Sunday, October 06, 2019

ஏன் "திராவிட மொழிகள்" என்று சொல்ல வேண்டும்?


அரசியல் காரணங்களுக்காக திராவிடம் என்ற சொல் இன்றைக்கு பலருக்கு அலர்ஜியாகி விட்டது. திராவிடம் என்பதற்குப் பதிலாக தமிழ் என்ற சொல்லைப் பாவிக்க வேண்டும் என்று அடம்பிடிக்கிறார்கள். இது இறுதியில் தமிழ்- நாஜிச அரசியலுக்குள் கொண்டு சென்று விடும் என்பதைப் பலர் உணர்வதில்லை.

ஐரோப்பாவில் பேசப்படும் ஜெர்மன், ஆங்கிலம், டச்சு, டேனிஷ், நார்வீஜியன், சுவீடிஷ், ஆகிய மொழிகளை ஜெர்மனிய மொழிகள் என்று அழைக்கிறார்கள். கவனிக்கவும்: ஜெர்மனியர்கள் தமது மொழியை ஜெர்மன் என்று சொல்வதில்லை! அவர்களது மொழியில் "டொய்ச்" (Deutsch) என்பார்கள். அவர்களது நாட்டின் பெயர் "டொய்ச் லாந்து" (Deutschland).

ஆகவே "ஜெர்மனிய மொழிகள்" என்ற சொற்பதத்தில் உள்ள ஜெர்மனி என்பது இன்றைய ஜெர்மனியை குறிப்பிடும் சொல் அல்ல. ஜெர்மன், அலெமான், சாக்சன் என்பன பண்டைய ஜெர்மனிய இனக் குழுக்களின் பெயர்கள். அன்று அவர்கள் பேசிய மொழிக்கும் இன்றைய டொய்ச் மொழிக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. 

இருநூறு வருடங்களுக்கு முன்னர் கூட, இன்றைய ஜெர்மனி முழுவதும் ஒரே மொழி பேசப் படவில்லை. கிழக்கே "பிரஷிய டொய்ச்" (Preußisch), மேற்கே "நீடர் (தாழ்ந்த) டொய்ச்" (Niederdeutsch), தெற்கே "ஹொஹ் (உயர்ந்த) டொய்ச்" (Hochdeutsch) என்று மூன்று பிரிவுகள் இருந்தன. இறுதியில் ஹொஹ் டொய்ச் தான் அங்கீகரிக்கப் பட்ட அரச கரும மொழி ஆகியது. நீடர் டொய்ச் தான் பிற்காலத்தில் "நெடர்லான்ட்ஸ்" (டச்சு மொழி) ஆகியது. அதன் இன்னொரு பிரிவு தான் தென் ஆப்பிரிக்காவில் பேசப்படும் "ஆபிரிக்கான்ஸ்" (Afrikaans) மொழி.

இன்றைய டொய்ச்காரர்கள் தாம் இன்றைக்கும் தொன்மையான ஜெர்மன் மொழி பேசுவதாக பெருமைப் படலாம். அதற்காக, ஆங்கிலேயர்கள், டேனிஷ்காரர்கள், டச் காரர்கள் போன்ற பிற மொழியினரும், தாம் டொய்ச் பேசுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அடம்பிடிக்க முடியாது. இது தான் ஹிட்லரின் காலத்தில் நடந்தது. அதாவது, ஹிட்லரின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்த பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளில் உள்ள மக்கள் டொய்ச் மட்டுமே பேச வேண்டும் என நிர்ப்பந்திக்கப் பட்டனர். அதன் விளைவாக ஏற்பட்ட எதிர்ப்புணர்வும், இரண்டாம் உலகப்போரின் முடிவும் அனைவரும் அறிந்தவை.

தமிழ், திராவிடம் ஆகிய சொற்களும் இதே அரசியல்- வரலாற்றுப் பின்னணியை கொண்டவை தாம். இன்றுள்ள தமிழர்கள் தாம் ஒரு தொன்மையான மொழியை பேசுவதற்காக பெருமைப் படுவதில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக அயலில் உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள மொழி பேசும் மக்களும் தாம் தமிழ் பேசுவதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அது ஐரோப்பாவில் நடந்தது போன்று ஆபத்தான நாஜிச அரசியலுக்கே இட்டுச் செல்லும்.

பதினெட்டாம் அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டில் கூட இன்றைய தமிழ், மலபார் மொழி என்று அழைக்கப் பட்டது. தமிழ் என்ற சொல் பண்டைய இலக்கியங்களில் எழுதப் பட்டிருக்கலாம். அதேநேரம் தமிழர் என்பது ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை மட்டும் சுட்டும் சொல்லாகவும் இருந்திருக்கலாம். தற்கால நவீனத் தமிழ் பிற்காலத்தில் செழுமைப் படுத்தப் பட்ட மொழி. அதற்கும் பண்டைய தமிழுக்கும் இடையில் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

இன்று தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகள் அனைத்தும் கடந்த முன்னூறு ஆண்டுகளுக்குள் செழுமைப் படுத்தப் பட்ட நவீன மொழிகள் தான். இந்த நவீன மொழிகள் முன்பிருந்த மூல மொழியுடன் பெரிதும் மாறுபடுகின்றன. இவற்றில் தமிழ் மட்டும் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது.

உதாரணத்திற்கு தெலுங்குடன் ஆங்கிலத்தையும், தமிழுடன் டொய்ச் மொழியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ரோமர்கள் காலத்தில் பிரித்தானியாவில் குடியேறிய, ஜெர்மன் மொழி பேசிய சாக்சனியர்கள், பிற்காலத்தில் பிரெஞ்சு, டேனிஷ் மொழிகளுடனான கலப்பில் ஆங்கிலம் என்ற புதிய மொழியை உருவாக்கிக் கொண்டனர். அதே நேரம் இன்றைய ஜெர்மனியில் தங்கி விட்ட மக்கள் பெரும்பாலும் பண்டைய ஜெர்மனிய மொழியுடன் நெருக்கமான டொய்ச் மொழி பேசுகிறார்கள்.

அதே மாதிரி, தென்னிந்தியாவில் நீண்ட காலம் சமஸ்கிருதத்தின் தாக்கத்திற்குட்பட்ட பகுதியில் வாழ்ந்த மக்கள் தெலுங்கு என்ற புது மொழியை உருவாக்கிக் கொண்டனர். ஆனால், தமிழ்நாட்டின் பகுதிகளில் சம்ஸ்கிருதமயமாக்கல் மிக மிகக் குறைவாக நடந்த படியால், இன்றைக்கும் பண்டைய தமிழ் மொழியுடன் நெருக்கமான தமிழைப் பேசுகின்றனர்.

வரலாற்றுக் காலகட்டத்தில் மொழிகளின் வளர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்களினால் தான், இன்று தமிழை தமிழ் என்கிறோம். அதே நேரம், தமிழுடன் தொடர்புடைய ஏனைய தென்னிந்திய மொழிகளை திராவிட மொழிகள் என்கிறோம். உலக மொழிகளுக்கிடையிலான தொடர்புகளை இலகுவாக புரிந்து கொள்வதற்காக தான் ஜெர்மனிய மொழிகள், திராவிட மொழிகள் போன்ற சொற்பதங்கள் உருவாக்கப் பட்டன. அது அரசியலிலும் தாக்கம் செலுத்துவது தவிர்க்க முடியாதது.

1 comment:

Unknown said...

தமிழர்களை தமிழர் என்று சொல்வதால் என்ன நாஜி அரசியல் உள்ளது?