Wednesday, October 19, 2011

நவ நாஜிகளின் ஆக்கிரமிப்பின் கீழ் ஒரு ஜெர்மன் கிராமம்


ஹிட்லரின் மறைவுக்குப் பின்னர், முதன் முதலாக ஒரு ஜெர்மன் கிராமம் நாஜிகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. வட ஜெர்மனியில், ஹம்பூர்க் நகரில் இருந்து 200 கி.மி. தொலைவில் உள்ளது, யமெல் (Jamel). யமெல் ஒரு சாதாரண ஜெர்மன் கிராமம் அல்ல. அங்கே வாழ்பவர்களும் சாதாரண ஜெர்மனியர்கள் அல்ல. நாசிச கொள்கைப் பற்றுடையவர்கள் மட்டுமே அந்தக் கிராமத்தில் வாழ முடியும். நாசிசத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கு அங்கே இடமில்லை. பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்தாலும், தமது வீடுகளை, சொத்துகளை இழந்து தப்பியோட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை.

கிராமத்தில் பெரும்பான்மையானோர், நவ நாஜிகளாக மாறி விட்டதால், மாற்றுக் கருத்துக்கள் அங்கே மதிக்கப் படுவதில்லை. நவ நாசிகள், மாற்றுக் கருத்தாளர்கள் மீது வசை பாடுவதுடன் மட்டும் நின்று விடுவதில்லை. பலரின் உடலுக்கு ஊறு விளைவிக்கும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. நவ நாஜிகளை எதிர்ப்பவர்களின் வீடுகள் எரிக்கப் பட்டுள்ளன. அண்மைய போலிஸ் நிலையம் 12 கி.மி. தொலைவில் உள்ளதால், உயிரச்சம் காரணமாகவே பலர் வெளியேறி விட்டனர். போலிஸ் இருந்தாலும், மாற்றுக் கருத்தாளர்களுக்கு எந்த வித பாதுகாப்பும் அளிப்பதில்லை. அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான நகரபிதா, அரசியல் தலைவர்கள், யாருமே எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாத கையறு நிலையில் உள்ளனர். ஒரு தடவை, உள்துறை அமைச்சகத்தில் இருந்தும் அதிகாரிகள் வந்து பார்த்தார்கள். வெறும் கவலையை மட்டும் தெரிவித்து விட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.

யமெல் கிராமத்தின் கட்டுப்பாடு முழுவதும், குருய்கெர் (Krüger) என்பவரின் தலைமையின் கீழ் இயங்குகின்றது. ஜெர்மனியில் நவ நாஜிகளின் அரசியல் கட்சியாக கருதப் படும் NPD யின் முக்கிய உறுப்பினர். இவரது திருமண விழாவில், NPD கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மாத்திரமல்லாது, ஐரோப்பிய நவ நாஜிகளும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். அன்றிலிருந்து, யமெல் ஏறக்குறைய ஐரோப்பிய தீவிர வலதுசாரிகளின் யாத்திரை ஸ்தலமாகி விட்டது. தீவிர வலதுசாரிகள், அந்தக் கிராமத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுகின்றனர். ஹிட்லரின் பிறந்தநாள் கொண்டாடுகின்றனர். நாசிச பிரச்சார பாடல்கள் ஒலிக்கும் இசை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. யமெல் கிராமத்திற்கு விஜயம் செய்வோர், சிறுவர்கள் கூட நாசிச பாணியில் வணக்கம் செலுத்துவதைக் காணலாம். ஜெர்மனியில் அந்த வகை சல்யூட் அடிப்பது தடை செய்யப் பட்டுள்ளது. ஆனால், யமெல் கிராமத்தில் அது சர்வ சாதாரணம். கிராம மத்தியில், "Braunau am Inn 855 km" என்றொரு இடத்தை சுட்டும் பலகை வைக்கப் பட்டுள்ளது. அந்த ஊர் வேறு எதுவுமல்ல, இன்றைய ஆஸ்திரியாவை சேர்ந்த, ஹிட்லரின் பிறந்த ஊரைக் குறிப்பிடுகின்றது.

யமெல் நாஜிகளின் தலைவன் குருய்கெரின் தந்தை, முன்னை நாள் நாஜி கட்சி உறுப்பினர். அந்தக் கிராமம் ஒரு காலத்தில், சோஷலிச கிழக்கு ஜெர்மனிக்கு சொந்தமாக இருந்தது. அந்தக் காலங்களில் க்ருய்கெர் குடும்பம் வெளியில் இனங்காட்டிக் கொள்ளாமல், அடக்கத்துடன் வாழ்ந்து வந்தது. தொண்ணூறுகளுக்குப் பின்னர், அதாவது பெர்லின் மதில் உடைந்த பின்னர், NPD கட்சியில் இணைந்து கொண்டனர். NPD தன்னை ஒரு சாதாரண ஜனநாயகக் கட்சியாக காட்டிக் கொண்டாலும், ஹிட்லரின் NSDAP கட்சியின் நீட்சியாகவே இயங்கி வருகின்றது. 1933 ல் ஹிட்லரின் NSDAP வெளியிட்ட தேர்தல் அறிக்கைக்கும், இன்று NPD வெளியிடும் தேர்தல் அறிக்கைக்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லை.

இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும், ஜெர்மன் அரசு NPD கட்சியை தடைசெய்யவில்லை. ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்பனவற்றின் பெயரால், அவர்களின் இருப்பை நியாயப்படுத்தி வருகின்றது. NPD கட்சியை சேர்ந்த நவ நாஜிகளின் கட்டுப்பாட்டில் உள்ள யமெல் கிராமத்தில், ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் மதிக்கப் படுவதில்லை. இது குறித்து ஜெர்மன் அரசும் அலட்டிக் கொள்ளவில்லை. ஐரோப்பாவில் இதுவரை காலமும், வெளிநாட்டவர்கள் மட்டுமே நவ நாஜிகளின் வன்முறைக்கு இலக்காகினார்கள். ஆனால், பாசிஸ்டுகள் தமது சொந்த இனத்தை சேர்ந்தவர்கள் மீதும் பாய்ந்து குதறுவார்கள் என்பதை, யமெல் சம்பவங்கள் நிரூபிக்கின்றன. வரலாறு திரும்புகின்றது. ஜெர்மனி மீண்டும் ஹிட்லர் காலத்தை நோக்கிச் செல்கின்றது. ஜெர்மன் அரசு மட்டும், "இங்கே எதுவுமே நடக்கவில்லை" என்று மழுப்பிக் கொண்டிருக்கிறது.

********************************

Neo-Nazis dominate tiny German village

நவ நாஜிகளின் கட்டுப்பாட்டில் உள்ள, யமெல் கிராமம் குறித்து நெதர்லாந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட நிகழ்ச்சியின் ஒளிப்பதிவு கீழே:
sitestat

Neo-Nazis dominate tiny German village

3 comments:

சார்வாகன் said...

வரலாறு திரும்புவது போல் உள்ளது.பதிவுக்கு நன்றி

Mohamed Faaique said...

பகிர்விற்கு நன்றி..

aotspr said...

உங்கள் அலசல் மிக அருமை......
தொடர்ந்து எழுதுங்கள்.....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com