இசைப்பிரியா, ஹலா மிஸ்ராதி ஆகிய இரண்டு பெண்களினதும் வாழ்க்கை மட்டுமல்ல, முடிவும் ஒரே மாதிரி அமைந்துள்ளது ஆச்சரியத்திற்குரியது. கடாபியால் சீரழிக்கப் பட்ட பெண்கள் பற்றிய ஆவணப் படம் எடுத்த பிபிசி தொலைக்காட்சிக்கு, லிபியாவில் ஒரு பெண் ஊடகவியலாளர் வன்புணர்ச்சி செய்யப் பட்ட சம்பவம் பற்றி எதுவும் தெரியாதது வியப்புக்குரியது. பிபிசி ஒன்றும் நடுநிலை ஊடகம் அல்ல. அதுவும் ஒரு பக்கச் சார்பான கதைகளை மட்டுமே பரப்பும், ஒரு பிரச்சார ஊடகம் தான்.
Monday, March 10, 2014
லிபியாவில் ஒரு இசைப்பிரியா!
இசைப்பிரியா, ஹலா மிஸ்ராதி ஆகிய இரண்டு பெண்களினதும் வாழ்க்கை மட்டுமல்ல, முடிவும் ஒரே மாதிரி அமைந்துள்ளது ஆச்சரியத்திற்குரியது. கடாபியால் சீரழிக்கப் பட்ட பெண்கள் பற்றிய ஆவணப் படம் எடுத்த பிபிசி தொலைக்காட்சிக்கு, லிபியாவில் ஒரு பெண் ஊடகவியலாளர் வன்புணர்ச்சி செய்யப் பட்ட சம்பவம் பற்றி எதுவும் தெரியாதது வியப்புக்குரியது. பிபிசி ஒன்றும் நடுநிலை ஊடகம் அல்ல. அதுவும் ஒரு பக்கச் சார்பான கதைகளை மட்டுமே பரப்பும், ஒரு பிரச்சார ஊடகம் தான்.
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Wednesday, January 29, 2014
"லிபிய முள்ளிவாய்க்காலில்" குதறப் பட்ட கடாபியின் பெண் போராளிகள்
சிறிலங்கா, லிபியா ஆகிய இரண்டு நாடுகளிலும் நடந்த இறுதிப் போர்களின் முடிவு ஒரே மாதிரி அமைந்துள்ளது. போர்க்குற்றங்களும் ஒரே தன்மை கொண்டவையாக உள்ளன. ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகள், போர்க்குற்றங்களுக்கு சிங்களப் இராணுவம் குற்றவாளிகள் என்றால், லிபியாவில் நடந்த இனப்படுகொலை போர்க்குற்றங்களுக்கு, ஸ்ரீலங்கா அரசின் எஜமானர்களான நேட்டோ படைகள் குற்றவாளிகளாக இருந்துள்ளனர். கடாபிக்கு எதிராக போரிட்ட "கிளர்ச்சிக் குழு", உண்மையில் நேட்டோப் படைகளின் கூலிப் படையாக செயற்பட்டது.
கடாபியின் மெய்ப் பாதுகாவலர்களான பெண் இராணுவ வீரர்கள், நேட்டோப் படையின் கூலிப் படையினரால், கொடூரமாக படுகொலை செய்யப் பட்டனர்.கடாபி பிடிபடுவதற்கு முன்னரே, அவர் தனது பெண் மெய்ப் பாதுகாவலர்களை, எங்காவது தப்பியோடுமாறு கலைத்து விட்டார். ஆனால், "லிபிய முள்ளிவாய்க்கால்" பகுதியில் இருந்தும் யாருமே உயிரோடு தப்ப முடியவில்லை.
தற்போது, மேற்கத்திய ஊடகவியலாளர்களும் "கடாபியின் விபச்சாரிகள்" பற்றிய கதைகளை வாங்கி, சர்வதேச மட்டத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அண்மையில், BBC தொலைக்காட்சி, இன்னும் ஒரு படி மேலே சென்று, பழமைவாதிகளின் பெண்களுக்கு எதிரான அவதூறுகளை தொகுத்து, ஒரு ஆவணப் படமாக தயாரித்துள்ளது. (Mad Dog: Gaddafi's Secret World) இது தான், மேலைத்தேய ஜனநாயக நாடுகளின் "பெண் உரிமை."
உண்மையில், கடாபியின் பெண் போராளிகளுக்கு என்ன நடந்தது? தனது ஆண் நண்பருடன் தப்பிச் செல்ல முயன்ற ஒருவர், கிளர்ச்சிப் படைகளால் கைது செய்யப் பட்டு, இருவரும் சுட்டுக் கொல்லப் பட்டனர். சில மெய்ப் பாதுகாவர்கள், மாறுவேடம் பூண்டு, மக்களோடு மக்களாக வெளியேற முயன்றார்கள். ஆனால், அவர்களும் அகப்பட்டுக் கொண்டனர். நேட்டோ தலைமையிலான கூலிப் படையினர், அந்த இளம் பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கி, சித்திரவதை செய்து கொன்றனர். அவர்களது சடலங்கள்,புதர்களுக்குள் வீசப் பட்டு, நாட்கணக்காக அழுகி நாறின.
லிபிய போர்க்குற்றங்கள், சர்வதேச நீதிமன்றம் ஒன்றில் விசாரணைக்கு கொண்டு வரப் பட்டால், நேட்டோ படைகளின் பெயரும் கெட்டுப் போகும். ஏனென்றால், லிபியாவின் இறுதிப் போரில் நடந்த இனப் படுகொலைக்கு, நேட்டோப் படைகளும் பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.
2.லிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்
3.இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எதிர்காலம்
4."காமக் கொடூரன் கடாபியின் கன்னி வேட்டை!" - ஒரு BBC ஆபாசப் படம்!!
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Tuesday, January 28, 2014
"காமக் கொடூரன் கடாபியின் கன்னி வேட்டை!" - ஒரு BBC ஆபாசப் படம்!!
Gaddafi's Harem நூலை எழுதிய Annick Cojean, தனக்கு கிடைத்த தகவல்களை "உறுதிப் படுத்துவதற்காக" பிரான்சில் வாழும் ஒருவரிடம் விசாரித்து இருக்கிறார். அவர் யார் என்றால், கடாபியின் ஆட்சியை கவிழ்க்க போரிட்ட கிளர்ச்சிக் குழுவின் உறுப்பினர். (இந்த தகவலை சம்பந்தப் பட்ட எழுத்தாளரே, ஒரு பத்திரிகை பேட்டியில் கூறி இருந்தார்.)
என்ன இருந்தாலும், ஆபாசப் படங்கள், ஆபாசக் கதைகள், எந்தக் காலத்திலும் அமோகமாக விற்பனையாகும். அதன் மூலம், மக்களுக்கு கிடைக்க வேண்டிய, பிரயோசமான தகவல்களை இருட்டடிப்பு செய்ய முடியும். பாலியல் வேட்கை நிரம்பிய மக்களை காலம் முழுவதும் முட்டாள்களாக வைத்திருக்க முடியும்.
லிபியா தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.லிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது!
2.லிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்
3.இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எதிர்காலம்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Thursday, October 27, 2011
இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட புதிய லிபியாவின் எதிர்காலம்

"எனது மரணத்தை விட, லிபியாவின் எதிர்காலம் குறித்து தான் அதிகம் கவலைப் படுகிறேன்." - கடாபி இறப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் கூறியது. கடாபியின் பாதுகாப்பு அதிகாரி மன்சூர், அல் அராபியா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் இருந்து. கடந்த சில மாதங்களாக, லிபியாவில் யுத்தம் காரணமாக பெருமளவு மக்கள் கொல்லப்பட்டதையிட்டு கடாபி வருத்தமடைந்திருந்தார், என்றும் மன்சூர் மேலும் தெரிவித்தார். அப்போது இடைமறித்த அல் அராபிய செய்தியாளர், "50000 பேரை சாதாரணமாக கொன்று குவித்த ஒருவர், தனது செயலுக்கு வருந்துவதாக கூறுவது ஆச்சரியமளிக்கிறது." என்றார். அதற்கு பதிலளித்த மன்சூர், "அல் அராபியா போன்ற ஊடகங்களே இவ்வாறான பொய்களை பரப்பி வந்துள்ளன." என்று சாடினார்.
தகவல் தொடர்பு சாதனங்களால் ஆளப்படும் உலகில், போரில் முதல் பலியாகும் உண்மையைக் கண்டறிவது எளிதான காரியமல்ல. லிபியாவில் கிளர்ச்சி ஆரம்பமாகிய முதல் நாளில் இருந்தே, அனைத்து லிபியர்களும் கடாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வதைப் போன்ற பிரமையை ஊட்டி வளர்த்தன. அரசுக்கு எதிராக கலகம் செய்தவர்களை அடக்குவதற்கு கடாபி இராணுவத்தை அனுப்பிய பொழுது, அது "லிபிய இராணுவமல்ல, மாறாக கூலிப்படை." என்று அறிவித்தார்கள். கடாபியிடம், "ஆப்பிரிக்க கருப்பினத்தவர்களைக் கொண்ட கூலிப்படை இருப்பதாகவும், அவர்களே ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் மீது அடக்குமுறை பிரயோகிப்பதாகவும்," மதிப்புக்குரிய ஊடகங்கள் கூட செய்தி வாசித்தன. கறுப்பர்களுக்கு எதிரான லிபியர்களின் இனவெறி சர்வதேச ஊடகங்களிலும் எதிரொலித்தது.
கடாபியின் மரணத்திற்குப் பிறகு லிபியா எப்படி இருக்கின்றது? அநேகமாக, ஊடகங்கள் லிபியா குறித்து செய்தி அறிவிப்பதை இனிமேல் நிறுத்தி விடலாம். லிபியர்கள் எந்த விதக் குறையுமற்று, சுதந்திரமாக, சுபீட்சத்துடன் வாழ்வதாக நாமும் நினைத்துக் கொள்ளலாம். ஆனால், பிரச்சினைகள் இனிமேல் தான் பூதாகரமாக வெளிக்கிளம்ப இருக்கின்றன. அரபு மொழி பேசும் வட ஆப்பிரிக்க நாடுகளில் லிபியா மிகக் குறைந்தளவு சனத்தொகையைக் கொண்டுள்ளது. இருப்பினும், 140 இனக்குழுக்களைக் கொண்ட சமுதாயத்தில் ஒற்றுமையைக் கட்டுவது சுலபமான காரியமல்ல. 40 க்கும் குறையாத கிளர்ச்சிக் குழுக்கள், கடாபிக்கு எதிராக போரிட்டன. இசுலாமிய மத அடிப்படைவாதிகள், முன்னை நாள் அரச படையினர், இனக்குழுக்களை பாதுகாக்கும் ஆயுததாரிகள் என்று பலதரப் பட்டவர்கள். கடாபியின் கொடுங்கோல் ஆட்சி மீதான வெறுப்பு மட்டும் இவர்களை போராடத் தூண்டவில்லை. தாராளமயப் படுத்தப் பட்ட "கடாபியின் இஸ்லாத்தை" கடும்போக்காளர்கள் அங்கீகரிக்கவில்லை. அதே போல, கடாபியின் "ஆப்பிரிக்க சகோதரத்துவம்" இனவெறியர்களின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது.
கறுப்பின ஆப்பிரிக்கர்களையும் சகோதரர்களாக மதித்து, "ஆப்பிரிக்க ஒன்றியம்" உருவாக்க பாடுபட்ட கடாபியின் கொள்கைக்கு நேர் எதிரானவர்கள், இந்தப் புரட்சிப் படையினர். லிபியாவிற்கு தெற்கில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் மட்டும் கறுப்பினத்தவர்கள் வாழவில்லை. "லிபியாவின் எல்லைகளுக்குள் வாழும் கறுப்பின பிரஜைகள் குறித்து," இனி உலகம் கேள்விப் படப் போவதில்லை. ஏனெனில் அவர்கள் யாவரும் "புரட்சிப் படையினரால்" இனச் சுத்திகரிப்பு செய்யப் பட்டு விட்டனர். சில அக்கறையுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் விசாரித்த பொழுது, "கருப்பர்கள் எல்லோரும் நைஜருக்கு அகதிகளாக சென்று விட்டனர்." என்று பதிலளிக்கப் படுகின்றது. லிபியப் பிரஜைகளான கறுப்பினத்தவர்கள் மட்டும் இனச் சுத்திகரிப்பு செய்யப் படவில்லை. லிபியாவில் பல ஆப்பிரிக்க நாட்டவர்கள், கூலியாட்களாக, அகதிகளாக வாழ்ந்தனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு மில்லியன் அளவில் இருக்கும். வளைகுடா நாடுகளைப் போல, ஆப்பிரிக்க கூலிகளின் உழைப்பில் லிபியப் பொருளாதாரம் செழித்துக் கொண்டிருந்தது. அவர்களை விட, கடல் கடந்து ஐரோப்பா செல்வதற்காக வந்து குவிந்த ஆப்பிரிக்க அகதிகளுக்கும் லிபியாவில் தற்கால புகலிடம் கிடைத்தது.
"லிபியப் புரட்சி" ஆரம்பமாகிய அன்றிலிருந்து, லிபியாவில் சட்டம், ஒழுங்கு குலைந்து விட்டது. யார் வேண்டுமானாலும், எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அராஜக சூழல் நிலவியது. "புரட்சிப் படையினர்" கடாபியின் விசுவாசிகளை மட்டும் வேட்டையாடவில்லை. கரு நிற மேனியைக் கொண்ட மக்களையும் நர வேட்டையாடினார்கள். போர் ஆரம்பமாகியவுடன், அயல் நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்தவர்களில் பெரும்பான்மையானோர் கறுப்பினத்தவர்கள். தற்போது போர் ஓய்ந்த பின்னர், அங்கு நடந்த அக்கிரமங்கள் மெல்ல மெல்ல வெளிவருகின்றன. "புரட்சிப் படையினரின்" முகாம்களை துப்புரவு படுத்தவும், கடினமான பணிகளை செய்யவும் கறுப்பின ஆண்கள் அடிமைகளாக வேலை வாங்கப் பட்டுள்ளனர். போரிட்டுக் களைத்த "புரட்சிக் காரர்களின்" பாலியல் இச்சையை தீர்த்துக் கொள்வதற்கு கறுப்பின பெண்கள் பயன்பட்டுள்ளனர்.
பிரத்தியேக "அகதி முகாம்களில்" தனியாக பெண்களை அடைத்து வைத்திருந்துள்ளனர். "அகதி முகாம்" என்று அழைக்கப்பட்ட வதை முகாம்களை பார்வையிட, செஞ்சிலுவை சங்கத்தினர் வந்து போவதுண்டு. முகாம் பொறுப்பாளருடன் "பாதுகாப்பு ஏற்பாடுகளை" பற்றி மட்டும் பேசி விட்டு செல்வார்கள். முகாம்களை அண்டி வாழும் குடியிருப்பாளர்கள், அங்கு நடந்த அக்கிரமங்களை விபரிக்கின்றனர். "மாலை நேரங்களில் நீங்கள் இங்கே நின்றால் அந்தக் காட்சிகளைக் காணலாம். புரட்சிப் படையினர் துப்பாக்கி வெட்டுகளை தீர்த்துக் கொண்டே சத்தமிட்ட படி வருவார்கள். பெண்களை அள்ளிக் கொண்டு செல்வார்கள்."
துப்பாக்கிகளுடன் திரியும் "புரட்சிப் படையினர்" மட்டும் இவ்வாறான அத்துமீறல்களில் ஈடுபடுவதில்லை. சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து விட்ட நிலையில், சாதாரண இளைஞர்களும் ஆப்பிரிக்க பெண்களை பாலியல் பண்டமாக நுகர்கின்றனர். புரட்சிப் படையினர் லிபியாவில் கொண்டு வந்த புரட்சி இது தான். அகதி முகாமை, இலவச விபச்சார விடுதியாக மாற்றிய சாதனை, புரட்சி அல்லாமல் வேறென்ன? கடாபியின் ஆட்சிக் காலத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த கமேரூன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்தார். "அப்போதெல்லாம் வேலை செய்யும் இடங்களில், சில எஜமானர்கள் அடிப்பார்கள். சிலர் சம்பளம் கொடுக்க மாட்டார்கள். ஆனால், இன்றுள்ள நிலைமை மிக மோசமானது. எல்லா லிபியர்களும் நிறவெறியர்களாக காணப்படுகின்றனர். ஆப்பிரிக்கர்கள் எல்லோரும் லிபியாவை விட்டு வெளியேறி விட்டனர்."

தவேர்கா நகரில் வாழ்ந்த மக்கள், "கறுப்பு லிபியர்கள்" என்பது குறிப்பிடத் தக்கது. லிபிய பிரஜைகளான இவர்கள், சஹாரா பாலைவனவாசிகளான துவாரேக் இனத்தை சேர்ந்தவர்கள். இவர்களது மூதாதையர், நாடோடிகளாக வாழ்ந்தவர்கள். சஹாரா பாலைவனத்தின் வணிகப் போக்குவரத்து, அவர்களது பரம்பரைத் தொழில். கடாபியின் ஆட்சிக் காலத்தில், அந்த இனத்தவருக்கென ஒரு சிறப்புப் படையணி உருவாக்கப் பட்டது. இரு தசாப்தங்களுக்கு முன்னர், சாட் நாட்டுடன் எல்லைத் தகராறு காரணமாக போர் மூண்டது. தென் எல்லையில், ஒரு கறுப்பு ஆப்பிரிக்க நாட்டுடனான மோதலின் போது, துவாரக் சிறப்பு படையணியினர் ஈடுபடுத்தப் பட்டனர். இறுதியாக நடந்த, உள்நாட்டுப் போரில், கிளர்ச்சியாளர்களை ஒடுக்குவதற்கு, கடாபியின் விசுவாசத்திற்குரிய துவாரக் படைகள் பயன்படுத்தப் பட்டன. குறிப்பாக, மிஸ்ராதா யுத்தத்தில் அவர்களின் பங்களிப்பு கணிசமான அளவில் இருந்துள்ளது.
தவேர்கா நகரத்தை சேர்ந்த கறுப்பின படையினரின் செயலுக்கு பழிவாங்குவதற்காகவே, அந்த நகர மக்களை வெளியேற்றியதாக "புரட்சிப் படையினர்" தெரிவிக்கின்றனர். தமது ஊரை சேர்ந்தவர்கள் கடாபியின் இராணுவத்தில் பணியாற்றியதை ஒப்புக் கொள்ளும் தவேர்காவாசிகள், "கிளர்ச்சியாளர் மனதில் ஊறியுள்ள, கறுப்பின மக்கள் மேலான இனவெறி காரணமாகவே" தாம் வெளியேற்றப் பட்டதாக கூறுகின்றனர். போரின் போது நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்து வந்த, "சர்வதேச மன்னிப்புச் சபை" யை சேர்ந்த ஆர்வலர் ஒருவரும், தவேர்கா மக்களின் வெளியேற்றம் குறித்து ஆராய்ந்துள்ளார்.
சுமார் இருபதாயிரம் தவேர்காவாசிகள், திரிபோலியில் உள்ள அகதிமுகாமில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. சில மனித உரிமை ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், அங்கு சென்று விசாரித்துள்ளனர். அவர்கள் அங்கு சென்ற வேளை, முகாம் வெறிச்சோடிப் போய்க் கிடந்தது. புரட்சிப் படையினரைக் கேட்டால், "அந்த மக்கள் யாவரும் நைஜருக்கு சென்று விட்டார்கள்." என்று அலட்சியமாக கூறுகின்றனர். மேற்கொண்டு எந்த வித தடயமும் கிடைக்காத நிலையில், தவேர்கா மக்களுக்கு என்ன நடந்தது என்ற மர்மம் நீடிக்கின்றது. இறுதி யுத்தம் நடந்த சியேர்ட் நகரில், மனிதப் புதைகுழிகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன. கடாபிக்கு விசுவாசமானவர்கள், சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப் பட்டிருப்பதாக, மனித உரிமை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அது போல, தவேர்கா நகரில் வாழ்ந்த, 20000 கறுப்பின மக்களும் எங்காவது கொன்று புதைக்கப் பட்டிருக்கலாம்.
லிபியாவின் புதிய ஆட்சியாளர்கள் புரிந்துள்ள போர்க்குற்றங்கள் பற்றிய விபரங்கள், மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடாபியும், அவரது மகன் முத்தாசினும் உயிருடன் பிடிபட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட விடயம், வீடியோ காட்சிகளாக உலகெங்கும் வலம் வந்தன. இது குறித்தும், நூற்றுக் கணக்கான கடாபி விசுவாசிகளின் படுகொலை குறித்தும் விசாரணை தேவை என்று, மனித உரிமை ஸ்தாபனங்கள் அழுத்தம் கொடுக்கின்றன. மேற்குலகம் அவற்றை எல்லாம் கண்டும் காணாதது போல நடந்து கொள்கின்றது. புதிய அரசானது, இஸ்லாமிய மத அடிப்படைவாத போக்கில் செல்வதையும், யாரும் பெரிது படுத்தவில்லை.
இருப்பினும், எதிர்காலத்தில் காட்சிகள் மாறலாம். எண்ணெய் வளத்தை பங்கு போடுவதில் தகராறு ஏற்பட்டால், போர்க்குற்ற விசாரணை சம்பந்தமான சர்ச்சைகள் எழலாம். இரண்டு வருடங்களுக்கு முன்னர், புலிகளை அழிப்பதற்கு சிறிலங்கா அரசுக்கு பக்கபலமாக நின்ற மேற்குலக நாடுகள், பின்னர் தமது நண்பர்களை போர்க்குற்ற விசாரணைக்கு அழைத்து அழுத்தம் கொடுத்தன. இலங்கையில் நாம் ஏற்கனவே கண்ட காட்சிகள், லிபியாவில் நடந்து முடிந்துள்ளன. வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலித் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் போன்றே, கடாபியின் முடிவும் அமைந்திருந்ததை, மனித உரிமை நிறுவனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. மேற்கத்திய நாடுகளுடன் முறுகல் நிலை தோன்றினால், அவர்கள் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்குவதற்கு புதிய லிபிய அரசு தயாராகி வருகின்றது.
புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கி வந்த "லிபிய இஸ்லாமிய போராட்டக் குழு", கடாபிக்கு எதிரான கிளர்ச்சியில் முன்னணிப் பங்கு வகித்துள்ளது. இஸ்லாமிய மத அடிப்படைவாத கொள்கை கொண்ட, அல் கைதாவுடன் இணைந்து போராடிய, அந்த அமைப்பின் முக்கிய தலைவர் தாய்லாந்தில் பிடிபட்டார். பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ், அமெரிக்கர்களால் கடத்தப்பட்டு, சி.ஐ.ஏ.யினால் இரகசியமாக சித்திரவதை செய்யப்பட்டார். பின்னர், சி.ஐ.ஏ. தனது கைதியை கடாபியின் கையில் ஒப்படைத்தது. அந்த "சர்வதேச பயங்கரவாதி" வேறு யாருமல்ல, கடாபிக்கு எதிரான புரட்சிப் படையின் தலைமைத் தளபதி பெல்ஹாஜ்! மேற்குறிப்பிட்ட விபரங்கள் அடங்கிய ஆவணங்கள், கைவிடப் பட்ட பிரிட்டிஷ் தூதரகத்தில் கண்டெடுக்கப் பட்டன. அந்த ஆவணங்களை ஆதாரமாகக் கொண்டு, வழக்குப் தொடுக்கப் போவதாக, பெல்ஹாஜ் சூளுரைத்துள்ளார். லிபியாவின் புரட்சியாளர்களுக்கும், மேற்குலகுக்கும் இடையிலான தேனிலவு விரைவில் முறியலாம். அப்போது லிபியாவில் எழும் நெருக்கடிகள், இன்றுள்ளதை விட மிக மோசமாக இருக்கும்.
மேலதிக தகவல்களுக்கு:
1.Ethnic Hatred Rooted in Battle for Misrata Underlines Challenges the Nation Faces After Gadhafi
2.MI6 role in Libyan rebels' rendition 'helped to strengthen al-Qaida'
3.Libyan rebels round up black Africans
4.African women say rebels raped them in Libyan camp
5.Empty village raises concerns about fate of black Libyans
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Friday, April 01, 2011
தயவுசெய்து, "NATO" விடமிருந்து லிபிய புரட்சியைக் காப்பாற்றுங்கள்

லிபிய புரட்சியாளர்களின் தலைமையகமாக கருதப்படும், பெங்காசி நகர வழக்கறிஞர்களின் நேர்காணலை நெதர்லாந்து தொலைக்காட்சி ஒளிபரப்பியது. "கடாபியின் சட்டங்களில் என்ன குறை கண்டீர்கள்?", என்ற கேள்விக்கு அவர்களது பதில் இவ்வாறு அமைந்திருந்தது. "கடாபியின் சட்டங்கள் இஸ்லாமிய ஷரியா அடிப்படையில் அமைந்திருக்கவில்லை. உதாரணத்திற்கு திருட்டுக் குற்றச்சாட்டுக்குள்ளான நபரின் கையைத் துண்டிப்பதிலை." (Niuewsuur, 30-03-2011)
லிபிய மக்கள் எழுச்சி ஆரம்பித்த காலங்களில், மேலைத்தேய ஊடகவியலாளர்கள் கடாபியை நேர்கண்டார்கள். "கிளர்ச்சியாளர்களை அல்கைதா" என்று வர்ணித்த கடாபிக்கு பைத்தியம் என்று பரிகசித்தார்கள். மேற்குலக மக்களும் கடாபியின் "அல்கைதா நகைச்சுவை" கேட்டு சிரிக்க வைக்கப் பட்டார்கள். மேற்குலக அரசுகளும் சேர்ந்து சிரித்தார்களே தவிர, எதையும் மறுக்கவில்லை. ஆமாம், லிபிய கிளர்ச்சியில் அல்கைதா சம்பந்தப்படவில்லை என்று இது வரை எந்தவொரு மேற்குலக தலைவரும் மறுத்துரைக்கவில்லை. இப்போது அமெரிக்காவின் மூத்த அதிகாரி ஒருவரே, லிபிய எழுச்சியில் அல்கைதாவின் பங்களிப்பு உள்ளதை ஒத்துக் கொண்டுள்ளார்.Presence of al-Qaeda Seen among Libya's Rebels
2001 ம் ஆண்டு, அமெரிக்கா "அல்கைதா பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" அறிவித்த காலத்தில், கடாபியும் அதனை ஆதரித்தார். அன்றிலிருந்து கடாபி அரசுடன், மேற்குலக நாடுகள் நட்புப் பாராட்ட ஆரம்பித்தன. அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், கடாபியின் பிரத்தியேக ஆலோசகர் ஆனார். லிபியாவின் சிறப்பு அதிரடிப் படைக்கு, பிரிட்டன் பயிற்சி வழங்கியது. பாதுகாப்புத் துறை சம்பந்தமான நவீன தகவல்களைப் பரிமாறிக் கொண்டது. (Libya: Tony Blair agreed to train Gaddafi’s special forces in 'deal in the desert’) ஒரு காலத்தில் மேற்குலகை வெறுத்த கடாபி, அவர்களை நண்பர்களாக்கிக் கொண்ட நாள் முதல் கடாபியின் வீழ்ச்சி ஆரம்பமாகி விட்டது. மேற்குலகின் புத்திமதிகளைக் கேட்டு, நாட்டில் தனியார்மயத்தைக் கொண்டு வந்தார்.(One Day Before Benghazi Rebellion. IMF Commends Qadhafi Government.) இதனால், கடாபியின் குடும்பமும், உறவினர்களும் நாட்டிலேயே பெரும் பணக்காரர்களாக மாறி, பெரும்பான்மை மக்களின் வெறுப்பை சம்பாதித்தார்கள்.
கடாபி ஆட்சியைக் கைப்பற்றிய ஆரம்ப காலங்களில், எண்ணை உற்பத்தி தேசியமயப் படுத்தப் பட்டிருந்தது. கடந்த தசாப்தங்களாக, லிபியாவின் பிரதானமான எண்ணெய் ஏற்றுமதியும் தனியாருக்கு திறந்து விடப்பட்டது. வெளிநாட்டு நிறுவனங்களுடன், கூட்டு ஒப்பந்தம் போட்ட லிபிய அரசு நிறுவனமான TAMOIL மேற்கத்திய நாடுகளில் முதலீடு செய்திருந்தது. இன்று அந்த நிறுவனத்தின் மில்லியன் கணக்கான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகள் தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டதாக கடாபி குமுறியதிலும் உண்மை இல்லாமலில்லை. இருந்த போதிலும், கடந்த வருடம் கடாபி மீண்டும் எண்ணெய் உற்பத்தியை தேசியமயமாக்கப் போவதாக அரசால் புரசலாக கதை அடிபட்டது. நேட்டோவின் இராணுவத் தலையீட்டுக்கு அதுவே முக்கிய காரணமாகக் கருதப் படுகின்றது.
பொருளாதாரத்தை தனியார்மயமாக்கியதால் கூடவே வேலைவாய்ப்பின்மையும், தனிநபர் வருமானத்தில் சரிவும் ஏற்பட்டது. பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்தது. பணக்காரர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே சென்றது. உலகமயமாக்கலின் விதிகளுக்கேற்ப கடாபியும் சோஷலிசத்தை கைவிட்டு விட்டு, முதலாளித்துவத்தை தழுவிக் கொண்ட நாள் முதல், சமூகத்தில் ஏற்பட்ட பிளவு விரிசல் அடைந்து கொண்டே சென்றது. கடாபி உறுதியளித்தவாறு மில்லியன் வீடுகளை கட்டிக் கொடுக்கும் திட்டம் நிறைவேறாததால் ஏற்பட்ட விரக்தியே, கடாபி அரசுக்கு எதிரான முதலாவது மக்கள் எழுச்சிக்கு வழிவகுத்தது.
லிபிய மக்கள் பல்வேறு இனக்குழு சமூகங்களாக பிரிந்துள்ளனர். முதலாளித்துவ பொருளாதார நலன்களை கடாபியின் இனக்குழுவினர் முழுமையாக பயன்படுத்தி வந்துள்ளனர். கிழக்கு லிபியாவை சேர்ந்த இனக்குழுவினர் புறக்கணிக்கப் பட்டதால், வேலையற்றோர் எண்ணிக்கை அங்கே அதிகம். சுருங்கக் கூறின், கடாபியின் அரசுக்கு எதிராக ஆரம்பத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி தனியார்மயமாக்களினால் ஏற்பட்ட விளைவு எனலாம். ஆனால், திடீரென களத்தில் குதித்த இஸ்லாமியவாதிகள் போராட்டத்தின் திசையை மாற்றினார்கள். லிபியாவில் கடின வேலைகளை செய்யும் உழைக்கும் வர்க்கம் முழுவதும் வெளிநாட்டவர்கள். இவர்கள் யாரும் மக்கள் எழுச்சியில் பங்குபற்றவில்லை. மாறாக, நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.
லிபிய கிளர்ச்சி ஆரம்பமாகியதும், கடாபி அரசில் பதவி வகித்த அமைச்சர்கள், அதிகாரிகள், ஜெனரல்கள், தூதுவர்கள் பலர் தமது பதவிகளை விட்டு விலகி கிளர்ச்சியாளர்களுடன் சேர்ந்தார்கள். "கடாபி சொந்த மக்களை குண்டு போட்டுக் கொல்வதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக...", தமது பதவி விலகலுக்கு காரணம் கூறினார்கள். இவர்களின் பின்னணியை ஆராய்ந்தால் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. பலர் கிழக்கு லிபிய இனக்குழுக்களை சேர்ந்தவர்கள் என்பதும், தமது இனக்குழு விசுவாசத்தைக் காட்ட இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துகின்றனர் என்பதும் தற்செயல் அல்ல. லிபிய இராணுவத்தை விட்டு ஓடிப் போய், இன்று கிளர்ச்சிப் படைகளின் கமாண்டராகியுள்ள ஜெனரல் Khalifa Hifter சி.ஐ.ஏ. உளவாளி என நிரூபிக்கப் பட்டவர்.(American media silent on CIA ties to Libya rebel commander) பொருளாதார பிரச்சினைகளுக்கு காரணமான தனியார்மயமாக்கலை அமுல் படுத்திய கடாபியின் அமைச்சரான Mahmoud Jibril, இன்று கிளர்ச்சியாளரின் இடைக்கால அரசாங்கத்தின் முக்கிய தலைவர். நேற்று வரை கடாபியின் சர்வாதிகார ஒடுக்குமுறை ஆட்சிக்கு உறுதுணையாக இருந்த முக்கிய புள்ளிகள், இன்று கிளர்ச்சிக்கு தலைமை தாங்குகிறார்கள். மேற்குலக நாடுகளும், நேட்டோவும் இத்தகைய நபர்களைத் தான் தெரிவு செய்கின்றது. நிச்சயமாக, அது ஜனநாயகத்தை கொண்டு வருவதற்கான முயற்சியாக இருக்க முடியாது. லிபியாவில், கடாபியின் மறைவுக்குப் பின்னர், மீண்டும் ஒரு சர்வாதிகார ஆட்சி ஏற்படப் போவது உறுதி.
லிபியா பற்றிய முன்னைய பதிவுகள்:
லிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Saturday, March 26, 2011
விசேட அறிக்கை: மேற்குலகம் ஆதரிக்கும் லிபிய அல்கைதா

அக்டோபர் 2007, ஈராக்கில் சிரிய எல்லையோர நகரமான Sinjar ரில், அமெரிக்க படைகளின் இராணுவ நடவடிக்கையின் போது பல முக்கிய ஆவணங்கள் அகப்பட்டன. அமெரிக்காவை சேர்ந்த West Point Military Academy அந்த ஆவணங்களை ஆராய்ந்தது. ஈராக்கிற்கு எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அல்கைதாவினால் திரட்டப்பட்டனர், அவர்களின் ஊர், பெயர் விபரங்கள் அந்த ஆவணத்தில் இருந்துள்ளன.

மேற்கத்திய தலையீட்டையும், நேட்டோ படைகளினால் லிபியா விடுதலை விடுதலை செய்யப் படுவதையும் கிளர்ச்சியாளர்கள் எதிர்த்ததில் வியப்பில்லை. கடும்போக்கு இஸ்லாமியவாதிகளான அவர்கள், அமெரிக்கர்களை கொல்வதற்காக ஈராக் சென்றவர்கள். தங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களின் ஆதரவை இழந்து விடும் அச்சம் காரணமாக மறுத்து விட்டார்கள். இருப்பினும் மக்கள் எழுச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே, எகிப்திய இராணுவ அரசு ஆயுதங்களை அனுப்பி வைத்தது. ( Egypt Said to Arm Libya Rebels, Wall Street Journal, March 17, 2011") கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் அனுப்பி உதவுமாறு, ஒபாமா சவூதி அரேபியாவை கேட்டுக் கொண்டார். (“America’s secret plan to arm Libya’s rebels,” Independent, Mach 7, 2011 )
லிபியாவில் கடாபி அரசுக்கு எதிராக Libyan Islamic Fighting Group (LIFG) என்ற தலைமறைவு அமைப்பு இயங்கிக் கொண்டிருந்தது. 2007 ம் ஆண்டு, ஈராக்கில் அல்கைதா தொடர்பின் பின்னர் அது தனது பெயரை Al Qaeda in the Islamic Maghreb (AQIM) என்று மாற்றிக் கொண்டது.
Libyan rebel commander admits his fighters have al-Qaeda links
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Wednesday, March 23, 2011
லிபியா மீதான நேட்டோ ஆக்கிரமிப்பின் ஆரம்பம்

லத்தீன் அமெரிக்க நாடுகள் சில கடாபிக்கு ஆதரவு தெரிவித்தமை கண்டு, நம்மூர் இடதுசாரிகள் கூட அதிருப்தி தெரிவித்தனர். "தனது நாட்டு சொந்தக் குடிமக்களை கொன்று குவிக்கும் சர்வாதிகாரியை எப்படி ஆதரிக்கலாம்?" என்று நீதி கேட்க புறப்பட்டார்கள். தற்போது நேட்டோ படைகளின் குண்டு வீச்சில் லிபிய அப்பாவி பொது மக்கள் மரணமடைவதை கண்டும் காணாது வாளாவிருக்கின்றனர். கடாபியிடம் இருந்து லிபிய மக்களை காப்பாற்ற புறப்பட்ட நேட்டோப் படைகள், அதே மக்களை கொல்வது சரியாகுமா? "ஒரு சர்வாதிகாரியின் இரும்புப் பிடியில் இருந்து நாட்டை விடுவிக்கும் பொழுது, இத்தகைய மக்கள் இழப்பு தவிர்க்க முடியாது" என்று, இப்போது அதற்கு நியாயம் கற்பிப்பார்கள். இதே நியாயத்தை தான் ஆப்கானிஸ்தான், ஈராக் போரின் போதும் கூறினார்கள். தம்மை சர்வாதிகாரத்தில் இருந்து விடுவிக்க வந்த அமெரிக்க படைகளை அந்த மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றிருக்க வேண்டும். மாறாக அந்நிய ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக போராடி மாய்ந்தார்கள். லிபியாவும் இன்னொரு ஈராக்காக, இன்னொரு வியட்நாமாக மாறிக் கொண்டிருக்கிறது.
சதாம் ஹுசைன், கடாபி ஆகியோர் தனது சொந்த மக்களை கொன்று குவித்தார்கள். மக்கள் படுகொலை, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு காரணமாக காட்டப்படுகின்றது. இது பல நூற்றாண்டுகளாக, காலனியாதிக்க காலத்தில் இருந்தே கற்பிக்கப்படும் நியாயம். "இந்தியாவில் வாழும் இந்துக்கள் பெண்களை உயிரோடு எரிக்கும் காட்டுமிராண்டிகள்." "இந்தியப் பெண்களை காப்பாற்றும் நல்லெண்ணத்துடன்" தான் பிரித்தானியா இந்தியாவை தனது காலனியாக்கியது. ஐரோப்பாவில் இதனை "வெள்ளை மனிதனின் கடமை" என்று கூறிக் கொள்வார்கள். அதாவது "காட்டுமிராண்டிகளான இந்தியர்கள், அரேபியர், ஆப்பிரிக்கர்களுக்கு நாகரீகம் கற்றுக் கொடுப்பது" ஐரோப்பியரின் கடமை ஆகுமாம். காலனிய சுரண்டலை நியாயப் படுத்தும் நியாயப் படுத்தும் கதையாடல்கள், இன்று லிபியா வரை தொடர்கின்றது. இன்று மேற்குலக மக்களை மட்டுமல்ல, அனைத்து உலக மக்களையும் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு வசதியாக தொலைத் தொடர்பு ஊடகங்கள் வந்து விட்டன. சி.என்.என்., பி.பி.சி., அல்ஜசீரா எல்லாமே ஏகாதிபத்திய தலையீட்டுக்கு வழி சமைத்துக் கொடுக்கின்றன.
பெப்ரவரி 22 , ஆர்ப்பாட்டம் செய்த லிபிய மக்கள் மீது விமானக் குண்டு வீச்சு நடத்தப் பட்டதாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகவும் செய்தி வாசிக்கப்பட்டது. "கடாபி தனது சொந்த மக்களை கொன்று குவிக்கும் கொடுங்கோலன்..." என்று, படித்தவர் முதல் பாமரர் வரை பேசத் தொடங்கி விட்டனர். இத்தகைய பொது மக்களின் அபிப்பிராயம் மட்டுமே, ஏகாதிபத்திய தலையீட்டுக்கு தேவைப் பட்டது. ஐ.நா. பாதுகாப்புச் சபை சும்மா ஒப்புக்கு கண்டனம் தெரிவித்தால் மட்டுமே போதுமானதாக கருதப் பட்டது. வான் பரப்பில் லிபிய விமானங்கள் பறப்பதை தடை செய்யும் படி தாம் கேட்டதாகவும், அதனையே ஐ.நா. பாதுகாப்புச் சபை வழி மொழிந்ததாகவும் அரபு லீக் தெரிவித்தது. லிபியா மீதான நேட்டோ தாக்குதல் அவர்களும் எதிர்பார்க்காத ஒன்று என்பதையே இது தெளிவாக்குகின்றது. ஏற்கனவே செர்பியா மீதான நேட்டோ தாக்குதல் ஐ.நா. சம்மதமின்றியே நடந்தது. இதன் மூலம், நேட்டோ விரும்பினால் உலகில் எந்த நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தும் என்பது புலனாகின்றது. பெப்ரவரி 22, லிபிய விமானங்கள் வான் தாக்குதல் நடத்தியதாக நிரூபிக்கும், செய்மதிப் படங்கள் எதனையும் தான் பார்க்கவில்லை என்று ரஷ்யா தெரிவித்திருந்தது. நிச்சயமாக ஐ.நா. கூட்டத்திலும் இது விவாதிக்கப் பட்டிருக்கலாம். ஆனால், சாதாரண மக்கள் ஆதாரம் கேட்கப் போகின்றார்களா? ஊடகங்கள் சொல்வதை உண்மை என்று நம்பும் அப்பாவிகள் இருக்கும் வரை அவர்களுக்கென்ன கவலை?
மேற்குலக அரசுகளும், ஊடகங்களும் ஒரு நாளும் பொய் பேசாத உத்தமர்களா? ஈராக்கில் சதாம் ஹுசைன் பேரழிவு தரும் நாசகார ஆயுதங்களை வைத்திருப்பதாக ஒரு பொய்யைக் கூறித் தான், அமெரிக்கா அந்நாட்டின் மீது படையெடுத்தது. அது ஒரு பொய் என்று, முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேர் பின்னர் ஒப்புக் கொண்டார். அமெரிக்கா தமக்கு தவறான தகவல்களை வழங்கியதாக, ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்கள் தமது மக்களிடம் மன்னிப்புக் கோரின. லிபியா குறித்து ஊடகங்கள் வழங்கிய தவறான தகவல்களை, இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து ஒப்புக் கொள்ளப் போகிறார்கள்? காலம் பிந்தி வெளிவரும் உண்மை, அதனது முக்கியத்துவத்தை இழந்து விட்டிருக்கும். அந்நேரம் லிபியா அமெரிக்காவின் காலனியாகி விட்டிருக்கும். லிபியாவின் எண்ணெய்க் கிணறுகளை அமெரிக்க நிறுவனங்கள் அடி மாட்டு விலைக்கு வாங்கி விட்டிருக்கும்.
அயல் நாடுகளான துனிசியாவிலும், எகிப்திலும் மக்கள் எழுச்சி இடம்பெற்றதனால், லிபியாவையும் அதன் தொடர்ச்சியாக பார்ப்பது தவறு. அந்த நாடுகளில் வீதிக்கு வந்து போராடிய மக்கள், அரச அடக்குமுறையை அஹிம்சா வழியில் எதிர்த்து நின்றனர். இராணுவத்தை பகைப்பதும், திருப்பித் தாக்குவதும் போராட்டத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையாக கருதினார்கள். சுடுவதற்கு மட்டுமே பயிற்றப்பட்ட படைகளையும், கனரக ஆயுதங்களையும், கண்டு அஞ்சாது வெறுங்கையுடன் எதிர்த்து நின்றதாலேயே உலக மக்களின் அனுதாபத்தை பெற்றார்கள். லிபியாவிலோ நிலைமை வேறு விதமாக இருந்தது. மக்கள் எழுச்சி ஏற்பட்ட முதல் நாளிலேயே சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகளில் ஆயுதங்கள் காணப்பட்டன. ஆர்ப்பாட்டம் தொடங்கி ஒரு சில நாட்களிலேயே, நவீன ஆயுதங்கள் புழக்கத்திற்கு வந்தது எப்படி என்ற கேள்விக்கு யாரிடமும் விடையில்லை. அவ்வாறான கேள்விகள் எதுவும் உங்கள் மனதில் எழுந்து விடக் கூடாது, என்ற அவசரத்தில் ஊடகங்கள் கதை புனைய ஆரம்பித்தன. லிபிய இராணுவம் முழுவதும் ஆர்ப்பாட்டக் காரர்கள் பக்கம் சேர்ந்து விட்டது போன்ற அர்த்தம் தொனிக்கும் செய்திகளைக் கூறின. கடாபி ஆப்பிரிக்க கூலிப்படைகளை அனுப்பி ஆர்ப்பாட்டத்தை ஒடுக்கிய கதை பரப்பப் பட்டது. ஆனால் ஓரிரு வாரங்களில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருந்த நகரங்களை, கடாபிக்கு விசுவாசமான படைகள் சண்டையிட்டு மீட்டன. அப்போது அந்த இராணுவம் எங்கிருந்து வந்தது?
லிபியாவின் சகாராப் பாலைவனத்தில் வாழும் துவாரக் நாடோடி மக்களும், சாட் நாட்டின் எல்லையோரமாக வாழும் மக்களும் கறுப்பினத்தவர்கள் தாம். அவர்களும் லிபிய பிரஜைகள் தாம். லிபிய இராணுவத்தில் கறுப்பின வீரர்கள் காணப்படுவது ஒன்றும் புதுமையல்ல. கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட, அல்லது கொல்லப் பட்டதாக தெரிவிக்கபடும் ஆபிரிக்க கூலிப்படையினரின் விபரங்கள் இதுவரை ஊர்ஜிதப் படுத்தப் படவில்லை. அதற்கு மாறாக, லிபியாவில் கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்த ஆபிரிக்கர்கள் பலர் ஆர்ப்பாட்டக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டனர். "லிபிய மக்கள் விடுதலை செய்த" பகுதிகளில் வாழ்ந்த கறுப்பினத்தவர்கள் அனைவரும் விரட்டியடிக்கப் பட்டனர். எகிப்திலும் துனிசியாவிலும் அடைக்கலம் புகுந்த மக்களில் பெரும்பான்மையானோர் வெளிநாட்டு தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நிறவெறிப் படுகொலைகள் நடந்துள்ளன. ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்று பிடிபட்ட ஆப்பிரிக்க அகதிகளை அடைத்து வைத்திருந்த சிறைச்சாலைகளில் குண்டுகள் வீசப்பட்டன. சிறைக்குள் இருந்த நூற்றுக் கணக்கான அகதிகள் மரணமடைந்திருக்கலாம் என்று பிரபல இத்தாலி பத்திரிகை ஒன்று தெரிவித்தது. கடாபியின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ந்து எழுந்த மக்கள், இனப்படுகொலையாளர்களாக மாறியது எப்படி? சர்வதேச ஊடகங்கள் ஏன் இந்த இனப்படுகொலை பற்றிய செய்திகளை வெளியிடவில்லை?
கடாபி எதிர்ப்பாளர்கள் ஒடுக்குமுறைக்கு முகம் கொடுக்க முடியாமல் மேற்குலக நாடுகளில் அடைக்கலம் கோரியிருந்தனர். அவர்களின் அரசியல் அமைப்பான "லிபிய தேசிய மீட்பு முன்னணி", சி.ஐ.ஏ. இடமிருந்து நிதியுதவி பெற்றுக் கொண்டமை ஒன்றும் இரகசியமல்ல. அவர்களது அரசியல் கொள்கை, அல்கைதாவினதைப் போன்று, இஸ்லாமிய அடிப்படைவாதத்தைக் கொண்டிருந்தது. சோவியத் காலத்தில் ஆப்கான் முஜாகிதினை ஊட்டி வளர்த்த சி.ஐ.ஏ., கடாபி எதிர்ப்பாளர்களின் கொள்கை என்னவென்று பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பெங்காசியின் சில பகுதிகளிலும், தொவ்றுக் நகரிலும் அவர்களது ஆதரவாளர்கள் அதிகம் என்பது கடாபி அரசுக்கு ஏற்கனவே தெரிந்த விடயம்.
பெங்காசி நகரம் கிளர்ச்சியாளர்களின் தலைமையகமாக இருப்பது ஒன்றும் தற்செயல் நிகழ்வல்ல. கடாபியால் பதவியிறக்கப்பட்ட மன்னருக்கு விசுவாசமான மக்கள் அந்தப் பிராந்தியத்தில் தான் அதிகம். மேலும் எண்ணெய், எரிவாயு குழாய்கள் வந்து முடியுமிடமும், ஏற்றுமதியாவதும் பெங்காசியில் இருந்து தான். அதனால் பல மேற்கத்திய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களும் அங்கே தலைமையகத்தைக் கொண்டுள்ளன. நேட்டோ போர் நடவடிக்கைகள் ஆரம்பமாக முன்னரே, சில மேற்கத்திய இராணுவ ஆலோசகர்கள் கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்தும் நோக்குடன் சென்றுள்ளனர். ஒரு ஹெலிகாப்டரில் சென்ற நான்கு நெதர்லாந்து போர்வீரர்கள் கடாபிக்கு விசுவாசமான படைகளால் பிடிக்கப்பட்டு விடுவிக்கப் பட்டனர். லிபியாவில் மாட்டிக் கொண்ட தமது நாட்டு பிரஜைகளை மீட்கச் சென்றதாக நெதர்லாந்து அரசு முதலில் கூறியது. ஆயினும் வெளிநாட்டவர்களை திரிபோலி விமான நிலையம் ஊடாக மீட்டெடுத்து செல்லக் கூடிய வசதி இருந்த காலத்தில், லிபியாவுக்குள் இரகசியமாக நுழைய வேண்டிய தேவை என்ன?
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.
Thursday, March 10, 2011
லிபியா: இன்னொரு ஈராக் உருவாகின்றது!

கிளர்ச்சியாளர்கள் போன்று நடித்த கடாபியின் ஆதரவாளர்கள், கிளர்ச்ச்சிப் படைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விட்டிருந்தனர். மேற்கத்திய தொலைக்காட்சி கமெராக்களுக்கு முன்னால் கிளர்ச்சிக்குழு தலைவர் கூறுகிறார். "எங்களுக்கு எந்தவொரு அந்நிய உதவியும் தேவையில்லை. லிபிய மக்கள் பார்த்துக் கொள்வார்கள். சம்பவம் நடந்து அடுத்தடுத்த நாள், லிபியாவுக்குள் புகுந்த சில பிரிட்டிஷ் படை வீரர்களை, கிளர்ச்சிக் குழு கைது செய்கின்றது. மேற்கத்திய நாடுகளின் தலையீடு, கிளர்ச்சியாளர்கள் சந்தித்த மிகப் பெரிய நெருக்கடி. "லிபியாவில் ஏகாதிபத்திய தலையீடு. கிளர்ச்சியாளர்களுக்கு மேலைத்தேய நாடுகள் ஆயுத, நிதி உதவி வழங்குகின்றன." இவையெல்லாம் நிரூபணமானால், லிபிய மக்கள் கிளர்ச்சிக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்தி விடுவார்கள். யாரின் சர்வாதிகாரத்திற்கு எதிராக கிளர்ச்சி வெடித்ததோ, அதே கடாபியின் பக்கம் மக்கள் ஆதரவு சாய்ந்து விடும்.
துனிசியா, எகிப்து போன்ற வெற்றியடைந்த புரட்சிகளைக் கண்ட நாடுகளை தனது அருகாமையில் கொண்டுள்ள லிபியாவுக்கு, மக்கள் எழுச்சி சற்று தாமதமாகத் தான் வந்தது. "அவர்களுக்கு (லிபியர்களுக்கு) குறை ஏதும் இல்லை. எங்களைப் பார்த்து பின்பற்றுகிறார்கள்." என்றார்கள் எகிப்திய மக்கள் எழுச்சியில் பங்குபற்றிய ஆர்வலர்கள். ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள், எகிப்தில் கிடைப்பதை விட மூன்று மடங்கு அதிக ஊதியத்திற்கு லிபியாவில் வேலை பார்த்து வந்தார்கள். லிபிய பாடசாலைகளில், பெரும்பாலும் எகிப்திய ஆசிரியர்களே பணியில் அமர்த்தப்பட்டனர். லிபிய மக்கள் எழுச்சி விரைவில் உள்நாட்டுப் போராக மாறியதில், எகிப்திய தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்து நாடு திரும்ப நேரிட்டது. முழு ஆப்பிரிக்க கண்டத்திலும், லிபியர்களின் தனிநபர் வருமானம் அதிகம். அவர்கள் பெரும்பாலும் உடல்சார்ந்த உழைப்பில் ஈடுபடுவதில்லை. கட்டுமானப் பணிகளில், துப்பரவுப் பணிகளில் எந்தவொரு லிபியப் பிரஜையும் வேலை செய்ய விரும்புவதில்லை. அத்தகைய அசுத்தமான, கடினமான பணிகளை செய்வதற்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஒப்பந்தக் கூலிகளாக அமர்த்தப்படுகின்றனர். சுருக்கமாக சொன்னால், துபாய் போன்ற வளைகுடா அரபு நாடுகளின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது.
கடாபி, நாற்பதாண்டுகளுக்கு முன்னர், அதிக இரத்தம் சிந்தாத சதிப்புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தார். அன்றிருந்த மன்னர் மீது அரச படையினர் மத்தியிலேயே அதிருப்தி நிலவியதால், கடாபியின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை எதிர்க்க ஆளிருக்கவில்லை. ஆட்சியைக் கைப்பற்றிய கடாபி, நாட்டின் முக்கிய ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித்தரும் எண்ணெய் உற்பத்தியை தேசிய மயப்படுத்தினார். எண்ணெய் விற்று கிடைத்த பணத்தை மக்கள் நலன் பேணும் திட்டங்களில் செலவளித்தார். அப்போது இரண்டு மில்லியன் சனத்தொகையைக் கொண்ட லிபியா, இலாபப் பணத்தை மக்களுக்கு பகிர்ந்து கொடுப்பதில் சிரமமேதும் இருக்கவில்லை. இதனால் நாடு துரித கதியில் அபிவிருத்தியடைந்தது. கடாபியின் புரட்சிக்கு முன்னர், பெரும்பான்மை லிபியர்கள் வறுமையில் வாடினார்கள். பாலைவன ஓரங்களில் கூடாரங்களில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தார்கள். பொருளாதார அபிவிருத்தி காரணமாக, இன்று எந்தவொரு லிபியரும் பாலைவனக் கூடாரத்தில் வாழ்வதில்லை, கடாபியைத் தவிர. தலைநகர் திரிபோலியில் கடாபியின் மாளிகை இருந்தாலும், தான் இன்றும் மரபு வழி கூடாரத்தில் வாழ்வதாகக் காட்டுவது கடாபியின் வெகுஜன அரசியல். வெளிநாடுகளுக்கு விஜயம் செய்யும் பொழுதும், அந்தக் கூடாரத்தை தன்னோடு எடுத்துச் செல்வார். எந்த நாட்டிலும், ஹோட்டலில் தங்காமல் கூடாரத்தில் தங்கும் ஒரேயொரு தேசத் தலைவர் அவராகத் தான் இருப்பார்.
கால்நடைகளை மேய்க்கும் ஏழைக் குடும்பமொன்றில் பிறந்த கடாபி, அதிகாரம் கையில் வந்தவுடன் குடும்ப அரசியலில் ஈடுபட்டு செல்வம் சேர்த்தமை, லிபிய மக்களின் எதிர்ப்புணர்வுக்கு முக்கிய காரணம். கடாபியின் குடும்பத்தினர் மட்டுமல்ல, அவரது "கடாபா" கோத்திரமும் அரசியல்- பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தினர். பிற அரேபியர்கள் போல, லிபிய அரேபியரும் பல கோத்திரங்களாக அல்லது இனக்குழுக்களாக பிரிந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கோத்திரத்தை சேர்ந்தவர் அரசில் பதவி வகித்தால், "நமது ஆட்கள்" சிலருக்கு வேலை எடுத்துக் கொடுப்பது அந்த சமூகத்தில் சர்வ சாதாரணம். கடாபி லிபியாவின் சர்வ அதிகாரம் பெற்ற அதிபரானதும், அவரது கடாபா கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கே அரசுப் பதவிகள் கிடைத்தன. இதனால் பிற கோத்திரங்களை சேர்ந்தவர்கள் மத்தியில், கசப்புணர்வும் பொறாமையும் காணப்பட்டது. "லோக்கர்பீ" நீதிமன்ற விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரை ஒப்படைக்கும் விஷயத்தில், இந்த முறுகல் நிலை வெளிப்பட்டது. அந்த சந்தேக நபர் வேறொரு கோத்திரத்தை சேர்ந்தவர் என்பதாலேயே கடாபி அவரை ஒப்படைக்க முன்வந்தார் என்று பேசிக் கொண்டனர். இதை விட, கடாபியின் பிள்ளைகளின் திருவிளையாடல்கள் உலகப் பிரசித்தம். அதிகார மமதையும், பணத்திமிரும் உள்நாட்டு மக்களை முகம் சுழிக்க வைத்தன. பிரான்சில் மதுபோதையில் காரோட்டிய மகன், சுவிட்சர்லாந்தில் நட்சத்திர விடுதியில் கைகலப்பில் ஈடுபட்டு கம்பி எண்ணிய மகன். தனது தறுதலைப் பிள்ளைகளின் நடத்தையை கண்டிக்காத தகப்பனான கடாபி, பதிலுக்கு இராஜதந்திர சர்ச்சைகளை கிளப்பி விட்டார்.
கடந்த காலங்களில் லிபியா, எந்த வித உள்நாட்டுக் குழப்பமும் இல்லாதவாறு அமைதியாகக் காட்சியளித்தது. அதாவது, அங்கே நடந்த சம்பவங்கள் எதுவும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. கடாபியின் அதிகாரத்தை எதிர்ப்போர் அன்றும் கிழக்கு லிபியாவில் தான் தோன்றினார்கள். பண்டைய ரோமர்களின் மாகாணமான சிரேனிகா பகுதியில் இருந்து தான், காலனியாதிக்க எதிர்ப்புப் போர் ஆரம்பமாகியது. பாலைவனச் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஒமார் முக்தார் தலைமையில், இத்தாலியருக்கு எதிராக வீரஞ் செறிந்த விடுதலைப் போர் நடந்தது. போராட்டம் தோல்வியடைந்த போதிலும், அவர்கள் ஸ்தாபித்த மதப்பிரிவு இன்று வரை நிலைத்து நிற்கின்றது. முன்னாள் போராளிகளும், ஆதரவாளர்களும், அவர்களின் குடும்பங்களும் "சானுசி" என்ற மத அமைப்பாக, தம்மைத் தாமே தனிமைப் படுத்திக் கொண்டனர். இன்றைய அரசியல் புரிதலின் பிரகாரம் "இஸ்லாமிய கடும்போக்காளர்கள்" அல்லது "மத அடிப்படைவாதிகள்" என்று அழைக்கலாம். இருப்பினும் அன்று காலனியாதிக்கத்தை எதிர்த்த ஒமார் முக்தார் போன்ற பல தேசிய நாயகர்கள், இஸ்லாமிய கோட்பாடுகளை உயர்த்திப் பிடிப்பவர்களாக இருந்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரிட்டிஷாரால் முடி சூட்டப்பட்ட இடிரிஸ், சானுசி சமூகத்தை சேர்ந்தவர். இதனால் அவரது ஆட்சிக் காலம் முழுவதும், சானுசி சமூகத்தை சேர்ந்தோரின் ஆதரவு கிடைத்து வந்தது. குறிப்பாக கிழக்கு லிபிய பிரதேசம், இடிரிஸ் ஆதரவுத் தளமாக இருந்தது. 2011, பெப்ரவரி, கடாபிக்கு எதிராக கிளர்ந்தெழுந்த ஆர்ப்பாட்டக் காரர்கள், மன்னர் இடிரிசின் உருவப்படத்தையும், அவரது கொடியையும் தாங்கியிருந்தனர். பெங்காசி போன்ற, கிளர்ச்சியாளர்களால் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளில் சிவப்பு, கருப்பு, பச்சை வர்ணங்களில் பிறைச்சந்திரன் பதித்த கொடி பறக்க விடப்பட்டது. மன்னராட்சியைக் கவிழ்த்த கடாபியின் சதிப்புரட்சி வரை, அதுவே லிபியாவின் தேசியக் கொடியாக இருந்தது. இருபது வருடங்களுக்கு முன்னரே, சானுசி மதப்பிரிவை சேர்ந்த போராளிகள் பலர், ஆப்கானிஸ்தானில் அல்கைதாவுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். நாடு திரும்பிய போராளிகள், லிபியாவிலும் ஒரு ஆயுதக் குழுவை ஸ்தாபித்து சில தாக்குதல்களை நடத்தியுள்ளனர். லிபிய அரசின் இரும்புப் பிடி, தீவிரவாத நடவடிக்கைகளை தொடர விடவில்லை. இன்று வரை பலர் அறியாத செய்தி என்னவெனில், முதன்முதலாக இன்டர்போல் மூலமாக பின்லாடனை குற்றவாளியாக அறிவித்து பிடியாணை பிறப்பித்தது அமெரிக்காவல்ல! மாறாக லிபியா!! 2001, அமெரிக்கா அறிவித்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர்க் காலத்தில், கடாபி இதனைக் குறிப்பிட்டு பல தடவை பேசியுள்ளார். ஆனால் அது சர்வதேச கவனத்தை பெறவில்லை.
கடாபி ஒருகாலத்தில் அரபு சர்வதேசியத்தில் நம்பிக்கை வைத்திருந்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியாக இருந்தார். சோஷலிசம் பேசினார். இருந்தாலும் இஸ்லாமிய மதத்திலும் பற்றுறுதியுடன் இருந்தார். கடாபி மார்க்சியம் கலந்த புதுமையான இஸ்லாம் ஒன்றை போதித்தார். சானுசி மதப்பிரிவினர் தூய்மைவாதிகள் அல்லது கடும்போக்காளர்கள். அதற்கு மாறாக கடாபி ஒரு தாராளவாதி. கடாபியின் ஷரியா சட்டமும் பல திருத்தங்களைக் கொண்ட, மென்மையான தண்டனைகளைக் கொண்டிருந்தது. அரபு நாடுகளில் லிபியாவில் தான் பெண்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டது. குறிப்பாக சொத்துரிமைச் சட்டத்தில், ஆணுக்கே அதிக உரிமை வழங்கும் சட்டமே அரபு நாடுகள் எங்கும் அமுலில் உள்ளது. லிபியாவில் பெண்களும் சொத்தில் உரிமை கொண்டாடலாம். கடாபியின் காலத்தில் தான், பெண்கள் அதிகளவில் உயர் கல்வி கற்றனர். அரசிலும், தனியார் நிறுவனங்களிலும் உயர் பதவிகளை அலங்கரித்தனர். கடாபியின் மகளிர் மெய்க்காவலர் படையணி, சர்வதேச மட்டத்தில் பலர் கவனத்தை ஈர்த்தது. நிச்சயமாக, இஸ்லாமிய கடும்போக்காளர்கள் அத்தகைய மாற்றங்களை விரும்பவில்லை. தாலிபான்களைப் போல பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைக்க விரும்பும் பழமைவாதிகளுக்கு, கடாபியின் செயல்கள் எரிச்சலூட்டின. அந்த எதிர்ப்புகளை கணக்கெடுக்காத கடாபி, தனது "தாராளவாத இஸ்லாமிய மார்க்கம்" சிறந்தது என்று லிபியாவுக்கு வெளியேயும் பிரச்சாரம் செய்தார்.
நீண்ட காலமாக உலகின் மிகத் தீவிரமான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியாக காட்டிக் கொண்ட கடாபியை, அமெரிக்கா அடக்க விரும்பியதில் வியப்பில்லை. 1986 ம் ஆண்டு, திரிபோலி நகரின் வான் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க விமானங்கள், கடாபியின் மாளிகையை இலக்கு வைத்து குண்டுவீசின. விமானத் தாக்குதலில் கடாபி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினாலும், அயலில் குடியிருந்த பொது மக்கள் பல கொல்லப்பட்டனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு போரின் பங்காளிகள் என்ற அடிப்படையில், இஸ்லாமியரல்லாத தேசியவாத, இடதுசாரி இயக்கங்களுக்கும் ஆதரவு வழங்கினார். அயர்லாந்தின் ஐ.ஆர்.ஏ., ஜெர்மனியின் செம்படை போன்ற ஆயுதபாணி அமைப்புகளின் உறுப்பினர்களுக்கு லிபியாவில் இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது.
லோக்கர்பீ விமானக் குண்டு தாக்குதலில் கடாபியை வேண்டுமென்றே சம்பந்தப் படுத்திய சர்வதேச சமூகம், ஐ.நா. பொருளாதாரத் தடையை கொண்டு வந்தது. (அந்தத் தாக்குதலில் லிபியாவுக்கு தொடர்பில்லை என்பதும், ஈரானின் பங்களிப்பும் அன்று வேண்டுமென்றே மறைக்கப் பட்டன.) 1993 லிருந்து 2003 வரையிலான பொருளாதாரத் தடை லிபியாவை மோசமாகப் பாதித்தது. சர்வதேச விமானப் பறப்புகள் துண்டிக்கப்பட்டன. எண்ணெய் அகழும் தொழிலகங்களில், பழுதடைந்த உபகரணங்களை திருத்த முடியாமல், உற்பத்தி குறைந்தது. இருப்பினும், லிபியா ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்தது என்பதால், கடத்தல் வியாபாரிகள் உணவு, மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருவதில் தடை இருக்கவில்லை. 2003 ல் பொருளாதாரத் தடை விலத்திக் கொள்ளப்பட்ட பிறகு, கடாபி முற்றிலும் மாறியிருந்தார். சோஷலிச, அல்லது தேசியவாத பொருளாதாரத்தைக் கைவிட்டு விட்டு, முதலாளித்துவத்திற்கு தாராளமான சுதந்திரம் வழங்கினார். கடாபியின் குடும்பத்தினரும், கடாபா இனக்குழுவை சேர்ந்த முதலாளிகளும் செல்வம் திரட்டியது இந்தச் சந்தர்ப்பத்தில் தான். கடாபியின் குடும்ப நிறுவனம், இத்தாலியில் இரண்டு உதைபந்தாட்டக் கழகங்களை வாங்கியது
லிபியாவை காலனிப் படுத்திய நாடான இத்தாலி, பிரதான வர்த்தகக் கூட்டாளியாகும். லிபியாவின் எண்ணெய் வயல்களிலும், பிற துறைகளிலும் இத்தாலியின் முதலீடுகள் அதிகம். நெதர்லாந்தின் ஷெல் நிறுவனமும் எண்ணெய் உற்பத்தியில் குத்தகைகளை பெற்றிருந்தது. இருப்பினும் அமெரிக்க நிறுவனங்களின் வரவு மிகக் குறைவாகவே இருந்தது. தற்போது லிபியா பிரச்சினையில் அமெரிக்கா மிகத் தீவிரமான அக்கறை செலுத்துவது ஒன்றும் தற்செயலல்ல. சதாம் ஹுசைன் கால ஈராக்கிலும், ரஷ்யர்களும், சீனர்களும், எண்ணெய் உற்பத்தியை பார்த்துக் கொண்டிருந்த சமயத்தில் தான் அமெரிக்கா படையெடுத்தது. அதற்குப் பிறகு ஈராக்கின் எண்ணெய் உற்பத்தி முழுவதையும் அமெரிக்க நிறுவனங்கள் கைப்பற்றிக் கொண்டன. தற்போது லிபியாவிலும் அது போன்ற நிலைமை காணப்படுகின்றது.
கடாபிக்கு ஆதரவான லிபியப் படைகள் முன்னேறிச் சென்று, கிளர்ச்சியாளரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரங்களை கைப்பற்றி வருகின்றன. இதனால் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு, சவூதி அரேபியாவை அமெரிக்கா கேட்டுள்ளது. லிபியா முழுவதும் கிளர்ச்சியாளர்கள் வசம் வந்திருந்தால், அவர்களுடன் எண்ணெய் உற்பத்தி ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்கலாம். கிளர்ச்சியை வழிநடத்திக் கொண்டிருக்கும், "லிபியா தேசிய மீட்பு முன்னணி" புகலிடத்தில் இயங்கிய பொழுது, சி.ஐ.ஏ. தொடர்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் கிளர்ச்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்டு, லிபியா முழுவதும் கடாபியின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தால், அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். லிபிய வான் பரப்பை நேட்டோ படைகள் கட்டுப் படுத்துதல், பொருளாதாரத் தடை என்பன, ஐ.நா. பெயரில் கொண்டு வரப்படும்.
ஊடகங்கள் பல தடவை செய்தி அறிவிப்பதை விட பிரச்சாரம் செய்வதற்கே பெரிதும் உதவுகின்றன. ஆரம்பத்தில் இருந்தே லிபிய மக்கள் அனைவரும் கடாபிக்கு எதிராக கிளர்ந்தெழுந்து விட்டதாகவே காட்டிக் கொண்டிருந்தனர். இராணுவத்தை விட்டோடியவர்களை சுட்டிக் காட்டி, லிபிய இராணுவம் மக்கள் மீது தாக்குதல் நடத்த மறுக்கிறது என்றும் கூறிக் கொண்டிருந்தன. அவ்வாறு தாக்குதல் நடத்துபவர்கள் எல்லோரும் பிற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த கறுப்பினக் கூலிப் படைகள் என்று செய்தி வாசித்தன. கிளர்ச்சியாளர்களால் விடுதலை செய்யப்பட்ட பகுதிகளின் மக்களும் அவ்வாறான தகவல்களை தெரிவித்தனர். ஆனால் அங்கே நிலவும் நிறவெறிப் பாகுபாட்டை ஊடகங்கள் வேண்டுமென்றே மறைத்தன. லிபியாவின் தென் பகுதியில் கறுப்பின மக்கள் வாழ்கின்றனர். அவர்களும் லிபியப் பிரஜைகள் தான். அதே நேரம் லிபியாவில் லட்சக் கணக்கான ஆப்பிரிக்க குடியேறிகள், அகதிகள் வசித்து வருகின்றனர். லிபிய நிறவெறியர்கள் அவர்களை தாக்குவது, அங்கே அடிக்கடி நடக்கும் நிகழ்வு. ஒரு தடவை, லிபிய காடையர்கள் நூற்றுக்கணக்கான ஆப்பிரிக்கர்களை இனப்படுகொலை செய்யுமளவிற்கு, அங்கே நிறவெறி உச்சத்தில் இருந்துள்ளது. இன்றும் கிளர்ச்சியாளர்கள் விடுதலை செய்த பகுதிகளில் வாழ்ந்த ஆப்பிரிக்கர்கள் தாக்கப்பட்டனர். அனைத்து வெளிநாட்டவர்களும் மோசமான விளைவுகளை எதிர்பார்த்து வெளியேறி விட்டனர்.
DON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.
கலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.