Monday, August 29, 2011

தூக்குத் தண்டனை : அரச அங்கீகாரம் பெற்ற கொலைக் கலாச்சாரம்

ராஜீவ் கொலை வழக்கில் கைதான, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கிலே போடுவதற்கான தேதி குறிக்கப் பட்டமை, பலத்த அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது. பெரும்பாலான உலக நாடுகள் தூக்குத் தண்டனையை ஒழித்து விட்டன. தூக்குத் தண்டனை என்பது அரச அங்கீகாரம் பெற்ற கொலை என்பதில் ஐயமில்லை. இந்த நேரத்தில், இனத்துவ அடையாளங்களை கடந்து, மனித நேயத்திற்காக குரல் எழுப்புவது எமது கடமை. ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய நபர்கள் மரணமடைந்து விட்ட நிலையில், நேரடித் தொடர்பற்றவர்களை தூக்கில் போடும் அட்டூழியத்தை கண்டிக்க வேண்டும். செய்யாத குற்றத்திற்காக இருபது வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த பிறகு, இப்போது தூக்கிலே போடுவதற்கு அரசியல் உள்நோக்கம் இருக்கலாம் என நம்பப் படுகின்றது. இதனை அரசியல் கருத்துச் சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாக கருத வேண்டியுள்ளது. இந்திய அரசு ராஜீவ் கொலை வழக்கில் காட்டிய தீவிரத்தை, ஈழத்தில் இந்தியப் படைகள் புரிந்த போர்க்குற்றங்களை விசாரிப்பதிலும் காட்ட வேண்டும். படுகொலைகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு காலந் தாழ்த்தியாவது தண்டனை வழங்கி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

தூக்குத் தண்டனை எதிர்த்துப் போராடுவதற்கு, சர்வதேச ஒற்றுமை இயக்கத்தை கட்டி எழுப்புவது அவசியம். குறுகிய இன மான உணர்வுகளை தூண்டி விடுவது, இந்திய அரசின் பிரித்தாளும் சூழ்ச்சியை நிறைவேற்றவே வழி வகுக்கும். ஏற்கனவே அப்சல் குரு, தேவேந்தர் பால் சிங் ஆகியோருக்கு இந்திய நடுவண் அரசால் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை எதிர்த்த போராட்டத்தின் தொடர்ச்சி இது. வேலூர் சிறையில் தூக்குக் கயிற்றை முத்தமிடத் தயாராக உள்ள மூவருக்காக மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென போராடுவோம். ஜனநாயக நாடென்று கூறிக் கொள்ளும் தகமையை இந்தியா இழந்து விட்டது. நாகரீக உலகம் நிராகரிக்கும் தூக்குத் தண்டனை முறையை, இந்தியா இன்னமும் பின்பற்றுவதற்காக, இந்திய மக்கள் அனைவரும் வெட்கப் பட வேண்டியுள்ளது. ஏற்கனவே இந்திய அரசு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டுமென, சர்வதேச மனித உரிமை நிறுவனங்கள் அறவழிப் போராட்டத்தை நடத்தி வருகின்றன. சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாத இந்திய அரசு, மீண்டும் மூன்று கைதிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்துள்ளது. மரண தண்டனை என்ற பெயரில் அரசு புரியும் கொலைகளுக்கு, நாகரீக உலகின் எதிர்ப்பை தெரிவிப்போம்.

உலகில் இன்னமும் தூக்குத் தண்டனையை அமுல்படுத்தும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. அங்கே முமியா அபு ஜமால் என்ற கறுப்பின உரிமைப் போராளி மரண தண்டனைக்காக காத்திருக்கிறார். அமெரிக்க கறுப்பினத்தவர்களின் பாதுகாப்பு கவசமாக திகழ்ந்த கருஞ் சிறுத்தைகள் அமைப்பின் உறுப்பினர். வன்முறையில் ஈடுபடாத, பேனாவின் வலிமையை நம்பிய ஊடகவியலாளர். சாட்சியங்கள் இல்லாத போதிலும், "ஒரு வெள்ளையின பொலிஸ்காரரின் கொலை" தொடர்பாக கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. நிரபராதியான முமியா அபு ஜமாலின் மரண தண்டனயை இரத்து செய்யக் கோரி,கடந்த பதினைந்து வருடங்களாக உலகளாவிய போராட்டங்கள் நடந்து வருகின்றன. புலம்பெயர் நாடுகளில், முமியா அபுஜமால் விடுதலைக்காக, தமிழ் உழைக்கும் மக்களும் குரல் கொடுத்துள்ளனர். சர்வதேச உழைக்கும் மக்களுடன் இணைந்து, அமெரிக்காவின் மனித நேயமற்ற மரண தண்டனைகளை ஒழிப்பதற்காக போராடுவதும் அவசியமானது.

ஈரானின் மதவாத கொடுங்கோல் அரசு, மக்களுக்காக போராடும் போராளிகளை அடக்குவதற்காக தூக்குத் தண்டனைகளை நிறைவேற்றி வருகின்றது. வருடந்தோறும் அரசியல் கைதிகளை தூக்கில் போடுவதன் மூலம், உழைக்கும் மக்களின் குரல்வளையை நெரிக்கப் பார்க்கின்றது. சமதர்ம கொள்கையை நம்பிய குற்றத்திற்காக தூக்கில் தொங்கிய அப்பாவி இளைஞர்கள் ஏராளம். அவர்களது தோழர்கள், புலம்பெயர் நாடுகளில் தூக்குத் தண்டனையை எதிர்த்து போராடி வருகின்றனர். கடந்த காலங்களில், ஈரானிய அரசியல் கைதிகளின் மனித உரிமைக்காக, தமிழர்களின் ஆதரவும் பதிவு செய்யப் பட்டுள்ளது. புலம்பெயர் நாடுகளில், அனைத்துலக உழைக்கும் மக்களுடன் கை கோர்ப்போம். சர்வதேச மட்டத்தில் தூக்குத் தண்டனையை ஒழிப்பதற்காக போராடுவோம்.

5 comments:

சார்வாகன் said...

/மரண தண்டனை என்ற பெயரில் அரசு புரியும் கொலைகளுக்கு, நாகரீக உலகின் எதிர்ப்பை தெரிவிப்போம். /

மிக சரியான் வார்த்தைகள்.
I second this

சூனிய விகடன் said...

தூக்குத் தண்டனை மட்டுமல்ல ...எந்த ஒரு தண்டனையுமே ...அது ஆறு மாத கடுங்காவல் தண்டனையாக இருந்தாலும் அது அரச அங்கீகாரம் பெற்ற சாடிசம் தான். ஒரு மனிதனைத் துன்புறுத்தவோ ....அடைத்து வைக்கவோ அரசாங்கத்துக்கு எந்த ஒரு உரிமையுமில்லை. நமது அடுத்த கட்ட போராட்டம் இதை மையப்படுத்திதான் இருக்க வேண்டும். தண்டனை மனிதர்கள் தமக்குள்ள ஒருத்தருக்கொருத்தர் கொடுத்துக்கொள்ளலாமே தவிர அரசாங்கம் தண்டனை கொடுக்க அனுமதிக்கக்கூடாது

J.P Josephine Baba said...

இதுவே சரியான தீர்வு! வாழ்த்துக்கள் நண்பா.

Tsri1 said...

தூக்குத் தண்டனை என்ற அரச அங்கீகாரம் பெற்ற கொலைக் கலாச்சாரத்தை இந்தியாவில் தமிழகத்தில் எதிர்ப்பவர்கள் யார் என்று பார்த்தால் இலங்கையில் தங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களுக்கு மரண தண்டனைகள் நிறைவேற்றிய புலிகளின் கொலைக் கலாச்சாரத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்பதை கண்டு கொள்ள முடியும். தமிழகத்தில் நடை பெறுவது இன ரீதியான எதிர்ப்பே தவிர மரண தண்டனையை எதிர்க்க வேண்டும் என்ற நாகரீக எண்ணமெல்லாம் கிடையாது.

aotspr said...

மிகவும் சரியான பதிவு.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com