Monday, April 06, 2020

கொரோனா பேரிடரின் முடிவில் ஒரு சமூகப் புரட்சி வெடிக்குமா?


அன்றைய கொள்ளை நோயையும், இன்றைய கொரோனா தொற்று நோயையும் ஒப்பிட்டால் ஆச்சரியப்படத்தக்க ஒற்றுமைகள் தெரிய வருகின்றன. அன்று இத்தாலி வர்த்தகர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சர்வதேச வாணிபம் தான் பிளேக் நோய் ஐரோப்பாவில் பரவுவதற்கு காரணமாக இருந்தது. கிரீமியாவில் நடந்த யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட இத்தாலி வணிகர்களின் கப்பல்கள், அங்கு நடந்த உயிரியல் யுத்ததின் விளைவாக பெற்ற பிளேக் நோய் கிருமிகளை காவிக் கொண்டு இத்தாலிக்கு வந்து சேர்ந்தன.

தற்போது ஒவ்வொரு நாடும் தனது எல்லைகளை மூடி விட்டதைப் போன்று தான், அன்றைய ஐரோப்பிய நாடுகளும் நடந்து கொண்டன. அப்போது இத்தாலி ஒரே நாடாக இருக்கவில்லை. பல்வேறு தனித் தனி இராச்சியங்களாக பிரிந்திருந்தது. வணிகக் கப்பல்களால் தான் நோய் பரவுகிறது என்பதை கண்டு கொண்ட தெற்கு இத்தாலியில் இருந்த அரசுகள் கிரீமியாவில் இருந்து வந்த கப்பல்களை தரையிறங்க விடவில்லை. இருப்பினும் தெற்கு இத்தாலியில் ஏற்கனவே நோய் தொற்றி விட்டிருந்தது. சிசிலித் தீவு சனத்தொகையில் அரைவாசிப் பேர் பிளேக் நோயால் மரணமுற்றனர்.

இத்தாலியில் தரையிறங்க மறுக்கப்பட்ட வணிகக் கப்பல்கள் பிரான்சுக்கு சென்றன. மார்செய் துறைமுகத்தில் வணிகப் பொருட்களுடன் பிளேக் நோய்க் கிருமிகளும் இறக்குமதி செய்யப்பட்டன. அங்கிருந்து நோய் பாரிஸ் நகருக்கு பரவியது. பின்னர் பிரெஞ்சு வணிகர்களால் இங்கிலாந்தில் பரவியது. அதற்குப் பிறகு ஆங்கிலேய வணிகர்களால் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கு பரப்பப் பட்டது. இவ்வாறு வணிகர்கள் தான் பிளேக் நோய்க் கிருமிகளை காவிச் சென்று பரப்பி இருந்தனர்.

இருப்பினும் பிளேக் நோய் உள்நாட்டில் பெருமளவில் பரவத் தொடங்கியதும், இது ஆரம்பத்தில் வணிகர்களால் பரப்பப் பட்டது என்ற உண்மை மறந்து விட்டது. அதே போன்றதொரு நிலைமை தான் இன்றைய கொரோனா நோய்த் தொற்று உலகம் முழுவதும் பரவக் காரணமாக இருந்தது. அதாவது "உலகின் தொழிற்சாலை" என்று கருதப்பட்ட சீனாவில் வணிகத்தில் ஈடுபட்ட அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் தத்தமது நாடுகளுக்கு திரும்பிச் சென்ற நேரம் கொரோனா வைரஸை பரப்பி விட்டனர்.

முதலாளித்துவ உலகமயமாக்கல் காரணமாகத் தான் கொரோனா வைரஸ் தொற்றியது என்பதை ஊடகங்கள் தெரிவிப்பதில்லை. ஒன்றிரண்டு தடவைகள் குறிப்பிடப் பட்டாலும் பின்னர் மறக்கப் பட்டு விட்டது. அதற்குப் பதிலாக யார் மீதாவது பழி போடும் படலம் தொடங்கியது. மேற்கத்திய நாடுகள் முழுப் பழியையும் சீனாவின் தலையில் போட்டன. மத்திய கால ஐரோப்பாவிலும் அது தான் நடந்தது. அன்றைய ஐரோப்பியர்கள் யூதர்கள் மீது பழி போட்டனர். யூதர்கள் கிறிஸ்தவப் பிள்ளைகளை கடத்திச் சென்று கொலை செய்வதாகவும், நீர் நிலைகளில் நஞ்சு கலப்பதாகவும் குற்றம் சாட்டப் பட்டனர். அதாவது யூதர்களே திட்டமிட்டு இந்த தொற்று நோயை பரப்பியதாக பெரும்பாலான ஐரோப்பிய மக்கள் நம்பினார்கள்.

சுவிட்சர்லாந்தில் ஒரு யூத வைத்தியர் கிணற்றில் நஞ்சு கலந்த குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார். அவர் கடுமையான சித்திரவதைகளுக்கு பின்னர் தான் குற்றத்தை ஒப்புக் கொண்டார் என்பதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை. அதை தமது குற்றச்சாட்டுகளுக்கான நிரூபணமாக எடுத்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து யூதர்களுக்கு எதிரான கலவரம் வெடித்தது. ஆத்திரமுற்ற மக்கள் யூதர்களின் வீடுகளை தாக்கினார்கள். சுவிஸ் பாசல் நகரில் மட்டும் ஆறாயிரம் யூதர்களை ஒரு மரக் கட்டிடத்திற்குள் பூட்டி வைத்து எரித்துக் கொல்லப் பட்டனர். ஜெர்மனியிலும் பல நகரங்களில் யூத இனப்படுகொலை நடந்ததுள்ளது.

உலக வரலாற்றில் பரவிய பெருந்தொற்று நோய்களை எடுத்துப் பார்த்தால், ஒவ்வொரு பேரிடரின் முடிவிலும் சமூகப் புரட்சிகள் நடந்துள்ளன. பதினான்காம் நூற்றாண்டில் ஏற்பட்ட கொள்ளை நோய் எனும் பிளேக் தொற்று காரணமாக கோடிக்கணக்கான மக்கள் செத்து மடிந்தனர். ஐரோப்பிய நாடுகளின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு குறைந்தது. ஆனால், தொற்று நோய்க் காலம் முடிந்த பின்னர் கத்தோலிக்க திருச்சபையின் ஏகபோக அதிகாரம் ஆட்டம் கண்டது. புரட்டஸ்தாந்து மத எழுச்சி ஏற்பட்டது. அதைத்தவிர இங்கிலாந்திலும், ஜெர்மனியிலும் விவசாயிகளின், விவசாயக் கூலித்தொழிலாளர்களின் புரட்சிகள் நடந்தன. துரதிர்ஷ்டவசமாக ஆரம்பத்தில் முற்போக்கானதாக கருதப்பட்ட புரட்டஸ்தாந்து மதம், மன்னர்களுடன் ஒத்துழைத்து புரட்சியை ஒடுக்க உதவியது.

அதே போன்று இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஸ்பானிஷ் புளு எனும் வைரஸ் தொற்று பரவியது. அதன் பெயர் "ஸ்பானிஷ்" என்றாலும், ஸ்பெயினில் மட்டுமல்லாது பல ஐரோப்பிய நாடுகளிலும் பரவிய வைரஸ் பல இலட்சம் மக்களை காவு கொண்டது. முதலாம், இரண்டாம் உலகப்போர்களில் கொல்லப்பட்ட மக்களை விட அதிக எண்ணிக்கையில் இந்த தொற்று நோய்க்கு பலியானார்கள். இருப்பினும் அதே காலகட்டத்தில் தான் ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெடித்தது. ஜெர்மனியிலும், ஹங்கேரியிலும் சோஷலிச மாற்றுக்கான பாட்டாளிவர்க்க புரட்சிகள் நடந்தன.

Sunday, April 05, 2020

சர்வதேச மருந்துச் சந்தையில் சீனாவின் மேலாதிக்கம்


"சீன வைரஸ்" என்று சொல்லி வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா அமெரிக்காவுக்கான மருந்து ஏற்றுமதியை நிறுத்தி விடப் போவதாக எச்சரித்ததும் வாயை மூடிக் கொண்டார். அதற்குப் பிறகு ஒழுங்கு மரியாதையாக கொரோனா வைரஸ் என்று சொல்லத் தொடங்கினார். சர்வதேச மருந்து சந்தையில் சீனாவின் மேலாதிக்கம் பற்றிக் குறிப்பிட இந்த ஒரு உதாரணம் போதும்.

அமெரிக்கா, ஐரோப்பாவில் பயன்பாட்டில் உள்ள மருந்துகள் மட்டுமல்ல, முகக்கவசங்கள், மருத்துவ உபகரணங்கள் கூட சீனாவில் இருந்து தான் இறக்குமதியாகின்றன. அந்தளவுக்கு மேற்கத்திய நாடுகள் சீனாவில் தங்கியுள்ளன. அதற்குக் காரணம் என்ன? முதலாளித்துவ உலகமயமாக்கல்.

பொதுவாக எல்லா முதலாளிகளும் உற்பத்தி செலவுகளை குறைப்பது எப்படி என்று தான் சிந்திப்பார்கள். குறிப்பாக தொழிலாளர்களின் சம்பளத்தை குறைத்தால் அதிக இலாபம் சம்பாதிக்கலாம். மேற்கத்திய நாடுகளில் சம்பளம் அதிகம் என்ற ஒரே காரணத்திற்காக உற்பத்தித் தொழிற்துறை முழுவதும் சீனாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. அவ்வாறே மருந்துத் தொழிற்சாலைகளும் சீனாவில் இயங்கத் தொடங்கின. சீனாவில் உற்பத்தி செலவு குறைவு என்பதால் மருந்துகளின் விலைகளும் குறைவாக உள்ளன.

உலக நாடுகள் தமது மருந்துத் தேவைக்காக சீனாவில் தங்கியிருப்பதானது சிலநேரம் எதிர்மறையான விளைவுகளை உண்டாக்கலாம். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக இருந்த காலத்தில் மருந்து உற்பத்தியும், ஏற்றுமதியும் நின்று விட்டது. இதனால் ஐரோப்பாவில் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. சிலநேரம் சீனா இதனை பூகோள அரசியலுக்கு பயன்படுத்தும் சாத்தியக் கூறுகளும் உள்ளன. அதற்கு சிறந்த உதாரணம் டிரம்பின் சீன வைரஸ் சர்ச்சை தொடர்பாக அமெரிக்காவுக்கு சீனா தெரிவித்த எச்சரிக்கை.

இதற்கு என்ன தீர்வு? ஒவ்வொரு நாடும் தனக்கு தேவையான மருந்துகளை உற்பத்தி செய்யும் வகையில் தன்னிறைவு காண வேண்டும். ஆனால் தனியார் நிறுவனங்கள் இலாப நோக்கை கருத்தில் கொண்டே செயற்படுகின்றன. முன்பு ஐரோப்பாவில் இயங்கி வந்த மருந்து கம்பனிகள் நட்டம் ஏற்பட்டதால் பூட்டப்பட்டன. ஆகவே இவற்றை அரசாங்கம் தேசியமயமாக்க வேண்டும். இப்படியான நடைமுறைகள் ஒரு சோஷலிச நாட்டில் தான் நடக்கும். ஆனால், மக்களின் உயிர்காக்கும் மருந்துகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் பட வேண்டுமானால் தேசியமயமாக்கல் அவசியம்.


Friday, April 03, 2020

முதலாளித்துவ வைரஸ் - உலகமயமாக்கப் பட்ட தொற்று நோய்


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவக் காரணமாக இருந்த "முதலாளித்துவ உலகமயமாக்கல்" வேண்டுமென்றே மூடி மறைக்கப் படுகின்றது. உலகமயமாக்கலின் ஆபத்தை மக்கள் அறியாமல் தடுப்பதற்காக, முதலாளித்துவ கைக்கூலிகளால் வேண்டுமென்றே சீனாவுக்கு அல்லது சீனர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கள் பரப்பப் படுகின்றன. "இது சீனாவின் சதி... திட்டமிட்டு கொரோனா நோயாளிகளை உலகம் முழுவதும் பரப்பியது..." என்பன போன்ற கட்டுக்கதைகளை உருவாக்கப் பட்டன. இதன் மூலம் முதலாளித்துவ உலகமயமாக்கலில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பி வருகின்றனர். 

பலர் வெகுளித்தனமாக நினைப்பது போல, சீனாவில் இருப்பவர்கள் அனைவரும் சீனர்கள் அல்ல. சீனாவின் பல நகரங்களை, நியூ யோர்க், லண்டன், பாரிஸ் போன்ற மேற்கத்திய நகரங்களுடன் ஒப்பிடலாம். அதாவது பல்லின மக்கள் குடியேறியுள்ள பன்முகக் கலாச்சாரங்களை கொண்ட நகரங்கள். 

உலகில் முதன்முதலாக கொரொனோ நோய்த் தொற்று நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வூஹான் நகரில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் வசித்து வந்தனர். அதற்குக் காரணம் அங்கு நிறைய பன்னாட்டுக் கம்பனிகள் தளம் அமைத்துள்ளன. அவற்றில் வேலை செய்ய வந்த பலர் வூஹானில் குடியேறி வாழ்ந்து வந்தனர். கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் அவர்களில் பலர் தமது தாயகத்திற்கு திரும்பிச் சென்றிருப்பார்கள். அவர்களில் எத்தனை பேர் கொரோனா வைரஸ் காவிச் சென்றனர் என்பது தெரியாது. 

அமெரிக்காவின் மக்டொனால்ட்ஸ், பெப்சி, ஜெர்மனியின் சீமன்ஸ், பிரான்சின் பேஜோ, சித்ரோயன், சுவீடனின் இகேயா போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் வூஹானில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளன. அவற்றின் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மட்டுமே சீனர்கள். நிர்வாக மட்டத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் அமெரிக்கர்கள், அல்லது ஐரோப்பியர்கள். இந்த நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் சீனர்களை அமர்த்துவதில்லை. அதற்குக் காரணம், அந்த நிறுவனங்களின் தொழிநுட்ப அறிவு ஒரு இராணுவ இரகசியம் போன்று பாதுகாக்கப் படுகின்றது. 




Thursday, April 02, 2020

COVID-19 பக்க விளைவுகள் : மீண்டும் சூடு பிடிக்கும் வர்க்கப் போராட்டம்

COVID-19 எனும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்களை வீடுகளில் தனிமைப் படுத்தும் திட்டம் கொண்டுவரப் பட்டாலும், எல்லா முதலாளிகளும் அதற்கு ஒத்துழைப்பதில்லை. பல நாடுகளில் தொழிலாளர்கள் கட்டாயம் வேலைக்கு வர வேண்டும் என நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுகூடும் தொழிலகங்களில் தொற்று நோய் பரவும் வேகம் அதிகரிக்கும் என்ற போதிலும் முதலாளிகள் அதைப்பற்றிக் கவலைப் படவில்லை.

இதனால் தன்னெழுச்சியான வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடக்கத் தொடங்கியுள்ளன. சில வாரங்களுக்கு முன்னர் ஸ்பெயினில் மெர்செடெஸ் பென்ஸ் தொழிலக ஊழியர்கள் முதலாளியின் உத்தரவுக்கு அடிபணிய மறுத்து வேலைநிறுத்தம் செய்தனர். தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியின் பெர்கமா நகரில் அமெரிக்காவின் F- 35 போர் விமானம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை மூடப்படவில்லை. இது தொடர்பான விபரங்களை கீழே தருகிறேன்.

இத்தாலியில் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருந்தாலும் அங்குள்ள F-35 விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதிலும் கொரோனா தொற்று அதிகமாக உள்ள பெர்கமா (Bergama) எனும் இடத்தில் தான் இந்த தொழிற்சாலை அமைந்துள்ளது.

மேற்படி தொழிற்சாலை இரண்டு நாட்கள் மட்டும் பூட்டப் பட்டிருந்தாலும், அமெரிக்க தூதுவராலயமும், இத்தாலி முதலாளிகள் சங்கமும் (Confindustria) கொடுத்த அழுத்தம் காரணமாக தொழிலாளர்கள் மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லாத நிலையில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்ட தொழிலாளர்கள், சமூக வலைத்தளைங்களில் தமது எதிர்ப்புணர்வை காட்டி வருகின்றனர். முதலாளிகள் சங்கத்தின் சின்னத்தின் கீழ் "உங்களது உடல் ஆரோக்கியத்தை விட எங்களது இலாபம் முக்கியம்" என்ற வாசகம் பொறித்த படம் பரவலாக பகிரப் பட்டது.

இத்தாலியை ஆளும் வலதுசாரிக் கட்சிகளின் கூட்டரசாங்கம் ஆரம்பத்தில் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்காமல் இழுத்தடித்தது. நோய்த் தொற்று அதிகரித்த பின்னர் தான் மக்களை தனிமைப்படுத்தும் முடிவு எடுத்தது. தொழிற்சங்கங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த பிற பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மூடி விடுவதற்கு அரசு சம்மதித்தது.

ஒருவேளை F-35 விமானமும் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்குள் அடங்குகிறது போலும்! மருத்துவ தேவைகளுக்கு ஒரு டாலர் கூட கொடுக்காத அமெரிக்க அரசு, போர் விமான உற்பத்திக்கு மட்டும் பில்லியன் டாலர் நிதி வழங்க முன்வந்துள்ளது. இத்தாலி நிறுவனமான Leonardo, அமெரிக்க நிறுவனமான Lockheed Martin இணைந்து இத்தாலியில் F-35 விமானங்களை உற்பத்தி செய்து வருகின்றன. இது இத்தாலியின் ஆயுத விற்பனைக்கு வருமானம் ஈட்டித் தரும் தொழிற்துறை ஆகும்.

தற்போது அமெரிக்காவிலும் வர்க்கப் போராட்டம் சூடுபிடித்துள்ளது. கொலராடோ மாநிலத்தில் உள்ள இறைச்சி அடைக்கும் JBS நிறுவனத்தில் வேலை செய்த பத்து தொழிலாளர்கள் COVID-19 தொற்றினால் பாதிக்கப் பட்டதாக அறிவிக்கப் பட்டது. இதை அடுத்து அங்கு வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்ய மறுத்து வெளிநடப்பு செய்தனர். 

அவர்கள் சுய தனிமைப் படுத்தல் காரணமாக வீடுகளில் இருந்தால் சம்பளம் வழங்கப் பட மாட்டாது என நிர்வாகம் அறிவித்திருந்தது. அந்த நிறுவனத்தில் சுகயீன கொடுப்பனவு திட்டம் என்றைக்குமே இருக்கவில்லை என காரணம் கூறப்பட்டது. COVID-19 பொசிட்டிவ் உள்ளவர்களுக்கு மட்டுமே சம்பளம் கொடுக்க முன்வந்தது.

அந்த தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்று கொண்டு வேலை செய்ய வேண்டும். ஒரு மீட்டர் இடைவெளி அங்கே சாத்தியமாகாது. அத்துடன் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு கவசம் எதுவும் வழங்கப் படவில்லை.

JBS தொழிலாளர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்கம் இறைச்சி பதனிடும் தொழிற்துறையும் அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப் பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு சுகயீன கொடுப்பனவும், இலவச குழந்தை பராமரிப்பு வசதியும் வழங்கப் படுகின்றது.

Wednesday, April 01, 2020

இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றியது எப்படி?


சீனாவில் இருந்து பல்லாயிரக் கணக்கான தூரத்தில் உள்ள இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்று பரவியது எப்படி என்பது பலருக்கும் புரியாத புதிராக உள்ளது. இதனால் சிலர் தமது மனம்போன போக்கில் புனைந்த கட்டுக்கதைகளும், வதந்திகளும் சமூகவலைத்தளைங்களில் பரவுகின்றன. இந்த வீடியோவில், இத்தாலியில் கொரோனா தொற்று தொடங்கிய காலத்தில் நடந்தது என்ன? எந்த இடத்தில் தவறு செய்தார்கள்? என்பதைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறேன். நாம் மற்றவர்களை குற்றம் சாட்டிக் கொண்டிருக்காமல், அவர்களது அனுபவங்களில் இருந்து கற்றுக் கொள்வோம்.

இனவாத முட்டாள்கள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். இந்த கொரோனா தொற்று நோய் "சீனர்களால் வேண்டுமென்றே பரப்பப் படுகின்றது" என்று பலரும் வெகுளித்தனமாக நினைப்பது போன்று தான், இத்தாலியரும் ஆரம்பத்தில் நினைத்தார்கள். அது தான் அவர்கள் செய்த முட்டாள்தனம் என்பதை உணர்வதற்குள் காலம் கடந்து விட்டது. ஒரு மாதத்திற்குள் இத்தாலி முழுவதும் இலட்சக் கணக்கானோருக்கு நோய் தொற்றி விட்டது. இன்று வரை பத்தாயிரம் பேருக்கு மேல் இறந்துள்ளனர். ஆரம்பத்தில் இது குறித்த அறிகுறிகள் தென்பட்ட போதெல்லாம் மருத்துவர்கள் அதை சாதாரண சளிக்காய்ச்சல் என நினைத்து அலட்சியப் படுத்தினார்கள். அப்போதே கோவிட் டெஸ்ட் எடுத்திருந்தால் விழிப்படைந்து இழப்புகளை குறைத்திருக்கலாம்.

ஜனவரி மாத தொடக்கத்தில் சீனர்களை மட்டும் தனிமைப் படுத்தினால் போதும் நோய் பரவ விடாமல் தடுத்து விடலாம் என்று தான் இத்தாலியர்கள் நினைத்தார்கள். அரச மட்டத்திலும் இந்த மூட நம்பிக்கை காணப்பட்டது. ஐரோப்பாவில் முதல் தடவையாக இத்தாலி தான் சீனாவுடனான விமான சேவைகளை முற்றாகத் துண்டித்தது. வழமையாக வந்து கொண்டிருந்த சீன சுற்றுலாப் பயணிகளையும் விரட்டியடித்து விட்டனர். சீனர்களை மட்டும் தேடிக் கண்டுபிடித்து தனிமைப் படுத்தினார்கள். பொது மக்கள் சீன ரெஸ்டாரன்ட் செல்வதையும், சீனக் கடைகளில் பொருட்களை வாங்குவதையும் தவிர்த்துக் கொண்டனர்.

பொதுவாகவே இத்தாலியர்கள் தமது உடல் ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள். அங்கு ஏராளமான மருந்துக் கடைகள் உள்ளன. பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் சுகாதாரமாக வாழ்வது எப்படி என்று ஆலோசனைகள் வழங்கிக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலான இத்தாலியர்களை பொறுத்தவரையில் ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள் தான் தொற்று நோய்க் காவிகள் என்ற இனவாத மனப்பான்மை உள்ளது. அது இந்த கொரோனா நெருக்கடியில் சீனர்களுக்கு எதிரான இனவாதமாக மாறியது.

இந்த குறுகிய இனவாத மனப்பான்மை தான் இத்தாலியர்கள் விட்ட மாபெரும் தவறு. வடக்கு இத்தாலியில், எங்கோ ஒரு மூலையில் உள்ள பிரதேசத்தில் தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று காணப்பட்டது. அந்த இடங்களுக்கு எந்தவொரு சீனரும் சென்றிருக்க மாட்டார். முதன்முதலாக தொற்றுதலுக்குள்ளான ஒரு சாதாரண தொழிலாளியான 38 வயது இளைஞன், வாழ்க்கையில் ஒரு நாளும் சீனாவுக்கு சென்றிருக்கவில்லை. ஆரம்பத்தில் நோய் அறிகுறி காணப்பட்டாலும், அவரைப் பரிசோதித்த மருத்துவர் சாதாரண சளிக்காய்ச்சல் என்று அலட்சியப் படுத்தி இருந்தார். அதனால் அந்த இளைஞனும் எந்தக் கவலையும் இல்லாமல் மாரத்தன் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டான். அத்துடன் உதைபந்தாட்டப் போட்டி ஒன்றையும் பார்வையிட சென்றிருக்கிறான். அப்போதே கொரோனா வைரஸ் பலருக்கு தொற்றி விட்டது.

பெப்ரவரி கடைசியில் விழித்தெழுந்த அரசு இயந்திரம் பலரை பரிசோதித்துப் பார்த்ததில் மூவாயிரம் பேருக்கு வைரஸ் தொற்றி இருந்தமை கண்டுபிடிக்கப் பட்டது. உடனே தொற்று காணப்பட்ட பிரதேசத்தை வெளியுலகில் இருந்து தனிமைப் படுத்தினார்கள். ஆனால் அதற்குள் நிலைமை கை மீறி விட்டது. ஏற்கனவே பிற பிரதேசங்களுக்கும் வைரஸ் தொற்றி விட்டிருந்தது. இந்த அச்சம் காரணமாக மிலான் பங்குச் சந்தை வர்த்தகம் சரிந்தது. அதைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய நாடுகளும் இத்தாலியுடனான தொடர்புகளை துண்டித்துக் கொண்டன.

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல். இறுதியில் எந்தவொரு ஐரோப்பிய நாடும் இத்தாலிக்கு உதவ முன்வராத நிலையில், சீனா தனது மருத்துவக் குழுவொன்றை பெருமளவு உபகரணங்களுடன் அனுப்பி வைத்தது. இந்த உதவிகள் யாவும் இத்தாலி தொலைக்காட்சியில் காட்டப்பட்டன. அதே நேரம் ஆபத்துக் காலத்தில் கைவிட்டு விட்ட ஐரோப்பிய நாடுகள் இத்தாலியரின் கண்டனத்திற்கு ஆளாகின. ஒரு கட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய கொடியை அகற்றி விட்டு சீனக் கொடியை பறக்க விடுமளவிற்கு வெறுப்புக் காணப்படுகின்றது. உண்மையான நண்பனை ஆபத்துக் காலத்தில் அறியலாம் என்பது ஓர் உலகப் பழமொழி.