Showing posts with label ஈழப் பிரச்சினை. Show all posts
Showing posts with label ஈழப் பிரச்சினை. Show all posts

Tuesday, January 21, 2014

புலிகள் ஒரு "ஸ்டாலினிச" இயக்கம்! - ட்ராஸ்கிஸ்டுகளின் கண்டுபிடிப்பு!!


"இலங்கையில் உங்களுக்குப் பிடித்த சிங்கள இடதுசாரி யார்?" என்று நமது தமிழ் தேசியவாதிகளிடம் கேட்டால், எல்லோரும் ஒரே குரலில் "விக்கிரமபாகு கருணாரத்னா" என்று பதில் சொல்வார்கள்.

தமிழர்களின் பிரச்சனைகளை, அனுதாபத்துடன் ஆதரிக்கும் ஒரேயொரு சிங்கள இடதுசாரி அவர் மட்டுமல்ல. (வேறு சிலரும் உள்ளனர். ஆனால், அவர்கள் புலிகளை ஆதரிக்காத படியால், யாருக்கும் பிடிக்காது.) தென்னிலங்கை இடதுசாரிகளில் விக்கிரமபாகு கருணாரத்னவும், அவரது கட்சியும் விதி விலக்குகள். அவர் மட்டுமே, புலிகளின் அரசியல் நிலைப்பாட்டை பகிரங்கமாக ஆதரித்து வந்துள்ளார். அவரது கட்சி, "தமிழீழம், ஸ்ரீலங்கா என்ற இரண்டு தேசியங்களை ஏற்றுக் கொண்டுள்ளது. (நிச்சயமாக, அந்த இரண்டு தேசியங்களும் சோஷலிசத்தை இறுதி இலக்காக கொண்டிருக்கும் என்பதை குறிப்பிடத் தவறுவதில்லை.)

விக்கிரமபாகு கருணாரத்ன தலைமை தாங்கும், நவ சமசமாஜக் கட்சி (NSSP) ஒரு ட்ராஸ்கிச சோஷலிசக் கட்சி ஆகும். இன்று அரசுடன் கூட்டுச் சேர்ந்திருக்கும், வாசுதேவ நாணயக்காராவின் லங்கா சமசமாஜக் கட்சியில் (LSSP) இருந்து எப்போதோ பிரிந்து வந்து விட்டது. ஆனால், இரண்டுமே நான்காம் அகில கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட ட்ராஸ்கிச கட்சிகள் தான். ட்ராஸ்கிஸ்டுகள் கம்யூனிஸ்டுகள் அல்ல. இன்னும் தெளிவாக சொன்னால், "ஸ்டாலினிஸ்டுகள் அல்ல".

காலனிய கால இலங்கையில் தோன்றிய, ஆரம்ப கால சோஷலிச இயக்கம், "ஸ்டாலின் - ட்ராஸ்கி பிரிவினை" க்குப் பிறகு, ட்ராஸ்கியை பின்பற்றியது. ஐரோப்பிய சமூக-ஜனநாயக கட்சிகளின் குறிக்கோள், ட்ராஸ்கிசவாத கட்சிகளுக்கும் பொருந்தும். அதாவது, கத்தியின்றி, இரத்தமின்றி, பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று, சோஷலிசத்தை கொண்டு வருவதே அவர்களது குறிக்கோள். அதனால் தான், வாசுதேவ நாணயக்காராவின் LSSP, மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக் கட்சி அரசை ஆதரிக்கின்றது. அதாவது, ஒரு மத்திய இடது சார்ந்த அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதன் மூலம், ஒரு முதலாளிய அரசை வழிக்குக் கொண்டு வர முடியுமாம். (இலங்கை சுதந்திரக் கட்சி, அடிப்படையில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அரசியலை கொண்டுள்ளது.)

விக்கிரமபாகு கருணாரத்னவின் NSSP, நடப்பில் உள்ள மகிந்த அரசுடன் முரண்படுகின்றது. அது ஒரு மிகச் சரியான நிலைப்பாடு தான். ஆனால், சர்வதேச மட்டத்தில், அதைப் போன்ற ட்ராஸ்கிசவாத கட்சிகள், ஒரு ஆயுதப் புரட்சியை நம்பி இருக்கவில்லை. அதன் அர்த்தம், தேர்தல் ஜனநாயக அரசியலில் இருந்து அவர்களால் வெளியே வர முடியாது. அடித்தட்டில் இருக்கும் மக்கள் புரட்சி செய்வார்கள், அப்போது அவர்களை வழிகாட்டலாம் என்று காத்திருக்கிறார்கள்.

விக்கிரமபாகுவின் NSSP கட்சிக்கும், சர்வதேச ட்ராஸ்கிச கட்சிகளுக்கும் இடையிலான தொடர்புகளை நாங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. ட்ராஸ்கிஸ்டுகள், ஒரே நாட்டில் சோஷலிசத்தை கட்டுவதனை, ஒரு "ஸ்டாலினிச கோட்பாடு" என்று நிராகரிப்பவர்கள். அதற்குப் பதிலாக, "நிரந்தரப் புரட்சி" என்று சர்வதேச மட்டத்தில் சிந்திப்பவர்கள். அதாவது, ஒரு சர்வதேச பாட்டாளிவர்க்கத்தின் "உலகப் புரட்சி" ஏற்பட்டால் மட்டுமே, தமிழீழம், ஸ்ரீலங்கா ஆகிய சோஷலிச நாடுகளும் உருவாகும் என்று நம்புவோர் தான் NSSP யினர்.

NSSP க்கு, நான்காம் அகிலம் போன்ற சர்வதேச ட்ராஸ்கிசவாத அமைப்புகளுடன் தொடர்புண்டு. குறிப்பாக, நெதர்லாந்து நாட்டில் இயங்கும் தீவிர ட்ராஸ்கிச Grenzeloos கட்சியுடன், நெருங்கிய தொடர்புகளை பேணி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் நெதர்லாந்தில் கூட்டப்படும் சர்வதேச கருத்தரங்குகளிலும் கலந்து கொள்கின்றனர். உலகெங்கும் உள்ள ட்ராஸ்கிச கட்சிகளின் பிரதிநிதிகள், அந்தக் கருந்தரங்குகளில் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். ட்ராஸ்கிச இயக்கத்திற்குள் நிறைய பிரிவுகள் உள்ளன. NSSP போன்று, Grenzeloos கட்சியும் அரசை ஆதரிப்பதில்லை. எந்தப் பெரும்பான்மை கட்சி ஆட்சி அமைத்தாலும், அதன் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து வருகின்றது. NSSP யின் நிலைப்பாடும் அது தான். அந்த விடயத்தில் அவர்களின் நேர்மையை பாராட்டலாம்.

Grenzeloos என்பது, நெதர்லாந்தில் இயங்கும் ஒரு சிறிய மார்க்சிய-ட்ராஸ்கிச கட்சி ஆகும். நெதர்லாந்து ஆளும் கட்சிகளில் ஒன்றான, அடிப்படையில் சமூக ஜனநாயக கட்சியான PvdA (தொழிற்கட்சி, பிரிட்டிஷ் Labour Party போன்றது), பல தசாப்தங்களுக்கு முன்பிருந்தே, வலதுசாரி பாதையில் செல்லத் தொடங்கியது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் பேசிய மார்க்சியம், சோஷலிசம் எல்லாவற்றையும் கை விட்டு விட்டு, முதலாளித்துவ ஆதரவு கட்சியாகி விட்டது. கட்சியின் வலதுசாரி நிலைப்பாட்டுடன் முரண்பட்ட இடதுசாரி மார்க்சிய நம்பிக்கையாளர்கள், Grenzeloos (கிரென்செலோஸ்: எல்லையற்றது) என்ற புதிய அமைப்பை உருவாக்கினார்கள்.

அவர்கள் தற்போது, PvdA யுடன் எந்த தொடர்புமற்று, தனியான கட்சியாக இயங்கி வருகின்றனர். அவர்கள் மார்க்சிஸ்டுகள் என்றாலும், ட்ராஸ்கிசத்தை கட்சிக் கொள்கையாக பின்பற்றி வருகின்றனர். தீவிரமான ஸ்டாலினிச எதிர்ப்பாளர்கள். மேற்கு ஐரோப்பிய நாடுகளில், வாழ்க்கைத் தரம் உயர்ந்து வசதியான வாழ்க்கை வாழும் மக்கள் மத்தியில், ட்ராஸ்கிஸம் இலகுவில் எடுபடும்.

ட்ராஸ்கிசவாதிகள், "வன்முறைப் புரட்சி மூலம், முதலாளித்துவ அரசை வீழ்த்தி, பாட்டாளி வர்க்க அரசை நிறுவ விரும்பும் ஸ்டாலினிசத்தை" நிராகரிக்கின்றனர். அதனால், இரத்தம் சிந்திப் போராட விரும்பாத நடுத்தர வர்க்க மனப்பான்மை கொண்ட மக்கள் மட்டுமல்ல, முதலாளிகளும் ட்ராஸ்கிசத்தை ஆதரிப்பார்கள். ஏனென்றால், ட்ராஸ்கிஸ்டுகளால், எதிர்காலத்தில் அவர்களுக்கு எந்த விதமான (உயிர்)ஆபத்தும் ஏற்படாது.

நெதர்லாந்தில் உள்ள பல்வேறு இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்களுடனும் எனக்குப் பழக்கம் உண்டு. Grenzeloos கட்சி உறுப்பினர்களை, பல சந்தர்ப்பங்களில் சந்தித்துப் பேசி இருக்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பிருந்தே, பல்வேறு சமூக நிகழ்வுகளில், அரசியல் ஆர்ப்பாட்டங்களில், அவர்களை சந்தித்திருக்கிறேன். நான் இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒரு சமூக ஆர்வலர் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

அப்போதெல்லாம், எமது உரையாடலில், தவிர்க்கவியலாது இலங்கை நிலவரம் குறித்த கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெறும். அநேகமாக, ஐரோப்பாவில் அரசியல் ஆர்வமுள்ள பலர், இலங்கைப் பிரச்சினை பற்றியும் அறிந்து வைத்திருப்பார்கள். ஈழப்போர், ஈழத்தில் மனிதப் பேரவலம், போரிடும் தரப்பினர், அவர்களது இராணுவ- அரசியல் நிலைப்பாடுகள், இவை குறித்தெல்லாம் ஆர்வத்தோடு தேடிப் படித்திருப்பார்கள்.

ஈழப் போராட்டம், மற்றும் விடுதலைப் புலிகள் குறித்து Grenzeloos உறுப்பினர்களின் கொண்டிருந்த கருத்துக்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின. "புலிகள் ஒரு (தமிழ்) தேசியவாத இயக்கம், ஒரு தேசியவாத அரசு அமைப்பதே அவர்களது குறிக்கோள்." என்ற கருத்தை நான் முன்வைத்தேன். அதனை மறுத்துரைத்த Grenzeloos கட்சி உறுப்பினர்கள், "விடுதலைப் புலிகள் ஒரு ஸ்டாலினிச இயக்கம். தமிழீழத்தில் ஸ்டாலினிச ஆட்சியை கொண்டுவருவதே அவர்களது குறிக்கோள்" என்று வாதிட்டனர். அது மட்டுமல்ல, கியூபா, வியட்நாமில் ஸ்டாலினிச ஆட்சி நடப்பதாகவும், புலிகளும் அந்தப் பாதையில் செல்வதாகவும் வாதிட்டனர்.

இன்று, ஐரோப்பிய ட்ராஸ்கிச கட்சிகளுடன் தொடர்புடைய தமிழர்கள் சிலர், தம்மை "தீவிரமான புலி ஆதரவாளர்களாக" காட்டி வருகின்றனர். உண்மையில் அது ஒரு இரட்டை வேடம். Grenzeloos மட்டுமல்ல, ஐரோப்பிய ட்ராஸ்கிசவாத கட்சிகள் பலவும் புலிகளை ஒரு ஸ்டாலினிச இயக்கமாகவே கருதுகின்றன. விடுதலைப் புலிகள் ஒரு "ஸ்டாலினிச இயக்கம்" என்பதற்கு, ட்ராஸ்கிசவாதிகள் கூறும் காரணம் முக்கியமானது. முதலில் ஸ்டாலினிசம் என்றால் என்ன? அதற்கு வரைவிலக்கணம் என்ன?

"ஸ்டாலினிசம்" என்ற சொற்பதத்தை, ட்ராஸ்கிசவாதிகள் எவ்வாறு வரையறுக்கிறார்கள் என்பதை, நாம் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். "வன்முறைப் போராட்டத்தில் நாட்டம், கடும்போக்குத் தன்மை, பல கட்சி ஜனநாயகத்தை மறுப்பது, மாற்றுக் கருத்தாளரை அழித்தொழிப்பது, எதேச்சாதிகாரம்..." இது போன்ற பல அம்சங்களை, அவர்கள் ஸ்டாலினிசம் என்று கருதுகின்றனர். 

ட்ராஸ்கிஸ்டுகளை பொறுத்தவரையில், "ஸ்டாலினின் கொள்கைகளை பின்பற்றித் தான், கியூபாவில் காஸ்ட்ரோயிஸ்டுகளும், வியட்நாமில் வியட்- காங் இயக்கமும் ஆயுதப் போராட்டம் நடத்தினார்கள்." அதாவது, "அவர்கள் கம்யூனிஸ்டுகளோ, இடதுசாரிகளோ அல்ல, ஸ்டாலினிஸ்டுகள்." ஏனென்றால், ஆயுத வன்முறை மூலம், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பவர்கள். "விடுதலைப் புலிகளும், அவ்வாறு ஆயுத வன்முறையில் நம்பிக்கை கொண்ட இயக்கம் தான். அதனால் தான், புலிகளும் ஸ்டாலினிஸ்டுகள் ஆவர்." என்பது ட்ராஸ்கிச கட்சிகளின் அரசியல் புரிதல் ஆகும். 

மேற்கு ஐரோப்பாவில் இயங்கும், எந்தவொரு ட்ராஸ்கிச அமைப்பும், முதலில் தன்னை முதலில் "ஸ்டாலினிஸ்ட் இல்லை" என்று நிரூபிப்பதில் குறியாக இருக்கும். அதற்குக் காரணம், ஐரோப்பிய அரசுகள் "ஸ்டாலினிசம் என்பது சர்வாதிகாரம், அல்லது எதேச்சாதிகாரத்தின் மறுபெயர்" என்று பிரச்சாரம் செய்து, தமது மக்களை நம்ப வைத்திருக்கின்றன. அதனால் தான், ஆயுத பலம் மூலம் அதிகாரத்தை நிலை நாட்ட விரும்பும் தேசியவாத இயக்கங்களும், ட்ராஸ்கிசவாதிகளின் கண்களுக்கு "ஸ்டாலினிஸ்டுகளாக" தெரிகின்றன.

ஐரோப்பிய ட்ராஸ்கிச கட்சிகள், புலிகளை "ஸ்டாலினிஸ்டுகள்" என்று கூறி நிராகரிப்பதற்கு, இன்னொரு காரணமும் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள "ஸ்டாலினிச" (கம்யூனிஸ்ட் அல்லது மாவோயிஸ்ட்) கட்சிகள், அமைப்புகள் தான், புலிகளையும், அவர்களது ஈழப் போராட்டத்தையும் வெளிப்படையாக ஆதரித்து வருகின்றனர். புலிகளின் போராட்டத்தை, ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்ட தேசிய விடுதலைப் போராட்டம் என்று கூறி வருகின்றனர். அது ஒரு வகையில் "ஸ்டாலினின் கோட்பாடு". (இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தேசிய இனப் பிரச்சினை குறித்த ஆய்வுகளை செய்தவர்களில் ஸ்டாலின் முக்கியமானவர்.) அத்தகைய கொள்கை வேறுபாடும், ட்ராஸ்கிச கட்சிகள் தேசியவாதிகளான புலிகளை நிராகரிக்க காரணமாக உள்ளது.


Wednesday, February 01, 2012

"புதியதொரு முற்போக்கு தேசியம், இன முரண்பாட்டை தீர்க்கும்" - பி.ஏ.காதர்

இலங்கையின் பிரபலமான இடதுசாரி அரசியல் சிந்தனையாளர், பி.ஏ. காதரின் சொற்பொழிவு. இனப்பிரச்சினையின் மூலமான, சிங்கள இனத்திற்குள்ளேயான சாதிப் பிரிவினைகள், சிங்கள பெரு முதலாளிகளின் தோற்றம் போன்ற பல உண்மைகள் அலசப் படுகின்றன. சிங்கள மேட்டுக் குடிக்கும், தமிழ் மேட்டுக் குடிக்கும் இடையிலான வர்க்க உறவுகள், போன்றவற்றை சரித்திர சான்றுகளுடன் விளக்குகின்றார். ஈழத் தமிழர் பிரச்சினையில் ஆர்வம் கொண்ட அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய காணொளி.

பி. ஏ. காதர், முன்னாள் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர். மலையகத் தமிழ் மக்களின் அவல நிலை குறித்து "இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைகள்" என்ற ஆய்வு நூலை எழுதியவர். மார்க்சிய "ஈழப் புரட்சி அமைப்பின்" உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில், சிறிலங்கா அரசினால் சிறை வைக்கப் பட்டவர். தற்போது புலம்பெயர்ந்து இங்கிலாந்தில் வாழ்ந்து வருகின்றார்.

Part 1


Part 2


Part 3


Part 4


Part 5


Part 6


Part 7


Part 8

Monday, January 25, 2010

ஐக்கிய நாடுகள் சபை ஈழத்திற்கு ஆதரவளிக்குமா?

(பகுதி: ஒன்று)
ஈழ சுதந்திரப் போர் ஆரம்பமான காலந் தொட்டு இன்று வரை, ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டிலான சமாதானத்தை அங்கலாய்ப்போடு எதிர்பார்க்கும் பலர் உள்ளனர். ஐ.நா. சபையின் அரசியல் பின்னணி பற்றி தெளிவான அறிவிருந்தால், தாமே ஏமாந்து தலைவிதியை நொந்து கொள்ள வேண்டியிருக்காது. ஐ.நா.சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இலங்கை தொடர்பாக வருடாவருடம் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கின்றது. இலங்கை அகதிகள் சம்பந்தமான தஞ்சக் கோரிக்கைகளை பரிசீலிக்கும் நாடுகள், அந்த அறிக்கையை ஆதாரமாகக் காட்டுகின்றன. "இலங்கை அரசு மனித உரிமைகளை மதித்து நடப்பதாகவும், நாடு திரும்பும் அகதிகளை எந்த தீங்கும் அணுகாது பாதுகாப்பதாகவும்..." ஐ.நா. அறிக்கை கூறிச் செல்கின்றது. ஐ.நா. அதிகாரிகள், இலங்கை அரசாங்கத்தின் பிரச்சாரத்தால் மதி மயங்கி அது போன்ற ஒரு தலைப் பட்சமான அறிக்கை தயாரிப்பதாக சிலர் கருதலாம். ஆனால் அறிக்கையின் கீழே உள்ள உசாத்துணை பகுதியை பார்க்கும் ஒருவர் அதிர்ச்சியடையலாம். அரச சார்பு ஊடகங்கள், புலிகள் சார்பு ஊடகங்கள், நடுநிலை ஊடகங்கள், பல்வேறு மனித உரிமை நிறுவனங்கள் ஆகிய அனைத்துப் பெயர்களும் குறிப்பிடப் பட்டிருக்கும். அதாவது இவற்றின் தரவுகளை ஆய்வு செய்த பின்னரே தாம் மேற்படி முடிவுக்கு வந்ததாக எழுதியிருப்பார்கள்.

எப்போதும் அரசாங்கங்களை குறை கூறும் மக்கள், ஒரு போதும் பெரு மதிப்புக்குரிய ஐ.நா.சபையை குறை சொல்லத் தயங்குவார்கள். பொது மக்களின் "தயக்கத்தை" மேற்குலக அரசுகள் தமக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்கின்றன. இரண்டாவது உலகப்போரினால் பல ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் சிதைவடைந்தது. மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று. 19 ம் நூற்றாண்டில் மிகப் பெரிய ஏகாதிபத்தியத்தை அமைத்த பிரித்தானியா, 20 ம் நூற்றாண்டில் தள்ளாடியது. ஒரு காலத்தில் லாபங்களை அள்ளிக் குவித்த காலனிகள், தற்போது நஷ்டங்களை கொடுத்தன. இதனால் பிரித்தானியா, தனது காலனிகளுக்கு சுதந்திரம் கொடுக்க முன்வந்தது. அவற்றில் இஸ்ரேலின் சுதந்திரம் முக்கியமானது.


அப்போது தான் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையில், இஸ்ரேலுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கான பிரேரணை அமெரிக்காவால் முன்மொழியப்பட்டது. இதற்கு இன்னொரு வல்லரசான சோவியத் யூனியனின் சம்மதம் கிடைக்கவே, பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரதேசமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவானது. யூதர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் (இஸ்ரேல்) 51 % அரபுக்கள் வாழ்ந்தார்கள். இதனை பொறுக்க மாட்டாத சியோனிச அரசு, அந்த மக்கள் மீது வன்கொடுமைகளை கட்டவிழ்த்து விட்டது. அரபுக் கிராமங்களை சுற்றி வளைத்த ஆயுதபாணிக் குழுக்கள், நூற்றுக் கணக்கான மக்களை படுகொலை செய்தனர். இதைக் கேள்விப்பட்ட லட்சக்கணக்கான அரபுக்கள் இடம்பெயர்ந்து அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

இஸ்ரேலிய இனச் சுத்திகரிப்பில் தப்பிய பாலஸ்தீன அகதிகள், மேற்கு ஐரோப்பாவுக்கோ, அல்லது அமெரிக்காவுக்கோ அகதிகளாக வரலாம் என்ற "அச்சம்" நிலவியது. பாலஸ்தீன அகதிகள் தமது நாடுகளுக்குள் வந்து விடாமல் தடுப்பதற்காக, ஐ.நா. சபையின் உதவியை நாடின. அதன்படி ஜோர்டானிலும், லெபனானிலும் ஐ.நா. மேற்பார்வையின் கீழ் பல அகதி முகாம்கள் கட்டப்பட்டன. கடந்த அறுபது வருடங்களாக அந்த அகதி முகாம்களே, பாலஸ்தீனர்களின் நிரந்தர வதிவிடமாகி விட்டன. இன்று ஐ.நா. மன்றம் மட்டுமல்ல, எந்த ஒரு மேற்குலக நாடும் அகதிகளின் மீள்குடியேற்றம் பற்றி பேசுவதில்லை. இஸ்ரேலை பகைத்துக் கொள்ளக் கொட்டாது என்பதில் அவதானமாக உள்ளன.

முன்பெல்லாம் கடவுளின் பெயரால், அல்லது மதத்தின் பெயரால் யுத்தங்கள் நடத்தப்பட்டன. 20 ம் நூற்றாண்டில், ஐ.நா. சபை என்ற சர்வதேச நிறுவனத்தின் பெயரால் யுத்தங்கள் நடத்தப்பட்டன. அவ்வாறான தொடர் யுத்தங்களில் முதலாவது "கொரியாப் போர்." இரண்டாம் உலகப்போரின் இறுதியில் ஆசியாவில் புதிய போர் முனையை தொடங்கிய சோவியத் செஞ்சேனை கொரியாவை மீட்டு, ஜப்பானை கைப்பற்ற திட்டமிட்டது. இதற்குள் முந்திக் கொண்ட அமெரிக்கா ஜப்பானில் அணு குண்டு போட்டு தடாலடியாக போரை முடிவுக்கு கொண்டு வந்தது. ஹிரோஷீமா, நாகசாகி நகரங்களில் பெரும் நாசத்தை விளைவித்த அணு குண்டு தாக்குதல், அமெரிக்கா தன்னை வல்லரசு ஆதிக்கத்தை நிலைநாட்டியது. தொடர்ந்து அமெரிக்கப் படைகள் ஜப்பானிலும், கொரியாவிலும் தரையிறங்கின.

இதற்கிடையே சோவியத் படைகள் வட கொரியாவை ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து விட்டிருந்தன. உலகப்போர் முடிவுற்ற உடனே, கொரியாவில் பொதுத் தேர்தல் நடத்தப் பட்டது. சோவியத் கட்டுப்பாட்டில் இருந்த வட கொரியாவிலும், அமெரிக்க கட்டுப்பாட்டில் இருந்த தென் கொரியாவிலும் ஒரே சமயத்தில் நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட்கள் வெற்றி பெற்றனர். தேர்தல் முடிவுகள், அமெரிக்க எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அமைந்து விட்டதால், கொரிய இணைப்பு பின் போடப்பட்டது. தென் கொரியாவில் அமெரிக்க ஆசீர்வாதத்துடன் ஒரு இராணுவ சதிப்புரட்சி இடம்பெற்றது. சதியில் பங்குபற்றிய அதிகாரிகள் முன்னர் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளரின் கைக்கூலிகளாக இருந்தவர்கள். தற்போது அமெரிக்க விசுவாசிகளாக மாறி விட்டனர். இதே நேரம், வட கொரியாவில் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த கிம் இல் சுங் புதிதாக உழைப்பாளர் கட்சி ஆரம்பித்தார். சோவியத் செஞ்சேனை உதவியுடன் கெரில்லாக் குழுக்களை அமைத்தார். "ஒருங்கிணைந்த கம்யூனிச கொரியா", கிம் இல் சுங்கின் லட்சியமாக இருந்தது. கிம் இல் சுங் தலைமையிலான கெரில்லாக்கள் கொரியா சுதந்திரப் போரை ஆரம்பித்தனர். ஆரம்பித்த சில மாதங்களிலேயே 90 % கொரியப் பகுதிகள் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.

கிம் இல் சுங்கின் படைகளின் முன்னேற்றம் அமெரிக்காவின் வயிற்றில் புளியைக் கரைத்தது. இப்படியே விட்டால், "கம்யூனிச அபாயம்" ஆசியாவில் பரவி விடும். "உலகம் எதிர்நோக்கும் அபாயத்தை முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு" ஐ.நா. மன்றம் கூட்டப்பட்டது. அன்று, வீட்டோ அதிகாரம் கொண்ட பாதுகாப்புச் சபையில் சீனா என்ற பெயரில் தைவான் அங்கம் வகித்தது. கம்யூனிச சீனாவுக்கு உறுப்புரிமை கொடுக்க வேண்டுமென கோரி, சோவியத் யூனியன் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தது. எஞ்சிய பிரிட்டனும், பிரான்சும் அமெரிக்காவின் நட்பு நாடுகள். இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாத அமெரிக்கா, கொரியாவுக்கு ஐ.நா. படை அனுப்பும் கோரிக்கையை முன்வைத்தது. அமெரிக்க சார்பு நாடுகளால் நிரம்பியிருந்த ஐ.நா. சபை அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக கை உயர்த்தின. அமெரிக்கா தலைமையிலான ஐ.நா. இராணுவம் கொரியா சென்றது. பெயர் மட்டும் தான் "ஐக்கிய நாடுகளின் சமாதானப் படை" என்றிருந்தது. 90 % இராணுவவீரர்கள் அமெரிக்கர்களாக இருந்தனர். இந்தியா போன்ற வேறு சில நாடுகளும் தம் பங்குக்கு சிறிய படையணிகளை அனுப்பி இருந்தன.

கொரியப் போரில், ஐக்கிய நாடுகளின் "அமைதிப் படை" நிகழ்த்திய அட்டூழியங்கள் அளவிட முடியாதவை. கண்மூடித்தனமான விமானக் குண்டு வீச்சுகளால், ஆயிரக்கணக்கான கொரியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் வீடுகளும், உடமைகளும் அழிந்தன. இவற்றிற்கு சிகரம் வைத்தது போல, அடைக்கலம் கோரி வந்த நூற்றுக்கணக்கான அகதிகளை அமெரிக்க இராணுவம் படுகொலை செய்தது. அந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோருமாறு, இன்றைய கொரிய அரசு கோரியது. ஆனால் அமெரிக்கா மறுத்து விட்டது. இரண்டாவது உலகப்போரில் ஐரோப்பாவில் விழுந்த குண்டுகளை விட, இரு மடங்கு அதிகமான குண்டுகள் சின்னச்சிறு கொரிய தேசத்தின் மீது வீசப்பட்டன. தற்காலிக யுத்த நிறுத்தத்துடன், கொரியப் போர் முடிவுக்கு வந்த போது, கோடிக்கணக்கான கொரியர்கள் ஐ.நா. சபையின் பெயரால் இனவழிப்புக்கு உள்ளாகினர். வட கொரியாவின் பொருளாதார கட்டுமானங்கள் யாவும் அழிக்கப்பட்டன. இனப்படுகொலைகளை செய்த ஐ.நா.மன்றத்திடமே, இனப்படுகொலை குறித்து விசாரிக்குமாறு கோரும் வேடிக்கையை நாம் இன்று காணலாம்.


(தொடரும்)
[பகுதி இரண்டு: ஐ.நா. அமைதிப் படையின் அட்டூழியங்கள்]