Showing posts with label ஷியா. Show all posts
Showing posts with label ஷியா. Show all posts

Friday, January 24, 2020

ஈரான் மசூதி உச்சியில் செங்கொடி பறப்பது ஏன்?


நவீன கால வரலாற்றில் முதல் தடவையாக, ஈரானில் ஷியா மதத்தவரின் போர்ப் பிரகடனமாகக் கருதப்படும் செங்கொடி பறக்கிறது. அதன் அர்த்தம், ஈராக்கில் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானியின் கொலைக்கு பழிக்குப் பழி வாங்கும் யுத்தம் வெகுவிரைவில் தொடங்கும். கவனிக்கவும்: எண்பதுகளில் ஈரான் - ஈராக் போர் நடந்த காலத்தில் கூட இந்தக் கொடி பறக்க விடப் படவில்லை.

ஈரானின் ஷியா மதப்பிரிவினரின் ஆன்மீகத் தலைநகரமான கோம் நகரில் உள்ள புனித ஸ்தலமான ஜம்கரன் (Jamkaran) மசூதியின் உச்சியில் இந்த செங்கொடி ஏற்றப் பட்டது. தெஹ்ரான் அரசியல் தலைநகரமாக இருந்த போதிலும், ஷியாக்களின் உயர் மதத்தலைவராக கருதப்படும் ஆயத்துல்லா இந்தக் கோம் நகரில் இருந்து தான் ஆட்சிபரிபாலனத்தை கவனிப்பார். ஆகவே இதன் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது. இந்த சம்பவம் நவீன உலக வரலாற்றில் இதற்கு முன்னர் ஒருபோதும் நடந்ததில்லை. இதில் உள்ள விசேஷம் என்ன?

இஸ்லாமிய ஷியா மதப் பிரிவினரை பொறுத்தவரையில் இந்த செங்கொடி ஒரு வரலாற்று துயரத்தை குறிப்பால் உணர்த்துகிறது. ஷியா முஸ்லிம்களின் வரலாற்றில் முதல் தடவையாக, அவர்களால் முதலாவது இமாம் என மதிக்கப்படும் ஹுசைன் தூக்கிப் பிடித்த கொடி அது. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர், இஸ்லாமிய ராஜ்ஜியத்தை ஆண்ட கலீபாக்களால் இறைதூதர் முகமதுவின் மகள் பாத்திமாவும், அவரது கணவன் அலியும் சதி செய்து கொல்லப் பட்டனர். அவர்களது மகன் ஹுசைன் குருதியில் நனைந்த செங்கொடி ஏந்தி, ஆட்சியாளரின் அநீதிக்கும், அராஜகத்திற்கும் எதிராக நீதியை நிலைநாட்டுவதற்கான போராட்டம் நடத்தினார். அதனால் இந்த செங்கொடி "ஹுசைனின் கொடி" என்றும் அழைக்கப் படுகின்றது. ஷியா இஸ்லாமியரைப் பொறுத்தவரையில் இது ஓர் உணர்வுபூர்வமான விடயம். இது ஒரு வகையில் நீதியை நிலைநாட்டும் போராட்டத்திற்கான அறைகூவலாகவும், கோழைத்தனமாக படுகொலை செய்த பகைவர்களின் பழி தீர்ப்பதற்கான மதக் கடமையாகவும்  கருதப் படுகின்றது.

இன்றைய நிலைமையை புரிந்து கொள்வதற்கு நாம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டும். இஸ்லாமிய மதம் பரவிய ஆரம்ப காலங்களில், 632 ம் ஆண்டு இறைதூதர் முகமதுவின் மறைவுக்குப் பின்னர், இஸ்லாமிய அகிலத்திற்கு யார் தலைமை தாங்குவது என்ற பிரச்சினை எழுந்தது. குறிப்பாக இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு வன்முறையில் முடிந்தது. இஸ்லாமிய அகிலத்தின் தலைமைப் பதவிக்கு, அதாவது கலீபாவாக முகமதுவின் ஆருயிர் நண்பர் அபூபக்கர் பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டார். இருப்பினும் முகமதுவின் மருமகன் அலியின் தலைமையை பின்பற்றிய குழுவினர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஷியாத் அலி (அலியின் கட்சியினர்) என்று அழைக்கப் பட்டனர். அதிலிருந்து தான் பிற்காலத்தில் ஷியா மதப் பிரிவு உருவானது.

அலி ஆதரவுக் குழுவினர், இறைதூதர் முகமதுவின் மகள் பாத்திமாவின் கணவர் என்ற வகையில், அவரது மருகனான அலிக்கு தான் தலைமைப் பதவி கிடைக்க வேண்டும் என்று வாதாடினார்கள். இந்த நெருக்கடிக்கு மத்தியில் பாத்திமா மர்மமான முறையில் மரணமுற்றார். அங்கு நடந்த வன்முறைகள், சூழ்ச்சிகள் காரணமாக, அபூபக்கர் ஒரு சதிப்புரட்சி மூலம் கலீபா பதவிக்கு வந்ததாக அலியின் ஆதரவாளர்கள் கருதினார்கள். இருப்பினும், இரண்டு வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்த அபூபக்கர் காலத்திலும், அதற்குப் பின்னர் ஒரு வருடம் கலீபாவாக இருந்து ஓர் அடிமையால் கொல்லப்பட்ட ஒமார் காலத்திலும், ஆட்சியாளர்களுக்கு அலியின் நிபந்தனையற்ற ஆதரவு இருந்து வந்தது. உண்மையில் அலி தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய கலீபாப் பதவிக்காக பொறுமையுடன் காத்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

இருப்பினும், ஒமாருக்கு அடுத்ததாக ஒத்மான் கலீபாவாக பதவியேற்றதற்கு பின்னரான காலத்தில் அலியின் ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்தனர். அதற்குக் காரணம், ஒத்மானின் எதேச்சாதிகாரம். அவர் தனது உறவினர்கள், நண்பர்களுக்கு அரச பதவிகளை கொடுத்து அதிகாரத்தில் வைத்திருந்தார். அத்துடன் முன்பு இறைதூதர் முகமதுவை எதிர்த்துப் போரிட்ட குற்றத்திற்காக நாடுகடத்தப் பட்ட இனக்குழுக்களையும் கூப்பிட்டு சேர்த்துக் கொண்டார். இதனால் குடிமக்கள் கலகம் செய்தனர். கலீபாவின் வீட்டை முற்றுகையிட்ட ஒரு கும்பல் ஒத்மானை பிடித்துக் கொன்று விட்டது. அன்று கலீபா ஒத்மானின் கொடுங்கோன்மைக்கு எதிராக கிளர்ந்தெழுந்தவர்கள் மத்தியில் ஷியாக்கள் இருந்தனர்.

இன்றைக்கும் ஷியா- இஸ்லாமிய மத நிறுவனமானது அடிமட்ட மக்கள் சக்தியில் நம்பிக்கை கொண்டு இயங்கி வருகின்றது. அதனால் தான், ஈரானில் 1979 ம் ஆண்டு நடந்த மக்கள் எழுச்சியை இஸ்லாமியப் புரட்சியாக மாற்ற முடிந்தது. அன்று பல்வேறு இடதுசாரிக் கட்சிகள் முன்னெடுத்த பொதுவுடைமைக்கான வர்க்கப் புரட்சியை, ஆயத்துல்லா கொமெய்னி தந்திரமாக சுவீகரித்து மத அடிப்படைவாத இஸ்லாமியப் புரட்சியாக மடைமாற்றியது ஒரு தனிக்கதை. (புரட்சிக்குப் பின்னரும் சில வருட காலம் இடதுசாரிகளும், மதவாதிகளும் கூட்டணி வைத்திருந்தனர்.)

இந்த இடத்தில் சன்னி முஸ்லிம் பிரிவினருக்கும், ஷியா முஸ்லிம் பிரிவினருக்கும் இடையிலான சமூகப் பின்னணியையும் கவனிக்க வேண்டும். சன்னி முஸ்லிம் பிரிவினர் ஒரு வகையில் மேலைத்தேய கலாச்சார மரபை பின்பற்றினார்கள் எனலாம். அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதில் நவீன காலத்து குடியரசு முறையை பின்பற்றினாலும், அரசு, ஆளும் வர்க்கம் போன்றவற்றில் விட்டுக்கொடாத தன்மையை கொண்டிருந்தனர். அதற்கு மாறாக ஷியா முஸ்லிம் பிரிவினர் கீழைத்தேய மரபை பின்பற்றினார்கள் எனலாம். அவர்களைப் பொறுத்தவரையில், அரசியல் தலைமைக்கு தகுதியான நபர் அரச பரம்பரை போன்று வாரிசு முறையில் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். அத்துடன், அரசு, ஆளும் வர்க்கம் போன்றவற்றிற்கு பதிலாக அனைவராலும் அங்கீகரிக்கப் பட்ட ஓர் ஆன்மீகத் தலைவரே, அரசியலுக்கும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

அரசியல், மதம் தொடர்பான ஷியாக்களின் இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இன்றைய ஈரானில் ஆட்சி நடக்கிறது. அந்நாட்டில் பாராளுமன்ற முறையிலான அரசமைப்புக்கு சமாந்திரமாக மதத் தலைவர்களும் தனியான அரசு நிர்வாகத்தை நடத்துகின்றனர். பொதுத் தேர்தல்கள் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டாலும், உண்மையான அதிகாரம் மதத்தலைவர்கள் கைகளில் இருக்கிறது. அங்கே இரண்டு இராணுவங்கள் உள்ளன. அரசியல் தலைமைக்கு கட்டுப்படும் தேசிய இராணுவம் ஒரு புறமும், ஆயத்துல்லாவுக்கு விசுவாசமான புரட்சிகர இராணுவம் மறுபுறமும் இயங்கி வருகின்றன.

ஈரானிய தேசிய இராணுவத்தில் யாரும் சேரலாம். ஆனால், புரட்சிகர இராணுவத்தில் கொள்கை அடிப்படையில்  விசுவாசமானவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். அண்மையில் ஈராக்கில் கொல்லப்பட்ட ஜெனரல் சுலைமானி, புரட்சிகர இராணுவத்தின் ஒரு பிரிவான அல் குட்ஸ் சிறப்புப் படையணிக்கு தலைமை தாங்கியவர். மிகவும் வறுமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உயர் பதவிக்கு வந்தவர். பெரியளவு மதப்பற்று இல்லாவிட்டாலும், நாட்டுப்பற்று மிக்கவராக இருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்னர் சிரியா, ஈராக்கில் நடந்த ISIS எதிர்ப்புப் போரில் முக்கிய பங்காற்றியவர். ஜெனரல் சுலைமானியின் இராணுவ தந்திரோபாயம் தான் ISIS பயங்கரவாதம் தோற்கடிக்கப் படக் காரணமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. பூகோள அரசியல் சதுரங்க ஆட்டத்தில், ஈரானிற்கு வரவிருந்த ஆபத்தை சிரியாவிலும், ஈராக்கிலும் எதிர்த்துப் போராடி முறியடித்திருந்தார். உண்மையில் இதுவே அமெரிக்கா அவரைக் குறிவைத்து தீர்த்துக் கட்டக் காரணமாக இருந்திருக்கலாம்.

ஆரம்ப கால இஸ்லாமிய சாம்ராஜ்ய வரலாற்றில் நடந்த உள்நாட்டுப் போர்கள் (அல்லது சகோதர யுத்தங்கள்) மிக முக்கியமானவை.  உண்மையில் கலீபா ஒத்மானின் மரணத்திற்கு பின்னர், இறைதூதர் முகமதுவின் பேரன் அலிக்கு தான் கலீபா பதவி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் டமாஸ்கஸ் ஆளுநர் முவாவியா அலியை மிகத் தீவிரமாக எதிர்த்து வந்தார். அவருடன் இறைதூதர் முகமதுவின் இளம் விதவை மனைவி ஆயிஷாவும் சேர்ந்து கொண்டார். அவர்களது படையினரும், அலியின் படையினரும் மோதிக் கொண்டமை முதலாவது உள்நாட்டுப் போர் ஆகும். 657 ம் ஆண்டு, உள்நாட்டுப் போரின் இறுதியில் அலி முவாவியாவின் ஆட்களால் படுகொலை செய்யப் பட்டார்.

அடுத்து வந்த சில வருடங்களில் எதிர்பாராத சில திருப்புமுனைகள் ஏற்பட்டன. 669 ம் ஆண்டு அலியின் மூத்த மகன் ஹசன் முவாவியாவின் ஆட்களால் நஞ்சூட்டிக் கொல்லப் பட்டார். அதை அடுத்து இரண்டாவது மகன் ஹுசைன் ஷியா பிரிவினரின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். இன்றைக்கும் ஷியா முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஹுசைன் ஒரு மிக முக்கியமான ஆளுமை. பெரும்பாலான ஷியா முஸ்லிம்களின் வீடுகளில் ஹுசைன் படம் மாட்டி வைத்திருப்பார்கள். அண்மையில் ஈரானில் நடந்த ஜெனரல் சுலைமானியின் இறுதிச் சடங்குகளின் போது, "சொர்க்கத்தில் ஹுசைன் சுலைமானியை ஆரத்தழுவும்" படம் பொறித்த போஸ்டர்கள் ஒட்டப் பட்டிருந்தன.

ஷியா முஸ்லிம்களின் வரலாற்றில் முதல் முறையாக ஹுசைன் தான் செங்கொடி ஏந்திப் போருக்கு சென்றார். எதேச்சாதிகார அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் தம்முயிர் ஈந்த தியாகிகளின் இரத்தத்தில் தோய்ந்த படியால் அது சிவப்பு நிறக் கொடி ஆனது. கொடியின் சிவப்பு நிறமானது வஞ்சகர்களை பழி தீர்க்கும் கடமையை உணர்த்துவதாகவும், அதிகார வர்க்கத்திற்கு எதிரான விடுதலைப் போரின் எழுச்சியாகவும் கருதப் பட்டது. இன்றைய ஈராக்கில் உள்ள கர்பலா நகரில், 680ம் ஆண்டு நடந்த போரில் ஹுசைனின் படையினர் சுற்றிவளைக்கப் பட்டனர். இறுதிப்போரில் ஹுசைனும், குடும்பத்தினரும் எதிரிப் படைகளால் கொல்லப் பட்டனர். ஹுசைனின் தலை வெட்டி எடுத்துச் செல்லப் பட்டது.

கர்பலா நகரில் ஹுசைன் படுகொலை செய்யப்பட்ட இடம் இன்றைக்கும் ஷியாக்களின் புனித ஸ்தலமாக பேணிப் பாதுகாக்கப் படுகின்றது. அங்கு ஒரு பெரிய மசூதி உள்ளது. அதற்கு ஒவ்வொரு வருடமும் ஷியாக்கள் புனித யாத்திரை செல்வார்கள். இஸ்லாமியக் கலண்டரில் வரும் அஷூரா நாளன்று ஹுசைன் கொல்லப் பட்ட படியால், வருடந் தோறும் அஷுரா நினைவுதினம் அனுஷ்டிக்கப் படுகின்றது. அன்றைய தினம் ஷியா மத நம்பிக்கையாளர்கள் தமது தலையிலும், மார்பிலும் அடித்து ஒப்பாரி வைத்து அழுவார்கள். சிலநேரம் இரத்தம் வரும் வரை சவுக்கால் அடித்து தம்மைத் தாமே வருத்திக் கொள்வார்கள்.

பிற மதத்தவர்களுக்கு மட்டுமல்லாமல், சன்னி முஸ்லிம்களுக்கும், ஷியாக்கள் தலையிலும், மார்பிலும் அடித்து அழும் நடைமுறை ஒரு புரியாத புதிராக இருக்கும். பலர் இதனை பைத்தியக்காரத்தனம் என்றும் சொல்வார்கள். ஆனால், ஷியாக்களை பொறுத்தவரையில் இது ஓர் உணர்வுபூர்வமான விடயம். அநேகமாக இஸ்லாத்திற்கு முன்பிருந்த கீழைத்தேய பண்பாட்டில் இருந்து இந்தப் பழக்கம் வந்திருக்கலாம். எது எப்படியோ, ஹுசைனின் தியாக மரணத்தை நினைத்து ஒப்பாரி வைக்கும் சம்பிரதாயம், அவர்களது மத நம்பிக்கையாக ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது.

கர்பலாவில் பறந்த ஹுசைனின் செங்கொடி இறக்கப் பட்டு ஆயிரத்து நானூறு வருடங்களுக்குப் பின்னர், இப்போது தான் மீண்டும் அதே செங்கொடி கோம் நகரில் ஏற்றப் பட்டுள்ளது. அந்தக் கொடியில் "ஹுசைன் சிந்திய இரத்தத்திற்கு பழி தீர்ப்பவர்களுக்காக..." என்று எழுதப் பட்டுள்ளது.  இந்தச் சம்பவமானது இனி வருங்காலத்தில் உக்கிரமான போர் நடக்கப் போவதற்கான அறிகுறி. அன்றைய ஈராக்கில் ஈராக்கில் ஷியாக்களின் இராணுவத் தளபதியும், பன்னிரு இமாம்களில் ஒருவருமான ஹுசைன் எதிரிகளால் வஞ்சகமான முறையில் தீர்த்துக் கட்டப் பட்டார். வரலாறு திரும்புகிறது என்பது மாதிரி, இன்று ஜெனரல் சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் தீர்த்துக் கட்டப் பட்டார். இந்த ஒற்றுமையானது வெளியில் இருந்து பார்க்கும் எங்களுக்கு சாதாரணமாகத் தெரியலாம். ஆனால், ஷியா மத நம்பிக்கையாளர்களுக்கு இது உணர்ச்சியைத் தூண்டும் அளவுக்கு குறிப்பிடத்தக்க விடயம்.

தெஹ்ரானில் நடந்த ஜெனரல் சுலைமானியின் இறுதிச் சடங்கில் பல கோடிக் கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். இஸ்லாமியப் புரட்சி நடந்து இருபத்தைந்து வருடங்களுக்குப் பின்னர், இந்தளவு அதிக எண்ணிக்கையிலான மக்கள் திரண்டது இதுவே முதல் தடவை. அத்துடன் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட மக்கள், அஷுரா தினம் அனுஷ்டிப்பது போன்று தலையிலும், மார்பிலும் அடித்து ஒப்பாரி வைத்தனர். அத்துடன், ஈரான், ஈராக், லெபனான் ஆகிய நாடுகளில் உள்ள ஷியா முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தும் அரசியல் அல்லது ஆன்மீகத் தலைவர்கள், அமெரிக்காவுக்கு எதிரான பழி தீர்க்கும் போருக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளனர். அதன் அர்த்தம் ஷியா முஸ்லிம்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அமெரிக்காவுக்கு எதிரான போரை தமது நீதியான மதக் கடமையாகக் கருத வேண்டும். அதை அவர்கள் ஹுசைனின் செங்கொடி ஏற்றப்பட்ட மறுகணமே புரிந்து கொண்டு விட்டனர்.

கோம் நகரில் உள்ள மஹ்தி மசூதி என அழைக்கப்படும் ஒரு புனித ஸ்தலத்தில் செங்கொடி ஏற்றப் பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. இந்துக்கள் கலிகாலத்தில் வரும் கல்கி அவதாரத்தை நம்புவது மாதிரி, முஸ்லிம்கள் (கிறிஸ்தவர்களும் கூட) இனிவரப்போகும் ஊழிக் காலம் பற்றிய நம்பிக்கையை கொண்டுள்ளனர். அந்தக் காலத்தில் கடவுளின் பிரதிநிதி பூமியில் தோன்றுவார் என்றும் நியாயத் தீர்ப்பு வழங்குவார் என்றும் நம்புகின்றனர். இது பற்றிய விவரணைகள் பைபிள், குரான் இரண்டிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரித் தான் உள்ளன.

ஷியா முஸ்லிம்களுக்கென தனித்துவமான நம்பிக்கை உள்ளது. அவர்கள் இறைதூதர் முகமதுவுக்கு அடுத்ததாக பன்னிரண்டு இமாம்களை தமது வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்டுள்ளனர். இந்த மதத்தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக வாரிசு உரிமையின் படி மதத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள். ஆனால், 868ம் ஆண்டு பிறந்த  பன்னிரண்டாவது இமாம் முஹம்மத் ஹசன் அலி இயற்கை மரணம் அடையவில்லை என்றும், அவர் திடீரென மறைந்து விட்டார் என்றும் சொல்லப் படுகின்றது.

பூமியில் போரும், குழப்பங்களும் அதிகரிக்கும் காலத்தில் பன்னிரண்டாவது இமாமின் வருகை இடம்பெறும் என்று ஷியாக்கள் நம்புகின்றனர். இது இயேசு வருகிறார் எனும் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை பெரிதும் ஒத்துள்ளது. பன்னிரண்டாவது இமாம் தோன்றும் காலத்தில் நீதி நிலைநாட்டப் பட்டு சமாதானம் ஏற்படும் என்பது ஷியாக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் அவர் "இறைவனால் வழிநடத்தப் படுபவர்" என்ற அர்த்தத்தில் முஹமத் அல் மஹ்தி என்ற பெயராலும் அழைக்கப் படுகின்றார்.

ஈரானில் மஹ்தியின் வருகைக்காக கட்டப்பட்ட ஜம்கரன் மசூதியின் உச்சியில் ஹுசைனின் செங்கொடி பறக்கின்றது. இந்தத் தகவலை நாங்கள் ஒரு சாதாரண விடயமாக கண்டுகொள்ளாமல் கடந்து சென்று விட முடியாது. உலகில் பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் இந்த சம்பவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இது வேண்டுமென்றே தவிர்க்கப் பட்ட விடயமாக இருக்கலாம். ஜெனரல் சுலைமானியின் படுகொலைக்கு அடுத்த நாள் ஈரானிய இராணுவத்தின் தலைமைத் தளபதி அமெரிக்காவுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார்: "இந்தப் போரை நீங்கள் தொடங்கி இருக்கலாம். ஆனால் நாங்கள் தான் அதை முடித்து வைக்கப் போகிறோம்!"

- கலையரசன் -   
7-1-2020

இந்தக் கட்டுரை ஜூனியர் விகடனில் பிரசுரமானது:
ஈரான் மசூதி உச்சியில் செங்கொடி பறப்பது ஏன்?

Saturday, July 12, 2014

சன்னி - ஷியா இனப் பிரச்சினையில் தோன்றிய ISIS எனும் மதவாதப் பூதம்

சிரியா சென்று ISIS தலைவர்களை சந்தித்த செனட்டர் மக் கெய்ன்
ISIS இனுடைய நதிமூலம் என்னவென்று ஆராய்வதற்கு, நாங்கள் சிரியா உள்நாட்டுப் போர் ஆரம்பித்த காலத்திற்கு செல்ல வேண்டும். குறைந்தது ஒரு வருடத்திற்கு முன்னராவது, ISIS பற்றிய பலரது கணிப்பீடு மிகவும் மாறுபட்டிருந்தது. அப்போது இஸ்லாமியர் அல்லாத தமிழர்கள் கூட அந்த இயக்கத்தை ஆதரித்தார்கள். அவர்கள் எல்லோரும் அமெரிக்க/மேற்கத்திய ஆதரவு தமிழர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

முன்னாள் "ISIS ஆதரவு தமிழர்களில்" பலர், புலிகளையும் தீவிரமாக ஆதரிப்பவர்கள். அப்படியான சிலருடன் வாதாடி இருக்கிறேன். ISIS ஒரு மதவாத அமைப்பு என்று கூறினேன். அப்போது யாரும் நான் சொன்னதை கேட்கும் நிலையில் இருக்கவில்லை. ஆதாரம் கொண்டு வந்து காட்டுமாறு அடம் பிடித்தார்கள். ஆதாரத்தை காட்டினாலும் நம்ப மறுத்தார்கள். "ISIS ஒரு மதவாத இயக்கம் அல்ல, சிரியாவில் ஆசாத் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடும் விடுதலை இயக்கம்" என்று வாதாடினார்கள். அதற்குக் காரணம், அன்று மேற்கத்திய ஊடகங்கள் செய்து வந்த பிரச்சாரம். அவர்களது அரசியல் கொள்கைகள் ஏற்கனவே நாம் அறிந்தவை தான். அமெரிக்கா எதை ஆதரிக்க சொன்னாலும் ஆதரிப்பார்கள், எதை எதிர்க்க சொன்னாலும் எதிர்ப்பார்கள்.

அன்றைக்கு ISIS பலரின் கண்களுக்கு விடுதலைப் போராளிகளாக தெரிந்தார்கள். இன்னும் சொல்லப் போனால், புலிகளுக்கு கூட அந்தளவுக்கு மேலைத்தேய ஆதரவு இருக்கவில்லை. அமெரிக்கா வெறும் அரசியல் பிரச்சாரத்துடன் நின்று விடாது, ஆயுதங்கள், நிதி கொடுத்து ஆதரித்து வந்தது. முன்பொரு தடவை, தமிழ்நாட்டில் இருந்து வைகோ வன்னிக்கு சென்று புலிகளை சந்தித்து விட்டு திரும்பியது போன்று, செனட்டர் மக்கெய்ன் அமெரிக்காவில் இருந்து துருக்கி ஊடாக சிரியா சென்று ISIS தலைவர்களை சந்தித்து விட்டு திரும்பி இருந்தார்.

ISIS ஆசாத் அரசின் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடியதால் மட்டும், அதற்கு சிரிய மக்கள் ஆதரவளித்தனர் என்று, அங்குள்ள நிலைமையை கறுப்பு, வெள்ளையாக பார்க்க முடியாது. ISIS மட்டுமல்லாது, FSA, அல் நுஸ்ரா என்று பத்துக்கும் குறையாத ஆயுதபாணி இயக்கங்கள் ஆசாத் அரசுக்கு எதிராக போராடிக் கொண்டிருந்தன. அவற்றிற்கு இடையில் ஒரு கொள்கை ஒற்றுமை இருந்தது. இஸ்லாமிய மத அடிப்படைவாதம் எல்லோருக்கும் பொதுவான கோட்பாடாக இருந்தது. 

FSA, வெளிநாட்டு உதவி பெறுவதற்காக தன்னை ஒரு மதச் சார்பற்ற மிதவாத இயக்கமாக காட்டிக் கொண்டது. ஆனால், உண்மையில் அதுவும் ஒரு மதவாத இயக்கம் தான். ஆசாத் அரசு, தீவிரமான மதச் சார்பற்ற அரசாக இருந்தது. ஒரு மேற்கு ஐரோப்பிய நாடு போன்று சுதந்திரமான கலாச்சாரத்தை பின்பற்றியது. கிளர்ச்சியாளர்களின் மதவாத நிலைப்பாட்டிற்கு, அதுவும் ஒரு முக்கிய காரணம். அதுவும் ஒரு வகை எதிர்ப்பு அரசியல் தான்.

சிரியாவில் ஆசாத் அரசை எதிர்த்துப் போராடிய இயக்கங்கள் எல்லாம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் மத்தியில் மட்டும் ஆதரவுத் தளத்தை கொண்டிருந்தன. சிரியாவில் வாழும் பெரும்பான்மை சமூகமான, சன்னி முஸ்லிம்கள் மட்டுமே, அந்த இயக்கங்களின் உறுப்பினர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இருந்தனர். ஆசாத் அரசும், இராணுவமும் பெரும்பாலும் ஷியா முஸ்லிம்களை பிரதிநிதித்துவப் படுத்தின. (கிறிஸ்தவ சமூகமும் அரசை ஆதரிக்கின்றது.) உண்மையில், சிரிய ஆளும் வர்க்கத்தினர், ஷியா முஸ்லிம்களில் இன்னொரு உப பிரிவான அலாவி சமூகத்தை சேர்ந்தவர்கள். 

யார் இந்த அலாவி முஸ்லிம்கள்? இந்தியாவில் உள்ள ஒரு தாழ்த்தப் பட்ட சாதி போன்றது தான் அலாவி சமூகம். ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக, பெரும்பான்மை சன்னி முஸ்லிம்களால் ஒடுக்கப் பட்டு வந்த சமூகம் அது. இராணுவ சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றிய, அலாவி சமூகத்தை சேர்ந்த ஆசாத் ஆட்சியில் தான், அவர்கள் மேன் நிலைக்கு வந்தனர். அதற்கு முன்னர், உயர்த்தப் பட்ட சமூகமாக இருந்த சன்னி முஸ்லிம்கள், தாம் அனுபவித்து வந்த சலுகைகளை இழந்தனர். அவர்கள் இப்போது சிரியாவில் ஒடுக்கப்பட்ட சமூகமாக உள்ளனர். பொருளாதாரப் பிரச்சினை அவர்களைத் தான் முதலில் பாதித்தது. 

சிரியாவில் அண்மைய உள்நாட்டுப் போர் தொடங்குவதற்கு முன்னர், சன்னி முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வகாபிச முஸ்லிம் சகோதரத்துவ கட்சி செல்வாக்குப் பெற்றிருந்தது. ஹோல்ம்ஸ் நகரத்தில், சன்னி முஸ்லிம் சமூகம் பெரும்பான்மையாக வாழ்கின்றது. அதனால் ஹோம்ஸ் அன்றும், இன்றும் இஸ்லாமியவாதிகளின் கோட்டையாக கருதப் படுகின்றது. எண்பதுகளில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியினர் தூண்டி விட்ட எழுச்சியை, அரச படையினர் அடக்கிய போது சுமார் இருபதாயிரம் மக்கள் பலியானார்கள். கொல்லப் பட்டவர்கள் : சன்னி முஸ்லிம்கள். கொன்றவர்கள் : ஷியா முஸ்லிம் படையினர். தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரிலும் அந்த நிலைமை மாறவில்லை. 

சிரியாவில், சன்னி முஸ்லிம்களை பொருத்தவரையில், ISIS போன்ற இயக்கங்கள், அந்த சமூகத்தை பாதுகாப்பதற்காக, அதாவது "இன விடுதலைக்காக" போராடுகின்றன. (அதனால் தான் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள், சன்னி முஸ்லிம் கிளர்ச்சிப் படைகளை "விடுதலைப் போராளிகள்" என்று அழைத்தனர்.) FSA க்கும், ISIS க்கும் இடையில் ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. 

ISIS இல் நிறைய வெளிநாட்டு ஜிகாதிகள் உள்ளனர். அந்த ஜிகாதி போராளிகள் அனைவரும் சன்னி முஸ்லிம்கள். சிரியா சன்னி முஸ்லிம்களும், "ஷியா ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலை செய்ய வந்த சகோதரர்களை" வரவேற்றார்கள். புலிகள் அமைப்பில் தமிழ்நாட்டு தமிழர்கள் போராளிகளாக சேர்ந்திருந்தால், ஈழத் தமிழர்கள் வேண்டாம் என்று மறுக்கப் போகிறார்களா? அதே மாதிரியான நிலைமை தான் சிரியாவிலும் உள்ளது. 

FSA உறுப்பினர்கள் பெரும்பாலும், முன்னாள் சிரிய இராணுவ வீரர்கள். முன்பு சிரிய இராணுவத்தில் கடமையில் இருந்த சன்னி முஸ்லிம் அதிகாரிகள், போர்வீரர்கள். யுத்தம் தொடங்கியவுடன் இராணுவத்தை விட்டோடி விட்டார்கள். தங்களது சொந்த இன மக்களை (அதாவது, சன்னி முஸ்லிம் சமூகம்) கொல்ல விரும்பவில்லை என்பது ஒரு காரணம்.  அதை இலங்கை நிலவரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முன்னொரு காலத்தில், சிறிலங்கா இராணுவத்தில் தமிழர்களும் இருந்தனர். ஆனால், ஈழப்போர் ஆரம்பித்தவுடன், ஒன்றில் அவர்கள் ஒதுக்கப் பட்டனர், அல்லது தாமாகவே விலகிச் சென்று விட்டனர்.

சன்னி-ஷியா பிரச்சினையை, வெறுமனே மதப் பிரச்சினையாக பார்ப்பது தவறு. அவை இரண்டு வெவ்வேறு சமூகங்களை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன. அதுவும் ஒரு இனப் பிரச்சினை தான். சன்னி முஸ்லிம் சமூகமும், ஷியா முஸ்லிம் சமூகமும் இரண்டு வேறுபட்ட கலாச்சாரங்களை கொண்டவை. ஒருவரது கலாச்சாரத்தை மற்றவர் மதிக்காத போக்கும் காணப் படுகின்றது. சன்னி - ஷியா சமூகங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வு, சிங்கள - தமிழ் வெறுப்புணர்வுக்கு சற்றிலும் குறைந்தது அல்ல. 

இனம் என்னும் பொழுது, நாங்கள் எப்போதும் மொழியை புரிந்து கொள்கிறோம். அது தவறு. ஈராக், சிரியாவில் வாழும், சன்னி, ஷியா முஸ்லிம்கள் ஒரே மொழி பேசலாம், ஒரே மதத்தை பின்பற்றலாம். ஆனால், ஆயிரக் கணக்கான வருடங்களாக இரண்டு வேறு இனங்களாக பிரிந்து வாழ்கின்றன. அரேபியரின் இஸ்லாமியப் படையெடுப்புகளுக்கு முன்னர் ஈராக்கில் வாழ்ந்த வேற்றின மக்கள், ஷியா சமூகமாக மாறியிருக்க வாய்ப்புண்டு. (அதன் அர்த்தம் இனக் கலப்பு நடக்கவில்லை என்பதல்ல. ஆனால், கலாச்சார வேறுபாட்டுக்கு அது காரணமாக இருக்கலாம்.)  அதற்கு உதாரணமாக ஒன்றைக் குறிப்பிடலாம். பஸ்ரா நகருக்கும் ஈரானுக்கும் இடைப்பட்ட பகுதியில் வாழும், "சதுப்பு நில அரேபியர்கள்" இஸ்லாத்திற்கு முந்திய புராதன கலாச்சாரத்தை, இன்றைக்கும் பின்பற்றுகின்றனர்.

சிரியா அல்லது ஈராக்கில், யார் சன்னி, யார் ஷியா என்று பெயரை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கலாம். உதாரணத்திற்கு, "அலி" என்று பெயர் வைத்துக் கொள்ளும் எல்லோரும் ஷியாக்கள் என்று இலகுவாக கண்டுபிடிக்கலாம். இரண்டு சமூகங்களும், தனித் தனியாக வெவ்வேறு பிரதேசங்களில் பிரிந்து வாழ்கின்றன. நகரங்கள் மட்டும் விதிவிலக்கு. இருப்பினும், பாக்தாத் நகரில் தனியே ஷியா முஸ்லிம்கள் மட்டும் வாழும் பகுதி ஒன்றுள்ளது. அது ஒரு சேரிப் புறம் போன்றது. பாக்தாத் நகரில் பின் தங்கிய பகுதி. மும்பையில் தாராவி பகுதியுடன் அதனை ஒப்பிடலாம்.

சன்னி முஸ்லிம்களும், ஷியா முஸ்லிம்களும் நண்பர்களாக இருக்கலாம். ஆனால், ஒருவருக்கொருவர் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. கலப்பு மணம் செய்து கொள்பவர்கள், முரண்பாடுகள் தீவிரமடையும் காலங்களில், சமூகத்தால் ஒதுக்கப் படும் ஆபத்து உள்ளது. அமெரிக்க ஆக்கிரமிப்புக் காலத்தில், ஈராக்கில் பல தடவைகள் இனக் கலவரங்கள் வெடித்துள்ளன. ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் பிழையான சமூகத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக கொல்லப் பட்டார்கள். பரஸ்பரம் பழிக்குப் பழி வாங்கும் கொலைகள் நடந்தன. ஆயுதமேந்திய குண்டர்கள், வழியில் செல்லும் வாகனங்களை மறித்து, பயணிகளை சன்னி - ஷியா என்று பிரித்தறிந்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். இரண்டு தரப்பிலும் இது போன்ற படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

வரலாறு முழுவதும் ஒரு சமூகம், மற்ற சமூகத்தை அடக்கி ஆண்டு வந்துள்ளது. ஈராக்கில் சதாம் ஹுசைன் காலம் வரையில், சன்னி முஸ்லிம்கள் மேலாண்மை பெற்றிருந்தனர். ஷியா முஸ்லிம்கள் இரண்டாந் தரப் பிரஜைகளாக நடத்தப் பட்டனர். அமெரிக்கப் படையெடுப்புக்கு பின்னர், நிலைமை தலை கீழாக மாறியது. புதிய ஈராக் அரசில், ஷியா முஸ்லிம்கள் மேலாண்மை பெற்றனர். பிரதமர் மாலிக் கூட ஒரு ஷியா தான். இம்முறை சன்னி முஸ்லிம்கள் அடக்கப் பட்டனர். இரண்டாந் தரப் பிரஜைகள் ஆக்கப் பட்டனர்.

சிரியாவில் நிலைமை நேரெதிராக உள்ளது. அங்கே ஆசாத் அரசை ஆதரிப்பது ஷியா முஸ்லிம்கள். கடந்த நாற்பது வருடங்களாக, அவர்கள் அங்கு மேலாண்மை பெற்றுள்ளனர். இன்று நடக்கும் உள்நாட்டுப் போரில், ஷியா அரச படைகளினால் கொல்லப் படுபவர்கள் சன்னி முஸ்லிம்கள் மட்டும் தான். அதனால் தான் சன்னி முஸ்லிம்கள் ISIS போன்ற இயக்கங்களை, அவற்றின் மத அடிப்படைவாதம் தெரிந்திருந்தும் ஆதரித்தார்கள். அரச படைகள் புரிந்த படுகொலைகளுக்கு பழிவாங்குவதற்காக, கிளர்ச்சியாளர்கள் ஷியா கிராமங்களில் தாக்குதல் நடத்தி ஷியா முஸ்லிம்களை கொன்றுள்ளனர்.

ஈராக்கில் ஒரு பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ISIS, அங்கிருந்த ஷியா மசூதிகளை இடித்தது உண்மை தான். அதையும் இரண்டு சமூகங்களுக்கு இடையிலான வெறுப்புணர்வாக தான் புரிந்து கொள்ள வேண்டும். அது ஈராக்கில் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் இனக் குரோத போரின் தொடர்ச்சி. சில வருடங்களுக்கு முன்னர், சமரா நகரில் ஷியாக்களின் மிக முக்கியமான புனித ஸ்தலம் குண்டு வைத்து தகர்க்கப் பட்டது. அது இந்தியாவில் பாபர் மசூதி இடிக்கப் பட்ட நிகழ்வுடன் ஒப்பிடத் தக்கது.

ISIS அமைப்பினர், ஒரு பக்கத்தில் சன்னி முஸ்லிம் சமூகத்தின் விடுதலை இயக்கமாக காட்டிக் கொள்கின்றனர். ஆனால், அவர்களது அரசியல் நிலைப்பாடு, பெருமளவு இனவாதம், மதவாதம் கொண்டதாக உள்ளது. சன்னி முஸ்லிம்கள் எல்லோரும் ISIS இயக்கத்தை ஆதரிக்கவில்லை. ஈராக்கில் அல்லது சிரியாவில் வாழும் மதச் சார்பற்ற சன்னி முஸ்லிம் மக்கள், இது போன்ற மதவாத இயக்கங்களை ஆதரிக்கப் போவதில்லை. ஈராக்கில் உள்ளூர் நிலப்பிரபுக்களின் விசுவாசிகள், அல்லது சதாம் ஹுசைனின் பாத் கட்சி அனுதாபிகள்,  சன்னி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்திருந்த போதிலும், ISIS இனை நிபந்தனை இன்றி ஆதரிக்கப் போவதில்லை. 

வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமிய மத உணர்வாளர்கள் பலர் ISIS இயக்கத்தை ஆதரிக்கின்றனர். அந்த ஆதரவாளர்கள் எல்லோரும் சன்னி முஸ்லிம்கள். கிலிபாத் என்ற  "இஸ்லாமியத் தாயகக் கோட்பாடு" அந்த ஆதரவுக்கு ஒரு முக்கிய காரணம். அது ஒரு இழந்த சொர்க்கம் பற்றிய கனவு. "ஒரு காலத்தில், ஸ்பெயின் முதல் இந்தோனேசியா வரை, முஸ்லிம்கள் ஆண்டார்கள். இன்று ஐரோப்பியருக்கு அடிமைப் பட்டுக் கிடக்கிறார்கள்" என்று கூறி, இதை ஒரு வகை மத விடுதலைப் போராட்டமாக கருதுகிறார்கள்.

ISIS உரிமை கோரும் அகண்ட இஸ்லாமியத் தாயகம் 

இஸ்லாமியத் தாயகம் உருவாக்கும் நோக்கத்தோடு உலகில் பல ஆயுதமேந்திய இயக்கங்கள் தோன்றின. ஆனால், ISIS அவற்றை எல்லாம் ஓரங் கட்டி விட்டு, பெரிதாக வளர்ந்து வந்து விட்டது. சிலநேரம் சகோதர யுத்தங்களை நடத்தியும், ISIS அதிகாரத்தை கைப்பற்றியது. ஒரே கொள்கைக்காக போராடிய பிற இயக்க போராளிகளை கொன்றுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வாழும் ஆதரவாளர்களுக்கு, ISIS போர்களில் குவித்த வெற்றிகள் மட்டுமே கண்ணுக்குத் தெரிகின்றன. அது ISIS ஐ யாராலும் வெல்ல முடியாது என்ற உணர்வை அவர்கள் மனதில் உண்டாக்கி உள்ளது.


ISIS தொடர்பான முன்னைய பதிவுகள்:

சிரியா தொடர்பான முன்னைய பதிவுகள்: 

Saturday, April 30, 2011

சிரியாவில் மூன்றாம் உலகப்போர் ஆரம்பிக்குமா?


சிரியாவின் தலைநகர் டமாஸ்கசில் இருந்து சுமார் நூறு கி.மீ. தூரத்தில் இருக்கிறது டேரா. விவசாயத் தொழில் செய்யும் மூன்று லட்சம் மக்கள் வாழும் குடியிருப்புகள், ஜோர்டான் எல்லையோரமாக உள்ளன. ஜோர்டான் எல்லை கடந்து வருபவர்கள், டேராவில் இருந்து தான் டமாஸ்கஸ் செல்ல வேண்டும். 

தலைநகரை இணைக்கும் சாலை டேராவில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது. இங்கே தான் 15 மார்ச் அன்று, முதல் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின. "பஷார் அரசு ஒழிக" கோஷம் முதன் முதலாக அங்கே தான் கேட்டது. துனிசியா, எகித்திய புரட்சிகளால் உந்தப்பட்ட சிலரின் வேலையாக இருக்கலாம். மதிலில் அரச எதிர்ப்பு சுலோகம் எழுதிய மாணவர்கள் சிலரை, போலிஸ் கைது செய்து கொண்டு சென்றது. போலிஸ் நடவடிக்கை ஆர்ப்பாட்டத்தை அதிகரிக்கச் செய்தது. குறிப்பாக உழவர்களின் பிரச்சினைக்கு அரசு செவி சாய்க்காமல், அடக்குமுறையை கையாண்டது ஆத்திரத்தை கிளப்பை விட்டது.

டேரா உழவர்கள், தமது பிரதேச ஆளுநர் பைசல் கல்தூமுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். டேரா நகரையும், மாகாணத்தையும் 2006 ம் ஆண்டிலிருந்து ஆட்சி செய்து வந்த புதிய ஆளுநர் ஊழல்களுக்கு பேர் போனவர். விவசாய நிலங்களை விற்பது, பங்கிடுவது சம்பந்தமான முறைகேடுகள் உழவர்களை அதிருப்திக்கு ஆளாக்கின. டேரா பிரதேசத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடும் பிரச்சினைக்கு மூலகாரணம். டேராவாசிகளே தண்ணீருக்கு அல்லல் படும் வேளை, அதிகரித்து வரும் குடியேறிகளும் பிரச்சினையை தீவிரப் படுத்துகின்றனர். ஒரு காலத்தில் தானியக் களஞ்சியமாக இருந்து, இன்று வறண்ட பாலைவனமாக மாறி விட்ட, சிரியாவின் வட-கிழக்கு பகுதியை சேர்ந்த மக்களே அதிகளவில் வந்து குடியேறினர். அது போதாதென்று, ஈராக் அகதிகளும் பெருமளவில் தஞ்சமடைந்திருந்தனர்.

வரட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை, நலிவடையும் விவசாய உற்பத்தி, உணவுப் பொருட்களின் விலையேற்றம். இவ்வாறு ஒன்றுகொன்று தொடர்பான பிரச்சினைகள் சிரியாவில் நீண்ட காலமாகவே உணரப்பட்டு வந்துள்ளன. டேரா பிரதேசத்தில் புதிய விவசாய நிலங்களை உருவாக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசு அந்த நிலங்களை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு விற்க வேண்டும். ஐ.நா., மற்றும் சில மேற்கத்திய நாடுகள் அந்த திட்டத்திற்கு ஆதரவளித்தன. 


திட்டத்தை நடைமுறைப்படுத்த நியமிக்கப்பட்ட ஆளுநர், தனது உறவினர்களின் பெயரில் ஒரு தனியார் நிறுவனம் அமைத்துக் கொண்டார். அரசு நிதியை கையாண்ட நிறுவனம், விவசாயிகளை நட்டாற்றில் விட்டது. விவசாயிகள் தாமாகவே புதிய கிணறுகளை தோண்டுவதற்கு ஆளுநர் அனுமதி வழங்கவில்லை. இந்த நேரத்தில் தான் துனிசியா புரட்சி இடம்பெற்றது. டேராவில் சுன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். டமாஸ்கஸ்ஸில் ஆளும் வர்க்கம் அலாவி (ஷியா) முஸ்லிம் பிரிவை சேர்ந்தது. இதனால், சுன்னி முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படுவதாக இனவாத கண்ணோட்டமும் சேர்ந்து கொண்டது. டேரா மக்களின் எழுச்சிக்கு இந்தக் காரணங்கள் போதும்.

அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில், இன/மத முரண்பாடுகளே கோஷங்களாக முன் வைக்கப்பட்டன. "ஈரான் ஒழிக!", "ஹிஸ்புல்லா ஒழிக!" போன்ற கோஷங்கள் ஷியா மதப் பிரிவினருக்கு எதிரானவை. "உண்மையான முஸ்லிம்கள் அரசாங்கத்தை நடத்த வேண்டும்!" என்ற கோஷம், சுன்னி முஸ்லிம் பிரதிநிதிகளை கொண்ட அரசை நோக்கமாக கொண்டது. 


மறு பக்கத்தில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் "சவூதி அரேபியாவின் கைக்கூலிகள்" என்று சிரிய அரசு முத்திரை குத்தவும் அதுவே காரணமாக அமைந்து விட்டது. வாஹபிச சவூதி அரேபியா, பிற நாடுகளில் சுன்னி முஸ்லிம் தீவிரவாதத்தை தூண்டி விடுவது புதிய செய்தியல்ல. முன்னர் ஒரு தடவை, "முஸ்லிம் சகோதரத்துவம்" என்ற ஆயுதமேந்திய இயக்கம் சிரியாவில் அரசைக் கவிழ்க்க முயன்றது. எழுபதுகளில், எண்பதுகளில் முஸ்லிம் சகோதரத்துவ செயற்பாட்டாளர்கள் நாடு முழுவதும் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

வட- சிரிய நகரமான ஹாமா, நீண்ட காலமாக இஸ்லாமியக் கிளர்ச்சியின் தலைமையகமாக திகழ்ந்தது. இன்றைய சிரிய அதிபர் பஷாரின் தந்தை ஆசாத், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். 1982 ம் ஆண்டு, ஹாமா நகரம் விமானக் குண்டுவீச்சுகளால் தரைமட்டமாக்கப் பட்டது. மொத்தம் நாற்பதாயிரம் மக்கள், சிரிய பாதுகாப்புப் படையினரால் கொன்று குவிக்க்கப் பட்டனர். 


அத்துடன் சிரியாவில் இஸ்லாமிய மத- அடிப்படைவாத அரசியலுக்கு முடிவு கட்டப்பட்டது. டேராவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது, "ஹாமாவை நினைவுகூறுவோம்" என்ற கோஷமும் முன்வைக்கப் பட்டது. ஆரம்பத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசு மாற்றத்தை கோரவில்லை. பாதுகாப்புப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மரணச் சடங்கில் கலந்து கொண்ட மக்கள் அதனை அரசியல் ஊர்வலமாக்கினார்கள். பெரும்பாலும் அன்புக்குரியவர்களை இழந்ததால் ஏற்பட்ட துயரமே, அந்த மக்களை அரசியலுக்கு தள்ளியது.

"சவூதி கைக்கூலிகள்" ஆயுதங்களுடன் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் மறைந்திருந்து போலீசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாகவும், அரசு தெரிவிக்கின்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களும், மர்ம நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரிவித்தனர். போலிஸ் திருப்பிச் சுட்டதனாலும், பொது மக்கள் இறந்துள்ளனர். ஆனால், எப்போதும் அப்படி நடக்கின்றன என்று கூற முடியாது. சில இடங்களில் ஊர்வலங்களில் சென்றோர் மீது போலிஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளது. 


டெராவில் கலகத்தை அடக்குவதற்கு இராணுவம் அனுப்பப் பட்டது. ஆர்ப்பாட்டம் செய்பவர்களை சுட்டுத் தள்ளியாவது கலகத்தை அடக்கும் பணியில் பாதுகாப்புப் படைகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும், "சர்வதேச சமூகம்" பொருளாதாரத் தடைகள் விதிப்பது குறித்து மட்டுமே பேசி வருகின்றது. லிபியாவில் நடந்ததைப் போல, நேட்டோப் படைகளின் விமானக் குண்டுவீச்சு நடத்துவது குறித்து பேசவில்லை. எதிர்காலத்திலும் இராணுவத் தலையீடு நடைபெறுவதற்கான வாய்ப்புக் குறைவு. "சர்வதேச சமூகம்" சிரிய பிரச்சினையில் பின்வாங்குவதற்கு என்ன காரணம்?

சிரியா மீது இராணுவ நடவடிக்கை எடுத்தால், அது அயல்நாடான இஸ்ரேலை பாதிக்கும் என்ற அச்சமே காரணம். கடந்த இரு தசாப்தங்களாக போரில் ஈடுபடாத சிரியா, ஈரானிடம் இருந்து நவீன ஆயுதங்களை வாங்கிக் குவித்துள்ளது. சிரிய அரசு ஆட்டம் கண்டால், இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கும் அபாயம் நிலவுகின்றது. அந்தப் பிராந்தியந்தில் உள்ள பிற நாடுகளையும் போருக்குள் இழுத்து விட்டது போலாகி விடும். சிரியாவுடன் நெருக்கமான நட்பு பாராட்டும் ஈரான் உதவிக்கு வரலாம். அதே நேரம், லெபனானின் கெரில்லா அமைப்பான ஹிஸ்புல்லாவும், பாலஸ்தீன ஹமாசும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம். இந்த இயக்கங்களுக்கு சிரியா ஆதரவு வழங்கி வருவது இரகசியமல்ல. மேலும், ஷியா முஸ்லிம்களின் நாடான ஈரான், சிரியாவில் ஆட்சி மாற்றத்தை எதிர்க்கவே செய்யும். ஹிஸ்புல்லாவும் ஷியா முஸ்லிம்களின் பிரதிநிதிகள் என்பது குறிப்பிடத் தக்கது.

இவ்விடத்தில் சிரியாவின் ஆளும் வர்க்கத்தின் பின்னணியை அலசுவது முக்கியமானது. ஏனெனில் அதிபர் பஷார் அல் ஆசாத் உட்பட, அரசாங்கத்தை அலங்கரிக்கும் முக்கிய புள்ளிகள் சிறுபான்மை அலாவி சமூகத்தை சேர்ந்தவர்கள். சிரியாவில் ஒரு மில்லியன் அலாவிக்கள் (மொத்த சனத்தொகையில் 12%) வாழ்கின்றனர். இஸ்லாமிய மதத்தில் ஷியா பிரிவை சேர்ந்தவர்களாக அலாவி கூறிக் கொள்கின்றனர். 


வரலாற்றில் ஷியா இஸ்லாமில், மேலும் பல கிளைகள் பிரிந்து சென்றன. இமாம் நுசாயிரியின் போதனைகளை பின்பற்றும் அலாவி(அலியை பின்பற்றுபவர்கள்)அவற்றில் ஒன்று. ஆயினும், பிற முஸ்லிம்கள் அலாவிக்களை இஸ்லாமியராக கருதுவதில்லை. அலாவிக்கள் இஸ்லாமியரின் மதக் கடமைகளை பின்பற்றுவதில்லை. ஷரியா சட்டத்தை ஏற்றுக் கொள்வதில்லை. அலாவிக்களின் வழிபாட்டு முறைகள், மதச் சடங்குகள், புனித நூல் ஆகியன வித்தியாசமானவை. அவர்கள் கிறிஸ்தவர்களின் பண்டிகை நாட்களையும் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவ புனிதர்களையும் போற்றுகின்றனர். சுருக்கமாக, இஸ்லாமுக்கும், கிறிஸ்தவத்திற்கும் இடையிலான மதத்தை சேர்ந்தவர்கள் போன்று காணப்படுகினறனர்.

பல நூறாண்டுகளாக, சிரியாவில் அலாவிக்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்து வந்தனர். அதாவது, இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதிகளைப் போன்று நடத்தப்பட்டனர். ஆசாத் ஆட்சிக் காலத்தில் தான், பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த, வறுமைக்குள் வாடிய அலாவி சமூகத்தில் மாற்றம் ஏற்பட்டது. இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆசாத் ஆட்சியைப் பிடித்தது, சிரியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் பிரதமரானால், அரசை நடத்துவதும் அந்த சாதியினராக இருந்தால், பிற சாதியினர் எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள்? அன்று சிரியாவில் ஏற்பட்ட சமூக மாற்றமும் அது போன்றது. 


ஆசாத் ஆட்சியில் தான் அலாவிக்கள் உயர் பதவிகளைப் பெற்று பணக்காரரானார்கள். இன்றைய குழப்பகரமான சூழ்நிலையில், சிரியாவின் மேற்குக் கரையோர லடாக்கியா பகுதியில் செறிந்து வாழும் அலாவி சமூகம், அரசு ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது. சிரியாவில் தற்போதைய அரசு கவிழுமானால், பெரும்பான்மை சுன்னி முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களே ஆட்சியைப் பிடிப்பார்கள். அவர்கள் அதிகாரத்தை கைப்பற்றினால், அலாவி சமூகத்தினரை பழிவாங்குவதற்காக இனப்படுகொலையை கட்டவிழ்த்து விடலாம். எதிர்காலம் குறித்த அச்சம் எல்லோர் மனதிலும் குடி கொண்டுள்ளது.

Tuesday, February 22, 2011

பாஹ்ரைன்: ஏடன் தோட்டத்து மக்கள் எழுச்சி

புரட்சி அலை அடிக்கும் அரபுலகில், வளைகுடா செல்வந்த நாடான பாஹ்ரைன் மட்டும் மக்கள் எழுச்சியை வன்முறை கொண்டு அடக்க எத்தனிக்கின்றது. தலைநகர் மனாமாவில் ஏறக்குறைய ஐம்பதாயிரம் பேர் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இது மொத்த சனத்தொகையில் பத்து வீதமாகும். மனாமாவின் மத்தியில் அமைந்துள்ள "பேர்ல் சதுக்கத்தில்" கூடாரங்களை அமைத்து அஹிம்சை வழியில் போராடிய மக்கள் மீது, படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நள்ளிரவில் திடுதிப்பென புகுந்த படையினர் கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர். பிணங்களாலும், காயமுற்றவர்களாலும் நிரம்பி வழிந்த மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியர்கள் கூட, எழுச்சியுற்று ஆர்ப்பாட்டத்தில் சேர்ந்து கொண்டனர். இது போன்று அப்பாவி பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ஈரானிலோ, அன்றில் சீனாவிலோ நடந்திருந்தால், ஊடகங்கள் ஒரு மாதத்திற்கு அதையே தலைப்புச் செய்தியாக சொல்லிக் கொண்டிருக்கும். எத்தனையோ பேர் அடுத்த பத்து வருடங்களாவது படுகொலைகளை மறக்காமல் நினைவுகூர்ந்திருப்பார்கள். என்ன செய்வது? அப்பாவி பாஹ்ரைனியர்கள் அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைத் தளத்தைக் கொண்ட நாடொன்றில் பிறந்த துரதிர்ஷ்டசாலிகள். அதனால் அவர்களது தியாகமும், சிந்திய இரத்தமும் வெளியுலகின் கவனிப்பின்றி அமுங்கிப் போகலாம்.

இன்றைய சவூதி அரேபியாவுக்கும், ஈரானுக்கும் நடுவில் அமைந்திருக்கும் தீவான பாஹ்ரனில் குறைந்தது பத்தாயிரம் வருடங்களாவது மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளன. மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், மெசப்பத்தோமிய நாகரிக காலத்தில் செழிப்பான வணிக மையமாக திகழ்ந்துள்ளது. மேசப்பத்தொமியர்கள் பாஹ்ரனை "டில்முன்" என்றழைத்தனர். விவிலிய நூலில் வரும் ஏடன் தோட்டம் இன்றைய பாஹ்ரைனான டில்முன் ஆக இருக்கலாம் என சில அகழ்வாராய்ச்சி நிபுணர்கள் நம்புகின்றனர். பண்டைய ஈரானின் பெர்சிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்துள்ளதால், ஈரானியர்களின் குடியேற்றமும் நடந்திருக்க வாய்ப்புண்டு. இன்றைக்கும் பாஹ்ரைன் மக்களில் ஒரு பிரிவினர் ஈரான் குடியேறிகளாக கருதப்படுகின்றனர். இன்று "அஜாரிகள்" என அழைக்கப்படும் அந்த மக்கட்பிரிவினர் ஒரு லட்சம் அளவில் இருக்கலாம். அவர்களை அரேபியராக மாறிய ஈரானியர்கள் என்றும் குறிப்பிடலாம். இஸ்லாமிய மதம் பரவிய காலத்தில், ஈரானிய ஷியா மதப் பிரிவை பின்பற்றினார்கள். அதனால் பாஹ்ரைன் அரசு, அவர்களது எழுச்சியை ஈரானின் தூண்டுதலால் நடப்பதாக காரணம் சொல்லிக் கொண்டிருந்தது.

பாஹ்ரைனின் மொத்த சனத்தொகை 568,000 ஆகும். இவர்களில் ஷியா மதப்பிரிவை சேர்ந்தோரின் எண்ணிக்கை 374,000 . அதாவது பாஹ்ரைனியர்களில் மூன்றில் இரண்டு பங்கு, அல்லது எழுபது சதவீதம் ஷியா மதப்பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களில் முன்னர் குறிப்பிட்ட ஒரு லட்சம் ஈரானிய குடியேறிகளை தவிர, மிகுதிப்பேர் பஹ்ரைனிய பூர்வீக மக்கள். இவர்களில் பெரும்பான்மையானோர் ஈரானிய ஆயத்துல்லாக்களை பின்பற்றுவதில்லை. தமக்கென தனியான "அக்பாரி" எனும் மதக் கல்லூரியின் தலைமையை ஏற்றுக் கொண்டவர்கள். இந்த மக்கள் பஹ்ரைனிய நாட்டுப்புறங்களில் செறிவாக வாழ்கின்றனர். தலைநகர் மனாமாவில் சுன்னி இஸ்லாமிய மதப்பிரிவை சேர்ந்த அரபுக்கள், மற்றும் வெளிநாட்டு ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகம். பாஹ்ரனின் அரசர் ஹமட் அல் கலிபா, சுன்னி இஸ்லாமிய மதப்பிரிவை சேர்ந்தவர். 187,000 தொகையினரான சுன்னி இஸ்லாமிய- அரபுக்கள் நீண்ட காலமாக பாஹ்ரனின் ஆளும் வர்க்கமாக உள்ளனர். இவர்களின் மூதாதையர் சவூதி அரேபியாவில் இருந்து வந்து குடியேறியிருக்கலாம்.

ஒரு காலத்தில் முத்துக் குளித்தல் மட்டுமே பாஹ்ரைனுக்கு வருமானத்தை ஈட்டித்தரும் முக்கிய தொழிற்துறையாக இருந்தது. எழுபதுகளில் எண்ணெய் வளம் பெருமளவு அந்நிய செலாவணியை ஈட்டித் தந்தது. அருகில் இருக்கும் கட்டார், குவைத் போன்று பாஹ்ரைனும் செல்வந்த நாடாகியது. வளைகுடா நாடுகளில் முதன்முதலாக பாஹ்ரனின் எண்ணெய்க் கிணறுகள் வற்ற ஆரம்பித்தன. இதனால் மாற்றுப் பொருளாதாரமாக வங்கி, நிதித் துறையில் ஈடுபட்டு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதைத் தவிர வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படைத் தளம் பாஹ்ரைனில் அமைந்துள்ளது. அமெரிக்கர்கள் கொடுக்கும் வாடகைப் பணம், பாஹ்ரைன் அரசுக்கு மேலதிக வருமானம். இவ்வளவு செல்வமும் பெரும்பான்மை ஷியா மக்களை போய்ச் சேருவதில்லை. அரசால் புறக்கணிக்கப்பட்டு, ஒரு பணக்கார நாட்டில் ஏழைகளாக வாழும் அவலம் தொடர்கிறது.

இன்று பாஹ்ரைனில் ஒரு மில்லியனுக்கும் சற்று அதிகமான மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 54 % மானோர் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து ஒப்பந்த கூலிகளாக அழைத்து வரப்பட்டவர்கள். எத்தனை வருடம் வேலை செய்தாலும், நிரந்தர வதிவிட அனுமதியோ, பிரஜாவுரிமையோ கிடைக்கும் வாய்ப்பற்றவர்கள். வெளிநாட்டு தொழிலாளர்களில் பெரும்பான்மையானோர் சுன்னி முஸ்லிம்கள். இவர்கள் இன்றைய குழப்பகரமான சூழலில் மன்னருக்கு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளனர். பாஹ்ரைன் அரசு, குறிப்பிட்ட சிலருக்கு பிரஜாவுரிமை வழங்கி சுன்னி முஸ்லிம் எண்ணிக்கையை அதிகரிக்க முயலுவதாக வதந்திகள் உலாவுகின்றன. தனது சொந்த மக்களில் ஒரு பகுதியினர் வறுமையில் வாடும் பொழுது, எதற்காக வெளிநாட்டு தொழிலாளர்களை வரவழைக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். பாஹ்ரைனில் வேலை செய்யும் நம்மவர்களைக் கேட்டால் பின்வருமாறு பதில் வரும். "அவர்கள் உழைக்க விரும்பாத சோம்பேறிகள்." பாஹ்ரைனின் ஆளும் வர்க்கம் கூட, அது போன்ற கருத்தை ஒரு சாட்டாக கூறி வருகின்றது. உண்மையில் இதற்கு இரண்டு காரணங்களை எடுத்துக் காட்ட முடியும்.

1. முதலாளித்துவ பொருளாதாரம் குறைந்த கூலிக்கு சுரண்டப்படும் தொழிலாளிகளை மட்டுமே விரும்புகின்றது. உள்ளூர் மக்கள் இதை விட மூன்று மடங்கு அதிக ஊதியம் எதிர்பார்ப்பார்கள். பாஹ்ரைனின் வாழ்க்கைச் செலவுக்கேற்ப குடும்பத்தை பராமரிப்பதற்கு தற்போது கொடுக்கப்பட்டு அற்பத்தொகை போதாது.
2.அரசின் திட்டமிடப்பட்ட இனப்பாகுபாட்டுக் கொள்கை. பஹ்ரைனில் உண்மையில் ஒரு சிறுபான்மையினம் (சுன்னி முஸ்லிம்), பெரும்பான்மையினத்தை (ஷியா முஸ்லிம்) அடக்கி ஆளுகின்றது. பொருளாதாரத்தை அடக்குமுறைக் கருவியாக பயன்படுத்துவதால் அவர்களின் பலம் குறைக்கப்படுகின்றது.

ஏழை சொல் அம்பலத்தில் ஏறாதல்லவா? ஓரளவு ஜனநாயக மயப்படுத்தப்பட்ட சமீப காலத்தில் கூட, 40 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் ஷியா சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறைவு. ஷியாக்களின் Wifaq கட்சி, 18 ஆசனங்களைக் கொண்டுள்ளது. பாராளுமன்றத்தில் எந்தவொரு சட்டமூலத்தையும் சுன்னி முஸ்லிம் பிரதிநிதிகள் வீட்டோ செய்யும் அதிகாரம் கொண்டுள்ளனர். அதையும் தாண்டிச் சென்றால் மன்னர் ஹமட் அதனை நிராகரிக்கலாம். ஆகவே ஏற்கனவே உள்ள அரசமைப்பின் கீழ் உரிமைகள் கிடைக்காது என்று தெரிந்த பின்னர் தான், ஷியா சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார்கள்.

பாஹ்ரைன் சிறுபான்மையினரின் அரசு, பெரும்பான்மை மக்களை அடக்கி ஆள்வது இலகுவானது அல்ல என்று தெரிந்து வைத்துள்ளது. அதனால் ஏற்கனவே நரித்தனத்துடன் பல திட்டங்களை தீட்டியிருந்தது. பாஹ்ரைனின் இராணுவத்தை தேசிய இராணுவம் என்று கூறுவதை விட, கூலிப்படை என்று அழைப்பதே சாலப்பொருத்தம். பெருமளவு சிப்பாய்கள் அதிகளவு கூலியாள் கவரப்பட்ட பாகிஸ்தானியர்கள். இயல்பாகவே அரேபியர்களை முட்டாள்களாக கருதும் இனவாதம் பாகிஸ்தானியர் மத்தியில் சாதாரணம். அதிலும் பாகிஸ்தானில் கிடைத்தை விட பல மடங்கு அதிக சம்பளம் கிடைக்கின்றது என்றால், பாஹ்ரைன் மன்னருக்கு விசுவாசமான படையினராக இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அத்தகைய கூலிப்படையை கொண்டு போய் விட்டு, "ஆர்ப்பாட்டம் செய்யும் பொது மக்களை சுடு" என்றால், எந்தவித உணர்ச்சியுமற்று சுட்டிருப்பார்கள்.

மக்கள் எழுச்சியை அடக்குவதில் அமெரிக்காவின் பங்களிப்பும் குறைத்து மதிப்பிடத் தக்கதல்ல. பாஹ்ரனில் மேற்கத்திய பாணியிலமைந்த ஜனநாயகம் ஏற்பட்டால் கூட, அது அமெரிக்க நலன்களுக்கு விரோதமாக இருக்கும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட பாராளுமன்றமும், பிரதமர் பதவியும் பெரும்பான்மை ஷியா மக்களின் கைகளுக்கு சென்று விடும். ஷியா முஸ்லிம்களின் விசுவாசம் ஈரானை சார்ந்ததாக இருக்கும். பாஹ்ரைனில் ஈரானின் செல்வாக்கு அதிகரிப்பதை அமெரிக்கா விரும்பப் போவதில்லை. ஏற்கனவே ஈராக்கில் அமெரிக்கா தனக்கு தானே காலில் சுட்டுக் கொண்டது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சதாம் ஹுசைன் ஆட்சியை அகற்றியதால், சிறுபான்மை சுன்னி முஸ்லிம்களிடம் இருந்த அதிகாரம், தற்போது பெரும்பான்மை ஷியா முஸ்லிம்களிடம் சென்று விட்டது. ஈராக் போரின் போதான படை நகர்த்தல்களுக்கு, பாஹ்ரைன் தளத்தில் இருந்து தான் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. வருங்காலத்தில் ஈரான் மீதான தாக்குதல்களுக்கும் பாஹ்ரைன் தளம் அத்தியாவசியமானது. மக்கள் சக்தி ஆளுபவரை மாற்றினால், அமெரிக்க படைத் தளத்தின் இருப்பு கேள்விக்குள்ளாகி விடும். ஈரானைப் பொறுத்த வரை, அது ஒரு இராஜதந்திர வெற்றியாகி விடும்.

Saturday, May 10, 2008

லெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு

மீண்டும் உள்நாட்டுப்போரை நோக்கி நகர்கிறது லெபனான். மீண்டும் இஸ்ரேல், சிரியா, ஈரான், சவூதி அரேபிய, பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய பல அந்நிய சக்திகள் மத்தியகிழக்கின் வாசலான லெபனான் விவகாரங்களில் தலையிடுகின்றன. இருப்பினும் உள்நாட்டில் போராடும் சக்திகளின் அரசியல் சித்தாந்தம் மட்டும் எழுபதுகளில் இருந்தது போன்றில்லாமல் மாறியிருக்கிறது. அப்போது முஸ்லிம்கள்- கிறிஸ்தவர்கள், பாசிஸ்டுகள்-சோசலிஸ்டுகள், என்று பிரிந்து சண்டையிட்ட காலம் அல்ல இது. இஸ்ரேலின் அதி நவீன இராணுவத்துடன் போரிட்டு வென்ற ஹிஸ்புல்லா(கடவுளின் கட்சி) என்ற விடுதலைப்படை, தற்போது லெபனான் அரசாங்கத்திற்கெதிராக தனது துப்பாக்கிகளை திருப்பியுள்ளது.

லெபனான் ஒரு சிறிய தேசமாயினும், பல்வேறு மதப்பிரிவினரை கொண்டுள்ளது. முஸ்லிம்களில் சுன்னி/ஷியா பிரிவினர்கள், தனித்துவமான டுரூசியர்கள், மறோனிய கிறிஸ்தவர்கள் போன்ற பல பிரிவுகள் நீண்ட காலமாக தமக்குள் ஒற்றுமையிலாமல் பிரிந்திருப்பதை, அந்நிய சகதிகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகின்றன. அதேநேரம் லெபனான் அரசியல்நிர்ணய சட்டம், அனைத்து பிரிவினரும் பங்குபற்றும் ஜனநாயகத்தை கொண்டுள்ளது. இந்த சிக்கல் தற்போது முறுகிவரும் உள்நாட்டு போருக்கு காரணம்.

2006 ம் ஆண்டு இஸ்ரேலிய படையெடுப்பின் போது, கண்மூடித்தனமாக குண்டு வீசியும் ஹிஸ்புல்லா இயக்கத்தை அழிக்க முடியவில்லை. மேலும் அதுவே(ஹிஸ்புல்லாவின் அழிவு) அமெரிக்காவின் நோக்கமாகவும் இருந்தது. சர்வதேச கண்டனம் காரணமாக இஸ்ரேலிய படைகள் பின்வாங்கவே, ஹிஸ்புல்லாவை ஓரங்கட்ட வேறொரு வியூகம் வகுத்தது அமெரிக்கா. பொதுத்தேர்தலில் மேற்குலக சார்பு அரசியல் கட்சிகள் பெரும்பான்மை வெற்றி பெறும் என்று எதிர்பார்த்தது. தனக்கு சார்பான சாட் ஹரீரியின் கட்சி வெற்றி பெற பாடுபட்டது. லெபனானில் பணக்காரர்களும், வசதியான மத்தியதர வர்க்கத்தினரும் அனேகமாக சுன்னி முஸ்லீம் பிரிவை சேர்ந்தவர்கள். அந்த பிரிவை சேர்ந்த கோடீஸ்வரரான முன்னாள் பிரதமர் ஹரீரி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதை அடுத்து, அவரது வாரிசு சாட் தலைவரானார். இவருக்கு பக்கபலமாக லெபனான் முதலாளிகள், பணக்காரர்கள் மட்டுமல்ல சவூதி அரேபியா, அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தனர். அவர்கள் எல்லோரும் "சிரியாவின் ஆதிக்கத்திற்கு" எதிராக அணி திரண்டனர். மறுபக்கத்தில் கீழ் மத்தியதர மற்றும் அடித்தட்டு மக்கள் ஷியா மதப்பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பதும், அவர்களை ஹிஸ்புல்லா, அமால், ஆகிய கட்சிகள் பிரதிநிதித்துவ படுத்துவதும், அவர்களுக்கு தொடரும் சிரியாவின் ஆதரவும் பலமான எதிர் சக்திகளாக இருந்தன. கடந்த தேர்தலில் யாரும் பெரும்பான்மை வாக்கு பலத்தை பெறவில்லை. இருப்பினும் ஓரளவு பெரும்பான்மையுடன் ஒரு கூட்டரசாங்கம், சாட் ஹரீரி தலைமையில் மேற்குலக சார்பு மந்திரிசபை, ஷியா கட்சிகளின் தயவிலேயே தப்பி பிழைத்தது. இந்த அரசியல் சிக்கல் யாரை ஜனாதிபதியாக்குவது என்ற சர்ச்சையில் கொண்டுவந்து விட்டது. மேற்குலக சார்பு ஜனாதிபதியா, அல்லது சிரியா சார்பு ஜனாதிபதியா? என்ற பிரச்சினைக்கு முடிவு காண முடியாது 17 மாத காலமாக இழுபட்டது.

அமெரிக்காவின் முழு நோக்கமும், லெபனானில் தனக்கு சார்பான ஒரு பலமான அரசாங்கம் உருவாகி, அது ஹிச்புல்லாவை நிராயுதபாணியாக்க வேண்டும். அதாவது இஸ்ரேல் ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி சாதிக்க முடியாததை, லெபனானின் நோஞ்சான் அரசாங்கம் செய்து காட்ட வேண்டும் என்று மனப்பால் குடித்தது. அப்படி அரசாங்கம் அதை செய்ய தவறினால், வகுப்புவாத பிரிவினையை தூண்டி விட்டு, உள்நாட்டு போர்(அல்லது கலவரங்கள்?) மூலம் அரசியல் வரைபடத்தை மாற்றுவது தான் தற்போது உள்ள திட்டம். ஒரு பக்கம் ஹிஸ்புல்லா இன்னமும் ஆயுதங்கள் வைத்திருக்கிறது என்று கொக்கரித்துக் கொண்டே, சுன்னி முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு இரகசியமாக ஆயுதங்கள் வழங்கப்பட்டன. "எமது நண்பர்கள் ஆயுதங்கள் வைத்திருக்க உரிமை உண்டு. எதிரிகளுக்கு அந்த உரிமை கிடையாது." என்பது அமெரிக்கா அடிக்கடி கூறும் நியாயம்.

மே மாதம் ஏழாம் திகதி நடந்த போது வேலை நிறுத்தம், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக நடந்தது. அதற்கு ஆதரவளித்த ஹிஸ்புல்லா தலைநகர் பெய்ரூட் செல்லும் சாலைகளை மறித்து தடைகள் போட்டது. அதற்கு ஒரு சில நாட்களிற்கு முன்னர் தான் லெபனான் அரசாங்கம் ஹிஸ்புள்ளாவின் தொலைபேசி இணைப்புகளை செயலிழக்க வைக்க முடிவு செய்திருந்தது. ஹிஸ்புல்லா தனது இயக்கத்தின் தனிப்பட்ட தொடர்புக்கு பிரத்தியேகமான தொலைபேசி இணைப்பை கொண்டிருப்பது புதிதல்ல. ஆனால் அது துண்டிக்கப்பட்டால் அந்த இயக்கத்தின் இரகசிய செயற்பாடுகளை கண்டுபிடிப்பது, மற்றும் தலைவர்களின் மறைவிடங்களை அறிவது இலகுவாகி விடும். இப்படியே போனால் தமது ஆயுதங்களும் விரைவில் களையப்படும் என்பதால் விழித்துக்கொண்ட ஹிஸ்புல்லா, அரசாங்கத்தின் முடிவானது, தம்மீதான போர் பிரகடனம் என்று அறிவித்தது.

"யார் எம்மை கைது செய்ய வருகிறார்களோ, அவர்களை நாம் கைது செய்வோம். யார் எம் மீது சுடுகிறார்களோ அவர்கள் மீது நாம் சுடுவோம்." இவ்வாறு மறைவிடத்தில் இருந்து கொண்டு ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உரையாற்றிய பின்னர், ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் ஆயுதபாணிகளாக தலைநகரில் நடமாடினர். அவர்கள் ஒரு சில மணிநேரங்களிலேயே பெய்ரூட் நகரத்தை மட்டுமல்லாது, விமான நிலையத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். மேற்குலக சார்பு அரசியல் தலைவர் சாட் ஹரீரியின் வீடு ஆர்.பி.ஜி. ஷெல் வீச்சுக்கு இலக்கானது. அவர் குடும்ப சொத்தான தொலைக்காட்சி நிலையமும், பத்திரிகை அலுவலகமும் தீக்கிரையாக்கப் பட்டன. பிரதமர், மந்திரிகள், அதாவது முழு அரசாங்கம், பலத்த பாதுகாப்புடன் கூடிய மாளிகை ஒன்றில் தம்மை தாமே சிறை வைத்துக் கொண்டனர். தேசிய இராணுவம் பிரச்சினையில் தலையிடாமல் ஒதுங்கிக் கொண்டது. அதற்கு காரணம், இராணுவத்தில் பெரும்பான்மையாக உள்ள ஷியா வீரர்கள் ஹிஸ்புல்லா அனுதாபிகளாக இருப்பதால், எந்தவொரு எதிர் நடவடிக்கையும் தேசிய இராணுவத்தை சீர்குலைப்பதில் போய் முடியும்.

இரண்டு நாட்கள் மட்டுமே தமது பலத்தை காட்டிய ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்தனர். நடந்த சம்வங்களைவைத்து பார்க்கும் போது, ஹிஸ்புல்லா ஒரு சதிப்புரட்சிக்கு முயன்றதாக தெரியவில்லை. இனி வரப்போகும் போருக்கு ஒத்திகை பார்த்ததாகவே தெரிகின்றது. லெபனான் அரசாங்கம், ஆப்பிளுத்த குரங்கு போல மாட்டிக்கொண்டு முழிக்கிறது. தனது அவமானகரமான தோல்வியை ஒத்துக் கொண்டு, பேசி தீர்ப்போமே என்று இறங்கி வந்துள்ளது. தொலைபேசி இணைப்பை துண்டிக்கும் முடிவை மாற்றி கொள்வதாக கெஞ்சியுள்ளது. அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் முகத்திலும் அசடு வழிந்ததால், ஊடகங்கள் இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நிலைமை தாம் எதிர்பார்த்ததுக்கு மாறாக போய் விட்டதால், அவசர அவசரமாக ஐ.நா. பாதுகாப்பு சபையை கூட்டி பிரச்சினைக்கு சுமுகமான முடிவு காணும் படி வற்புறுத்தப்பட்டது.

தற்போது சூடு தணிந்து விட்டாலும், வெகுவிரைவில் உள்நாட்டு போர் உருவாகும் சாத்தியகூறுகள் உள்ளன. ஏற்கனவே ஹிஸ்புல்லா தன்னை போருக்கு தயார்படுத்தி வந்துள்ளது. பல கிராமங்களில் ஆயிரக்கணக்கான இளம் ஆண்கள் மாயமாக மறைகின்றனர். அவர்கள் சிரியா அல்லது ஈரானுக்கு இராணுவ பயிற்சிக்கு அழைத்து செல்லப்படுவதாக ஊர்மக்கள் பேசிக்கொள்கின்றனர்.

__________________________________________________