Tuesday, December 16, 2014

முதலாளிய - உலகமயமாக்கலுக்கு எதிரான ஐந்தாம் கட்ட ஈழப் போர்

உலகமயமாக்கலின் சுயரூபம். கொக்கோ கோலா நிறுவனம், கேரளா, பிளாச்சி மாடாவில் நிலத்தடி நீரை மாசு படுத்தியது. தற்போது, யாழ்ப்பாணத்தில் இன்னொரு "பிளாச்சி மாடா" உருவாகின்றது. இதுவும் ஒரு பன்னாட்டு நிறுவனம் தான்.

யாழ்ப்பாணத்தில் மின்சார விநியோகம் செய்யும், நொதேர்ன் பவர்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனம், நிலத்தடி நீரை மாசு படுத்தி வருகின்றது. அந்த நிறுவனத்திற்கு எதிராக தமிழ்ப் பொது மக்கள் வழக்குத் தொடுத்துள்ளனர். நொதேர்ன் பவர்ஸ் அவர்களை "பயங்கரவாதிகள்" என்று குற்றஞ்சாட்டியுள்ளது. ஐந்தாம் கட்ட ஈழப் போர் ஒன்று நடந்தால், அது நிச்சயமாக முதலாளித்துவ உலகமயமாக்கலுக்கு எதிரானதாக இருக்கும்.

யாழ் குடாநாட்டில் ஒரு பகுதிக்கு மின்சார விநியோகம் செய்து வரும் சுன்னாகம் மின்சார நிலையத்தை வாங்கியுள்ள மலேசியா கார்ப்பரேட் நிறுவனமான MTD Capital, "நொதெர்ன் பவர்ஸ்" என்ற பெயரில் நடத்தி வருகின்றது. தரகு முதலாளிய சிறிலங்கா அரசு, இவ்வாறு தனியார்மயத்தை ஆதரிப்பவர்களின் ஆசையை பூர்த்தி செய்துள்ளது.

தனியார் மயத்தின் பின்னர், புதிதாக ஒரு பிரச்சினை முளைத்துள்ளது. சுன்னாகம் மின்சார நிலையம் வெளியேற்றும் கழிவு எண்ணை, நிலத்தைடி நீரை மாசுபடுத்தியுள்ளது. அயலில் உள்ள கிணறுகளில் எண்ணைக் கசிவுகள் நீருடன் கலப்பதாக, பொது மக்கள் முறையிடுகின்றனர். இது தொடர்பாக நொதெர்ன் பவர்ஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளனர்.


நீதிமன்றத்தில் நொதெர்ன் பவர்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் கூறிய காரணம் நகைப்புக்குரியது. "மன்னாரில் எண்ணை வளம் இருக்குமென்றால், ஏன் சுன்னாகத்தில் இருக்கக் கூடாது?" என்று சிறுபிள்ளைத் தனமாகக் கேட்டுள்ளார். அந்த வழக்கறிஞர் மட்டுமல்ல, முதலாளித்துவம், தனியார்மயத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்கும் தனி நபர்களும், இப்படித் தான் சிறுபிள்ளைத்தனமாக வாதாடிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகம் முழுவதும், கார்ப்பரேட் நிறுவனங்கள் சுற்றுச் சூழலை மாசு படுத்துவது நடந்து கொண்டிருக்கிறது. இந்தியா, பிளாச்சிமாடாவில், கொக்கோ கோலா கம்பனி இது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருந்தமை இங்கே நினைவுகூரத் தக்கது. தென்னிலங்கையிலும் பாதணி தயாரிக்கும் தொழிலகம் ஒன்று அகற்றிய இரசாயனக் கழிவுகள், சுற்றுச் சூழலை மாசு படுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தியதும், இராணுவ அடக்குமுறை பிரயோகிக்கப் பட்டதும் இங்கே குறிப்பிடத் தக்கது.

நான் முன்னர் எழுதிய "மாவிலாறு முதல் வெலிவாரியா வரை" எனும் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி:

உலகில் எந்தத் தேசியவாதியும், தனது சொந்த தேசிய இனத்தின் வர்க்க அடிப்படையையும், பொருளாதாரப் பிரச்சினைகளையும் புரிந்து கொள்வதில்லை. தமிழ் தேசியவாதிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. பொருளியல் துறையில் முதுமானிப் பட்டம் பெற்ற தமிழ் தேசியவாதிகளும் நிறையப் பேர் இருக்கின்றனர். அவர்கள் கூட, தமது சொந்த தமிழ் இன மக்களின் போராட்டத்திற்கு, பொருளாதார பிரச்சினைகளும் காரணம் என்பதை கூறுவதில்லை. குறைந்த பட்சம், அது பற்றிய விழிப்புணர்வை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதில்லை. அவர்கள் உண்மையில் தமிழ் மக்களின் சேவகர்களா, அல்லது முதலாளித்துவ அடிமைகளா? 


 யாழ் குடாநாடு முழு இலங்கையிலும், மிகவும் வரட்சியான மாவட்டங்களில் ஒன்று. வரண்ட மண்ணைக் கொண்ட யாழ் குடாநாட்டில், மக்கள் தொகை அடர்த்தி அதிகம். குடிநீருக்கான தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி சாதிக் கலவரங்கள் நடக்கும் இடமாக இருந்தது. எழுபதுகளில் மழை வீழ்ச்சிக் குறைவு, முழு இலங்கையையும் பாதித்திருந்தது. இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கையை, யாழ்ப்பாணத்திற்கு திருப்பி விடும் அரசின் திட்டம், இறுதியில் திருகோணமலை வரையில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்த உதவியது. அத்தகைய காலகட்டத்தில் தான், தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தொடங்கியது என்ற உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?

இது தொடர்பான முன்னைய பதிவு: 
மாவிலாறு முதல் வெலிவேரியா வரை : இலங்கையின் தண்ணீருக்கான யுத்தம்


நிலத்தடி நீர் மாசடைவது பற்றி தாய் வீடு பத்திரிகையில் வெளியான கட்டுரை:
 

Sunday, December 14, 2014

பிரிட்டிஷ் புலனாய்வுத்துறை உங்களது தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கின்றது!

மேற்கத்திய நட்பு நாடுகளைக் கூட, அமெரிக்க உளவுத் துறையான NSA வேவு பார்த்த தகவல்கள் பல ஏற்கனவே வெளியாகியுள்ளன. தற்போது, பிரிட்டிஷ் புலனாய்வுத் துறையான G.C.H.Q., பெல்ஜிய தொலைத்தொடர்பு நிறுவனத்தினுள் ஊடுருவி, பலரது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்ட விடயம் வெளியாகியுள்ளது. 

பெல்ஜியத்தில், ஐரோப்பிய ஒன்றிய தலைமைச் செயலகங்கள், நேட்டோ தலைமையகம், மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் அமைந்துள்ளன. அங்கிருந்தவர்களின் தொலைபேசி உரையாடல்கள் கூட ஒட்டுக் கேட்கப் பட்டிருக்கலாம். அவர்களுக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண பொது மக்களின் கதி? 

"சம அந்தஸ்து கொண்ட" ஐரோப்பிய ஒன்றிய நாடான, பெல்ஜியத்தின் தொலைத்தொடர்புகளுக்குள் ஊடுருவி உளவு பார்த்த பிரிட்டிஷ் புலனாய்வுத்துறை, தனது சொந்த நாட்டில் சும்மா இருந்திருக்குமா? பிரிட்டனின் முன்னாள் காலனிய அடிமை நாடுகளான இந்தியா, இலங்கையிலும் ஊடுருவி, அங்குள்ளவர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்காமல் இருந்திருப்பார்களா?

பிரிட்டிஷ் புலனாய்வுத் துறையின் ஹேக்கர்கள், Belgacom எனும் பெல்ஜிய தொலைத்தொடர்பு திணைக்களத்தின் கணணிகளுக்குள் ஊடுருவி உள்ளனர். அதன் மூலம், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுடனான தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப் பட்டன. மின்னஞ்சல்கள் ஒட்டுப் பார்க்கப் பட்டன. எவராலும் கண்டுபிடிக்கப் படாமல், பல வருடங்களாக இது நடந்து கொண்டிருந்தது. அது எப்படி நடந்தது? 

பெல்கா கொம் (Belgacom) பெல்ஜியத்தின் மிகப் பெரிய, மிகவும் பழமையான, அரசு தொலைத்தொடர்பு நிறுவனம். இன்றைக்கும், நாட்டின் பெரும்பாலான வீட்டுத் தொலைபேசி, கைத் தொலைபேசி இணைப்புகளை கட்டுப் படுத்துகின்றது. கணணி மயப் படுத்தப் பட்ட காலத்தில், பிற நாடுகளுடனான தொலைத் தொடர்பு விநியோக சேவைகளை BICS எனும் துணை நிறுவனம் பராமரித்து வருகின்றது.

Belgacom International Carrier Services என்பதன் சுருக்கம் தான் BICS.  அதற்கும் கீழே நூற்றுக் கணக்கான தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களாக சேர்ந்துள்ளன. சிங்கப்பூர், துபாயில் கூட, BICS கிளை நிறுவனங்கள் உள்ளன. 


BICS நிறுவனத்தின் கணனித் தொடர்பாடலை பராமரிக்கும் மூன்று தொழில்நுட்ப நிபுணர்களுடன் உளவு பார்த்த கதை ஆரம்பமாகின்றது. அப்பாவிகளான அந்த மூன்று ஊழியர்களும் LinkedIn இணையத்தின் பாவனையாளர்கள். ஏற்கனவே அவர்களின் கணணிகளுக்குள் ஊடுருவிய GCHQ ஹேக்கர்கள், LinkedIn தொடர்பை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஒரு போலியான LinkedIn தளத்தை உருவாக்கி, அதற்கு அவர்களை வரவழைத்துள்ளனர். அங்கிருந்து ஒரு வைரசை அனுப்பி, அவர்களின் கணணிகளை தாக்கியுள்ளனர். 

"Regin" என்ற பெயரைக் கொண்ட வைரஸ் (malware), இலகுவில் கண்டுபிடிக்க முடியாத, மிகவும் வளர்ச்சி அடைந்த, தீய விளைவை உண்டாக்கும் மென்பொருள் ஆகும். 2009 ஆம் ஆண்டு தான், இந்த வைரஸ் தாக்குதல் நடந்திருக்க வேண்டுமென அனுமானிக்கப் படுகின்றது. 2011 ஆம் ஆண்டு வரையில், அது அழியாமல் மறைந்திருந்து, கணணிகளை சரியாக இயங்க விடாமல் பிரச்சினை கொடுத்துள்ளது. அதற்கு இரண்டு வருடங்களுக்குப் பிறகு தான், உண்மையில் என்ன நடந்தது என்று தெரிய வந்தது. 

2011 ஆம் ஆண்டு, பெல்கா கொம் ஊழியர்கள் தமக்குள் பரிமாறிக் கொண்ட மின்னஞ்சல்கள் மிகவும் தாமதமாக வந்து சேர்ந்தன. சேர்வர் (Server) பிரச்சினை கொடுக்கத் தொடங்கியது. 2013 ஆம் ஆண்டு, புதிய மைரோசாப்ட் (Microsoft) மென்பொருளை அப்டேட் (update) செய்தார்கள். ஆனால், அதற்குப் பிறகு பிரச்சினை பெரிதானதே தவிரக் குறையவில்லை. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உதவியைக் கோரினார்கள். மைக்ரோசாப்ட் நிபுணர்கள் வந்து பார்த்தும், அவர்களாலும் ஒன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை.  

அதற்குப் பிறகு, நெதர்லாந்தின் பிரபலமான ஐ.டி. நிறுவனமான Fox-IT நிபுணர்களை வரவழைத்து பரிசோதிக்க சொன்னார்கள். அவர்கள் வந்து பரிசோதித்த நேரம், ஒரு விசித்திரமான பொருளைக் கண்டுபிடித்தார்கள். கணனியில் இயங்கிக் கொண்டிருந்த மென்பொருள் ஒன்று, மைரோசாப்ட் மாதிரி இருந்தது. ஆனால், அது உண்மையில் மைரோசாப்ட் அல்ல. அது மாதிரி பாவனை செய்து கொண்டது. 

பெல்கா கொம் உடனடியாக காவல்துறையில் முறைப்பாடு செய்தது. பெல்ஜிய அரச புலனாய்வுத் துறையான ADIV உடன் தொடர்பு கொண்டது. ADIV கணிப்பொறி நிபுணர்கள், Fox-IT நிபுணர்களுடன் சேர்ந்து பிரச்சினையை ஆராய்ந்தார்கள். அப்போது தான், பல வருடங்களுக்கு முன்னர் ஊடுருவி இருந்த உளவறியும் வைரஸ் ஒன்றினை, சரியாக அழிக்காமல் விட்ட படியால் தான், கணனிகள் பிரச்சினை கொடுத்தன என்று தெரிய வந்தது. 

ஆனால், வைரஸ் கண்டுபிடிக்கப் பட்ட பின்னர், திடீரென பெல்கா கொம் தலைமை நிர்வாகத்தின் போக்கில் மாற்றம் ஏற்பட்டது. Fox-IT உடனான ஒப்பந்தம் முறித்துக் கொள்ளப் பட்டது. BICS ஊழியர்கள் அத்தனை பேரும், இரகசியக் காப்பு விதிகளை ஏற்றுக் கொள்ளும் படிவத்தில் கையொப்பம் போட வேண்டுமென வற்புறுத்தப் பட்டனர். வைரசை அப்படியே வைத்துக் கொண்டு, அது குறித்த ஆராய்ச்சி செய்த ஆதாரங்களை அழித்து விடுமாறு கோரியது! ஏன் என்று கேட்டவர்களுக்கு, பெல்கா கொம் தானாகவே பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் என்று பதில் கூறப் பட்டது. 

2013, ஆகஸ்ட் 30 அன்று, வைரசின் ஒரு பகுதி தானாகவே மறைந்து விட்டது. அந்தக் காலகட்டத்தில் பல தகவல்கள் வெளியாகத் தொடங்கின. பெல்ஜியத்தில் அதிகமாக விற்பனையாகும் De Standaard பத்திரிகை, முதன் முதலாக இந்தத் தகவலை வெளியிட்டது. சில தினங்களுக்குப் பின்னர், ஜெர்மனியின் Der Spiegel வார இதழ், ஸ்னோவ்டனின் இரகசிய ஆவணங்களை பிரசுரித்து இருந்தது. அவற்றில் ஒன்றில், பிரிட்டனின் அந்நிய நாடுகளை உளவறியும் பட்டியலில் பெல்கா கொம் இருக்கும் விடயம் வெளிச்சத்திற்கு வந்தது. 

ஆயினும், இப்போதும் பெல்கா கொம் நிறுவனம் முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் வகையில் பேசி வருகின்றது. "அந்நிய நாடொன்றின் வைரஸ் தாக்குதல் நடந்திருந்தாலும், அது ஒரு சில வாடிக்கையாளர்களின் தொலைபேசிகளை மட்டுமே பாதித்துள்ளதாக..." கூறி சமாளித்து வருகின்றது. 


(தகவலுக்கு நன்றி: De Britten hadden de sleutel, NRC Handelsblad, 13 dec 2014)


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Friday, December 12, 2014

மூலதனம் கற்போம் - 3 : மதிப்பின் இரு வடிவங்கள்

மூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம் 
(பாகம் - 3) 


 பிரிவு 3 - மதிப்பின் வடிவம் அல்லது பரிவர்த்தனை மதிப்பு

இரும்பு, துணி, தானியம் போன்று இயற்கையில் கிடைக்கும் பொருட்கள், அவற்றின் வெளித்தெரியும் பௌதிக வடிவம் காரணமாக விற்பனைக்கான சரக்குகளாக இருக்கின்றன. அவை பயன் மதிப்பையும், அதே நேரம் மதிப்பையும் தம்முள் கொண்டுள்ளன என்பதை இது வரையும் பார்த்தோம். அந்த மதிப்புக்கு பின்னால், மனித உழைப்பும், சமுதாயப் பெறுமதியும் இருக்கின்றது என்பதையும் அறிந்து கொண்டோம்.

எமது கண்களுக்கு தெரியும், மதிப்பு எனும் ஆரம்பக் கட்டத்திற்கு திரும்பி வருவோம். விற்பனைக்கான ஒவ்வொரு சரக்கும், அவற்றின் பௌதிக தன்மைகளுக்கு அப்பால் ஒரு பொதுவான மதிப்பைக் கொண்டுள்ளன என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது இரும்பு, துணி, தானியம் என்பன ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாத முற்றிலும் மாறுபட்ட பொருட்கள். ஆனால், அவற்றின் விலைகளை துல்லியமாக நிர்ணயிக்கிறோம். எப்படி?

ஒரு சரக்கு, வேறு வகையை சேர்ந்த இன்னொரு சரக்குடன் கொண்ட மதிப்பு சார்ந்த சாதாரண மனித உழைப்பு பற்றிப் பார்த்தோம். பொருட்கள் எல்லாவற்றிற்கும் பொதுவான ஒரு மதிப்பு அங்கே இருக்க வேண்டும். நவீன காலத்தில், அந்தப் பொதுவான மதிப்பு பணம் எனும் ஒன்றால் தீர்மானிக்கப் படுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஆயினும், நாங்கள் இங்கே ஓர் உண்மையை கண்டுபிடிக்க வேண்டும். பணம் என்றால் என்ன? அதன் பூர்வீகம் என்ன? அது எப்படி தோன்றியது? பணத்தின் மதிப்பு என்ன? ஒரு பொதுவான மதிப்பு எப்படிப் பணமாக மாறியது? முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் செய்ய விரும்பாத வேலை இது. அவர்கள் ஒரு பொருளின் மதிப்பு எப்படிப் பணமாகிறது என்று ஆராய்வதில்லை. ஏனென்றால், மதிப்புக்குப் பின்னால் உள்ள மனித உழைப்பு ஓர் அடிமையுடையதாக கூட இருக்கலாம். அது பற்றி மார்க்ஸ் கொடுக்கும் விளக்கங்களை பின்னர் பார்ப்போம்.


1. மதிப்பின் இரு துருவங்கள் : ஒப்பீட்டு வடிவமும், சமத்துவ வடிவமும்  

நாம் முன்னர் பார்த்த உதாரணத்தில், துணியானது சட்டையின் மதிப்பாக இருக்கின்றது. அதே நேரம், சட்டை துணியின் மதிப்பை அடையாளப் படுத்துகின்றது. துணி தனது மதிப்பை நேரடியாக காட்டினால், சட்டை துணியின் மதிப்பை மறைமுகமாக காட்டுகின்றது. சட்டையை துணியுடன் ஒப்பிட்டு, துணியின் மதிப்பை நிர்ணயிக்கிறோம். அதனால் துணியின் மதிப்பானது "ஒப்பீட்டு வடிவம்" ஆகும்.

அதே நேரம், இன்னொரு பொருளான சட்டையை, அதனுடன் மாறுபட்ட துணியுடன் சமப்படுத்துகின்றோம். அது "சமத்துவ வடிவம்" ஆகும். ஒப்பீட்டு வடிவமும், சமத்துவ வடிவமும், ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள, ஒன்றை விட்டு மற்றதை பிரிக்க முடியாத தன்மைகள் ஆகும். உதாரணத்திற்கு, காந்தம் ஒன்றின் இரண்டு துருவங்களும், ஒன்றோடொன்று எதிரானதாக இருந்தாலும், ஒரே பொருளின் பகுதிகள் தான்.

உலகில் யாரும் ஒரே மாதிரியான பொருட்களை பண்டமாற்று செய்து கொள்வதில்லை. சட்டைக்கு பதிலாக சட்டையை, அல்லது துணிக்கு பதிலாக துணியை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். 2 மீட்டர் துணி = 2 மீட்டர் துணி. இதற்கு ஓர் அர்த்தமும் கிடையாது. எனவே துணியின் மதிப்பை, வேறொரு பொருளுடன் ஒப்பிடுவதன் மூலம் தான் அதன் மதிப்பை அறிந்து கொள்ள முடியும். ஆனால், அதற்கு முதலில் அந்த வேறொரு பொருளை சமப் படுத்த வேண்டிய தேவையும் உள்ளது.

2 மீட்டர் துணி = ஒரு சட்டை என்று பார்த்தோம். அப்படியானால், ஒரு சட்டையின் பெறுமானம், 2 மீட்டர் துணிக்கு சமமானது என்றும் அர்த்தமாகின்றது. இந்த ஒப்பீட்டை மறு பக்கமாக திருப்பி விட்டுப் பார்த்தால், சட்டை துணியின் மதிப்பையும், அதே நேரம் தனது மதிப்பையும், தானே தீர்மானிப்பதாக இருக்க முடியாது. அதனால், இவ்விரண்டு பொருட்களிலும் உள்ள, காந்தம் போன்ற எதிரெதிர் துருவங்கள் தான், ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்துகின்றன.

ஓரிடத்தில், ஒரு சரக்கின் பெறுமதி அதன் ஒப்பீட்டு வடிவமா, அல்லது சமத்துவ வடிவமா என்பதை, இடம், கேள்வி என்பன தீர்மானிக்கின்றன. அந்தச் சரக்கின் மதிப்பு முக்கியமா, அல்லது அது இன்னொரு பொருளின் மதிப்புக்கு மாற்றீடாக பயன்படுகிறதா என்பதைப் பொறுத்தது.

இனி, மதிப்பின் ஒப்பீட்டு வடிவத்தையும், சமத்துவ வடிவத்தையும் தனித் தனியாக, விரிவாகப் ஆராய்வோம்.



2. மதிப்பின் ஒப்பீட்டு வடிவம்

(அ.) ஒப்பீட்டு வடிவத்தின் உள்ளடக்கம்

நடைமுறை வாழ்க்கையில், இரண்டு சரக்குகளின் மதிப்புகளை, நாங்கள் அவற்றின் எண்ணிக்கையைக் கொண்டு அளக்கிறோம். 2 மீட்டர் துணி = 1 சட்டையா அல்லது 5 சட்டைகளா? குறிப்பிட்ட அளவிலான துணியின் பெறுமானம் எத்தனை சட்டைகளுக்கு சமமானது என்று தான் பார்க்கிறோம். இதன் மூலம், நாங்கள் துணியின் மதிப்பு தான் தெரிவிக்கப் படுகின்றது. எப்படி? அதற்கு சமமாக சட்டையை கொண்டு வந்து நிறுத்துகிறோம். அதாவது, சட்டை ஒரு கண்ணாடி மாதிரி செயற்படுகின்றது. துணியின் பிம்பத்தை பிரதிபலிக்கின்றது.

மதிப்பு என்ற ஒன்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு தான், சட்டையுடன் பரிவர்த்தனை செய்கின்றோம். இதனை ஒரு இரசாயனவியல் சூத்திரத்தின் மூலம் புரிய வைக்கலாம். பியூட்றிக் அமிலம், புரோபைல் பார்மேட் இரண்டும் வேறு பட்ட பொருட்கள். ஆனால் இரண்டுமே கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் ஆகிய மூலப் பொருட்களை சம விகிதங்களில் (C₄H₈O₂) கொண்டுள்ளன.

சட்டையை துணிக்கு சமமான பொருளாக கருதுவதன் மூலம், சட்டையில் மறைந்திருக்கும் உழைப்பை, துணியில் மறைந்திருக்கும் உழைப்புடன் சமப் படுத்துகின்றோம் என்பது தான் அதன் அர்த்தம். நெசவு செய்வதும், தைப்பதும் இரண்டு வேறு பட்ட தொழில்கள் தான். ஆனால், நெசவுக்கு பின்னால் மறைந்துள்ள மனித உழைப்பை பெயர்த்தெடுத்து, தையலுக்கு பின்னால் உள்ள மனித உழைப்புடன் பொதுவாக்குகின்றோம்.

மனித உழைப்பு எந்த வடிவத்தில் இருந்தாலும் அது மதிப்பைத் தீர்மானிக்கின்றது. ஆனால், அதுவே மதிப்பாக இருப்பதில்லை. ஒரு பொருளில் உருக் கொள்ளும் பொழுது அதன் மதிப்புத் தெரிவிக்கப் படுகின்றது. துணியின் மதிப்புகளின் சேர்க்கையாக சட்டை உள்ளது. துணிக்கு சமமான பொருளாக ஒரே இயல்பைக் கொண்டுள்ளது. ஆனால், சட்டை தான் இங்கே மதிப்பை பிரதிபலிக்கிறது.

சட்டை தனியாக இருந்தால் அது மதிப்பெதையும் காட்டுவதில்லை. துணியோடு ஒப்பிடும் போது தான் அது தன் மதிப்பைப் பெறுகின்றது. உதாரணத்திற்கு, சாதாரண உடையில் இருப்பவருடன் ஒப்பிடும் பொழுது, கோட்டு சூட்டு போட்ட ஆசாமி மதிப்புக்கு உரியவராகத் தெரிகின்றார். ஆடம்பர ஆடை அணிந்தவரின் மதிப்பானது, சாதாரண ஆடை அணிந்தவருடன் ஒப்பிடுவதனாலேயே தெரிவிக்கப் படுகின்றது.

ஒப்பீட்டு வடிவத்தில், சட்டை துணியுடன் சமமாக்கும் பொழுது, சட்டை எனும் உருவமானது மதிப்பின் உருவமாகின்றது. அதாவது ஒரு பொருளின் மதிப்பு இன்னொரு பொருளின் பயன்மதிப்பு ஆகும். மதிப்பு என்ற வகையில் துணியும் சட்டையும் ஒன்று தான். அதாவது, துணியின் மதிப்பு தற்போது சட்டை என்ற வடிவத்தைப் பெற்றிருக்கிறது. உதாரணத்திற்கு, கிறிஸ்தவ மதத்தில், அதன் நம்பிக்கையாளர்கள், ஏசு கிறிஸ்து எனும் மேய்ப்பனின் ஆடுகளாக கருதப் படுவது போன்ற மாற்றம் இது.

துணியும், சட்டையும் உதாரணத்தை உலகில் உள்ள எல்லா சரக்குகளுக்கும் பொருத்திப் பார்ப்பலாம். சரக்கு X ஒன்றின் மதிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக, சரக்கு Y உள்ளது. மனித உழைப்பின் பொருள் வடிவமான சரக்குகள், ஒன்றுடன் ஒன்று உறவு கொள்வதன் மூலம், தமக்கிடையிலான மதிப்பை தெரிவிக்கின்றன. பயன்மதிப்பு கொண்ட Y, தன்னுடன் உறவு கொண்ட X இன் மதிப்பை தெரிவிக்கிறது. இவ்வாறு ஒரு பொருளின் மாயன் மதிப்பின் ஊடாக, இன்னொரு பொருளின் மதிப்பை தெரிவிப்பதானது மதிப்பின் ஒப்பீட்டு வடிவம் ஆகின்றது.


(ஆ) ஒப்பீட்டு மதிப்பின் அளவு வழி தீர்மானிப்பு

ஒவ்வொரு சரக்கும் பத்து மூட்டை அரிசி, இருபது கிலோ மிளகாய்த் தூள், என்றெல்லாம் மதிப்புத் தெரிவிக்கப் படுகின்றது. எந்த சரக்கின் எந்த அளவிலும் மனித உழைப்பு மறைந்துள்ளது. எமது உதாரணத்தில், துணியை சட்டைக்கு சமமாக்குவது மட்டுமல்லாது, 2 மீட்டர் துணி என்று ஒரு திட்டவட்டமான அளவையும் தீர்மானிக்கிறோம். 

இரண்டு மீட்டர் துணி = ஒரு சட்டை என்ற சமன்பாடு, அதாவது துணியின் பெறுமானத்தை சட்டைக்கு சமப் படுத்தும் போது, இரண்டு பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் ஒரே அளவான உழைப்பு செலவாகி உள்ளது என்பதை உறுதிப் படுத்துகின்றோம். ஆனால், உழைப்பு நேரம் என்பது, உற்பத்தி திறனுக்கு ஏற்றவாறு மாறு படும். அதை நாங்கள் இங்கே பரிசீலிக்க இருக்கிறோம்.

உதாரணம் 1 : சட்டையின் மதிப்பு மாறாமல் அப்படியே உள்ளது. ஆனால், துணியின் மதிப்பு மாறுகின்றது. பருவ மழை வீழ்ச்சி குறைந்து விட்டதால், அல்லது நிலம் தரிசாகிப் போனதால், துணி உற்பத்திக்கு அவசியமான உழைப்பு நேரம் இரட்டிப்பாகின்றது. அப்படியானால் துணியின் மதிப்பும் இரண்டு மடங்காகும். முன்பு 2 மீட்டர் துணியில் அடங்கியுள்ள உழைப்பில் சரி பாதி தான், தற்போது ஒரு சட்டைக்கு சமமானது. அப்படியானால், 2 மீட்டர் துணி = 2 மீட்டர் சட்டை என்று சமன்பாட்டை மாற்ற வேண்டும். 

அதே நேரம், நெசவு இயந்திரங்கள் கணணி மயப் பட்டதன் விளைவாக துணி செய்வதற்கான உற்பத்தி நேரம் சரி பாதியாகக் குறைகின்றது. அப்படியானால், துணியின் மதிப்பும் சரி பாதியாகக் குறைகிறது. ஆகவே இரண்டு மீட்டர் துணி = அரை வாசி சட்டை ஆகின்றது. சரக்கு B இன் மதிப்பு (இங்கே சட்டை) மாறாதிருந்தால், அதன் ஊடாக தெரிவிக்கப் படும் சரக்கு A இன் மதிப்பு நேர் விகிதத்தில் கூடவோ குறையவோ செய்யும்.

உதாரணம் 2 : தற்போது துணியின் மதிப்பு மாறாமல் இருக்கிறது, ஆனால் சட்டையின் மதிப்பு மாறுபடுகின்றது. ஒரு சட்டை தைக்க அவசியமான உழைப்பு நேரம் இரு மடங்காகிறது. அதனால் இரண்டு மீட்டர் துணி = அரை வாசி சட்டை என்றாகிறது.

மறு பக்கம், சட்டையின் மதிப்பு சரி பாதியாகக் குறைந்தால், இரண்டு மீட்டர் துணி = இரண்டு சட்டைகள் ஆகின்றன. சரக்கு A (இங்கே:துணி) இன் மதிப்பு மாறாதிருந்தால், சரக்கு B (இங்கே : சட்டை) மூலமாக தெரிவிக்கப் படும் அதன் மதிப்பு, எதிர் விகிதத்தில் கூடவோ குறையவோ செய்யும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு உதாரணங்களையும் ஒப்பு நோக்கினால், ஒப்பீட்டு மதிப்பின் மாற்றம் முற்றிலும் மாறுபட்ட எதிரெதிர் காரணிகளினால் ஏற்படலாம் என்பதைக் காண்கிறோம். ஒரு சரக்கின் மதிப்பு மாறாதிருந்தாலும், அதன் ஒப்பீட்டு மதிப்பு மாறலாம். மதிப்பு மாறினாலும் ஒப்பீட்டு மதிப்பு மாறாமல் இருக்கலாம்.

இந்த உதாரணங்களை நாங்கள் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெறால், நிஜ வாழ்க்கையில், இந்த உதாரணத்தில் வரும் சட்டையின் பாத்திரத்தை பணம் வகிக்கின்றது. நாட்டில் எதற்காக பணத்தின் பெறுமதி கூடிக் குறைகிறது என்பதைப் புரிந்து கொள்ள, மேற்படி உதாரணங்கள் உதவும்.


3. மதிப்பின் சமத்துவ வடிவம் 

சமத்துவ வடிவம் மூன்று குணங்களை கொண்டுள்ளது:
1. ஒரு சரக்கின் பயன் மதிப்பு, தனக்கு எதிரான மதிப்பின் விம்பம் ஆகின்றது.
2. ஒரு சரக்கில் மறைந்துள்ள உழைப்பு, அதன் எதிரில் உள்ள சரக்கின் நேரடியான உழைப்பின் உருவமாகிறது.
3. தனி நபர்களின் உழைப்பு, சமூகத் தன்மையுள்ள உழைப்பின் வடிவத்தைக் கொண்டுள்ளது.

மேற்கொண்டு இவற்றை விரிவாகப் பார்ப்போம்.

A எனும் பொருளும், B எனும் பொருளும் உறவு கொள்ளும் நேரம், B இன் உடல் A இன் மதிப்பாகிறது. ஒரு சரக்கு தனது சொந்த உடலை, சொந்த மதிப்பின் வெளிப்பாடாக காட்டிக் கொள்ள முடியாது. அதனால் வேறொரு சரக்கின் பயன் மதிப்பை ஏற்றுக் கொள்வது அவசியமானது.

சரக்குகளின் பயன் மதிப்புகள் ஒரே அளவில் சமப் படுத்தக் கூடியவை என்பதை, பின்வரும் உதாரணம் மூலம் விளக்கலாம். தராசு ஒன்றை எடுத்துக் கொள்வோம். எமக்கு ஐந்து கிலோ கிழங்குகள் தேவை. தராசின் ஒரு தட்டில் சில கிழங்குகளை போடுவோம். அடுத்த தட்டில் ஐந்து கிலோ இரும்புத் துண்டை எடுத்துப் போடுகிறோம். இங்கே இரும்பு தன்னை இரும்பாகக் காட்டிக் கொள்வதில்லை. எடை அளக்கும் பொருளாக உள்ளது.

எடை என்ற வகையில், இரும்பும், கிழங்கும் ஒன்று தான். வெவ்வேறு பண்புகளை கொண்ட பொருட்கள் இரண்டும், ஒரே கனமாக இல்லையென்றால், அவை ஒன்றுடன் ஒன்று உறவு கொள்ள முடியாது. தராசின் உதாரணத்தில், இரும்புத் துண்டு எடையை மட்டுமே குறிப்பது போன்று, எமது முன்னைய உதாரணத்தில் சட்டை துணியுடனான மதிப்பை மட்டுமே தெரிவிக்கின்றது.

ஆயினும், தராசின் ஒப்புவமை அது மட்டும் தான். எடை அளக்கும் இரும்புத் துண்டு, கிழங்கின் எடையை மட்டும் குறிப்பிடுகின்றது. ஆனால், சட்டையும், துணியும் இயற்கையல்லாத ஒன்றின் (உழைப்பு) மதிப்பை தெரிவிக்கின்றன. அது ஒரு வித்தியாசம் ஆகும்.

துணியின் ஒப்பீட்டு வடிவம், அதன் குணங்களில் இருந்து வேறுபட்ட சட்டையை போல் இருக்கிறது என்றால், அதன் அடிமட்டத்தில் சமூக உறவு மறைந்திருக்கிறது என்று அர்த்தம். சமத்துவ வடிவில் இது நேர்மாறாக காட்டிக் கொள்ளும். சரக்காகிய சட்டை அது உள்ள நிலையிலேயே மதிப்பை தெரிவிக்கின்றது. அது இயற்கையாக கிடைத்த மதிப்பின் வடிவம்.

சட்டை, துணியுடன் சமமான நிலையில் இருக்கும் உறவு நீடிக்கும் வரை தான் இது பொருந்தும். அதாவது, ஒப்பிடுவதற்கு துணி இல்லா விட்டால், சட்டைக்கும் மதிப்பு இருக்காது. விம்பங்களின் விநோதங்களில் இது முக்கியமானது. குடி மக்கள் இருப்பதால் தான், ஒருவர் அரசராக இருக்கிறார். மாறாக, அவர் அரசராக இருப்பதால் தான், தாங்கள் குடி மக்களாக இருப்பதாக எல்லோரும் கற்பனை செய்து கொள்கிறார்கள்.

இந்த உதாரணத்தில் வரும் சட்டையின் முக்கியத்துவம் பல வகையானது. அது வெப்பத்திலும், குளிரிலும் இருந்து எமது உடலைப் பாதுகாக்கின்றது. சமத்துவ வடிவத்தை காட்டுகின்றது. அதே நேரம், பரிவர்த்தனை செய்து கொள்ளத் தக்கதாக உள்ளது. சமத்துவ வடிவத்தின் இந்த புதிரான தன்மை, முதலாளிய பொருளாதார அறிஞர்கள் அதைப் பணமாக புரிந்து கொள்ளும் வரையில் தெரிய வருவதில்லை.

அவர்கள் சரக்குகளுக்கு மாற்றீடாக தங்கம், வெள்ளியை கொண்டு வருவதன் மூலம், அந்த மாயத் தன்மையை விளக்க முனைகின்றனர்.  நமது முன்னைய உதாரணமான, "2 மீட்டர் துணி = 1 சட்டை" என்ற சாமானிய மதிப்புத் தெரிவிப்பு அவர்கள் கண்களுக்கு தெரிவதில்லை.

சமத்துவமாக்குவதற்கு பயன்படும் சரக்கின் உடல் உருவம், நேரடியான மனித உழைப்பின் பொருள் வடிவமாக உள்ளது. அதே நேரம், மறைபொருளான உழைப்பின் உற்பத்தி வடிவமாகவும் இருக்கிறது. தையலிலும், நெசவிலும் மனித உழைப்புச் சக்தி செலவிடப் படுகின்றது. எனவே மனித உழைப்பு என்ற பொதுவான குணத்தை பெற்றுள்ளன. ஆனால், மதிப்புத் தெரிவிப்பில் ஒரு தலை கீழ் மாற்றம் ஏற்படுகின்றது.

அதைக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். எடுத்துக் காட்டாக, நெசவு தான் துணியின் மதிப்பை உருவாக்குகிறது. அதற்கு காரணம், அது நெசவு என்பதால் அல்ல, மனித உழைப்பு என்ற பொதுக் குணத்தை கொண்டிருக்கும் காரணத்தினால் தான். இந்த உண்மையை நிரூபிப்பது எப்படி? நெசவு மூலம் உற்பத்தி செய்யப் பட்ட ஒரு பொருளை, இன்னொரு வடிவமான தையல் மூலம் உற்பத்தி செய்யப் பட்ட சட்டைக்கு சமமாக நிறுத்துவதன் மூலம் நிரூபிக்கலாம்.

இவ்வாறு ஒரு பொருளின் குறுக்கப் பட்ட மனித உழைப்பு, அதன் எதிரில் உள்ள நேரடியான மனித உழைப்பின் விம்பம் ஆகின்றமை, சமத்துவ வடிவின் இரண்டாவது குணம் ஆகும்.

தையலில் உள்ள திண்மையான உழைப்பு, துணியில் உறைந்துள்ள உழைப்புடனும் சேர்ந்து வருவதால், அது சமூகப் பெறுமானம் உள்ள உழைப்பாக மாறுகின்றது. இவ்வாறு தனியாட்களின் உழைப்பு, சமூகத் தன்மை கொண்ட உழைப்பெனும் வடிவம், சமத்துவ வடிவத்தின் மூன்றாவது விசேட குணமாகும்.

இயற்கையில் உள்ள இவ்வாறான பொருளாதார வடிவங்களை, பொருட்களின் குணாம்சங்களை, மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி அரிஸ்டோட்டில் பகுப்பாய்வு செய்துள்ளார். சரக்குகளின் பண வடிவம் உயர்நிலை வளர்ச்சி என்பதை அவர் குறிப்பிடுகிறார். ஆனால், வேறொரு சரக்குடன் ஒப்பிடும் பொழுது, அதன் மதிப்பு விருப்பம் போல எடுத்துக் கொள்ளப் படுகின்றது என்று கூறுகின்றார்.

அரிஸ்டோட்டிலின் உதாரணம்: "5 படுக்கைகள் = ஒரு வீடு".  அதே 5 படுக்கைகளை குறிப்பிட்ட அளவு பணத்திற்கு சமமானதாக ஆக்கலாம். வீடு பண்பு வழியில் படுக்கைக்கு சமமான மதிப்புருவமாக்கப் பட வேண்டியது அவசியம் என்கிறார். "சமத்துவம் இல்லாமல் பரிவர்த்தனை இருக்க முடியாது. பொதுவான அளவீடு இன்றி சமத்துவம் இருக்க முடியாது." என்பது அரிஸ்டோட்டிலின் வாதம். ஆனால் மேலும் அவர் கூறும் பொழுது: "யதார்த்த வாழ்வில், பல்வேறு பட்ட பொருட்களை ஒன்றுக்கொன்று அளப்பது சாத்தியமில்லை." என்கிறார்.

இங்கே அவர் பொருட்களின் தரங்களை, தன்மைகளை அளப்பதை தான் அப்படிக் குறிப்பிடுகிறார். நடைமுறை வாழ்கையை இலகுவாக்குவதற்கான, ஒரு தற்காலிக ஏற்பாடாக மட்டுமே, இந்த அளவிடல் முறையை பின்பற்றலாம் என்பது அவரது முடிவு.

ஆகவே, மதிப்பு பற்றிய கருத்தியலின் பற்றாக்குறை காரணமாக, அரிஸ்டோட்டில் தனது பகுப்பாய்வு தோல்வியடைந்ததாக கூறுகின்றார். படுக்கைகளையும், வீட்டையும் சமமாக்கும் அந்தப் "பொதுத் தன்மை" எது? அரிஸ்டோட்டில் அப்படியொன்று இருக்க முடியாது என்கிறார். ஏன் இருக்க முடியாது? படுக்கையுடன் ஒப்பிடும் பொழுது, வீடானது சமமான, அடையாள படுத்தத் தக்க ஏதோ ஒன்றை தன்னுள் கொண்டுள்ளது. அது தான் மனித உழைப்பு.

சரக்குகளுக்கு மதிப்பை கொடுப்பது உழைப்பு தான் என்பதை, அரிஸ்டோட்டில் பார்க்க விடாமல் ஒன்று தடுத்து விட்டது. அன்றைய கிரேக்க சமுதாயம் அடிமை முறையை அடிப்படையாகக் கொண்டது. மனிதர்களின் சமத்துவமின்மை மட்டுமல்லாது, உழைப்புச் சக்திகளின் சமத்துவமின்மையையும் தன்னுள்ளே கொண்டுள்ளது.

மதிப்பின் வடிவத்தை தீர்க்கும் புதிரானது, மக்கள் மனதில் மனிதர்கள் சம உரிமை கொண்டவர்கள், மனித உழைப்பு சமத்துவமானது, என்ற கருத்தியல் நிலை பெறும் காலத்தில் தான் தீர்க்கப் படும். பொருட்களின் வடிவம், பொதுவான மனித உழைப்பின் உற்பத்தியாக கருதப் படும் ஒரு சமுதாயத்தில் அது சாத்தியமாகும். சரக்குகளின் உரிமையாளர்கள் மேலாதிக்கம் செலுத்தும் ஒரு சமுதாயத்தில் அது புரிந்து கொள்ளப் படும்.

இருப்பினும், சரக்குகளின் மதிப்பின் வெளிப்பாட்டில் ஒரு சமத்துவ உறவு இருக்கின்றது என்ற உண்மையை அரிஸ்டோட்டில் என்ற மேதை கண்டுபிடித்தார். அவர் வாழ்ந்த காலத்தில் இருந்த சமுதாய நிலவரங்கள் மட்டுமே, சமத்துவ உறவின் பின்னால் என்ன இருந்தது என்ற உண்மையை கண்டுபிடிக்க விடாமல் அவரைத் தடுத்து விட்டன.


மூலதனம் தொடரின் முன்னைய பகுதிகள்: 

Wednesday, December 10, 2014

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் "அத்த" பத்திரிகை தடை செய்யப் பட்டுள்ளது!

இறுதியாக வந்த அத்த பத்திரிகையின்
முகப்புப் பக்கம்
 

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான "அத்த"(உண்மை) தடை செய்யப் பட்டுள்ளது. இதிலே வேடிக்கை என்னவென்றால், பத்திரிகையை வெளியிட விடாமல் தடை செய்தது, அந்தக் கட்சியின் தலைமைப் பீடம் தான்!

கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக, ஊடகவியலாளர்கள் ராஜபக்ச அரசுக்கு எதிரான தகவல்களை பிரசுரித்தமையினால் தடை செய்யப் பட்டதாக கூறப் படுகின்றது. பத்திரிகையின் பிரதிகள் அச்சிடப் பட்டிருந்த போதிலும், அவற்றை விநியோகத்திற்கு விடாமல் பறிமுதல் செய்து, கட்சி அலுவலக களஞ்சிய அறைக்குள் போட்டு விட்டார்கள்.

அத்த ஊடகவியலாளர்கள் பலர், தற்போது, மைத்திரிபால முகாமிற்கு மாறி விட்டார்கள். அவர்கள் ஒன்று சேர்ந்து, "இதிரிய" என்ற புதிய பத்திரிகையை ஆரம்பித்துள்ளனர். அதில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபாலவை ஆதரிக்கும் செய்திகள், கட்டுரைகள் வெளியாகி உள்ளன என்பதை, நான் இங்கே குறிப்பிடத் தேவையில்லை.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உத்தியோகபூர்வ நாளேடான அத்த, கடந்த ஐம்பது வருடங்களாக தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தது. அறுபதுகளில், எழுபதுகளில், அரச மட்டத்தில் நடந்த ஊழல்களை பகிரங்கப் படுத்தும் துணிச்சலான ஊடக தர்மம் காரணமாக, எதிரி முகாமில் இருந்தவர்களாலும் பாராட்டப் பட்டது.

அத்த பத்திரிகை, கம்யூனிஸ்ட் கட்சி நிதியில் இயங்கினாலும், அதன் ஊடகவியலாளர்கள் கட்சிக்குள் சுயாதீனமான குழுவாக செயற்பட்டனர். அதனால், முதலாளிய பத்திரிகைகள் பிரசுரிக்காத பல தகவல்களை வெளியிட முடிந்தது. உதாரணத்திற்கு, யாழ் நூலகம் எரிக்கப் பட்ட செய்தியை, படங்களோடு வெளியிட்ட ஒரேயொரு சிங்களப் பத்திரிகை அத்த தான். அதனால், அரசாங்கம் அத்த மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்குப் போட்டது. தருணம் பார்த்துக் காத்திருந்த அரசாங்கம், 83 கலவரத்தின் போது பத்திரிகையை தடை செய்திருந்தது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியானது, பாராளுமன்ற அரசியலில் சிக்கி சீரழிந்த திரிபுவாத அரசியல் கட்சி ஆகும். அது கம்யூனிஸ்ட் பெயரில் உள்ள, சாதாரண முதலாளியக் கட்சியாகவே இயங்கி வருகின்றது. ஸ்டாலின் - குருஷேவ் பிரச்சினையில், குருஷேவின் நிலைப்பாட்டை ஆதரித்த காரணத்தினால், "ரஷ்ய சார்பு கம்யூனிஸ்ட் கட்சி" என்று அழைக்கப் பட்டது. அதனால், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. பாராளுமன்ற அரசியலை நிராகரித்து புரட்சிகர பாதையை நாடியவர்கள், மாவோவின் தொடர்பை ஏற்படுத்தி தனியான கட்சியாக இயங்கத் தொடங்கினார்கள்.

ரஷ்ய சார்பு கம்யூனிஸ்ட் கட்சி, குருஷேவின் ஆலோசனையை ஏற்று, "சமாதான சகவாழ்வு" என்ற கோஷத்தின் கீழ், கம்யூனிசப் புரட்சியை கைவிட்டு விட்டு, சமூக ஜனநாயக பாதையை தேர்ந்தெடுத்தது. அன்று முதல், மத்திய இடது கட்சியாக கருதப்பட்ட சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அரசாங்கங்களில் பங்கெடுத்து வருகின்றது.

நாய் வேஷம் போட்டால் குலைக்க வேண்டும் என்பதைப் போல, கம்யூனிஸ்ட் கட்சியும் அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்தது. மத்திய இடது கட்சியுடன் கூட்டணி அரசு அமைத்தால், அவர்களை வென்றெடுக்க முடியும் என்பது குருஷேவின் ஆலோசனையாக இருந்தது. ஆனால், நடந்த கதை வேறு. ஆளும் கட்சியுடன் இனவாத சகதிக்குள் புரண்டெழுந்து தாமும் சேறு பூசிக் கொண்டது தான் மிச்சம்.

இருப்பினும், சுதந்திரமாக இயங்கிய படியால், அத்த ஊடகவியலாளர்கள் அவ்வப்போது அரசுக்கு எதிராக எழுதிக் கொண்டிருந்தார்கள். அண்மைக் காலமாக, கம்யூனிஸ்ட் கட்சி ராஜபக்ச அரசில் அங்கம் வகித்தாலும், அத்த பத்திரிகை ராஜபக்சவை விமர்சிக்கும் கட்டுரைகளை பிரசுரித்து வந்தது. அதனால் செய்தித் தணிக்கை போன்ற நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வந்தது.

செய்தித் தணிக்கை அத்தவுக்கு பழகிப் போன விடயம். அதனால், பத்திரிகையில் தணிக்கை செய்யப் பட்ட இடத்தை வெற்றிடமாக விடுவார்கள். அதிலே ஒரு சிறு குறிப்பு இருக்கும்: "இந்த செய்தியை நாய் சாப்பிட்டு விட்டது!" தற்போது கட்சி ராஜபக்ச அரசை ஆதரிக்கையில் கூட, அத்த அரசுக்கு எதிரான செய்திகளை பிரசுரித்த நேரங்களில் தணிக்கைக்கு உள்ளானது. அப்போது பின்வருமாறு ஒரு குறிப்பு வரும்: "இந்த செய்தியை எமது வளர்ப்பு நாய்களே சாப்பிட்டு விட்டன!" 

தற்போது, அத்த தடை செய்யப் பட்டதன் பின்னணியிலும் மகிந்த ராஜபக்சவின் கரம் மறைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகின்றது. தன்னோடு இணைந்திருக்கும் கட்சி ஒன்றின் பத்திரிகை, தனக்கு எதிராக எழுதுவது, கண்ணில் முள்ளாகக் குத்தி இருக்கலாம். ஆயினும், பத்திரிகை வெளிவராமல் தடை செய்ததன் மூலம், திறமையான ஊடகவியலாளர்களை எதிரணிக்கு தாவ வைத்துள்ளது.

Monday, December 08, 2014

மூலதனம் கற்போம் : உழைப்பின் இரட்டைத் தன்மை

மூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம் (பாகம் - 2)


ஒரு சரக்கில் மறைந்துள்ள மனித உழைப்பானது, பயன் மதிப்பாகவும், பரிவர்த்தனை மதிப்பாகவும் தன்னைக் காட்டிக் கொள்கின்றது என்று பார்த்தோம். உழைப்பின் இரட்டைத் தன்மையை கார்ல் மார்க்ஸ் தான் முதன் முதலாக சுட்டிக் காட்டியுள்ளார்.

அதாவது, நாம் இன்றைக்கும் கல்லூரிகளில் படிக்கும், அதே முதலாளித்துவ பொருளியல் பாடம் பற்றித் தான் மார்க்ஸ் பேசுகின்றார். ஒரு பொருளின் மதிப்பை, மனித உழைப்புத் தான் தீர்மானிக்கின்றது என்பதைத் தான், மார்க்ஸ் இங்கே நிறுவ விரும்புகிறார். அதாவது, மூலதனம் புத்தகம் முழுவதும் நடைமுறையில் உள்ள முதலாளித்துவ பொருளாதாரத்தின் மீதான விமர்சனமாகவே எழுதப் பட்டுள்ளது.

உழைப்பின் இரட்டைத் தன்மையை இன்னும் விரிவாகப் பார்ப்போம். ஒரு மீட்டர் துணி, ஒரு சட்டை ஆகிய இரண்டு சரக்குகளை எடுத்துக் கொள்வோம். பொதுவாக, நாங்கள் அவற்றின் மதிப்பை எப்படித் தீர்மானிக்கிறோம்? துணியை விட சட்டையின் மதிப்பு அதிகம் என்று நினைத்துக் கொள்கிறோம். தற்போதைக்கு அப்படியே வைத்துக் கொள்வோம். அதாவது, இரண்டு மீட்டர் துணி, ஒரு சட்டையின் பெறுமதிக்கு சமமானது. (W = 2 W)

சட்டையும், துணியும் பார்க்கும் போதே வித்தியாசம் தெரியும் பொருட்கள். அதாவது, இரண்டு வெவ்வேறு பண்புகள் கொண்டவை. அவற்றை உற்பத்தி செய்யும் தையல் இயந்திரம், நெசவு இயந்திரம் என்பனவும் வித்தியாசமான பண்புகளை கொண்டவை.

அவ்வாறு வெவ்வேறு பண்புகளை கொண்டிருப்பதால் தான், அவற்றுக்கு இடையே சரக்குகள் என்ற உறவு இருக்கிறது. அதாவது, யாரும் ஒரு சட்டைக்குப் பதிலாக, இன்னொரு சட்டையை மாற்றிக் கொள்ள மாட்டார்கள். தனக்குப் பயன்படும், தன்னிடம் இல்லாத இன்னொரு பொருளுடன் தான் பண்டமாற்று செய்வார்கள்.

பண்பு ரீதியாக மாறு பட்ட பொருட்கள் தான், சமுதாயத்தில் உழைப்புப் பிரிவினையை உண்டாக்குகின்றன. அதனால், பொருட்களின் மதிப்பு கூடிக் குறைகிறது என்பது முதலாளித்துவ பொருளியல் அறிஞர்களின் வாதம். மார்க்ஸ் அதனை மறுக்கிறார். புராதன இந்திய உற்பத்தி முறையில், (முதலாளித்துவ) சரக்கு உற்பத்தி இருக்கவில்லை. ஆனால், அங்கே வேலைப் பிரிவினை இருந்துள்ளது.

நமக்கு நன்கு பரிச்சயமான இன்னொரு உதாரணமான தொழிற்சாலையை எடுத்துக் கொள்வோம். அங்கே பல்வேறு பிரிவுகளில் பிரிக்கப் பட்டுள்ள தொழிலாளர்கள், ஒரு சரக்கின் வேறுபட்ட பாகங்களை உற்பத்தி செய்கிறார்கள். அவர்கள் அவற்றை தமக்குள் பண்டமாற்று செய்து கொள்வதில்லை.

உழைப்பின் வெவ்வேறு வகைகளில் இருந்து உருவாகும் உற்பத்திப் பொருட்கள் தான் சரக்குகள் ஆக முடியும். சுருக்கமாக, பயன் மதிப்புள்ள பொருட்கள் எல்லாம் பண்பு வழியில் வேறுபட்டதாக இருப்பதால் தான், சரக்குகளாக ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன.

தனிப்பட்ட உற்பத்தியாளர்களினால் அவர்களது சொந்த நலனுக்காகவும் சேர்த்து தயாரிக்கும் பயன்மதிப்புள்ள பொருட்கள், பின்னர் சமுதாய உழைப்புப் பிரிவினையாக வளர்ச்சி அடைகின்றது. ஒரு சட்டையை தைத்த தையல்காரர், அந்த சட்டையை அவரே அணிந்திருக்கலாம், அல்லது யாரோ ஒரு வாடிக்கையாளர் அணிந்திருக்கலாம். அந்த சட்டையின் பயன் மதிப்பு மாறப் போவதில்லை.

தையல் இயந்திரம் கண்டுபிடிக்கப் படாத புராதன காலத்தில் வாழ்ந்த மக்களும், சீதோஷ்ண நிலையில் இருந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆடைகளை தயாரித்து அணிந்து கொண்டார்கள். இன்றைக்கும் பனி படர்ந்த வட துருவத்தில் வாழும் எஸ்கிமோக்கள், மான் தோலில் இருந்து தமக்கான குளிர் அங்கியை தாமாகவே தயாரித்துக் கொள்கிறார்கள். அங்கே எந்த தையல்காரரும் கிடையாது.

துணியும், சட்டையும், இயற்கை மனிதர்களுக்கு வழங்கிய செல்வங்கள் தான். இயற்கை அளித்த மூலப்பொருட்களை மனிதர்களின் தேவைக்காக பயன்படுத்தும் விளைபொருட்கள் அவை. எனவே, உழைப்பு பயன்மதிப்பாக அல்லது பயனுள்ள உழைப்பாக இருக்கிறது.

உழைப்பு என்பது, சமுதாயத்தின் எல்லா வடிவங்களுக்கும் பொருந்தக் கூடிய, மனித இனம் உயிர் வாழ்வதற்கு தேவையான இன்றியமையாத தேவை ஆகும். அது மனிதனுக்கும், இயற்கைக்கும் இடையிலான பொருளாதார பரிமாற்றம்.

பயன்மதிப்புள்ள பொருட்களில் உள்ள உழைப்பை தனியாக பிரித்து எடுத்து விட்டால், இயற்கையின் ஆதாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. ஒரு சரக்கில் அது மட்டும் முக்கியமானால், இயற்கை செயற்படுவது போல மனிதனும் செயற்பட முடியும். மந்திரத்தால் சட்டை ஒன்றை உருவாக்குவது சாத்தியமில்லாத விடயம்.

ஆனால், மறுபக்கத்தில், உழைப்பு மட்டும் பயன் மதிப்புகளின் ஒரே ஆதாரம் அல்ல. வடிவத்தை மாற்றும் செயற்பாட்டில் இயற்கைச் சக்திகள் மனிதனுக்கு உதவுகின்றன. வில்லியம் பெட்டி என்பவர் கூறியது போல, "உழைப்பு ஒரு பொருளுக்கு தந்தையாகவும், பூமி அதன் தாயாகவும் உள்ளது."

ஒரு சட்டையின் மதிப்பு, துணியின் மதிப்பை விட இரண்டு மடங்கு அதிகமானது என்று பார்த்தோம். அதாவது, இரண்டு மீட்டர் துணி ஒரு சட்டைக்கு சமமானது என்று அறிந்து வைத்திருக்கிறோம். இது வெறும் அளவு சார்ந்த வேறுபாடு. ஒரே ஆள், நெசவு வேலை, தையல் வேலை இரண்டையும் செய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டல்லவா?

ஒரு வேலையாள் ஒரு நாள் நெசவு வேலை செய்து துணி உற்பத்தி செய்கிறார். அவரே மறுநாள் தையல் வேலை செய்து சட்டை உற்பத்தி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இந்நிலையில், துணி, சட்டை ஆகிய பண்பு ரீதியாக மாறுபட்ட பொருட்கள் இரண்டும், ஒரே ஆளின் ஒரே உழைப்பைத் தானே கொண்டிருக்கின்றன? நமது முதலாளித்துவ உலகில் ஒரே ஆள் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு வேலைகளை செய்வதைக் காணலாம்.

பொருள் உற்பத்தி என்பது, ஒவ்வொரு மனிதனினதும் மூளை, தசை, நரம்புகளின், மனித உழைப்பின் செலவீடு தான். மனித உழைப்பை இரண்டு வகைகளில் செலவிட முடியும் என்பதை மேலே கண்டோம். அதாவது, ஒருவர் தொழிற்சாலையில் வேலை செய்தாலும், அலுவலகத்தில் வேலை செய்தாலும், அங்கே மனித உழைப்பு பிரயோகிக்கப் படுகின்றது.

அது குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டத்தை அடைந்த பின்னர், பல விதங்களில் செலவிட முடியும் என்பது உண்மை தான். தேர்ச்சி பெற்ற தொழிலாளி, உயர் கல்வி கற்ற வங்கிப் பணியாளர், உழைப்பை வேறொரு மட்டத்தில் செலுத்துகின்றனர். ஆனால், சரக்கின் மதிப்பானது கண்ணுக்குப் புலப்படாத மனித உழைப்பின் செலவீட்டை குறிக்கின்றது.

ஒரு சாதாரண தொழிலாளியின் தேர்ச்சி அடையாத உடல் உழைப்பை சாமானிய உழைப்பு என்று கொள்வோம். தேர்ச்சி பெற்ற உழைப்பு என்பது, ஒன்று திரட்டப் பட்ட சாமானிய உழைப்பாகும். அதாவது, பன்மடங்காக்கப் பட்ட சாமானிய உழைப்பாகவே கணக்கிடப் படுகின்றது.

ஒரு தேர்ச்சி பெற்ற உழைப்பு, தேர்ச்சி அடையாத சாமானிய உழைப்புடன் ஒப்பிட்டு சமன் செய்யப் படுகின்றது. அதாவது, சாமானிய உழைப்பு, ஒரு பொருளின் மதிப்பை அளப்பதற்கு அடிப்படையாகக் கொள்ளப் படுகின்றது. (ஒரு கூலித் தொழிலாளிக்கு வழங்கும் கூலி வேறு விடயம். அதைப் பற்றி இங்கே பேசவில்லை. ஒரு தொழிலாளி வழங்கும் உழைப்பு நேரம் தான் கணிக்கப் படுகின்றது.)

சட்டையின் மதிப்பு, துணியை விட இரண்டு மடங்கு அதிகம் எனக் கருதிக் கொண்டோம். இந்த வேறுபாடு எங்கிருந்து முளைத்தது? சட்டையில் அடங்கியுள்ள உழைப்பில் பாதியளவு தான் துணியில் அடங்கியுள்ளது. இன்னொரு விதமாகக் கூறினால், துணியின் உற்பத்திக்கு அவசியமான உழைப்பைப் போன்று இரு மடங்கு, சட்டை உற்பத்திக்கு செலவிடப் பட்டிருக்க வேண்டும்.

ஆகவே, ஒரு சரக்கின் பயன் மதிப்பில் மறைந்துள்ள உழைப்பை பண்பு ரீதியாக அளவிடுகின்றோம். அதற்கு மாறாக, (பரிவர்த்தனை) மதிப்பு அளவு ரீதியாக கணக்கிடப் படுகின்றது. "ஒரு பொருளைப் பாவிப்பதால் என்ன பிரயோசனம்?" என்று அதன் பயன் மதிப்பைப் பற்றிப் பேசுகின்றோம். "அந்தப் பொருள் எவ்வளவு விற்பனைக்கு வருகின்றது? அது எவ்வளவு காலம் பாவிக்கும்?" என்று அதன் (பரிவர்த்தனை) மதிப்பைப் பற்றிப் பேசுகின்றோம்.

உதாரணத்திற்கு, ஒரு சட்டை உற்பத்தி செய்யத் தேவையான உற்பத்தித் திறன் (இயந்திரங்கள், தொழில்நுட்பம்) மாறாமல் அப்படியே இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். உற்பத்தி செய்யப்படும் சட்டைகளின் மதிப்பு அவற்றின் தொகைக்கு ஏற்றவாறு அதிகரிக்கும். அதாவது, ஒரு சட்டை உற்பத்தி செய்வதற்கு ஒரு வேலை நாள் தேவைப் பட்டால், இரண்டு சட்டைகள் உற்பத்தி செய்வதற்கு இரண்டு நாட்கள் தேவை.

ஏதோ ஒரு சூழ்நிலையில், ஒரு சட்டையின் உற்பத்திக்கு தேவையான வேலை நாள் இரு மடங்காகின்றது. அப்படியானால், முன்னர் இரு சட்டைகளுக்கு இருந்த பெறுமதி, தற்போது ஒரு சட்டைக்கு இருக்கும். இன்னொரு சந்தர்ப்பத்தில், ஒரு சட்டைக்கு அரை நாள் வேலை நேரம் மட்டும் தேவைப் பட்டால், ஒரு சட்டையின் பெறுமானம் இரண்டு சட்டைகளுடையதாக மாறும். சுருக்கமாக, ஒரு பொருளின் உற்பத்திக்கு செலவிடப் பட்ட பயனுள்ள உழைப்பு அதே பண்பு கொண்டதாக நீடிக்கிறது. ஆனால், உழைப்பின் அளவு மாறியுள்ளது.

பயன் மதிப்புகளின் அளவிலான அதிகரிப்பு, பொருட் செல்வத்தின் அதிகரிப்பாகும். ஒருவர் அணிவதற்கு ஒரு சட்டை தான் தேவை. இரண்டு சட்டைகள் என்பது இரண்டு பேருக்குரியது. ஆனால், சட்டைகள் அதிகரிக்கும் பொழுது, அவற்றின் மதிப்பின் பெறுமதி குறைகின்றது. உற்பத்தி செய்யப்படும் அதிகளவு பொருட்களின் எண்ணிக்கையினால் செல்வம் அதிகரித்தாலும், மதிப்பால் குறைகின்றது. இந்த எதிரெதிர் திசையிலான போக்கிற்கு காரணம், உழைப்பின் இரட்டைத் தன்மை ஆகும்.

உற்பத்தித்திறன் என்பதும் மறைபொருளான உழைப்பின் வடிவம் தான். அதாவது, இயந்திரங்கள், தொழில்நுட்ப கருவிகளை உருவாக்கவும், முன்கூட்டியே மனித உழைப்பு செலவிடப் பட்டுள்ளது. மனித உழைப்புச் சக்தியின் செலவீடு தான், அனைத்துப் பொருட்களிலும் மறைந்திருக்கும் உழைப்பு. மனித உழைப்பு சரக்கின் மதிப்பை படைக்கிறது, அதன் மதிப்பாகவே இருக்கிறது.

பிற்குறிப்பு: முதலாளித்துவ பொருளியல் அறிஞர் ஆதம் ஸ்மித், சரக்குகளை மதிப்பிடுவது மனித உழைப்பு என்பதை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், உழைப்பின் அளவைக் கொண்டல்ல, உழைப்பின் மதிப்பைக் கொண்டு சரக்கின் மதிப்பை நிர்ணயிக்கிறார். "ஒரு உழைப்பாளியின் ஆரோக்கியம், வலிமை, முனைப்பு சம அளவில் இருக்க வேண்டும். தொழிலாளி தனது மகிழ்ச்சி, ஓய்வு, சுதந்திரத்தின் ஒரு பகுதியை இழக்க வேண்டும்." என்று சொல்கிறார். (நாடுகளின் செல்வம், புத்தகம் 1) ஆதம் ஸ்மித் நவீன கால கூலித் தொழிலாளியை நினைத்து அப்படி எழுதி இருக்கிறார். உழைப்பு என்பது உலகில் தோன்றிய ஜீவராசிகளின் இயல்பான நடவடிக்கை என்று அவர் கருதவில்லை.


மூலதனம் தொடரின் முன்னைய பகுதிகள்: 
1. மூலதனம் : பாட்டாளிகளுக்கான பொருளியல் பாடம்