Sunday, October 02, 2011

கம்யூனிசத்தை கருவறுத்த சிங்கள மறுமலர்ச்சி

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்]
(பகுதி : எட்டு)


கொழும்பு நகரிற்கு மிக அருகாமையில், இரத்மலானையில் "கொத்தலாவல இராணுவப் பயிற்சிக் கல்லூரி" அமைந்துள்ளது. ஈழப் போர்க்களத்தில் கடமையாற்றிய பல இராணுவ அதிகாரிகளை அங்கே தான் உற்பத்தி செய்து அனுப்பிக் கொண்டிருந்தார்கள். தற்போது தெற்காசிய நாடுகளில் இருந்தும் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்கின்றனர். பனாமா நாட்டில் இயங்கிக் கொண்டிருந்த, லத்தீன் அமெரிக்காவுக்கான இராணுவப் பயிற்சிக் கல்லூரிக்கு நிகராக பேசப்பட்டாலும், அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. கல்லூரிக்கு தனது பெயரை வழங்கிய, ஜோன் கொத்தலாவல இலங்கையின் மூன்றாவது பிரதமராக 1953 முதல் 1956 வரை பதவி வகித்தவர். இலங்கையின் மேட்டுக்குடியில் பிறந்து, பிரிட்டிஷ் காலனிய காவல்துறையில் பணியாற்றியவர். யார் இந்த கொத்தலாவல? லத்தீன் அமெரிக்க நாடுகளின் வலதுசாரி சர்வாதிகாரிகளைப் போன்ற குணாம்சம் பொருந்திய ஒருவர். தீவிர கம்யூனிச எதிர்ப்பாளர்.

கொத்தலாவல ஆட்சிக் காலத்தில் தான் பனிப்போர் தீவிரமடைந்தது. அதே காலகட்டத்தில் தான், இலங்கையும் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் கோரி விண்ணப்பித்திருந்தது. அன்று சோஷலிச நாடுகளைப் பொறுத்த வரையில், இலங்கை ஒரு மேற்குலகிற்கு விசுவாசமான நாடு. ஏறக்குறைய, இஸ்ரேலுக்கும் மேற்குலகிற்கும் இடையிலான உறவைப் போன்று கணித்து வைத்திருந்தார்கள். அதனால், ஐ.நா.வுக்கான இலங்கையின் உறுப்புரிமைக்கும் பெரும் எதிர்ப்புக் கிளம்பியது. பிறிதொரு தருணத்தில், சோவியத் யூனியனும், அமெரிக்காவும் ஒரு பொது உடன்பாட்டிற்கு வந்த பின்னர் தான், இலங்கையை ஐ.நா.சபையில் அனுமதித்தார்கள். இத்தனை சர்ச்சைகளுக்கு மத்தியிலும், பிரிட்டன் இலங்கையுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம், இலங்கையில் தொடர்ந்தும் பிரிட்டிஷ் இராணுவ தளங்கள் இருப்பதற்கு அனுமதிக்கப் பட்டது. 1972 ம் ஆண்டு, திருகோணமலையில் இருந்த கடைசி கடற்படைத் தளம் அகற்றப்படும் வரையில், பிரிட்டிஷ் இராணுவ பிரசன்னம் இலங்கையில் நீடித்திருந்தது.

ஜோன் கொத்தலாவலையின் கம்யூனிச எதிர்ப்புவாதம், இந்தோனேசியாவில் பாண்டுங் மகாநாட்டிற்குப் பின்னர் உலகம் முழுவதும் அறியப் பட்டது. அமெரிக்காவுடனோ, அல்லது சோவியத்துடனோ சேராத, மூன்றாம் உலக நாடுகளின் கூட்டமைப்பான, "அணிசேரா நாடுகளின் உச்சி மகாநாடு பாண்டுங் நகரில் நடைபெற்றது. நேரு, சூ என் லாய் போன்ற பிரபல உலகத் தலைவர்கள் சமூகமளித்திருந்தனர். ஐரோப்பிய காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலையடைந்த நாடுகளின் மகாநாடு என்பதால், இலங்கைக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இலங்கை சார்பில் கலந்து கொண்ட ஜோன் கொத்தலாவல, சீனா வெளிவிவகார அமைச்சர் சூ என் லாய் யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நேரு இடையில் புகுந்து, அவர்களுக்கு இடையில் சமாதானம் செய்து வைக்க வேண்டியதாயிற்று. மகாநாட்டில், ஜோன் கொத்தலாவல தெரிவித்த கருத்துக்கள், மேற்கத்திய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றன. "காலனியாதிக்க நாடுகள் புரிந்த படுகொலைகளை கண்டிப்பவர்கள், கம்யூனிச நாடுகளில் நடந்த படுகொலைகளை கண்டிப்பதில்லை. பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை எதிர்ப்பவர்கள், சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பிய நாடுகளை காலனிகளாக வைத்திருப்பதை எதிர்ப்பதில்லை...."

அமெரிக்காவில், மக்கார்த்தியிசம் இடதுசாரிகளை வேட்டையாடி ஒடுக்கியது. அப்போது பல கம்யூனிச இலக்கியங்கள் தடை செய்யப்பட்டன. ஒரு காலத்தில், இலங்கைக்குள் மார்க்சிய கொள்கைகளை தாங்கிய நூல்கள், சஞ்சிகைகள் கொண்டு வருவதை தடை செய்திருந்தார்கள். குறிப்பாக, சோவியத் ஒன்றியம், சீனா போன்ற நாடுகளில் இருந்து அனுப்பப்படும் நூல்கள் யாவும், சுங்கப் பரிசோதனையில் பறிமுதல் செய்யப்பட்டன. சில வேளை, அவை அங்கேயே எரிக்கப்பட்டன. 1955 ல் மீண்டும் ஒரு ஹர்த்தால் மிரட்டியதால், கொத்தலாவல வரிந்து கட்டிக் கொண்டு கம்யூனிஸ்டுகளுடன் மோதலுக்கு தயாரானார். இலங்கை வரலாற்றில் முதன் முதலாக, பாராளுமன்ற அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட சிறப்பு பொலிஸ் படையணி ஒன்று அமைக்கப் பட்டது. பொலிஸ் மா அதிபருக்கு கட்டுப்படாத, கொத்தலாவலைக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமைப் பட்ட அந்தப் பிரிவினர், அரச எதிரிகளை கண்காணிக்கத் தொடங்கினர். மார்க்சியர்கள் மட்டுமல்லாது, அனைத்து தரப்பினர் குறித்தும் தகவல்கள் திரட்டப் பட்டன. தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப் பட்டன. தபால்கள் உடைத்து வாசிக்கப் பட்டன. இதைவிட, பச்சை வர்ண சீருடை அணிந்த துணை இராணுவக் குழு ஒன்றும் உருவாக்கப் பட்டது. பச்சை ஐக்கிய தேசியக் கட்சியின் வர்ணம் என்பது குறிப்பிடத் தக்கது.

பிரிட்டிஷ் காலனிய எஜமானர்களால் "சேர்" (Sir) பட்டம் வழங்கப்பட்ட, ஜோன் கொத்தலாவல பிரதமராக பதவியேற்ற முதல் நாளில் இருந்தே கம்யூனிசத்தோடு மல்லுக் கட்ட ஆரம்பித்து விட்டார். "கம்யூனிசத்தை இலங்கையில் இருந்து துடைத்தெறிவதே எனது முதலாவது கடமையாகும்..." என்று இலங்கை வானொலியில் முழங்கினார். வாய்ச்சொல்லுடன் நின்று விடாது செயலில் இறங்கினார். இலங்கை தோழர்களின் அழைப்பை ஏற்று வரவிருந்த, கயானா நாட்டு பொதுவுடமைவாதி செட்டி ஜெகனை நாட்டிற்குள் வரவிடாமல் தடுத்தார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவர், பறங்கியர் இனத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் மீது இனவாத சேற்றை அள்ளி வீசினார். இலங்கையில் பொதுவுடைமை இயக்கத்தை சிதைக்க வேண்டுமானால், இனவாத நஞ்சை ஊட்ட வேண்டும் என்று கொத்தலாவல கண்டுகொண்டார். ஒருவகையில் பறங்கிய இனத்தின் மீதான ஒடுக்குமுறையின் ஆரம்பமாகவே, அந்த நிகழ்வைக் கருத வேண்டியுள்ளது. ஏனெனில், 1961 ல், "இராணுவ சதிப்புரட்சிக்கு திட்டமிட்டதாக" குற்றம் சாட்டி, பறங்கி இன அதிகாரிகள் சிலர் கைது செய்யப்பட்டனர். அந்த நிகழ்வுக்குப் பின்னர், பெருமளவு பறங்கியர்கள் பும்பெயர்ந்து விட்டனர். சிங்கள பேரினவாதமானது, பறங்கி சிறுபான்மையினத்தை எவ்வாறு ஒடுக்கியது, என்பதில் இருந்து தமிழ் தேசியம் பாடம் கற்றுக் கொள்ளத் தவறி விட்டது.

உண்மையில், சிங்களப் பேரினவாதத்தின் தமிழர்கள் மீதான பாய்ச்சல், ஆரம்பத்தில் இந்தியத் தமிழர்களை மட்டுமே குறி வைத்தது. அதற்குக் காரணம், சர்வதேச பொருளாதார நெருக்கடியால், இலங்கையில் ஏற்பட்ட சமூக-பொருளாதார மாற்றம். ஆங்கிலேயரின் காலனிய காலத்தில் இருந்து, இந்தியத் தமிழர்கள் தொழில் தேடி வருவது வழமையானது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், கூடவே பொருளாதார நெருக்கடியும் வந்து விட்டதால், இந்திய குடியேறிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஐம்பதுகளிலும், கொழும்பு சென்றால் தொழில் வாய்ப்பு கிடைக்கும் என்றெண்ணி, பெருந்தொகை இந்தியர்கள் வந்து கொண்டிருந்தனர். இவர்களில் பலர், ராமேஸ்வரம்-மன்னார் வழியாக படகுகளில் வந்திறங்கியதால், "கள்ளத் தோணிகள்" என்று அழைக்கப் பட்டனர். அரசைப் பொறுத்த வரையில், இவர்கள் எல்லோரும் "சட்டவிரோத குடியேறிகள்". அதனால், சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்களை தடுத்து வைத்து நாடு கடத்தினார்கள். கொத்தலாவலையின் இந்திய எதிர்ப்புணர்வும், இனவாதக் கருத்தியலும் சேர்ந்து கொண்டமையால்; பெரும்பாலும் இந்தியத் தமிழர்கள் பொலிஸ் நெருக்குவாரங்களுக்கு ஆளானார்கள். நாட்டினுள் சட்டப்படி தங்கியிருந்த இந்தியத் தமிழர்களும் கைது செய்யப் பட்டனர். இன்றைய காலத்தில், உதாரணத்திற்கு மலேசியாவில், வெளிநாட்டு தொழிலாளர் துன்புறுத்தப்படுவது போன்ற நிலைமைக்கு ஒப்பானது, அன்று நடந்த சம்பவங்கள்.

ஒரு பக்கம், இந்தியத் தமிழர்களை துன்புறுத்திக் கொண்டிருந்த கொத்தலாவல அரசு, மறுபக்கத்தில், இலங்கைத் தமிழர்களின் நண்பனாக காட்டிக் கொண்டது. செப்டம்பர் 1954 ல், யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த கொத்தலாவல, "சிங்களத்தோடு, தமிழையும் அரச கரும மொழிகளாக்குவதாக" வாக்குறுதி அளித்தார். உண்மையில், மேலைத்தேய கலாச்சாரத்தில் ஊறிய கொத்தலாவல, தமிழை மட்டுமல்ல, சிங்களத்தை கூட அரச கரும மொழியாக்குவதை விரும்பவில்லை. ஒரு தடவை புத்த பிக்குகளுடனான விவாதத்தில் பின்வருமாறு கூறினார். "ஆங்கிலத்தில் இருந்து சிங்களத்திற்கு மாறுவது படிப்படியாக நடைபெற வேண்டும். தாய்லாந்தில் நடந்த தவறுகளை நாம் திருப்பிச் செய்யக் கூடாது. ஆங்கிலத்தில் கருமமாற்றக் கூடிய படித்தவர்களை வெளியேற்றி விட்டு, அந்த இடத்தில் தகுதியற்ற நபர்களை போட்டுள்ளனர். தாய்லாந்து மொழியில் மட்டுமே கல்வி கற்ற மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல முடியாது தடுமாறுகின்றனர்."

கொத்தலாவலையின் ஆங்கில மொழி மீதான பற்று மட்டுமல்ல, தமிழுக்கும் சம அந்தஸ்து அளிக்கும் வாக்குறுதியும், சிங்கள பேரினவாதிகளை, குறிப்பாக இனவாத பிக்குகளை ஆத்திரமூட்டியது. இன்று தமிழ் குறுந் தேசியவாதிகள், "நாம் மட்டுமே உரிமைக்காக போராடினோம்... சும்மா இருந்த முஸ்லிம்கள் இடையிலே புகுந்து தமக்கும் பங்கு கேட்கிறார்கள்...." என்று வியாக்கியானம் செய்கின்றனர். அன்று சிங்கள பேரினவாதிகள், அதே வாதத்தை முன் வைத்து தான், தமிழுக்கு சம அந்தஸ்து வழங்க மறுத்தார்கள். ஆரம்பத்தில் பண்டாரநாயக்கவும், அவரது சுதந்திரக் கட்சியும், "சிங்களத்தை உத்தியோகபூர்வ மொழியாகவும், தமிழை பிராந்திய ஆட்சி மொழியாகவும் அங்கீகரிக்கும்" கொள்கையை கொண்டிருந்தார்கள். பின்னர், "சிங்களம் மட்டும்" கோரிக்கை தீவிரமடைவதைக் கண்டு பின்வாங்கினார்கள். 1956 ம் ஆண்டு தேர்தலில், சிங்களம் மட்டும் சட்டத்தை அமுல் படுத்துவதாக வாக்களித்த பண்டாரநாயக்கவின் கட்சி வெற்றி பெற்றது. அதே ஆண்டு, ஐக்கிய தேசியக் கட்சியும் சிங்களம் மட்டும் கொள்கையை பின்பற்றுவதாக அறிவித்தது. கடைசி வரை விட்டுக் கொடுக்காமல், இரு மொழிக் கொள்கையை பின்பற்றிய இடதுசாரிகளும், தேசிய நீரோட்டத்துடன் கலக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. "சிங்களம் மட்டும்" கொள்கையை ஆதரிக்காதவர்கள் அனைவரும் இனத் துரோகிகள் என்ற அறிவிப்பு, இடதுசாரிகளை கலக்கமடைய வைத்தது. அவர்களது கலக்கத்தை மெய்ப்பிப்பது போல ஒரு சம்பவம் நடந்தது.

11 -10 -1955 அன்று, கொழும்பு நகரசபை மண்டபத்தில், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஆங்கிலத்திற்குப் பதிலாக, "சிங்களத்தையும், தமிழையும் ஆட்சி மொழிகளாக்க கோரும்" வெகுஜன இயக்கத்தின் கூட்டம் அது. இன, மத வேறுபாடுகளை மறந்து,ஒன்று திரண்டிருந்த மக்கள் மீது, சிங்களப் பேரினவாதிகள் தாக்குதல் நடாத்தினார்கள். கூட்டத்தில் ரகளை பண்ணியவர்களில் புத்த பிக்குகளும் அடங்குவர். கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் திருப்பித் தாக்கினார்கள். புத்த பிக்குகளை தாக்கிய செயல், பழமைவாத சமூகத்தில் அனுதாபத்தை ஏற்படுத்தியது. சிங்கள பேரினவாதிகள், மக்களின் அனுதாபத்தை தமக்கு சாதகமாக வென்றெடுத்தார்கள். நகரத் தெருக்களில் குழுமிய புத்த பிக்குகள், கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் கல் வீசினார்கள். அருகில் இருந்த தமிழர், முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளை அடித்து நொறுக்கினார்கள். "தமிழர், முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்கள இடதுசாரிகளும் எமக்கு எதிரிகள்." என்று சிங்கள பேரினவாதம் அறிவித்தது. முஸ்லிம்களையும், இடதுசாரிகளையும் இணைத்து, சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்திருக்க வேண்டிய தமிழ் தேசியவாதிகள், அந்த வாய்ப்பையும் தவற விட்டார்கள்.

சிங்கள தேசியவாதமும், தமிழ் தேசியவாதமும் ஒன்றோடொன்று தொடர்பற்று தனித்தனியாக வளர்ந்தது போலத் தோன்றலாம். இரண்டு பக்க கொள்கை வகுப்பாளர்களும் அவ்வாறான பரப்புரைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். சிங்கள தேசியவாதிகள் "சிங்கள இனத்தை அழிக்கத் துடிக்கும் இந்திய மேலாதிக்கத்தை எதிர்க்கும் இனப் பாதுகாப்பு போராட்டம்," நடத்துகின்றனர்! தமிழ் தேசியவாதிகள்,"தமிழ் இனத்தை அழிக்கத் துடிக்கும் சிங்கள மேலாதிக்கத்தை எதிர்க்கும் இன விடுதலைப் போராட்டம்,"நடத்துகின்றனர். இரண்டு தேசியங்களினதும் தோற்றத்திற்கு வழி சமைத்த சமூக-பொருளாதாரக் காரணிகள் ஒன்றாகவே இருந்துள்ளன. பிரிட்டிஷ் காலனிய மேலாதிக்கம், இவ்விரண்டு தேசியங்களையும் அடக்கி ஆண்டது. அவற்றின் மொழி, மத, கலாச்சார அடையாளங்களை அங்கீகரிக்கவில்லை. காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்ற பின்னர், ஆங்கிலேய விசுவாசிகளான மேட்டுக்குடி ஆட்சி செய்தது. இந்த வர்க்கத்தினர், ஆங்கிலம் பேசும் கிறிஸ்தவர்களாக மட்டுமல்ல, கொவிகம-வெள்ளாள உயர்சாதியை சேர்ந்தவர்களாகவும் தம்மை அடையாளப் படுத்தி வந்தனர். தேசத்தில் சிங்கள-தமிழ் மொழி பேசும் பெரும்பான்மை மக்களின் நலன்களை பிரதிபலிக்காத, சிறுபான்மையினரின் ஆட்சியாகவே அதனைக் கருத வேண்டும்.

கம்யூனிச விரோத பிரதமரான கொத்தலாவல காலத்தில், சிறுபான்மை வர்க்க ஆட்சியின் உச்சகட்ட ஊதாரித்தனத்தை நேரடியாக காண முடிந்தது. கொத்தலாவலையின் பெருங்குடியும், பெண் பித்தும் ஊரறிந்த விடயங்கள். பிரதமரின் அலுவலகத்தை அலங்கரிக்கும் ரோஸ் நிற புடவை அணிந்த சிட்டுக்கள், அறுபது அழகிய கன்னியர்கள் இழுத்துச் சென்ற பிரதமரின் அலங்கார ஊர்தி, இது போன்ற சூடான கிசுகிசு செய்திகள் நாளேடுகளின் விமர்சனத்திற்கு உள்ளாகின. போதாக்குறைக்கு, பசுக்கன்று இறைச்சியை தணலில் வாட்டி உண்ட, ஐரோப்பிய பாணி "பார்பகியூ விருந்து" மத நம்பிக்கையாளர்களின் மனதை புண்படுத்தியது. பௌத்த பிக்குகளும், பழமைவாத சிங்களவர்களும், இவற்றை எல்லாம் "ஐரோப்பிய சீரழிவுக் கலாச்சாரமாகவே" பார்த்தார்கள்.

உயர்சாதி கொவிகமவினர் மட்டுமே அரசியல் ஆதிக்கம் செலுத்திய தேசத்தில், பிற சாதியினருக்கு உரிமைகள் மறுக்கப் பட்டிருந்தன. அந்த சந்தர்ப்பத்தை சிங்கள தேசியவாதம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. இன தேசியவாத உணர்வூட்டுவதன் மூலம், சிங்கள தேசியவாதம் அனைத்து சாதிகளையும் உள்வாங்கிக் கொண்டது. வட மாகாணத்தில் இதே வேலையே தமிழரசுக் கட்சியினர் செய்து கொண்டிருந்தனர். சாதிவாரியாக பிளவுண்ட தமிழர்களை ஒன்று சேர்க்கும் தமிழ் தேசியத்தை அறிமுகப் படுத்தினார்கள். சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் வருகைக்கு முன்னர், இடதுசாரிகள் மட்டுமே அனைத்து சாதிகளையும் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைத்திருந்தனர். ஆனால், அவர்கள் தான் "முதலாளிகளுக்கு விரோதமான கடவுள் மறுப்பாளர்கள்" ஆயிற்றே! அப்படியான சக்தி இலங்கையில் பலம் பெறுவதை, மதகுருக்களும், உள்நாட்டு முதலாளிகளும் விரும்புவார்களா? பௌத்த-இந்து மதவாதிகள், சிங்கள-தமிழ் முதலாளிகள், இவர்களின் நலன்களை ஒரு தேசியவாத அரசு மட்டுமே நிச்சயப் படுத்தும்.

(தொடரும்)

....................................................................
இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:
7. அரிசி வேண்டுமா? அல்லது "சிங்களம் மட்டும்" வேண்டுமா?
6. ஆங்கிலேய அடிவருடிகளின் அற்புதத் தீவு
5. ஆங்கிலேயர் புறக்கணித்த "சிங்கள-தமிழ் மொழிப்பிரச்சினை"
4. மார்க்ஸியம்: சிங்கள-தமிழ் தேசியவாதிகளின் பொது எதிரி
3. உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி
2. பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்
1. சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்

2 comments:

Mohamed Faaique said...

இலங்கை அரசியலில் ”சாதி” இவ்வளவு தாக்கம் செலுத்தி இருக்கிறதா???

சீனிவாசன் said...

பிரித்தானியர்களின் காலத்தில் இருந்து இலங்கையின் அரசியல் நிலவரங்களை சிறப்பான முறையில் விளக்கி வருகிறீர்கள். அதிகம் நாங்கள் அறிந்திராத செய்திகளின் வாயிலாய் இனப்பிரச்சனையின் வேரை குறித்து சிறப்பான புரிதலை எமக்கு ஏற்படுத்தியமைக்கு நன்றி. தொடர்ந்து சிறப்பான முறையில் கட்டுரை அளிக்க வாழ்த்துக்கள்.

ஏகாதிபத்தியம் தனது நலன்களை தொடர்ந்து பாதுகாத்துகொள்ள உலகில் எங்குமே கம்யூனிசம் வளராதபடி பார்த்துகொள்கிறது, ஏகாதிபத்தியத்தின் வாரிசுகளான தேசியவாதிகளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களை திசைதிருப்ப, வர்க்கமாய் மக்கள் ஒன்றாவதை தடுக்க இனவாதத்தை முன்னிறுத்துகின்றனர்.கட்டுரையின் முடிவிலுள்ள வரிகளில் உள்ளது போல் மத அடிப்படைவாத, பெரு முதலாளிகளின் நலனுக்கு தேசியவாதமே உகந்ததாக உள்ளது.