனில் தளம் அமைப்பது தொடர்பாக, ரஷ்யா யேமன் அரசை கேட்டிருக்க வாய்ப்புண்டு. இதற்கிடையே அமெரிக்கா முந்திக் கொள்ள நினைத்திருக்கலாம்.

மேலும் யேமனில் தற்போது பாவனையில் உள்ளதை விட, இன்னும் அதிகளவு எண்ணைப் படுகைகள் அகழப்படாமல் உள்ளன. Total போன்ற பன்னாட்டு எண்ணெய்க் கம்பனிகள் மசினா, ஷப்வா ஆகிய இடங்களில் எண்ணை காணப்படுவதாக அறிக்கை சமர்ப்பித்துள்ளன. எண்ணைக் கம்பனிகளுக்கு பாதுகாப்புக்காக அமெரிக்க இராணுவம் யேமனில் நிலை கொள்ளலாம். வருங்காலத்தில் யேமன் மண்ணின் மைந்தர்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து போரிடலாம். ஆனால் அதையெல்லாம் "அல்கைதா பயங்கரவாதம்" என்ற தலைப்பின் கீழ் செய்தி வெளியிட, சர்வதேச ஊடகங்கள் காத்திருக்கின்றன.

(முற்றும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

மேலதிக தகவல்களுக்கு:

Yemen and The Militarization of Strategic Waterways

Friday, February 19, 2010

வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது, அல்கைதா பாய்கிறது!

["அரபிக் கடலோரம் அல்கைதா வேட்டை ஆரம்பம்" - தொடரின் இரண்டாம் பகுதி]
யேமன் நாட்டின் தென் பகுதி இயற்கை வளம் நிறைந்தது. சனத்தொகை அடர்த்தியும் மிகக்குறைவு. இருப்பினும் தென்னகத்து மக்களுக்கு ஒரு பெருங் குறை இருந்தது. "வடக்கு வளர்கிறது. தெற்கு தேய்கிறது." போன்ற கோஷமெல்லாம் அங்கே பிரபலம். சிலர் இதனை பிராந்தியவாதம் என அழைக்கலாம். எனினும் அவர்கள் தமது நலன்கள் குறித்து கவலைப்படுவது தவறாகத் தெரியவில்லை. எண்ணெய்க் கிணறுகள் தெற்கில் இருந்தன. எண்ணெய் ஏற்றுமதி செய்து வரும் வருமானம் நேரே வடக்கே சானாவில் இருக்கும் அரச கஜானாவிற்கு சென்றது. தலைநகர் சானாவின் நிர்வாகம், சாலே என்ற சர்வாதிகாரியின் கைக்குள் இருக்கிறது. ஊழல் குறித்து பிறிதாக பாடம் எடுக்கத் தேவையில்லை.

பொறுத்துப் பார்த்து, வெறுத்துப் போன தென்னக மக்கள் பொங்கி எழுந்தார்கள். அரசுக்கெதிரான தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்கள் பெருகின. சில ஊர்வலங்கள், பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்தால் கலைக்கப்பட்டன. அரச அடக்குமுறைக்கு சிலர் பலியானதாகவும் தகவல். இருப்பினும் இந்த தகவல் எதுவும் சர்வதேச ஊடகங்களின் காதுகளை எட்டவில்லை. செய்தி அவர்களுக்கு போய்ச் சேர்ந்திருக்கும். ஆனால் எப்படி அதை வெளியிடுவது? "ஒரு அரபு-இஸ்லாமிய நாடென்றால், அங்கே அல்கைதா பிரச்சினை மட்டுமே இருக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறோம். இப்போது யேமன் மக்கள் பொருளாதார பிரச்சினைகளுக்காக போராடுகிறார்கள் என்று சொன்னால் யார் நம்புவார்கள்?"

தென் யேமெனின் முக்கிய நகரான எடெனில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் அல் பத்லி (Al Fadhli) போன்ற அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்டமை, அரசின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. பிரபல ஜிகாத் போராளியான அல் பத்லி முன்னர் அரச ஆதரவு கூலிப்படை ஒன்றை தலைமை தாங்கியவர். ஜனாதிபதி சாலேக்கு மிக நெருக்கமானவர். முன்னர் தென் பிராந்திய கிளர்ச்சியை அடக்குவதில் முன் நின்றவர். அப்படிப்பட்ட ஒருவர் தற்போது அரசை விட்டு விலகி, எதிரணியான தென்னக இயக்கத்தில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்க நிகழ்வு.
தனக்கு நாடளாவிய ஜிகாத் போராளிகளுடன் தொடர்பு இருந்த போதிலும், அல்கைதாவுக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை எனக் கூறியுள்ளார். பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய அல் பத்லி: "தென்னகப் பகுதிகள் வடக்கத்தயர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தெற்கு யேமேனின் சுதந்திரமே உயிர்மூச்சு." என்றெல்லாம் பிரதேசவாதிகளின் மொழியில் பேசியுள்ளார். என்ன அதிசயம். இந்த உரைக்கு அடுத்த சில தினங்களில், அல் கைதா தென்னக மக்களின் உரிமைப் போருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

1990 ம் ஆண்டு வரை, உலகத்தில் இரண்டு 'யேமன்' கள் இருந்தன. வடக்கே இஸ்லாமிய - முதலாளித்துவ "யேமன் அரபுக் குடியரசு". தெற்கே மதச்சார்பற்ற - கம்யூனிச "யேமன் மக்கள் ஜனநாயகக் குடியரசு". இரண்டுக்கும் இடையில் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம். அரபு தேசியவாதம், இஸ்லாமிய பழமைவாதம், அரை-நிலப்பிரபுத்துவ சமுதாயம், முதலாளித்துவ பொருளாதாரம் என்பன, யேமன் அரபுக் குடியரசின் கொள்கைகளாக இருந்தன. அங்கே சனத்தொகை பெருக்கம் அதிகம். அதே போல கல்வியறிவற்றவர்களின் தொகையும் அதிகம்.

இதற்கு மாறாக தென் யேமன் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் வளர்ச்சியடைந்த பிரதேசமாக இருந்தது. நிலப்பரப்பால் பெரிதானாலும், சனத்தொகை மிகக் குறைவு. காலனித்துவ கல்வி, உலகளாவிய சிந்தனை கொண்ட நடுத்தர வர்க்கத்தை உருவாக்கி இருந்தது. அதுவே பின்னர் மார்க்சிய சித்தாந்தம் பரவ காரணமாயிற்று. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிரான விடுதலைப் போராட்டம் தென் யேமெனில் தான் வீறு கொண்டு எழுந்தது. சுதந்திரத்திற்கு பின்னர் கம்யூனிசக் கட்சி ஆட்சிக்கு வந்தது. சோவியத் யூனியனின் உதவியுடன் மார்க்சிச-லெனினிச அரசை நிறுவியது. கம்யூனிஸ்ட்கள் என்பதால் மக்கள் மசூதிக்கு செல்வதை தடை செய்யவில்லை. ஆனால் மசூதிகளை கட்டுவதை விட, பாடசாலைகளை கட்டுவதில் ஆர்வம் காட்டினர். இதனால் எழுத்தறிவு பெற்றோர் தொகை அதிகரித்தது. 1990 ம் ஆண்டு, சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன், அந்நிய நாட்டு கடன்கள் வருவது நின்றது. சர்வதேச வர்த்தகம் தடைப்பட்டது. தவிர்க்கவியலாது, ஒன்றிணைந்த யேமன் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.

1990 ல் ஒன்றிணைந்த யேமன் குடியரசு ஜனாதிபதியாக, வட யேமன் அரபுக் குடியரசின் சர்வாதிகாரி சாலே தெரிவானார். தென் யேமன் கம்யூனிசக் கட்சி, சோஷலிசக் கட்சி என பெயர் மாற்றம் செய்து கொண்டு, ''சானா"வை தலைநகரமாகக் கொண்ட பாராளுமன்றத்தில் அமர்ந்தது. ஒன்றிணைந்த யேமன் குறித்த எதிர்பார்ப்புகள் யாவும் ஒரு சில மாதங்களிலேயே தவிடுபொடியாயின. 1978 ம் ஆண்டில் இருந்து வட- யேமனை இரும்புக்கரம் கொண்டு ஆண்டு வரும் சாலே என்ற சர்வாதிகாரியின் அதிகாரம், தற்போது தெற்கு வரை வியாபித்தது. சாலேயின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட பதவிகள், சலுகைகள், மேலும் அதிகரித்தனவே தவிரக் குறையவில்லை. தென்னகத்தை சேர்ந்த முன்னாள் அதிகார வர்க்கம் (கம்யூனிசக் கட்சியை சேர்ந்தவர்கள்), வெறும் பார்வையாளர் நிலைக்கு தள்ளப்பட்டது.

யேமன் நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் தெற்கே ஏடன் நகரில் அமைந்திருந்தது. அதை விட, எண்ணெய்க் கிணறுகள் அனைத்தும் ஏடன் வளைகுடாப் பகுதிகளிலேயே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்விரண்டு துறைகளும் அதிக வருமானத்தை ஈட்டித்தரும் பொக்கிஷங்கள். யேமன் பொருளாதாரத்தில் பெருமளவு பங்களிப்பை ஆற்றி வருகின்றன. ஆனால் ஒன்றிணைப்பின் பின்னர், அனைத்து வருமானமும் வடக்கே உள்ள தலைநகர் சானாவை நோக்கி திசை திருப்பப்பட்டன. ஒப்பந்தத்தில் வாக்களித்தபடி, தென்னக பிரதேசங்களின் அபிவிருத்திக்கு செலவிடப்படவில்லை. வடக்கு - தெற்கு பிரச்சினை முற்றி, வன்முறையில் முடிந்தது. தெற்கு யேமன் மீண்டும் சுதந்திரப் பிரகடனம் செய்தது. வடக்கத்திய இராணுவம் தெற்கிற்கு படையெடுத்து சென்றது. கடுமையான யுத்தத்தின் பின்னர், தென்னக கிளர்ச்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். வட யேமன் இராணுவத்திற்கு சவூதி அரேபியாவும், அமெரிக்காவும் ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தன. முன்னாள் ஆப்கான் ஜிகாத் வீரர்களும் கூலிப்படையாக செயற்பட்டனர்.

அரசியலில் எதுவும் நிலையானதல்ல. நேற்றைய பகைவர்கள் இன்று நண்பர்கள். நேற்றைய நண்பர்கள் இன்று எதிரிகள். அன்று ஜிகாத் வீரர்கள், யேமன் அரசுடன் கூட்டுச் சேர்ந்து, தென்னக பிரிவினைவாதிகளை எதிர்த்து போரிட்டார்கள். (பிராந்தியத்தின் பொருளாதார நலன் குறித்து பேசுவது இஸ்லாத்தை பலவீனப்படுத்தி விடுமாம்.) இன்று அல் பத்லி தலைமையிலான ஜிகாத் வீரர்கள், தென்னக பிரிவினைவாதிகளுடன் இணைந்து அரசுக்கு எதிராக போராடுகிறார்கள். இஸ்லாமியவாதிகள் இடதுசாரிகளாகி விட்டதால் இந்த கொள்கை மாற்றம் ஏற்படவில்லை. ஆட்சியில் இருக்கும் சாலே, தனது பகைவர்களை தானே அதிகரித்துக் கொண்டிருக்கிறார். வடக்கே ஷியா முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த ஹூதி இயக்கத்துடன் போர். தெற்கே சுயநிர்ணைய உரிமை கோரும் சோஷலிஸ்ட்களின் நெருக்கடி. இவர்களுக்கு நடுவில் அல்கைதா என்ற பெயரைக் காட்டியே பயமுறுத்திக் கொண்டிருக்கும் இஸ்லாமியவாதிகள். சாலேயின் அரசு, மும்முனைப் போரை சமாளிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா ஓடோடி வந்து முண்டு கொடுத்திராவிட்டால், சாலேயும் எப்போதோ சதாமின் வழியில் சமாதியாகி இருப்பார்.

இதற்கிடையே யேமனின் அயல்நாடான சோமாலியாவும் குட்டையைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான சோமாலியப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம் (Supreme Islamic Council of Somalia ), யேமன் சகோதரர்களுக்கு உதவப் போவதாக தெரிவித்தது. ஏற்கனவே சோமாலியா அகதிகளுக்கு யேமன் புகலிடம் அளித்துள்ளது. தற்போது இந்த அகதிகளில் எத்தனை பேர் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று தெரியாமல், அமெரிக்காவும், யேமனும் முழிக்கின்றன. ஜனவரி மாதம், சோமாலியாவின் ஜனாதிபதி ஷேக் ஷெரிப், யேமன் ஜனாதிபதி சாலேயுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தனது நாட்டில் அல்கைதாவின் (அல்லது இஸ்லாமியத் தீவிரவாதிகளின்) நடமாட்டம் குறித்து உளவறிந்து அறிவிப்பதாக உறுதியளித்தார். சோமாலியா ஜனாதிபதியின் அதிகாரம், "மொகாடிஷு விமான நிலைய சுற்றுவட்டாரத்தில் மட்டுமே செல்லுபடியாகும். இப்படியானவர்கள் தான் சாலேக்கு நண்பர்களாக வாய்த்திருக்கிறார்கள்.

யேமனுக்கு அருகில் சோமாலியக் கடற்கொள்ளையர்களின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகின்றது. கடற்கொள்ளையர்கள், உலகில் மிகவும் வறுமையான, அரச நிர்வாகமற்ற சோமாலியாவை சேர்ந்தவர்கள். சிறு குழுக்களாக இயங்கும் சோமாலியா கடற்கொள்ளையர்கள், பிரமாண்டமான எண்ணெய்த் தாங்கிக் கப்பல்களை கடத்திச் சென்றிருக்கிறார்கள். உலகமே இந்த செய்திகளை 'ஆ' என்று வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தது. சுவாரஸ்யமாக, "நைஜீரிய அல்கைதா தீவிரவாதி" அமெரிக்க விமானத்தில் குண்டு வைக்க முயற்சித்த, அதே டிசம்பர் மாதம் இப்படியான சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஒரு சிறு ஆயுதமேந்திய குழுவால், பென்னம்பெரிய கப்பல்களை எப்படிக் கடத்த முடிகின்றது? கடற்கொள்ளையர் கைகளில் நவீன ஆயுதங்கள் எப்படி வந்தன? சோமாலியாக் கடற்கொள்ளையருக்கும், யேமன் நாட்டு அரசியல் குழப்பங்களுக்கும் இடையில் என்ன தொடர்பு? யேமன், சோமாலியா ஆகிய ஏழை நாடுகள் மீது, சர்வதேச சமூகத்திற்கு ஏன் அவ்வளவு அக்கறை?

(தொடரும்)

இந்தத் தொடரின் முதலாவது பகுதியை வாசிக்க:

_____________________________________________________________________
மேலதிக தகவல்களுக்கு:

Fault line that allows al-Qa'ida to flourish in Yemen

Free Aden,Towards The Liberation of South Arabia
When Terrorists and Pirates Merge