Tuesday, August 31, 2010

செல்வந்த ஈராக் ஏழை நாடானது எப்படி?


(ஈராக் வரலாறு, இறுதிப் பகுதி)

சதாம் ஹுசைன் ஆட்சிக்கு வரும் வரையில் ஈராக் பத்துக்கும் குறையாத ஆட்சிக் கவிழ்ப்புகளை கண்டு விட்டது. 1958 புரட்சியின் பின் அரசமைத்த பிரிகேடியர் காசிமுக்கு பல எதிர்ப்புகள் வந்தன. பொதுவுடமைவாதிகள், தாராளவாதிகள், தேசியவாதிகள் என்று பல பிரிவுகள் தமக்குள் சண்டையிட்டன. 1959 ம் ஆண்டு பல அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டன. முதலில் தேசியவாதிகள் வேட்டையாடப்பட்டு கொலை செய்யப்பட்டனர். வட ஈராக்கில் இனக்கலவரம் தோன்றியது. அதனை சாட்டாக வைத்து கம்யூனிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர். காசிமின் அரசு ஒடுக்குமுறை இயந்திரமாகியது. இதேவேளை நாட்டில் இன்னொரு புதிய அரசியல் சக்தி தோன்றியது. "பாத்" (Ba'th - மீள் உயிர்ப்பு ) எனப் பெயர் கொண்ட அரசியல் இயக்கம் ஆரம்பத்தில் பல்கலைக்கழகங்களில் மட்டுமே பிரபலமாக இருந்தது. பாரிஸில் கல்வி கற்ற சிரியா நாட்டு மாணவர்களால், "அரபு தேசியம், சோஷலிசம், மதச்சார்பின்மை" போன்ற கொள்கைகளை அடிப்படையாக வைத்து இந்த இயக்கம் உருவானது.

சிரியாவில் பாத் கொள்கைகள் பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில், அங்குள்ள கல்லூரிகளில் பயின்று கொண்டிருந்த ஈராக் மாணவர்களும் கவரப்பட்டனர். அவர்கள் ஈராக்கிலும் வேர் விட்டனர். ஈராக் தொழிலாளரை நிறுவனமயப் படுத்தினர். வேலைநிறுத்தங்களை ஒழுங்குபடுத்தி காசிமின் அரசுக்கு நெருக்கடி கொடுத்தனர். பாத் உறுப்பினர்களின் தாக்குதல் குழுவொன்று காசிமை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது. தாக்குதல் குழுவை சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் ஒருவர் மட்டும் தப்பிவிட்டார். அவர் தான் சதாம் ஹுசைன். இந்த சம்பவம் சதாமை ஹீரோ ஸ்தானத்திற்கு உயர்த்தியது. கட்சியின் மத்திய குழுவில் இருந்த உறவினர் ஒருவரின் உதவியால் சதாம் கட்சியின் மேல்மட்டத்திற்கு வர முடிந்தது. 1963 ம் ஆண்டு, இராணுவத்திற்குள் ஊடுருவியிருந்த பாத் கட்சி ஆதரவாளர்கள் திடீர் சதிப்புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தனர். தற்போது பாத் கட்சி நாட்டின் பிரதான கட்சியாகியது. ஆனால் இராணுவ போக்கிலான ஆட்சியாளருக்கும், கட்சிக்கும் இடையில் ஒத்துப் போகவில்லை. 1968 ம் ஆண்டு, மீண்டும் ஒரு சதிப்புரட்சி ஏற்பட்டது. இம்முறை பாத் கட்சி முழுமையான அதிகாரத்தை பெற்றுக் கொண்டது.

பாத் அதிகாரத்தை கைப்பற்றியவுடன் பல நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டன. தேசத்தின் தலைமை "புரட்சிகர கட்டளைப் பணியகம்" என்ற நிறைவேற்று அதிகாரம் கொண்ட அமைப்பின் கீழ் வந்தது. கட்சியின் பெயர் "அரபு பாத் சோஷலிசக் கட்சி" பெயர் மாற்றப் பட்டது. செயலதிபர் அஹ்மத் ஹசன் அல் பாகிர் ஜனாதிபதியாகவும், இராணுவத் தலைமை அதிகாரியாகவும் பதவியேற்றார். சதாம் ஹுசைன் RCC உப தலைவரானார். அன்றிலிருந்து ஈராக் நிலையான ஆட்சியைக் கண்டது. ஆனால் உள்வீட்டு கணக்குத் தீர்த்தல்கள் தொடர்ந்தன. பாத் அரசாங்கத்தை ஏற்றுக் கொள்ளாத கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் தூக்கிலிடப்பட்டார். சில வருடங்களுக்குப் பின்னர், சோவியத் சார்பு கம்யூனிஸ்ட்கள் "தேசிய முற்போக்கு முன்னணி" என்ற பெயரில் அரசாங்கத்தில் சேர்ந்தனர். அரபு தேசியத்தை முதன்மையாகக் கொண்ட பாத் கட்சி, அரபு பேரினவாதக் கூறுகளை கொண்டிருந்தது. அது பிற சிறுபான்மை இனங்களை இரண்டாம்தரப் பிரஜைகளாக பார்த்தது. வடக்கே உரிமைகளை கோரி எழுச்சி பெற்ற குர்த்தியர்களின் போராட்டம் நசுக்கப்பட்டது. குர்தியர்கள் ஆயுதப் போராடத்தை கையிலெடுத்தனர். மலை சார்ந்த பகுதிகளை மறைவிடமாக கொண்ட குர்திய கெரிலாக்களை ஈராக் அரச படைகளால் அடக்க முடியவில்லை. பின்னர் அதுவே சதாம் அரசின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்தது.

பாக்தாத்தின் வடக்கே திக்ரித் என்ற சதாமின் பிறப்பிடத்தை சேர்ந்தவர்களின் ஆதிக்கம் பாத் கட்சியினுள் பெருகியது. பல முக்கிய அரசுப் பொறுப்புகள் யாவும் திக்ரித்காரருக்கு சென்றன. இருந்தாலும் பிற சமூகங்களை சேர்ந்த விசுவாசிகளுக்கும் பதவிகள் கிடைத்தன. பாராளுமன்றத்தில் 250 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். இருந்தாலும் அவர்களிடம் அதிகாரம் இருக்கவில்லை. அனைத்து முடிவுகளும் RCC மட்டத்திலேயே எடுக்கப்பட்டன.

சதாம் ஹுசைன் ஆட்சிக்கு வந்த பின்பு உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரித்திருந்தமை ஈராக்கிற்கு சாதகமாகப் போய் விட்டது. எண்ணெய் விற்று வந்த வருமானம், புதிய தொழிற்துறையில் முதலிடப்பட்டது. மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. இதன் விளைவாக கிராமப்புறங்களில் விவசாயத்தை கவனிக்க ஆளில்லாமல் போனதால், எகிப்தில் இருந்து விவசாயிகளை இறக்குமதி செய்ய வேண்டியேற்பட்டது. பொருளாதார வளர்ச்சி காரணமாக ஈராக் டினாரின் பெறுமதி டாலரை விட அதிகமாக உயர்ந்தது. குவைத் யுத்தம் வரையில், ஈராக் உலகில் பணக்கார நாடுகளில் ஒன்றாக திகழ்ந்தது. இன்றைய நிலையுடம் ஒப்பிடும் பொழுது அதை பலரால் நம்பமுடியாது. ஈரானுடனான போர் கூட பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தவில்லை. அதற்கு காரணம், குவைத், சவூதி அரேபியா, மேற்குலக நாடுகளில் இருந்து வந்து குவிந்த பணம். ஒரு கட்டத்தில் அமெரிக்க யுத்தக் கப்பல்கள் ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதிக்கு பாதுகாப்பு வழங்கின. ஈரானுடனான போரை பயன்படுத்தி ஈராக் பெருமளவு ஆயுதங்களை வாங்கிக் குவித்தது. பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றும், டச்சு வர்த்தகர் ஒருவரும் இரசாயன ஆயுதங்களை விற்றார்கள். அப்போதெல்லாம் யாரும் ஆட்சேபிக்கவில்லை. நீண்ட கால போரியல் அனுபவத்தைக் கொண்ட இராணுவம், நவீன ஆயுததளபாடங்கள் என்பன ஈராக்கை பிராந்திய வல்லரசாக்கியது. பிற்காலத்தில் அதுவே செருக்குடன் குவைத் மீது படையெடுக்க தூண்டியது.

ஈராக் என்ற தேசம் உருவான காலத்தில் இருந்து, குவைத் ஈராக்குக்கு சொந்தமான பிரதேசம் என்று பாக்தாத் ஆட்சியாளர்கள் உரிமை கோரி வந்தார்கள். அந்த உரிமை கோரலை அடிப்படையாக கொண்டு, சதாம் உத்தரவின் பேரில் ஈராக் இராணுவம் குவைத் மீது படையெடுத்தது. வளைகுடாவில் ஒரு துறைமுகத்திற்கான தேவையும், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையும் பிற காரணங்கள். குவைத் படையெடுப்பு குறித்து அமெரிக்க நண்பனுக்கு ஈராக் அறிவித்திருந்தது. அமெரிக்கா சம்மதிக்கா விட்டாலும், வாஷிங்க்டனில் இருந்து கிடைத்த சமிக்ஞை ஒன்றை தவறாக புரிந்து கொண்ட ஈராக் படையெடுப்பில் இறங்கியது. ஆனால் ஈராக்கை பொறியில் மாட்டி விடும் திட்டம் அது என்பது பின்னர் தெரிய வந்தது. குவைத்தை சேர்த்துக் கொண்டால் தனது வல்லரசு அந்தஸ்து உயரும் என்று ஈராக் கருதியது. அமெரிக்கா மனதில் வேறொரு திட்டம் இருந்தது. எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து குவைத்தில் பிரிட்டிஷ் எண்ணெய் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தின. ஈராக்கை ஆக்கிரமிக்க வைத்து, போருக்குள் இழுத்து விட்டு, அமெரிக்க இராணுவ உதவியைக் காட்டி, விடுதலையான குவைத்தை தனது செல்வாக்குக்கு உட்படுத்தியது.

சதாம் அன்று குவைத் யுத்தத்தை வரப்போகும் போர்களின் தாய் என்று வர்ணித்தார். அது எவ்வளவு தீர்க்கதரிசனத்துடன் சொல்லப்பட்ட கூற்று என்பது பின்னர் நிரூபணமானது. குவைத் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்ட ஈராக் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டுவரப்பட்டன. நாட்டின் பொருளாதாரம் உடைந்தது. ஒரு காலத்தில் வசதியாக வாழ்ந்த மக்கள், ஓரிரு வருடங்களில் உணவுக்கே வழியற்ற ஏழைகளானார்கள். பத்து வருடங்கள் கழித்து, மிகவும் பலவீனமடைந்த ஈராக் மீது இன்னொரு போர் திணிக்கப்பட்டது. இம்முறை சதாம் ஹுசைன் அரசைக் கவிழ்க்கும் நோக்குடன் பன்னாட்டுப் படைகள் நுழைந்தன. சதாமும், பிற முக்கியஸ்தர்களும் தூக்கிலிடப்பட்டனர். நாடு நீண்டதொரு அந்நிய ஆக்கிரமிப்புக்கு உள்ளானது.

இந்த தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:
2.பிரிட்டிஷ் சிருஷ்டியில் உதித்த ஈராக் தேசம்
1.ஊர் இலிருந்து ஈராக் வரை - வரலாற்றுத் தொடர்

(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரை 2003 ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்புக்கு முன்னர் எழுதப்பட்டது. அதனால் கடைசி பந்தியை மட்டும் மாற்றி இத்துடன் முடிக்க வேண்டியுள்ளது. அமெரிக்க ஆக்கிரப்பின் பின்னரான ஈராக் தொடர்பான பல பதிவுகள் ஏற்கனவே கலையகத்தில் வந்துள்ளன.)


ஈராக்: 'பாத்' கட்சியின் தோற்றமும் விடுதலைப் போரும்
ஈராக், ஒரு தேசம் விற்பனைக்கு
எண்ணைக் கிணறு வெட்ட வகுப்புவாதப் பூதம் கிளம்பியது

7 comments:

Pradeep P said...

nalla pathivu

arivuindia said...

Liked very much...

arivuindia said...

Liked very much...

யாசவி said...

கலை,

முதல் குவைத் போர் மற்றும் அதன் நியாயங்கள் மிகவும் மேலோட்டமாக எழுதப்பட்டது போல தெரிகிறது. வழக்கமான உங்கள் ஆழமான பார்வை இல்லை.

Mohamed Faaique said...

GUD ARTICLE.. SHORT & sWEET

Kalaiyarasan said...

ஆமாம், யாசவி. நீண்டதொரு ஈராக் வரலாற்றை சுருக்கமாக எழுதுவது இலகுவான காரியமல்ல. அதனால் தான் அவற்றை மேலோட்டாமாக பார்த்துள்ளேன்.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

//இந்த தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு://
இவ்வசதி மிகவும் உபயோகமாய் உள்ளது. நன்றி!