Showing posts with label சுயநிர்ணய உரிமை. Show all posts
Showing posts with label சுயநிர்ணய உரிமை. Show all posts

Tuesday, December 06, 2016

எழுக தமிழுக்கு ஆதரவான சிங்கள இடதுசாரிகள், தமிழ் தேசிய ஊடகங்கள் இருட்டடிப்பு!


செப்டம்பர் மாதம், யாழ்ப்பாணத்தில் நடந்த எழுக தமிழ் பேரணியில் சிங்கள இடதுசாரிகளும் கலந்து கொண்டனர். அவர்கள் த‌மிழ் மேடையில் தோன்றி மக்கள் முன் உரையாற்றியது ம‌ட்டும‌ல்லாது, கொழும்பு திரும்பிய பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்து, எழுக‌ த‌மிழ் பேர‌ணியை தாம் ஆதரித்த‌மைக்கான‌ கார‌ண‌த்தை விளங்க‌ப் ப‌டுத்தி உள்ள‌ன‌ர்.

இல‌ங்கையில் தின‌க்குர‌ல் ப‌த்திரிகையில் இந்தத் தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும், இந்த‌த் த‌க‌வ‌லுக்கு த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் முக்கிய‌த்துவ‌ம் கொடுக்காத‌ கார‌ண‌ம் என்ன‌? த‌மிழ்த் தேசிய‌ ஊட‌க‌ங்க‌ள், இணைய‌த் த‌ள‌ங்க‌ள், பேஸ்புக் போராளிக‌ள் இதை இருட்ட‌டிப்பு செய்ய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் என்ன‌?

எழுக‌ த‌மிழ் பேர‌ணியை முன்நின்று ந‌ட‌த்திய‌ த‌மிழ் தேசிய‌ ம‌க்க‌ள் முன்ன‌ணி உறுப்பின‌ர்க‌ள், ஆத‌ர‌வாள‌ர்க‌ள் அடிக்க‌டி கேட்கும் கேள்வி இது: "(சிங்க‌ள‌) இட‌துசாரிக‌ள் எம‌க்காக‌ என்ன‌ செய்தார்க‌ள்?" சிங்க‌ள‌ இட‌துசாரிக‌ளுட‌ன் கூட்டுச் சேர்ந்து அர‌சிய‌ல் ந‌ட‌த்துப‌வ‌ர்க‌ள், யாரை ஏமாற்றுவ‌த‌ற்காக‌ இப்ப‌டிப் பொய் சொல்கிறார்க‌ள்? இட‌துசாரிக‌ளை திட்டினால் தான், முத‌லாளிக‌ள் அவ‌ர்க‌ளுக்கு நிதி கொடுப்பார்க‌ளா?

நவம்பர் 13 அன்று, யாழ் பொது நூலகத்தில் "தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பது எப்படி?" என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. ஐக்கிய சோஷலிசக் கட்சி பொதுச் செயலாளர் சிறிதுங்க ஜெயசூரிய பிரதான உரையாற்றினார். அதைத் தொடர்ந்து புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி பொதுச் செயலாளர் சி.க.செந்தில்வேல் உரையாற்றினார். இந்த இரண்டு கட்சிகளும் தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரித்து, சுயநிர்ணய உரிமைக்கு ஆதவாக பேசி வருகின்றன.


ஐக்கிய சோஷலிசக் கட்சி என்ற "சிங்கள" இடதுசாரிகள் வெளியிடும் செந்தாரகை பத்திரிகையில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் கட்டுரைகள் வெளியாவதுண்டு. இடதுசாரிகளுக்குள் சிங்கள, தமிழ் பேதம் கிடையாது. அந்தக் கட்சியை ஸ்தாபித்த்வர்களில் ஒருவர் யாழ்ப்பாணத் தமிழர் என்பது மட்டுமல்ல, நிறைய தமிழர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியவாதிகள் என்று சொல்லிக் கொள்வோர், இது போன்ற விடயங்களை தொடர்ந்தும் இருட்டடிப்பு செய்து வருவதேன்? "சிங்கள" இடதுசாரிகளும் தம்மை ஆதரிக்கிறார்கள் என்ற உண்மையை, தமிழ் மக்களுக்கு சொல்ல மறுப்பதேன்? முதலாளிகளிடம் இருந்து பணம் கிடைக்காது என்ற சுயநலப் புத்தி தான் காரணமா?

ஈழத்தில் சுயநிர்ணய உரிமை பற்றி கம்யூனிஸ்டுகள் பேசி வந்த போதெல்லாம், தமிழ்த் தேசியவாதிகள் அதை நிராகரித்து நையாண்டி செய்தனர். "ஆண்ட பரம்பரைத் தமிழர்கள், இழந்த தேசத்தை கோருகிறார்கள்... சுயநிர்ணயத்தை அல்ல..." என்று அதற்கு விளக்கம் கூறினார்கள்.

தற்போது, அதாவது 2009 க்குப் பின்னர், அதே தமிழ்த் தேசியவாதிகள் சுயநிர்ணய உரிமை பற்றி பேசும் முரண்நகையை அவதானிக்கலாம். குருவை மிஞ்சிய சிஷ்யன் மாதிரி, தமக்கு சுயநிர்ணய உரிமை பற்றி போதித்த கம்யூனிஸ்டுகளுக்கே அது பற்றிப் பாடம் நடத்தும் வேடிக்கையையும் அவதானிக்கலாம்.

அவர்களிடம் யாரும் சுயநிர்ணய உரிமைக்கு விளக்கம் கேட்க முடியாது. கேட்டாலும் பதில் வராது. தனிநாடு என்பதற்கு ஒத்த கருத்துச் சொல் என்று தான், அவர்களில் பலர் நினைத்துக் கொள்கிறார்கள். முஸ்லிம்களின் சுயநிர்ணய உரிமையை எதிர்ப்பார்கள். மலையகத் தமிழரின் சுயநிர்ணயத்தை கண்டுகொள்ள மாட்டார்கள்.

இன்னும் சில தமிழ்த் தேசிய "அறிவுஜீவிகள்" இருக்கிறார்கள். "லெனின் அப்படிச் சொன்னார்..." என்று தொடங்கி விரிவுரை ஆற்றுவார்கள். லெனின் சுயநிர்ணயம் பற்றி எழுதிய குறிப்புகளில், "தேசிய விடுதலைப் போராட்டங்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை காரணமாக, சோஷலிச நாடுகளுடன் கூட்டுச் சேர்ந்து இயங்குவது" பற்றி விளக்கமாக கூறியுள்ளார்.

கம்யூனிசத்தை எதிர்ப்பதை வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டவர்கள் லெனினை மேற்கோள் காட்டும் முரண்நகையை காணலாம். இன்று எத்தனை தமிழ்த் தேசியவாதிகள் மேற்குலக ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறார்கள்? தேசிய விடுதலைப் போராட்டத்தையும் சோஷலிசத்திற்கான போராட்டத்தையும் ஒரே குறிக்கோள் கொண்ட நட்பு சக்திகளாக பார்க்கிறார்கள்?

யாழ்ப்பாணத்தில் இயங்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியுடன், கம்யூனிஸ்டுகள் ஐக்கிய முன்னணி அமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் முன்வைக்கப் பட்ட பல நிபந்தனைகளை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. "ஏகாதிபத்திய எதிர்ப்பு" என்ற வார்த்தையை கண்டவுடனேயே பின்வாங்கி விட்டார்கள்.

இவர்கள் ஒரு பக்கம் ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுத்துக் கொண்டு, மறுபக்கம் கம்யூனிஸ்டுகள் எம்முடன் வந்து சேரவில்லை என்று இன்றைக்கும் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களிலாவது குறைந்த பட்ச புரிந்துணர்வுடன் நடந்து கொள்கிறார்களா? அதுவும் இல்லை. தம்மை கம்யூனிச எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்வதில் பிரியப் படுவோர் அநேகம். அடிமைகளாக வாழ்வதில் சுகம் காண்பவர்கள் விடுதலை பற்றிப் பேச அருகதை அற்றவர்கள்.

Tuesday, July 22, 2014

சோஷலிச போலந்தின் வீழ்ச்சிக்கு காரணமான முதலாளித்துவ சீர்திருத்தங்கள்


கிழக்கு ஐரோப்பாவில் இருந்த முன்னாள் சோஷலிச நாடுகளில், முதன்முதலாக போலந்து தான் மேற்கத்திய பாணி முதலாளித்துவ ஜனநாயகத்திற்கு மாறியது. அப்போது பெர்லின் மதிலும், சோவியத் ஒன்றியமும் வீழ்ச்சி அடையவில்லை. 

2 ம் உலகப் போரின் முடிவில், போலந்து சோஷலிச நாடாக பிரகடனம் செய்து கொண்டாலும், சோஷலிச பொருளாதாரம் முழுமையாக நடைமுறைப் படுத்தப் படவில்லை. தேவாலயங்கள் மூடப் படவில்லை. கத்தோலிக்க மதகுருக்களுக்கு அரசை எதிர்த்து பிரச்சாரம் செய்யும் சுதந்திரம் இருந்தது. 

போலந்தில், எழுபதுகளிலேயே மேற்கத்திய மூலதனம் நுளைவதற்கு அனுமதிக்கப் பட்டது. உலகவங்கி, IMF கடனுதவியை பெற்றுக் கொண்டது. மேற்கத்திய முதலாளிகளின் ஆலோசனைப் படி பொருளாதார சீர்திருத்தங்களை புகுத்தியது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்தது. இறுதியில் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, போலி சோஷலிச அரசாங்கம் கவிழ்ந்தது. 

முன்னாள் "சோஷலிச" நாடான போலந்திற்குள் நடந்த முதலாளித்துவ மீட்சி பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள், அதனை "கம்யூனிசத்தின் தோல்வியாக" நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இருபதாம் நூற்றாண்டின் போலந்து வரலாற்றை ஆய்வு செய்வதன் மூலம் தான் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.

முதலாம் உலகப் போருக்கு முன்னர், சுமார் நூறாண்டுகள் போலந்து இரண்டு வல்லரசுகளுக்கு இடையில் பிரிக்கப் பட்டிருந்தது. மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, போலந்து ஒரு மேற்கத்திய சார்பு நாடாகத் தெரியும். இன்று எல்லா கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் போலந்து மக்கள் தான் அதிகளவு அமெரிக்கா சார்பானவர்களாக இருக்கின்றனர். 

கடந்த நூறாண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் மேற்கு நோக்கிய புலம்பெயர்வு ஒரு முக்கிய காரணம். எமது நாடுகளிலும், மேலைத்தேய பணக்கார நாடுகளுக்கு புலம்பெயர்ந்தால் செல்வம் சேர்க்கலாம் என்ற எண்ணம், பலரை மேற்குலக ஆதரவளர்களாக மாற்றி வைத்திருக்கிறது. போலந்திலும் அது தான் நிலைமை.

19 ம் நூற்றாண்டில் தான் ஐரோப்பிய கண்டத்தில் தேசிய அரசுகள் தோன்றின. நெப்போலியனின் போருக்கு பின்னர், பல தடவைகள் பலமான ஐரோப்பிய நாடுகள் ஒன்று கூடி, புதிய எல்லைகளை வகுத்துள்ளன. அப்படியான தருணங்களில், போலந்து தனி நாடாகும் வாய்ப்புக் கிட்டும் என்று போலிஷ் தேசியவாதிகள் எதிர்பார்த்தார்கள். இறுதியில் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அந்த வாய்ப்புக் கிட்டியது. 

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த போலந்து பகுதி தான் முதலில் தன்னாட்சி அதிகாரத்தை பெற்றுக் கொண்டது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வென்றதும், லெனின் போலந்துக்கு முழுமையான சுதந்திரம் வழங்கினார். ஆயினும், போல்ஷெவிக் புரட்சியாளர்கள், வெள்ளை ரஷ்யர்கள், உக்ரைனியர்கள் வாழ்ந்த பகுதிகளை சோவியத் ஒன்றியத்துடன் சேர்த்துக் கொண்டார்கள்.

போலந்துக்கு தன்னாட்சி அதிகாரம் கிடைத்த முதல் நாளில் இருந்து, அங்கே இராணுவ சர்வாதிகாரிகள் தான் ஆட்சி செய்தனர். இன்று மூன்றமுலக நாடுகளில் நடப்பதைப் போல, சதிப்புரட்சிகள் நடப்பதும், புதிய இராணுவ சர்வாதிகாரிகள் அதிகாரத்தை கைப்பற்றுவதுமாக சில வருடங்கள் உருண்டோடின. முதலாம் உலகப் பொறுக்கும், இரண்டாம் உலகப் பொறுக்கும் இடைப்பட்ட இருபது வருட காலம் மட்டுமே, பல கட்சி ஜனநாயகம் நிலவியது. 

அப்போது ஒரு போலிஷ் கம்யூனிஸ்ட் கட்சியும் இயங்கியது. ஆனால், நாஸி ஆக்கிரமிப்புடன் அது காணாமல் போய் விட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், செம்படைகள் விடுதலை செய்த போலந்தில் உருவான சோஷலிச அரசின் அடித்தளம் மொஸ்கோவில் இடப் பட்டது. அதாவது, மொஸ்கோவில் புலம்பெயர்ந்து வாழ்ந்த போலிஷ் கம்யூனிஸ்ட் அகதிகள் மத்தியில் இருந்து புதிதாக உருவாக்கப் பட்டிருந்தது.

ஆரம்பத்தில், கொமுல்கா தலைமையிலான பிரிவினர், “தேசிய கம்யூனிசம்” என்ற புதிய கொள்கையின் கீழ் ஆண்டனர். அதாவது, சோவியத் ஒன்றியம் சொல்வதற்கு எல்லாம் தலையாட்டாமல், சுதந்திரமாக முடிவுகளை எடுக்கக் கூடிய தலைமையை கொண்டிருந்தது. அப்போதும் சோவியத் படைகள் போலந்தில் இருந்தன. வார்சோ ஒப்பந்த கூட்டமைப்பு உருவாகி இருந்தது. ஆயினும், சோவியத் ஒன்றியம் போலந்தின் உள் விவகாரங்களில் பெரிதாக தலையிடவில்லை. இருப்பினும், ஸ்டாலினின் கொள்கைகளுக்கு ஆதரவான ஒரு பிரிவினர், கொமுல்காவை வீட்டுக் காவலில் வைத்து விட்டு சில வருட காலம் ஆண்டனர்.

போலந்து, வெளியில் இருப்பவர்கள் நினைத்தது மாதிரி, ஒரு முழுமையான சோஷலிச நாடாக இருக்கவில்லை. சோவியத் ஒன்றியத்தில் இருந்தது மாதிரி, கூட்டுத்துவ பண்ணை முறை (Collectivization) எங்கேயும் நடைமுறைப் படுத்தப் படவில்லை. விவசாயம் முழுக்க முழுக்க தனியாரின் கைகளில் இருந்தது. அதாவது, விவசாய நிலங்கள், பண்ணைகள் யாவும் அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த சிறு விவசாயிகளின் சொந்த சொத்துக்களாக தொடர்ந்தும் இருந்து வந்தன.

சோஷலிச போலந்தில், பெரிய தொழிற்துறை நிறுவனங்கள் மட்டுமே தேசிய மயப் படுத்தப் பட்டன. ஆரம்பத்தில் அது ஜெர்மனியருக்கு எதிரான நடவடிக்கை என்று நியாயப் படுத்தப் பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஜெர்மனியின் கிழக்குப் பகுதிகள் போலந்துக்கு தாரை வார்க்கப் பட்ட விடயம் அனைவரும் அறிந்ததே. அங்கு வாழ்ந்த ஜெர்மனியர்கள் அனைவரும் வெளியேற்றப் பட்டனர். பெரிய தொழிற்துறை நிறுவனங்கள் யாவும் ஜெர்மன் முதலாளிகள் வசம் இருந்த படியால், அவை அனைத்தையும் போலந்து அரசு எடுத்துக் கொண்டது. இருப்பினும், பிற்காலத்தில் படிப் படியாக, போலந்து முழுவதும் இருந்த தொழில் நிறுவனங்கள் அத்தனையும் அரசுடமை ஆக்கப் பட்டன.

கத்தோலிக்க மத நிறுவனம், எப்போதும் அரசுக்குப் போட்டியாகவே இருந்து வந்தது. இயல்பாகவே வலதுசாரி அரசியல் சார்பான கத்தோலிக்க குருமாரை வழிக்குக் கொண்டு வர முடியவில்லை. போலந்து சோஷலிச நாடாக இருந்த நாற்பது வருட காலங்களில் ஒரு தடவையாவது ஒரு தேவாலயம் கூட மூடப் படவில்லை. ஆயினும், அரசு இடைக்கிடையே நாஸ்திக பிரச்சாரம் செய்பவர்களை தூண்டி விட்டது. “முற்போக்கு கத்தோலிக்கர்கள்” என்றொரு சமூகப் பிரிவை உருவாக்கி விட்டது. அந்த முற்போக்காளர்கள் நவ நாகரிகத்தை பின்பற்றிய இளைஞர் கூட்டம் தான். (இன்று சர்வ சாதாரணமாக கருதப் படும் ஐரோப்பிய நாகரிகம், அன்றைக்கு பெரும் எதிர்ப்பின் மத்தியில் திணிக்கப் பட்டது.)

அறுபதுகளில், எழுபதுகளில் ஏற்பட்ட வசதி வாய்ப்புகள் காரணமாக வாழ்க்கைத் தரம் உயர்ந்தது. அதன் பலனாகத் தான் மக்களையும், தேவாலயங்களையும் பிரிக்க முடிந்தது. அரசின் கொள்கைகளில் பெருமளவு மக்கள் ஆர்வம் காட்டவில்லை. அவர்கள் தமது மதகுருக்கள் சொல்வதைக் கேட்டார்கள். இன்று, சில முஸ்லிம் நாடுகளில், இஸ்லாமிய மதத் தலைவர்கள் மக்களைக் கவரும் வகையில் பேசி வருவதைப் போன்று, அன்றைய கத்தோலிக்க மதத் தலைவர்கள் பேசி வந்தனர். உண்மையில், அன்றைய போலந்தில் இருந்த தேவாலயங்கள் எதிர்க் கருத்தாளர்களின் கூடாரங்களாக இருந்தன.

கத்தோலிக்க பாதிரிமார், மதப் பிரசங்கங்களை விட, அரசியல் பிரச்சாரம் செய்வதிலேயே அதிக ஆர்வம் காட்டினார்கள். போலந்தின் தலைமை பிஷப், ஒரு எதிர்க் கட்சித் தலைவர் போன்று நடந்து கொண்டார். அரசால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. போதாததற்கு, வத்திக்கானில் ஒரு போலந்துக்காரர் புதிய போப்பாண்டவராக தெரிவு செய்யப் பட்டார். ஜான் பால் என்ற அந்த போலிஷ் போப்பாண்டவர், இரண்டு தடவைகள் போலந்துக்கு விஜயம் செய்தார். இலட்சக் கணக்கான மக்கள் முன்னிலையில், இரட்டை அர்த்தம் வரும் வசனங்களை பேசி, சாடைமாடையாக கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக அரசியல் பேசினார்.

கத்தோலிக்க திருச் சபையின் செல்வாக்கு, சோஷலிச போலந்தின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம் மட்டுமே. குறிப்பாக அறிவுஜீவிகள் தேவாலயங்களை புகலிடமாகப் பயன்படுத்தி வந்தனர். இருப்பினும், இன்னொரு சக்தியும், அரசுக்கு எதிராக செயற்பட்டு வந்தது. துறைமுக நகரமான கிடான்ஸ்கில் தோன்றிய “சொலிடாரிநொஸ்க்” என்ற தொழிற்சங்கம் தான் அது. தொழிலாளர்களின் சொர்க்கமாக கருதப் படும் ஒரு சோஷலிச நாட்டில், தொழிற்சங்கம் அரசைக் கவிழ்த்தது என்பது முரண்நகையாக தெரியலாம். ஆனால், அப்படி ஒரு கிளர்ச்சி இயக்கம் தோன்றுவதற்கு ஏதுவாக இருந்த பொருளாதாரக் காரணிகளை பலர் நினைவு படுத்துவதில்லை.

குறிப்பாக ஸ்டாலினின் மறைவுக்குப் பின்னர், பல முன்னாள் சோஷலிச நாடுகளில் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டன. போலந்தில் அறுபதுகள், எழுபதுகளிலேயே முதலாளித்துவம் அனுமதிக்கப் பட்டிருந்தது! ஆமாம், முதலாளிகளின் அதிகாரம் அங்கு இருக்கவில்லை. ஆனால், ஒரு சோஷலிச அரசு, போலந்தில் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு சுதந்திரம் வழங்கியது. அதற்கு முதல், மேற்கத்திய நாடுகளிடம் இருந்து நிறைய கடன் பெற்றுக் கொண்டது. 

அவர்கள் விதித்த நிபந்தனையை ஏற்று, மேலைத்தேய முதலாளிகள் போலந்தில் முதலிட அனுமதி வழங்கியது. அது மட்டுமல்ல, அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு வழங்கிய மானியங்களை இரத்து செய்தது. அதனால், உணவுப் பொருட்களின் விலைகள் திடீரென நான்கு மடங்காக உயர்ந்தன. விலைவாசி உயர்வுக்கு ஏற்றவாறு தொழிலாளர்களின் சம்பளம் உயரவில்லை. அதன் விளைவு? தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அவ்வாறு தான் “சொலிடாரிநொஸ்க்” என்ற தொழிற்சங்கம் தோன்றியது.

போலந்து அரசால் “சொலிடாரிநொஸ்க்” கின் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனெனில், முதலாளித்துவ சீர்திருத்தம் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பிரச்சினைகளின் எதிர் விளைவு தான் தொழிற்சங்கப் போராட்டம். முன்னாள் இராணுவ ஜெனரலான ஜெருசெல்ஸ்கி திடீரென ஒரு சதிப்புரட்சியை நடத்தினார்.நகரத் தெருக்களில் இராணுவ கவச வாகனங்கள் ஓடின. எங்கு பார்த்தாலும் இராணுவத்தினர் குவிக்கப் பட்டனர். அவசர காலச் சட்டம் பிரகடனம் செய்யப் பட்டது. அரச எதிர்ப்பாளர்கள் சிறைகளில் அடைக்கப் பட்டனர்.

பிற்காலத்தில், அந்த சதிப்புரட்சியை ஜெருசெல்ஸ்கி பின்வருமாறு நியாயப் படுத்தினார். “அன்று ஒரு சதிப்புரட்சி நடந்திரா விட்டால், சோவியத் ஒன்றியம் படையெடுத்து வந்திருக்கும். அப்போது அதன் எதிர்விளைவுகள் பயங்கரமாக இருந்திருக்கும்….” ஆனால், சோவியத் யூனியனின் உடைவின் பின்னர் கிடைத்த அறிக்கைகளின் படி, அப்படி ஒரு “சோவியத் படையெடுப்பு” நடந்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிய வந்தது. அன்றைய போலிஷ் ஆளும் வர்க்கம், தனது அதிகாரத்தை தக்க வைக்க செய்த திட்டமாகவே அந்த சதிப்புரட்சி கருதப் படுகின்றது.

ஏனெனில், போலிஷ் அரசுக்கு எதிர்ப்பு பல இடங்களிலும் உருவாகி இருந்தது. கத்தோலிக்க சபை, அறிவுஜீவிகள், தொழிற்சங்கம் போன்ற வலதுசாரி சக்திகள் மட்டுமே வெளியுலகத்திற்கு தெரியும். கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளும் ஒரு பிரிவு எதிர் அரசியல் செய்து கொண்டிருந்தது. அவர்கள் “நவ - ஸ்டாலினிஸ்டுகள்” என்று அழைக்கப் பட்டனர். அதாவது, முன்பிருந்த ஸ்டாலினின் அரசியல் - பொருளாதாரக் கொள்கைகள் தான் சரியான சோஷலிசம் என்று நம்பியவர்கள். அவர்களை ஓரம் கட்ட வேண்டிய தேவையும், ஜெருசெல்ஸ்கி போன்ற சதிப்புரட்சியாளர்களுக்கு இருந்தது.

இறுதியில், சோவியத் ஒன்றியத்தில் கோர்பசேவ் அதிகாரத்தை கைப்பற்றியதும், போலந்து திரிபுவாதிகள் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்கள். இனிமேல் போலந்து வெளிப்படையாகவே முதலாளித்துவ - ஜனநாயக நாடாக இருக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டனர். முன்னாள் சோஷலிச கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், போலந்தில் தான் முதன் முதலாக பல கட்சிகள் கலந்து கொண்ட பொதுத் தேர்தல் இடம்பெற்றது. 

1989 ம் ஆண்டு, அதாவது பெர்லின் மதில் வீழ்வதற்கு சில மாதங்களுக்கு முன்னராகவே, போலந்தில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. முன்பு சோஷலிச அரசாங்கத்தை நடத்திய திரிபுவாத கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுத் தேர்தலில் சமூக - ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் போட்டியிட்டனர்.

போலந்தின் முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சியான, இந்நாள் சமூக - ஜனநாயகக் கட்சி, இன்றைக்கும் பெரும்பான்மைக் கட்சிகளில் ஒன்றாக இயங்கிக் கொண்டிருக்கிறது. சில தடவைகள் தேர்தலில் வென்று ஆட்சியையும் பிடித்துள்ளது. ஆனால், உண்மையில் அதனை மேற்கு ஐரோப்பிய கட்சிகளுடன் தான் ஒப்பிட முடியும். உதாரணத்திற்கு, பிரிட்டனின் லேபர் கட்சி போன்றது.

இருப்பினும், முன்னாள் “கம்யூனிச ஆட்சியாளர்களுக்கும்”, முன்னாள் “எதிர்ப் புரட்சியாளர்களுக்கும்” இடையிலான பிளவு, அடுத்து வந்த இருபது வருடங்களுக்கும் தொடர்ந்து இருந்தது. அது இரண்டு ஆளும் வர்க்கங்களுக்கு இடையிலான பிரச்சினை மட்டுமே. பெரும்பான்மை போலிஷ் மக்கள், தாம் அன்றாடம் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து மட்டுமே கவலைப் படுகிறார்கள்.

இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவு:

Friday, July 18, 2014

போலந்து சுய நிர்ணய உரிமையும், சோஷலிசப் புரட்சியும்


போலந்தின் வரலாறு, கி.பி. 10 நூற்றாண்டில் கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்ட மன்னர்களுடன் தொடங்குகின்றது. அதற்கு முன்னர், ஆதி கால போலிஷ் நாகரிகம் தோன்றிய விட்சுலா நதிக் கரையில் ஸ்லாவிய இன மக்கள் வாழ்ந்தனர். ஸ்லாவியர்கள் ஓரிடத்தில் இருந்து பல்வேறு கிளைகளாக பிரிந்திருக்க வாய்ப்புண்டு. தெற்கு ஸ்லாவிய மொழிகளை பேசும் மக்கள் பிற்காலத்தில் யூகோஸ்லாவியர்கள் என்று அழைக்கப் பட்டனர். அதே மாதிரி கிழக்கே சென்றவர்கள் உக்ரைனியர்களாக அல்லது ரஷ்யர்களாக மாறியிருக்கலாம்.

ரோமர்களினால் ருதேனியர்கள் என்று அழைக்கப் பட்ட மக்கள், கீவ் ரஷ்யர்கள் என்று தெரிய வருகின்றது. இருப்பினும் போலந்து ராஜ்ஜியத்தில் வாழ்ந்த ருதேனியர்கள் சில நூறு வருடங்களுக்கு முன்னர் தான், உக்ரைனியர்கள் என்ற பெயரில் அழைக்கப் பட்டனர். ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், ஒரே இனமாக இருந்த மக்கள், இன்று வெவ்வேறு மொழிக் குழுக்களாக பிரிந்து நின்று, ஒருவரை ஒருவர் பகைவர்களாக கருதுவதை கண் முன்னால் பார்க்கிறோம்.

பல நூறு வருடங்களாக, போலந்தும், லிதுவேனியாவும் இணைந்த ராஜ்ஜியம், வடக்கே பால்ட்டிக் கடலில் இருந்து, தெற்கே கருங்கடல் வரையிலான ஒரு பெரிய நிலப் பரப்பை ஆண்டு வந்தது. அந்த ராஜ்ஜியத்தில் பல மொழிகளைப் பேசும் பல்லின மக்கள் வாழ்ந்தனர். போலிஷ் அரச வம்சமும், லிதுவேனியா அரச வம்சமும் ஒன்றுகொன்று திருமண உறவுகளை வைத்துக் கொண்டு, உறவினர்களாக இருந்தார்கள். ஆயினும், இரண்டு அரச வம்சங்களும், தமது ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களை தனித் தனியாக நிர்வகித்து வந்தன.

ஐரோப்பாவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதம் பரவிய காலத்தில், பல அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் தாக்கங்கள் இன்று வரை உணரப் படுகின்றன. நீண்ட காலமாக, வட ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த மக்கள் கிறிஸ்தவர்களாக மாறி இருக்கவில்லை. அவர்கள் தமது புராதன மத நம்பிக்கைகளை பின்பற்றி வந்தனர். வத்திக்கானில் போப்பாண்டவரின் ஆலோசனையின் பேரில் உருவாக்கப் பட்ட "தெய்த்தானிய படை" (Teutonic Order) ஜெர்மன் மொழி பேசும் வீரர்களை மட்டுமே கொண்ட ஒரு சிறப்புப் படையணி ஆகும். 

தெய்த்தானிய படை, வட ஐரோப்பாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக ஒரு சிலுவைப் போரை நடத்தியது. போலந்து அரச வம்சத்தினர் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை தழுவிக் கொண்டதன் மூலம், தமது ராஜ்ஜியத்தை பாதுகாத்துக் கொண்டனர். அவர்களின் தூண்டுதலின் பேரில் லித்துவேனிய அரச வம்சத்தினரும் கத்தோலிக்க கிறிஸ்தவத்தை தழுவிக் கொண்டனர்.

தற்போது எல்லோரும் கிறிஸ்தவர்களாக மாறி விட்ட போதிலும், அரசியல் முரண்பாடுகள் தொடர்ந்தும் இருந்து வந்தன. தெய்த்தானிய படையினர், இன்றைய போலந்தின் வட பகுதியையும், இன்று ரஷ்யாவின் காலினின்கிராட் பகுதியிலும் தமது ராஜ்ஜியத்தை நிலை நிறுத்திக் கொண்டனர். அந்தப் பிரதேசத்தில் ஒரு காலத்தில் வாழ்ந்து வந்த, பிற்காலத்தில் அழிந்து போன பிரோய்ஷிய இனத்தின் பெயரை, தெய்த்தானிய படையினர் தமது புதிய தேசத்திற்கு சூட்டினார்கள். அங்கு வாழ்ந்த மக்கள் ஜெர்மன் மொழி பேசினார்கள். ஆனால், அன்று அவர்களது பெயர் பிரோய்ஷியர்கள்.

பிற்காலத்தில் பிரோய்ஷிய (Prussia) சாம்ராஜ்யம், இன்று ஜெர்மனி இருக்கும் இடம் வரை விஸ்தரித்தது. இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் வரையில், போலந்தின் வட பகுதியும், மேற்குப் பகுதியும் ஜெர்மனியின் ஆட்சிக்கு உட்பட்ட மாகாணங்களாக இருந்து வந்தன. வடக்கே உள்ள துறைமுகப் பட்டினமான கிடான்ஸ்க், மேற்கே உள்ள தொழிற்துறை நகரமான பொஸ்னான் ஆகியன ஜெர்மனியர்களால் உருவாக்கப் பட்டவை. அங்கெல்லாம் பெருமளவு ஜெர்மானியர்கள் வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையே, போலந்திற்கு தெற்கே ஆஸ்திரியாவில் இன்னொரு பலமான சாம்ராஜ்யம் தோன்றியது. போலந்தின் தெற்குப் புற நகரமான கிராகோவ், இன்று உக்ரைனின் பகுதியாக உள்ள லிவிவ் ஆகியன ஆஸ்திரிய ராஜ்ஜியத்திற்குள் அடங்கின. அந்தப் பிரதேசம் கலிசியா என்று அழைக்கப் பட்டது. அங்கேயும் ஜெர்மன் தான் நிர்வாக மொழியாக இருந்தது. ஆஸ்திரியர்களும் ஜெர்மன் மொழி பேசுவோர் தான். ஆனால், அந்தக் காலத்தில் மொழி ஒரு முக்கியமான விடயமாக யாராலும் கருதப் படவில்லை. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட, ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தில் வாழ்ந்த ஜெர்மன் மொழி பேசுவோரின் எண்ணிக்கை 30% என்பது குறிப்பிடத் தக்கது.

கிழக்கில் இருந்து இன்னொரு ஆபத்து வந்தது. மொங்கோலியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கியினப் படைகள், இன்றைய ரஷ்யா முழுவதையும் தமது சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தன. அதில் ஒரு சிற்றரசாக இருந்த மொஸ்கோ, பிற்காலத்தில் பலமான ராஜ்ஜியம் ஆகியது. மொங்கோலிய சாம்ராஜ்யத்தின் பலவீனத்தை பயன்படுத்தி நாலாபுறமும் விஸ்தரித்தது. மேற்கே இருந்த பகுதிகளை கைப்பற்றிய ரஷ்ய சாம்ராஜ்யம், போலந்தையும் சேர்த்துக் கொண்டது. இறுதியில், ஐரோப்பிய வரைபடத்தில் போலந்து என்ற நாடு காணாமல்போனது.

போலந்து, 19 ம் நூற்றாண்டு முழுவதும், மேற்கே ஜெர்மனியாலும், கிழக்கே ரஷ்யாவாலும், தெற்கே ஆஸ்திரியாவாலும் மூன்று துண்டுகளாக உடைக்கப் பட்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் நடந்த மாற்றங்கள், 21 ம் நூற்றாண்டு அரசியல் வரை எதிரொலிக்கின்றன. மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சில் தோன்றிய தேசியவாதக் கருத்தியல், போலிஷ் அறிவுஜீவிகளை சென்றடைந்தது. கடந்த காலத்தில், போலந்து ஒரு மிகப் பெரிய ஐரோப்பிய சாம்ராஜ்யமாக இருந்த வரலாறு, போலிஷ் தேசியவாதமாக பரிணமித்தது. அப்போது பிரான்ஸ் நெப்போலியனின் ஆட்சியின் கீழ் இருந்தது. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உருவான போலிஷ் தேசிய இராணுவம், ஆரம்பத்தில் நெப்போலியனின் பிரெஞ்சுப் படைகளுடன் சேர்ந்து போரிட்டு வந்தது.

19 ம் நூற்றாண்டில், ஐரோப்பா முழுவதும் சோஷலிசக் கருத்துகளும் பரவின. அப்போது கம்யூனிஸ்டுகள் என்றொரு பிரிவு ஏற்பட்டிருக்கவில்லை. இன்றைய சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னோடிகள், அனார்க்கிஸ்டுகள், மார்க்சிஸ்டுகள் எல்லோரும் சோஷலிஸ்டுகள் என்ற பெயரால் அழைத்துக் கொண்டார்கள். அன்று ரஷ்ய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக இருந்த சென் பீட்டர்ஸ்பேர்க்கில் வாழ்ந்த போலிஷ் காரர்கள் தான், முதன் முதலாக சோஷலிச கருத்துக்களை போலந்திற்கு கொண்டு வந்தார்கள்.

1881 ம் ஆண்டு, அன்றைய ரஷ்ய சார் மன்னன் அலெக்ஸ்சாண்டரை கொலை செய்வதற்காக குண்டு வீசப் பட்டது. அந்தக் குண்டை வீசியவர், Ignacy Hryniewcki என்ற ஒரு போலிஷ் சோஷலிஸ்ட். நரோட்னையா வோல்யா (Narodnaja Volja) என்ற தலைமறைவு இயக்கத்தின் உறுப்பினர். நரோட்னையா வோல்யா உறுப்பினர்கள் சிலர் வார்சொவிற்கு வந்து சேர்ந்தனர். அதில் ஒருவர் வாரின்ஸ்கி (Ludwik Warýnski). 

வார்சொவில் ரஷ்ய இரகசியப் பொலிசாரின் கெடுபிடி அதிகமாக இருந்ததால், வாரின்ஸ்கி ஜெனீவாவுக்கு தப்பி ஓடினார். அங்கு Równosc (சமத்துவம்) என்ற சோஷலிச சஞ்சிகையை நடத்தி வந்த லிமனொவ்ஸ்கியுடன் கூட்டுச் சேர்ந்து முதலாவது போலிஷ் சோஷலிச இயக்கத்தை கட்டினார். போலந்தின் முதலாவது சோஷலிச இயக்கம், ரஷ்ய, ஜெர்மன் அரசியல் பின்னணியை கொண்டிருந்தது. போலந்து மக்கள் மத்தியில் வர்க்கப் போராட்டம் பற்றி பிரச்சாரம் செய்து வந்தது. ஆயினும் அது ஒரு சிறிய குழுவாகவே இயங்கி வந்தது.

ஆரம்ப கால போலிஷ் புரட்சியாளர்கள், ஒன்றில் ரஷ்யாவில், அல்லது ஜெர்மனியில் உள்ள புரட்சியாளர்களுடன் தொடர்பில் இருந்தனர். அவர்கள் யாருக்கும் போலந்து சுதந்திரம் பற்றிய அக்கறை இருக்கவில்லை. போலந்து தனி நாடாவது அவர்களது அரசியல் அறிக்கைகளில் இருக்கவில்லை. தனிநாட்டுக் கோரிக்கையை தேசியவாதிகளின் அரசியலாக கருதி ஒதுக்கி வந்தனர். 

போலிஷ் சுய நிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்து, லிமனோவ்ஸ்கி தனியாகப் பிரிந்து சென்றார். அன்றிலிருந்து போலிஷ் இடதுசாரி இயக்கத்திற்குள் இரண்டு பிரிவுகள் தோன்றின. ஒரு பிரிவினர், முதலில் போலந்து தனிநாடாவது முக்கியம் என்றும், சோஷலிச புரட்சி அதற்கு அடுத்த படியானது என்றும் வாதிட்டனர். இன்னொரு பிரிவினர், முதலில் ஒரு வர்க்கப் புரட்சி நடக்க வேண்டும் என்றும், போலந்து தனி நாடாவது அதன் பக்க விளைவாக இருக்கலாம் என்றும் வாதிட்டனர். இவ்விரு கொள்கை முரண்பாடுகளும், இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரை தொடர்ந்து கொண்டிருந்தது.

1883 ம் ஆண்டளவில், வாரின்ஸ்கி குழுவினர் முழுமையாக ஒடுக்கப் பட்டு விட்டனர். உறுப்பினர்கள் பலர் சிறைகளில் அடைக்கப் பட்டனர். இருப்பினும் அவர்கள் கற்றுக் கொடுத்த கொள்கைகள், புத்திஜீவிகள் மட்டத்தில் கவனமாகப் படிக்கப் பட்டன. வார்சோ, சென் பீட்டர்ஸ்பேர்க் நகரங்களில் கல்வி பயின்ற மாணவர்களைக் கவர்ந்தது. இரண்டாம் அகிலத்தின் ஆலோசனையின் பேரில், 1890 ம் ஆண்டு, வார்சோவிழும், கலீசிய பகுதிகளிலும் மேதின ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நடந்தன. மே தின ஊர்வலங்களில் பெருமளவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அதன் எதிரொலியாக, லொட்ஸ் (Łódź) எனும் தொழிற்துறை வளர்ச்சி அடைந்த நகரத்தில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் நடந்தன. அரசு அதிகாரிகளினால் அந்தப் போராட்டம் கொடூரமாக அடக்கப் பட்டது.

இதற்கிடையில், புலம்பெயர்ந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த இடதுசாரி போலிஷ் ஆர்வலர்கள், பாரிஸ் நகரில் ஒன்று கூடினார்கள். போலந்துக்கென ஒரு சோஷலிசக் கட்சி உருவாக்க வேண்டுமென பாரிஸ் மகாநாட்டில் முடிவெடுக்கப் பட்டது. அதிலிருந்து PPS எனும் போலந்து சோஷலிசக் கட்சி தோன்றியது. ஆயினும் சில மாதங்களில் கட்சிக்குள் ஒரு பிளவு ஏற்பட்டது. SDKP எனும் போலந்து ராஜ்ஜியத்தின் சமூக ஜனநாயகக் கட்சி, போலந்து விடுதலையை தள்ளிப் போட வேண்டும் என வாதிட்டது. 

போலந்து தனி நாடானால், அது தொழிற்துறை வளர்ச்சியை பாதிக்கும் என்றும், அதற்குப் பின்னர் முதலாளித்துவத்தை வீழ்த்த முடியாது என்றும் வாதிட்டனர். அது மட்டுமல்ல, அயலில் இருக்கும் ஐரோப்பிய நாடுகளிலும் புரட்சி ஏற்பட்டால், தேச எல்லைகள் அர்த்தமற்றதாகி விடும் என்று கூறி வந்தனர். அந்தக் கட்சியின் தத்துவ ஆசிரியர் உலகப் புகழ் பெற்ற ரோசா லக்சம்பேர்க் ஆவார். ஒரு போலிஷ் யூத வணிகர் குடும்பத்தில் பிறந்த ரோசா லக்சம்பேர்க், தனது கடைசிக் காலத்தில் ஜெர்மனியில் வாழ்ந்து வந்தார். ஜெர்மன் கம்யூனிஸ்ட் இயக்கத்தை ஸ்தாபித்து ஒரு சில மாதங்களில் வலதுசாரி இராணுவ வீரர்களினால் சுட்டுக் கொல்லப் பட்டார்.

போலந்தில் SDKP இயங்குவதற்கு அரசாங்கம் அனுமதிக்கவில்லை. அந்தக் கட்சி உறுப்பினர்கள் பலர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர். அதனால், SDKP ஒரு வளர்ச்சிக் கட்டத்தை அடைவதற்கு முன்னர் அழிந்து போனது. 1900 ம் ஆண்டு, எஞ்சிய உறுப்பினர்கள் ஒன்று கூடி, SDKPiL எனும் புதிய கட்சியை ஸ்தாபித்தனர். போலந்து, லித்துவேனியாவுக்கான சமூக ஜனநாயகக் கட்சி என்பது அதன் பெயர். அதன் உறுப்பினராக இருந்த லித்துவேனிய சோஷலிஸ்ட் Feliks Dzierżyński பிற்காலத்தில் சோவியத் யூனியனில் உருவான Tsjeka எனும் புலனாய்வுத் துறையின் தலைமை அதிகாரியாக பதவி வகித்தார்.

SDKPiL லெனின் அங்கம் வகித்த ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் கூட்டங்களிலும் பங்குபற்றியது. போல்ஷெவிக்,மென்செவிக் பிரிவினையின் போது கூட இருந்தது. 1905 ம் ஆண்டு நடந்த ரஷ்யப் புரட்சியின் பின்னர், போலந்தில் அரசியல் சுதந்திரம் கிடைத்தது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, SDKPiL போலந்தில் மட்டும் தனது நடவடிக்கைகளை விஸ்தரித்தது. அதற்கு முன்னரே, ஆஸ்திரியாவின் ஒரு பகுதியாக இருந்த தெற்குப் போலந்தினை சோஷலிஸ்டுகள் தளமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அங்கு ஏற்கனவே ஓரளவு அரசியல் சுதந்திரம் வழங்கப் பட்டிருந்தது.

குறிப்பிடத் தக்க சிறுபான்மை இனமான யூதர்கள், போலந்து வரலாற்றின் தவிர்க்கவியலாத ஓர் அங்கமாக இருந்தனர். ரஷ்யாவில் சார் மன்னராட்சிக் காலத்தில் நடந்த யூத எதிர்ப்புக் கலவரங்கள் காரணமாக, ஏராளமான ரஷ்ய யூதர்கள் போலந்தில் குடியேறி இருந்தனர். ஒரு காலத்தில், யூதர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த ஐரோப்பிய நாடாக போலந்து இருந்தது.

போலந்தில் யூதர்கள் பெருந்தொகையில் வாழ்ந்தாலும், சியோனிசம் எனும் தேசியவாதம் அவர்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதற்குப் பதிலாக "Bund" எனும் யூத சோஷலிசக் கட்சி உருவாகி இருந்தது. இஸ்ரேலில் (பலஸ்தீனத்தில்) குடியேறுவதை விட, ரஷ்ய-போலிஷ் யூதர்களை ஒரு சோஷலிச புரட்சிக்கு தயார் படுத்துவதே அதன் கொள்கையாக இருந்தது.

(போலந்து சோஷலிச இயக்கத்தின் தோற்றமும் மறைவும் பற்றிய கட்டுரையின் முதலாவது பகுதி.)

Wednesday, June 06, 2012

லெனினிச பார்வையில், ஈழத்திற்கான சுயநிர்ணய உரிமை

இடதுசாரிகளை, தேசியவாதிகளாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ள சில 'முற்போக்கு தமிழ்த் தேசியவாதிகள்', இரண்டு நாடுகளின் உதாரணங்களை அடிக்கடி எடுத்துக் காட்டுவார்கள். லெனின் நோர்வேயின் சுதந்திரத்தை ஆதரித்ததையும், கார்ல் மார்க்ஸ் அயர்லாந்தின் சுதந்திரத்தை ஆதரித்ததையும் சுட்டிக்காட்டி மடக்கப் பார்ப்பார்கள். ஆகவே, இவ்விரு நாடுகளின் சுயநிர்ணய உரிமை பற்றிய மார்க்சிய- லெனினிசப் பார்வை அவசியமாகின்றது.


லெனின், மார்க்ஸ் எழுதிய கட்டுரைகளை எடுத்துக் காட்டி தத்துவார்த்த விளக்கம் கொடுப்பதற்கு முன்னர், அவர்கள் வாழ்ந்த காலத்திய பூகோள அரசியல் நிலவரத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். அதே நேரம், ஒரு தேசியத்தின் சுதந்திர உரிமையை அங்கீகரித்த லெனினும், மார்க்சும், தாம் சார்ந்த பிற தேசியங்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளாமல், அல்லது புறக்கணித்த முரண்பாட்டை எவ்வாறு புரிந்து கொள்வது? அயர்லாந்து, நோர்வேயின் சுயநிர்ணய உரிமையையும், அவர்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி ஆதரித்தார்களா? இவற்றை ஆராயாமல், 'லெனின் நோர்வீஜிய தேசியத்தையும், மார்க்ஸ் ஐரிஷ் தேசியத்தையும் ஆதரித்தார்கள், ஆகவே அனைத்து இடதுசாரிகளும் தேசியவாதத்தை ஆதரிக்க வேண்டும்,' என்று வாதிடமுடியாது.


"நோர்வேக்கும், சுவீடனுக்கும் இடையிலான பொருளாதார, மொழியியல் பிணைப்புகள், ரஷ்ய, ஸ்லாவிய தேசங்களைப் போல நெருக்கமானது. ஆனால், நோர்வேக்கும், சுவீடனுக்கும் இடையிலான ஒன்றியம், (நோர்வேயின்) விருப்பத்துடன் எடுக்கப்பட்ட முடிவல்ல.... நெப்போலியனின் யுத்த காலத்தில், நோர்வே மக்களின் விருப்பத்திற்கு மாறாக, மன்னர்களால் நோர்வே சுவீடனுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. நோர்வேயை பணிய வைப்பதற்காக, சுவீடன் படையனுப்ப வேண்டியிருந்தது." - லெனின் (தேசங்களின் சுய நிர்ணய உரிமை தொடர்பாக)


போலந்து மார்க்சியவாதியும், லெனினுடன் கருத்து முரண்பாடு கொண்டவருமான ரோசா லக்சம்பேர்க்கின் கட்டுரை ஒன்றுக்கு பதிலளிக்கும் முகமாக, லெனின் அந்த பத்தியை எழுதினார். இதிலே லெனின், நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை, அந்தக் காலத்திய ஐரோப்பிய சரித்திரப் பின்னணியுடன் விளக்குவதை கவனிக்க வேண்டும். சுமார் நானூறு வருடங்கள், நோர்வே டென்மார்க் அரச பரம்பரையினரால் ஆளப்பட்டு வந்தது. நோர்வே மக்கள் பேசிய "பழைய நோர்வீஜிய" மொழியின் மேல், டேனிஷ் மொழி ஆதிக்கம் செலுத்தியது. அதனை சிலர் "டேனிஷ் ஏகாதிபத்தியம்" என்று அழைக்கின்றனர்.

இன்றைக்கும், டேனிஷ் மொழி, சில திருத்தங்களுடன் நோர்வேயின் உத்தியோகபூர்வ மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. உண்மையில், டென்மார்க்கின் கலாச்சார ஆதிக்கத்திற்கு பழக்கப் பட்ட நோர்வீஜியர்கள், சுவீடனின் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளவில்லை. பிரிவினைக்குப் பின்னரும், டென்மார்க்கின் அரச பரம்பரையை சேர்ந்த ஒருவரைத் தான், நோர்வேயின் மன்னனாக முடி சூட்டினார்கள். நோர்வீஜிய மத்தியதர வர்க்கத்திற்கும், டேனிஷ் மத்தியதர வர்க்கத்திற்கும் இடையிலான நெருக்கம், சுவீடிஷ் மத்தியதர வர்க்கத்துடன் இருக்கவில்லை. இத்தகைய முரண்பாடுகளையும் கவனத்தில் எடுப்பது அவசியம்.

பிரெஞ்சுப் புரட்சியும், அதைத் தொடர்ந்த நெப்போலியனின் ஐரோப்பிய ஆக்கிரமிப்புப் போர்களும், ஐரோப்பியக் கண்டத்தின் அரசியல் வரைபடத்தை அடியோடு மாற்றியது. டென்மார்க்-நோர்வே அணி, பிரான்சின் பக்கம் நின்றதால், நெப்போலியனின் தோல்வி, அவர்களையும் பாதித்தது. பிரிட்டன், ரஷ்யா, சுவீடன் போன்ற போரில் வெற்றி பெற்ற நாடுகள், தாம் விரும்பிய படி, தேசங்களை மறுசீரமைத்தன. அதன்படி, டென்மார்க், நோர்வேயை சுவீடனுக்கு தாரை வார்க்க வேண்டியேற்பட்டது.

ஸ்கண்டிநேவிய நாடுகளில், மிகவும் பின்தங்கிய வறிய நாடான நோர்வேக்கு, வேறு தெரிவு ஏதும் இருக்கவில்லை. ஒன்று, சுவீடனின் ஒரு பகுதியாக மாறுவது, அல்லது, டென்மார்க்குடன் சேர்ந்து தண்டப்பணம் செலுத்துவது. மேலும், நோர்வீஜியர்கள், சுவீடனிடம் இருந்து விடுதலை அடைவதற்கு முன்னரே, தமக்கென அரசமைப்புச் சட்டம் ஒன்றை இயற்றி இருந்தனர். இதற்கென நாடு முழுவதிலும் இருந்து, நிலப்பிரபுக்களினதும், பூர்ஷுவாக்களினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இவற்றை எல்லாம் சுட்டிக் காட்டிய லெனின், சுதந்திரத்தின் பின்னர் நோர்வே குடியரசாக மாறும் என்று எதிர்பார்த்தார். ஆனால், நோர்வீஜியர்கள் முடியாட்சிக்கு உட்பட்ட பாராளுமன்ற முறையை தெரிந்தெடுத்தனர். 1917 , போல்ஷெவிக் புரட்சி நடப்பதற்கு முன்னரே, லெனின் நோர்வேயின் சுதந்திரத்தை அங்கீகரித்திருந்தார். அதே போன்று, புரட்சியின் பின்னர், ரஷ்ய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவிருந்த பின்லாந்திற்கு சுதந்திரம் வழங்கினார். பிற்காலத்தில், இவ்விரண்டு நாடுகளும், அமெரிக்க சார்பு அணியில் சேர்ந்தமை குறிப்பிடத் தக்கது.

லெனின் எதிர்பார்த்த, பாட்டாளி வர்க்கப் புரட்சியை ஊக்குவிக்கும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு, நடைமுறையில் பலிக்கவில்லை. அது லெனின் விட்ட தவறா? அல்லது நோர்வே, பின்லாந்து நாடுகளின் பாட்டாளி மக்கள் விட்ட தவறா? இதற்கான விடை, தத்துவார்த்த நடைமுறைகளை மேவும், பூகோள அரசியல் சதுரங்கம் விளையாட்டினுள் மறைந்திருக்கின்றது. அதனை, லெனினோ அல்லது கார்ல் மார்க்சோ எழுதியிருக்கப் போவதில்லை. ஏனெனில், இவை எல்லாம் சராசரி அரசியல்வாதிகளின் சித்து விளையாட்டுகள். அவற்றை காலத்தால் அழியாத புரட்சிகர சித்தாந்தமாக குறிப்பிட முடியாது.

முதலாம் உலகப்போரின் முடிவில், பெர்லின் நகரில் ஜெர்மன் சோவியத் அரசமைத்த புரட்சியாளர்களுக்கு உதவும் நோக்குடன், லெனின் செம்படைகளை அனுப்பி வைத்தார். ஜெர்மனி செல்வதற்கு முன்னர், இடையில் இருந்த போலந்தில் ஒரு பாட்டாளி வர்க்க அரசை நிறுவ வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், போலந்து தேசியவாதிகளின் கடும் எதிர்ப்பினால், லெனினின் நோக்கம் நிறைவேறவில்லை.

தேசியவாதிகளின் வலதுசாரி சார்புத் தன்மையும், வர்க்க விரோத மனப்பான்மையும், பாட்டாளி வர்க்க புரட்சிக்கு தடைக் கல்லாக இருக்கும் என்பதை, லெனின் மிகத் தாமதமாகத் தான் உணர்ந்து கொண்டார். அல்லா விட்டால், தேசியங்கள் குறித்த கோட்பாட்டை எழுதும் பொறுப்பை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பாரா? ஸ்டாலின் தனது சொந்த நாடான ஜோர்ஜியாவில், வலதுசாரி ஜோர்ஜிய தேசியவாதிகளை போரிட்டு அடக்க வேண்டியேற்பட்டது. ஒரு வருட காலமே பூரண சுதந்திரத்தை அனுபவித்த ஜோர்ஜியா, சோவியத் யூனியனின் குடியரசானது.

பின்லாந்து போன்று, ஜோர்ஜியாவையும் வலதுசாரித் தேசியவாதிகளின் போக்கில் விட்டிருந்தால், அங்கே, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் படைகளைக் குவித்திருக்கும். ஒரு தேசியத்தின் (உதாரணம்: பின்லாந்து) பூரண சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டதற்காக இடதுசாரிகளைப் புகழ்வதும், இன்னொரு தேசியத்தின் சுதந்திரத்தை (உதாரணம்: ஜோர்ஜியா) மட்டுப் படுத்தியதற்காக இடதுசாரிகளை இகழ்வதும் வாடிக்கையாகி விட்டது. ஒரு தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதன் நோக்கம், அதனை பாட்டாளி வர்க்க நலன் சார்ந்த அரசாக்குவதாகும். பின்லாந்தும், நோர்வேயும் அமெரிக்க சார்பு அணியில் இருந்தாலும், சோவியத் யூனியனுடன் சிறந்த நட்புறவைப் பேணி வந்துள்ளன.

கம்யூனிஸ்டுகளின் தேசிய சுயநிர்ணயக் கொள்கை, ஒரு குறிப்பிட்ட தேசியத்தின் மொழிக்கு, கலாச்சாரத்திற்கு எதிரானதல்ல. மாறாக, பெரும்பான்மை இனத்தின் பேரினவாத வெறி அடக்கப் பட்டு, சிறுபான்மை இனங்களின் கலாச்சார சுதந்திரத்தை உறுதிப் படுத்தியதே வரலாறு. சோவியத் யூனியனில் ரஷ்ய பேரினவாதிகள் அடக்கி வைக்கப் பட்டனர். யூகோஸ்லேவியாவில், செர்பிய பேரினவாதிகள் வாலாட்ட முடியவில்லை. சோவியத் யூனியனில் ஜோர்ஜிய சிறுபான்மை இனத்தை சேர்ந்த ஸ்டாலினும், யூகோஸ்லேவியாவில் குரோவாசிய சிறுபான்மையினத்தை சேர்ந்த டிட்டோவும் தலைமைப் பதவிக்கு வர முடிந்தது. அது மட்டுமல்ல, அவர்கள் காலத்தில் தான் சுயநிர்ணய உரிமை கோட்பாடு நடைமுறைப் படுத்தப் பட்டது.

சோவியத் யூனியனில் ரஷ்ய மொழி பொது மொழியாக இருந்தது. யூகோஸ்லேவியாவில் செர்பிய மொழி பொது மொழியாக இருந்தது. ஆனால், அதற்கு காரணம் பேரினவாத அடக்குமுறை அல்ல. நாம் எவ்வாறு ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ, அது போன்று பல்வேறு இனங்கள் தொடர்பாடக் கூடிய பொது மொழி ஒன்றின் தேவை காரணமாக இருந்தது. சோவியத் யூனியனிலும், யூகோஸ்லேவியாவிலும் சிறுபான்மை மொழி பேசும் இனங்களுக்கு வழங்கப் பட்ட சுதந்திரம், இன்று வரை அவர்களின் மொழியை, கலாச்சாரத்தை அழிய விடாமல் காப்பாற்ற உதவியிருக்கிறது. முதலாளித்துவம் கோலோச்சிய மேற்கத்திய நாடுகளில் நிலைமை எப்படி இருந்தது?

அயர்லாந்து மக்கள் தமது மொழியை மறந்து விட்டார்கள். அந்நிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆங்கில மொழியை தாய்மொழியாக பேசி வருகின்றனர். நோர்வேயிலும் அது தான் நிலைமை. பழைய நோர்வீஜிய மொழி, தொலை தூரத்தில் தனித்திருக்கும் தீவான ஐஸ்லாந்தில் மட்டுமே, இன்று வரை பேசப் பட்டு வருகின்றது. இன்று டென்மார்க்கினால் ஆளப்படும் பேரோ தீவு மக்கள், டேனிஷ் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக, பண்டைய நோர்வீஜிய மொழியை காப்பாற்றப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

பழைய நோர்வீஜிய மொழியை பேசத் தெரிந்தவர்கள் யாரும், இன்று நோர்வேயில் இல்லை. டேனிஷ் மொழி மட்டுமே பேசத் தெரிந்த தற்கால நோர்வீஜியர்கள், தமக்கென தனித்துவமான மொழியை உருவாக்கிக் கொண்ட சுவீடிஷ்காரரைப் போன்று வர விரும்பியதில் என்ன தவறு? லெனினின் மனதில் அத்தகைய எதிர்பார்ப்பு இருந்ததை, ரோசா லக்ஸம்பேர்க்கிற்கு அளித்த விளக்கத்தில் பார்க்க முடிகின்றது. ரஷ்ய, ஸ்லாவிய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமையை, சுவீடிஷ், நோர்வீஜிய மொழிகளுடன் லெனின் ஒப்பிடுவதைக் கவனிக்கவும். தமிழும், மலையாளமும் போல, சுவீடிஷ், நோர்வீஜிய மொழிகள் ஒரே வேர்களைக் கொண்டுள்ளன. லெனினின் எதிர்பார்ப்பு பிழைக்கவில்லை. சுவீடனிடம் இருந்து விடுதலை பெற்ற நோர்வே, தனித்துவமான கலாச்சாரத்தை உருவாக்கிக் கொள்வதில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது.


"நோர்வீஜிய, சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்களுக்கு இடையிலான ஒற்றுமை காரணமாக, நோர்வேயின் பிரிந்து செல்லும் உரிமைக்கு ஆதரவாக, சுவீடிஷ் பாட்டாளி மக்களின் ஒப்புதலைப் பெற முடிந்தது. சுவீடிஷ் உழைக்கும் வர்க்க மக்கள், சுவீடிஷ் தேசியவாதத்தினால் பீடிக்கப் படவில்லை என்பதை இது உறுதிப் படுத்துகின்றது. ஸ்வீடிஷ் அரச பரம்பரை,பூர்ஷுவாக்கள் வழங்கிய சலுகைகளை விட, நோர்வீஜிய பாட்டாளி மக்களுடனான சகோதரத்துவம் உயர்வாகப் பட்டது." - லெனின்

இடதுசாரிகள், தமிழ் தேசியக் கோட்பாட்டை ஆதரிக்க வேண்டும், என்று வற்புறுத்தும் தமிழ்த் தேசியவாதிகள், லெனின் முன்மொழிந்த பாட்டாளிவர்க்க சகோதரத்துவம் என்ற நிபந்தனையை கண்டு கொள்ள மறுக்கிறார்கள். சில இடதுசாரி வேஷம் போட்ட தமிழ்த் தேசிய அபிமானிகள் கூட நுனிப்புல் மேய்கின்றனர். நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த லெனினின் கூற்றுக்களை, ஈழப் பிரச்சினையில் பொருத்திப் பார்ப்போம். பண்டைய வரலாற்றுடன் ஒப்பிட வேண்டுமானால், நோர்வேயை தமிழீழத்துடனும், சுவீடனை சிறி லங்காவுடனும், இந்திய- சோழ சாம்ராஜ்யத்தை டென்மார்க்குடனும் ஒப்பிடலாம். பிரிட்டிஷ் காலனிய காலகட்டத்தை, நெப்போலியன் போர்களுடன் ஒப்பிடலாம்.

அந்த வகையில், சிறிலங்காவிடம் இருந்து பிரிந்து, இந்தியாவுடனும் சேராமல் தனித்து அரசமைக்க விரும்பும் தமிழீழம், தனக்கென ஒரு அரசமைப்பு சட்டத்தை எழுதியுள்ளதா? இந்தியாவுடன் அடையாளம் காண விரும்பாத, தனித்துவமான மொழி, அல்லது கலாச்சாரத்தை உருவாக்கி உள்ளதா? எல்லாவற்றிற்கும் மேலாக, சிங்கள பாட்டாளி வர்க்கத்துடன் சகோதரத்துவத்தை பேணி வருகின்றதா? இது போன்ற கேள்விகள் எழுப்புவதையே விரும்பாதவர்கள் தான், இடதுசாரிகளுக்கு வகுப்பு எடுக்கின்றனர். லெனின் நோர்வேயின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தார். அதற்கான வாதங்களையும் முன் வைத்தார். ஆனால், அந்த வாதங்களை எல்லாம் புறந்தள்ளி விட்டு, இடதுசாரிகள் எல்லோரும் குருட்டுத்தனமாக தேசியவாதத்தை நிபந்தனை இன்றி அங்கீகரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது எந்த வகையில் நியாயமானது?


"ஒடுக்கப் படும் இனத்தை சேர்ந்த பாட்டாளிகள், ஒடுக்கும் இனத்தை சேர்ந்த பாட்டாளிகளுடன் சகோதரத்துவ உறவைப் பேண வேண்டும்," என்பது, ஒரு தேசியத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கு மார்க்சியவாதிகள் முன்வைக்கும் நிபந்தனையாகும். ஏற்கனவே, பல சர்வதேச இடதுசாரிகள் தமிழ்த் தேசிய எழுச்சியை ஆதரித்துள்ளனர். எந்த நிபந்தனையின் பேரில், எத்தகைய எதிர்பார்ப்புகளுடன் அந்த ஆதரவு வழங்கப் பட்டது, என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும். "சிறி லங்கா ஆட்சியாளர்களை, பிரிட்டிஷ் நவ-காலனிய கைக்கூலிகளாகவே," சர்வதேச இடதுசாரிகள் கருதுகின்றனர். "ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம், பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நலன்களுக்கு எதிரானது," என்ற நிலைப்பாட்டில் இருந்து கொண்டே இடதுசாரிகள் ஆதரவு வழங்க முடியும்.

அயர்லாந்தின் விடுதலையை ஆதரித்த மார்க்சும், நோர்வேயின் விடுதலையை ஆதரித்த லெனினும், மேலைத்தேய ஏகாதிபத்தியத்தை பலவீனப் படுத்துவதை கருத்தில் கொண்டிருந்தனர், என்பது இங்கே நினைவுகூரத் தக்கது. தொன்னூறுகளில், சோவியத் யூனியன், யூகோஸ்லேவியா போன்ற கம்யூனிச வல்லரசுகளை உடைக்கும் நோக்குடன், மேற்குலகம் புதிய குடியரசுகளை அங்கீகரித்தது. அதே நேரம், பாஸ்க் (ஸ்பெயின்), கோர்சிகா (பிரான்ஸ்), போன்ற தேசிய விடுதலைப் போராட்டங்களை நசுக்கி வந்துள்ளது. இந்த முரண்பாடுகளை, தத்துவார்த்த, அல்லது பூகோள அரசியல் அடிப்படையில் புரிந்து கொள்வது அவசியம்.

Friday, February 04, 2011

இனப் பகையால் பிளவுண்ட சோவியத் ஒன்றியம்


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?]

(பகுதி : 5)

1917 ம் ஆண்டு, சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் போல்ஷெவிக் புரட்சியினால் சார் மன்னனின் சாம்ராஜ்யம் வீழ்ந்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல சுதந்திர நாடுகள் தோன்றின. ஆர்மேனியா, அசர்பைசான், ஜோர்ஜியா போன்ற நாடுகளில் தேசியவாதிகள் ஆட்சியைப் பிடித்தனர். அந்த புதிய தேசங்களின் சுதந்திரம் அதிக பட்சம் ஒரு வருடம் நீடித்திருக்கும். கம்யூனிச போல்ஷெவிக் படைகள் தேவைப்பட்டால் வன்முறை பிரயோகித்து தேசியவாத அரசுகளை கலைத்து விட்டனர். அதற்கு இரண்டு காரணங்கள். தேசியவாதம் எப்போதும் பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் குலைக்கும் சக்தியாகவே இருக்கும். மற்றது, பிரிட்டன் போன்ற அந்நிய நாட்டுப் படைகள் இத்தகைய சுதந்திர தேசங்களில் நிலை கொள்ளும். (ரஷ்யாவில் ஏற்கனவே பன்னாட்டுப் படைகள் குவிக்கப்பட்டிருந்தன.) சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர், பால்ட்டிக் நாடுகளிலும், ஜோர்ஜியாவிலும் நேட்டோப் படைகள் வந்து விட்டமை குறிப்பிடத் தக்கது. சில நேரம் சித்தாந்தத்தை விட, பூகோள அரசியல் ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்றது.

சோவியத் யூனியன் ஒரே நாடாக ஐ.நா. சபையில் அங்கம் வகித்த காலத்தில், அதன் ஒரு பகுதியான பெலாரஸ் தனியான அங்கத்துவம் கொண்டிருந்தது. அதற்கு காரணம், ரஷ்யாவுக்கு அடுத்ததாக ரஷ்யர்கள் பெரும்பான்மையாக பெலாரஸ் குடியரசில் வசித்தனர். அங்கே தனியாக பெலாரஸ் எனப்படும் மொழியைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இன்றைக்கும் அரச எதிர்ப்பாளர்கள் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான். பெலாரஸ் மொழி கிட்டத்தட்ட போலிஷ் மொழி போன்றிருக்கும். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், போலந்தின் மேற்குப் பகுதிகள் பெலாரசுடன் சேர்க்கப்பட்டன. பிற்காலத்தில் சோவியத் யூனியன் போலந்தின் பகுதிகளை விழுங்கி விட்டது என்று மேற்கில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அன்றைய நிலையில், இரண்டு உலகப்போர்களுக்கு காரணமான ஜெர்மனியின் மேலாதிக்கத்தை குறைப்பதற்கு அத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகக் கருதப்பட்டன.

எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா போன்ற பால்ட்டிக் நாடுகளில் ஜெர்மன் நாஜிகளுக்கு ஆதரவான சக்திகள் பலமாக இருந்தன. அதே போன்று உக்ரைனில் (ரஷ்ய மொழிக் குடும்பத்தை சேர்ந்த) உக்ரைன் மொழி பேசும் மக்கள் நாஜி ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்தனர். இத்தகைய காரணங்களால், இரண்டாம் உலகப்போரின் பின்னர் குடிசன பரம்பலில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேற்குறிப்பிட்ட குடியரசுகளில் ரஷ்யர்களின் குடியேற்றம் அதிகரிக்கப்பட்டது. அதே நேரம் நாஜிகளுடன் ஒத்துழைத்த உள்ளூர்வாசிகள் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இன்று சுதந்திரமடைந்த பால்ட்டிக் நாடுகளில் ரஷ்யர்களுக்கு குடியுரிமை வேண்டுமானால் உள்ளூர் மொழியில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டுமென நிர்ப்பந்திக்கப் படுகின்றது. இன்றைய சுதந்திர உக்ரைனில், "ரஷ்ய- உக்ரைனிய இன மோதல்" கட்சி அரசியலில் எதிரொலிக்கின்றது.

முன்னர் ஒரு காலத்தில் இருந்த சாம்ராஜ்யங்கள் அழிந்து குறுகிய பிரதேசமாக இன்னொரு சாம்ராஜ்யத்தின் பகுதியாகி விடுகின்றன. ஒரு காலத்தில் ஆர்மேனியா கிழக்கு துருக்கி வரை பரவியிருந்தது. ஆர்மேனியர்களின் புனிதப் பிரதேசமான அராரட் மலை உட்பட பல பகுதிகள் துருக்கியர் வசமாகி விட்டன. அங்கு வாழ்ந்த ஆர்மேனியர்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, துருக்கிய மக்களை குடியேற்றி விட்டார்கள். ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட ஆர்மேனியா, சோவியத் குடியரசாகியது. தற்போது சுதந்திர ஆர்மேனிய தேசமாகவுள்ளது. அதே போல இஸ்லாமியரான, துருக்கி குடும்ப மொழிகளைப் பேசும் மத்திய ஆசிய நாடுளைச் சேர்ந்த மக்கள், ஒரு காலத்தில் மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பிரஜைகளாக வாழ்ந்தவர்கள். புக்காரா, சமர்கன்ட் போன்ற நகரங்கள் இன்றைக்கும் இஸ்லாமிய நாகரீகத்திற்கு பெருமை சேர்க்கின்றன.

ஒரு காலத்தில் "துருக்கேஸ்தான்" என அறியப்பட்ட மத்திய ஆசியப் பிரதேசம் ஸ்டாலினால் மொழிவாரி குடியரசுகளாக பிரிக்கப்பட்டன. காசக்ஸ்தான், கிரிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியன ஒன்றுக்கொன்று தொடர்புடைய துருக்கி மொழிகளைப் பேசும் நாடுகள். இவற்றில் தாஜிகிஸ்தான் மட்டும் பார்சி(ஈரான்) மொழி பேசும் நாடாகும்.
சாமர்கன்ட், புக்காரா போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற நகரங்களிலும் தாஜிக் மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் ஸ்டாலின் அவற்றை உஸ்பெகிஸ்தானுக்கு கொடுத்து விட்டார். இன்றைக்கும் அது இனப்பிரச்சினையை தூண்டும் சச்சரவுக்குட்பட்ட பிரதேசமாகும். மத்திய ஆசியாவில் பெரும்பகுதி பாலைவனப் பிரதேசத்தைக் கொண்டது. பெர்கனா பள்ளத்தாக்கு மட்டும் செழிப்பான மண்வளத்தைக் கொண்டது. இயற்கை வளம் நிறைந்த பெர்கனா பள்ளத்தாக்கு உஸ்பெகிஸ்தானுக்கு சொந்தமானாலும், கிரிகிஸ்தான், தாஜிகிஸ்தான் போன்ற நாடுகள் அங்கிருந்து கிடைக்கும் வளத்தில் தங்கியுள்ளன. இது ஒரு வகையில், தமிழ் நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையில் நடக்கும் காவிரி நீர்ப் பிரச்சினை போன்றது. பெர்கனா வளங்கள் யாருக்கு சொந்தம் என்ற சச்சரவுகள் அடிக்கடி இனக்கலவரங்களில் முடிகின்றன. இன்று வரை தீர்த்து வைக்கப்படாத பிரச்சினை அது.

இரண்டு குடியரசுகளுக்கு இடையில் உருவான இனப்பகை, சோவியத் யூனியன் உடைவுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாது, பல உயிர்களைக் காவு கொண்ட போரில் சென்று முடிந்தது. ஐரோப்பாவின் முதலாவது கிறிஸ்தவ நாடான ஆர்மேனியாவும், இஸ்லாமிய-துருக்கி சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த அசர்பைஜானும் ஜென்மப் பகைவர்கள்.
ஸ்டாலின் அவற்றை குடியரசுகளாக்கிய போது, ஒன்றில் மற்றொன்று தங்கியிருக்க வைத்தார். ஆர்மேனியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாகார்னோ-கரபாக் என்ற பிரதேசம் அசர்பைஜான் வசம் சென்றது. அதே போல, அசர்பைஜானியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாக்ஷிவன் பிரதேசம் ஆர்மேனியா வசம் சென்றது. பரம்பரைப் பகைவர்களான இரண்டு இனங்களும், ஒருவர் தேசத்தில் மற்றவர் சிறுபான்மை இனமாக வாழ்ந்தனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர், "நாகார்னோ-கர்பக் ஆர்மேனியர்கள்" தனிநாடு கோரினார்கள். அசர்பைஜான் படைகள் அந்த எழுச்சியை அடக்கியது. சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஆர்மேனியப் படைகள், நாகர்னோ-கரபாக் பிரதேசத்தை ஆக்கிரமித்து ஆர்மேனியாவுடன் இணைத்தன.

இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை சுமுகமாக தீர்த்துக் கொண்டால், நாடு சுபீட்சமடையும் என்பதற்கு காசக்ஸ்தான் சிறந்த எடுத்துக்காட்டு. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசு என்ற போதிலும் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. வளைகுடா நாடுகளில் காணப்படுவதை விட அதிக எண்ணெய் வளம் கொண்டது. துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த காசாக் மொழி பேசும் மக்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினர்! மொத்த மக்கட்தொகையில் ஐம்பது வீதம் ரஷ்யர்கள். பத்து வீதம் உக்ரைன், செச்சென், ஜெர்மன் போன்ற பிற இனங்களைச் சேர்ந்தவர்கள். காசாக்ஸ்தான் சுதந்திரமடைந்த பின்னர் நிறைய ரஷ்யர்களும், ஜெர்மனியர்களும் வெளியேறி விட்டனர். இதனால் காசாக் மக்கள் பெரும்பான்மையாகும் வாய்ப்புக் கிடைத்தது. இருப்பினும் அதிகளவு தொழிற்தேர்ச்சி பெற்றவர்களும், தொழில்நுட்ப அறிஞர்களும் ரஷ்யர்கள். இதனால் அவர்களின் சேவை நாட்டுக்கு தேவை என்பதை காசாக்ஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர். சரியான திட்டமிடல் காரணமாக இன்று காசக்ஸ்தான் பணக்கார நாடாக மாறி விட்டது. முன்னாள் சோவியத் குடியரசுகளில் இனப்பிரச்சினை அற்ற ஒரேயொரு நாடு அது மட்டும் தான்.

சோவியத் காலத்தில் ஒவ்வொரு குடியரசும் தனக்கென தனியான மொழியைக் கொண்டிருந்த போதிலும், ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தியவர்கள் ரஷ்ய மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்தனர். ரஷ்ய மொழிப் பாடசாலைகளே சிறந்த கல்வி நிலையங்களாக இருந்ததமை ஒரு காரணம். ரஷ்ய மொழியில் பல துறை சார்ந்த வளர்ச்சி காணப்பட்டமை இன்னொரு காரணம். பலநூறு மொழிகளைப் பேசும் மக்கள் அனைவரும், பாட்டாளி வர்க்க கொள்கையின் கீழே கொண்டு வரப்பட்டார்கள். கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள் கூட உயர்கல்வி கற்று முன்னுக்கு வந்தனர். எல்லோரும் சமமாக நடத்தப் பட்டதால், இன, மொழி ரீதியான முரண்பாடுகள் மிக அரிதாக காணப்பட்டன. முன்னாள் சோவியத் யூனியனில் சோஷலிசத்தில் பால் வெறுப்புக் கொண்டவர்கள் வாழ்ந்தனர். அப்படியானவர்கள் எல்லா இனத்தவர் மத்தியிலும் காணப்பட்டனர். புரட்சியின் ஆரம்ப காலங்களில் மதவாத சக்திகள் அடக்கப்பட்டன. பின்னர் அரச சார்பு மதகுருக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மதத்தின் பெயரால் இனப்பிரச்சினை தலைதூக்க முடியவில்லை.

இன்று முதலாளித்துவப் பொருளாதாரத்தில், அரிதாகிப் போன இயற்கை வளங்களைப் பங்கிடுவதில் ஏற்படும் போட்டி இனப்பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. வலியது பிழைக்கும் என்பது முதலாளித்துவ விதிகளில் ஒன்று. ஆட்சியாளர்கள் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவைப் பெற விரும்புகின்றனர். அவர்களது பதவியை தக்க வைக்க அது உதவுகின்றது. முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பின்னர் தேசியவாதிகளாக மாறினார்கள். மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டு தமது மத அடையாளங்களை உலகறியச் செய்தனர். இவர்கள் மதத்தை தழுவியமை, சுய விருப்புச் சார்ந்தன்று. கிறிஸ்தவ நாட்டை சேர்ந்த ஒரு தலைவர் இஸ்லாமிய மதத்தையோ, அல்லது முஸ்லிம் நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் கிறிஸ்தவ மதத்தையோ தழுவவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் இன,மத அடையாளத்தை பின்பற்றுவதே ஆள்பவருக்கு  நன்மை உண்டாக்கும்.

(முற்றும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:

1.ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?
2.பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை
3.காலனிய எச்சங்களான தேசிய இனப்பிரச்சினைகள்
4.சோவியத் தேசிய இனங்களின் சத்திய சோதனை

Friday, January 07, 2011

பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?] 
(பகுதி : 2)

தேசியவாதம் எப்போதும் வலதுசாரிக் கருத்தியலாகவே பார்க்கப்பட்டது. "நாங்கள்", "அவர்கள்" என்று இனங்களை மோதல் நிலையில் வைத்திருப்பது, வலதுசாரித் தேசியவாதம் என்று பிரிக்கப்பட்டது. இதைவிட சமத்துவம், சுதந்திரம் என்பனவற்றிற்கு போராடுவது இடதுசாரித் தேசியம் என்று வகைப் படுத்தப்பட்டது. தேசியவாதத்தின் வளர்ச்சியை ஐந்து கட்டங்களாக பிரித்து புரிந்து கொள்ளலாம்.

முதலாவது கட்டம்: தேசியவாதத்தின் பிறப்பு. பிரெஞ்சுப் புரட்சியின் போது தான் முதன்முதலாக "தேசியம்" என்ற சொல் பாவிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அது முற்போக்கான பாத்திரத்தை வகித்தது. நிலவுடமையாளர்களுக்கு எதிராக சாதாரண மக்களை, தேசியம் என்ற பெயரில் முன்னிறுத்தியது. அன்று தேசியம் என்பது சாமானிய உழைக்கும் மக்களைக் குறிக்கும். நிலப்பிரபுக்கள் தேசியத்துக்குள் அடங்கவில்லை. புரட்சி நடந்த காலத்தில் பல மொழி பேசும் மக்களும் பிரஜைகள் என்று சமத்துவமாக பார்க்கப்பட்டனர்.

இரண்டாவது கட்டம்: 1870 ம் ஆண்டுக்குப் பின்னரும், முதலாம் உலகப்போர் வரையிலும். தேசியம் என்றால் இனம் என்று புரிந்து கொள்ளப்படுகின்றது. பல தேசிய அரசுகள் தமக்கென ஒரு மொழியை அரச கரும மொழியாக்கின. ஆதிக்கம் செலுத்திய மொழியைப் பேசும் மக்கள் தனி இனமாக கருதப்பட்டனர். சிறுபான்மை மொழிகள் அடக்கப்பட்டன. இந்தப் பிரிவினை ஏற்படுத்திய முறுகல் நிலை, முதலாம் உலக யுத்தத்தில் போய் முடிந்தது.

மூன்றாவது கட்டம்: முதலாம் உலகப்போர் முடிவில், மேற்குலகில் வில்சன் கோட்பாடு "தேசிய சுயநிர்ணயம்" என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியது. ஐ.நா. சபையின் முன்னோடியான, தேசங்களின் கூட்டமைப்பிலும் அது அங்கீகாரம் பெற்றது. அதற்கு வேறொரு தூண்டுதலும் இருந்தது. ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி வெற்றி பெற்றதும், 1918 ல் கம்யூனிஸ்ட்கள் சுயநிர்ணைய உரிமை அடிப்படையிலான சோவியத் குடியரசுகளை அறிவித்தனர். காலனிய நாடுகள் விடுதலையடைய உரிமையுடையவை என்று அறிவித்தனர். போல்ஷெவிக் பிரகடனத்தை சமன் செய்வது போல வில்சன் கோட்பாடு அமைந்திருந்தது. முதலாம் போரின் முடிவில் ஐரோப்பாவின் வரைபடம் மாறியிருந்தது. புதிதாக பல நாடுகள் சுதந்திரமடைந்தன. அவற்றின் சுயநிர்ணய உரிமையை வில்சன் கோட்பாடு அங்கீகரித்தது. ஆனால் அதற்காக ஒவ்வொரு இனமும் தனக்கான தேசிய அரசை பெற்றுக் கொண்டன என்று அர்த்தமில்லை. உதாரணத்திற்கு யூகோஸ்லேவியா என்ற சுயநிர்ணய உரிமை கொண்ட புதிய நாட்டில், செர்பியர்கள் பிற தேசிய இனங்கள் மீது ஆதிக்கம் செலுத்தினர். ஐரோப்பாவில் நிலவிய குழப்பகரமான சூழ்நிலை இரண்டாம் உலகப்போருக்கு வழி வகுத்தது.

நான்காவது கட்டம்: இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், உலகில் இடதுசாரிகளின் பலம் அதிகரித்தது. காலனியாதிக்கத்தை இல்லாதொழிப்பதற்கு தேசியவாதத்தின் அவசியத்தை இடதுசாரிகளும் உணர்ந்தனர். லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் பல காலனிகள் விடுதலையடைந்தன. முதலாம் உலகப்போர் காலத்தில், கனடா, நியூசிலாந்து போன்ற பிரிட்டிஷ் காலனிகளுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. "வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு" அடிப்படையிலேயே அந்த சுதந்திரம் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களை சேர்ந்த பிரிட்டிஷ் காலனிகள் இரண்டாம் உலகப்போர் வரையில் காத்திருக்க வேண்டியேற்பட்டது. சுயநிர்ணய உரிமையை முன்மொழிந்த வில்சன் கோட்பாட்டின் நீட்சியாகவே வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு கருதப்படுகின்றது. பிரிட்டனிடம் இருந்து சுதந்திரம் பெற்ற காலனிகள் அந்த யாப்பை அடிப்படையாக கொண்டிருந்தன. அண்மையில் சிம்பாப்வே வெஸ்ட்மின்ஸ்டர் யாப்புக்கு பதிலாக, புதிய யாப்பு எழுதக் கிளம்பிய பொழுது சர்வதேச நெருக்கடியை எதிர்கொண்டது. (1972 ல் குடியரசான இலங்கை அதே போன்ற நெருக்கடிக்கு உள்ளானது.) இன்று பல தமிழ் தேசியவாத அறிவுஜீவிகள் வில்சன் கோட்பாடு, வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு போன்றன தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது போல பேசி வருகின்றனர். உண்மையில் வில்சன் கோட்பாடு ஐரோப்பாவை மட்டும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது. வெஸ்ட்மின்ஸ்டர் யாப்பு ஆங்கிலேயர் குடியேறிய காலனிகளுக்கு சுதந்திரம் வழங்கும் நோக்குடன் எழுதப்பட்டது. இரண்டுமே காலனிய அடிமைப்பட்ட நாடுகளின் விடுதலை குறித்து பேசவில்லை.

ஐந்தாவது கட்டம்: பெர்லின் மதில் இடிந்து, சோஷலிச நாடுகள் மறைந்து விட்ட காலகட்டம். தற்காலத்தில் நாம் வாழும் உலகில் பல மோதல்களுக்கு காரணமானது. வலதுசாரிகளும், இடதுசாரிகளும் தமக்கேற்ற தேசியவாதம் பேசிய காலம் மறைந்து விட்டது. மேற்குலகின் ஆதிக்கத்தின் கீழ் வலதுசாரி சக்திகள் தாம் விரும்பியவாறு தேசியவாதத்தை வரையறுக்கின்றனர். அது மேலும் புதிய நாடுகளின் தோற்றத்திற்கு வழிவகுத்தது. யூகோஸ்லேவியா உடைந்து செர்பியா, ஸ்லோவேனியா, குரோவேசியா, போஸ்னியா, மாசிடோனியா, மொண்டி நெக்ரோ, கொசோவோ போன்ற புதிய தேசங்கள் உருவாகின. இப்படி எந்த தேசம் புதிதாக உருவாக வேண்டும் என்று அவர்களே தீர்மானித்தார்கள். வேறு சில நாடுகளின் தேசிய சுயநிர்ணய உரிமையை அவர்கள் அங்கீகரிக்கவில்லை. உதாரணத்திற்கு அப்காசியா, ஒசேத்தியா.

இவ்விடத்தில் சில முக்கிய குறிப்புகளை மீளாய்வு செய்ய வேண்டும். இலங்கையில் ஒரு காலத்தில், தமிழ் தேசியம் பேசிய வலதுசாரிகள், "சிங்கள இனவாதம்" என்ற சொல்லை மட்டுமே பாவித்து வந்தனர். அதே நேரம், சிங்கள/தமிழ் இடதுசாரிகள் சிங்களப் பேரினவாதம் என்ற சொல்லை பாவித்தனர். தற்போது சிங்கள பேரினவாதம் என்ற சொல் பரவலாக எல்லோராலும் பயன்படுத்தப் படுகின்றது. மேற்குலக அரசியல் கோட்பாட்டாளர்கள் உருவாக்கிய "சுயநிர்ணய உரிமை" ஒவ்வொரு தேசிய இனத்துக்குமானது என்ற தவறான புரிதல் காணப்படுகின்றது. உண்மையில் மேற்குலக சுயநிர்ணய உரிமை தோன்றிய காலத்தில், அது ஐரோப்பாவில் பேரினவாத அரசுகளுக்கு ஆதரவாகவே எழுந்தது.

உதாரணத்திற்கு பிரான்ஸில் கோர்சிகா, ஒக்கிடண்டல், நோர்மாண்டி, அல்சாஸ், பாஸ்க் ஆகிய மாகாணங்களுக்கென தனியான மொழிகள் உள்ளன. இவை பிரெஞ்சு மொழிக்கு சம்பந்தமில்லாதவை. ஆனால் பிரெஞ்சு பேரினவாதம் அந்த சிறுபான்மை மொழிகளை அடக்கி அழித்தது. பொது இடங்களில், தெருவில் கூட பிரெஞ்சு மொழி தவிர்ந்த வேறு மொழிகள் பேசக் கூடாது என்று உத்தரவு போட்டது. மீறியோர் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். ஜெர்மனியிலும் அதே போல, டென்மார்க்கை அண்டிய பகுதியில் பிரீஸ் என்றொரு மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். முதலாம், இரண்டாம் உலகப்போருக்கு இடைப்பட்ட ஜெர்மனியில் போலிஷ் மொழி பேசும் பிரதேசங்களும் அடங்கின. ஆனால் ஜெர்மன் பேரினவாதம் இவற்றை எல்லாம் அடக்கி, ஜெர்மன் மொழி மட்டுமே உத்தியோகபூர்வ மொழியாக்கியது. அதே போல நெதர்லாந்தில், பிரீஸ்லாந்து மாகாணத்தில் பேசப்படும் பிரீஸ் மொழி, மற்றும் மாகாணங்களுக்கு உரிய கிளை மொழிகள், எல்லாவற்றையும் ஹோலந்து மொழி ஆதிக்கம் செலுத்தியது. அதாவது ஹோலந்து என்ற மேற்கு மாகாணத்தில் மட்டுமே பேசப்பட்ட மொழி. அது பின்னர் நெதர்லாந்து (டச்சு) என்ற பெயரில் செம்மையான மொழியாக்கப்பட்டது. யூகோஸ்லேவியாவில் செர்பிய மொழி ஆதிக்கம் செலுத்தியது. இவ்வாறு கூறிக் கொண்டே போகலாம்.

நாம் இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், மேற்குலக "சுயநிர்ணய உரிமை" கோட்பாட்டாளர்கள், அத்தகைய பேரினவாத அரசுகளுக்கு ஆதரவாகவே கொள்கை வகுத்தனர். அதே கொள்கையை பின்னர், ஐரோப்பிய காலனிகளிலும் நடைமுறைப் படுத்தினர். பிரிட்டிஷ் காலனிகளாக இருந்து சுதந்திரமடைந்த நாடுகளை உதாரணமாக எடுப்போம். இந்தியாவில் இந்தி மொழி, பாகிஸ்தானில் உருது மொழி, இலங்கையில் சிங்கள மொழி, பிற மொழிகளின் மீது ஆதிக்கம் செலுத்துவது, பிரிட்டிஷாருக்கு ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. மாறாக, அத்தகைய ஆதிக்கம் தமது நிர்வாக பிரிவுகளை நிரந்தரமாக வைத்திருக்க உதவும் என்று நம்பினார்கள். அதாவது காலனிய காலத்தில் எவ்வாறு ஆங்கில மொழி ஆதிக்கம் செலுத்தியதோ, அதே இடத்தில் காலனிகளில் பெரும்பான்மை மொழிகள் உள்ளன. இது பிரிட்டிஷாரின் நவகாலனித்துவ கொள்கைக்கு ஏற்றதாகவே அமைந்துள்ளது. அன்று எஜமானர்கள் நேரடியாக ஆண்டார்கள். இன்று எஜமானர்களின் சுதேசிப் பிரதிநிதிகள் ஆள்கிறார்கள். அது மட்டும் தான் வித்தியாசம்.


(தொடரும்)


Thursday, January 06, 2011

ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?


"ஒரு தேசிய இனம் தேசியத்தை உருவாக்குவதில்லை. மாறாக, ஒரு தேசியமே தேசிய இனத்தை உருவாக்குகின்றது." - சரித்திரவியலாளர் Eric Hobsbawm

சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் வரை, "தேசிய இனம்" என்றால் என்னவென்று எவருக்கும் தெரியாத காலம் ஒன்றிருந்தது. ஒரே மொழி பேசும் மக்கள், இனம், தேசிய இனம் எல்லாம் பிற்காலத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டவை தான். முந்திய காலங்களில் மக்கள் தாம் சார்ந்த மதத்துடன், இனக்குழு, சாதி, பிரதேசம், குடும்பம் இவற்றுடன் சேர்த்து பார்க்கப்பட்டனர். அவற்றையே தமது அடையாளமாக காட்டிக் கொண்டனர். உலகில் எந்த மூலையிலும், "தேசிய இனம்" என்ற ஒரு பிரிவு இருக்கவில்லை. நூறு வருடங்களுக்கு முன்னர், "சிங்களவர்களும், தமிழர்களும் தனிதனி தேசிய இனங்கள்." என்று எவராவது கூறினால், எல்லோரும் அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று நினைப்பார்கள். புராதன காலத்தில் பௌத்த, இந்து மதங்கள் மட்டுமே பிரதேசம் கடந்து, சாதிப் பாகுபாட்டைக் கடந்து மக்களை ஒன்றிணைத்தன.

"தேசியம்" என்றால் இப்படித்தான் இருக்கும் என்று வரையறுப்பது கடினம். அதன் அர்த்தம் காலத்துக்கு காலம் மாறிக் கொண்டு வந்துள்ளது. பிரெஞ்சுப் புரட்சியின் போது கூறப்பட்ட தேசியம், பிரான்சின் அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து பிரஜைகளையும் குறித்தது. பிற்காலத்தில் "தேசியம்", "இனம்" இரண்டும் ஒன்றாக சேர்க்கப்பட்டது. ஒரே மொழி பேசும், ஒரே கலாச்சாரம் கொண்ட மக்களை தேசிய இனம் என்றார்கள். மேற்கொண்டு அந்த அர்த்தத்திலேயே தேசியத்தை ஆராய வேண்டியிருக்கின்றது. ஐரோப்பாவில் 18 ம் நூற்றாண்டின் இறுதியிலும், 19 ம் நூற்றாண்டு முழுவதும், இன்று நாம் காணும் அடிப்படையைக் கொண்ட நவீன தேசங்கள் உருவாகின. தொழிற்புரட்சி, பொருளாதார வளர்ச்சி என்பன, தேச பரிபாலனத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்தன. புதிய ஆளும் வர்க்க பிரதிநிதிகளுக்கு, மக்களை ஆள்வது முன்னர் எப்போதும் இல்லாதவாறு கடினமாக இருந்தது. முன்பு மதமும், நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பும், இந்திய உபகண்டத்தில் சாதியமைப்பும் மக்களை ஒரு கட்டுக்கோப்புக்குள் அடக்கி வைத்திருந்தது. அத்தகைய சமூக அமைப்பு முதலாளித்துவ பொருளாதாரம் வளருவதற்கு தடைக்கல்லாக இருந்தது. மேலும் பிரெஞ்சுபுரட்சியின் பின்னர், ஐரோப்பிய நாடுகளின் ஆளும் வர்க்கம், தாராளவாத சித்தாந்தமே சிறந்தது என்று நம்பினார்கள்.

மக்களின் விசுவாசத்தைப் பெறுவதற்கு, மேலிருந்து அவர்களை ஆளுவதற்கு தேசியவாதம் சிறந்த தத்துவமாகப் பட்டது. தேச எல்லைக்குள் பொதுவான மொழி ஒன்று உருவாக்கப்பட்டது.பெரும்பான்மையான தேசிய அரசுகளில் ஆளும் வர்க்கம் எந்தப் பிரதேசத்தை சேர்ந்ததோ, அந்தப் பிரதேச மொழி பொது மொழியாகியது. ஒரு நாட்டின் எல்லைக்குள் வாழும் மக்கள் மத்தியில் ஒற்றுமையுணர்வை தோற்றுவிக்க பொது மொழி பயன்பட்டது. மேலும் பொதுவான பண்பாடு, வரலாறு என்பன உருவாக்கப்பட்டன. அதற்கு முன்னர், ஒவ்வொரு பிரதேச மக்களும் தமக்கென தனியான கலாச்சாரத்தை, வரலாற்றைக் கொண்டிருந்தனர். அவை சில நேரம் ஒன்றுக்கொன்று முரணானதாகவும் இருக்கலாம், அல்லது ஒரே மாதிரியாகவும் இருக்கலாம். தேசிய அரசு அவற்றை மேவிகொண்டு ஆதிக்க கலாச்சாரம் ஒன்றை தோற்றுவித்தது. தேசிய அரசு தோன்றின காலத்தில் இருந்து ஒரே மாதிரியானதாக வரலாறு மாற்றி எழுதப்பட்டது.

தேசியவாதம் எங்கே, எப்படித் தோன்றியது? பிரிட்டனும், பிரான்சும் நூறு ஆண்டுகளாக போரில் ஈடுபட்டிருந்தன. அந்தக் காலத்தில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றுக்கொன்று யுத்தம் செய்வது சர்வசாதாரணம். பிரிட்டனின் அரச பரம்பரையும், பிரெஞ்சு அரச பரம்பரையும் தமக்கிடையிலான முரண்பாடுகளை தீர்த்துக் கொள்ளத்தான் போரில் ஈடுபட்டார்கள். ஆனால் நூறாண்டு காலப் போர் நீடிப்பதற்கு ஏதாவதொரு சித்தாந்தம் தேவைப்பட்டது. அது "நாட்டுப்பற்று" என்ற வடிவம் எடுத்தது. நூறாண்டு காலப் போரின் முடிவில் பிரிட்டிஷ், பிரெஞ்சு "நாட்டுப் பற்றாளர்கள்" உருவாகியிருந்தனர். கிறிஸ்தவ நாடுகளில் தந்தை வழிக் கலாச்சாரம் வேரூன்றியிருந்தது. (கிறிஸ்தவ மதத்தில் கடவுள் ஒரு ஆணாக கருதப்படுகிறார்.) அதனால் ஒரு தேசிய அரசு "தந்தையர் நாடு" என்று அழைக்கப்பட்டது. தாய்வழிக் கலாச்சாரம் கொண்ட கீழைத்தேய நாடுகளில் அது "தாய் நாடு" என்று மொழிபெயர்க்கப்பட்டது.

19 ம் நூற்றாண்டில் "வெகுஜன தேசியவாதம்" தோன்றியது. அதாவது பொதுவான மொழி, கலாச்சாரம் என்பன மக்கள் மயப்பட்டன. அதன் அடிப்படையில், "தேசிய உணர்வு", "இனம்" என்பன மையப்படுத்தப் பட்டன. "இனம்" என்ற ஒன்று புதிதாக தோன்றிய பின்னர், ஒரு இனத்தை சேர்ந்த மக்கள், மற்ற இனத்தை சேர்ந்தவர்களை அன்னியர்களாகப் பார்த்தனர். அன்னியப்பட்ட இனங்கள் மத்தியில் அவநம்பிக்கையும், சந்தேகமும் தோன்றியது. ஒரு இனத்தின் அவலத்திற்கு, மற்ற இனம் மீது பழி போடப்பட்டது. பழிச் சொல்லுக்கு ஆளாகும் இனம் ஒரே நாட்டை சேர்ந்த சிறுபான்மையினமாக இருக்கலாம். அல்லது வேறொரு தேசத்தை சேர்ந்த இனமாக இருக்கலாம். ஒரே தேசத்திற்குள், உழைக்கும் வர்க்கம் முதலாளிகளுடன் சமரசத்தை பேண வேண்டும். (தேசிய ஒற்றுமைக்கு மிக அவசியம்) அதனால் பொருளாதார பிரச்சினைகளுக்கும் மற்ற இனத்தின் மீது பழி போடப்பட்டது. உதாரணத்திற்கு, ஜெர்மனியில் 20 ம் நூற்றாண்டு வரையில் அத்தகைய அந்நியர்களை வெறுக்கும் தேசியவாதம் நிலவியது. அதன் விளைவுகளும் உலகறிந்தவை தான்.

(தொடரும்)

Wednesday, December 24, 2008

இனப்பிரச்சினையின் பரிமாணங்கள் - ஒரு சைப்ரஸ் அனுபவம்


வளர்ந்த நாடுகளிலும் இனப்பிரச்சினை வளர்ந்து வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த குட்டித் தீவான சைப்ரஸ் அதற்கொரு உதாரணம். விடுமுறைக்காக அந்த நாட்டில் தங்கியிருந்த நேரம், நான் அவதானித்த சுவையான சமூக-அரசியல் நிகழ்வுகளை, பின்னணி தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஒருவகையில் இது எனது பயணக்கட்டுரை என்றாலும், சர்வதேச சமூக கற்கைகளுக்கான உசாத்துனையாகவும் அமையும் என எதிர்பார்க்கிறேன்.

இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், துருக்கிக்கும், கிரீசிற்கும் இடையிலான அதிகாகரப் போட்டியில் சிக்கி, இனரீதியாக இரண்டாக பிரிந்திருக்கும் தேசம் சைப்பிரஸ். பெரும்பான்மை கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழும், தீவின் 60% நிலப்பரப்பை கொண்ட, தெற்கு பகுதியே " சைப்ரஸ் குடியரசு" என்ற பெயரில் உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடக்கே சிறுபான்மை துருக்கி மொழி பேசும் மக்கள் வாழும், 40 % நிலப்பரப்பை கொண்ட " வடக்கு சைப்ரஸ் துருக்கி குடியரசு" (சுருக்கமாக TRNC) தன்னை சுயநிர்ணய உரிமை கொண்ட, சுதந்திர நாடாக பிரகடனம் செய்தாலும், இதுவரை துருக்கியை தவிர வேறு எந்த நாடும் அதனை அங்கீகரிக்கவில்லை.

"பெர்லின் மதில்" வீழ்ந்ததை, குறிப்பிடத்தக்க சர்வதேச நிகழ்வாக எல்லோரும் அன்று கொண்டாடினார்கள். பெர்லின் மதில், இரண்டு அரசியல் கோட்பாடுகளை கொண்ட தேசங்களை பிரித்ததால், அதற்கு அவ்வளவு முக்கியத்துவம். சைப்பிரஸ் தீவை பிரிப்பது, இருநாடுகளுக்கிடயிலான சர்வதேச எல்லையாக, எவராலும் (வடக்கு சைப்ரஸ் தவிர) கருதப்படவில்லை. அதனால் அதனை "பச்சைக் கோடு" (Green Line) என்ற பெயரில், ஐ.நா. சமாதானப்படை பாதுகாக்கின்றது. எல்லையில் நிலக்கண்ணிகள் புதைக்கப்பட்டிருப்பதால், குறிக்கப்பட்ட எல்லைக்காவல் நிலையங்களூடாகத்தான் பொது மக்கள் போக்குவரத்து செய்ய முடியும்.

தலைநகரம் நிகோசியா, பெர்லின் நகரம் போல இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. நகரின் பிரபல கடைத்தெருவான "லேட்ரா தெரு" முடிவில் எல்லைக்காவல் நிலையம் உள்ளது. கிரேக்க சைப்ரசில் இருந்து செல்பவர்களுக்கு, துருக்கி பொலிஸ் ஒரு சிறிய துண்டில், நுழைவு விசா குத்தி தருகின்றது. முன்பு பாஸ்போர்ட்டில் இந்த விசா இருந்தால், கிரேக்க சைப்பிரசினுள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. துருக்கி சைப்பிரசின் எந்தவொரு அரசாங்க பத்திரத்தையும், கிரேக்க சைப்ரஸ் சட்டவிரோதமாக பார்க்கின்றது.


சில வருடங்களுக்கு முன்னர் தான், இரண்டு பகுதிகளுக்குமிடையில் வர்த்தக தொடர்பு ஏற்பட்டது. "வடக்கு சைப்ரஸ் அரச வர்த்தக ஆணையகம்" வழங்கும் பத்திரங்களை, தெற்கு சைப்ரஸ் ஏற்க மறுத்து வருவதால், ஐரோப்பிய ஒன்றியம் இரு தரப்புக்குமிடையில், அனுசரணையாளராக செயற்பட்டு வருகின்றது. தெற்கு சைப்ரஸ் குடியரசு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினரான பின்னர் தான், இது சாத்தியமாகியது. வடக்கு சைப்ரஸ் பகுதிகளுக்கும் சேர்த்து, (கிரேக்க) சைப்ரஸ் குடியரசு உரிமை கொண்டாடுவதை, சர்வதேசம் அங்கீகரித்துள்ளது. இருப்பினும் வடக்கு சைப்ரஸ், தனி நாடாக செய்யற்பட்டு வருவது கண்கூடாக தெரியும் யதார்த்தம் என்பதால், அங்கே கிரேக்க சைப்ரஸ் குடியரசின் அதிகாரம் செல்லாது என்பதாலும் தான், ஐரோப்பிய ஒன்றிய அனுசரணை கோரப்பட்டது.

சைப்ரசை இரண்டு துண்டுகளாக்கிய 1974 ம் ஆண்டு யுத்தம், ஆயிரக்கணக்கான மக்களை குடிபெயர வைத்தது. போருக்கு முன்னர், வடக்கு பகுதியில் கிரேக்க மக்களும், தெற்கு பகுதியில் துருக்கி மக்களும், கணிசமான தொகையினராக ஒன்று கலந்து வாழ்ந்து வந்தனர். இனப்பிரச்சினை முற்றி இனக்கலவரமாகி, அதனால் சிறுபான்மை துருக்கி இனத்தவர்கள், தமக்கென தனி நாடு கோரி வந்தார்கள். கடல் கடந்து வாழும் தனது சகோதர இனத்தவர்கள் கொல்லப்படுவதாக காரணம் காட்டி, துருக்கி இராணுவம் படையெடுத்தது. இப்போதிருக்கும் பச்சைக் கோடு வரை முன்னேறிய துருக்கி இராணுவத்தை, எதிர்க்க முடியாத கிரேக்க சைப்ரஸ் இராணுவம் பின்வாங்கி, போர்நிறுத்தம் வந்தது.

அத்தோடு பிரச்சினை தீரவில்லை. வடக்கில் வாழ்ந்த கிரேக்க இனத்தவர்கள் பலர், (துருக்கி தேசியவாதிகளாலும், ஆக்கிரமிப்பு படைகளாலும்) படுகொலை செய்யப்பட்டதால், கிரேக்க மொழி பேசும் மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். அதேபோல தெற்கில் வாழ்ந்த துருக்கி இனத்தவர்கள் பலர், (கிரேக்க பேரினவாதிகளால்) படுகொலை செய்யப்பட்டதால், துருக்கி மொழி பேசும் மக்கள் வடக்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். பிற்காலத்தில் பொஸ்னியாவில் நடந்த இனச்சுத்திகரிப்பு நாடகம், அப்போதே சைப்ரசில் அரங்கேறியது. இந்த கடந்தகால இனப்படுகொலைகள் ஏற்படுத்திய தாக்கம் இன்று வரை எதிரொலிக்கின்றது. தேசத்தை ஒன்றிணைப்பதற்கு, கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தடையாக உள்ளனர். இரண்டு இனத்தவர்கள் மத்தியிலும் இருக்கும் கடும்போக்காளர்கள், கடந்த கால இழப்புகளை வருடந்தோறும் நினைவுபடுத்தி வருகின்றனர்.

இடம்பெயர்ந்த மக்களின் வீடுகள், நிலங்கள், உடமைகள் யாவும் அகதிகளாக வந்தவர்களுக்கு வழங்கப்பட்டன. இது இரண்டு பக்கமும் நிகழ்ந்தது. கிரேக்க மக்கள் பெரும்பான்மையினர் என்பதால், அவர்களே அதிகமாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக வடக்கு சைபிரசில் அவர்கள் அதிகளவு நிலங்களை இழந்தனர். மொத்த சனத்தொகையில் இருபது வீதத்திற்கும் குறைவான துருக்கி மக்கள், தற்போது 40% சைப்ரசிற்கு சொந்தக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. துருக்கியில் இருந்து வந்த ஆக்கிரமிப்பு இராணுவம் இன்று வரை வடக்கு சைப்ரசில் நிலை கொண்டுள்ளது. அதனால் கிரேக்க மக்கள் இன்றும் கூட வடக்கு சைப்ரசை தனி நாடாக ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன், அதனை துருக்கியால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என கூறி வருகின்றனர். அரசாங்கமும் அதே நிலைப்பாட்டில் தான் உள்ளது.

வடக்கு சைப்ரசில் துருக்கிய ஆக்கிரமிப்பு இராணுவம், தீவின் இனவிகிதாசாரத்தை மாற்றும் வகை, துருக்கி மொழி பேசும் சனத்தொகையை அதிகரிக்கும் நோக்கில், திட்டமிட்ட குடியேற்றங்களை நடத்தி வருகின்றது. துருக்கி குடியரசில் இருந்து பல்லாயிரக்கணக்கான வறிய மக்கள், வீடு, நிலம், பிற வசதிகளை செய்து தருவாதாக வாக்குறுதியளித்து, வடக்கு சைப்ரசில் குடியேற்றப்பட்டுள்ளனர். தற்போது தேசத்தை ஒன்றிணைக்கும் பேச்சுவார்த்தைகளின் போது, கிரேக்க சைப்ரஸ் இந்த குடியேற்றக்காரர்கள் வெளியேற்றப்பட வேண்டும், என்று கோரி வருகின்றது. பேச்சுவார்த்தை முறிவதற்கு இது ஒரு காரணமாக உள்ளது.

நிலப்பிரச்சினை அண்மையில் இன்னொரு பரிமாணத்தை கண்டது. வடக்கு சைப்ரஸ் மொத்த தீவிலும், பல அழகான பகுதிகளை கொண்டது. இதனால் (முன்னாள் காலனித்துவ நாடான) பிரித்தானியாவை சேர்ந்த, ஓய்வூதியம் பெறும் வயோதிப ஆங்கிலேயர்கள், அங்கே வீடுகளை வாங்கி குடியேறி வருகின்றனர். தெற்கு சைப்ரசை விட வீடுகளின் விலை வடக்கில் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வீட்டுமனைகள் பல, குடிபெயர்ந்த கிரேக்க இனத்தவருக்கு சொந்தமான நிலங்களில் கட்டப்பட்டுள்ளதாக, சைப்ரஸ் குடியரசு ஆட்சேபித்து வருகின்றது. நீண்டகாலமாக இருந்து வரும் சர்ச்சை, அண்மையில் ஐரோப்பிய நீதிமன்றத்திற்கும் போனது. இடம்பெயர்ந்து வாழும் கிரேக்க சைப்ரஸ் மனுதாரர் ஒருவர், வடக்கு சைப்ரசில் தனக்கு சொந்தமான நிலத்தில், ஒரு பிரிட்டிஷ் குடும்பம் வீடு கட்டி இருப்பதாக, ஆவணங்களை கொண்டு நிரூபித்ததால், அந்த வீட்டை இடிக்கும் படி ஐரோப்பிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு வடக்கு சைப்ரசில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பல பிரிட்டிஷ் வீட்டு உரிமையாளர்கள் தமது வீடுகளை இழக்கப்போவது ஒரு புறமிருக்க, தெற்கு சைப்ரசில் துருக்கி மக்களுக்கு சொந்தமான நிலங்களும் அபகரிக்கப்பட்டுள்ளதாக பிரச்சினை பன்முகப்பட்டுள்ளது.

வடக்கு சைப்ரசை விட தெற்கு சைப்ரஸ் குடியரசு, பல வழிகளிலும் முன்னேறி உள்ளது. எப்படியோ சம்பள விகிதம் வடக்கை விட தெற்கில் மூன்றில் ஒரு பங்கு அதிகம். இதனால் அண்மைக்காலத்தில் இருதரப்பு உறவுகள் மேம்பட்டதை தொடர்ந்து, பல துருக்கி இனத்தவர்கள் தெற்கு சைப்ரஸ் வந்து வேலை செய்கின்றனர். பொருளாதார ஏற்றத்தாழ்வு இணைவுக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகின்றது. பெரும்பாலான வடக்கத்திய துருக்கி மக்கள் இணைவுக்கு ஆதரவாகவும், அதேநேரம் தெற்கத்திய கிரேக்க மக்கள் இணைப்புக்கு எதிராகவும் உள்ளனர்.


கிரேக்க சைப்ரஸ்காரர்களின் பணபலம் அவர்களுக்கு திமிரையும் கொடுத்துள்ளது. பலர் இனப்பெருமை கொள்பவர்களாகவும், அதுவே சிலவேளை வெளிநாட்டவருக்கு எதிரான இனவாதமாக மாறுவதையும் காணக்கூடியதாக உள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட தீவொன்றில் வாழும் காரணமாக இருக்கலாம் என்று, என்னோடு பேசிய சில உள்ளூர் மக்கள் குறிப்பிட்டனர். வெளிநாட்டவருக்கு எதிரான இனவாதம் சைப்ரசில் எந்தளவிற்கு உள்ளது என்பது பற்றியும், வளர்ந்த நாட்டில் எவ்வாறு ஊழலும் வளர்ந்துள்ளது என்பது பற்றியும் அடுத்த பதிவில் எழுதுகின்றேன்.

- தொடரும்...........
________________________________________
முன்னைய பதிவு:
சைப்பிரசில் ஓர் ஈழம்

Video : North Cyprus(in Dutch)


Creative Commons License
Op dit werk is een Creative Commons Licentie van toepassing.
Burned Feeds for kalaiy