Tuesday, October 20, 2020

800 படத்தை வீழ்த்திய தமிழ்த் தேசிய விளையாட்டு வீரர்கள்!

கிரிக்கட் வீரர் முரளிதரனின் வாழ்க்கை கதையை கூறும் 800 திரைப்படத் தயாரிப்பு தொடங்கும் பொழுதே தமிழ்நாட்டில் பலத்த சர்ச்சையை உண்டுபண்ணியது. புதிய தலைமுறை தமிழ்த் தேசியவாதிகள் என்று அறியப்பட்ட அரசியல் ஆர்வலர்களான பாரதிராஜா, தாமரை, வைரமுத்து, திருமுருகன் காந்தி, சீமான் இன்னும் பலர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்து வந்தனர். இதனால் தொலைக்காட்சி செய்திகளில் மட்டுமல்லாது, விவாத நிகழ்ச்சிகளில் கூட முக்கியத்துவம் கொடுக்கும் அளவுக்கு இந்த சர்ச்சை வளர்ந்து வந்தது.

தமிழகத்தின் புதிய தமிழ்த்தேசியவாதிகளால் "துரோகி" முத்திரை குத்தப்பட்ட முத்தையா முரளிதரன் வரலாற்றுத் திரைப்படத்தில், அரசியல் உணர்வுள்ள குணச்சித்திர நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று அழுத்தம் கொடுத்தனர். முத்தையா முரளிதரன் "இனப்படுகொலையை நியாயப் படுத்தி வந்தார், சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆதரவாக பேசி வந்தார்", அதனால் அப்படியானவரின் பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று "அன்புக் கட்டளை" இட்டனர். பகிரங்க மிரட்டல்களுக்கு "வேண்டுகோள்", "அறிவுரை" என்றும் அர்த்தம் இருப்பதாக இப்போது தான் தெரிகிறது.

இங்கே உலகப் புகழ் பெற்ற கிரிக்கட் வீரர் முத்தையா முரளிதரனின் விளையாட்டு சாதனைகள் பின்னுக்கு தள்ளப் பட்டு, அவர் பேசிய அபத்தமான அரசியல் கருத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கப் படுகின்றது. இந்த எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கும் தமிழ் உணர்வாளர்கள், ஒரு திரைப்படத் தயாரிப்பில் தலையிடுவது மட்டுமல்லாது, கருத்து சுதந்திர மறுப்பையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இது தமிழகத்தில் இன்னமும் ஜனநாயக சூழல் வளரவில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது. முதலாளித்துவ ஜனநாயகம் வழங்கும் குறைந்த பட்ச கருத்துச் சுதந்திரத்தை கூட எதிராளிக்கு தர மறுப்பதையும், சகிப்புத்தன்மை இன்றி நடந்து கொள்வதையும் கண்கூடாகக் காணக் கூடியதாக உள்ளது.

இந்த தமிழ்த்தேசிய அடிப்படைவாதிகள், தாம் ஈழத் தமிழர்களின் பெயரால் பேசுவதாக காட்டிக் கொண்டாலும், இவர்களது போராட்டத்தால் ஈழத் தமிழர்களுக்கு என்ன நன்மை கிடைத்து விடப் போகிறது என்பது தெரியவில்லை. இவர்களிடம் அது பற்றிக் கேட்டால், தாம் இனப்படுகொலைக்கு நீதிகோருவதாகவும், இந்த செய்தி சிறிலங்கா அரசை பிடித்து உலுக்கி விடும் என்றும் கூறுகிறார்கள். நான் அறிந்த வரையில், இலங்கையில் யாரும் இது குறித்து பெரிதாக அலட்டிக் கொண்டதாக தெரியவில்லை.

பொதுவாகவே தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற சினிமா எதிர்ப்புப் போராட்டங்களை  இலங்கையில் வாழும் தமிழர்கள் கூட பெரிது படுத்துவதில்லை. அதற்குக் காரணம், ஒரு பொழுதுபோக்கு சினிமாப் படத்திற்காக உணர்ச்சிகரமாக பொங்கியெழும் யாரும், உண்மையான பிரச்சனைகளை கண்டுகொள்வதில்லை. அத்துடன், தமிழ்நாடு மாதிரி, ஈழத்தில் சினிமா அரசியல் பெருமளவு தாக்கம் செலுத்துவதில்லை. ஒரு சினிமா நடிகரோ அல்லது விளையாட்டு வீரரோ அரசியல் கருத்துக் கூற வேண்டும் என்று இலங்கையில் யாரும் எதிர்பார்ப்பதில்லை.

அந்த வகையில் அன்று முரளிதரன் தெரிவித்த "அரசியல்" கருத்துக்களையும் யாரும் பொருட்படுத்தவில்லை. ஏனென்றால் அவர் ஓர் அரசியல்வாதி அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும். பெட்டைக் கோழி கூவி பொழுது விடிவதில்லை. ஒரு தடவை முரளிதரனின் சகோதரன் தேர்தலில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக உலகப் புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர் தேர்தல் பிரச்சாரம் செய்தும், அவர் வெல்லவில்லை. இன்னொரு தடவை, கொழும்பில் UNP ஆதரவுடன் தேர்தலில் நின்ற மனோ கணேசனுக்கு எதிராக, மகிந்த ராஜபக்சேவின் கட்சியான SLFP முரளிதரனை கொண்டு எதிர்ப்பிரச்சாரம் செய்வித்தது. அப்படி இருந்தும் மனோகணேசன் வென்றார். இதை அவரே தனது முகநூல் பக்கத்தில் எழுதி இருக்கிறார்.  அந்தளவுக்கு இலங்கையில் தமிழ் மக்கள் அரசியலையும், விளையாட்டையும் பிரித்துப் பார்க்கிறார்கள்.

முரளிதரன் தனது அரச ஆதரவுக் கருத்துக்களை இலங்கையில் வெளிவரும் ஒரு தமிழ்ப் பத்திரிகையில் மட்டும் சொல்லி இருந்திருந்தால், அது இந்தளவு தூரம் சர்ச்சையை கொண்டு வந்திருக்காது. அங்கு ஏற்கனவே பல துறைகளை சேர்ந்த பிரபலங்கள் தத்துப் பித்து என்று உளறி இருக்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் கணக்கெடுக்கவில்லை. ஆனால், அரசியல்வாதிகள் சொல்வதை எல்லாம் கூர்ந்து கவனிப்பார்கள். அவர்கள் ஒரு சொல் தவறாக சொன்னாலும், அதைப் பிடித்துக் கொண்டு தொங்குவார்கள். ஏனென்றால் அரசியல்வாதிகள் கருத்துருவாக்கிகள். விளையாட்டு வீரர்கள் அப்படியானவர்கள் அல்ல. அவர்களிடம் விளையாட்டை தவிர வேறெதையும் அறிய விரும்பவில்லை.

சிங்களவர்கள் பொதுவாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ன சொல்கிறார் என்று தான் கூர்ந்து கவனிப்பார்கள். முன்பு ஜெயலலிதா, அதற்கு முன்னர் கருணாநிதி ஆகியோர் இலங்கைப் பிரச்சினை பற்றி பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சிங்கள ஊடகங்களால் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடப் படும். அவை பொது மக்கள் மத்தியில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படும். தீவிர இனவாதம் பேசும் சிங்களக் கட்சிகளும், அமைப்புகளும் "இந்திய விஸ்தரிப்புவாதிகளுக்கு" எதிரான தமது எதிர்ப்பை பதிவு செய்வார்கள். ஆனால், சீமான், தாமரை, பாரதிராஜா போன்ற தீவிர தமிழினப் பற்றாளர்களை யாரும் கணக்கெடுப்பதில்லை. அவர்கள் யார் என்பதே சிங்கள மக்களுக்கு தெரியாது.

இலங்கையில் எந்தவொரு சிங்களவரும், இது போன்ற சினிமா எதிர்ப்புப் போராட்டங்களை கண்டுகொள்வதில்லை. காரணம் மிக இலகு. தற்போதைய 800 திரைப்பட சர்ச்சை தொடர்பாக ஒரு சிங்கள ஊடகம் எப்படி தெரிவிக்கும்?  "தமிழ்நாட்டில் தமிழர்கள் முரளிதரன் என்ற ஒரு தமிழனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் தமிழ்ப் படத்தை எதிர்க்கிறார்கள்!" சுருக்கமாக, இது தமிழர்களின் உள்வீட்டுப் பிரச்சினை. இவ்வாறு தான் அந்த செய்தி வெளிவரும். இதைப் பார்க்கும் ஒரு சராசரி சிங்களவர், "தமிழர்கள் தங்கள் இனத்தில் ஒருவன் முன்னுக்கு வருவதை விரும்பாத அளவுக்கு பொறாமை மிக்கவர்கள் போலிருக்கிறது..." என்று நினைத்து விட்டு நகர்ந்து சென்று விடுவார்.

"அப்படி அல்ல, தமிழர்கள் ஒன்று திரண்டு இனப்படுகொலைக்கு நீதி கோருகிறார்கள்" என்று சிங்கள ஊடகங்கள் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தால், உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். யுத்தம் நடந்த காலங்களில், இராணுவத்தால் கொல்லப் பட்டவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் மட்டுமே என்று சொல்லிக் கொண்டிருந்த ஊடகங்களிடம் இதை விட வேறெதை எதிர்பார்க்கிறீர்கள்? சில நேரம், இராணுவத்தால் பொது மக்கள் படுகொலை செய்யப் பட்ட தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தால், அவை புலிகளின் தாக்குதலின் எதிர்வினையாக நடந்தவை என்றும் குறிப்பிடத் தவறுவதில்லை. தமது தேசத்தை பாதுகாக்கும் இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டு விடும் என்பதற்காக போர்க்குற்றம் பற்றிக் கூட பேச மறுத்து வருகின்றனர். 

முரளிதரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளில் பாரதூரமானது, காணாமல்போனவர்களை தேடி போராட்டம் நடத்தியவர்களை கொச்சைப் படுத்தியது தான். இதனை பிரிட்டனின் சேனல் 4 தொலைக்காட்சி கூட விமர்சித்து இருந்தது. அவர்கள் தவறாக வழிநடத்தப் பட்டிருக்கலாம் என்ற பதில் எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாத கூற்று. இது பாதிக்கப் பட்ட மக்களின் மனதை புண்படுத்தும் செயல் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர் தான் ஆதரிக்கும் அரசை நியாயப் படுத்த நினைத்தாலும், இது போன்ற பதில்களை தவிர்ப்பது புத்திசாலித்தனம். அநேகமாக அரசியல் அனுபவமின்மை காரணமாக அந்தக் கூற்று அவரது வாயில் இருந்து வந்திருக்கலாம். இருந்தாலும் தவறு தவறு தான்.

அதற்காக, அன்று முரளிதரன் தமிழர்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறைகளை கண்டித்திருக்க வேண்டும், இனப்படுகொலை பற்றிப் பேசி இருக்க வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்க முடியாது. உண்மையில் அவர் அப்படி ஏதாவது பேசியிருந்தாலும், அது தேசத்துரோகமாக கருதப்பட்டு, இனிமேல் கிரிக்கெட் விளையாடவே முடியாமல் தடைசெய்திருப்பார்கள். அன்றைய காலத்தில், அரசை விமர்சிப்பவர்கள் எல்லாம் புலிகளின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, அதிக பட்சம் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டது.

ஈழப் போர் முடிந்தது தொடர்பாக முரளிதரன் தெரிவித்த கருத்தானது, "இனப்படுகொலையை ஆதரித்தார்" என்பதாக திரிபுபடுத்தி பரப்பப் படுகின்றது. தமிழ்நாட்டில் சில அரசியல் அறிஞர்கள் கூட கண்ணை மூடிக் கொண்டு இப்படி ஒரு பொய்யை பரப்புரை செய்து வருகின்றனர். முரளிதரன் அவ்வாறு சொன்னதாக நான் எங்கேயும் கேள்விப் படவில்லை. இவர்களே அப்படி ஒன்றை கற்பனை செய்து கொள்கிறார்கள்.

அன்று அவர் போர் முடிந்ததால் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்து இருந்தாலும், அது ஒரு சாமானியனின் கூற்றாக கருதப் பட வேண்டும். ஏனெனில் அன்று சாதாரண சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்களும் முப்பதாண்டு கால போர் முடிவுக்கு வந்தமை குறித்து மகிழ்ச்சி அடைந்தனர். உலகில் எந்த நாடாக இருந்தாலும், போர் முடிந்தால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவது சாதாரண விடயம். ஐரோப்பாவில் இரண்டாம் உலகப்போர் முடிந்த நேரம் மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கவில்லையா? அதைக் கொண்டாடவில்லையா? ஜெர்மனியிலும் பலருக்கு போரின் முடிவு திருப்திகரமாக இருக்கவில்லை.

உண்மையில் இறுதிப் போர்கூட தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாகத் தான் நடந்தது. அதிகம் பேசுவானேன். புலிகள் இயக்கப் போராளிகளே இந்தப் போர் போதும் என்ற கட்டத்திற்கு வந்து விட்டிருந்தனர். அந்தளவுக்கு எல்லோரும் போரினால் களைத்துப் போயிருந்தனர். அன்று அவர்கள் சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் போர் முடிவுக்கு வந்து விடும் என்று நம்பினார்கள். அதற்கு அவர்களை குறை சொல்ல முடியாது. இது சாதாரண மக்களின் மனநிலை. நீண்ட காலப் போரினால் உயிரிழப்புகளையும், சொத்தழிவுகளையும், வார்த்தையில் வடிக்க முடியாத அளவுக்கு துன்பங்களையும் அனுபவித்த மக்களிடம் இதைத் தவிர வேறெதை எதிர்பார்க்கிறீர்கள்?

இது போன்ற விவாதங்களில் மிகுந்த மனச்சோர்வை தரும் விடயம் என்னவென்றால், பலரிடம் வர்க்கப் பார்வை மருந்துக்கும் கிடையாது. ஒரு சில இடதுசாரிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. மூலதனம் நூலை தமிழில் மொழிபெயர்த்த முன்னாள் மார்க்சிஸ்ட் தியாகு கூட தட்டையான இனவாத கண்ணோட்டத்தை கொண்டிருக்கிறார் என்பது வருத்தத்திற்குரியது. இந்தியாவில் நடப்பது வர்க்கப் போராட்டம் என்பவர்கள் கூட, ஈழம் என்று வந்து விட்டால் மட்டும் சிங்களவர் எதிர் தமிழர் என்று இன அடிப்படையில் பிரித்துப் பார்க்கும் முரண்நகையை புரிந்து கொள்ள முடியவில்லை.

முரளிதரனின் குடும்பம், இலங்கையின் இரண்டாவது பெரிய நகரமான கண்டியில் வாழ்ந்து வருகின்றது. அவரது தந்தை முத்தையா, லக்கிலேன்ட் பிஸ்கட் கம்பனி நடத்திய ஒரு முதலாளி. அப்படியானால் முரளிதரனின் வர்க்கம் என்னவென்று நான் சொல்லியா புரிய வேண்டும்? அவர் கல்விகற்றதும் மத்தியதர வர்க்க பிள்ளைகள் செல்லும் தனியார் பாடசாலை ஒன்றில் தான். அதனால் தான் கிரிக்கெட் விளையாட்டில் முன்னுக்கு வந்து, தேசிய அணியில் இடம்பெற முடிந்தது. இலங்கையில் இன்றைக்கும் சாதாரண அரசு பாடசாலைகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு தேசிய அணியில் இடம்பெறுவது ஒரு கனவாக மட்டுமே உள்ளது. இங்கிலாந்தில் மட்டுமல்ல, இலங்கையிலும் கிரிக்கெட் எப்போதும் மேட்டுக்குடியினரின் விளையாட்டாகவே இருந்து வந்துள்ளது.

நீண்ட காலமாகவே, தேசிய கிரிக்கெட் அணியில் தமிழ் விளையாட்டு வீரர்கள் சேர்த்துக் கொள்ளப் படுவதில்லை என்ற குறைபாடு இருந்து வந்தது. இதுவும் இனப் பிரச்சினையின் ஓரங்கம் தான் என்பதை பலர் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். எப்போதாவது ஓரிருவர் சேர்க்கப் பட்டாலும், அவர் நிச்சயம் ஏதாவதொரு மேட்டுக்குடி பாடசாலையில் கல்வி கற்றிருப்பார். அந்த வகையில் முரளிதரன் தமிழனாக இருந்தாலும், அவரது வர்க்க அடிப்படை தான் கிரிக்கெட்டில் முன்னுக்கு வர உதவியது எனலாம். நிச்சயமாக இதெல்லாம் திரைப்படத்தில் பேசப் படப் போவதில்லை. நமது பெரு மதிப்புக்குரிய தமிழின உணர்வாளர்களும் வாய் திறக்க மாட்டார்கள்.

இலங்கையில் நடந்த இனக்கலவரத்தின் போது முத்தையா குடும்பத்திற்கு சொந்தமான வணிக நிறுவனம் சிங்களக் காடையரினால் கொளுத்தப் பட்டது. முரளியின் தந்தைக்கு வெட்டு விழுந்தது. ஆகவே அவர்களும் தமிழர்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறையால் பாதிக்கப் பட்டவர்கள் தான். இருப்பினும், இழந்த செல்வத்தை மீண்டும் திரட்டிக் கொண்டதும் தமது மேட்டுக்குடி அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டனர். கிரிக்கெட்டால் நிறைய சம்பாதித்த முரளிதரனும் தனது பணத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலிட்டுள்ளார். ஆகையினால், முதலாளிகளின் இடத்தில் இருந்து பார்த்தால், அரசுக்கு ஆதரவாக இருப்பது அவர்களது வர்க்க நலன்களுக்கு அனுகூலமானது.

தென்னிலங்கையில் தொழிற்துறையில் சிறந்து விளங்கும் தமிழ் முதலாளிகள் எல்லோரும் அரசுக்கு ஆதரவாகத் தான் நடந்து கொள்வார்கள். இந்த விடயத்தில், தென்னிலங்கையில் வாழும் வட மாகாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழ் தொழிலதிபர்களும் விதிவிலக்கல்ல. உதாரணத்திற்கு யாழ்ப்பாணத் தமிழ் கோடீஸ்வரரான மகாராஜா நிறுவனத்தின் உரிமையாளரை எடுத்துக் கொள்வோம். அவர் நீண்ட காலமாக UNP அனுதாபி. UNP எனும் வலதுசாரி பேரினவாதக் கட்சி தான் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரங்களை திட்டமிட்டு நடத்தியது. பேரழிவு தந்த ஈழப்போரை தொடங்கி வைத்த பெருமைக்குரியது.

அமெரிக்காவில் ரிப்பப்ளிக்கன், டெமோக்கிராட்டிக் கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி அமைக்கும். அதனால் அந்நாட்டில் உள்ள முதலாளிகளும் இவ்விரு கட்சிகளில் ஒன்றை ஆதரிப்பார்கள். அதே மாதிரியான நிலைமை தான் இலங்கையிலும் நிலவுகிறது. மகாராஜா முதலாளி UNP அனுதாபி என்றால், முத்தையா முரளிதரன் SLFP அனுதாபி. அவ்வளவு தான் வித்தியாசம். அதிகம் பேசுவானேன். போர் முடியும் வரை தீவிர புலி விசுவாசிகளாக வெளிநாடுகளில் நிதி சேகரித்து மூலதனம் திரட்டியவர்கள், இன்று இலங்கைக்கு சென்று ராஜபக்சே ஆசீர்வாதத்துடன் முதலிட்டுள்ளனர். அதிலென்ன ஆச்சரியம்? இனம் இனத்தோடு தான் சேரும். முதலாளிகள் எப்போதும் அதிகார வர்க்கம் சார்ந்து நிற்பார்கள். முன்பு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் புலிகளின் நிழல் அரசை ஆதரித்த அதே முதலாளிகள், பின்னர் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததும் அரச ஆதரவாளர்களாக மாறி உள்ளனர். அது முதலாளிகளின் இயற்கையான வர்க்கக் குணாம்சம். நாய் வாலை நிமிர்த்த முடியுமா?

இன்னும் தயாரிக்கப் படாத திரைப்படம் ஒன்றுக்காக, இல்லாத எதிரிக்காக காற்றில் கம்பு சுற்றிக் கொண்டிருக்கும் திடீர் தமிழின உணர்வாளர்களுக்கு எத்தனை விளக்கம் கொடுத்தாலும் புரியப் போவதில்லை. முதலில், முரளிதரன் போன்ற முதலாளித்துவவாதிகள் மக்கள் நலன் சார்ந்த அரசியல் பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பதே மடமைத்தனம். "ஐயா, இது காளை மாடு, பால் தராது" என்கிறேன். அவர்களோ "இல்லை இல்லை, மாடென்றால் பால் தரத் தானே வேண்டும்?" என்று அடம் பிடிக்கிறார்கள். எல்லாவற்றையும் தமிழின ஆதரவு, தமிழினத் துரோகம் என்று தட்டையாக பார்த்து பழகி விட்டனர். அவர்களிடம் சென்று வர்க்க அரசியலை கற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னால் காதில் போட்டுக் கொள்வார்களா? இந்த விடயத்தில் முத்தையா முரளிதரன் மட்டுமல்லாது, அவரை எதிர்ப்பவர்களும் ஒரே நேர் கோட்டில் பயணம் செய்கின்றனர்.

 

- கலையரசன் - 

20-10-2020

1 comment:

சுரேஷ் பாபு said...

அருமையான பதிவு