Thursday, December 24, 2009

தனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனியரும்

("போர்க்களமான புனித பூமி" தொடரின் இரண்டாம் பகுதி)

இரண்டாம் உலகப்போரின் முடிவு உலகில் பல மாற்றங்களை உருவாக்கியிருந்தது. போரில் பாதிக்கப்பட்ட பிரிட்டன் தனது காலனிகளை பராமரிக்க முடியாமல் தடுமாறியது. இதற்கிடையே அமெரிக்கா புதிய வல்லரசாக உருவாகியிருந்தது. ஹிட்லரின் யூத மக்கள் படுகொலை, உலகம் முழுவதும் யூதர்களுக்கு சார்பான அனுதாப அலைகளை தோற்றிவித்தது. ஆரம்ப காலங்களில் பாலஸ்தீனத்தில் சென்று குடியேறியவர்கள், கிழக்கைரோப்பாவை சேர்ந்த சோஷலிச யூதர்களாக இருந்தனர். அவர்களால் இலகுவாக சோவியத் யூனியனின் ஆதரவைப் பெற முடிந்தது. அந்தக் காலகட்டத்தில் இஸ்ரேலின் நண்பனாக இருந்தது அமெரிக்கா அல்ல, சோவியத் யூனியன். இது இன்று பலருக்கு வியப்பளிக்கலாம்.

ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தேசிய விடுதலைப் போராட்டங்களை ஆதரிக்கும் ஸ்டாலினின் கொள்கையின் கீழ் அந்த ஆதரவு வழங்கப்பட்டது. சோவியத் யூனியன் அன்று, அந்தப் பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் எதிரான சக்தியாக இஸ்ரேல் உருவாவதை விரும்பியது. ஆனால் அந்த உறவு சிறிது காலமே நீடித்தது. சுதந்திரத்திற்கு பின்னர் இஸ்ரேலிய அரசு அமெரிக்கா மற்றும் மேற்குலகுடன் உறவு கொண்டாடி, சோவியத் யூனியனுக்கு எதிராக திரும்பியது. அமெரிக்கா கூட ஆரம்பத்தில் எகிப்துடன் நல்லுறவைப் பேணவே விரும்பியது. ஆனால் சுயெஸ் கால்வாய் பிரச்சினையில் இஸ்ரேலை விட சிறந்த அடியாள் கிடைக்க மாட்டான் எனக் கண்டு கொண்டது.

நாசிகளால் பாதிக்கப்பட்ட யூதர்கள் பாலஸ்தீனம் சென்று குடியேறவும், அங்கே இஸ்ரேல் அமைக்கவும் ஐ.நா.சபை அங்கீகாரம் வழங்கியது. ஆரம்பத்தில் பாலஸ்தீன அரபுக்கள் கூட யூத மக்களும் அனுதாபத்துடன் நோக்கினார்கள். அதுவரை தாயகம் திரும்பும் யூதர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காத ஐரோப்பிய அரசாங்கங்கள், இப்போது திடீர் கவனம் செலுத்த ஆரம்பித்தன. அமெரிக்கா, பிரிட்டன் உதவியால் நாசிகளின் நரவேட்டைக்கு அகப்படாது தப்பிய யூதர்கள் கப்பல், கப்பலாக பாலஸ்தீனம் சென்று குடியேறினர். சிறிது சிறிதாக பாலஸ்தீன அரபுக்கள் என்ன நடக்கின்றது என உணர ஆரம்பித்தார்கள். ஆனால் காலம் கடந்து விட்டது. மேற்கு பாலஸ்தீனத்தில் போதுமான அளவு யூதர்கள் குடியேறிய பின்பு, ஐ.நா.சபை பிரிட்டிஷ் பாலஸ்தீனத்தை இரு துண்டுகளாக்க தீர்மானித்தது. யூதர்கள் இந்த முடிவை வரவேற்றனர். இஸ்ரேலிய குடியரசு பிரகடனம் செய்தனர். மறுபக்கத்தில் அரபுக்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை. யுத்தம் மூண்டது. யூதர்களுக்கு கிடைத்த நவீன ஆயுதங்கள், அவர்களின் வெற்றியை உறுதிப் படுத்தியது. பல கிராமங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அரபு மக்கள், அயல்நாடுகளில் அகதிகளாயினர்.

இந்தச் சமயத்தில், அன்றைய ஜோர்டான் மன்னர் ஹுசைன் பாலஸ்தீனர்களுக்கு இழைத்த துரோகம் பலர் அறியாதது. இந்த துரோகத்திற்கு பிராயச் சித்தமாக, பாலஸ்தீன அகதிகளுக்கு ஜோர்டானிய பிரஜாவுரிமை வழங்கப்பட்டது. பிற்காலத்தில், எழுபதுகளில் பாலஸ்தீன இயக்கங்கள் அடித்து விரட்டப் பட்டன. மன்னருக்கு விசுவாசமான படைகள் பாலஸ்தீன எழுச்சியை அடக்கியதில் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டனர். இறுதியாக பாலஸ்தீன போராளிகள் லெபனானில் தஞ்சமடைந்தனர். இஸ்ரேல் பலவீனமான லெபனான் நாட்டின் மீது படையெடுத்தது.

ஜோர்டானில் இருந்தது போலவே, லெபனானிலும் பாலஸ்தீன அகதி முகாம்கள் ஆயுதபாணி இயக்கங்கள் கட்டுப்பாட்டில் இருந்தன. அத்தோடு இஸ்ரேலிய எல்லையோரம் பயிற்சி முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கிருந்த படியே இஸ்ரேலினுள் ஊடுருவி தாக்குதல் நடத்தினார்கள். போராளிகளின் செயல்கள் உள்ளூர் (லெபனான்) மக்களிடம் வெறுப்பை தோற்றுவித்தது. அதிலும் லெபனானிய கிறிஸ்தவர்கள் அளவுகடந்த வெறுப்பை காட்டினார்கள்.

பாலஸ்தீன போராளிகளை அடக்குவதாகக் கூறி (எல்லை கடந்த பயங்கரவாதம்?), இஸ்ரேலிய இராணுவம் படையெடுத்து வந்தது. பெய்ரூட் வரை வந்த இஸ்ரேலிய படைகளுக்கு கிறிஸ்தவ பலாங்கிஸ்ட் இயக்கம் ஒத்துழைப்பு வழங்கியது. அதுவரை அகதி முகாம்களை பாதுகாத்து வந்த பாலஸ்தீன போராளிகள் வெளிநாட்டு மத்தியஸ்தத்துடன் வெளியேறினர். அநாதரவாக விடப்பட்ட ஷப்லா, ஷடிலா முகாம்கள் இஸ்ரேலிய, கிறிஸ்தவ படைகளின் முற்றுகைக்குள்ளானது. 2000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன அகதிகள் இனப்படுகொலை செய்யப்பட்டனர். இனப்படுகொலையை தலைமை தாங்கி நடத்திய இஸ்ரேலிய படைத் தளபதி ஷரோன் பிற்காலத்தில் பிரதமராக தெரிவானார்.

அரபு நாடுகளை தளமமைத்திருந்த பத்துக்கும் குறையாத பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் அன்று முற்போக்கான, மதச்சார்பற்ற, தேசியவாதக் கொள்கையை கடைப்பிடித்தன. தேசியவாத யாசீர் அரபாத் தலைமையிலான Tahir al Hatani al Falestini (பதாஹ்), மார்க்சிய PFLP ஆகியன பெரும்பான்மை மக்கள் ஆதரவை பெற்றிருந்தன. இஸ்ரேலின் பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்கு எதிரான கெரில்லாப் போராட்டம் தொடர்ந்தது. மறுபக்கம் மக்கள் போராட்டமான "இன்டிபதா" இஸ்ரேலிய அரசை சர்வதேச அரங்கில் தலைகுனிய வைத்தது.

பனிப்போர் காலத்தில் ஐ.நா. சபையில் இஸ்ரேலுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட அனைத்து தீர்மானங்களையும், அமெரிக்க வீட்டோ தடுத்தது. அப்போதெல்லாம் சோவியத் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவு வழங்கியது. பனிப்போர் முடிந்த பின்னர் பாலஸ்தீன பிரச்சினையை தீர்க்க வேண்டிய நிலை உருவானது. அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. யாசீர் அரபாத்தின் இயக்கத்தை தம் பக்கம் வென்றெடுத்தனர். இஸ்ரேலோடு சமாதானமாகப் போய் சுயாட்சிப் பிரதேசத்திற்கு உடன்படுமாறு வற்புறுத்தினர். தொடர்ந்து நோர்வேயின் அனுசரணையால் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டது.

இதில் முக்கியமாக பார்க்கப்பட வேண்டிய சில விஷயங்கள்:
- பாலஸ்தீனம் இஸ்ரேலின் உள்ளே ஒரு சுயாட்சிப் பிரதேசமாக இருக்கும்.
- இனிமேல் பாலஸ்தீன மக்களின் எழுச்சியை கட்டுப்படுத்தும் பொறுப்பில் இருந்து இஸ்ரேல் விடுபட்டது.
- பாலஸ்தீனர்களை, பாலஸ்தீனியர் அடக்கும் நிலை உருவானது. அரபாத்தின் தலைமை இஸ்ரேல் சொற்கேட்டு நடக்கும் பிரதேச பொலிஸ் ஆகியது.
- வெளிநாடுகளில் வசிக்கும் பாலஸ்தீன அகதிகள் நிரந்தரமாக தாயகம் திரும்ப முடியாது.

பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் சீரழிவு ஒட்டுமொத்த மதச்சார்பற்ற தேசியவாத சக்திகளின் பின்னடைவாகியது. ஏகாதிபத்தியங்களும் அரபு நாடுகளில் எழுந்த முற்போக்கு சக்திகளை திட்டமிட்டே அழித்தன. அதற்கு பாலஸ்தீனமும் பலியாகியது. அப்போது எழுந்த வெற்றிடத்தை நிரப்ப இன்னொரு சக்தி கிளம்பியது.

Harakat al-Muqaama al-Islamiya (இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கம் அல்லது "ஹமாஸ்"). மேற்குலகில் மத அடிப்படைவாதிகள் என அழைக்கப் படும் இஸ்லாமிய தேசியவாதிகள். எகிப்தில் "முஸ்லிம் சகோதரர்கள்" இயக்க அரசியலால் கவரப்பட்ட பாலஸ்தீன அகதியால் ஸ்தாபிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அரபாத்தின் பதாவுக்கு போட்டியாக, இஸ்ரேலும் ஹமாசுக்கு ஆதரவளித்தது. அரபாத் சமாதான கூட்டாளியான பின்னர், இவர்களைத் தேவையில்லை என கழட்டி விட்டது. சிறிது காலத்தின் பின்னர் சமாதானம் எந்தத் தீர்வையும் கொண்டு வராததால், ஏமாற்றமடைந்த பாலஸ்தீன மக்களின் அதிருப்தியை பயன்படுத்திக் கொண்டது. ஒரு காலத்தில் மதச் சார்பற்ற தேசியவாதிகளாக இருந்த பாலஸ்தீனர்களை, ஹமாஸ் இஸ்லாமியவாதிகளாக மாற்றியது. ஈழத்தில் புதிதாக ஒரு "சைவத் தமிழ் தேசிய அமைப்பு" உருவானால் விளைவு எப்படியிருக்கும்? அது தான் பாலஸ்தீனத்தில் நடந்தது. பாலஸ்தீன தேசிய அடையாளம் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் உள்ளடக்கியது. ஆனால் ஹமாஸ் பாலஸ்தீனத்தை இஸ்லாமிய சர்வதேசியத்தின் ஒரு பகுதியாக்கியது.

ஹமாஸ் இராணுவ நடவடிக்கைகளில் மட்டுமல்லாது, அரசியல் நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்துகின்றது. பாலஸ்தீன பகுதி எங்கும் வறிய மக்களுக்கான இலவச மருத்துவமனைகள், இலவச பாடசாலைகள், அநாதை இல்லங்கள், நலன்புரி மையங்கள் என்பனவற்றை நடத்தி வருகின்றது. (வைத்தியத்திற்கும், கல்விக்கும் கட்டணம் அறவிடும் நாட்டில் வாழும் ஏழைகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.) ஹமாசின் தர்ம காரியங்களுக்கான நிதி, சவூதி அரேபியா, மற்றும் பல வளைகுடா நாடுகளில் இருந்து வருகின்றது. வெளிநாடுகளில் உள்ள ஹமாஸ் கிளைகளும் நிதி சேகரித்து அனுப்புகின்றன. ஹமாஸ் நிர்வகிக்கும் சமூக நலன் காப்பகங்களில் இருந்து புதிய உறுப்பினர்கள் தெரிவாகின்றனர்.

ஹமாஸ் ஒரு பரந்த அரசியல் அமைப்பு. அதன் இராணுவப் பிரிவான "காசிம் பிரிகேட்". அதன் உறுப்பினர்கள், முன்னைநாள் பாலஸ்தீன போராளிகளைப் போன்று கெரில்லா இராணுவப் பயிற்சி பெற்றவர்களல்ல. (இந்த நிலை பிற்காலத்தில் மாறியது.) சிறிது மனோதைரியம், தியாக சிந்தை, நடைமுறை தந்திரம், இவை இருந்தால் போதும். ஒருவரை தற்கொலைக் குண்டுதாரியாக மாற்றிவிடலாம். தற்கொலைக் குண்டு தத்துவத்திற்கும், இஸ்லாமிற்கும் சம்பந்தம் இல்லை. இஸ்ரேல் மீதான வெறுப்புணர்வே பலரை தற்கொலைப் போராளியாக்குகிறது. பலம் வாய்ந்த இராணுவத்திற்கு எதிரான, பலவீனமானவர்களின் இயலாமையின் வெளிப்பாடு அது. ஹமாசின் குண்டுவெடிப்பினால் அதிகம் பாதிக்கப்படுவது யூத பொதுமக்கள். (இஸ்ரேலிய அரச இயந்திரத்தை நெருங்கவே முடியாது.) ஒரு காலத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் மாற்றத்தை கொண்டு வரும் என நம்பப்பட்டது. இதனால் ஜிஹாத், அல் அக்சா பிரிகேட் என்பனவும் தற்கொலைக் குண்டு தாக்குதலில் இறங்கின. "முற்றுமுழுதாக இராணுவ மயப்பட்ட இஸ்ரேலிய சமூகத்தில், கொல்லப்படுபவர் படைவீரனா, அல்லது அப்பாவியா என வேறுபடுத்த முடியாது." எனபது ஹமாசின் வாதம். அதே போல இஸ்ரேலும், "யார் பயங்கரவாதி, யார் பொது மகன், என வேறுபாடு காட்டி தாக்க முடியாது." என வாதிடுகின்றது. இஸ்ரேலிய இராணுவம், ஹமாஸ் இரண்டுமே பழிக்குபழி வாங்குவதை இராணுவ நடவடிக்கையாக கொண்டுள்ளன.

சில நேரம், இஸ்ரேலிய புலனாய்வுப்பிரிவான மொசாட் கூட, அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகின்றது. தீவிரவாத அமைப்பை சேர்ந்த உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஒருவரின் கார், வீடு என்பன குண்டு வைத்து தகர்க்கப்படுகின்றன. அந்த தீவிரவாதி தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் இறந்தால் கூட, அவரின் உறவினர்களை வெளியேற்றி விட்டு, வீட்டை குண்டு வைத்து தரைமட்டமாக்குவார்கள்.

(தொடரும்)


இந்தத் தொடரின் முதலாவது பகுதி:
போர்க்களமான புனித பூமி


(உயிர் நிழல் (ஏப்ரல்-யூன் 2002 ) சஞ்சிகையில் பிரசுரமானது. சில திருத்தங்களுடன் வலையேற்றம் செய்யப்படுகின்றது.)

8 comments:

EKSaar said...

//ஜோர்டான் மன்னர் ஹுசைன் பாலஸ்தீனர்களுக்கு இழைத்த துரோகம் //

இனி அதைப்பற்றி சிறு விளக்கம் தந்திருக்கலாம்.

//தற்கொலைக் குண்டு தத்துவத்திற்கும், இஸ்லாமிற்கும் சம்பந்தம் இல்லை. பலவீனமானவர்களின் இயலாமையின் வெளிப்பாடு அது.//
இந்த தகவல் பலருக்குத்தெரியாத விடயம். அது தெரியாததனால்தான் உலகெங்கும் முஸ்லிம்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

தொடரட்டும் உங்கள் பணி..

Kalaiyarasan said...

//இனி அதைப்பற்றி சிறு விளக்கம் தந்திருக்கலாம்.//
1948 ல் மேற்குக் கரை பாலஸ்தீனப் பகுதி ஜோர்டான் ஆட்சிக்குட்பட்ட பிரதேசமாக இருந்தது. அந்தப் பகுதி மீதான இஸ்ரேலிய படையெடுப்புக்கு மன்னர் ஹுசைன் இரகசியமாக ஒப்புதல் அளித்திருந்தார்.

பாலஸ்தீன பிரச்சினையை ஒரு சில பக்கங்களில் அடக்க முடியாது. இன்னும் நிறைய எழுதிக் கொண்டேயிருக்கலாம்.

Gifariz said...

'ஹமாஸ்' ஐப் பற்றி நீங்கள் திரட்டியுள்ளது ஒரு டொட் என்றுதான் செல்ல வேண்டும்

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

//அரபாத்தின் தலைமை இஸ்ரேல் சொற்கேட்டு நடக்கும் பிரதேச பொலிஸ் ஆகியது. //

ஐயோ நான் பல இடங்களில் அவர் பாலஸ்தீனர்களின் ஒப்பற்ற தலைவன் என்றல்லவா படித்து இருக்கேன் :(

அப்போது அவர் நல்லவரில்லையா ?

Kalaiyarasan said...

Gifariz நன்றி.
நீங்கள் சொல்வது சரி. ஹமாஸ் பற்றி விரிவாக இங்கே எழுதவில்லை.

பிரதீப், நன்றி.
அரபாத் சில விஷயங்களில் இஸ்ரேலுடன் ஒத்துழைத்தார். சில விஷயங்களில் எதிர்த்து நின்றார். வெளிநாடுகளில் இருக்கும் பாலஸ்தீன அகதிகள் தாயகம் திரும்ப வேண்டும் என்ற விஷயத்தில் மட்டும் இறுதிவரை விட்டுக் கொடுக்கவில்லை. அதனால் இஸ்ரேலுடன் முரண்பட்டார். தற்போதுள்ள அப்பாஸ் எல்லாவற்றுக்கும் ஆமாம் போடுவார்.

K.R.அதியமான் said...

///பிற்காலத்தில், எழுபதுகளில் பாலஸ்தீன இயக்கங்கள் அடித்து விரட்டப் பட்டன. மன்னருக்கு விசுவாசமான படைகள் பாலஸ்தீன எழுச்சியை அடக்கியதில் சுமார் 5000 பேர் கொல்லப்பட்டனர். இறுதியாக பாலஸ்தீன போராளிகள் லெபனானில் தஞ்சமடைந்தனர்.///

ஜோர்டானில் இருந்து ஏன் அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று சொல்லவில்லையே ? புகழிடம் கொடுத்த நாட்டையே ஆக்கிரமித்து, ஆள நினைத்தனர். ஃபாசிச பாணியில். அதன் விளைவுதான் அந்த விரட்டல். லெப்னானிலூம் அதே கதை.

1948இல் அய்.நா அளித்த பகுதிகளை மட்டும் வைத்து, அமைதியாக வாழ நினைத்தனர் இஸ்ரேலியர். பல முறை அவர்களை முற்றாக அழிக்க அரபு நாடுகள் படை எடுத்தன.

Israel was fighting for its exisitence for many decades. And Soviet Union played power poilitcs with no ethics or morals (almost similar to US) by blindly supporting fascisitic and religious dictatorships of Eqypt, Syria, etc.

there is no doubt about Israeli atrocities, esp post 80s. but there is no denying of violations and fascisit activities of Palestineian groups too.

இது நான் முன்பு எழுதிய பதிவு :

http://athiyamaan.blogspot.com/2008/10/blog-post_31.html

K.R.அதியமான் said...

1948 அய்.நா வாக்கெடுப்பில் இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பிறகு, அரேபிய
நாடுகள் அதை ஏற்க்க மறுத்து, சின்ஞ்சிறிய இஸ்ரேல் மீது 5 நாடுகளுள் ஒரே
சமயத்தில் போர் தொடுத்தன. அன்றிலிருந்து இஸ்ரேல் தன்னை காப்பற்றிக்கொள்ள
வாழ்வாதார போரில் (war for survival) ஈடுபட வேண்டிய கட்டாயம்.

http://en.wikipedia.org/wiki/Arab-Israeli_conflict

[edit] June 12, 1967-1973

In the summer of 1967, Arab leaders met in Khartoum in response to the
war, to discuss the Arab position toward Israel. They reached
consensus that there should be:

No recognition of the State of Israel.
No peace with Israel.
No negotiations with Israel.

In 1969, Egypt initiated the War of Attrition, with the goal of
exhausting Israel into surrendering the Sinai Peninsula.[43] The war
ended following Nasser's death in 1970.

On October 6, 1973, Syria and Egypt staged a surprise attack on Israel
on Yom Kippur, overwhelming the Israeli military.[44][45] The Yom
Kippur War accommodated indirect confrontation between the US and the
Soviet Union. When Israel had turned the tide of war, the USSR
threatened military intervention. The United States, wary of nuclear
war, secured a ceasefire on October 25.[44][45]

இது Golda Meir என்னும் இஸ்ரேல் பிரதமர் (முதல் பெண்மணி) அன்று கூறியது :

"The Muslims can fight and lose, then come back and fight again. But
Israel can only lose once."

இன்று பாலஸ்தீனர்களின் பக்கம் தான் நியாயம் உள்ளது. ஆனால் நேர்மை,
ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை இல்லாமல் அவர்கள் தொடர்ந்து துன்பத்திலேயே
வாடும் கொடுமை. பாலஸ்தீன விடுதலை இயக்கம் 1948 போரில் தோல்வி அடைந்த பின்
முதலில் ஜோர்டானில் தன் தளத்தை அமைத்து. ஆனால் நன்றி இல்லாமல் ஜோர்டானை
ஆக்கிரமிக்க முயன்றதால் அங்கிறது விரட்டப்பட்டு, பின் லெப்னானில் அதே
வேலையை செய்த்து. அதனால் ஒரு கொடுமையான உள்னாட்டு போர் லெப்னானில்
ஏற்பட்டு, பின் டுனிசியாவிற்க்கு அந்த விடுதலை இயக்கம் துரத்தப்பட்டது.

நேர்மை, நன்றி உணர்ச்சி, கட்டுப்பாடு இல்லாமல் எந்த ஒரு இயக்கமும்,
போராளி குழுவும் வென்றதாக சரித்திரம் இல்லை. பாலஸ்தீன தலைமைக்குள்
இருக்கும் ஊழல், குழுச்சண்டைகள் மற்றும் அடக்குமுறைகள் : இவை இருக்கும்
வரை விமோச்சனம் இல்லை.


பல முறை கொடுத்த வாக்கை மீறி காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது
ராக்கேட் அடிப்பதால், வெகுண்ட இஸ்ரேல் கடுமையான தடைகளை,
எதிர்தாக்குதல்களை ஈவிரக்கமில்லாமல் செய்கிறது. இரு தரப்பினரிடமும் தவறு
உள்ளது.

சவுதி அரேபியா தான் இன்றும் பாலஸ்தீன அரசிற்க்கு ஆண்டு தோறும் பெரும்
நிதி உதவி அளித்து காப்பற்றுகிறது. ஆனால் பாலஸ்தீனர்களின் நேர்மையற்றா
ஊழல் ஆட்சி அதை வீணடித்து பாழாக்குகிறது.

பாலஸ்தீன நாட்டை இஸ்ரேல் அங்கிரத்து, ஆக்கிரமிக்க பட்ட பகுதிகளை
திருப்பிக் கொடுத்தாலும் அவர்கள் 'உருப்பட' மாட்டர்கள் என்பதே என்
தாழ்மையான கருத்து.

K.R.அதியமான் said...

http://en.wikipedia.org/wiki/Israeli_settlements#Debate_on_the_settlements

கடந்த கால வரலாறு இன்றும் இஸ்ரேலை ப‌யமுறுத்துகிறது. பகுதிகளை
திருப்பிக்கொடுத்த்டால், நாட்டை மீண்டும் அழிக்க போர் புரிவார்கள் என்ற
ஒரு பாரேனியா இன்றும் உள்ளது. ஆனாலும் இஸ்ரேல் ஒரு ஜனனாயக நாடுதான்.
அங்கு கடுமையான மாற்றுக்கருத்துகள், விவாதங்கள் மற்றும் தேர்தல் மூலம்
எதிர்கட்சிகள் ஆட்சி அமைக்க வழிமுறைகள் உள்ளன. இஸ்ரேலின் கொள்கைகளை எதிர்க்கும் இஸ்ரேலியர்களை யாரும் துரோகிகளாக பார்பதில்லை. கொல்வதில்லை. ஆரோக்கியமான ஜனனாயம ; பத்திரிக்கை சுதந்திரம், லிபரல் ஜனனாயகம்.

இதே போல் பாலஸ்தீனம் மற்றும் இதர அரபு நாடுகளுலும் சாத்தியாமல நல்லா இருக்கும். பிரச்சனைகளை பேசித்தீர்த்து கொள்ளாம்.

பொதுவாத இஸ்லாமிய மற்று அரேபிய நாடுகளில் இது போன்ற அடிப்படை ஜனனாயக் அமைப்பு சாத்தியாமா ? நீங்க தான் செல்லனும்.

எண்ணை வளம் முற்றாக தீர்ந்த உடன், இந்த பாலஸ்தீனப் பிரச்சனை
தீர்ந்துவிடும் என்று தோன்றுகிறது. சவுதி நிதி உதவி செய்வது நின்று
விடும். நிலப்பிரவுத்தவ ஆளும் கும்பல், தாம் வெளிநாடுகளில் சேமித்து வைத்துள்ள பெரும் செல்வத்துடன் ஓடிவிடுவார்கள். பிறகு 100 ஆண்டுகளுக்கு
முன் இருந்தது போல் அரேபியர்கள் ஒட்டகம் மேய்த்து பிழைக்க வேண்டிய நிலை வரும். போர்கள், சண்டைகள் முற்றாக நின்று போகும். அப்பவாவது அடிப்படை ஜனனாயகம் மலருமா அங்கு ? தெரியவில்லை..


இஸ்ரேலின் வரலாறை படிக்கும் போது, என்னைப் பொருத்தவரை, எந்த துன்பத்தையும் தாங்கி, வாழ்ந்துவிடலாம் என்று நம்பிக்கை பிறக்கிறது.

அவர்களின் இன்றைய நிலைபாடு மற்றும் தவறுகள் வேறு விசியம். ஆனால் ஆரம்ப வருடங்களில் அவர்கள் எதிர் கொண்ட போர்கள் மற்றும் செய்த தியாகங்கள் ஒரு
மகத்தான, மிக மகத்தான வீர வரலாறு. An indomitable people with a 'never say die' spirit. Valiant courage while facing and defeating powerful enemies. out-gunned and out numbered on all fronts many times... They crossed all the limits of human endurance and will power...

an inspiration for me...

இந்த‌ புத்த‌க‌ங்க‌ளை முடிந்தால் ப‌டிக்க‌வ‌ம் :

O Jerusalem!
by Dominique Lapierre and Larry Collins.
http://en.wikipedia.org/wiki/O_Jerusalem

Exodus by Leon Uris
http://en.wikipedia.org/wiki/Ari_Ben_Canaan

பாலைவனத்தை சோலைவனமாக மாற்றிய உழைப்பும், திறமையும் மிக மிக அருமையான சாதனைகள் தாம். அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா வை விட மிக மிக வளமாக 50
வருடங்களில் மாறியது பெரும் சாதனை. எண்ணை வளம் இல்லாமல், ஜோர்டானில்
இருந்து இறக்குமதிதான்.

I salute these brave and determined people..
Shalom !

இஸ்ரேல் பகுதி சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் இதர அரேபிய பகுதிகளை விட வறுமை அதிகமாக, மற்றும் பின் தங்கியே இருந்தது. யூதர்களின் உழைப்பும்,
திறமையும், சுத்ந்திர சந்தை பொருளாதார கொள்கைகளும் அதை பின்னர் ஒரு முன்னேறிய நாடாக மாற்றியது ஒரு மகத்தான சாதனை. வறுமை ஒழிப்பிற்க்கு சரியான பாதை பற்றி இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. இததனைக்கும் எண்ணை வளம்
இல்லை. ராணுவ செலவு மிக அதிகம். அதன் துறைமுகங்கள் மற்றும் வர்தகம் செல்லும் பாதைகள் பல முறை எதிர்களால் பிளாக்கேட் (முடக்கம்) செய்யப்பட்டன.

பாலஸ்தீனர்கள், அவர்களுக்கு அய்.நாவால் 1948இல் ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அமைதியாக வாழ்ந்து, இஸ்ரேலுடன் நட்புரவுடன் இருந்திருந்தால், இன்று பாலஸ்தீனும் ,அமீரகம் போன்ற நல்ல வளமாக் இருந்திருக்கும். இஸ்ரேலின் உதவி (ரிப்பிள் எஃபெக்ட் - thru ripple effect) கிடைத்து முன்னேறி சுபிட்சம்
அதிகரித்திருக்கும்..