Friday, February 04, 2011

இனப் பகையால் பிளவுண்ட சோவியத் ஒன்றியம்


[ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?]

(பகுதி : 5)

1917 ம் ஆண்டு, சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் போல்ஷெவிக் புரட்சியினால் சார் மன்னனின் சாம்ராஜ்யம் வீழ்ந்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பல சுதந்திர நாடுகள் தோன்றின. ஆர்மேனியா, அசர்பைசான், ஜோர்ஜியா போன்ற நாடுகளில் தேசியவாதிகள் ஆட்சியைப் பிடித்தனர். அந்த புதிய தேசங்களின் சுதந்திரம் அதிக பட்சம் ஒரு வருடம் நீடித்திருக்கும். கம்யூனிச போல்ஷெவிக் படைகள் தேவைப்பட்டால் வன்முறை பிரயோகித்து தேசியவாத அரசுகளை கலைத்து விட்டனர். அதற்கு இரண்டு காரணங்கள். தேசியவாதம் எப்போதும் பாட்டாளிவர்க்க ஒற்றுமையைக் குலைக்கும் சக்தியாகவே இருக்கும். மற்றது, பிரிட்டன் போன்ற அந்நிய நாட்டுப் படைகள் இத்தகைய சுதந்திர தேசங்களில் நிலை கொள்ளும். (ரஷ்யாவில் ஏற்கனவே பன்னாட்டுப் படைகள் குவிக்கப்பட்டிருந்தன.) சோவியத் யூனியனின் உடைவுக்குப் பின்னர், பால்ட்டிக் நாடுகளிலும், ஜோர்ஜியாவிலும் நேட்டோப் படைகள் வந்து விட்டமை குறிப்பிடத் தக்கது. சில நேரம் சித்தாந்தத்தை விட, பூகோள அரசியல் ஒரு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்றது.

சோவியத் யூனியன் ஒரே நாடாக ஐ.நா. சபையில் அங்கம் வகித்த காலத்தில், அதன் ஒரு பகுதியான பெலாரஸ் தனியான அங்கத்துவம் கொண்டிருந்தது. அதற்கு காரணம், ரஷ்யாவுக்கு அடுத்ததாக ரஷ்யர்கள் பெரும்பான்மையாக பெலாரஸ் குடியரசில் வசித்தனர். அங்கே தனியாக பெலாரஸ் எனப்படும் மொழியைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். இன்றைக்கும் அரச எதிர்ப்பாளர்கள் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான். பெலாரஸ் மொழி கிட்டத்தட்ட போலிஷ் மொழி போன்றிருக்கும். இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னர், போலந்தின் மேற்குப் பகுதிகள் பெலாரசுடன் சேர்க்கப்பட்டன. பிற்காலத்தில் சோவியத் யூனியன் போலந்தின் பகுதிகளை விழுங்கி விட்டது என்று மேற்கில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அன்றைய நிலையில், இரண்டு உலகப்போர்களுக்கு காரணமான ஜெர்மனியின் மேலாதிக்கத்தை குறைப்பதற்கு அத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகக் கருதப்பட்டன.

எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா போன்ற பால்ட்டிக் நாடுகளில் ஜெர்மன் நாஜிகளுக்கு ஆதரவான சக்திகள் பலமாக இருந்தன. அதே போன்று உக்ரைனில் (ரஷ்ய மொழிக் குடும்பத்தை சேர்ந்த) உக்ரைன் மொழி பேசும் மக்கள் நாஜி ஆக்கிரமிப்பாளர்களுடன் ஒத்துழைத்தனர். இத்தகைய காரணங்களால், இரண்டாம் உலகப்போரின் பின்னர் குடிசன பரம்பலில் மாற்றங்கள் செய்யப்பட்டன. மேற்குறிப்பிட்ட குடியரசுகளில் ரஷ்யர்களின் குடியேற்றம் அதிகரிக்கப்பட்டது. அதே நேரம் நாஜிகளுடன் ஒத்துழைத்த உள்ளூர்வாசிகள் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இன்று சுதந்திரமடைந்த பால்ட்டிக் நாடுகளில் ரஷ்யர்களுக்கு குடியுரிமை வேண்டுமானால் உள்ளூர் மொழியில் பாண்டித்தியம் பெற்றிருக்க வேண்டுமென நிர்ப்பந்திக்கப் படுகின்றது. இன்றைய சுதந்திர உக்ரைனில், "ரஷ்ய- உக்ரைனிய இன மோதல்" கட்சி அரசியலில் எதிரொலிக்கின்றது.

முன்னர் ஒரு காலத்தில் இருந்த சாம்ராஜ்யங்கள் அழிந்து குறுகிய பிரதேசமாக இன்னொரு சாம்ராஜ்யத்தின் பகுதியாகி விடுகின்றன. ஒரு காலத்தில் ஆர்மேனியா கிழக்கு துருக்கி வரை பரவியிருந்தது. ஆர்மேனியர்களின் புனிதப் பிரதேசமான அராரட் மலை உட்பட பல பகுதிகள் துருக்கியர் வசமாகி விட்டன. அங்கு வாழ்ந்த ஆர்மேனியர்கள் இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, துருக்கிய மக்களை குடியேற்றி விட்டார்கள். ரஷ்யாவினால் கைப்பற்றப்பட்ட ஆர்மேனியா, சோவியத் குடியரசாகியது. தற்போது சுதந்திர ஆர்மேனிய தேசமாகவுள்ளது. அதே போல இஸ்லாமியரான, துருக்கி குடும்ப மொழிகளைப் பேசும் மத்திய ஆசிய நாடுளைச் சேர்ந்த மக்கள், ஒரு காலத்தில் மாபெரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் பிரஜைகளாக வாழ்ந்தவர்கள். புக்காரா, சமர்கன்ட் போன்ற நகரங்கள் இன்றைக்கும் இஸ்லாமிய நாகரீகத்திற்கு பெருமை சேர்க்கின்றன.

ஒரு காலத்தில் "துருக்கேஸ்தான்" என அறியப்பட்ட மத்திய ஆசியப் பிரதேசம் ஸ்டாலினால் மொழிவாரி குடியரசுகளாக பிரிக்கப்பட்டன. காசக்ஸ்தான், கிரிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகியன ஒன்றுக்கொன்று தொடர்புடைய துருக்கி மொழிகளைப் பேசும் நாடுகள். இவற்றில் தாஜிகிஸ்தான் மட்டும் பார்சி(ஈரான்) மொழி பேசும் நாடாகும்.
சாமர்கன்ட், புக்காரா போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற நகரங்களிலும் தாஜிக் மொழி பேசும் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் ஸ்டாலின் அவற்றை உஸ்பெகிஸ்தானுக்கு கொடுத்து விட்டார். இன்றைக்கும் அது இனப்பிரச்சினையை தூண்டும் சச்சரவுக்குட்பட்ட பிரதேசமாகும். மத்திய ஆசியாவில் பெரும்பகுதி பாலைவனப் பிரதேசத்தைக் கொண்டது. பெர்கனா பள்ளத்தாக்கு மட்டும் செழிப்பான மண்வளத்தைக் கொண்டது. இயற்கை வளம் நிறைந்த பெர்கனா பள்ளத்தாக்கு உஸ்பெகிஸ்தானுக்கு சொந்தமானாலும், கிரிகிஸ்தான், தாஜிகிஸ்தான் போன்ற நாடுகள் அங்கிருந்து கிடைக்கும் வளத்தில் தங்கியுள்ளன. இது ஒரு வகையில், தமிழ் நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் இடையில் நடக்கும் காவிரி நீர்ப் பிரச்சினை போன்றது. பெர்கனா வளங்கள் யாருக்கு சொந்தம் என்ற சச்சரவுகள் அடிக்கடி இனக்கலவரங்களில் முடிகின்றன. இன்று வரை தீர்த்து வைக்கப்படாத பிரச்சினை அது.

இரண்டு குடியரசுகளுக்கு இடையில் உருவான இனப்பகை, சோவியத் யூனியன் உடைவுக்கு வழிவகுத்தது மட்டுமல்லாது, பல உயிர்களைக் காவு கொண்ட போரில் சென்று முடிந்தது. ஐரோப்பாவின் முதலாவது கிறிஸ்தவ நாடான ஆர்மேனியாவும், இஸ்லாமிய-துருக்கி சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த அசர்பைஜானும் ஜென்மப் பகைவர்கள்.
ஸ்டாலின் அவற்றை குடியரசுகளாக்கிய போது, ஒன்றில் மற்றொன்று தங்கியிருக்க வைத்தார். ஆர்மேனியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாகார்னோ-கரபாக் என்ற பிரதேசம் அசர்பைஜான் வசம் சென்றது. அதே போல, அசர்பைஜானியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாக்ஷிவன் பிரதேசம் ஆர்மேனியா வசம் சென்றது. பரம்பரைப் பகைவர்களான இரண்டு இனங்களும், ஒருவர் தேசத்தில் மற்றவர் சிறுபான்மை இனமாக வாழ்ந்தனர். சோவியத் யூனியனின் வீழ்ச்சியின் பின்னர், "நாகார்னோ-கர்பக் ஆர்மேனியர்கள்" தனிநாடு கோரினார்கள். அசர்பைஜான் படைகள் அந்த எழுச்சியை அடக்கியது. சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த ஆர்மேனியப் படைகள், நாகர்னோ-கரபாக் பிரதேசத்தை ஆக்கிரமித்து ஆர்மேனியாவுடன் இணைத்தன.

இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை சுமுகமாக தீர்த்துக் கொண்டால், நாடு சுபீட்சமடையும் என்பதற்கு காசக்ஸ்தான் சிறந்த எடுத்துக்காட்டு. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்த குடியரசு என்ற போதிலும் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. வளைகுடா நாடுகளில் காணப்படுவதை விட அதிக எண்ணெய் வளம் கொண்டது. துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த காசாக் மொழி பேசும் மக்கள் சொந்த நாட்டிலேயே சிறுபான்மையினர்! மொத்த மக்கட்தொகையில் ஐம்பது வீதம் ரஷ்யர்கள். பத்து வீதம் உக்ரைன், செச்சென், ஜெர்மன் போன்ற பிற இனங்களைச் சேர்ந்தவர்கள். காசாக்ஸ்தான் சுதந்திரமடைந்த பின்னர் நிறைய ரஷ்யர்களும், ஜெர்மனியர்களும் வெளியேறி விட்டனர். இதனால் காசாக் மக்கள் பெரும்பான்மையாகும் வாய்ப்புக் கிடைத்தது. இருப்பினும் அதிகளவு தொழிற்தேர்ச்சி பெற்றவர்களும், தொழில்நுட்ப அறிஞர்களும் ரஷ்யர்கள். இதனால் அவர்களின் சேவை நாட்டுக்கு தேவை என்பதை காசாக்ஸ்தான் ஆட்சியாளர்கள் உணர்ந்துள்ளனர். சரியான திட்டமிடல் காரணமாக இன்று காசக்ஸ்தான் பணக்கார நாடாக மாறி விட்டது. முன்னாள் சோவியத் குடியரசுகளில் இனப்பிரச்சினை அற்ற ஒரேயொரு நாடு அது மட்டும் தான்.

சோவியத் காலத்தில் ஒவ்வொரு குடியரசும் தனக்கென தனியான மொழியைக் கொண்டிருந்த போதிலும், ஆளும் வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தியவர்கள் ரஷ்ய மொழியில் பாண்டித்தியம் பெற்றிருந்தனர். ரஷ்ய மொழிப் பாடசாலைகளே சிறந்த கல்வி நிலையங்களாக இருந்ததமை ஒரு காரணம். ரஷ்ய மொழியில் பல துறை சார்ந்த வளர்ச்சி காணப்பட்டமை இன்னொரு காரணம். பலநூறு மொழிகளைப் பேசும் மக்கள் அனைவரும், பாட்டாளி வர்க்க கொள்கையின் கீழே கொண்டு வரப்பட்டார்கள். கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள் கூட உயர்கல்வி கற்று முன்னுக்கு வந்தனர். எல்லோரும் சமமாக நடத்தப் பட்டதால், இன, மொழி ரீதியான முரண்பாடுகள் மிக அரிதாக காணப்பட்டன. முன்னாள் சோவியத் யூனியனில் சோஷலிசத்தில் பால் வெறுப்புக் கொண்டவர்கள் வாழ்ந்தனர். அப்படியானவர்கள் எல்லா இனத்தவர் மத்தியிலும் காணப்பட்டனர். புரட்சியின் ஆரம்ப காலங்களில் மதவாத சக்திகள் அடக்கப்பட்டன. பின்னர் அரச சார்பு மதகுருக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் மதத்தின் பெயரால் இனப்பிரச்சினை தலைதூக்க முடியவில்லை.

இன்று முதலாளித்துவப் பொருளாதாரத்தில், அரிதாகிப் போன இயற்கை வளங்களைப் பங்கிடுவதில் ஏற்படும் போட்டி இனப்பிரச்சினைகளுக்கு காரணமாக உள்ளது. வலியது பிழைக்கும் என்பது முதலாளித்துவ விதிகளில் ஒன்று. ஆட்சியாளர்கள் பெரும்பான்மை சமூகத்தின் ஆதரவைப் பெற விரும்புகின்றனர். அவர்களது பதவியை தக்க வைக்க அது உதவுகின்றது. முன்னாள் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பின்னர் தேசியவாதிகளாக மாறினார்கள். மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டு தமது மத அடையாளங்களை உலகறியச் செய்தனர். இவர்கள் மதத்தை தழுவியமை, சுய விருப்புச் சார்ந்தன்று. கிறிஸ்தவ நாட்டை சேர்ந்த ஒரு தலைவர் இஸ்லாமிய மதத்தையோ, அல்லது முஸ்லிம் நாட்டைச் சேர்ந்த ஒரு தலைவர் கிறிஸ்தவ மதத்தையோ தழுவவில்லை. பெரும்பான்மை சமூகத்தின் இன,மத அடையாளத்தை பின்பற்றுவதே ஆள்பவருக்கு  நன்மை உண்டாக்கும்.

(முற்றும்)

இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:

1.ஒரு தேசிய இனத்தை உருவாக்குவது எப்படி?
2.பேரினவாதத்திற்கு ஆதரவான மேலைத்தேய சுயநிர்ணய உரிமை
3.காலனிய எச்சங்களான தேசிய இனப்பிரச்சினைகள்
4.சோவியத் தேசிய இனங்களின் சத்திய சோதனை

4 comments:

sivakumar said...

தேசியவாதம் பாட்டாளிவர்க்கத்திற்கு எதிரானது என்று தேசியவாத அரசுகள் கலைக்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தில் அவை இணைக்கப்பட்ட போதும் அவை பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணயத்தை பெற்றிருந்தன. சோவியத் ஒன்றியத்தில் அனைத்துப் பகுதிகளுக்கும் பல்வேறு இனத்தவர்களும் வெவ்வேறு நாடுகளில் குடியேற்றப்பட்டனர் (சீனாவில் ஹான் சீனர்கள் குடியேற்றப்பட்டது போல) இது அந்தந்தப் பகுதிகளின் வளர்ச்சிக்காக என்பது புரிகிறது. இருப்பினும் அந்த நாடு பிரிந்து செல்ல விரும்பினால் பொதுவுடமை நாடாக இராமல், அதில் மத, இன தேசியம் வளர்ந்துவிட்டதாகத்தானே பொருள், அப்ப்டிப் பிரிந்த நாடுகள் தமது பகுதிகளில் குடியேற்றப்பட்டவர்களை எதிரிகளாகக் காட்டும் அரசியல்தான் நடக்கும், இதனால் இனப்பிரச்சனை இரத்த ஆறு ஓடவைக்கும் என்பதெல்லாம் தெரிந்திருக்கும்தானே ? இதைத் தவிர்ப்பதற்கான தொலைநோக்காக எந்தத் திட்டமும் சோவியத் ஒன்றியத்திடம் இருந்ததா?

Kalaiyarasan said...

சோவியத் இனங்களின் பிரச்சினையை புரிந்து கொண்டால், அரை வாசி உலகைப் புரிந்து கொள்ளலாம். இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை தீர்க்க இரண்டு திட்டங்கள் கொண்டு வரப் பட்டன. ஒன்று: பொருளாதார சார்புத் தன்மை இரண்டு: பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்
தேசிய இனங்களுக்கான சுயாட்சிப் பிரதேசம் எல்லாம் சமூக-அரசியல் கட்டமைப்பு மட்டுமே. அவை தனியான பொருளாதாரத்தைக் கொண்டிருக்கவில்லை. பொருளாதாரக் கட்டமைப்பு ஒரே நாடு போன்றே இருந்தது. எல்லாம் மொஸ்கோ சென்று பின்னர் அங்கிருந்து விநியோகிக்கப்பட்டன. உதாரணத்திற்கு காசக்ஸ்தான், அசர்பைஜான் எண்ணெய் குழாய்கள் மொஸ்கோவை நோக்கி சென்றன. அங்கிருந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் வரை எண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு குடியரசும் சிறப்புத் தன்மை கொண்ட பொருளாதார உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டது. உஸ்பெகிஸ்தானில் மித மிஞ்சிய பருத்தி உற்பத்தி காரணமாக நீர் நிலைகள் கூட காய்ந்தன. இன்று பிரிந்து சென்ற குடியரசுகள் பொருளாதார சார்புத் தன்மையில் இருந்து விடுபட கஷ்டப்படுகின்றன. ரஷ்யாவின் செல்வாக்கை மீறி செயற்பட முடியாமல் உள்ளன. பால்டிக் நாடுகள் ஒரு நல்ல உதாரணம். அவர்களுக்கு ரஷ்யா முதலாவது எதிரி. இப்போது ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோவில் எல்லாம் சேர்ந்து விட்டார்கள். ஆனாலும் ரஷ்யா ஒரு நாள் எண்ணெய், எரிவாயு விநியோகத்தை நிறுத்தினால், அந்த நாடுகளின் பொருளாதாரம் ஸ்தம்பிதமடைந்து விடும்.

Kalaiyarasan said...

பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் ஸ்டாலின் காலத்தில் சோவியத் யூனியன் முழுவதும் கொண்டுவரப் பட்டது. நிலப்பிரபுக்கள், முதலாளிகள், கந்துவட்டிக் காரர்கள், பணக்கார விவசாயிகள், மதவெறியர்கள், இனவெறியர்கள், என்று புரட்சிக்கு எதிராக யார் நின்றார்களோ அவர்கள் குடும்பத்தோடு சைபீரிய முகாம்களுக்கு கொண்டு சென்று அடைக்கப்பட்டனர். அங்கே அவர்கள் சாதாரண தொழிலாளியின் வாழ்க்கை வாழ்ந்தார்கள். புரட்சிக்கு எதிரானவர்கள் வர்க்க எதிரிகளாக கருதப்பட்டார்கள். அவர்கள் எந்த இனத்தை, மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சரி. சோவியத் யூனியன் முழுவதும் பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை தகுதி போதும். அவர்களுக்கு கல்வி, தொழில் வாய்ப்புகள் சமமாக வழங்கப்பட்டன.

எந்தவொரு சமூகத்திலும் எதிர்க் கருத்தாளர்களை முழுவதுமாக அழித்து விட முடியாது. ஒருவர் இனவாதியாக, மதவாதியாக, தேசியவாதியாக, முதலாளித்துவ வாதியாக, அத்தகைய கருத்துகளை மனதில் வைத்துக் கொண்டு வாழ முடியும். வெளியில் அரசுடன் ஒத்துழைப்பார்கள். ஆனால் வீட்டிற்குள் தமது பிள்ளைகளுக்கு தமது கொள்கைகளை போதிப்பார்கள். தம்மால் முடியாததை தமது பிள்ளைகள் சாதிப்பார்கள் என்று நம்புவார்கள். அவ்வாறு வளர்ந்த பிள்ளைகள் தான் சோவியத் வீழ்ச்சியின் பின்னர் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.

Anonymous said...

you can also grow your children to conquer eelam.