![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhnqtc5P0wpE8_xt47_IvD-Hab7xMkemCuXhyphenhyphensKAaLj47hD-4tZWz-RZCnElyNR0T5weSPPz-RB8OHNi7-N9QGKQgFmiO8D5wUpWXr0llrU_AatARZneghU6chfI9BX2uqWSmjS/s320/occupy+gezi.png)
Occupy இயக்கமாக, இஸ்தான்புல் பூங்காவில் கூடியிருந்த அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களை பொலிஸ் வன்முறை கொண்டு விரட்டியடித்தது. ஆயிரம் பேரளவில் கைது செய்யப் பட்டனர். கூட்டத்தை கலைப்பதற்காக, பெருமளவு கண்ணீர்ப்புகை குண்டுகள் பிரயோகிக்க பட்டதால் பலர் காயமடைந்தனர். கண்ணீர் புகை குண்டுகளில், ஒரெஞ்ச் என்ற நச்சுப் பதார்த்தம் இருந்ததாகவும், அதனால் பாதிக்கப் படுபவர்கள் கண் பார்வை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிய வருகின்றது. இஸ்தான்புல் நகரில் நடந்த பொலிஸ் வன்முறை குறித்து, வெகுஜன ஊடகங்கள் ஒரு வரி செய்தி கூட வெளியிடாமல் இருட்டடிப்பு செய்தன. சமூக ஆர்வலர்கள் டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி தகவல்களை உடனுக்குடன் பரவச் செய்தனர். இதனால் பிற துருக்கி நகரங்களிலும் தன்னெழுச்சியான மக்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன. இதனால், இணையப் பாவனை மட்டுப் படுத்தப் பட்டுள்ளது. சமூக வலைத் தளங்கள் தடை செய்யப் பட்டுள்ளன.
அரபு வசந்தம் பாணியில் "துருக்கி வசந்தம்" என்று அழைக்கக் கூடிய மக்கள் எழுச்சி பற்றி, துருக்கி ஊடகங்கள் எதுவும் கூறாமல் முழுமையாக இருட்டடிப்பு செய்த நேரம், BBC போன்ற சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், "சுற்றுச் சூழலியல் ஆர்வலர்களின் எதிர்ப்பு நடவடிக்கை" என்று செய்தியை திரித்து வெளியிட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களில் சுற்றுச் சூழலியல் ஆர்வலர்கள் ஒரு சிறு பிரிவினர் மட்டுமே. தேசியவாதிகள், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், அனார்கிஸ்டுகள் என்று பல அரசியல் கொள்கைகளை பின்பற்றுவோர், அரசுக்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். ஜனாதிபதி எர்டோகன் சர்வாதிகார ஆட்சி நடத்துவதாக உணரும் மக்களின் எழுச்சி. BBC புளுகியது போல சுற்றுச் சூழல் பிரச்சினை ஒரு முக்கிய காரணம் அல்ல.
ஏற்கனவே, இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்னர், சிரியா எல்லையோர நகரத்தில் நடந்த ஒரு குண்டுவெடிப்பின் பின்னர், ஆயிரக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. அந்தக் குண்டுவெடிப்பில், நூற்றுக்கும் அதிகமானோர் பலியானதாகவும், அரசு எண்ணிக்கையை குறைத்து சொல்லி இருப்பதாகவும் பொது மக்கள் கூறுகின்றனர். குண்டுவெடிப்பு நடந்து ஒரு மணிநேரத்திற்குள், "ஆசாத் அரச கைக்கூலிகளின் செயல்" என்று துருக்கி அரசு அறிவித்தது. தலைமறைவாக இயங்கும் மார்க்சிய அமைப்பை சேர்ந்த ஒன்பது துருக்கி ஆர்வலர்களை கைது செய்தது. சில மேற்கத்திய அரசுகள் மட்டுமே, "இந்த குண்டுவெடிப்பு ஆசாத் அரசின் வேலை" என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முன்வந்தன. ஆனால், அந்தப் பிராந்தியத்தில் வாழும் துருக்கி மக்கள், FSA என்ற சிரியா அரசுக்கு எதிராக போராடும் ஆயுதக் குழுவை குற்றஞ் சாட்டுகின்றனர். ஆங்காங்கே சிரிய அகதிகளின் வியாபார ஸ்தலங்கள், வாகனங்கள் தாக்கப் பட்டன.
சிரிய போராளிக் குழுக்களுக்கு துருக்கி அரசு ஆதரவளிப்பதால், மக்களின் கோபாவேசம் எர்டோகன் அரசுக்கு எதிராக திரும்பியது.
சிரியாவின் உள்நாட்டுப் போரில் துருக்கி அரசு தலையிடுவதை, பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை. பொது மக்களின் அபிலாஷைகள் அரசினால் புறக்கணிக்கப் பட்டு வந்ததால், அந்த ஏமாற்றம் தெருக்களில் எதிரொலித்தது. பல நகரங்களில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. அப்போதெல்லாம், வெளிநாட்டு ஊடகங்கள் அந்த செய்திகளை வெளியிடாமல் மூடி மறைத்து வந்தன. மக்களின் அரசுக்கு எதிரான வெறுப்புணர்வை, சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தில் துருக்கியின் பங்களிப்பு தூண்டி விட்டுள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பின்மை, அதிகரித்து வரும் வறுமை காரணமாக பெருமளவு துருக்கி மக்கள் எர்டோகன் அரசின் மேல் நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். இஸ்லாமிய மதவாதக் கட்சித் தலைவரான எர்டோகன், தேர்தலுக்கு முன்னர் "மதத்தை காட்டி மக்களை மயக்கியதாகவும், ஆட்சிக்கு வந்த பின்னர் சர்வாதிகாரி போன்று நடந்து கொள்வதாகவும்..." அவருக்கு ஓட்டுப் போட்ட வாக்காளர்களே கூறுகின்றனர். இன்றைய காலத்தில், மதவாதம், தேசியவாதம் பேசி மக்களை ஏமாற்ற முடியாது என்பதை துருக்கியில் நடக்கும் சம்பவங்கள் தெரிவிக்கின்றன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhci285elBJaITyHH7gP4_P4v9tJ0ijSuj2JOFxYACXIuFIZTODakID4qfF17puRL10Niq3Kj4brpySgYI8Bq3GIHtYMT3DZ-HI4hvruBS-XQKGvmu4gJXecND8WQeumNKDIiNP/s640/turkish+demo.jpg)
துருக்கி, இஸ்தான்புல் நகரில் தொடங்கிய மக்கள் எழுச்சி, தற்போது நாடெங்கும் பரவி வருகின்றது. (முக்கியமான நகரங்களில், மக்கள் நடத்திய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் படத் தொகுப்பை இங்கே பார்க்கலாம்.) இரண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கிய, "அரபு வசந்தம்" பற்றி பெரும் மகிழ்வுடன் அறிவித்துக் கொண்டிருந்த ஊடகங்கள், இன்றைய துருக்கி மக்கள் எழுச்சி குறித்து மௌனம் சாதிக்கின்றன. இஸ்தான்புல் நகர பூங்காவில், Occupy பாணியில் சுற்றுச்சூழலியல் ஆதரவாளர்களால் தொடங்கப் பட்ட போராட்டம், பொலிஸ் பலப் பிரயோகத்தினால் கடுமையாக நசுக்கப் பட்டது. பூங்காவை அழித்து, நவீன அங்காடிகளை அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிராக அவர்கள் போர்க்கொடி தூக்கி இருந்தனர். பொலிஸ் அளவுக்கு அதிகமான கண்ணீர்ப்புகை குண்டுகளை பிரயோகித்து, போராட்டக்காரர்களை கலைத்த காட்சிகள், சமூக வலைத் தளங்களில் மட்டுமே வெளியாகின்றன. துருக்கி முழுவதும் பல்லாயிரக் கணக்கான மக்கள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே, மே தினத்தன்றும், சிரியா மீதான போரை எதிர்த்தும், பல்வேறு அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhMOjDwsx5vxkVjHxpwNlbRuR4crelNnXT01-fTMzDHYvSld7iMf7TbCuhFrpryZu7Yk9CJwOP_NmOeoPNX067263PcXp9ByrNA8562_OsSPYPLdGIPa10KPBPrHX0Laimd7jp1/s320/bosporus.png)
இஸ்தான்புல் நகரில், ஐரோப்பா-ஆசியாக் கண்டங்களை இணைக்கும் பொஸ்போருஸ் பாலத்தினை ஆக்கிரமித்துள்ள துருக்கி மக்களின் எழுச்சி. துருக்கி மேற்கத்திய சார்பு நேட்டோ அங்கத்துவ நாடென்பதாலும், போராடும் மக்கள் முதலாளிய எதிர்ப்பாளர்கள் என்பதாலும், அனைத்து ஊடகங்களும் இந்த செய்திகளை இருட்டடிப்பு செய்து வருவது கவனிக்கத் தக்கது.
துருக்கியில் மக்கள் போராட்டம் பற்றிய முன்னைய பதிவுகள்:
உலக மக்களின் மே தின எழுச்சியும், பொலிஸ் அடக்குமுறையும்
துருக்கியை உலுக்கிய குர்து மக்கள் போராட்டம்
குர்திஸ்தான், துருக்கியின் துயரம்
No comments:
Post a Comment