Showing posts with label சென்னை. Show all posts
Showing posts with label சென்னை. Show all posts

Tuesday, January 24, 2017

தோழர் என்று சொல்! தலை நிமிர்ந்து நில்!!


//"உங்கள் பிள்ளைகளின் செல்போனை ஆய்வுசெய்து புதுநபர்களின் எண்கள் இருந்தால் டெலிட் செய்யுங்கள் யாராவது தோழர் என அழைத்தால் அவர்களின் தொடர்பை துண்டியுங்கள்”// - சைலேந்திரபாபு IPS, TN.

//மாணவர்களுடம் சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இணைந்து கொண்டனர். இவர்கள் தடை செய்யப்பட்ட அமைப்புகள் இல்லை. ஆனால் அரசியல் கட்சி வரக்கூடாது என சொன்ன மாணவர்கள், இந்த சிறிய சிறிய அமைப்புகள் சொல்வதை தான் கேட்கிறார்கள். மக்கள் அதிகாரம், நாம் தமிழர், மே 17, சிபிஐ (எம்.எல்), இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அகில இந்திய இளைஞர் பெருமன்றம் போன்ற அமைப்புகள் மாணவர்களுடன் ஊடுருவியுள்ளனர். தேசவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் எல்லோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.// - கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ('மாணவர் போராட்டத்தில் நக்சல் ஆதரவாளர்கள்...' கோவை மாநகர காவல் ஆணையர்)

தமிழ்நாட்டில், "அரபு வசந்தம்" பாணியில் நடந்த "ஜல்லிக்கட்டு போராட்டம்" அதன் இறுதிக் கட்டத்தில் எதிர்பாராத திருப்புமுனையை உண்டாக்கி இருந்தது. ஆரம்பத்தில் சில நாட்கள் ஜல்லிக்கட்டு மாடுகளுக்கான போராட்டமாகவும், தமிழர் பாரம்பரிய மீட்புப் போராட்டமாகவும் தான் கருதப் பட்டது. பெரும்பாலான போராட்டக் காரர்கள், குறிப்பாக மாணவர்கள், "தமிழின உணர்வு" காரணமாகத் தான் போராட்டத்திற்கு வந்திருந்தனர். ஊடகங்களில் அதற்கு கிடைத்த முக்கியத்துவமும் பலரை அங்கு கொண்டு வந்து சேர்த்தது. குடும்பம் குடும்பமாக பெண்கள் குழந்தைகளாக வந்ததும் குறிப்பிடத் தக்கது.

போராட்டம் தொடங்கிய காலத்தில் அங்கு அரசியல் பேசப்படவில்லை. அது போராட்டத்தை ஒழுங்குபடுத்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அறிவுறுத்தலாக இருந்தது. ஆனால், நாட்கள் செல்லச் செல்ல ஒரு பிரிவினர் அரசியல் கோரிக்கைகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள். அப்போதே அது ஒரு ஜனநாயக போராட்டமாக மாறி விட்டது. வெறுமனே தமிழ் இனப்பற்று சார்ந்த விடயங்களுடன் அது நின்று விடவில்லை. அதனால், பல்வேறு கம்யூனிச, இடதுசாரி அமைப்புகள் அல்லது அவ்வாறான சிந்தனை கொண்டவர்களும் போராட்டக் களத்தை பயன்படுத்திக் கொண்டனர். அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் உரையாடினார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் இலகுவாக மக்களை அணுகலாம் என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆனால், இடதுசாரிகள் போராட்டம் முழுவதையும் கைப்பற்றும் அளவிற்கு அரசு எந்தக் காலத்திலும் விட்டுக் கொடுக்காது. அதுவரையும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில், மத்திய அரசின் மேல் பழி போட்டுக் கொண்டிருந்த மாநில அரசு, 180 பாகையில் திரும்பி ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று அவசர சட்டம் போட்டதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இது மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற போராட்டமாக இருந்தாலும், தீர்க்கமான அரசியலை பேசாத, அல்லது பலவீனமான நியாயப்பாடுகளை கொண்ட ஜனத்திரளுக்குள் ஊடுருவுவது எளிது. வலதுசாரி சக்திகளின் ஊடுருவல் பற்றி அரசு கவலைப் படப் போவதில்லை. அவர்கள் ஏற்கனவே "ஜல்லிக்கட்டு தமிழரின் பாரம்பரியம்" என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அது அரசுக்கு சாதகமான விடயம்.

வணிக ஊடகங்களும் ஜல்லிக்கட்டை பற்றி மட்டுமே பேசி வந்தன. தமிழ் இன மான உணர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தன. அதன் மூலம் பார்வையாளர் எண்ணிக்கையை கூட்டிக் கொண்டன. ஆனால், போராட்டக் களத்தில் பலதரப் பட்ட கருத்துக்களும் முட்டி மோதிக் கொண்டன என்ற உண்மையை வேண்டுமென்றே மறைத்தன.

அரசியல் கட்சிகளால் வழிநடத்தப் படாத ஜனத்திரள் எந்த அரசியலையும் உள்வாங்கும் தன்மை கொண்டிருக்கும். ஒரு வாரத்திற்கு மேல் போராட்டம் நீடித்தால் அது அரசுக்கு எதிராகவும் திசை திரும்பலாம். குறிப்பாக இடதுசாரிகளின் ஊடுருவல் அரச இயந்திரத்திற்கு சவாலாக இருக்கும். ஆரம்பத்தில் இருந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒழுங்குபடுத்தி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அதை விரும்பவில்லை.

ஆரம்பத்தில் ஜல்லிக்கட்டு, மாடுகள் என்று மட்டுமே பேசிக் கொண்டிருந்த இளைஞர்கள் மத்தியிலிருந்து, ஏற்கனவே சிலர் சசிகலா, பன்னீர்செல்வம் என்று விமர்சிக்க தொடங்கினார்கள். பிரதமர் மோடிக்கு எதிரான கோஷங்களும் கேட்டன. நிச்சயமாக, பெரியாரிய, இடதுசாரிய ஆர்வலர்கள் களத்தில் நின்றதன் விளைவு அது. அவர்கள் அங்கு வீதி நாடகங்கள், புரட்சிகர கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்கள்.

உண்மையில், த‌மிழ‌க‌ ம‌க்க‌ளின் எழுச்சிப் போராட்ட‌ம் ஜனவரி 23 திங்கட்கிழமை தான் ஆர‌ம்பித்துள்ள‌து. சென்னை, மெரீனாவில் ஐயாயிர‌ம் போராட்ட‌க்கார‌ர்க‌ள் காவ‌ல்துறையின‌ரால் சுற்றி வ‌ளைக்க‌ப் பட்டனர். அவ‌ர்க‌ளுக்கு உண‌வும், த‌ண்ணீரும் எடுத்துச் செல்வ‌த‌ற்கு த‌டைவிதிக்க‌ப் பட்டது. மெரீனா அருகில் வாழ்ந்த மீனவர்கள் கடல் பக்கமாக படகுகளில் சென்று உதவினார்கள்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பான தற்காலிக சட்டத்தை ஏற்றுக் கொண்டு, பெருமளவிலான போராட்டக்காரர்கள் ஏற்கனவே கலைந்து சென்று விட்டனர். எஞ்சியிருந்த கடும்போக்காளர்கள் மீது பொலிஸ் தடியடிப் பிரயோகம் செய்து விரட்டியது. பெண்கள், கர்ப்பிணிகள் என்றும் பாராமல் குண்டாந் தடியால் அடித்தது. 

"பீட்டாவே த‌மிழ‌ர்க‌ளின் மிக‌ப் பெரிய‌ எதிரி" என்று ப‌ட‌ம் காட்டிய‌ த‌மிழ் இன‌ உண‌ர்வாள‌ர்க‌ளே! ஒரு க‌ண‌ம் சிந்திப்பீர். த‌மிழ‌ர்க‌ள் மீது தாக்குத‌ல் ந‌ட‌த்தி, வீடுக‌ளை எரித்த‌து, சொத்துக்க‌ளை நாச‌மாக்கிய‌து த‌மிழ‌க‌ காவ‌ல்துறை தான்.

த‌னித் த‌மிழ் நாடு க‌ண்டால் இத‌ற்கு தீர்வு வ‌ந்து விடுமா? அப்போதும் இதே "த‌மிழ‌ர்க‌ளின் காவ‌ல்துறை" தானே இருக்க‌ப் போகிற‌து? த‌னித் த‌மிழ் நாட்டில் த‌மிழ்ப் பொலிஸ் த‌மிழ‌ர்க‌ளை அடிக்காதா?

அர‌ச‌ இய‌ந்திர‌ம் என்றைக்கும், எப்போதும் ஒரு ஒடுக்கும் க‌ருவி தான். அது சிங்க‌ள‌ அர‌சாக‌ இருந்தால் என்ன‌, த‌மிழ் அர‌சாக‌ இருந்தால் என்ன‌, அட‌க்குமுறை ஒன்று தான். அட‌க்க‌ப் ப‌டும் ம‌க்க‌ளும் ஒன்று தான்.

இது அர‌சிய‌லில்‌ அடிப்ப‌டையான‌ பால‌ பாட‌ம். இந்த‌ நிலைமையை மாற்றுவ‌த‌ற்கு த‌னித் த‌மிழ் நாடு க‌ண்டால் ம‌ட்டும் போதாது. அத‌ற்கொரு ச‌மூக‌ப் புர‌ட்சி அவ‌சிய‌ம். அதைப் ப‌ற்றி சிந்தியுங்க‌ள்.

காந்தி பிறந்த இந்திய மண்ணில், காந்தியின் அறவழிப் போராட்டத்தை எள்ளிநகையாடும் வகையில், தமிழக பொலிஸ் வன்முறை அமைந்துள்ளது. "அறவழியில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றி!" என்று அரச கைக்கூலிகள் அறிவித்த பின்னர் தான், காவல்துறை தனது சுயரூபத்தை காட்டியது. மாணவர்கள் மீது தடியடி நடத்தி, குடிசைகள், வாகனங்களை எரித்து அடாவடித்தனம் புரிந்தது.

பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் மூலம் அரசு சொல்ல விரும்பிய சேதி இது தான். "மாட்டுக்காகவும், தமிழுக்காகவும் போராட்டம் நடத்துங்கள், அரசு அதைக் கண்டுகொள்ளாது. ஆனால், உங்கள் போராட்டம் அரசுக்கு எதிராக திரும்பக் கூடாது. அரசியல் பேசக் கூடாது." அப்படியான கட்டத்தில் அரசு தனது பொலிஸ் ஏவல் நாய்களை அனுப்பி ஒடுக்கும்.

இதன் மூலம், அரசு என்றால் என்ன என்பது, குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களுக்கு ஓரளவுக்காவது புரிந்திருக்கும். இது அவர்களுக்கு ஒரு நல்ல அரசியல் பாடம். மக்களை ஒடுக்குவதற்கான அரச இயந்திரத்தின் ஆயுதமே காவல்துறை என்பது தெரிந்திருக்கும். அதே நேரம், முதலாளித்துவ ஊடகங்களின் சுயரூபமும் தெரிந்திருக்கும். ஜல்லிக்கட்டு போராட்டக் காரர்களை பாராட்டி புகழ்ந்த அதே விபச்சார ஊடகங்கள், ஒரே நாளில் அவர்களை சமூகவிரோதிகள் என்று மாற்றிச் சொன்ன விந்தையை என்னவென்பது?

குறிப்பாக நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள், "தேசியக் கொடி பிடித்தால், தேசியகீதம் பாடினால் பொலிஸ் அடிக்காது" என்று நம்புமளவிற்கு அப்பாவிகளாக இருந்திருக்கிறார்கள். "ஜனகண மண" பாடியவர்களுக்கும் அடிவிழுந்துள்ளது. தாம் கொடுத்த உணவை சாப்பிட்ட அதே பொலிஸ் தான் தடியடிப் பிரயோகம் நடத்தியது என்பதையும், மாணவர்கள் திருப்பித் தாக்கவில்லை என்றும் அவர்களே வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

தமிழக காவல்துறையினரின் வன்முறை வெறியாட்டம் நடந்த விதத்தை பார்க்கும் பொழுது, இது முன்கூட்டியே திட்டமிடப் பட்டுள்ளதாக தெரிகின்றது. பொலிஸ் குடிசை எரித்த காட்சிகள் வீடியோ பதிவாக இருந்தாலும், அதைப் பற்றிக் கவலைப் படவில்லை. நாளைக்கு அதைக் காட்டி யாராவது வழக்குப் போடுவார்களே என்ற பயம் கூட இல்லை. அதாவது, இனிமேல் காட்டாட்சி தான் என்ற நம்பிக்கையில் காவல்துறை உள்ளது.

ஓர் அதிர்ச்சி வைத்தியமாக, பொலிஸ் எடுத்த அதிரடி நடவடிக்கையானது, போராட்டத்தில் கலந்து கொண்ட மத்தியதர வர்க்கத்தினரை அச்சுறுத்தி, வீட்டில் முடங்கப் பண்ணும் நோக்கம் கொண்டது. உண்மையில், பொலிஸ் அடக்குமுறையால் பாதிக்கப் பட்டவர்கள் பெரும்பாலும் சேரிகளில் குடியிருக்கும் உழைக்கும் வர்க்க மக்கள்.

போராட்டக் களத்திற்குள் இடதுசாரிகள் ஊடுருவி இருந்தமை, அரசை பீதியுற வைத்துள்ளது. ஏனென்றால், பொதுவாக மத்தியதர வர்க்கத்தினர் அறவழிப் போராட்டத்துடன் நின்று விடுவார்கள். ஆனால், உழைக்கும் வர்க்க மக்கள் தான் உயிரைக் கொடுத்துப் போராடுவார்கள். இந்த உண்மை அதிகார வர்க்கத்தில் உள்ளவர்களுக்கும் தெரியும். அதனால் தான், உழைக்கும் வர்க்க மக்களை மிரட்டி வைப்பதற்காக, பொலிஸ் சேரிக்குள் புகுந்து அடாவடித்தனம் செய்தது.

இனிவரும் காலங்களில் இடதுசாரி அமைப்புகள் மீதான அடக்குமுறை அதிகரிக்கலாம். சிலநேரம் தடை செய்யப் படலாம். கைதுகள் தொடரலாம். "தமிழ்நாட்டுக்குள் நக்சலைட் ஊடுருவல்" என்று ஒரு சாட்டு சொல்லி, அரச பயங்கரவாதம் நியாயப் படுத்தப் படலாம். அதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.

சென்னையில் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு, CPML, மே 17 போன்ற இடதுசாரி அமைப்புகளே வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டியுள்ளார். (நாம் தமிழர் என்ற வலதுசாரி அமைப்பின் பெயரும் குறிப்பிடப் பட்டது.)

மேலும், "பெற்றோர் தமது பிள்ளைகளின் மொபைல் போன்களை எடுத்துப் பார்க்குமாறும், "தோழர்" என்று விளிக்கும் எண்களை அழித்து விடுமாறும்" சைலேந்திரபாபு அறிவுறுத்தி உள்ளார். அதன் அர்த்தம் என்ன? இடதுசாரி, அல்லது கம்யூனிசக் கருத்துக்கள் மத்தியதர வர்க்கப் பிள்ளைகள் மனதில் நுழைந்து விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு தானே காரணம்?

"பெற்றோரே பிள்ளைகளை காட்டுக் கொடுக்க வேண்டும்" என்று அதிகார வர்க்கம் எதிர்பார்க்கிறது. அதனால் இதை முதலாளித்துவ வர்க்க குணாம்சம் கொண்ட அரசு என்கிறோம். முதலாளித்துவ கட்டமைப்பை எதிர்த்துப் போராடாமல், வெற்றியை நோக்கி ஓர் அடி கூட நகர முடியாது.
#தோழ‌ர் - அதிகார‌ வ‌ர்க்க‌த்தை அஞ்சி ந‌டுங்க‌ வைத்த‌‌ ஒரே சொல். த‌மிழ் நாட்டில் அது தான் எதிர்ப்பின் அடையாள‌ம். இனிமேல் தோழ‌ர் என்று சொல்ல‌ ம‌றுப்ப‌வ‌ர்க‌ள் அர‌ச‌ ஒத்தோடிக‌ளாக‌ க‌ருத‌ப் ப‌டுவ‌ர். அர‌ச‌ எதிர்ப்பாள‌ர்க‌ள் அனைவ‌ரும் எம‌க்கு தோழ‌ர்க‌ளே!

Wednesday, July 01, 2015

சென்னை வாசிகளே! வட கொரியாவில் மெட்ரோ ரயில் டிக்கட் விலை 2 ரூபாய் மட்டுமே!


சென்னை மெட்ரோ ரயில் டிக்கட் விலை அதிகமாக இருப்பதாகவும், சாதாரண உழைக்கும் வர்க்க மக்களுக்கு பயணம் செய்ய முடியாமல் இருப்பதாகவும் பலர் குறைப் படுகின்றனர். பொதுப் போக்குவரத்து சேவை அனைத்து மக்களுக்குமானது. அது மிகவும் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் வசதி செய்து தரப் பட வேண்டும்.

சென்னை மெட்ரோ பயணச் சீட்டின் விலை 40 இந்திய ரூபாய்கள். (0.62 USD) வட கொரியாவில், பியாங்கியாங் நகர மெட்ரோ பயணச் சீட்டின் விலை 2 இந்திய ரூபாய்கள் மட்டுமே! (5 WON = 0.03 USD). சென்னையில் வாழும் அடித்தட்டு மக்கள் நாற்பது ரூபாய் கொடுத்து மெட்ரோவில் பயணம் செய்ய முடியாது.

வட கொரியாவில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில், மெட்ரோ டிக்கட் விலையை வேண்டுமென்றே குறைத்து வைத்திருக்கிறார்கள். அதுவும், முதலாளித்துவ பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட, கடந்த பத்தாண்டுகளில் இருந்து தான் இந்த விலை அதிகரிப்பு. அதற்கு முன்னர் இருந்த பயணச்சீட்டின் விலை 0.25 இந்திய ரூபாய்கள் மட்டுமே!

ஆகவே, அடித்தட்டு மக்களும் மெட்ரோவில் பயணம் செய்ய வேண்டுமானால், இந்தியாவிலும் சோஷலிசம் கொண்டு வரப் பட வேண்டும்.

(பிற்குறிப்பு: நாற்பது ரூபாய் கொடுத்து பயணம் செய்யும் வசதி படைத்த மத்தியதர வர்க்கத்தினர் இதற்கு எந்தவிதமான வியாக்கியானமும் கொடுக்கத் தேவையில்லை. அடித்தட்டு மக்களை முதலில் பேச விடுங்கள். நன்றி.)

*******

மேற்கு ஐரோப்பாவில் தேனும், பாலும் ஆறாக ஓடுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிகளின் கவனத்திற்கு:

பொருளாதார ஏற்றத் தாழ்வு, இன்றளவும் மேற்கைரோப்பிய சமுதாயத்தை ஏழை - பணக்காரன் என்று பிரித்து வைத்துள்ளது. அந்த இடைவெளி வர வர அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறையவில்லை.

மருத்துவ வசதிகளில் காட்டப்படும் பாரபட்சம் அதற்கு ஓர் உதாரணம். நெதர்லாந்தில், மருத்துவ வசதி முழுவதும் தனியார் நிறுவனங்களிடம் உள்ளது. இங்கே அரசு மருத்துவமனை எதுவும் கிடையாது. மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையிலும் நோயாளிகளுக்கு விசேட சலுகை எதுவும் கிடையாது.

இந்த நாட்டில் அனைத்துப் பிரஜையும் மருத்துவக் காப்புறுதி எடுத்திருக்க வேண்டும். அதற்காக மாதாமாதம் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். பொதுவாக, ஆரோக்கியமான ஒரு நபர், குறைந்த பட்ச கட்டணமாக 100 யூரோ செலுத்த வேண்டும். ஆனால், கடுமையான நோயாளி அதை விட இரண்டு மடங்கு தொகை கட்ட வேண்டி இருக்கும்.

அப்படியே அதிகத் தொகை கட்டினாலும், தரமான மருத்துவ வசதியை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், அதிலும் ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பார்கள். குறிப்பாக, புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகள் பாரபட்சமாக நடத்தப் படுகிறார்கள்.

பணக்கார புற்றுநோய் நோயாளிகளுக்கு மட்டும், உடனடியாக தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது. ஏழைகள் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்க வைக்கப் படுகிறார்கள். காரணம்? புற்றுநோய் மருந்துகளின் விலை அதிகம் என்பதால், பண வசதி இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் இழுத்தடிக்கிறார்கள்.

இந்தத் தகவல், இன்று நெதர்லாந்து ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களும், புற்றுநோயாளிகளுக்கு காட்டப் படும் பாரபட்சம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.(ஆதாரம் : NOS நெதர்லாந்து வானொலி - தொலைக்காட்சி செய்தி நிறுவனம்.)

வட கொரியாவில், மருத்துவ வசதிகள் அனைத்துப் பிரஜைகளுக்கும் இலவசமாகக் கிடைக்கிறது என்பது தெரிந்ததே. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) 2008 ம் வருடத்திய அறிக்கையின் படி, வட கொரியாவில் சிசு மரணவீதம் 1000 க்கு 45 என்ற விகிதத்தில் உள்ளது. உலகின் பிற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில், இது மிகக் குறைவாகும்.

உதாரணத்திற்கு, ஆப்பிரிக்காவில் உள்ள சாட் நாட்டில், 1000 க்கு 120 என்ற விகிதத்தில் உள்ளது. உலக நாடுகள் பற்றிய சி.ஐ.ஏ. அறிக்கையின் படி, வட கொரியா, சாட் இரண்டும் ஏறக்குறைய ஒரேயளவு மொத்த பொருளாதார உற்பத்தியைக் கொண்டுள்ளன.

வட கொரியாவின் பொருளியல் உற்பத்தி குறித்த சரியான தகவல்கள் இல்லாத குறைபாட்டையும், மருத்துவ வசதிகள் ஐம்பதுகளின் தரத்தில் இருப்பதையும் சேர்த்துப் பார்த்தால், அந்த நாட்டின் சிசு மரணவீதம் வளர்ந்த நாடுகளை எட்டிப் பிடிப்பதாக அமைந்துள்ளது.

மருத்துவ பணியாளர்களைப் பொருத்தவரையில், வட கொரியா போன்ற "சர்வாதிகார நாடுகள்" ஒரு வரப்பிரசாதம் என்று, பஞ்ச நிவாரணப் பணிகளின் போது , அங்கு சென்று வந்த வெளிநாட்டு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

"அனர்த்த நிவாரண உதவி வழங்கலின் போது, அனைவருக்கும் உடனடியாக சுகாதார வசதிகள் கிடைக்கும் அளவிற்கு, அரசு அங்குள்ள மக்களை தீவிரமாக கண்காணித்து வந்ததுள்ளது. இதுவே வளர்ந்த நாடாக இருந்தால் கூட, அங்கு அனைவரையும் ஒரே இடத்தில் கூட வைப்பது சிரமமாக இருந்திருக்கும்" என்றனர்.

வட கொரியாவின் சுகாதார வசதிகள் உலகத்தரத்தை விடக் குறைவானது தான். ஆனால், மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்கள் வயோதிப காலத்திலேயே முற்றுவதால், சிகிச்சையளிப்பதும் கடினமாகின்றது. அதற்குப் பதிலாக, தொட்டதற்கெல்லாம் மருத்துவ பரிசோதனை செய்யப் படுவதால், பல நோய்களை முன்கூட்டியே தடுக்க முடிகின்றது. இதனால் வைத்திய செலவும் மிச்சம்.

வட கொரியாவில் பணியாற்றும் மருத்துவர்களின் சம்பளமும் குறைவு தான். அவர்கள் சாதாரண அரசு ஊழியரை விட பெரிதாக சம்பாதிப்பதில்லை. ஆயினும், மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர்கள் சிலநேரம், பிற நாடுகளில் தாதியர் செய்யும் வேலைகளையும் தம் பொறுப்பில் எடுக்கின்றனர்.

வட கொரியாவில் 10000 பேருக்கு 32.9 மருத்துவர்கள் வீதம் இருக்கின்றனர். அந்தத் தொகை அமெரிக்காவை விட அதிகமாகும். அங்கு 10000 பேருக்கு 26.7 மருத்துவர்கள். (ஆதாரம்: World Health Statistics 2011, World Health Organization)


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
சன் தொலைக்காட்சியில் வட கொரியா பற்றிய நிகழ்ச்சி : "நிஜம்" என்ற "பொய்"!
வட கொரியா புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி உதவியது!

Sunday, March 06, 2011

சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்

இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்]
(பகுதி - 4)

-[ஓர் ஈழ அகதியின் அனுபவத் தொடர்]-
அகதிகளிலும் "ஏழை அகதிகள், பணக்கார அகதிகள்" என்று இரண்டு வகை உண்டு. ஒருவர் ஈழத்தில் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர் என்பது, இந்திய அகதி வாழ்க்கையிலும் தீர்மானிக்கப்படுகின்றது. ஈழத்தில் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த அகதிகள், இந்தியாவில் அகதி முகாம்களிலேயே வருடக்கணக்காக வாழ வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். அதற்கு மாறாக, மத்திய தர வர்க்க அகதிகள், கூடிய சீக்கிரத்தில் அகதி முகாமை விட்டு வெளியேறவே விரும்புவார்கள். அவர்கள் தங்களை இந்தியாவில் அகதியாக பதிந்து கொள்வார்கள், ஆனால் முகாமில் வாழ மாட்டார்கள். சென்னை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் சென்று வாடகை வீடு எடுத்து வாழ்வார்கள். பராமரிக்க வேண்டிய அகதிகளின் தொகை குறைகின்றது, என்ற சந்தோஷத்தில் மாநில அரசும் அது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.

பெரு நகரங்களில் வீடு வாடகைக்கு எடுத்து வாழ்வதற்கு மாதாந்த வருமானம் வேண்டும். பெரும்பாலும் வெளிநாடுகளில் வாழும் உறவினர்கள் அந்த செலவை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்த மேட்டுக்குடி மக்கள் மட்டும் அகதியாக பதியாமல், நேரடியாக இந்தியாவில் குடியேறினார்கள். ஏற்கனவே அவர்களது செலவை ஈடுகட்டும் பணத்தை கையிருப்பில் வைத்திருப்பார்கள். ஈழப்போர் காலகட்டத்திற்கு முன்பிருந்தே இந்தியாவில் வாழும் மேட்டுக்குடி தமிழர் குறித்து இங்கே பேசத் தேவையில்லை. வெளிநாட்டுச் செலவில் வாழ்பவர்கள் எல்லோரும் மத்தியதர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் அல்ல. யாழ்ப்பாணத்தில் ஒரு ஏழை விவசாயிக்கும் நிலம் சொந்தமாக இருக்கும். செறிவான மக்கட்தொகை கொண்ட யாழ்ப்பணத்தில் ஒரு பரப்பு காணியின் விலை பிற மாகாணங்களை விட அதிகம். இதனால் காணி விற்று அனுப்பிய பிள்ளை, வெளிநாடு சென்று உழைத்து அனுப்பினால், அந்தக் குடும்பம் வசதிகளைப் பெருக்கிக் கொண்டது. சில வருடங்களில், புதுப் பணக்கார மிடுக்கு அவர்களிடம் மத்தியதர வர்க்க மனோபாவத்தை கொண்டு வந்து சேர்க்கும்.

சென்னை மாநகரின் பகுதியான அண்ணா நகர், அப்போது தான் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்தது. ஈழத்தமிழரின் "குடியேற்றம்" இடம்பெற்ற அண்ணா நகர் பகுதியில் வாடகைக்கு வீடெடுப்பது கடினமாகவிருந்தது. வீட்டு வாடகை உயர்ந்து கொண்டே சென்றமை, இலங்கை- இந்தியத் தமிழ் முரண்பாட்டை விதைத்தது. பேராசை கொண்ட வீட்டு உரிமையாளரும், வெளிநாட்டுப் பணத்தை தண்ணீராக செலவழித்த ஈழத் தமிழரும் சமூக முரண்பாடுகளை கணக்கில் எடுக்கவில்லை. இதே போன்ற நிலைமை இதே காலகட்டத்தில் கொழும்பில் தோன்றியது. வட மாகாணத் தமிழர்கள், போர்ச் சூழலில் இருந்து தப்புவதற்காக, போர் நடக்காத கொழும்பில் சென்று பாதுகாப்பாக வாழ விரும்பினார்கள். இந்தியாவில் இருந்து போவதை விட, கொழும்பில் இருந்து வெளிநாடு செல்வது இலகுவாக இருந்தது. வெளிநாடு போகா விட்டாலும், வெளிநாட்டில் இருந்து உறவினர் அனுப்பும் பணத்தில் கொழும்பில் வசதியாக வாழ விரும்பினார்கள்.

தமிழர்கள் கொட்டும் வெளிநாட்டுப் பணத்துக்கு பேராசை கொண்ட சிங்கள வீட்டு உரிமையாளர்களும், வீட்டு வாடகையை உயர்த்திக் கொண்டே சென்றனர். இதனால் கொழும்பு வாழ் சிங்கள, தமிழ் மக்களுடன் முறுகல் நிலை ஏற்பட்டது. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், கொழும்பு நகரில் யாழ்ப்பாணத் தமிழரின் தொகை பெருகிக் கொண்டிருந்தது. கொழும்பில் வாழ்வதற்கும், சென்னையில் வாழ்வதற்கும் இடையில் வேறுபாடு இருந்தது. யுத்தம் கொழும்பை நோக்கி புலம்பெயர்ந்தது. குண்டுவெடிப்புகள், அதையொட்டிய கைதுகள், நெருக்கடிகள் போன்றன அங்கேயும் பாதுகாப்பற்ற சூழலை தோற்றுவித்தது. சென்னையிலோ, திருச்சியிலோ அந்தப் பிரச்சினை இருக்கவில்லை. ராஜீவ் காந்தி கொலை மட்டும் அவர்களின் சீரான வாழ்க்கையில் நெருக்கடியைக் கொண்டு வந்தது.

சென்னையில் சில நண்பர்கள் வசித்ததால், அவர்களின் தொடர்பு கிடைத்து நானும் சென்னை நோக்கிப் புறப்பட்டேன். அப்போதெல்லாம் தனியார் நடத்தும் விரைவு பேரூந்து சேவைகள் கிடையாது. போக்குவரத்து சபை முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. நகரங்களுக்கு இடையில் "திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்" சேவையில் ஈடுபட்டிருந்தது. நானும், அகதி முகாமில் சந்தித்த நண்பருமாக சென்னை நோக்கி பஸ் பயணம் மேற்கொண்டோம். சென்னை நகரின் பிரமாண்டம் வியக்க வைத்தது. அதே நேரம், இந்தளவு நெருக்கமான குடிசனப் பரம்பலை இலங்கையில் எங்கேயும் காணவில்லை.

ஒவ்வொரு வீடும் ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது. கூரைக்கு பதிலாக மொட்டை மாடி வைத்துக் கட்டியிருந்தார்கள். பிறகொரு தருணத்தில், அப்படியான வீடுகளை வெப்ப வலைய நாடுகளில் எல்லாம் காண முடிந்தது. நான் சென்னையில் தங்கியிருந்த நாட்களில், கோடை காலமென்பதால் எல்லோரும் மொட்டை மாடியில் தான் படுப்போம். அந்தக் காலத்தில் காற்றாடி பாவிப்பது ஆடம்பரமானது. இலங்கையில் சில வசதியானவர்களைத் தவிர மற்றவர்கள் மின்சாரக் காற்றாடி பாவிக்கவில்லை. (என்பதுகளுக்கு பிறகு தான் எமது ஊருக்கு மின்சாரம் வந்தது.) ஆனாலும், கோடை காலத்து வெம்மையை தாங்கிக் கொள்ள முடிந்தது. சென்னையில் கோடை காலத்தில் வீட்டுக்குள் முடங்கிக் கொள்வது சித்திரவதை அனுபவிப்பதற்கு சமமானது. ஆகவே மொட்டை மாடியின் மகிமையை, சென்னை சென்று ஒரு சில நாட்களிலேயே உணர்ந்து கொண்டேன்.

நான் தங்கியிருந்த வீட்டில் வசித்த எல்லோரும் 25 வயதுக்கு மேற்படாத வாலிபர்கள். அனைவரது நோக்கமும் வெளிநாடு போவதாகவே இருந்தது. தாங்கள் எத்தனை மாதங்களாக காத்திருக்கிறோம், என்பதை ஒவ்வொருவரும் தங்களை அறிமுகப் படுத்தும் போதே கூறிக் கொண்டனர். புதிதாக சென்ற என்னை, "தங்களோடு சேர்ந்து வருந்த வந்திருக்கும் பாவப்பட்ட ஜீவன்," போல சேர்த்துக் கொண்டார்கள். அங்கேயிருந்த சிலர் வெளிநாட்டுப் பயணத்திற்கான முயற்சியில் தோல்வியடைந்தவர்கள். சிலர் பணம் போதாமையால் இன்னும் விமான நிலையத்தை தரிசிக்காதவர்கள். இந்திய கடவுச்சீட்டில் படம் மாற்றி, டெல்லி விமான நிலையம் சென்று பிடிபட்டு திரும்பி வந்தவர்கள். நடுங்கும் இமாலயக் குளிரில் நேபாளம் வரை சென்று திரும்பியர்கள். இவ்வாறு பல சோகக் ககதைகளை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

வெளிநாடு அனுப்பி வைக்கும் முகவர் ஒருவர் மட்டும், இருந்திட்டு எப்போதாவது வந்து எட்டிப் பார்த்து விட்டுச் செல்வார். தனது "வாடிக்கையாளர்களுக்கு" செலவுக்கு பணம் கொடுத்து விட்டுச் செல்வார். வீட்டு உரிமையாளரின் குடும்பம் கீழ் வீட்டில் வசித்து வந்தது. இவர்களைத் தவிர வேறு வெளியுலகத் தொடர்புகள் இல்லை. கொஞ்சம் பணம் இருந்தால், சினிமா பார்த்து விட்டு வருவதைத் தவிர வேறு பொழுதுபோக்கு இருக்கவில்லை. ஒரு புதுப்படம், தமிழகத்தில் ரிலீசாகி மாதக் கணக்கான பின்னர் தான் யாழ்ப்பாண திரையரங்குகளில் வெளியிடுவார்கள். அதனால் சென்னையில் புதுப்படத்தை உடனுக்குடன் பார்க்கும் வசதி, ரசிகர்களுக்கு ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம்.

ஒரு வகையில் நாம் தங்கியிருந்த வீடு இன்னொரு வகை "அகதி முகாம்." இது போன்ற பல உத்தியோகபூர்வமற்ற முகாம்கள் சென்னை நகர வீடுகள் பலவற்றில் இருந்தன. பொதுவாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் முகவர்களால் குறைந்த விலைக்கு வாடகைக்கு எடுக்கப் பட்டிருந்தன. இந்த வீடுகளில் பலதரப்பட்ட பின்னணியைக் கொண்ட இளைஞர்கள் வசித்தனர். எல்லோருடைய நோக்கமும் மேற்கு ஐரோப்பா, அல்லது கனடா போவதாக இருந்தது. நான் சந்தித்த சில இளைஞர்கள் ஈழ விடுதலை இயக்கங்களில் செயற்பட்டு, பின்னர் விட்டு விட்டு வந்திருந்தார்கள். ஈழத்திலும், தமிழகத்திலும் அந்த இயக்கங்கள் ஒன்றையொன்று பகைவர்களாக கருதிக் கொண்டிருந்த நேரம். ஆனால் இந்த முன்னாள் போராளிகள் மட்டும் நட்புடன் பழகினார்கள்.

ஒரு சில நேரம், அரசியல் பேச்சுகள் தர்க்கத்தில் முடிந்தாலும், அவர்களது நட்பு முறியவில்லை. அவர்களைப் பொறுத்த வரையில், அரசியல் வாழ்வு அஸ்தமித்து விட்டது. இனிமேல் வெளிநாடு சென்று சம்பாதித்து சொந்தக் குடும்பத்தை பார்த்தால் போதும் என்று நினைத்தார்கள். முன்னர் இயக்க உறுப்பினர்களாக பொது வாழ்வில் இருந்த காலங்களில் குடும்ப உறவை துண்டித்திருந்தார்கள். தற்போது மீண்டும் உறவுகளைப் புதுப்பித்துக் கொண்டார்கள். பெற்றோரும் "காணாமல் போன ஆட்டுக்குட்டி திரும்பி வந்த குதூகலத்தில்" திளைத்தார்கள். "ஈழத்திற்காக வேறு யாராவது போராடட்டும். தனது பிள்ளை வெளிநாடு சென்று நலவாழ்வு வாழ வேண்டும்," என்று நினைத்தார்கள். அதனால் எத்தனை லட்சம் கொடுத்தேனும் வெளிநாடு அனுப்பி விடத் துடித்தார்கள்.

முன்னாள் இயக்க உறுப்பினர்களின் மூலம், தமிழகத்தில் ஈழ அரசியல் செல்வாக்கு குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. முக்கியமான ஐந்து ஈழ விடுதலை இயக்கங்கள் இந்தியாவில், சென்னையில் தலைமை அலுவலகங்களை வைத்திருந்தன. ஈழத்தில் இயக்க நடவடிக்கைகள் யாவும் அங்கிருந்த படி நெறிப்படுத்தப் பட்டன. ஈழ விடுதலை இயக்கங்களுக்கு இந்தியா பூரண ஆதரவு வழங்கியதாக நம்பினார்கள். "இந்தியா இராணுவத்தை அனுப்பி தமிழீழம் எடுத்து தங்கள் கையில் தந்து விட்டுப் போகும்," என்று விடுதலை இயக்கப் போராளிகள் கூட அப்போதும் நம்பிக் கொண்டிருந்தனர். 1983 இனக்கலவரத்திற்குப் பின்னர், தமிழகம் முழுவதும் ஈழ ஆதரவு அலை வீசிக் கொண்டிருந்தது.

அன்று முதலமைச்சராக இருந்த MGR உம், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும், யார் அதிகம் ஆதரவளிப்பது என்பதில் போட்டி நிலவியது. MGR புலிகள் அமைப்பிற்கு நெருக்கமானவராக இருந்தார். வேண்டிய நேரமெல்லாம் பணமும், அரச உதவிகளையும் வழங்கி வந்தார். கருணாநிதி பிற கட்சிகளை சேர்த்துக் கொண்டு TESO (தமிழீழ பாதுகாப்பு அமைப்பு) என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் மூலம் அனைத்து விடுதலை இயக்கங்களுக்கும் நிதி வழங்கினார். அன்று புலிகள் மட்டும் அந்த உதவியைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். அதற்கு முன்னர் இந்திய மத்திய அரசின் நேரடித் தொடர்பில் இருந்த டெலோ இயக்கத்திற்கு கருணாநிதி ஆதரவளித்து வந்தார். MGR ஆயினும், கருணாநிதி ஆயினும், இந்திய மத்திய அரசின் அனுமதி இன்றி அவ்வாறு நடந்து கொண்டிருக்க முடியாது, என்று முன்னாள் போராளிகள் தெரிவித்தனர். இந்தியா வேண்டிய நேரத்தில் தலையிட்டு, யார் எஜமான் என்பதை நிரூபிக்கும், என்றும் கூறினார்கள். அதனை மெய்ப்பிப்பது போல சில சம்பவங்கள் நடந்தன.

இந்தியாவின் அனுசரணையின் பேரில், பூட்டானில் நடைபெற்ற திம்புப் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்தன. மிதவாத தமிழர் விடுதலைக் கூட்டணியையும் சேர்த்து, ஐந்து ஈழ விடுதலை இயக்கங்கள் கூட்டாக தமது தீர்வுகளை முன்வைத்திருந்தன. அதற்குப் பின்னர், புலிகள், டெலோ, ஈபிஆர்எல்ப், ஈரோஸ் போன்ற நான்கு இயக்கங்கள் தமக்குள்ள ஐக்கியம் கண்டன. "ஈழ தேசிய விடுதலை முன்னணி" என்ற பெயரின் கீழ் கூட்டாக அறிக்கை விட்டன. இந்தியா, ஈழ விடுதலை இயக்கங்களிடையே அத்தகைய ஐக்கியத்தை எதிர்பார்க்கவில்லை. திடீர் நடவடிக்கையாக டெலோ அமைப்பின் அரசியல் ஆலோசகர் சத்தியேந்திரா, புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கம், ஆகியோரை நாடு கடத்தியது.

அதை விட, இன்னொரு சம்பவம் ஈழ விடுதலை அமைப்புகளின் சுதந்திரம் எந்தளவு மட்டுப்படுத்தப் பட்டது என்பதை நிரூபித்தது. ஒரு நாள் சொல்லி வைத்தாற் போல, அனைத்து இயக்கங்களினதும் தலைமை அலுவலகங்கள் சோதனையிடப்பட்டன. திடீரென புகுந்த போலிசும், புலனாய்வுத்துறை அதிகாரிகளும், அங்கிருந்த ஆயுதங்கள், ஆவணங்கள் அனைத்தையும் அபகரித்துச் சென்றனர். போலீசார் எவ்வாறு மூலை முடுக்கெல்லாம் சல்லடை போட்டுத் தேடினார்கள், என்று இயக்க அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய ஒரு நண்பர் தெரிவித்தார். சிறிலங்கா போலிஸ் மட்டுமே அத்தகைய அடக்குமுறையில் ஈடுபடும் என்று நம்பிக் கொண்டிருந்த நண்பருக்கு, அந்தச் சம்பவம் மீள முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தது. திடீர் சோதனை நடவடிக்கைக்கு, இந்திய அரசு உத்தியோகபூர்வ விளக்கம் கொடுத்ததாக நினைவில்லை.

சிறிது காலம் யாழ் குடாநாட்டில் சிறிலங்கா இராணுவம் முன்னேறுவதற்கான எந்த அறிகுறியையும் காணவில்லை. வடமராட்சியை கைப்பற்றிய இராணுவ நடவடிக்கையின் பின்னர், படை நகர்வில் தேக்க நிலை காணப்பட்டது. புலிகள் திருப்பித் தாக்கத் தொடங்கியிருந்தனர். விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை பாதுகாப்பார்கள் என்று, அவர்களது பலத்தில் நம்பிக்கை கொண்ட அகதிகள் பலர் ஊர் திரும்பினார்கள். மீண்டும் ஒரு தடவை நண்பர்களுடன் இராமேஸ்வரம் சென்றிருந்த பொழுது, சில படகுகள் புறப்பட இருப்பதாக செய்தி வந்தது. நண்பர்களுக்கு தெரிந்தவர்கள் என்பதால், இலவசமாக ஏற்றிச் செல்ல முன்வந்தார்கள்.

சென்னையில் வசித்த நண்பர்களைப் போல, வெளிநாடு செல்லும் நோக்கம் எதுவும் எனக்கு அப்போது இருக்கவில்லை. இந்திய மண்ணில் அகதியானது போல, எங்கோ ஒரு ஐரோப்பிய நாட்டில் அகதியாக அலைய மனம் ஒப்பவில்லை. எனது குடும்பத்தை சேர்ந்தவர்களும், அந்நிய மண்ணில் அடிமையாக வாழ்வதை விட, சொந்த மண்ணில் வாழ்வதே சுதந்திரம் என்று கருதுபவர்கள். அதனால் இலங்கை செல்லும் படகில் கால் வைத்த பொழுது, ஒரு தவறைச் செய்கிறோம் என்று நினைக்கவில்லை. அன்று என்னைப் போல பலரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்ததது சாதாரண நிகழ்வு. ஆனால் ஒரு சில மாதங்களின் பின்னர், என்னோடு அகதி முகாமில் வசித்த ஈழ அகதிகள் அனைவரும் கப்பலில் வந்திறங்குவார்கள், என்று கனவிலும் நினைக்கவில்லை. இந்தியாவில் இருந்து சென்ற எம்மை, இந்தியாவின் நிழல் தொடரப் போகின்றது என்பதை யாரும் அறிந்திருக்கவில்லை.

(தொடரும்)
தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
3.
தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.
ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.
இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்