Monday, July 13, 2009

நீதிபதியின் முன்னிலையில் நிறவெறிப் படுகொலை

ஜெர்மனி, டிரெஸ்டென் நகரம். நீதிமன்றத்தில் வைத்து ஒரு எகிப்திய கர்ப்பிணிப் பெண்மணி, வெள்ளை நிறவெறியன் ஒருவனால் குத்திக் கொலை செய்யப் பட்டார். 16 கத்திக்குத்துகளை வாங்கி ஸ்தலத்திலேயே மரணமடைந்த மார்வா என்ற எகிப்தியப் பெண்ணும், கொலையாளியான அலெக்ஸ் என்ற ஜெர்மன் நபரும் அயலவர்கள். வெளிநாட்டவர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக அலெக்ஸ், பூங்காவில் தன் 3 வயது மகனோடு பொழுதுபோக்கிக் கொண்டிருந்த 4 மாத கர்ப்பிணியான முக்காடு போட்டிருந்த மார்வாவைப் பார்த்து "பயங்கரவாதி" என தூற்றியுள்ளார்.

மார்வா இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததால், இனவெறிப் பாகுபாட்டு குற்றச்சாட்டில் அலெக்சிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அலெக்ஸ் தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்தார். அப்போதும் நீதிமன்ற தீர்ப்பு அலெக்சிற்கு பாதகமாக அமைந்திருந்தது. விசாரணையின் போது, மார்வா சாட்சியமளித்திருந்தார். நீதிபதி தீர்ப்புக் கூறிய பின்னரே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது. அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் மூன்று வயது மகனின் கண் முன்னால் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் இருந்து தனது மனைவியைப் பாதுகாக்க முயன்ற கணவனை, காவலில் நின்ற போலீஸ்காரர் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார். தாக்குபவர் யார் என்று தெரியாமல் தடுமாற்றத்தில் சுட்டு விட்டதாக, பொலிஸ் பின்னர் விளக்கமளித்தது. இந்த சம்பவம் குறித்து ஜெர்மன் பத்திரிகையில் வந்த செய்தி.

இதுவரை காலமும் ஒரு மூன்றாம் உலக நாட்டில் மட்டுமே, இது போன்ற நீதிமன்றக் கொலைகள் நடக்க வாய்ப்புண்டு, என்று பலர் நினைத்திருக்கலாம். பட்டப்பகலில், பலர் பார்த்திருக்கையில், அதுவும் நீதிமன்றத்தினுள் எப்படி இந்தக் கொலை நடக்கலாம்? என்று பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. "நாகரீகமடைந்த மக்கள் வாழும்" ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், இஸ்லாமியர் மீதான வெறுப்பின் விளைவாக நடந்த இந்தக் கொலை, ஜெர்மனியில் புத்திஜீவிகள் மட்டத்தில் மட்டும் சிறு சலசலப்பை தோற்றுவித்துள்ளது. மற்றும் படி, எந்த ஒரு ஐரோப்பிய ஊடகமும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவில்லை. சில நாளேடுகளில் இந்தச் செய்தி, உள்பக்கத்தில் ஒரு சிறு மூலையில் பிரசுரமாகி இருந்தது. ஒரு வேளை பலியானவர் ஒரு வெள்ளை இனத்தை சேர்ந்தவராக இருந்து, குத்திய கொலையாளி ஒரு இஸ்லாமிய எகிப்தியர் ஆக இருந்திருந்தால்? அனைத்து ஊடகங்களிலும் அதுவே அன்று முதன்மைச் செய்தியாக இருந்திருக்கும். "அல் கைதாவின் பயங்கரவாதத் தாக்குதல்" என்று சர்வதேச ஊடகங்களிலும் ஒரு சுற்று வந்திருக்கும். மேற்குலகில் இனவாதம் எப்படி நிறுவனமயப்பட்டுள்ளது என்பதற்கு, மேற்குறிப்பிட்ட செய்தி வழங்கல் நெறிமுறை ஒரு உதாரணம்.

ஜெர்மனியில் இனவெறிக்கு பலியான எகிப்தியப் பெண் மார்வாவின் மரணச் சடங்கு, அவரது சொந்த ஊரான அலெக்சாண்ட்ரியா நகரில் இடம்பெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்தார்கள். எகிப்தியப் பத்திரிகைகள் "ஹிஜாப்பிற்காக (முஸ்லிம் பெண்கள் தலையில் அணியும் முக்காடு) தியாக மரணத்தை தழுவிக்கொண்டவர்." என்று புகழாரம் சூட்டின. பல அரசியல் தலைவர்களும் மார்வாவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டனர். ஐரோப்பாவில் அரபு மக்களின் நலனுக்காக பாடுபடும் AEL மட்டும் கண்டன அறிக்கையை வெளிவிட்டது. அந்த அமைப்பின் தலைவர் அபு ஜாஜா "ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம் மக்களையும், அவர்களது மதத்தையும் கிரிமினல் மயப்படுத்தியதன் விளைவு இது." என்று தெரிவித்துள்ளார்.

இது இப்படியிருக்க, வட அயர்லாந்து தலைநகரமான பெல்பாஸ்டில் வாழும் அந்நியர்களை, குறிப்பாக இந்திய, முஸ்லிம், ரொமேனியா சமூகங்களை சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற வேண்டுமென நிறவெறி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. Ulster Young Militants (UYM) என்ற, முன்னாள் புரட்டஸ்தாந்து தீவிரவாத அமைப்பான Ulster Defence Association னின் இளைஞர் முன்னணி, வெளிநாட்டவரை விரட்டும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளது. இந்த அமைப்பின் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கடிதங்கள், பெல்பாஸ்டில் வாழும் வெளிநாட்டவர் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. "ஜூலை 12 ம் திகதிக்கு முன்னர், வெள்ளையரல்லாத அந்நியர்கள் யாவரும் வட அயர்லாந்தை விட்டு வெளியேறி விட வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 12 ம் திகதி, புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களின் பண்டிகை தினம் என்பதும்,Ulster Defence Association முன்னர் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் அரசால் நிர்வகிக்கப்பட்ட துணைப்படை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேற்குறிப்பிட்ட செய்தி இந்திய செய்தி ஊடகங்களிலும் வந்திருந்தது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர் என்ற படியால் தான் விஷேச கவனம் செலுத்தி வெளியிட்டிருந்தன. ஏற்கனவே ஜூன் 17 ம் திகதிக்கு முன்னர், ரொமேனியர்களை வெளியேறும் படி கோரி இதே அமைப்பினால் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவ்வாறு வெளியேறாத பட்சத்தில், அவர்களின் குழந்தைகள் கொல்லப்படுவார்கள் என்றும் பயமுறுத்தப்பட்டனர். ரொமேனியா குடும்பம் ஒன்றின் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர், பெல்பாஸ்டில் வசித்த அனைத்து ரொமேனியா குடும்பங்களும் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து அரச செலவில், விமானம் மூலம் ரொமேனியா திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஜூலை 2 ம் திகதி, நிறவெறிக்கு எதிரான ஐரிஷ் பிரஜைகள், பெல்பாஸ்ட் நகரில் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். இதன் மூலம் அனைத்து ஐரிஷ் மக்களும் நிறவெறியை ஆதரிப்பவர்கள் அல்ல என காட்ட விரும்பினர். இந்த ஊர்வலத்தில் பேசிய தொழிற்சங்க தலைவர் ஒருவர், "தொழிற்துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப வெளிநாட்டு தொழிலாளர்கள் அவசியம். ஐரிஷ் மக்களின் சமூகநலன் காப்புறுதிக்கு அவர்கள் பங்களிப்பு செலுத்துகின்றனர். இனப்பாகுபாடு காட்டுவோரை தண்டிக்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்." என்று தெரிவித்தார்.

Sunday, July 12, 2009

லைபீரியா: ஐக்கிய அடிமைகளின் குடியரசு


ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 10

'யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' என்று சொல்வார்கள். உள்நாட்டு யுத்தத்திலே மூழ்கிப் போயிருந்த, மேற்கு ஆபிரிக்க நாடான லைபீரியாவின் மீதான அமெரிக்கப் படையெடுப்புப்பற்றிய கதைகள் அடிபட்ட நேரத்தில் வந்த (முன்னாள் ஜனாதிபதி) புஷ்ஷின் ஆபிரிக்க விஜயம் அமெரிக்காவின் வருங்காலத் திட்டங்களை அறிவித்தது. நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்ட ஆபிரிக்கக் கண்டத்தை இறுதியில் அமெரிக்கர்கள் 'கண்டுபிடித்து' விட்டார்கள் என்று பலர் நினைத்தார்கள்.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதி புஷ் விஜயம் செய்த நாடுகளின் பட்டியல், அமெரிக்க அரசின் உண்மையான நோக்கங்களை எடுத்துக் காட்டுகிறது. காம்பியா : புதிய எண்ணைவள நாடு, தென்னாபிரிக்கா : தென்பகுதிப் பிராந்திய வல்லரசு, நைஜீரியா : எண்ணை ஏற்றுமதி செய்யும் ஆபிரிக்க நாடுகளில் முதன்னையானது. இதைத் தவிர கொடூரமான உள்நாட்டு யுத்தத்தால் உலகச் செய்திகளில் முதலிடம் பெற்ற லைபீரியா பற்றிய அமெரிக்க நிலைப்பாடு குறித்தே பலர் அறிய ஆவலாயிருந்தனர்.

லைபீரியா, முழு ஆபிரிக்கக் கண்டத்திலேயே முதன்முதலாக (1847) சுதந்திரமடைந்த நாடு. இதே காலகட்டத்தில் பிற ஆபிரிக்க நாடுகள் ஐரோப்பியக் காலனிகளாகிக் கொண்டிருந்தன. யூதர்கள் இஸ்ரேலுக்குத் திரும்பியதுபோல், "தாயகம்" திரும்பிய அமெரிக்க-ஆபிரிக்க அடிமைகள் குடியேற்றப்பட்ட நாடுதான் லைபீரியா. விடுதலை செய்யப்பட்ட "அமெரிக்க அடிமைகளின் தாயகம்" என்ற பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட லைபீரியாவை, இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் அதுதான் ஆபிரிக்காவில் உருவான முதலாவது அமெரிக்கக் காலனி என்ற உண்மை தெளிவாகும்.

19 ம் நூற்றாண்டில் ஐக்கிய அமெரிக்கக் குடியரசை ஸ்தாபித்த வட மாநிலங்களுக்கும் , தென்மாநிலங்களுக்கும் இடையில் போர் மூண்டது. அமெரிக்காவின் உள்நாட்டு யுத்தமென இது சரித்திப் பாடப்புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. இந்தப் போருக்கு பொருளாதார முரண்பாடுகளும் முக்கிய காரணியாகும். புதிய அமெரிக்கக் குடியரசான வடமாநிலங்கள் முதலாளித்துவப் பொருளாதாரக் கொள்கையை வரித்துக் கொண்டன. இதற்கு மாறாக ஆபிரிக்க அடிமைகளின் உழைப்பில் தங்கியிருந்த தென்மாநிலங்களில், நிலவுடைமை சார்ந்த பொருளாதாரம் இருந்து வந்தது. தெற்கில் நிலவுடைமைப் பொருளாதாரத்தை அழித்து, அங்கே ஐக்கிய அமெரிக்கக் குடியரசை விஸ்தரிக்கும் நோக்கோடுதான், அன்றைய ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனால் அடிமை முறை ஒழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

தென்மாநிலங்கள் தம்மிடமிருந்த கறுப்பின அடிமைகளை விடுதலை செய்து முதலாளித்துவப் பொருளாதாரத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை வந்தது. அப்போது இன்னொரு பிரச்சினை உருவானது. அமெரிக்கப் பிரஜைகளாகப் போகும் விடுதலை செய்யப்பட்ட கறுப்பின அடிமைகள் வருங்கால அமெரிக்காவின் தீர்க்கமான அரசியற் சக்தியாக வருவதை பலர் விரும்பவில்லை. இதனைக் கருத்தில் கொண்ட முன்னாள் அடிமைகளின் எஜமானர்கள் "அமெரிக்கக் காலனியச் சங்கம்" என்ற ஒன்னை உருவாக்கினார்கள். "விடுதலை செய்யப்பட்ட அடிமைகளை அவர்களது தாயகத்தில் குடியேற்றுவது" என்ற முற்போக்கானதாகக் காட்டிக்கொண்ட குறிக்கோளைக் கொண்ட அந்தச் சங்கம் அதற்கென மேற்கு ஆபிரிக்காவில் ஒரு பகுதி நிலத்தை வாங்கியது. அந்த நிலம்தான் லைபீரியா. 1822 ல் லைபீரியாவில் அமெரிக்காவிலிருந்து வந்த முன்னாள் அடிமைகளின் முதலாவது காலனி உருவாகியது.

அமெரிக்கக் காலனிய சங்கத்தால் வாங்கப்பட்ட நிலம், யாருமே வாழாத சூனியப் பிரதேசமாக இருக்கவில்லை. அங்கு 16 வேறுபட்ட இன மக்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களிலே , இஸ்லாமியர்களான மான்டே மொழி பேசும் மக்கள் போர்த்துக்கீசருடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தனர். லைபீரியா என்ற அமெரிக்கக் காலனி உருவான பின்பு , இன்றுவரை இந்தப் பூர்வீக இனமக்கள், அரசியல் பொருளாதார ரீதியாகப் புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர். மொத்தச் சனத்தொகையில் 15 வீதமான அமெரிக்கக் குடியேறிகளே, ஆளும் வர்க்கமாகத் தொடர்கின்றனர்.

ஆரம்பத்திலிருந்தே புதிய குடியேறிகளைப் பூர்வீக மக்கள் அவநம்பிக்கையுடன் நோக்கினர். புதிதாகக் குடியேறிய அந்நியர்கள் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட மொழியை (ஆங்கிலம்) பேசினர், மதத்தைப் (கிறிஸ்தவம்) பின்பற்றினர். அதுமட்டுமன்றி, அமெரிக்கக் குடியேறிகள் பூர்வீக மக்களை "காட்டுவாசிகள்" என அழைத்தனர். அவர்களுடன் கலக்காமல் தம்பாட்டில் மொன்றோவியாவை (அமெரிக்க ஜனாதிபதி மொன்றோவின் பெயரால்) தலைநகராகக் கொண்ட லைபீரியக் குடியரசை அமைத்தனர். புதிய தேசத்தின் அரசியல் நிர்ணயச் சட்டம் அமெரிக்காவில்தான் தயாரிக்கப்பட்டது. அமெரிக்கக் கொடியை போன்ற கொடி, தேசியக் கொடியாக்கப்பட்டது.

இன்றைய ஆட்சியாளர்களான முன்னாள் அடிமைகளின் பேரன்மார். இன்றுவரை தமது தந்தையர் நாடான அமெரிக்காவுடன் சிறந்த நட்புறவுகளைப் பேணிவருகின்றனர். அமெரிக்க வர்த்தக ஸ்தாபனங்கள் லைபீரியாவின் கனிப்பொருள் வளங்களின் மீது ஏகபோன உரிமை பெற்றுள்ளனர். உதாரணமாக ரப்பர் ஏற்றுமதிக்கு "ஃபயர்ஸ்டோன்" , "குட்றிச்" ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் 99 வருட ஒப்பந்தம் போட்டுள்ளன. இதைவிட பல எண்ணைதாங்கிக் கப்பல்கள் இளகிய சட்டங்களைக் கொண்ட லைபீரியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த முக்கியத்துவம் காரணமாக லைபீரிய அரசியல் ஆட்டம் காணும்போதெல்லாம் அமெரிக்கா தலையிட்டு ஸ்திரப்படுத்தி வந்தது.

நீண்ட காலமாக பொருளாதார வளர்ச்சி, பொதுமக்களின் வாழ்க்கை வசதிகளை அதிகரித்திருந்த போதும் என்பதுகளில் ஏற்பட்ட உலகப் பொருளாதாரப் பின்னடைவு, லைபீரியாவிலும் பல தாக்கங்களை உருவாக்கியது. ஏற்றுமதி குறைந்து வேலையின்னை அதிகரித்தது. அரிசி விலையுயர்வால் மக்கள் கலகம்செய்தனர். ஊழல் ஆட்சி, எதிர்க்கட்சிகளின் மீதான தடை, இவற்றிற்கு மத்தியில் "லைபீரிய தேசபக்த முன்னணி" என்ற ஆயுதமேந்திய குழு அரசபடைகளுடன் சண்டையிட்டு பல பகுதிகளைக் கைப்பற்றியது. இந்த ஆயுத பாணிக் குழுவின் தலைவர் சார்ல்ஸ் டெய்லர், கடைசி நேரத்தில் தலைநகரில் தோன்றிய வேறு சில அரசியல் குழுக்களுடன் அரசாங்கத்தைப் பங்குபோடவேண்டியதாயிற்று.

பின்னர் நடந்த பொதுத் தேர்தலில் முன்னாள் போராளியான சார்ல்ஸ் டெய்லர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டெய்லரின் கட்சிக்கு அயல் நாடான சியாரா லியோனிலிருந்து உதவி கிடைத்து வந்தது. லிபியாவும் ஆதரவளித்தது. ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நீதிமன்றம் சியாரா லியோன் தொடர்புக்காக விசாரணை மேற்கொள்ள விரும்புகிறது. வைரக்கற்கள் ஏற்றுமதி செய்யும் சியாரா லியோனை முன்பு ஆண்ட போராளிக்குழு "சட்டவிரோத" வைரக்கல் வி;ற்பனையிலீடுபட்டு வந்தது. இதில் சார்ல்ஸ் டெய்லருக்கும் பங்கிருக்கலாம் என நம்பப்படுகிறது. நீண்டகாலமாக சர்வதேச வைர வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தன மேற்கத்தைய நாடுகள். லாபத்தில் பங்கு கேட்டு, உள்ளூர் அரசியல் சக்திகள் உரிமை பாராட்ட விரும்பியபோதுதான் பிரச்சினை வந்தது. அன்று உரிமை பாராட்டியவர்கள் அனைவரும் பின்னர் சர்வதேச மட்டத்தில் போர்க்குற்றவாளிகளாகத் தூற்றப்பட்டனர்.

இன்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் விசாரிக்கப்படும் சார்லஸ் டெய்லர், பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாகவும் வேண்டப்படும் நபராகியுள்ளார். யுத்தம் நடந்த காலத்தில் டெய்லரின் கட்சியைச் சேர்ந்த போராளிகள் பல மனித உரிமை மீறல்களைச் செய்தது உண்மைதான். அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை, பாலியல் வல்லுறவுகள், எதிரிகளை அங்கவீனப்படுத்தியமை போன்ற பல குற்றச் செயல்கள் நடந்துள்ளன. ஆனால், இவற்றிற்கு டெய்லரின் குழு மட்டுமே பொறுப்பல்ல.

இன்று ஆட்சியில் இருக்கும் அரசபடைகளும் இதுபோன்ற குற்றங்களை இழைத்துள்ளன. இன்று செய்தி ஊடகங்களால் நல்லவர்கள் போல் காட்டப்படும் கிளர்ச்சியாளர்களும் மேற்கண்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளனர். டெய்லரை விரட்டும் முயற்சியிலிறங்கிய அமெரிக்கா கிளர்ச்சியாளருக்கு மறைமுக உதவி வழங்கியது. சமாதானமும் நிலைநாட்டவென, ஐ.நா பாதுகாப்புச் சபையின் உத்தரவின்பேரில் வந்திறங்கியுள்ள, பிராந்திய வல்லரசு நைஜீரியா தலைமையிலான சமாதானப் படைகளுக்கும் அமெரிக்கா பின்னணியிலுள்ளது. சமாதானப் படைக்கு மேலதிக நிதி வழங்குமாறு அமெரிக்காவை நைஜீரியா கேட்டதிலிருந்தே இது தெளிவாகும்.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபது புஷ்ஷின் ஆபிரிக்க விஜயத்திற்கும், லைபீரியப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்துவதற்கும் உள்ள தொடர்பென்ன ? இந்தத் திடீர் அக்கறைக்குக் காரணம் எண்ணை தான், வேறு என்ன? அமெரிக்காவின் மொத்த எண்ணை இறக்குமதியில் 18 வீதம் ஆபிரிக்காவில் இருந்து வருகின்றது. பெருமளவு நீண்டகால எண்ணை ஏற்றுமதி நாடுகளான நைஜீரியா, அங்கோலாவிலிருந்து வருகின்றது. கம்றூன், சாட், சூடான் போன்ற இன்னபிற நாடுகளின் பெற்றோலிய உற்பத்தி வருங்காலத்தில் அதிகரிக்கப்படவிருக்கிறது. மேலும் ஆபிரிக்க எண்ணை, வளைகுடா எண்ணை போலன்றி உயர்தரமானது. அதாவது அதிகமாகச் சுத்திகரிக்கப்பட வேண்டிய தேவையில்லை. இவற்றைவிட எண்ணைவள நாடுகள் சுற்றியிருக்கும் கிணியா குடாக்கடலிலிருந்து அத்லாந்திக் சமுத்திரத்தினூடாக அமெரிக்கா நோக்கிய கப்பல் போக்கு வரத்து இலகுவானது, மலிவானது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்த்தால் வருங்காலத்தில் ஆபிரிக்க எண்ணை உற்பத்தி அதிகரிக்கப்படும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

லைபீரியாவில் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகள் அமெரிக்காவில் உயர்கல்வி கற்றுத் திரும்புவது சர்வசாதாரணம். போர்க் குற்றவாளி டெய்லரும் அவ்வாறான அமெரிக்கப் பட்டதாரிதான். இதைவிட 1997 ம் ஆண்டு சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் நடந்த பொதுத் தேர்தலில் ஜனநாயக பூர்வமாக பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதிதான் டெய்லர். பல தடவை தாம் சர்வாதிகாரிகளுக்கெதிராக செயற்படுவதாகத் தெரிவிக்கும் "சர்வதேச சமூகம்" லைபீரியாவில் ஜனநாயகத்திற்கெதிராகச் செயற்பட்டது கவனிக்கத்தக்கது.

(தொடரும்)


முன்னைய பதிவுகள்:
சிம்பாப்வே: வெள்ளையனே வெளியேறு!
கறுப்பினப் பேரழகியின் கிறிஸ்தவ சாம்ராஜ்யம்
நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !
ஐரோப்பிய காட்டுமிராண்டிகள் திருடிய ஆப்பிரிக்க அறிவுடமை
காங்கோவை விழுங்கிய பெல்ஜிய பூதம்
ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 1

Saturday, July 11, 2009

ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?


"சோவியத் யூனியனின் தலைமையை ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் மாபெரும் பயங்கரவாத ஆட்சி ஆரம்பமாகியது. கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவில் இருந்த 139 உறுப்பினர்களில், 98 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கட்சியில் பேராசை பிடித்த அடக்குமுறையாளரின் ஆதிக்கம் நிலவியது. நாட்டில் பெரும்பான்மையான மக்கள் வறுமையில் வாடினர். உக்ரைனில் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் செத்து மடிந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டு கட்டாய வேலை வாங்கப்பட்டனர். மிதமிஞ்சிய உழைப்பு காரணமாக பலர் மரணித்தனர். ஸ்டாலினைப் போற்றும் தனிநபர் வழிபாடு ஊக்குவிக்கப்பட்டது. மக்கள் மூளைச் சலவை செய்யப்பட்டனர்."

20 ம் நூற்றாண்டில் நடந்த மாபெரும் மனிதப் படுகொலைகள்:
61.900.000 பேர் ரஷ்ய கம்யூனிஸ்ட்களால் கொல்லப்பட்டனர்.
38.700.000 பேர் சீனக் கம்யூனிஸ்ட்களால் கொல்லப்பட்டனர்.
20.900.000 ஜெர்மன் நாசிகளால் கொல்லப்பட்டனர்.
5.900.000 ஜப்பானியரால் கொல்லப்பட்டனர்.


மேலே தரப்பட்ட மேற்கோள்கள், ஐரோப்பிய நாடுகளின் பாடசாலை மாணவர்களுக்கான சரித்திரப் பாடப்புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. இந்தப் புத்தகங்களில் ரஷ்யாவைப் பற்றிய அத்தியாயத்தின் பெரும் பகுதி ஸ்டாலினின் சர்வாதிகார ஆட்சியைப் பற்றி சொல்கின்றன. ஜனநாயகம், சுதந்திரம் என்றால், அது மேற்கு ஐரோப்பாவில் மட்டும் தான். கிழக்கு ஐரோப்பாவில், 1989 ம் ஆண்டு வரை சர்வாதிகாரம் நிலவியதாக பாடசாலை மாணவர்கள் பரீட்சையில் எழுத வேண்டும்.

ஸ்டாலின் என்றால் கொடுங்கோலன். ஹிட்லரைப் போல இலட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தவன். அடுத்து வந்த குருஷேவின் ஆட்சி எவ்வளவோ பரவாயில்லை. இன்றும் கூட பள்ளிக்கூட  பரீட்சைகளில் ஸ்டாலினின் கொடுமைகளை விபரிக்குமாறு கேட்கப்படுகின்றது. இந்தப் பாடத்திட்டத்தை எதிர்த்து ஒரு மாணவனோ, அல்லது ஆசிரியரோ கேள்வி எழுப்பினால், மற்றவர்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கின்றனர். "இனப்படுகொலைகள், பட்டினிச் சாவுகள், இவற்றை யாரும் ஆதரிக்க முடியாது," என்று கூறி அடக்கப்படுகின்றனர்.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் பாடசாலை மட்டத்திலேயே ஆரம்பமாகின்றது. அது பின்னர், பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி என விரிவுபடுத்தப் படுகின்றது. இந்தப் பின்னணியை வைத்துக் கொண்டு தான் நாம் ட்ராஸ்க்கியவாதிகள் மீதான விமர்சனம் முன்வைக்கப்பட வேண்டும். ட்ராஸ்க்கியவாதிகள் "ஸ்டாலினிஸ்ட்களை விட தூய்மையானவர்கள்"? "இதுவரை சோஷலிசம் உலகில் எந்தவொரு நாட்டிலும் இருக்கவில்லை. தேசிய முதலாளித்துவமே இருந்தது. 1989 ல் வீழ்ச்சியடைந்தது ஸ்டாலினிசம் மட்டுமே." இது போன்ற கோஷங்களுடன், ட்ராஸ்க்கியவாதிகள் தாமே "நிஜமான சோஷலிசம் படைக்கப் போகும், உண்மையான மார்க்சிஸ்ட்கள்" எனக் கூறிக் கொள்கின்றனர். தம்மை ஸ்டாலினிஸ்ட்கள் இல்லை என்று சொல்லி, கம்யூனிச எதிர்ப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக் கொள்கின்றனர்.

ட்ராஸ்க்சியவாதிகள், சோஷலிச கட்டுமானம் பற்றி என்ன சொல்கின்றனர்?
சோஷலிசம் என்பது ஒரு கட்சியினால் மேலே இருந்து கொண்டு, கீழே இருக்கும் மக்கள் மேல் திணிக்க முடியாது. அது அடி மட்டத்தில் இருந்து வர வேண்டும். அது சரி தோழரே, பல்வேறு பிற்போக்கு கலாச்சாரங்களில் மூழ்கியிருக்கும் மக்கள் எவ்வாறு சோஷலிசத்தை கண்டுபிடிப்பார்கள் என்று கொஞ்சம் விளக்குங்களேன்? அதே நேரம் ட்ராஸ்கிஸ கட்சிகளில் கூட இறுக்கமான கட்டுப்பாடுகள், மேலிருந்து வரும் அதிகாரம், தலைமையின் எதேச்சாதிகாரம் போன்றவற்றை எதிர்த்து வெளியேறிய பலரை எனக்குத் தெரியும்.

மேலும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்ற சொல்லாடலை ஸ்டாலினிச சர்வாதிகாரத்துடன் அடையாளம் காண்பதால், "பாட்டாளிவர்க்க ஜனநாயகம்" என்ற ஒன்றை புதிதாக கண்டுபிடித்துள்ளனர் ட்ராஸ்கிஸ சித்தாந்திகள். இவர்களது பாட்டாளிவர்க்க ஜனநாயக ஆட்சியில் முதலாளிகளும் இருக்கலாம். இப்படிப்பட்ட "புரட்சிகர" கருத்துகள் சமூக ஜனநாயகவாதிகளை சகோதர பாசத்துடன் அணுக வைக்கின்றது. ஐரோப்பாவில் ஏற்கனவே இருந்துவரும் சமூக ஜனநாயகக் கட்சிகளின் ஆட்சியில் நாடு சுபீட்சம் அடையாததாலோ, அல்லது சமூக ஜனநாயகக் கட்சிகள் இடதுசாரிக் கொள்கைகளை கைவிடுவதாலோ ஒரு வெற்றிடம் ஏற்படுகின்றது. அதற்குள் ட்ராஸ்கிஸவாதிகள் மார்க்சிச முலாம் பூசிய சமூக ஜனநாயகவாதிகளாக உலா வர முடிகின்றது. சமூக ஜனநாயகவாதிகளும் ஆரம்பத்தில் மார்க்சிஸ்ட்களாக இருந்தவர்கள் தான்.

இவற்றை விட தாம் ஸ்டாலினிஸ்ட்கள் இல்லை என, ட்ராஸ்கிஸ்ட்கள் சொல்வது மட்டும் தான், அவர்களை கம்யூனிஸ்ட்களிடம் இருந்து வேறுபடுத்துகின்றது. ஆகவே ஸ்டாலின் பற்றி இவர்கள் எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருக்கின்றனர் எனக் கேட்பது அவசியம். ஸ்டாலின் பெயரைக் கேட்டாலே காத தூரம் ஓடுபவர்கள். ட்ராஸ்க்கியவாதிகள் லெனினை ஏற்றுக் கொள்கின்றனர். அதற்குக் காரணம் லெனின் எந்தவொரு அரசியல் கொலையும் செய்யவில்லை என்பதாலா? இல்லை. லெனினின் காலத்திலேயே அரசியல் படுகொலைகள் இடம்பெற்ற போதும், ட்ராஸ்கி முரண்படாமல் இருந்துள்ளார்.  அப்படியானால், ட்ராஸ்கி கொலையே செய்யாத சமாதானவாதியா? அதுவும் இல்லை. அக்டோபர் புரட்சியின் பின்னர் சோவியத்கள் (தொழிலாளர் பேரவை) அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்றை அராஜகவாதிகள் (Anarchist) நிர்வகித்தனர். ட்ராஸ்கி சார்ந்த போல்ஷெவிக் கட்சியின் கட்டுப்பாட்டில் இல்லாத சோவியத் குண்டு போட்டு அழிக்கப் பட்டது. விமானக் குண்டுவீச்சில் நூற்றக்கணக்கானவர்கள் கொலை செய்யப்பட்டனர். அன்று அந்த உத்தரவைப் பிறப்பித்தது, செம்படைத் தளபதி ட்ராஸ்கி.

ட்ராஸ்கிக்கும், ஸ்டாலினுக்கும் இடையிலான பகைமை, அரசியல்  அதிகாரப் போட்டியில் ஆரம்பித்தது தான். அடுத்த சோவியத் அதிபராக வரும் வாய்ப்பை இழந்த பின்னர் தான், ட்ராஸ்கி தனக்கென தனித்துவமான கொள்கைகளை வகுத்துக் கொண்டார். ஸ்டாலினுக்கு பதிலாக, ட்ராஸ்கி அதிபராக வந்திருந்தாலும், அவரும் "ஸ்டாலினிசவாதியாக" தான் இருந்திருப்பார். ஏனெனில் ஸ்டாலினிசம் என்றழைக்கப்படும் நடவடிக்கைகள், திட்டங்கள் அனைத்தும் லெனினும், ட்ராஸ்கியும் அதிகாரத்தில் அமர்ந்திருந்த காலத்திலேயே நடைமுறைக்கு வந்து விட்டன. லெனின் காலத்தில், போல்ஷெவிக்குகளுக்கு எதிராக, சமூக-ஜனநாயக அரசியல் சார்பு நிலையெடுத்த மென்ஷேவிக்குகளும், தீவிர இடதுசாரிகளான அனார்கிஸ்ட்களும் கடுமையாக அடக்கப் பட்டனர். ஸ்டாலினிற்கு அந்த வேலை மிச்சமாகப் போய் விட்டது. இன்றும் கூட, அனார்கிஸ்ட்கள் லெனினையும், ட்ராஸ்கியையும் தங்களது எதிரிகளாக பார்க்கின்றனர்.

அன்றைய ஐரோப்பிய சமூக ஜனநாயகவாதிகளின் சித்தாந்தவாதியாக இருந்த கௌட்ஸ்கியின் போக்கை லெனின் திரிபுவாதம் என்று கண்டித்தார். அதே நேரம் ரஷ்யாவில் ஒரு சமூக ஜனநாயக இயக்கமாக இருந்து, பாராளுமன்ற அரசியலுக்கும், முதலாளித்துவ சுதந்திரத்திற்கும் ஆதரவான நிலையெடுத்த மென்ஷெவிக்குகளை லெனின் கடுமையாக விமர்சித்தார். அப்போதெல்லாம் ட்ராஸ்கி லெனின் சொன்னதெற்கெல்லாம் தலையாட்டினார். ரஷ்யா முழுவதும் போல்ஷெவிக்குகளின் அதிகாரம் துப்பாக்கி முனையில் நிலைநாட்டப்பட்டது. எதிர்ப்புரட்சியாளருடனான போரில், செம்படையினரும் கொடூரமாக நடந்து கொண்டனர். மனித உரிமை மீறல்கள்களுக்கு இருதரப்புமே பொறுப்பு. எதிர்ப்புரட்சிப் படைகளை ஆதரித்தவர்களும் கருணை காட்டாமல் கொல்லப்பட்டனர்.

அன்று நடந்த போர்க்காலக் குற்றங்களுக்கு செம்படையின் தளபதி ட்ராஸ்கி பொறுபேற்க வேண்டும். ட்ராஸ்கிக்கு தான் செய்தது, அதிகாரத்தை மேலிருந்து திணிக்கும் செயல் என்று தெரியவில்லை. அக்டோபர் புரட்சிக் காலத்தில், போல்ஷெவிக் கட்சியின் செல்வாக்கு அதிகமாக ரஷ்யாவின் சில பகுதிகளில் மட்டும் தான் பாட்டாளி மக்களின் எழுச்சி காணப்பட்டது. பரந்து விரிந்திருந்த ரஷ்ய சாம்ராஜ்யத்தில், குறிப்பாக மத்திய ஆசியப் பகுதிகளில், எதிர்ப்புரட்சிகர சக்திகளை எதிர்த்து முறியடித்த பின்னர் தான், மக்களிடம் சோஷலிசத்தை கொண்டு செல்ல முடிந்தது. அதாவது அந்தப் பகுதி மக்கள், ஒன்றில் பழமைவாதிகளாக, மதவாதிகளாக, தேசியவாதிகளாக இருந்தனர். அவர்கள் சார்ந்த அரசியல், சோஷலிசத்தை நிராகரித்திருந்தது. ஆகவே அந்தப் பகுதிகளில் சோஷலிசம் கீழேயிருந்து (மக்களிடமிருந்து) வந்ததாக கூற முடியாது. 150 க்கும் மேற்பட்ட மொழிச் சிறுபான்மையினரைக் கொண்ட ரஷ்யாவில், அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் ஒரே அரசியல் உணர்வுடையவர்களாக இருக்கப் போவதில்லை.

கம்யூனிசம் என்பதை, சர்வதேசியம் என்றும் அர்த்தப் படுத்தலாம். மாவோ கூறியது போல கம்யூனிஸ்ட்கள் அனைவரும் சர்வதேசவாதிகள். தமது தாயாக மக்களின் போராட்டத்தில் மட்டுமல்லாது, அந்நிய நாட்டு மக்களின் போராட்டங்களில் பங்குபற்றும் பலர் இன்றும் உள்ளனர். ட்ராஸ்கியின் சர்வதேசியம் சமூக ஜனநாயக கருத்தியலை அடிப்படையாகக் கொண்டது. அவருக்கு முன்பே மென்ஷேவிக்குகள் இது பற்றி பேசி வந்துள்ளனர். அவர்கள் ரஷ்யா இன்னும் புரட்சிக்கு தயாராக இல்லை அல்லது சோஷலிசம் சாத்தியமில்லை என்று வாதிட்டனர். லெனின் அதற்கு மாறாக "சோஷலிசப் புரட்சி ஒரு நாட்டில் (ரஷ்யாவில்) நடைமுறைச் சாத்தியமானது." என்று சொன்னதுடன் நில்லாது, தனது வாதங்களை எழுத்தில் வடித்துள்ளார். தம்மை லெனினிசவாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் ட்ராஸ்கிஸ்ட்கள் இதையெல்லாம் படித்திருப்பார்களா என்பது சந்தேகம். அப்படி படித்திருந்தால், "ஒரே நாட்டில் சோஷலிசக் கட்டுமானம்" என்பது ஸ்டாலின் முன்மொழிந்தது அல்ல, அது லெனினின் கோட்பாடு என்பது தெளிவாகும்.

ரஷ்யப் புரட்சியின் பின்னர், லெனினால் ஆரம்பிக்கப்பட்ட, பின்னர் ஸ்டாலினால் தலைமை தாங்கப் பட்ட "மூன்றாவது கம்யூனிச அகிலம்" உலகின் பல நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளை உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டது. அதே நேரம் சர்வதேச நாடுகளில் அந்தக் கட்சிகளின் போராட்டத்திற்கு உதவியும் வந்தது. ஸ்பெயினில் பாசிசத்திற்கு எதிராக போராடிய (கம்யூனிச, அல்லது குடியரசு) ஆயுதக்குழுக்களுக்கு வெளியில் இருந்து வந்த ஒரேயொரு உதவி ஸ்டாலின் அனுப்பி வைத்தவை தான். இதை ஸ்டாலினின் எதிரிகளும் மறுப்பது கிடையாது. பல சர்வதேச தொண்டர்கள் ஸ்பெயின் சென்று போரிட்டனர். அமெரிக்க, ஐரோப்பிய கம்யூனிஸ்ட் கட்சிகள் அனுப்பி வைத்த அந்த தொண்டர் படைக்கு ஸ்டாலினின் ஆசீர்வாதம் கிடைத்து வந்தது. அமெரிக்க தொண்டர் படையை ஒரு கறுப்பின தளபதி வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.

அன்று, மேற்கத்திய நாடுகளின் ஸ்டாலினின் சோவியத் யூனியனுடன் நட்புறவைப் பேணிய காலகட்டம் அது. ஸ்பெயின் பாசிச எதிர்ப்பு போராளிகளுக்கு ஆயுத தளபாடங்களை அனுப்பிக் கொண்டிருந்த ஸ்டாலின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. மேற்குலக கனவான்களின் வாக்குக்கு கட்டுப்பட்டு, ஸ்டாலின் உதவியை நிறுத்தினார். பூகோள அரசியல் சதுரங்கத்தின் விளைவாக, வெளிநாட்டு தொண்டர் படையணிகள் வெளியேறின. பாஸிசம் ஸ்பெயினில் ஆட்சியைக் கைப்பற்றியது. அதேபோல இரண்டாம் உலகப் போர் முடிவில், கிரேக்க கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெறும் தருவாயில் இருந்தது. பெருமளவு கிரேக்க நிலங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த கம்யூனிஸ்ட் கெரில்லாக்களுக்கு ஸ்டாலின் எந்த உதவியும் அனுப்பவில்லை. உதவி செய்யக் கூடாது என்று மேற்குலகம் ஏற்கனவே ஸ்டாலினிடம் சத்தியம் வாங்கி இருந்தது. கிரேக்க விவகாரத்தில் அன்று சோவியத் நண்பனாக இருந்த பிரிட்டன், பின்னர் நம்பிக்கைத் துரோகம் செய்தது. தன்னிடம் கிரேக்கத்தை ஒப்படைத்த ஸ்டாலினுக்கு எதிராக திரும்பியது.

(தொடரும்)


Part: 2 ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?

Tuesday, June 30, 2009

மேலைத்தேய நாசகார நாகரீகம்

-"அவர்கள் எம்மை எதற்காக வெறுக்கிறார்கள்? நாம் உலகிலேயே மிகச் சிறந்த நாகரீகத்தை கொண்டிருக்கிறோம். எமது ஜனநாயக பாரம்பரியம், தனி மனித சுதந்திரம் இவற்றை அவர்கள் வெறுக்கிறார்கள்."
-"நாகரிக மேற்குலகின் மீது பயங்கரவாத காட்டுமிராண்டிகளின் தாக்குதல்."
-"தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம்."


மேற்குறிப்பிட்ட கூற்றுகள் யாவும், கடந்த எட்டு வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும், அமெரிக்காவும், அதன் மேற்குலக கூட்டாளிகளும், கூறிவரும் நியாயங்கள். "நாகரீக உலகம்", "காட்டுமிராண்டிகளின் உலகம்" இந்த சொற்பதங்களுக்குப் பின்னால் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் ஆயிரம். அமெரிக்காவின் தீமைக்கெதிரான, அல்லது பயங்கரவாதத்திற்கெதிரான போர் ஆப்கானிஸ்தான் படையெடுப்போடு மட்டும் நின்றிருந்தால், "ஒரு வல்லரசின் பழிவாங்கல்" என்பதோடு பிரச்சினை முடிந்திருக்கும். ஈராக், வட-கொரியா என்று ஒன்றோடொன்று சம்பந்தப்படாத நாடுகள் மீதும் "நாகரிக உலகம்" போர் தொடுத்தது, அல்லது திட்டமிடுகிறது. மேற்குலக மக்கள் ஆதரவு "நாலாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த கொள்கை" அடிப்படையில் ஒன்று திரட்டப்படுகிறது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக புஷ் பதவி வகித்த எட்டு வருடங்களில் உலகம் அடியோடு மாறி விட்டது. "புஷ் ஆட்சிகாலம் மறைந்தாலும், அதன் தாக்கம் இன்னும் பத்தாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்." என்று புஷ்சின் சுயசரிதையை திரைப்படமாக்கிய ஒலிவர் ஸ்டோன். அமெரிக்கா மட்டும் தனது சிறந்த கலாச்சாரப் பாரம்பரியத்தை மீளக் கண்டுபிடிக்கவில்லை. ஐரோப்பாவிலும் "கிறிஸ்தவ கலாச்சாரப் பெருமை" பேசும் வலதுசாரி சக்திகள் தலையெடுத்தன. சில நேரம் ஆட்சியில் இருப்பவர்களே, "பண்பாடு" "வாழும் நெறி" பற்றி தமது பிரசைகளுக்கும், குடியேறிய வெளிநாட்டவர்களுக்கும் வகுப்பெடுத்தனர். வந்தேறுகுடிகள் ஐரோப்பிய கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். நம் நாட்டு மக்களில் பலர் தமது (இந்தியக்) கலாச்சாரமே உயர்ந்தது என்றும், ஐரோப்பியர்கள் தம்மை விடக் கீழான சீரழிவுக் கலாச்சாரம் கொண்டவர்கள் என்றும் ஒரு தலைப்பட்சமாக கருதுகின்றனர். மறு பக்கத்தில் ஐரோப்பியர்கள் தமது கலாச்சாரமே உலகில் சிறந்தது, மற்றவை எல்லாம் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் என்று கருதுகின்றனர்.

மேற்கத்திய பல்கலைக் கழகங்களில் இப்போதும் "கலாச்சார மோதல்" பற்றி கற்பிக்கப்படுகின்றது. அதாவது நாகரீகமடைந்த மேற்கத்திய கலாச்சாரம், உலகின் பிற காட்டுமிராண்டிக் கலாச்சாரங்களுடன் மோதிக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் இறுதியில் மேற்கத்திய கலாச்சாரம் வெற்றி பெறும். ஏனெனில் இது தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம். கறுப்பர்கள், அரேபியர்கள், இந்தியர்கள், சீனர்கள், இவர்களுடன் ரஷ்யர்கள் கூட "பல குறைபாடுகளைக் கொண்ட சமூகங்களாக" சித்தரிக்கப்படுகின்றனர். அரசுகள், பல்கலைக் கழகங்கள், ஊடகங்கள், இப்படி மக்களை வழிநடத்தும் கருவிகள் யாவும் "காட்டுமிராண்டிகளை நாகரீகப்படுத்தும் தேவையை" சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவை பல்வேறு வடிவங்களில் வெளிப்படும். மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திரமின்மை, ஊழல், போர்க் காலக் குற்றங்கள், சித்திரவதை, சர்வாதிகாரம், பயங்கரவாதம்.... இப்படி நீண்டு செல்லும் பட்டியலில் குறிப்பிடப்படும் எதிர்மறையான விடயங்கள் யாவும், காட்டுமிராண்டி நாடுகளின் விசேட குணங்கள். இந்த நாடுகளைச் சேர்ந்த நாம் அப்படி நினைக்காமல் விடலாம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்படும் அப்பாவி மக்கள், அப்படித்தான் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்கு ஐரோப்பிய நாட்டு மாணவர்களுக்கு வரலாறு ஒரு கட்டாய பாடம். அந்தப் பாடத்தில் சித்தி அடையாமல், பல்கலைக்கழகம் செல்ல முடியாது. வரலாற்றுப் பாடத்தில், ஐரோப்பிய சரித்திரம் முக்கிய இடம் பிடிக்கிறது. ஐரோப்பாவின் சரித்திரம் கிரேக்கத்தில் இருந்து தொடங்குவதாக அனைத்து நூல்களும் போதிக்கின்றன. நோர்வே முதல் இத்தாலி வரை பல்வேறு மொழிகளில் கற்பிக்கப்பட்டாலும், ஐரோப்பிய சரித்திரம் ஒரே மாதிரித் தான் எழுதப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிசம் மறைந்த பிறகு, அங்கே எப்படி "நடுநிலை வரலாற்றுப் பாடம்" எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர். சந்தேகத்திற்கிடமின்றி மேற்குலக கண்ணோட்டத்தில் சரித்திரம் திருத்தி எழுதப்பட்டிருக்கும். ஐரோப்பிய நாடுகள், அறுபது வருடங்களுக்கு முன்னர் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. தற்போது தாம் முன்பு ஒரே வரலாற்றைக் கொண்டிருந்ததாக சொல்வதை நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. அமெரிக்காவில் சென்று குடியேறிய ஐரோப்பிய வம்சாவழியினரே, அங்கே அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் அமெரிக்க நாகரீகமும் கிரேக்கத்தில் இருந்தே ஆரம்பமாவது தவிர்க்க முடியாதது.

அடிக்கடி "கிரேக்கதைப் பாருங்கள்" என்று சுட்டிக் காட்டுகிறார்களே, அங்கே அப்படி என்ன இருந்தது? "ஜனநாயகம்", "தனி மனித சுதந்திரம்" இந்த வார்த்தைகள் இற்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் பயன்படுத்தினர். கிரேக்க மொழியில் Demos என்றால் மக்கள் என்று அர்த்தம். ஆகவே "Democracy" என்ற மக்கள் ஆட்சி அங்கே நிலவியது. குறிப்பாக ஏதென்ஸ் என்ற நகர-தேசம் மன்னர் ஆட்சியற்ற குடியரசாக இருந்தது. அங்கே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கைகளில் ஆட்சியதிகாரம் இருந்தது. தனி மனித சுதந்திரம் சட்டத்தினால் உறுதி செய்யப்பட்டது. சுருக்கமாக சொன்னால், இன்றுள்ள மேற்கத்திய நாடுகளைப் போல பண்டைய கிரேக்கம் காட்சியளித்தது. இவையெல்லாம் சரித்திர பாடப் புத்தகங்களில் எழுதப் பட்டிருப்பதின் சாராம்சம். மேல்நிலைப் பள்ளியில் போதிக்கப்படும் "ஜனநாயக சித்தாந்தம்", பெரியவர்கள் மனதிலும் ஆழப் பதிந்துள்ளது. இந்நாடுகளில் ஆசிரியர்கள் இப்படித்தான் கற்பிக்க வேண்டுமென்று, கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப் படுகின்றனர்.

2001 ம் ஆண்டு, நியூ யார்க் தாக்குதலின் பின்னர், அன்றைய ஜனாதிபதி புஷ் ஆற்றிய உரை, பல உலக நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் அமெரிக்க-ஐரோப்பிய மக்கள் மட்டும் தமது "ஜனநாயகப் பாரம்பரியம்" தாக்கப் பட்டதாகவும், தமது பழம் பெருமையை மீட்க வேண்டும் என்றும் சபதமெடுத்தனர். புஷ்ஷின் உரை, பண்டைய கிரேக்கத்தின் அறைகூவலை மீண்டுமொரு முறை எதிரொலித்தது. 2500 வருடங்களுக்கு முன்னர், கிரேக்கம் மீது ஈரானில் இருந்த பாரசீகப் பேரரசு படையெடுக்க எத்தனித்தது. கிழக்கே இருந்த பாரசீக நாட்டை சேர்ந்தவர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரித்து தான், கிரேக்கம் தனது மக்களை அணி திரட்டியது. "அவர்கள் ஏன் எம்மை தாக்குகிறார்கள்? எமது சிறந்த நாகரீகமான ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் ஆகியவற்றைக் கண்டு பொறாமை கொண்டுள்ளனர்." போருக்காக ஏதென்ஸ் அரசு கூறிய காரணங்கள் அவை. ஆமாம், பண்டைய கிரேக்கர்களும், நம் காலத்து அமெரிக்கர்களைப் போல, தமது ஜனநாயகம், சுதந்திரம் குறித்து பெருமை கொண்டிருந்தனர்.

பண்டைய கிரேக்கத்தில் ஜனநாயகம் நிலவியது உண்மை தான். ஆனால் அந்த ஜனநாயகம் நமக்கெல்லாம் தெரிந்த "பல கட்சி அரசியல் முறை" அல்ல. கட்சி என்றால் என்னவென்று அறிந்திராத காலம் அது. ஏதென்ஸ் பிரசைகளுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து வாக்களிக்கும் உரிமை இருந்தது. ஆனால் அந்த "சர்வசன வாக்குரிமை" ஆண்களுக்கு மட்டுமே இருந்த சுதந்திரம். பெண்களுக்கும், அடிமைகளுக்கும் வாக்குரிமை இருக்கவில்லை. தனி மனித சுதந்திரம் பெண்களுக்கு மட்டுப்படுத்தப் பட்டே இருந்தது. பண்டைய கிரேக்க சரித்திர ஆசிரியர் ஹெரோடுதுஸ் (கி.மு. 484-420) எகிப்தில் தான் கண்டவற்றை பற்றி எழுதிய குறிப்புகளில் இருந்து: "எகிப்தியப் பெண்களுக்கு சந்தைக்கு சென்று வரவும், கடைகளை நடத்தவும் சுதந்திரம் இருந்தது. அதற்கு மாறாக கிரேக்கப் பெண்கள், கணவனில் தங்கியிருந்து வீட்டு வேலைகளை மட்டுமே செய்து வந்தனர்." பண்டைய கிரேக்கத்தில் அடிமைகள், எஜமானின் சொத்தாக பார்க்கப்பட்டனர். ஒரு சில இடங்களில், பணம் சேர்க்க முடிந்த அடிமைகள் சுதந்திரம் வாங்கிக் கொண்டனர். அப்போது கூட உள்ளூர் பிரசைகள் செய்ய விரும்பாத (உதாரணம்: துறைமுகத்தில் மூட்டை சுமத்தல்) வேலைகளை மட்டுமே செய்தனர். இவர்களுக்கும், வேலைக்காக புலம்பெயர்ந்து வந்து குடியேறிய மக்களுக்கும், ஏதென்ஸ் நாட்டு பிரசாவுரிமை கொடுக்கப்படவில்லை. அந்த மக்களைப் பொறுத்தவரை, ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் என்பன அர்த்தமற்ற வார்த்தைகள்.

சில வருடங்களுக்கு முன்னர் ஹாலிவுட் எடுத்த "300" என்ற தலைப்பிலான படம் வசூலை அள்ளிக் குவித்தது. ஒரு சரித்திரக் கதையை மையமாக வைத்து வரையப்பட்ட சித்திரக்கதையை தழுவி அந்தப் படம் எடுக்கப் பட்டிருந்தது. "300" திரைப்படம் ஈரானியர்களை வில்லன்களாக சித்தரிப்பதாக விமர்சனங்கள் வந்தன. அது ஒரு அரசியல் பிரச்சாரப் படம் என்றது ஈரான். அப்படி என்ன அந்தப் படத்தில் இருக்கிறது? பண்டைய கிரேக்கத்தில் ஏதென்ஸ் நாட்டிற்கு தெற்கே இருந்த ஸ்பார்ட்டா என்ற தேசத்தின் வீரதீரக் கதை தான் "300". பாரசீக ஆக்கிரமிப்பாளரை எதிர்த்து, 300 ஸ்பார்ட்டா வீரர்கள் தீரத்துடன் போரிட்டு மடிவது தான் கதை. பாரசீக நாட்டு வீரர்கள், கறுப்பர்கள் போல, அல்லது அரேபியர் போல தோன்றுகின்றனர். அவர்களின் செயல்கள் காட்டுமிராண்டித் தனமானவை. சுருங்கக் கூறின், மேற்கத்திய நாகரீகத்திற்கும், கிழக்கத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையிலான போர். இன்றைய இளம் தலைமுறைக்கு இன மேலாதிக்க அரசியல் பிரச்சாரம் செய்ய, ஹாலிவுட் கண்டு பிடித்த சரித்திரக் கதை அது.

ஸ்பார்ட்டா மக்கள் எந்த அளவு நாகரீகமடைந்திருந்தனர்? ஏதென்ஸ் இற்கும், ஸ்பார்ட்டாவிற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தன. முரண்பாடுகள் முற்றி இவ்விரு அரசுகளுக்கும் இடையில் சில நேரம் யுத்தம் மூண்டது. "கிரேக்கர்களின் உள்நாட்டு யுத்தம்" என்று அப்போது அது அழைக்கப்பட்டது. ஏதென்ஸ் நகரமயமாக்கப்பட்ட சமூகமாக இருந்தது. அதற்கு மாறாக ஸ்பார்ட்டா கிராமங்களின் தேசம். ஆனால் அதி தீவிர இராணுவமயப்பட்ட பாஸிச சமூகத்தைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குடும்பமும் தமது ஆண் குழந்தைக்கு பத்து வயதானவுடன் அரசாங்கத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விட வேண்டும். அன்றில் இருந்து இராணுவ முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்படும் இளைஞர்களுக்கு, கடுமையான இராணுவ பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தமது பதின்ம வயதில் சித்தி அடையும் போது, தயக்கத்தைப் போக்குவதற்காக, கண்ணில் படும் அடிமையை கொலை செய்யுமாறு பணிக்கப்படுவர்.

ஸ்பார்ட்டாவில் அடிமைகளின் உரிமை பற்றி யாருக்கும் அக்கறை இருக்கவில்லை. இராணுவ பயிற்சிக்காக கொல்லப்பட்டும் பலியாடுகள் அவர்கள். இந்த அடிமைகள் முந்தின போர்களில் வெற்றி கொள்ளப்பட்ட இடங்களில் வாழ்ந்த மக்கள். அதாவது போர்க் கைதிகள். எண்ணிக்கையில் அதிகமாக இருந்த அடிமைகள் தமக்கெதிராக கிளர்ந்தெழக் கூடாது என்பதற்காக, இராணுவ பயிற்சியின் போது வேட்டையாடப் பட்டனர். ஒரு முறை ஸ்பார்ட்டாவில் ஏற்பட்ட கடுமையான பூமி அதிர்ச்சி, அடிமைகளை விடுதலை செய்தது. அடிமைகள் ஒன்று திரண்டு, ஸ்பார்ட்டா அரசுக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். ஐந்து வருடங்களாக அந்தக் கிளர்ச்சியை அடக்க முடியவில்லை. இறுதியில் ஏதென்ஸின் மத்தியஸ்தத்தின் பின்னர், கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பாக வெளியேறிய பின்பே, அமைதி திரும்பியது. அந்த கிளர்ச்சிக்குப் பின்னர், ஸ்பார்ட்டா அதிகாரிகள், அடிமைகளை ஓரளவு மனிதத்தன்மையுடன் நடத்தலாயினர்.

இன்றைய மேற்குலக அரசுகளும், அன்றைய கிரேக்க அரசுகளும் பிரச்சாரம் செய்தது போல, கிழக்கில் இருந்த பாரசீக நாட்டில், காட்டுமிராண்டிக் கலாச்சாரம் நிலவவில்லை. பாரசீகப் பொருளாதாரம் அடிமைகளை நம்பி இருக்கவில்லை. சமுதாயத்தில் மிக மிகக் குறைவான அடிமைகளே இருந்தனர். மேலும் சீருஸ் சக்கரவர்த்தி போட்ட சட்டம், அடிமை முறையை தடை செய்திருந்தது. கி.மு. 6 ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட சீருஸ் சக்கரவர்த்தியின் சட்டம், "உலகின் முதலாவது மனித உரிமைகள் சாசனம்" என்று புகழப் படுகின்றது. ஐ.நா.மன்றம் அதனை பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. "பிற மதங்கள் மீதான சகிப்புத் தன்மை, அடிமை முறை ஒழிப்பு, விரும்பிய தொழிலை செய்யும் உரிமை...." போன்ற தனி மனித சுதந்திரங்கள் அந்த சாசனத்தில் உறுதிப்படுத்தப் பட்டிருந்தன. ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் இன்னொரு பேரரசின் தலைநகராக இருந்த பாபிலோன் சீருஸ் சக்கரவர்த்தியின் படைகளால் கைப்பற்றப்பட்டது. அப்போது கூட, பாபிலோன் மக்களுக்கு தாம் ஆக்கிரகிக்கப் பட்டிருக்கிறோம் என்ற எண்ணம் எழாதபடி ஆளப்பட்டனர். சக்கரவர்த்தியின் உத்தரவின் பிரகாரம், பாபிலோனியர்கள் தமது சொந்த மதத்தை வழிபட சுதந்திரம் வழங்கப்பட்டது. அத்தோடு எந்தவொரு பாபிலோனியனும் அடிமையாக்கப் படவில்லை.

மேற்குலகம் போதனை செய்வதைப் போல, அவர்கள் ஜனநாயகப் பாரம்பரியத்தில் வந்தவர்களுமல்ல, மத்திய ஆசியாவை சேர்ந்தவர்கள் காட்டுமிராண்டிகளும் அல்ல. வரலாற்றில் தமக்குப் பிடித்த பகுதிகளை மட்டும் தெரிவு செய்து கற்பதால் தான் இந்த குளறுபடி ஏற்படுகிறது. இன்று ஊடகங்களில் சித்தரிக்கப்படும் "காட்டுமிராண்டிக் குணாம்சங்கள்" எல்லாம் ஐரோப்பிய வரலாறு கண்டு வந்தவை தான். உதாரணத்திற்கு, தற்கொலைத் தாக்குதல்கள். இன்று நீங்கள் சாதாரண ஐரோப்பியனை (அல்லது அமெரிக்கனை) கேட்டால், "பைத்திக்காரத் தனம்" என்று ஒரு வார்த்தையில் பதிலளிப்பார்கள். 1831 ம் ஆண்டு, நெதர்லாந்தில் இருந்து பெல்ஜியம் பிரிவினைக்காக யுத்தம் செய்த காலத்தில், நடந்த சம்பவமொன்று தற்கொலைப் பயங்கரவாதத்தை நினைவுபடுத்தும். யன் வான் ஸ்பைக் என்ற ஒல்லாந்து வணிகன், எதிரிப்படைகளிடம் தனது கப்பல் அகப்படும் தருணத்தில், தனது கப்பலை வெடிக்க வைத்து தானும் மாண்டான். அதிகம் பேசுவானேன், முன்னர் குறிப்பிட்ட 300 ஸ்பார்ட்டா வீரர்கள் மரணத்தை எதிர்நோக்கிச் சென்ற தற்கொலைக் கொலையாளிகள் தான்.

இன்றைய அமெரிக்கா தன்னை பண்டைய கிரேக்கத்துடன் ஒப்பிடும் ஒவ்வொரு தடவையும், யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருவதாக அப்பாவி வேஷம் போடுகின்றது. அதாவது தனக்கு ஏகாதிபத்திய ஆதிக்க வெறி ஒரு போதும் இருக்கவில்லை என்பது போல. இந்த விடயத்தில் கூட நம் காலத்து ஏகாதிபத்தியம், பண்டைய கிரேக்க ஏகாதிபத்தியத்துடன் ஒத்த தன்மைகளைக் கொண்டுள்ளது. அனேகமாக "கிரேக்க ஏகாதிபத்தியம்" குறித்து சரித்திர நூல்கள் குறிப்பிடுவதில்லை. "அலெக்சாண்டர் என்ற தனி மனிதனின் உலகை ஆளும் ஆசை" பற்றி மட்டும் எடுத்துக் கூறுகின்றன. வட கிரேக்க, மசிடோனியா நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர், பாரசீக நாட்டை அடக்குவதாக கூறித் தான் அனைத்து கிரேக்கர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டான். போரில் பாரசீக பேரரசை தோற்கடித்த பின்னர், இளம் வயதில் அலெக்சாண்டர் மாண்டது உண்மை தான். ஆனால் அத்துடன் சரித்திரம் முற்றுப் பெறவில்லை. அலெக்சாண்டரின் பின்னர் அந்தப் பேரரசை நிர்வகித்தவர்கள் அனைவரும் கிரேக்கர்கள். இன்றைய ஈரான் முதல் எகிப்து வரை கிரேக்க நகரங்கள் தோன்றியிருந்தன. அங்கெல்லாம் கிரேக்கர்கள் சென்று குடியேறினர். உள்ளூர் மக்கள் தொழிலுக்காக கிரேக்க மொழி கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கிரேக்க காலனிகளின் மக்கள், உள்ளூர் மக்களுடன் ஒன்று கலக்காது, உயர்ந்த அந்தஸ்தைப் பேணி வந்தனர்.

கிரேக்க காலனிய காலகட்டத்தில் இருந்து, அதாவது 2500 வருடங்களாக, ஆசிய நாடுகளை சேர்ந்த மக்கள், மேலைத்தேய நாகரீகத்தை வியப்புடன் நோக்கினர். வேறுவிதமாக கூறினால், மேற்கத்திய மேலாண்மைக்கு அடிபணிந்தனர். தமது சொந்த கலாச்சாரம் பிற்போக்கானது என்றும், மேலைத்தேய கலாச்சாரம் முற்போக்கானது என்று நம்பினார். நமது நாட்டில், தமக்குள் ஆங்கிலத்தில் உரையாடும், ஆங்கிலப் பெயர் சூட்டிக் கொள்வதை பெருமையாகக் கருதும், நடுத்தர வர்க்கத்தை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். அப்படியானவர்கள் எல்லா ஆசிய நாடுகளிலும், எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளனர். அதாவது மேலைத்தேய நாகரீகம், தானே உலகில் உயர்ந்தது, மற்றதெல்லாம் காட்டுமிராண்டிகளின் நாகரீகம், என்பதை நிலை நாட்ட பாடுபடுகின்றது. அந்தக் கருத்துக்கு ஆதரவளிக்கும் உள்ளூர் மக்களும் இருந்தனர்/இருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த சிந்தனை மாறி வருகின்றது.


குறிப்பாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள், மேற்குலகிடம் இருந்து தமக்கு கற்றுக் கொள்ள எதுவும் இல்லை என்று கூறி விட்டன. அவர்கள் மேற்குலக நாகரீகத்தை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற மறுக்கிறார்கள். சிறந்ததை மட்டும் பின்பற்றுவோம், மற்றவற்றை விட்டு விடுவோம் என்று நடந்து கொள்கின்றனர். (அதற்கு மாறாக, மேற்குலக குப்பைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு வரும் நாடுகளும் இருக்கின்றன.) ரஷ்யாவிலும், சீனாவிலும், ஒரு காலத்தில் தமது பிரசைகள், மேற்குலக செல்வாக்கிற்கு உட்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் நிலவியது. அதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அந்த அச்சம் மறைந்து வருகின்றது. ரஷ்ய, சீன அரசுகள் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. ரஷ்யா ஜோர்ஜியா மீது போர் தொடுத்த காலத்தில், சீனா திபெத் கிளர்ச்சியை அடக்கிய நேரமும், மேற்குலக கண்டனங்களுக்கு உள்ளாகின. ஆனால் அப்போதெல்லாம் பெரும்பான்மை மக்கள் தமது அரசின் பக்கமே நின்றனர். அந்த நேரம் மேற்குலக கண்டனங்கள் அவர்களுக்கு எரிச்சலையே ஊட்டின. அதற்குக் காரணம், மேற்குலகின் "இரட்டை அளவுகோல் கொள்கை." "மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்," என்ற பழமொழிக்கேற்ப மேற்குலக நாடுகளின் நடத்தைகள் அமைந்துள்ளன. உலக மக்கள் அனைவரும் இந்த இரட்டை வேஷம் குறித்து நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர். அதனால் "மேற்குலகின் உயர்ந்த நாகரீகம்" தற்போது, சந்தையில் விலைப்படாமல் தேங்கிக் கிடக்கின்றது.

Thursday, June 25, 2009

இந்தியாவில் கொந்தளிக்கும் உள்நாட்டுப் போர்


"சுதந்திரத்திற்குப் பின்னர், எமது தேசத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் மாவோயிஸ்ட்களிடம் இருந்து வந்துள்ளது." - இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்

கல்கத்தா நகரில் இருந்து, 170 கி.மி. தொலைவில் உள்ள லால்கர் பிரதேசத்தை, மாவோயிஸ்ட்கள் தமது கட்டுப்பாட்டில் உள்ள, விடுதலைப் பிரதேசமாக பிரகடனம் செய்திருந்திருந்தனர். இந்த அறிவிப்பும் அதைத் தொடர்ந்த இராணுவ நடவடிக்கையும், இந்திய தேசிய ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றன. தாலிபான்களின் மீது போர் தொடுத்து பாகிஸ்தான் மீட்டெடுத்த ஸ்வாட் பள்ளத்தாக்கை ஒப்பிட்டு, "இந்தியாவின் ஸ்வாட் உருவாகின்றது" என தலையங்கம் தீட்டியது ஒரு பத்திரிகை. மேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை இராணுவ நடவடிக்கை முடிந்த கையோடு, அரசு மாவோயிஸ்ட்களை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தது.

மாவோயிஸ்ட்கள் மீதான தடை வெறும் அரசியல் தந்திரோபாயம் என்று சில அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். "இதுவரை அரசு மாவோயிஸ்ட்களை அடக்க என்ன செய்தது?" என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பலாம் என்பதற்காக பயங்கரவாத தடை வந்துள்ளதாக அவர்கள் ஆற்றுப்படுத்துகின்றனர். இந்திய அரசு முன்பு என்றுமில்லாதவாறு மாவோயிஸ்ட் இயக்கம் மாபெரும் அச்சுறுத்தல் என்று அறிவிப்பதும், பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி தடை செய்வதும், எந்த வித உள் நோக்கமுமற்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளல்ல. சுருக்கமாக சொன்னால், இது இந்தியாவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்". 2001 ம் ஆண்டில், அன்றைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷினால் நியூ யார்க்கில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்", தெற்காசியாவை வந்து சேர்ந்துள்ளது. வன்னி பெருநிலப்பரப்பில் இலங்கை அரசு முன்னெடுத்த மூர்க்கத்தனமான போர். அதேயளவு மூர்க்கத்துடன் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் அரசு நடத்திய போர். இவையெல்லாம் பயங்கரவாத எதிர்ப்பு பதாகையின் கீழ், அமெரிக்க ஆசியுடன் நடந்த பதிலிப் போர்கள் தாம்.

"இந்தியாவின் 28 மாநிலங்களில், கிட்டத்தட்ட அரைவாசி மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் பிரசன்னம் உணரப்படுகின்றது. மொத்த உறுப்பினர்கள் தொகை 20000 - 30000 அளவில் இருக்கலாம். காலாவதியான ஆயுதங்களை வைத்திருக்கும் பொலிஸ் படையால், நவீன ஆயுதங்களைப் பாவிக்கும் பெரும் எண்ணிக்கையிலான மாவோயிட்களை சமாளிக்க முடியவில்லை." முதலாளித்துவ ஊடகங்களே அத்தகைய தகவல்களை தெரிவித்து வருகின்றன. இவர்களின் கவலையெல்லாம், பொலிஸ் படைகள் நக்சலைட்களை எதிர்த்து போராடும் திறனைக் கொண்டிருக்கவில்லை. காலந் தாமதிக்காமல் இராணுவத்திடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பது தான்.

மாவோயிஸ்ட்கள் ஏற்கனவே ஆந்திரா, சட்டிஸ்கர், பிஹார், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் விடுதலைப் பிரதேசங்களை அமைத்துள்ளனர். இவை மாவோயிஸ்ட் கட்சியினரின் முழுமையான ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ள பிரதேசங்கள். இதைவிட கெரில்லாப் பிரதேசம் என அறிவிக்கப்பட்ட சில இடங்களில், தலைமறைவாக இயங்கும் மாவோயிஸ்ட்களின் உத்தரவுகள் செல்லுபடியாகின்றன. உதாரணத்திற்கு கெரில்லாப் பிரதேச முதலாளிகள் அதிகளவு சம்பளம் வழங்க வேண்டுமெனவும், கட்சிக்கு வரி செலுத்த வேண்டுமெனவும் பல உத்தரவுகள் நடைமுறைபடுத்தப் படுகின்றன. பெரும்பாலும் நாட்டுப்புற சிறிய நகரங்களையும், ஆதிவாசிகளின் காட்டுப்பகுதிகளையும் மாவோயிஸ்ட்கள் தமது கட்டுப்பாட்டு பிரதேசம் என அறிவித்துள்ளனர். இந்தியாவின் கீழ்த்திசை மாநிலங்களில் உள்ள அத்தனை கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் மொத்தப் பரப்பளவு, இலங்கை அளவு இருக்கும்.

மேற்கூறப்பட்ட தரவுகள் எல்லாம் இந்திய அரசுக்கு, அல்லது ஊடகங்களுக்கு தெரியாதவை அல்ல. 1967 ம் ஆண்டு, மேற்கு வங்காளத்தில் நக்சல்பாரிக் கிராமத்தில் எழுந்த விவசாயிகளின் புரட்சி அடக்கப்பட்டு விட்டது என்றே பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். எழுபதுகளில் இந்திய அரசுக்கு சவாலாக விளங்கிய நக்சலைட்களின் போராட்டம் ஓய்ந்து விட்டது என்று தான் எல்லோரும் நம்பினார்கள். முன்னாள் போராளிகள் ஆயுதங்களைக் கைவிட்டு, "மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்" கட்சிகளாக பாராளுமன்ற அரசியல் வழியில் ஜனநாயகமயப்பட்டதும் அரசாங்கம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. இருப்பினும் சிறு குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் இருந்தன. ஆந்திராவில் இயங்கிய மக்கள் யுத்தப் பிரிவும், பீகாரில் இயங்கிய MCC பிரிவும், சில சமயம் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இந்த சகோதர சண்டையும் இந்திய அரசை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்க வைத்தது. நேபாளத்தில் மாவோயிஸ்ட் வெற்றி, இந்திய நக்சலைட்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது. மக்கள் யுத்தப் பிரிவு, MCC, மற்றும் சில உதிரிக் குழுக்கள் இணைந்து மாவோயிஸ்ட் கட்சியாக மறுவார்ப்புச் செய்து கொண்டனர்.

நக்சலைட் கிளர்ச்சியை அடக்குவதற்கு இராணுவப் பிரிவுகளை அனுப்பாததற்கு காரணம் இருக்கிறது. இந்திய தேசிய ஊடகங்கள் காஷ்மீர் அல்லது இஸ்லாமிய வன்முறை நடவடிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தன. காஷ்மீர் பிரிவினைக்கு எதிராக பிற மாநிலங்களையும், முஸ்லிம் சிறுபான்மைக்கு எதிராக இந்து பெரும்பான்மையினரையும் திசை திருப்பி விடுவதில் ஊடகங்கள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. சுருங்கக் கூறின், இனவாதம், மதவாதம் போன்றன இந்தியர்களைப் பிரித்து வைக்க உதவின. மாவோயிஸ்ட் கிளர்ச்சி பற்றிய செய்திகள் இந்தியர்களை ஏழை-பணக்காரன் என்ற வர்க்க அடிப்படையில் பிரித்து விடும். அமெரிக்காவை எட்டிப்பிடிக்க துடிக்கும் மத்திய தர வர்க்கம் ஒரு பக்கம் வளர்ந்து வருகையில், மறு பக்கம் பெரும்பான்மை இந்தியர்கள் வசதியற்ற ஏழைகள் என்ற உண்மையையும் மறைக்க முடியாது. ஏழைப் பாதுகாவலர்களான நக்சலைட் இயக்கம், ஒரு நிகழ்கால தோற்றப்பாடு என்பதை இந்தியர்கள் அறியக்கூடாது என்பதில் ஊடகங்கள் அவதானமாக இருந்துள்ளன. இது ஊடகங்களின் வர்க்கப்பாசத்தை இனங்காட்டுகின்றது.

அப்போது இந்திய அரசுக்கு தலைக்கு மேல் வேறு பிரச்சினைகள் இருந்தன. பரம வைரியான பாகிஸ்தான் காஷ்மீரில் எல்லைதாண்டி வந்து விடும் என்ற அச்சம் அலைக்கழித்தது. "உலகிலேயே அதிகளவு இராணுவக் குவிப்பை கொண்ட எல்லை" என வர்ணிக்கப்படும் காஷ்மீர் பிரதேசம், இந்திய அரசின் பாதுகாப்பு திட்டமிடலில் முதலிடத்தைப் பெற்றிருந்தது. தற்போதும் இடையிடையே நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் காரணம் என்று குற்றம் சாட்டுவது, இந்திய வெளி விவகார கொள்கையின் தவிர்க்க முடியாத அம்சம் தான். இருப்பினும் திரை மறைவில் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஒரு காலத்தில் தான் ஆதரவளித்த காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளை, தற்போது அடக்கி வைக்கின்றது. காஷ்மீர் கிளர்ச்சியை அடக்கும் கடமையை பாகிஸ்தான் பொறுப்பெடுத்து விட்டதால், இந்திய இராணுவம் இனிமேல் "மாவோயிஸ்ட் எதிர்ப்பு போரில்" ஈடுபடுத்தப்படும்.

கீழ்த்திசை மாநிலங்களில் மாவோயிஸ்ட்களை எதிர்த்துப் போரிட இந்திய இராணுவத்தை அனுப்புவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, சீனாவுடனான பூகோள அரசியல் முரண்பாடு. இரண்டாவது, பொருளாதார முதலீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு. இது பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம். மாவோயிஸ்ட் போராட்டம், சீனாவுக்கு அருகில் அமைந்திருக்கும், இரும்புத் தாது வளம் மிக்க மேற்கு வங்காளம் வரை வந்த பிறகு தான் இந்திய அரசு விழித்துக் கொண்டது. ஒரு புதிய உள்நாட்டுப் போருக்கான ஆயத்தங்கள் வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக பேசிய கௌர் சக்கரவர்த்தி என்பவர், கைது செய்யப்பட்ட நிகழ்வானது, வரப்போகும் கருத்துச் சுதந்திர அடக்குமுறைக்கு முன்னறிவித்தல் ஆகும். எப்போதும் போர் வருவதற்கு முன்னர், கருத்துச் சுதந்திர அடக்குமுறை வந்து விடும். இலங்கையிலும் அது தான் நடந்தது. துரதிர்ஷ்டவசமாக, எல்லா அரசாங்கங்களும் மனித உரிமைகளுக்கு மதிப்புக் கொடுத்தால், போரை நடத்த முடியாது என்ற கருத்தைக் கொண்டுள்ளன.

மாவோயிஸ்ட்களுக்கு சீனா உதவுவதாக இந்திய அரசு குற்றஞ் சாட்டி வருகின்றது. சீனா இதை மறுத்து வருகின்றது. சீனாவில் புரட்சிக்கு எதிரான (முதலாளித்துவ) கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கின்றது. இருப்பினும் இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில், சிந்தாந்த நட்புறவு சாத்தியமில்லை என்பது இந்திய அரசுக்கும் தெரியும். அவர்களது கவலை முழுக்க பூகோள அரசியல் சார்ந்தது. நேபாளத்தில் ஆட்சியில் இருந்த மாவோயிஸ்ட் அரசு, இந்தியாவை புறக்கணித்து சீனாவுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்தியது. அதனால் தான் அங்கே மாவோயிஸ்ட் அரசு கவிழ்க்கப்பட்டது என்று கருதப்படுகின்றது. இலங்கையில் இந்தியா வழங்கி வந்த ஆயுத உதவியை நிறுத்தியதும், சீனா வந்து புகுந்து கொண்டது. இலங்கை அரசுக்கு வேண்டிய அளவு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து போரை முடிக்க உதவியது. பிரதிபலனாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை பெற்றுக் கொண்டது. மாறிவரும் சர்வதேச அரங்கில் சீனா பலம் பெற்று வருவது, இந்தியாவுக்கும், அதற்குப் பின்னால் நிற்கும் அமெரிக்காவுக்கும் உவப்பானதாக இல்லை.

சீன எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கான உரிமை கோரலை சீனா இன்னும் கைவிடவில்லை. இந்த நிலையில் வட-கிழக்கு மாநிலங்களில் இந்திய இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. தனது எல்லையில் நிறுத்தப்படும் இந்திய படைகள் பல மடங்காக பெருப்பதை, சீனா கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கவில்லை. சீனா தனது செல்வாக்கை பயன்படுத்தி, ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தியாவிற்கு வழங்கவிருந்த கடனை முடக்கியது. பின்னர் அமெரிக்காவின் தலையீட்டினால் தான் கடன் அனுமதிக்கப்பட்டது. மேலெழுந்தவாரியாக இரு நாடுகளுக்கும் இடையில் நட்புறவு நிலவி வந்த போதிலும், அமெரிக்க-இந்திய அணு சக்தி உடன்படிக்கையின் போது சீனா தனது அதிருப்தியை வெளிக்காட்டியது.

கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில், பெறுமதியான கனிம வளங்கள் அதிகமாக காணப்படும் ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மாவோயிச போராளிகள் பலம் பெற்று வருகின்றனர். ஏற்கனவே ஒரிசாவில் அலுமினிய தொழிற்துறை மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களால் பின்னடைவை சந்தித்துள்ளது. மாவோயிஸ்ட்கள் அலுமினிய உற்பத்தியை முடக்குவதுடன், டைனமைட்களையும் கொள்ளையிட்டுச் செல்கின்றனர். தேசிய அலுமினிய நிறுவனமான NALCO, ஏப்ரலில் தனது சுரங்கங்கள் புரட்சியாளர்களால் தாக்கப்பட்டதில் இருந்து, 20 வீத வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சுரங்கங்கள் மட்டுமல்ல, அலுமினிய, இரும்பு மூலப்பொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில் விநியோகப் பாதைகளும் மாவோயிஸ்ட் போராளிகளினால் தாக்கப்படுகின்றன. ரயில்பாதையை குண்டு வைத்து தகர்ப்பது கூட விநியோகத்தை தற்காலிகமாக முடக்க போதுமானதாக உள்ளது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப் படுவதுடன், பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை தோற்றுவிக்கும் என தொழிலதிபர்கள் கவலைப்படுகின்றனர். மேற்கு வங்காளத்தில் லால்கர் பிரதேசம் மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததும், தொழிலதிபர்களின் இரத்தக் கொதிப்பு இரட்டிப்பாகியது. இந்தியாவில் மிகப் பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனமான JSW Steel, லால்கருக்கு அருகில் 10 பில்லியன் டாலர் செலவில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டிருந்தது. முதலீட்டாளர்கள் மனதில் "மாவோயிஸ்ட் பிரச்சினை" திகிலை ஏற்படுத்தியுள்ளமையை, JSW Steel அதிபர் குப்தா ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி எடுத்துக் காட்டுகின்றது. பொதுவாக தொழிலதிபர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதர்களாக வேஷம் போடுவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு போருக்குப் பின்னும் பொருளாதார நலன்கள் மறைந்து கிடக்கின்றன.


***********************************************************************
இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
தமிழ்நாட்டில் நக்சலைட்களின் மீள்வருகை