Monday, September 12, 2011

உலகப் பொருளாதார நெருக்கடி, இலங்கைத் தமிழருக்கு பேரிடி

[சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சிமாற்றம்]
(பகுதி : மூன்று)


1930 ல், அமெரிக்க பங்குச்சந்தையில் ஏற்பட்ட பொருளாதார சரிவு, இலங்கையை எந்தளவு பாதித்துள்ளது? உலக பொருளாதார பிரச்சினைக்கும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் இடையில் தொடர்புண்டா? எப்போதும், இனம், தேசியம், என்று ஆழமாக அலசும் அறிஞர்கள், பொருளாதாரப் பிரச்சினையை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கும் காரணம் என்ன? இலங்கை இனப்பிரச்சினைக்கான நதிமூலம் குறித்து, சிங்கள-தமிழ் தேசியவாதிகள் என்ன கருதுகிறார்கள். அவர்களிடமே அந்தக் கேள்வியை கேட்போம்.


இலங்கை இனப்பிரச்சினையின் மூல காரணம் என்ன?

இந்தக் கேள்விக்கு, ஒரு தமிழ் தேசியவாதியின் பதிலின் சாராம்சம் பின்வருமாறு அமைந்திருக்கும்.

"சிங்களவர்கள் பிறப்பிலேயே இனவெறியர்கள். சுதந்திரத்திற்கு பின்னரான தமிழ் விரோத கலவரங்களே அதற்கு சாட்சியம். மகாவம்சம், துட்டகைமுனு காலத்தில் இருந்து தமிழர் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வருகின்றனர்."

இதே கேள்விக்கு, ஒரு சிங்கள தேசியவாதியின் பதில் எவ்வாறு அமைந்திருக்கும்?

"தமிழ் பிரதேசத்தில் சிங்களவர் எவரும் வாழமுடியாத அளவிற்கு, தமிழர்கள் இனவெறியர்கள். இந்துக்களான தமிழர்கள், இந்திய வல்லரசின் துணையோடு, சிங்கள-பௌத்த சிறுபான்மை இனத்தை அடக்க நினைக்கின்றனர்."

இரண்டு மொழித் தேசியவாதிகளும்,"ஏகாதிபத்தியம்" என்ற சொல்லை திரிபு படுத்தி பாவித்து வந்துள்ளனர். தமிழர்களைப் பொறுத்த வரையில், "சிங்கள ஏகாதிபத்தியமே உலகில் மிகவும் கொடுமையானது" என்கின்றனர். சிங்களவர்களைப் பொறுத்த வரையில், "இந்திய ஏகாதிபத்தியம் சிங்களவர்களின் விடுதலையை நசுக்கி வருகின்றது." இந்த தேசியவாத சொல்லாடலுக்கு நிகரான மார்க்சிய அர்த்தம் தேட முடியாது. இலங்கை வரலாற்றில், முதன் முறையாக பண்டாரநாயக்க "இந்திய ஏகாதிபத்தியம்" குறித்த கொள்கையை வகுத்திருந்தார். ஆக்ஸ்பெர்ட்டில் கல்வி கற்ற மேட்டுக்குடி புத்திஜீவி அல்லவா? அவரது காலகட்டத்தில் தான், ஐரோப்பாவில் "அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து தேசத்தைக் காக்கும்" பாஸிச-தேசியவாத கொள்கைகள் பிரபலமாகியிருந்தன. அவற்றை இலங்கைக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தால், அரசியல் எதிர்காலம் பிரகாசமானதாக இருக்கும் என்று கணக்குப் போட்டிருப்பார். அப்போது இங்கிலாந்தில் கல்வி கற்ற எதிர்கால மார்க்சிய தலைவர்கள், மிகத் தாமதமாகவே இலங்கைக்கு மார்க்சியத்தை கொண்டு வந்தார்கள். பண்டாரநாயக்க அந்த இடைவெளிக்குள் நுழைந்து, "வெகுஜன அரசியலை" (Populism) அறிமுகம் செய்தார்.

இந்தியாவுடனான "தொப்புள்கொடி உறவு", சிங்கள பேரினவாதத்தின் இருப்பையும் நியாயப் படுத்தி வந்துள்ளது. "தமிழ்நாட்டுக்கு வரும் சிங்களவர்களை அடிப்பது நியாயம்." என்று அரை வேக்காட்டு அரசியல் பேசும் பேர்வழிகள், இனக்குரோத நெருப்புக்கு எண்ணை வார்க்கின்றனர். ஏனெனில், இனப்பிரச்சினையின் கரு, பரஸ்பர புரிந்துணர்வின்மையால் தான் உருவானது. தமிழகத் தமிழர்கள் பலர் சிங்களவர்களை நேரில் பார்த்ததில்லை. அதே போல, தமது வாழ்க்கையில் ஒரு தடவை கூட தமிழர்களை கண்ணால் கண்டிராத சிங்களவர்கள் ஏராளம். விவரம் அறியாத மக்களிடம் சென்று, மற்ற இனத்தை பற்றி எப்படிப்பட்ட கட்டுக்கதைகளை கூறினாலும் நம்புவார்கள். ஈழத் தமிழர்கள், மொழி காரணமாக தமிழ்நாட்டுடன் குறைந்தளவேனும் உறவுகளைப் பேணி வந்துள்ளனர். ஆனால், சிங்களவர்களுக்கு அத்தகைய கலாச்சார பிணைப்பு ஏதுமில்லை. அசோக சக்கரவர்த்தியின் காலத்திற்குப் பின்னர், இந்தியாவிடம் இருந்து தொடர்புகளை துண்டித்துக் கொண்ட பௌத்த மதம், தனிமைப் படுத்தப்பட்ட தீவான இலங்கையில் நிலை கொண்டிருந்தது. அதனால், சமய ரீதியான பிணைப்பும் இருக்கவில்லை.

வசதி படைத்த சிங்கள மேட்டுக்குடியினர் கூட, அருகில் இருக்கும் இந்தியாவுக்கு சென்று வருவதில்லை. அவர்கள் வருடத்திற்கு ஒரு தடவை, இங்கிலாந்து சென்று வந்திருப்பார்கள். ஒரு வேளை, கப்பலோ, விமானமோ, இங்கிலாந்து போகும் வழியில், இந்தியாவில் தரித்துச் சென்றிருக்கும். அப்போது மட்டும் எட்டிப் பார்ப்பதோடு சரி. இதனால், இங்கிலாந்து பற்றி அதிகம் அறிந்து வைத்திருந்த அளவிற்கு, இந்தியா பற்றி அறியும் ஆவல் துளி கூட இருக்கவில்லை. அன்று நடந்த பொதுக்கூட்டங்களில், பண்டாரநாயக்க "இந்திய அச்சுறுத்தல்" குறித்து எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருந்தார். உண்மையிலேயே அவரும் இந்தியா குறித்து தவறான கருத்துகளை கொண்டிருக்கலாம். இந்திய அச்சுறுத்தல் பற்றிய பயம், இன்று மேலைத்தேய நாடுகளில் நிலவும் வெளிநாட்டவர் மீதான வெறுப்பை ஒத்தது.

அன்றைய இலங்கையின் பொருளாதார பின்னணியை, இவ்விடத்தில் ஆராய்வது அவசியம். ஒரு காலத்தில், இலங்கையின் பொருளாதாரம், சிங்கப்பூர், மலேசியாவை விட மேன் நிலையில் இருந்தது. அன்று, தொழிலுக்காக வேறு நாடுகளுக்கு செல்லும் இலங்கையரைக் காண்பதரிது. (காலனிய சேவையில் ஈடுபட்ட நடுத்தர வர்க்கத்தினர் விதிவிலக்கு.) ஆனால், பிற ஆசிய நாட்டவர்கள், இலங்கைக்கு வேலை தேடி வந்தார்கள். பிரிட்டிஷ் காலனியான சிலோனின் பொருளாதாரம் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருந்தது. உலக சந்தையில் அதிக இலாபம் தரும் பெருந்தோட்டச் செய்கை காரணமாக, இந்தியாவில் இருந்து ஒப்பந்தக் கூலிகள் தருவிக்கப்பட்டனர். விளைபொருட்களின் ஏற்றுமதியினால் கொழும்பு துறைமுகமும் அபிவிருத்தி அடைந்தது. துறைமுகத்தில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்தன. கொழும்பு துறைமுகத்தில் வேலை, அதிக சம்பளம் என்ற செய்தி, இந்திய தொழிலாளர்களை காந்தமாக கவர்ந்திழுத்தது. இந்தியாவில் இருந்து தமிழர்களும், தெலுங்கர்களும், மலையாளிகளும் குடும்பத்துடன் வந்து சேர்ந்தனர். ஒரு வழிப் பயணச்சீட்டுடன் கப்பலேறி வந்ததினால், இலங்கையர்கள் அவர்களை "கள்ளத் தோணிகள்" எள்ளி நகையாடுவது வழக்கம். துறைமுகத்தை சுற்றி, இந்திய உழைக்கும் மக்களின் குடியிருப்புகள் பெருகின.இன்றைக்கும் கொச்சிக்கடை, கொட்டாஞ்சேனை வட்டாரங்களில் இந்திய வம்சாவழித் தமிழரின் எண்ணிக்கை அதிகம்.

ஆரம்பத்தில் இந்தியத் தொழிலாளர்களின் வருகைக்கு, சிங்கள மக்கள் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. பொருளாதாரமும் நல்ல நிலையில் இருந்து, உள்ளூர் மக்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைத்ததால் யாரும் குறைப்படவில்லை. சிங்கள தொழிலாளர் வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் தொழிற்சங்கங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. ஏ.ஈ.குணசிங்க போன்ற தலைவர்களின், தொழிற்சங்க நிறுவனமயப் படுத்தலால், சிங்கள தொழிலாளர்கள் உரிமைகளை கேட்டுப் பெற்றுக் கொண்டிருந்தார்கள். உதாரணத்திற்கு, 1927 ம் ஆண்டு, பெப்ரவரி மாதம், சுமார் 5000 துறைமுகத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் குதித்தார்கள். அனேகமாக, இது போன்ற "ஆபத்துகளை தவிர்ப்பதற்காக" துறைமுக முதலாளிகள், இந்திய தொழிலாளர்களை வேலைக்கு சேர்ப்பதில் அதிக அக்கறை காட்டி இருப்பார்கள். ஆனால், அது மறு பக்கத்தில் தீய விளைவுகளையும் ஏற்படுத்தியது.

சிங்கள தொழிலாளர்களின் உரிமைகளுக்காக பாடுபட்ட தலைசிறந்த தொழிற்சங்கவாதியான ஏ.இ. குணசிங்க இனவாத அரசியலில் குதித்தது துரதிர்ஷ்டகரமானது. சிங்கள தொழிலார்களின் நலன்களுக்காக, இந்திய தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டுமென போராடினார். அது சம்பந்தமான கோரிக்கைகள், பல தடவை இனவாத அடிப்படையைக் கொண்டிருந்தன. இதே நேரம், சிங்கள தொழிலாளர் சார்பாக துறைமுக முதலாளிகளுடன் பேரம் பேசி மூக்குடைபட்ட பண்டாரநாயக்கவும் இனவாத அரசியலை கையில் எடுத்தார். ஏ.இ. குனசிங்கவுக்கு மேலாக இந்திய எதிர்ப்பு இனவாதம் பேசி, மாநகர சபைத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். பொருளாதார பிரச்சினையை, இனப் பிரச்சினையாக திசை திருப்புவதற்கு ஏற்ற காலம் கனிந்து வந்தது. பண்டாரநாயக்கவின் அதிர்ஷ்டம், நியூ யார்க் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டது.

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி, ஐரோப்பாவிலும் எதிரொலித்தது. ஐரோப்பிய நாடுகள் எங்கும், வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்து, பாஸிச சக்திகள் வளர்ச்சி அடைந்தன. இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையும், ஏற்றுமதிப் பொருளாதாரமும், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்தது. இதனால், அங்கு ஏற்பட்ட நெருக்கடி இலங்கையிலும் எதிரொலித்தது. பெருந்தொகையான சிங்கள தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள். பொருளாதார பிரச்சினை அதிகரித்தது. அந்த சந்தர்ப்பத்தில், அரசியல் வாழ்வில் ஈடுபட்ட பண்டாரநாயக்க, இனவாதப் பேச்சுகள் மூலம் வேலையிழந்த மக்களைக் கவர்ந்தார். "சிங்கள மக்களின் வேலையில்லாப் பிரச்சினைக்கு காரணம், இந்தியத் தொழிலாளர்கள். மண்ணின் மைந்தர்களான சிங்களவர்களின் தொழில் வாய்ப்புகளை, அந்நியர்களான இந்தியர்கள் பறிக்கின்றனர். இந்தியர்களை வெளியேற்றுவதன் மூலம், சிங்கள மக்களுக்கு தொழில்களை உருவாக்கலாம்." பண்டாரநாயக்கவின் இது போன்ற பேச்சுகள் பிரபலமடையத் தொடங்கின. மேடைப் பேச்சுடன் மட்டும் நிற்காது, துறைமுகத்தில் வேலை செய்யும் இந்தியர்களை வெளியேற்றுமாறு, முதலாளிகளுக்கு அழுத்தம் கொடுத்தார்.

இன்றைக்கும், நகை வியாபாரத்தில் ஈடுபடும் செட்டியார்களும், இரும்பு வியாபாரத்தில் ஈடுபடும் நாடார்களும், இலங்கை பொருளாதாரத்தில் குறிப்பிட்டளவு பங்களித்து வருகின்றனர். ஒரு பக்கம் இலங்கை, இந்திய அரசுகளுடன் நெருக்கமான உறவைப் பேணிக் கொண்டே, இன்னொரு பக்கம் தமிழ் தேசிய ஊடகங்களையும் வளர்த்து வந்துள்ளனர். இவர்களில் பலர், இரண்டு நாடுகளினதும் பிரஜாவுரிமையை வைத்திருக்கின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்திய சிறு முதலாளிகளும், வட்டிக் கடைக்காரரும், சிங்கள நாட்டுப்புறமெங்கும் பரவியிருந்தனர். காலனிய அரசின் சலுகைகளை பயன்படுத்தி, பெருமளவு இந்திய சிறு முதலாளிகள் இலங்கையில் முதலிட்டிருந்தனர், வட்டிக்கு பணம் கொடுத்து வந்தனர். இந்திய முதலாளிகள் சிங்கள மக்களை சுரண்டிக் கொழுத்தது ஒரு புறமிருக்க, அவர்களை அகற்றினால் தமது வர்த்தகத்தை பெருக்கலாம் என்று, சிங்கள முதலாளிகள் கனவு கண்டனர். அன்றைய காலத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்த போதிலும், அவர்கள் பண்டாரநாயக்கவின் இனவாதப் பேச்சுகளை கண்டிக்கவில்லை. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த ஆங்கிலேயர்கள், பண்டாரநாயக்க அறிமுகம் செய்த சிங்களப் பேரினவாதத்தை மனதிற்குள் வரவேற்றிருப்பார்கள்.



(தொடரும்)

இந்த தொடரின் முன்னைய பதிவுகள்:


1.சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்
2.பண்டாரநாயக்க, பொன்னம்பலம் : இரு நண்பர்களின் இன அரசியல்

2 comments:

எஸ் சக்திவேல் said...

>அன்றைய இலங்கையின் பொருளாதார பின்னணியை, இவ்விடத்தில் ஆராய்வது அவசியம். ஒரு காலத்தில், இலங்கையின் பொருளாதாரம், சிங்கப்பூர், மலேசியாவை விட மேன் நிலையில் இருந்தது. அன்று, தொழிலுக்காக வேறு நாடுகளுக்கு செல்லும் இலங்கையரைக் காண்பதரிது. (காலனிய சேவையில் ஈடுபட்ட நடுத்தர வர்க்கத்தினர் விதிவிலக்கு.) ஆனால், பிற ஆசிய நாட்டவர்கள், இலங்கைக்கு வேலை தேடி வந்தார்கள்.

ஆம் என் தாத்தா, ஆச்சி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

aotspr said...

உண்மையான பதிவு.
பதிவுக்கு நன்றி.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com