Showing posts with label தனியரசு. Show all posts
Showing posts with label தனியரசு. Show all posts

Sunday, October 22, 2017

தனி நாடே மாயம்! தேசியம், தாயகம், வாக்கெடுப்பு எல்லாம் மாயம்!!

ஈராக்கில், அரேபிய‌ருக்கும், குர்திய‌ருக்கும் இடையில் சமீபத்தில் புதிய‌ போர் மூண்டுள்ள‌து. சுதந்திர குர்திஸ்தான் கோரி பொது வாக்கெடுப்பு நடந்து சில தினங்களில் மோதல்கள் வெடித்துள்ளன. தனி நாடு கோரும் குர்திஸ்தானின் எல்லைப் பகுதியான கிர்குக் பற்றிய சர்ச்சை நீண்ட காலமாக தொடர்ந்திருந்தது.

தொடக்கத்தில் குர்திய பெஷ்மேர்கா படையினருக்கும், துருக்மேன் ஆயுதக்குழுவுக்கும் இடையில் மோதல் நடந்திருந்தது. கிர்குக் பிரதேசத்தில் வாழும் துருக்கி மொழி பேசும் துருக்மேன் சிறுபான்மை இனமும், அயல்நாடான துருக்கியும் குர்திஸ்தான் பிரிவினையை எதிர்த்து வந்தன.

அது மட்டுமல்லாது, குர்திஸ்தான் பிரிவினைக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப் பட்ட மறுநாளே அது செல்லாது என்று ஈராக் அறிவித்திருந்தது. விமான நிலையங்களையும், சர்வதேச எல்லைகளையும் ஈராக் படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டிருந்தது. அப்படி நடக்காவிட்டால் போர் மூளும் என்றும் பயமுறுத்தி இருந்தது.

குர்திஸ் ப‌டையின‌ரின் க‌ட்டுப்பாட்டில் இருந்த‌, எண்ணை வளம் நிறைந்த கிர்குக் ந‌க‌ரையும், அதை அண்டிய‌ பிர‌தேச‌ங்களையும் ஈராக்கிய‌ ப‌டைக‌ள் கைப்ப‌ற்றியுள்ள‌ன‌.

ஈராக் அர‌சின் ஆத‌ர‌வு பெற்ற‌ ஷியா துணைப் ப‌டையின‌ர், ஒரே ஒரு நாள் ந‌ட‌ந்த‌ ச‌ண்டையில், கிர்குக் ப‌குதியை கைப்ப‌ற்றியுள்ள‌மை ப‌ல‌ரை விய‌ப்பில் ஆழ்த்தியுள்ள‌து.

ஈராக் எண்ணையில் க‌ணிச‌மான‌ அள‌வு ப‌ங்கு கிர்குக் ப‌குதியில் இருந்து கிடைக்கிற‌து. அத‌னாலேயே அது கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ பிர‌தேச‌மாக‌ உள்ள‌து. அத‌னால் எல்லோரும் அத‌ற்கு உரிமை கோருகிறார்க‌ள்.

கிர்குக் ஒரு கால‌த்தில் துருக்மேன் (துருக்கி மொழி பேசும் ம‌க்க‌ள்) இன‌த்த‌வ‌ர் பெரும்பான்மையாக‌ வாழ்ந்த‌ சிறிய‌ ந‌க‌ர‌ம். 1927ம் ஆண்டு, அங்கு எண்ணை க‌ண்டுபிடிக்க‌ப் ப‌ட்ட‌து. அந்த‌க் கால‌த்தில் கிர்குக், துருக்கியின் மொசூல் மாகாணத்திற்குள்‌ இருந்த‌து. இந்த‌க் கார‌ண‌ங்க‌ளினால், துருக்கியும் கிர்குக் த‌ன‌க்கு சொந்த‌ம் என்று உரிமை கோருகின்ற‌து.

குர்திய‌ர்க‌ள் அத‌னை த‌ம‌து குர்திஸ்தான் தாய‌க‌ப் ப‌குதி என்று உரிமை கோருகின்ற‌ன‌ர். குர்திஸ் தேசிய‌வாத‌ இய‌க்க‌ம் தொட‌ங்கிய‌ கால‌த்தில் இருந்து, வ‌ருங்கால‌ குர்திஸ்தானின் த‌லைந‌க‌ராக‌ கிர்குக் இருக்கும் என்று அறிவிக்க‌ப் ப‌ட்ட‌து.

இது இல‌ங்கையில் த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் திருகோண‌ம‌லையை வ‌ருங்கால‌ த‌மிழீழ‌த் த‌லைந‌க‌ர‌மாக‌ உரிமை கோரிய‌து போன்ற‌து. கிர்குக், திருகோண‌ம‌லை இர‌ண்டும் பொருளாதார‌க் கார‌ண‌ங்க‌ளுக்காக‌ ம‌ட்டுமே த‌லைந‌க‌ர‌மாக‌ ஏற்றுக் கொள்ள‌ப் ப‌ட்ட‌ன‌.

எண்ணை உற்ப‌த்தி கார‌ண‌மாக‌ கிர்குக் ந‌க‌ர‌ம் பெரிதாக‌ வ‌ள‌ர்ந்த‌து. வ‌ட‌க்கில் இருந்து குர்திய‌ரும், தெற்கில் இருந்து அரேபிய‌ரும் வேலை தேடி வ‌ந்து குடியேறினார்க‌ள். 1957 க‌ண‌க்கெடுப்பின் ப‌டி, கிர்குக் ந‌க‌ர‌ ச‌ன‌த்தொகையில் 38% துருக்மேன், 33% குர்திய‌ர், எஞ்சியோர் அரேபிய‌ர்க‌ள். (இதில் க‌ணிச‌மான‌ அள‌வு கிறிஸ்த‌வ‌ அஸிரிய‌ர்க‌ள்.)

ச‌தாம் ஹுசைன் ஆட்சிக் கால‌த்தில் கிர்குக் அரேபிய‌ம‌யமாக்க‌ப் ப‌ட்ட‌து. பெரும‌ள‌வு குர்திய‌ர்க‌ள் ப‌ல‌வ‌ந்த‌மாக‌ வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். அதே நேர‌ம் அரேபிய‌ர்க‌ள் பெரும‌ள‌வில் குடியேற்ற‌ப் ப‌ட்ட‌ன‌ர். க‌ணிச‌மான‌ அள‌வு குர்திய‌ர்க‌ள், அர‌பு மொழியை தாய்மொழியாக்கி தாமும் அரேபிய‌ராகி விட்ட‌ன‌ர். ச‌தாம் ஆட்சி முடிவுக்கு வ‌ந்த‌ பின்ன‌ர், முன்பு வெளியேற்ற‌ப் ப‌ட்ட‌ குர்திய‌ர்க‌ள் திரும்பி வ‌ந்த‌ன‌ர்.

இன்றைய‌ கிர்குக் தொட‌ர்பான‌ பிர‌ச்சினை 2014 ம் ஆண்டு தொட‌ங்கிய‌து. அது வ‌ரையும் கிர்குக் ஈராக் அர‌சின் நேர‌டி ஆட்சியின் கீழ் இருந்த‌து. ஆனால், மேற்கில் இருந்து வ‌ந்த‌ ஐ.எஸ். (ISIS) படையெடுப்பை ச‌மாளிக்க‌ முடியாம‌ல், ஈராக்கிய‌ இராணுவ‌ம் பின்வாங்கிய‌து. அந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி குர்திய‌ ப‌டைக‌ள் கிர்குக்கை கைப்ப‌ற்றின‌. அப்போது பிர‌தான‌மான‌ எதிரி ஐ.எஸ். என்ப‌தால், ஈராக்கிய‌ அர‌சும் விட்டுக் கொடுத்த‌து.

ஐ.எஸ். தோற்க‌டிக்க‌ப் ப‌ட்ட‌ பின்ன‌ர் கிர்குக் தொட‌ர்பான‌ பிர‌ச்சினை எழுந்த‌து. குர்திஸ்தான் அர‌சு கிர்குக் எண்ணையை திருடி விற்கிற‌து என்று ஈராக் அர‌சு குற்ற‌ம் சாட்டிய‌து. அதே நேரம், "எம‌து த‌லைந‌க‌ரான‌ கிர்குக்கை விட்டுக் கொடுக்க‌ மாட்டோம்..." என்ற‌ தேசிய‌வாத‌ கோரிக்கையை முன் வைத்து தான், குர்திஸ்தான் பிரிவினைக்கான‌ பொது வாக்கெடுப்பும் ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌து.

"த‌னிநாடு காண்ப‌து என்பது ஒரு ந‌டைமுறைச் சாத்திய‌ம‌ற்ற‌ க‌ற்ப‌னாவாத‌ம்!" ஈராக்கில் இருந்து குர்திஸ்தான் பிரிவினைக்காக‌ பொதுவாக்கெடுப்பின் பின்ன‌ர், பெரும்பான்மை குர்திய‌ர்க‌ள் இப்போது தான் ய‌தார்த்த‌ம் என்ன‌வென‌ உண‌ர்கிறார்க‌ள். இவ்வாறு, குர்திஸ்தான் போர்க்களத்தில் இருந்து செய்தியாளர்கள் அனுப்பிய தகவல்களை வைத்து, ட‌ச்சு செய்தி நிறுவ‌ன‌ம் NOS தனது செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. ('Het ziet er treurig uit voor de Koerden in Irak'; https://nos.nl/artikel/2199001-het-ziet-er-treurig-uit-voor-de-koerden-in-irak.html)

கடைசியாக நடந்த சண்டையில், குர்திஸ் க‌ட்டுப்பாட்டின் கீழ் இருந்த‌ கிர்குக் மாகாண‌த்தின் எஞ்சிய ப‌குதிக‌ளையும் ஈராக்கிய‌ இராணுவ‌ம் கைப்ப‌ற்றி விட்ட‌து. குர்திஸ் ப‌டைக‌ள் பின்வாங்கி ஒரு அவ‌மான‌க‌ர‌மான‌ தோல்வியை ச‌ந்தித்த‌தின் பின்ன‌ணியில் ஈரான் இருக்க‌லாம் என‌ ச‌ந்தேகிக்க‌ப் ப‌டுகின்ற‌து.

அதாவ‌து, ஈரானின் ம‌றைமுக‌ நெருக்குவார‌ம் கார‌ண‌மாக‌த் தான் குர்திஷ் ப‌டைய‌ணிக‌ள் பின்வாங்கியுள்ள‌ன‌. குர்திஸ்தானில் வ‌ட‌ ப‌குதி KDP இய‌க்க‌த்தின் க‌ட்டுப்பாட்டிலும், தென் ப‌குதி PUK க‌ட்டுப்பாட்டிலும் உள்ள‌து. கிர்குக் ப‌குதி PUK க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தில் அட‌ங்குகிற‌து.

PUK இத‌ற்கு முன்ன‌ரும் சுத‌ந்திர‌ குர்திஸ்தான் பொது வாக்கெடுப்பை முழு ம‌ன‌துட‌ன் ஆத‌ரிக்க‌வில்லை. ஏனெனில் அதன‌து போட்டி இய‌க்க‌மான‌ KDP தான் பொது வாக்கெடுப்பை அறிவித்திருந்த‌து. இது அங்கு இரு தேசிய‌வாத‌க் க‌ட்சிக‌ளுக்கு இடையில் ந‌ட‌க்கும் அர‌சிய‌ல் விளையாட்டு.

பொது வாக்கெடுப்புக்கு வ‌ரையும், KDP இன் பிர‌ச்சார‌ம் முழுவ‌தும் "ஹ‌லாப்ஜா இன‌ப்ப‌டுகொலை" ப‌ற்றியே இருந்த‌து. இந்த‌ உண‌ர்ச்சிக‌ர‌ அர‌சிய‌லுக்கு பின்னால் இர‌ண்டு க‌ட்சிக‌ளினதும் போட்டி அரசிய‌ல் ம‌றைந்து விட்ட‌து, அல்ல‌து ம‌றைக்க‌ப் ப‌ட்ட‌து. அதாவ‌து, ஹ‌லாப்ஜா என்ற‌ கிராம‌ம், ஈரான் எல்லைக்க‌ருகில், PUK க‌ட்டுப்பாட்டு பிர‌தேச‌த்தில் உள்ள‌து.

த‌ன‌து பிர‌தேச‌த்திற்குள் KDP பின்க‌த‌வால் நுழைய‌ப் பார்க்கிற‌து என‌ நினைத்து‌ PUK எச்ச‌ரிக்கையான‌து. ஆனால், சுத‌ந்திர‌ குர்திஸ்தான் கோரிக்கையை எதிர்த்தால் அதை சுட்டிக் காட்டியே தேசிய‌ அர‌சிய‌லில் இருந்து ஓர‌ங்க‌ட்ட‌ப் ப‌ட‌லாம். இந்த‌ப் ப‌ய‌த்தால் PUK உம் பொது வாக்கெடுப்பை ஆத‌ரித்த‌து.

இந்த இட‌த்தில் இன்னொரு உண்மையை ம‌ற‌ந்து விட‌க் கூடாது. PUK நீண்ட‌ கால‌மாக, ஆர‌ம்ப‌த்தில் இருந்தே ஈரானின் ஆத‌ர‌வுட‌ன் இய‌ங்கி வ‌ந்த‌து. த‌ற்போது கிர்குக் பிர‌தேச‌த்தில் இருந்து பின்வாங்கிய‌தும் PUK ப‌டைய‌ணிக‌ள் தான். அத‌ற்கு ஈரானின் அழுத்த‌ம் கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்.

"பார்த்தீர்க‌ளா, த‌மிழ‌ருக்குள் ஒற்றுமை இல்லாத‌து தான் எல்லாப் பிர‌ச்சினைக்கும் கார‌ணம்" என்று சொல்வ‌து மாதிரி கிள‌ம்பி வ‌ராதீர்க‌ள். புலிக‌ள் கிழ‌க்கு மாகாண‌த்தில் க‌ருணா குழுவை அக‌ற்றிய‌ மாதிரி, "PUK துரோகிக‌ள்" என்று சொல்லி விட்டு KDP அங்கு வ‌ர‌ முடியாது. குர்திஸ்தானில், வ‌ட‌க்கு, தெற்கு பிராந்திய‌ மொழிக‌ளுக்கு இடையிலான‌ க‌லாச்சார‌ வித்தியாச‌ம் மிக‌வும் அதிக‌ம்.

த‌ற்போது அங்கு ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளில் இருந்து குர்திஸ் ம‌க்க‌ள் ஒரு ப‌டிப்பினையை பெற்றுள்ள‌ன‌ர். த‌னி நாடு கிடைக்கும் என்ப‌தெல்லாம் ப‌க‌ற் க‌ன‌வு. குர்திஸ் தேசிய‌வாதிக‌ள் சொல்வ‌து போல‌ எதுவும் ந‌ட‌க்க‌ப் போவ‌தில்லை.

பூகோள‌ அர‌சிய‌ல் எம‌க்கு சாத‌க‌மாக‌ அமைய‌ப் போவ‌தில்லை. அமெரிக்கா ம‌ட்டும‌ல்லாது, எந்த‌வொரு அய‌ல்நாடும், குர்திஸ்தான் என்ற‌ த‌னிநாடு உருவாக‌ ச‌ம்ம‌திக்க‌ப் போவ‌தில்லை. மொத்த‌த்தில் எல்லாம் ஒரு மாயை.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:


Monday, July 29, 2013

மூலதன முதலைகளின் வேட்டைக் காடாகிய தெற்கு சூடான்!


"சூடான் மக்கள் விடுதலை இயக்கம், விடுதலை பெறும் தெற்கு சூடானின் விடுதலை நாள் விழாவில் பங்கேற்குமாறு, ‘ நாடு கடந்த தமிழீழ அரசு ’க்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தமிழீழத்திற்கான முதல் அங்கீகாரம்!"

இரண்டு வருடங்களுக்கு முன்னர், சூடானில் இருந்து பிரிந்து சுதந்திர நாடான தெற்கு சூடான், நம்மூர் தமிழ் தேசியவாதிகள் மனதிலும் பெருமளவு எதிர்பார்ப்புகளை உண்டாக்கியது. தெற்கு சூடானை விட, சூடான் நாட்டின் டாபூர் பிராந்தியம் அளவிட முடியாத மனிதப் பேரழிவை சந்தித்திருந்தது. அங்கு இனப்படுகொலை நடந்ததை, ஐக்கிய நாடுகள் சபையும் அறிவித்திருந்தது. ஆயினும், சர்வதேச சமூகம் டாபூரை கைவிட்டு விட்டு, தெற்கு சூடானுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காரணம் என்ன? எல்லாமே எண்ணைக்காக தான். தெற்கு சூடான் விடுதலைப் போராட்டத்தை, "இஸ்லாமிய-அரபு மேலாதிக்கத்திற்கு எதிரான கிறிஸ்தவ பழங்குடியின மக்களின் போராட்டம்..." என்று பலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், எண்ணை வளத்தை பங்கு பிரிப்பது சம்பந்தமான சர்ச்சை தான் போருக்கு காரணம் என்பதை அறிந்தவர்கள் மிகக் குறைவு.

முப்பதாண்டுகளாக ஆயுதப் போராட்டம் நடத்தி, தனியரசு அமைத்த தெற்கு சூடானின் இன்றைய நிலைமை என்ன? அங்கே மக்கள், எந்தக் குறையுமற்று, சந்தோஷமாக வாழ்கின்றனரா? இதற்கான பதில் அதிர்ச்சியை உண்டாக்கும். தெற்கு சூடான், பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக் காடாகியுள்ளது. விடுதலைக்காக உயிரைக் கொடுத்து போராடிய மக்கள் வறுமையில் வாடுகின்றனர். அவர்களை வழிநடத்திய தலைவர்கள், சொகுசு வாழ்வில் மெய்மறந்து போயுள்ளனர். 

அன்று தெற்கு சூடான் விடுதலை அடைந்ததை வரவேற்றவர்கள், இன்று அந்நாட்டு மக்களின் நிலையைப் பற்றிக் கவலைப் படாமல் பாராமுகமாக இருப்பது ஏன்? உண்மையில், தமிழீழ உழைக்கும் மக்கள் தான், தெற்கு சூடான் உழைக்கும் மக்களின் நிலைமை குறித்து அக்கறை கொள்வார்கள். எமக்குத் தெரிந்த "தீவிரமான தமிழீழ போராளிகளுக்கு," அந்த அக்கறை துளியும் கிடையாது. ஏனெனில், அவர்கள் வசதியான மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தமது வர்க்க நலன்கள் மட்டுமே முக்கியமானவை. அதனைப் புரிந்து கொள்வதற்கு, நாங்கள் தெற்கு சூடானில் இருந்து படிப்பினைகளை பெறுவது அவசியம்.

முதலில், தெற்கு சூடான் அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பற்றிய சிறிய குறிப்பு. அந்நாடு சுதந்திரமடைந்த நாளில் இருந்து இன்று வரை, ஒரு கட்சி ஆட்சி தான் நடக்கின்றது. சூடானில் இருந்து பிரிவதற்காக, "சூடான் மக்கள் விடுதலை இயக்கம்" (SPLM) ஆயுதப் போராட்டம் நடத்தியது. அதன் இராணுவப் பிரிவின் பெயர் : "மக்கள் விடுதலைப் படை" (PLA). தெற்கு சூடான் சுதந்திரமடைவதற்கு முன்னரே, அதன் தலைவர் ஜோன் காரெங் ஒரு விபத்தில் கொல்லப் பட்டார். அதன் பிறகு, தலைவரான சல்வா கீர், சுதந்திர தெற்கு சூடானின் முதலாவது ஜனாதிபதியாகி உள்ளார். ரீக் மாஷார் உப ஜனாதிபதியாகினார்.

தெற்கு சூடானில் பல கட்சி ஜனநாயகம் கிடையாது. பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி இல்லை. ஆளும் SPLM கட்சிக்குள் மட்டுமே தேர்தல் சாத்தியமானது. அதனால், அந்தக் கட்சிக்குள் தான் அதிகாரத்திற்கான பதவிப் போட்டியும் நடக்கின்றது. அண்மையில் ஜனாதிபதி சல்வா கீர், மந்திரி சபையை கலைத்து, மந்திரிகளை வீட்டுக்கு அனுப்பிய பிறகு, அங்கே பெரும் அரசியல் நெருக்கடி தோன்றியுள்ளது.

ரீக் மாஷார், தானே அடுத்த ஜனாதிபதியாக வர வேண்டுமென விரும்புவது ஒன்றும் இரகசியமல்ல. ஆனால், இங்கே குறிப்பிடத் தக்க விடயம், கீர், மாஷார் ஆகிய தலைவர்களுக்கு இடையிலான பதவிப் போட்டி, இரண்டு இனங்களுக்கு இடையிலான போட்டியை எதிரொலிக்கின்றது. கீர் டிங்கா இனத்தை சேர்ந்தவர். (அகால மரணமுற்ற முன்னாள் தலைவர் ஜோன் காரெங் கூட ஒரு டிங்கா தான்.) ஆனால், மாஷார் நூவர் (அல்லது நூர்) இனத்தை சேர்ந்தவர். தெற்கு சூடானில் பல இன மக்கள் வாழ்ந்த போதிலும், டிங்கா, நூவர் இனத்தவர்கள் தான் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.

தலைநகர் ஜூபாவில் தண்ணீர் சுத்திகரிக்கும் ஆலையோ, அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் வசதியோ கிடையாது. ஜூபாவில், நகரமயமாக்கலுக்கு அவசியமான நவீன கட்டுமானப் பணிகளை செய்யாமல் புறக்கணிக்கும் அரசு, வடக்கே சில நூறு கிலோமீட்டர் தொலைவில், ரமிசெல் என்ற புதிய தலைநகரம் ஒன்றை அமைக்க விரும்புகின்றது. பெட்ரோல் விற்றுக் கிடைத்த வருமானத்தில் தான் புதிய தலைநகரம் கட்டப் படப் போகின்றது. நிர்மாணப் பணிகளில் ஈடுபடும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பெற்றோலிய தொழிற்துறை, தெற்கு சூடானின் முக்கால்வாசி தேசிய வருமானத்தை ஈட்டித் தருகின்றது. சூடான் எல்லையோரம் உள்ள வட மாகாணங்களில் மட்டுமே எண்ணை வளம் உள்ளது. இன்னும் பத்து வருடங்கள் மட்டுமே எண்ணை கிடைக்கும். எண்ணைக் கிணறுகள் வற்றிய பிறகு என்ன நடக்கும்? அதற்கான எந்தத் திட்டமும் அரசிடம் கிடையாது. பன்னாட்டு முதலீட்டாளர்களும், தற்போது கிடைக்கும் எண்ணைக்காக மட்டுமே வருகின்றனர். தெற்கு சூடானின் பொருளாதாரம் வளர்ச்சி அடைகின்றது என்றால், எண்ணை உற்பத்தி மட்டுமே மூல காரணம்.

சுதந்திரத் தனியரசான தெற்கு சூடானில், எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனம், எந்த நாட்டவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெரியுமா? "சீன தேசிய பெற்றோலிய நிறுவனம்" தான், சுதந்திர தெற்கு சூடானில் மிகப் பெரிய முதலீட்டாளர்! முன்பு சூடான் என்ற ஒரே நாடாக இருந்த காலத்திலும், சீனர்கள் தான் எண்ணை தொழிற்துறையில் முதலிட்டிருந்தார்கள். ஆமாம், அதே எண்ணைக் கிணறுகள், அதே நிறுவனம், அதே சீனர்கள். ஆனால், கமிஷன் வாங்கும் உள்நாட்டுப் பிரதிநிதி மட்டுமே மாறி இருக்கிறார்.

ஒரு காலத்தில், "சூடானிய அரபு பேரினவாதிகளை ஆதரிக்கும் சீன முதலீட்டாளர்கள்" பற்றி, அமெரிக்கர்களிடம் முறையிட்டவர்கள், இன்று சீனர்களை வரவேற்று, தெற்கு சூடானில் முதலிடச் சொல்லி இருக்கிறார்கள். சீனர்கள் கொடுக்கும் கமிஷனை வேண்டாம் என்று மறுப்பதற்கு, தெற்கு சூடானின் ஆட்சியாளர்கள் அந்தளவுக்கு முட்டாள்களா?   நாளை தமிழீழ தனியரசு உருவானாலும், அது தான் நடக்கப் போகின்றது. சந்தேகத்திற்கிடமின்றி, சீனர்கள் தான் தமிழீழத்திலும் முதலிடப் போகிறார்கள். இன்று ராஜபக்சவுக்கு கமிஷன் கொடுக்கும் சீனர்கள், நாளை தமிழீழ ஜனாதிபதிக்கு கொடுப்பார்கள்.

தெற்கு சூடான் நாட்டு எண்ணை வள தொழிற்துறையில், ஏன் அமெரிக்க நிறுவனங்கள் எதுவும் முதலிடவில்லை? எண்ணை தொழிற்துறை மட்டுமல்ல, தெற்கு சூடானில் வர்த்தகத்தில் ஈடுபடும் பெரிய நிறுவனங்கள் எதுவும் அமெரிக்கர்களுடையதல்ல! ஏன்? பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும், ஆரம்பக் கட்ட கோளாறுகளை கொண்ட புதிய தேசத்தில் முதலிடுவதற்கு, அவர்களுக்கு கிறுக்குப் பிடித்திருக்கிறதா? அந்த வேலையை மற்றவர்கள் செய்யட்டும் என்று காத்திருக்கிறார்கள். நிலைமை சீரான பின்னர், அமெரிக்கர்கள் களத்தில் இறங்குவார்கள். மேலும், சீனர்கள் எண்ணை எடுத்தாலும், உலகச் சந்தையில் தானே விற்க வேண்டும்?

தெற்கு சூடானின் எல்லைகள் இன்றைக்கும் சரியாக வரையறுக்கப் படவில்லை. "அபெய்" என்ற பகுதியை சூடானும் உரிமை கூறுவதால், அதற்காக ஒரு எல்லைப் போர் நடை பெற்றது. தெற்கு சூடான் அரச செலவினத்தில் பெரும் பகுதி இராணுவத்திற்கு செலவிடப் படுகின்றது. இது உலகிலேயே மிக அதிகமான பாதுகாப்புச் செலவினமாகும். எண்ணைக் கிணறுகளை பாதுகாப்பதற்கு, இராணுவத்திற்கு அதிக சலுகைகள் கொடுத்து பராமரிப்பது அவசியம் என்று கருதப் படுகின்றது. முன்பு, வட சூடானிய படைகள் ஆக்கிரமித்திருந்த காலத்திலும், அதுவே காரணமாக இருந்தது.

தெற்கு சூடானில், எண்ணை வளம் நிறைந்த மாநிலங்களில் நிலைமை எப்படி இருக்கிறது? எண்ணை உற்பத்தியினால் கிடைக்கும் இலாபத்தின் பெரும் பகுதி, அந்தப் பிரதேச மக்களுக்கு போய்ச் சேருகின்றதா? முன்பெல்லாம், அந்தப் பிரதேசத்தில் உற்பத்தி செய்யப் படும் எண்ணெயினால் கிடைக்கும் வருமானம், நேரடியாக கார்ட்டூமுக்கு (வட சூடான்) செல்கிறது என்ற முறைப்பாட்டின் பேரில் தான், தெற்கு சூடான் விடுதலைப் போராட்டம் நடைபெற்றது. தெற்கு சூடான் சுதந்திர தனியரசானால், எண்ணை வருமானத்தில் 5% தினை, அது உற்பத்தியாகும் பிரதேசத்தை சேர்ந்த மக்களுக்கு தருவதாக, SPLM வாக்குறுதி அளித்தது.

தற்போது அதிகாரத்தில் இருக்கும் SPLM அரசு, தனது வாக்குறுதியை நிறைவேற்றி உள்ளதா? இல்லை, முன்பு எண்ணை வருமானம் நேரடியாக கார்ட்டூமுக்கு சென்றது. தற்போது அது ஜூபாவுக்கு (தெற்கு சூடான் தலைநகரம்) செல்கின்றது. முன்பு அந்தப் பிரதேச மக்கள் எதிர்ப்பைக் காட்டிய பொழுது, கார்ட்டூம் படைகளை அனுப்பி எதிர்ப்பை அடக்கியது. இன்று ஜூபாவும் அதையே செய்கின்றது. அரபு-இஸ்லாமிய பேரினவாதப் படைகள் வெறியாட்டம் நடத்திய அதே இடத்தில், தெற்கு சூடான்-கிறிஸ்தவ குறுந்தேசியப் படைகள் அட்டூழியம் புரிகின்றன. அதிகாரத்தில் உள்ளவர்களின் இனமும், மொழியும் தான் மாறியிருக்கிறது. அதிகார வர்க்கம் ஒன்று தான். அடக்குமுறை ஒன்று தான். பாதிக்கப்படும் மக்களும் ஒன்று தான்.

தெற்கு சூடான் அரசு, எண்ணெய் உற்பத்தி மூலம் கிடைக்கும் வருமானத்தை, நேர்மையான வழியில் பங்கிட்டுள்ளதா? மக்கள் நலன் பேணும் திட்டங்களில் செலவிடுகின்றதா? அதுவும் இல்லை. இன்று அரசில் முக்கிய பொறுப்புகளை ஏற்றுள்ள, SPLM இயக்கத் தலைவர்கள் மட்டுமே, அதன் பலனை அனுபவிக்கிறார்கள். அவர்கள் பெரிய பங்களாக்களை கட்டிக் கொண்டு, வசதியாக வாழ்கிறார்கள். குளிரூட்டப் பட்ட ஆடம்பர கார்களில் பவனி வருகிறார்கள். 

பெரு நகரங்களில், தலைவர்களின் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக, ஆங்கில மொழி வழி பாடத்திட்டத்தை கற்பிக்கும், உயர்தரமான சர்வதேச பாடசாலைகள் கட்டப் படுகின்றன. மேலும், தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கிறார்கள். கடந்த முப்பது வருடங்களாக காடுகளுக்குள் மறைந்திருந்து போராடியவர்கள், இப்போது கிடைத்துள்ள வசதிகளை அனுபவிக்கக் கூடாதா என்று அதற்கு நியாயம் கற்பிக்கலாம்.

மக்கள் விடுதலைப் படை (PLA) என்ற விடுதலை இராணுவத்தில் போராடிய முன்னாள் போராளிகள், அவர்களது குடும்பங்களின் நிலைமை எப்படி இருக்கின்றது? குறிப்பிட்ட அளவு முன்னாள் போராளிகள், புதிய தெற்கு சூடான் இராணுவத்தில் சேர்க்கப் பட்டுள்ளனர். ஆனால், பெரும்பாலான முன்னாள் போராளிகள், எந்த வேலை வாய்ப்புமின்றி, அவர்களது பாரம்பரிய தொழிலான, மாடு மேய்க்கும் வேலை செய்கின்றனர்.

"மாடு மேய்ப்பது எமது கலாச்சார பாரம்பரியம்" என்று SPLM தலைவர்கள் சப்பைக் கட்டு கட்டினாலும், முதலாளித்துவ பொருளாதாரம் அவர்களை ஒதுக்கி வைத்திருக்கிறது என்பது தான் உண்மை. ஏனெனில், போரிடுவதற்கு மட்டுமே பயிற்றுவிக்கப் பட்ட முன்னாள் போராளிகளுக்கு, வேறு வேலை எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்களிடம் தொழில் தகைமை எதுவும் கிடையாது. அதனால், உணவு விடுதி பணியாளர் வேலை கூட அவர்களுக்கு கிடைப்பதில்லை. சுயமாகத் தொழில் செய்து சம்பாதிப்பதற்கு, அவர்களிடம் பணமும் கிடையாது.

சுதந்திர தெற்கு சூடானில் முதலிட்டு வர்த்தகம் செய்பவர்களில், தொண்ணூறு சதவீதமானோர் வெளிநாட்டவர்கள்! சீனர்கள், ஐரோப்பியர்கள், லெபனானியர்கள், இந்தியர்கள் மட்டுமல்ல, பிற ஆப்பிரிக்க முதலாளிகளும் அங்கே முதலிட்டுள்ளனர். பிரபல பியர் தொழிற்சாலை உரிமையாளர் ஒரு தென் ஆப்பிரிக்க நாட்டவர். பிரபல வானொலி உரிமையாளர் கென்யா நாட்டவர். செல்பேசி சேவை வழங்கும் நிறுவன உரிமையாளர் ஒரு லெபனான் நாட்டவர். இவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். 

அயல்நாடான எத்தியோப்பியாவில் இருந்து வருபவர்கள் கூட, தெருக்களில் தின்பண்டம் விற்று பிழைப்பு நடத்துகின்றனர். இவ்வாறு சிறிய வணிக நிறுவனம் முதல், பெரிய முதலீட்டு வங்கி வரையில், அனைத்தும் வெளிநாட்டவர் வசம் உள்ளன. இவர்கள் யாரும், தெற்கு சூடான் விடுதலைப் போராட்டத்தில் எந்தவிதப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. விடுதலைப் போராட்டத்திற்கு தமது பங்களிப்பைச் செய்தவர்கள், அதன் பலன்களை அனுபவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

தெற்கு சூடான் நாட்டை சேர்ந்த எந்த முதலாளியும் கிடையாதா? இருக்கிறார்களே! அவர்கள் ஒன்றில், SPLM அரசினால் பலனடைந்த பெரும் புள்ளிகளாக இருப்பார்கள், அல்லது மேற்கத்திய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்தவர்களாக இருப்பார்கள். போர் நடந்த காலங்களில், ஓரளவு வசதி படைத்தவர்கள், மேற்கத்திய நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்து சென்றனர். பணக்கார நாடுகளில் வேலை செய்து சேமித்த பணத்தை முதலிட, தாயகத்திற்கு திரும்பி வந்திருக்கிறார்கள். அவர்கள் கொடூரமான போரில் இருந்து தப்பிப் பிழைத்தது மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்து கொண்டு SPLM இயக்கம் ஆயுதம் வாங்க பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அன்று, வெளிநாடுகளில் இருந்து கொண்டு, தீவிரமாக தெற்கு சூடான் தேசியவாதம் பேசியவர்கள், இன்று சிறு முதலாளிகளாக திரும்பி வருகிறார்கள்.

முப்பதாண்டு கால போரில், அயல் நாட்டுக்கு கூட தப்பிச் செல்ல வழியற்ற ஏழைகள் தான், தமது பிள்ளைகளை போராளிகளாக அர்ப்பணித்திருந்தனர். தெற்கு சூடான் சுதந்திர நாடானால், தமது வாழ்க்கை சிறக்கும் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்தோ பரிதாபம்! அவர்களது எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்துப் போயின. விடுதலையடைந்த தெற்கு சூடானில்,பெரும் மூலதனத்தை கொண்டு வந்து கொட்டும் முதலாளித்துவத்திற்கு முகம் கொடுக்க முடியாமல் துவண்டு போகின்றனர். சாதாரண ஏழை மக்களுக்கு, சிறிய பெட்டிக் கடை திறப்பது கூட ஒரு கனவாகத் தான் இருக்கும். ஏனெனில், அவர்களுக்கு எந்த வங்கியும் கடன் கொடுப்பதில்லை. வங்கிகள், கடனை திருப்பிச் செலுத்தக் கூடிய உறுதிமொழியை எதிர்பார்க்கின்றன.

முப்பதாண்டு காலமாக நடந்த போரில் உடமைகளை இழந்து, உயிரை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு வாழும் மக்களால், வங்கிகள் கேட்கும் அடமானப் பத்திரங்களை கொடுக்க முடியுமா? SPLM தலைவர்களோ, தமது நாட்டின் கடந்த கால அவல நிலையை மறந்து விட்டுப் பேசுகிறார்கள். "அயல் நாட்டவரான எத்தியோப்பியர்கள் ஏதாவது தொழில் முயற்சியை தொடங்கலாம் என்றால், ஏன் இவர்களால் முடியாது?" என்று கேள்வி கேட்கின்றனர். சுருக்கமாக சொன்னால், "முதலாளித்துவ போட்டியை சமாளிக்க முடியாத சோம்பேறிகள்" என்று, SPLM தலைவர்கள் தமது சொந்தப் பிரஜைகள் மேல் பழி போடுகின்றனர்.

உண்மை தான். தெற்கு சூடான் விடுதலை அடைந்தால், அது காட்டு முதலாளித்துவத்தை வரித்துக் கொள்ளும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை. இந்த உண்மை அன்றே தெரிந்திருந்தால், அரபு - சூடான் பேரினவாத அரசுக்கு எதிராக மட்டுமல்லாது, முதலாளித்துவத்திற்கு எதிராகவும் போராடி இருப்பார்கள். காலம் இன்னும் கடந்து விடவில்லை. தெற்கு சூடான் உழைக்கும் மக்கள், அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்திற்கு தயாராகிறார்கள். ஆங்காங்கே நடக்கும், வெளிநாட்டவருக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதற்கான அறிகுறிகள். அதனால் தான், "அபாயகரமான சூழ்நிலை" கருதி, அமெரிக்கர்கள் தள்ளி நிற்கின்றனர்.

**********************

தெற்கு சூடான் தொடர்பான முன்னைய பதிவுகள்: