Wednesday, April 28, 2010

ஸ்பெயின்: ஒரு ஐரோப்பிய போரின் ஆறாத ரணம்

"அப்போதுதான் நாடாளுமன்றக் கூட்டம் சூடுபிடித்திருந்தது. வரவிருக்கும் ஆண்டுகளில் தமது திட்டங்களை ஆளும் கட்சி அறிவித்துக்கொண்டிருந்தது. திடீரென பாராளுமன்றத்தினுள் சில இராணுவத்தினர் துப்பாக்கிகள் சகிதம் உள் நுழைந்தனர். அவர்களில் அதிகாரி போலிருந்தவர் சபாநாயகரின் ஒலிவாங்கியைப் பறித்து அரசாங்கத்தை திட்டித்தீர்த்தார். தொடர்ந்து பல கூக்குரல்கள், அதைத் தொடர்ந்து சடசடவென வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. பாராளுமன்ற உறுப்பினர்கள் கதிரைகளின் கீழ் ஒழிந்து கொண்டனர்.

வானொலியில் பாராளுமன்ற நடப்புகளைக் கேட்டுக்கொண்டிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். வதந்திகள் காட்டுத்தீபோல் நாடு முழுவதும் பரவின. தலைநகரத்தில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இராணுவமும் பொலிஸ{ம் ஆக்கிரமித்துக்கொண்டன. ஆழும் கட்சியான சோஷலிசக் கட்சியின் தலைமையலுவலகத்திற்கு முன்பு கவச வாகனத்தின் பீரங்கி குறிபார்த்தது . பொதுமக்கள் அவசர அவசரமாக வீடுகளுக்குள் பதுங்கினர். "

மேற்படி சம்பவம் நடந்தது எங்கோ ஒரு "அபிவிருத்தியடையாத" மூன்றாம் உலக நாட்டில்அல்ல. "அபிவிருத்தியடைந்த" மேற்கு ஐரோப்பிய நாடான ஸ்பெயினில், 1981 ம் ஆண்டு பெப்ரவரி 23 ம்திகதி இது நடைபெற்றது. ஐரோப்பியக் கண்டத்தில் துருக்கி, கிறீஸ் போன்று ஸ்பெயினிலும் உண்மையான ஆட்சியதிகாரம் திரைமறைவில் இராணுவத்தின் கைகளில்தான் இருக்கிறது. என்னதான் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் இராணுவத்தை பகைக்காத வகையில் ஆட்சியில் நிலைக்கலாம். 1981 ம்ஆண்டு ஸ்பெயினில் இராணுவச் சதிப்புரட்சிக்கான சந்தர்ப்பம் இருந்த போதும் அது வெறும் எச்சரிக்கையுடன் நின்று விட்டது.

ஸபெயினில் இராணுவத்தின் ஆதிக்கம் உள்நாட்டுப் போரில் இருந்தே நிலைத்து வருகின்றது. ஸ்பெயின் உள்நாட்டுப்போர் இரண்டாம் உலகப் போரின் தொடக்கம் என்றும், பல சரித்திரவாசிரியர்களால் கூறப்படுகின்றது. ஒருபுறம் வலதுசாரிப் பாஸிச இராணுவமும், மறுபுறம் இடதுசாரி ஆயுதக் குழுக்களும் கோடிக்கணக்கான மக்களைப் பலி கொண்ட போரில் ஈடுபட்டிருந்தன. 1936 ம் ஆண்டு யூலையில் ஆரம்பமாகியது இப் போர். நெப்போலியனின் ஐரோப்பியப் படையெடுப்பால் பாதிக்கப்பட்டிருந்த ஸ்பெயின் மன்னர் அல்போன்சோ, அந்த வருடம் பொதுத் தேர்தலை அறிவித்தார். அந்தத் தேர்தலில் லிபரல்களும் சோஷலிஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் மாபெரும் வெற்றியீட்டினர். வெற்றியீட்டிய கடசிகள் "மக்கள் முன்ணணி" அல்லது "குடியரசுவாதிகள்" என அழைக்கப்பட்டனர். இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் முடியாட்சியை ரத்ததுச் செய்துவிட்டு குடியரைப் பிரகடனம் செய்தனர். கத்தோலிக்க மதத்தின் பிடியில், நிலவுடைமைச் சமுதாயம் நிலவிய ஸ்பெயினில் நிலச்சீர்திருத்தச் சட்டத்தை அறிவித்தனர். வரவிருக்கும்ஆபத்தையுணர்ந்துகொண்ட மன்னர் குடும்பத்தோடு நாட்டை விட்டோடினார்.

புதிய இடதுசாரி அரசாங்கத்தின் முடிவுகளில் அதிருப்தியுற்ற கத்தோலிக்கத் தேவாலயங்கள், முடியாட்சி ஆதரவாளர்கள் ஆகியோர் ஸ்பானியப் பாசிசக்கட்சியான ஃபலாங்கிஸ்டுக்கள் தலைமையில் ஒன்று திரண்டனர். வலது சாரிப் பிற்போக்குவாதிகள் நிறைந்திருந்த ஸ்பானிய இராணுவம் அரசாங்கத்திற்கெதிராகக் கிளர்ச்சி செய்ததது. ஃபலாங்கிஸ்டுக்கள் இந்தக் கிளர்ச்சியை வழிநடத்தினர். ஜெனரல் பிராங்கோவின் தலைமையில் ஆரம்பித்த கிளர்ச்சியாளர்கள் தெற்கு ஸ்பெயினிலும், மொறோக்கோவிலும் (ஸ்பெயின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்கள்) இராணுவ முகாம்களை தமது கட்டப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

ஸ்பெயினின் (மறக்கப்பட்ட) உள்நாட்டுப்போர் இவ்வாறுதான் ஆரம்பமாகியது. அதே காலத்தில் இத்தாலியில் முசோலினியின் பாஸிசக்கட்சியும், ஜேர்மனியில் ஹிட்லரின் நாஸிக்கட்சியும் ஆட்சி நடாத்தின. இவர்கள் ஸபெயினில் தமது தோழர்களான ஃபலாங்கிஸ்டுக்களுக்கு மனமுவந்து உதவி செய்தனர். இத்தாலியின் காலாட்படையினரினதும், ஜேர்மன் விமானப் படையினரினதும் உதவியோடு ஃபலாங்கிஸ்டுக்கள் தலைமையிலான இராணுவம் விரைவிலேயே தெற்கு மற்றும் மேற்கு ஸ்பெயினின் பல இடங்களைக் கைப்பற்றினர். தலைநகரமான மட்றிட் இரண்டாவது பெரிய நகரமான பார்சலோனா உட்பட கிழக்கு ஸ்பெயினில் குடியரசுவாதிகளும், இடதுசாரிக்கட்சிகளும் ஆதிக்கம் செலுத்தினர். லிபரல்கள் தலைமை தாங்கிய குடியரசுவாதிகளின் அரசாங்கத்திற்கு பிரான்ஸ் உதவி செய்து வந்தது. ஆனால், "நடுநிலைமை" வகித்த இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளின் வற்புறுத்தலால் பிரான்ஸ் தனது ஆயுத விநியோகத்தை நிறுத்தியது. "சர்வதேச சமூகத்தால்" கைவிடப்பட்ட நிலையிலும், கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கினாலும் அரசாங்கம் சோவியத் யூனியனின் உதவியை நாடவேண்டியேற்பட்டது.

இதேவேளை மொஸ்கோவில் தலைமையகத்தைக் கொண்டிருந்த சர்வதேசக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அமைப்பான "கொமின்தேர்ன்" ஸ்பெயினின் உள்நாட்டுப்போரில் தலையிடுவதென முடிவு செய்தது. அன்றைய சோவியத் யூனியன் அதிபரான ஸ்டாலினின் உத்தரவின் பேரில் ஆயுதத் தளபாடங்கள் ஸ்பெயினுக்கு அனுப்பப்பட்டன. உள்நாட்டுப் போரின் வரலாற்றில் ஸ்பெயின் குடியரசு அரசாங்கத்திற்குக் கிடைத்த ஒரேயொரு வெளிநாட்டு உதவி சோவியத் யூனியனிலிருந்துதான் வந்தது.

இதைவிட அமெரிக்காவிலும், மேற்கு ஐரோப்பாவிலும் இருந்த கம்யூனிஸ்ட்கட்சிகள் தத்தமது நாடுகளில் தொண்டர்படைக்கு ஆட்களைத் திரட்டினர். குறிப்பாக அமெரிக்காவிலிருந்து "ஆபிரகாம் லிங்கன் படைப்பிரிவு" ஒரு கறுப்பினக் கொமாண்டரின் தலைமையின் கீழ் அனுப்பப்பட்டமை அமெரிக்க வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகும். பன்னாட்டுத்தொண்டர் படைகள் ஸ்பெயினின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின் கீழ் போரிட்டனர். இதே நேரம் காலத்தின் தேவையை உணர்ந்து கொண்ட குடியரசு அரசாங்கம் மக்கள் ஆயுதக் குழுக்களை அமைக்க அனுமதி வழங்கியது. அரசாங்கத்திற்கு ஆதரவான இராணுத்தினர் இந்தக் குழுக்களுக்கு தலைமை தாங்கினர். அரச ஆயுதக் களஞ்சியத்திலிருந்து அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டன. அப்போதிருந்த பிற இடதுசாரிச் சக்திகளான அனார்கிஸ்டுகளும், ட்ரொட்கிஸ்டுகளும் தத்தமது மக்கள் இராணுவக் குழுக்களை உருவாக்கினார்கள்.

ஆரம்பத்தில் சகல இடதுசாரிக் குழுக்களும் குடியரசு அரசாங்கத்திற்கு தமது ஆதரவை வழங்கின. இருப்பினும் தத்தமது ஆதிக்கத்திற்குட்பட்ட இடங்களில் "கொம்யூன்" என அழைக்கப்படும் மக்களாட்சியை நிறுவினர். கிராமிய நகர மட்டங்களில் சாதாரண மக்கள் நேரடியாகப் பங்குபற்றும் நிர்வாகங்கள் அமைக்கப்பட்டன. இவ்வாறு ஸ்பானிய உள்நாட்டுப் போர் பாஸிஸ்டுகளுக்கு எதிரான போராட்டமாகவும் கலாச்சாரப் புரட்சியாகவும் அமைந்தது. மறுபக்கத்தில் பாஸிஸ்டுகள் தம்மைத் தேசபக்தர்களாகக் காட்டிக்கொள்ள இந்தச் சம்பவங்கள் வழிசமைத்தன. "கம்யூனிச அபாயத்திலிருந்து தாய் நாட்டைக் காக்க போராடுவதாக அவர்கள் கூறிக்கொண்டார்கள். மேலும் அரசியல் அதிகாரத்தை இழந்த கத்தோலிக்கத் திருச்சபை அவர்களின் பக்கம் நின்றமை குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினின் வடக்குப் பகுதியில் பிரஞ்சு எல்லையோரமாக பாஸ்க் மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினமாக வாழ்கின்றனர். இவர்கள் நீண்டகாலமாகவே ஸ்பெயினின் ஒற்றையாட்சிக்கெதிராக சுதந்திரம் கோரிப் போராடி வருகின்றனர். ஸ்பானிய உள்நாட்டுப்போர் அவர்களுக்கு அரிய சந்தர்ப்பத்தை வழங்கவே "எயுஸ்கடி" என்ற தனிநாட்டைப் பிரகடனம் செய்தனர். ஸ்பெயின் குடியரசு அரசாங்கமும் அதற்கு அங்கீகாரம் வழங்கியது. இருப்பினும் இந்தத் தனியரசு ஓரிரு வருடங்களே நிலைத்து நிற்க முடிந்தது. ஃபலாங்கிஸ்டுக்களின் உதவிக்கு வந்த ஜேர்மனியப் போர் விமானங்கள் பாஸ்க் மக்களின் பிரதான நகரமான குவேர்னிக்கா மீது குண்டு மழை பொழிந்தன. இந்நகரின் அழிவைப்பற்றிக் கேள்வியுற்ற பிரபல ஓவியரான பிக்காஸோ உலகப்பிரசித்தி பெற்ற குவேர்னிக்கா ஓவியத்தை வரைந்தார்.

அதிக ஆயுத பலமற்ற, மேலும் வெளியிடத்திலிருந்து ஆதரவு கிடைக்காத ("அவர்களுக்குத் தனி நாடு வேண்டமானால், அவர்களே பார்த்துக்கொள்ளட்டும்" என்பது குடியரசுப்படைகளின் கருத்தாக இருந்தது) பாஸ்க் தனியரசு முன்னேறிய வலது சாரிப்படைகளுக்கு விட்டுக்கொடுக்க வேண்டியதாயிற்று. எதிரிகளிடம் அகப்பட விரும்பாத பாஸ்க் மக்கள் துறைமுகத்தில் புறப்படவிருந்த கப்பல்களில் ஏறிக்கொண்டனர். இவ்வாறு கப்பலொன்றில் அளவுக்கதிகமான ஆட்கள் தப்பினால் போதுமென்ற நோக்கில் ஏறிக்கொள்ளவே, பாரந்தாங்காமல் நடுக்கடலில் போன கப்பல் அப்படியே தாழ்ந்து போனது. கப்பலில் போன அனைவரும் ஜலசமாதியாகினர். உலகப்பிரசித்தி பெற்ற டைட்டானிக் கப்பலின் கதையை விடத் துயரமான இந்தச் சம்பவத்தை இதுவரை யாரும் திரைப்படமாக்க முன்வரவில்லை. டைட்டானிக்கில் பயணித்தவர்கள் பணக்கார உல்லாசப் பயணிகள், பாஸ்க் கப்பலில் போனவர்கள் சபிக்கப்பட்ட சாதாரண அகதிகள் என்ற பாகுபாடுதான் காரணமா ?

1939 ல் முடிவுக்கு வந்த ஸ்பானிய உள்நாட்டுப்போரின் இறுதியில் பாஸிச இராணுவம் வெற்றிவாகை சூடியது. இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகிறது. இடதுசாரிக் குழுக்களுக்கிடையே நிலவிய ஒற்றுமையின்மை ஒரு முக்கிய காரணம். (சோவியத் சார்பு) கம்யூனிஸ்டுகள், ஸ்ரொட்கிஸ்டகள், அனார்கிஸ்டுகள் எனப்பிரிந்திருந்த இவர்களால் ஒருங்கிணைத்த வேலைத்திட்டத்தை கொண்டவர முடியவில்லை. சில இடங்களில் முரண்பாடுகள் காரணமாக இந்தக் குழுக்கள் தமக்கிடையே சண்டையிட்டுக் கொண்டன. பாஸிச இராணுவத்திற்கு விட்டுக்கொடுத்ததாக ஒருவரையொரவர் இவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த வாக்குவாதம் இன்றுவரை தொடர்கிறது. இன்னொரு காரணம் ஃபலாங்கிஸ்டுக்களுக்கு நாஸி ஜேர்மனியும், பாஸிச இத்தாலியும் பகிரங்கமாக உதவி செய்தமை தெரிந்த போதும் அமெரிக்கா இங்கிலாந்து போன்ற வல்லரசு நாடுகள் "நடுநிலைமை" என்ற பெயரில் பாராமுகமாக இருந்தனர். மேலும் அதேகாலகட்டத்தில் ஜேர்மனிக்கு எதிரான நேச நாடுகளின் அணி உருவாகியது. இதில் அங்கம் வதித்த சோவியத் யூனியன் ஸ்பானிய குடியரசு அரசாங்கத்திற்கான உதவியை நிறுத்த வேண்டுமென வற்புறுத்தப்பட்டது. இதைவிட சர்வதேசத் தொண்டர் படையை திருப்பியனுப்புமாறு குடியரசு அரசாங்கத்தை இணங்க வைத்தனர்.

எது எப்படியிருப்பினும், மூன்றுவருடப்போரின் முடிவில் ஃபலாங்கிஸ்டுக்களின் இராணுவம் ஸ்பெயினின் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியது. குடியரசு அரசாங்கத்தை ஆதரித்தவர்கள் பிரான்ஸிற்கும் பிற நாடுகளுக்கும் அகதிகளாகத் தப்பியோடினர். 7 ம்திகதி ஏப்பிரல் மாதம் 1939 ம் ஆண்டு ஜெனரல் ஃபிராங்கோவினால் போரின் முடிவு அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து பாஸிஸ இராணுவ சர்வாதிகார ஆட்சி ஆரம்பமாகியது. ஸ்பானிய சமூகத்தை இரண்டாகப் பிளவு படுத்திய உள்நாட்டு யுத்தத்தால் இலட்சக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எதிரெதிர் முகாங்களில் நின்று போரிட்டனர். அன்று பிரிந்த சகோதரர்களில் பலர் இன்று ஜனநாயகச் சூழல் வந்த நிலையிலும் ஒருவரோடொருவர் முகம் கொடுத்துப் பேசாத நிலையிலுள்ளனர்.

1939 லிருந்து 1975 வரை சமார் நாற்பது ஆண்டு காலம் நீடித்த பாஸிசச் சர்வாதிகார ஆட்சியின்போது குடியரசு ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டு காணாமல்போனார்கள். இவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் அடக்கம். இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பலர் கொலை செய்யப்பட்டு இரகசியப் புதைகுழிகளினுள் புதைக்கப்பட்டனர். நாடுமுழுவதும் இவ்வாறு நூற்றுக்கணக்கான இரகசியப் புதைகுழிகள் உள்ளன. சில இடங்களில் 5000 த்திற்கும் அதிகமான சடலங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. அண்மையில் ஓரிடத்தில் அணைக்கட்டு நிர்மாணப் பணிகள் நடந்தபோது அங்கே மனிதப் புதைகுழி யிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு நாடளாவிய சர்ச்சையைக் கிளப்பியது.

உலகின் பல நாடுகளிலும் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றிய செய்திகளை அறிந்திருப்பீரகள். இவற்றிற்குக் கிடைக்கும் சர்வதேச முக்கியத்துவம் காரணமாக குறிப்பிட்ட சில நாடுகளைப் பற்றி மட்டுமே உலக மக்கள் தெரிந்து கொள்கின்றனர். ஆனால், 1975 ம் ஆண்டு ஃபிராங்கோவின் மரணத்திற்குப்பின்பு ஜனநாயக ஆட்சி ஏற்பட்டு பல்லாண்டுகள் ஆகியும் ஸ்பெயினில் இடம்பெற்ற மனித உரிமைகள் பற்றி யாருமே அக்கறை காட்டவில்லை. ஒரு சில மனித உரிமை நிறுவனங்கள் இரகசிய மனிதப்புதைகுழிகளை தோண்ட உரிமை கேட்டு நீதிமன்றத்தில் வழக்குப்போட்டும், எந்தவொரு நீதிபதியும் அதைப்போய்ப் பார்க்கவில்லை.

இந்த அக்கறையின்மைக்கு என்ன காரணம் ? ஃபிராங்கோ காலத்தில் கொலை, சித்திரவதைகளில் சம்பந்தப்பட்ட எந்தவொரு இராணுவ, பொலிஸ் அதிகாரியும் இதுவரை ஏன் கைதுசெய்யப்படவில்லை ? பலமான இராணுவத்திற்கு எல்லா அரசியல்வாதிகளும் பயப்படுவதுதான் அதற்குரிய காரணம். மன்னர் ஹுவான் கார்லோஸ் கூட இன்றும் ஃபிராங்கோ பற்றி உயர்வாகப் பேசுவார். ஸ்பெயினை ஜனநாயகப்படுத்தியதில் மன்னரின் பங்கு பிரதானமானது. கடந்தகால சர்வாதிகார ஆட்சியை மன்னித்து மறந்து விடுமாறு சத்தியம் வாங்கிய பின்னர்தான் அரசியல் கட்சிகள் சட்டபூர்வமாக்கப்பட்டன. மீண்டும் ஒரு இராணுவச் சதிப்புரட்சி ஏற்படுவதை யாரும் விரும்பவில்லை. அதனால்தான் பழசையெல்லாம் மறந்து விடுவோம் என்று பெருந்தன்மையோடு இருக்கிறார்கள்.

ஸ்பானிய இராணுவத்தில் இன்றும் கூட பாஸிஸ பிற்போக்குவாதிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சோஷலிச அல்லது குடியரசுக் கொள்கைகளுக்கு ஆதரவானவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுகின்றனர். ஃபிராங்கோவின் சர்வாதிகார ஆட்சி நிலவிய காலத்தில், அமெரிக்கா ஸ்பெயினை நேட்டோ அமைப்பில் சேர்த்து அங்கீகரித்தது. ஸ்பானிய இராணுவம் நீண்ட காலமாகவே தன்னை நவீனமயப்படுத்திக் கொள்ள ஆதரவாகவிருந்தது. அதற்கு நேட்டோ உறுப்புரிமை வழிவகுத்துக் கொடுத்தது. எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இராணுவத் தளபாடங்கள் வாங்குவதற்கு பெருந்தொகைப் பணத்தை ஒதுக்கித் தருகிறது. ஈராக் போரின் போது காரணமில்லாமல் ஸ்பெயின் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்கவில்லை.

7 comments:

செங்கதிரோன் said...

மிக அருமையான பதிவு..ஸ்பெயினின் தற்போதைய பொருளாதாரம் பற்றி எழுதுங்களேன்

அப்ரகாம் said...

மிக தெளிவான எழுத்துக்கள், ஸ்பெயினின் அரசியல் வரலாறு மிகவும் ஆச்சரியமளிக்கிறது.

தோழமையுடன்
அப்ரஹாம் லிங்கன்

Kalaiyarasan said...

நன்றி செங்கதிரோன், ஆப்ரஹாம் லிங்கன்

Kalaiyarasan said...

ஸ்பெயினைப் பற்றி அறிய இவ்வளவு பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது இப்போது தான் தெரிந்து கொண்டேன். வரவிருக்கும் பதிவுகளில் அந்த நாட்டை பற்றி மேலும் எழுதுகிறேன்.

ஜோதிஜி said...

தொடர்கின்றேன்

Anonymous said...

இந்த வரலாற்றை வாசித்தபோது எனக்கு எமது வரலாற்றை வாசித்த அனுபவமே ஏற்பட்டது. ஆனாலும் இது எமது வரலாறல்ல. இந்தப் பூமிப்பந்தில் வாழ்ந்த எம்மைப்போன்றோரது வரலாறுதான். ஒரு ஈழத்தமிழனாக இது எனது வரலாறில்லாது இருப்பினும் ஒரு மனிதனாக இதுவும் எனது வரலாறுதான்.

வரலாறுகள் திரும்புகின்றன என்பார்கள். அது பெரும்பாலும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு சாதகமாகத்தான் போலும்.

தகவலைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி கூறி,
அன்புடன்
நாதன்.

? said...

போலீசு வன்முறையை எதிர்த்தால் ரவுடிகளின் வன்முறையா? கண்டனக் கூட்டம்!

நேரம்: 29.05.2010, வியாழன், மாலை 5 மணி

இடம்: ஒய்.எம்.சி.ஏ அரங்கம், என்.எஸ்.சி போஸ் சாலை, உயர்நீதி மன்றம் எதிரில் (ஹாட் சிப்ஸ் அருகில்), சென்னை.

நிகழ்ச்சி நிரல்:

தலைமை: தோழர் சி. ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், HRPC, தமிழ்நாடு


கண்டன உரை:

தோழர். வாஞ்சிநாதன், வழக்குரைஞர், HRPC – மதுரை.

திரு. சங்கரசுப்பு, வழக்குரைஞர், சென்னை.

திரு. இராதகிருஷ்ணன், வழக்குரைஞர், சென்னை.

திரு. திருமலைராஜன், வழக்குரைஞர், ஈரோடு, முன்னாள் தலைவர், தமிழக கீழமை நீதிமன்ற வழக்குரைஞர் கூட்டமைப்பு.


ஏப்.25 அன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்குரைஞர்களின் நேருரைகள்!

அனைவரும் வருக! நீதிக்கான போரில் தோள் தருக!