Monday, December 04, 2017

புரட்சியைக் காட்டிக் கொடுக்கும் ட்ராஸ்கிசவாதிகள்


யார் இந்த ட்ராஸ்கி?

 இன்று மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள சமூக ஜனநாயகக் கட்சி போன்றதொரு கட்சி தான், ஆரம்பத்தில் ரஷ்யாவிலும் இருந்தது. 1903 ம் ஆண்டளவில் கட்சிக்குள் நிலவிய கொள்கை முரண்பாடுகளின் விளைவாக போல்ஷெவிக், மென்ஷெவிக் என இரண்டு பிரிவுகள் உருவாகின. மென்ஷெவிக் பிரிவு தொடர்ந்தும் சமூக ஜனநாயக அரசியலை முன்னெடுத்து வந்தது.

1917 ம் ஆண்டு வரையில், ட்ராஸ்கி மென்ஷெவிக் பிரிவில் தான் இருந்தார். ஆகையினால், அவர் பின்னர் கட்சி மாறி போல்ஷெவிக் பிரிவில் இணைந்து கொண்ட போதிலும், சமூக ஜனநாயகக் கருத்துக்கள் அவரது ஆழ்மனதில் பதிந்திருக்கும். ட்ராஸ்கி சொல்லிக் கொண்டு திரிந்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு அடிப்படையில் ஒரு சமூக ஜனநாயகவாத அரசியல் தான். புதிய மொந்தையில் பழைய கள் என்று சொல்லலாம்.

அன்றைய ஐரோப்பாவிலும், ரஷ்யாவிலும், முதலாம் உலகப்போர் ஒரு திருப்புமுனையாக அமைந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் மென்ஷெவிக் - போல்ஷெவிக் பிளவு ஒரு கொதி நிலைக்கு வந்தது. அன்று ஐரோப்பாவில் இருந்த பிற சமூக ஜனநாயக கட்சிகள் போன்று, மென்ஷெவிக் பிரிவினரும் முதலாளிய வர்க்கத்துடன் கூட்டுச் சேர்ந்து முதலாம் உலகப்போரை ஆதரித்தனர். அதை நாட்டுப் பற்று என்ற தேசியவாத கருத்தியலால் நியாயப் படுத்தினார்கள். அன்று ட்ராஸ்கியும் அதைப் பிரதிபலித்து வந்தார்.

ஆனால், போல்ஷெவிக் கட்சியினர் உலகப் போருக்கு எதிரான நிலைப்பாட்டில் தீவிரமாக இருந்தனர். "ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக மாற்றி, முதலாளிய வர்க்கத்திற்கு எதிரான புரட்சியில் ஈடுபட வேண்டும்" என்ற லெனினின் அறைகூவல், ட்ராஸ்கி அங்கம் வகித்த மென்ஷெவிக் பிரினரால் கடுமையாக எதிர்க்கப் பட்டது.

ஆகவே, ட்ராஸ்கி ஒரு காலத்தில் "போல்ஷெவிக் எதிர்ப்பாளராக" இருந்தவர். அப்படியானவரது நம்பகத்தன்மை, பின்னாளில் போல்ஷெவிக் உறுப்பினரான காலத்தில் சந்தேகிக்கப் பட்டதில் தவறில்லை. 1923 ம் ஆண்டு, ட்ராஸ்கி மீண்டும் தூசு தட்டி எடுத்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாடு அந்த சந்தேகத்தை மேலும் உறுதிப் படுத்தியது.

1917 பெப்ரவரி புரட்சிக்குப் பின்னர், ட்ராஸ்கி மென்ஷெவிக் கட்சியில் இருந்து விலகி, நடுநிலைமை வகித்த குழுவொன்றில் சேர்ந்து கொண்டார். அப்போது அவர் முதலாம் உலகப்போருக்கு எதிரான கருத்தைக் கொண்டிருந்ததுடன், மெல்ல மெல்ல போல்ஷெவிக் கொள்கைகளால் ஈர்க்கப் பட்டார். அதே வருடம் கோடை காலத்தில் (அதாவது அக்டோபர் புரட்சிக்கு சில மாதங்களுக்கு முன்னர்), அன்று நடுநிலை வகித்த குழுவில் இருந்த அனைவரும் போல்ஷெவிக் கட்சியில் சேர்ந்து கொண்டனர்.

ட்ராஸ்கியின் மென்ஷெவிக் கடந்த காலம் தொடர்பான எச்சரிக்கை உணர்வு லெனினிடம் எப்போதும் இருந்து வந்துள்ளது. அவர் இதைப் பல தடவைகள் வெளிப்படுத்தி உள்ளார். "குட்டி பூர்ஷுவா ட்ராஸ்கியின் ஊசலாட்டம்" பற்றி லெனின் தனது எழுத்துகளில் குறிப்பிட மறக்கவில்லை. இருப்பினும் படித்த மத்தியதர வர்க்கத்தினர் மத்தியில் ட்ராஸ்கிக்கு இருந்த செல்வாக்கு காரணமாக கட்சிக்குள் பொறுப்பான பதவி கொடுக்கப் பட்டிருக்கலாம்.

ட்ராஸ்கி செம்படையை உருவாக்கி இருந்தாலும், உண்மையில் அவர் இராணுவத்துறை சார்ந்த அனுபவம் கொண்டவர் அல்ல. செம்படை என்பது அடிப்படையில் "தொழிலாளர், விவசாயிகளின் படை". ஆனால், போரியல் அனுபவம் இல்லாத தொழிலாளர், விவசாயிகளுக்கு இராணுவ பயிற்சி கொடுக்க வேண்டியிருந்தது.

அன்று உண்மையில் உள்நாட்டுப் போரை நடத்தியவர்கள், போரியல் அனுபவம் வாய்ந்த இராணுவ அதிகாரிகள் தான். முன்னர் சார் மன்னனின் படையில் இருந்த, ஆனால் அரசியல் ஈடுபாடில்லாத அதிகாரிகள் பலர், தாமாகவே விரும்பி வந்து சேர்ந்து கொண்டனர். அவர்களுடன், அக்டோபர் புரட்சியில் பங்கெடுத்த படைவீரர்களும் இருந்தனர்.

சிறந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் திறமை படைத்த ட்ராஸ்கி, எப்போதும் தன்னை ஒரு மத்தியதர வர்க்க அறிவுஜீவி போன்றே காட்டிக் கொண்டவர். அவருக்கும் பாட்டாளிவர்க்க அரசியலுக்கும் வெகுதூரம். அதன் தொடர்ச்சியை இன்றைக்கும் சர்வதேச ட்ராஸ்கியவாதிகள் மத்தியில் காணலாம்.

பணக்கார மேற்கத்திய நாடுகளில் தான் பெருமளவு ட்ராஸ்கிஸ்டுகள் உள்ளனர். குறிப்பாக படித்த மத்தியதர வர்க்க (குட்டி பூர்ஷுவா) இளைஞர்கள் மத்தியில் ட்ராஸ்கிச செல்வாக்கு அதிகமாக இருப்பதைக் காணலாம். அவர்களது ஸ்டாலினிச எதிர்ப்புப் பிரச்சாரங்களிலும் "ஸ்டாலின் அறிவுஜீவிகளை கொன்றொழித்தார்" என்று புலம்புவதைக் காணலாம்.

ட்ராஸ்கிசவாதிகள் வரலாற்றை திரித்து கற்பனைக் கதைகளை எழுதி விட்டு, எல்லோரும் அதையே உண்மையென நம்ப வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள். அது மட்டுமல்லாது, ஸ்டாலின் தொடர்பாக மேற்குலக முதலாளிய எதிரிகள் பரப்பிய பொய்ப் பிரச்சாரங்களை, இவர்களும் காவித் திரிகிறார்கள். பொதுவாக எதிரிகளிடம் இருந்து விஷமத்தனமான பரப்புரைகள் வருவது எதிர்பார்க்கத் தக்கதே. ஆனால், தம்மை மார்க்சிய - லெனினிசவாதிகள் என்று சொல்லிக் கொள்ளும் ட்ராஸ்கிஸ்டுகளும் அப்படியே நம்பலாமா?

ட்ராஸ்கிசவாதிகள் லெனினை அப்பழுக்கற்றவர் என்று புகழ்வதும் ஒரு காரணத்தோடு தான். அது லெனின் மீதான பற்றின் வெளிப்பாடு அல்ல. ட்ராஸ்கியின் பெருமையை பேசுவதற்கு லெனினை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவு தான். அவர்களுக்கு எல்லாம் ட்ராஸ்கி தான். லெனின் "தொட்டுக் கொள்ள ஊறுகாய்" போன்று பயன்படுகின்றார்.

லெனினுக்கும், ட்ராஸ்கிக்கும் இடையில் எந்த முரண்பாடும் இருக்கவில்லை என்று, ட்ராஸ்கி லெனினின் நம்பிக்கைக்குரிய சீடராகவும் இருந்தார் என்றும் ட்ராஸ்கிசவாதிகள் செய்யும் பரப்புரையில் எந்த உண்மையும் இல்லை.

1921 ம் ஆண்டு நடந்த பத்தாவது காங்கிரஸில், உழைப்பை இராணுவமயமாக்கும், தொழிற்சங்கத்தை அரசு நிறுவனமாக்கும் ட்ராஸ்கியின் பரிந்துரைகளை லெனின் கடுமையாக எதிர்த்து வாதாடினார். அதே நேரம், ஆலோசனைச் சபையின் உப தலைவராக ட்ராஸ்கியை நியமிப்பதையும் லெனின் எதிர்த்து, ட்ராஸ்கியை கடுமையாக விமர்சித்து வந்தார்.

அதே நேரம், லெனின் எந்த விமர்சனமும் இல்லாமல் ஸ்டாலினை ஏற்றுக் கொண்டார் என்று அர்த்தம் அல்ல. தனிப்பட்ட முறையில், லெனினின் மனைவி குருப்ஸ்கயா ஸ்டாலினுடன் பிரச்சினைப் பட்ட நிகழ்வுகள் அரசியல் மட்டத்திற்கு வரவில்லை. லெனின் வாழ்ந்த காலத்திலேயே, ஸ்டாலினுக்கு அதிகளவு அதிகாரம் கொடுக்கப் பட்டிருப்பதை லெனின் விமர்சித்திருந்தார்.

அவை எல்லாம் லெனினுக்கு முக்கியமான முரண்பாடுகளாக படவில்லை. லெனின் சில பொறுப்புகளை ட்ராஸ்கிக்கு கொடுக்க விரும்பிய காரணம் வேறு. புரட்சி முடிந்தவுடன் ஸ்டாலினுக்கு தேசிய இனங்களின் கமிசார் பதவி அளிக்கப் பட்டிருந்தது.

ஸ்டாலின் பிறப்பால் ஒரு ஜோர்ஜியர். ஆனால், ரஷ்ய பெருந்தேசிய இனத்திற்குள் ஒன்றுகலந்து தலைமைப் பொறுப்புக்கு வந்து விட்டவர். "ரஷ்யர்களை விட மேலான ரஷ்யர்கள்" என்று சொல்வார்கள். உதாரணத்திற்கு நம்மில் சிலர் சரளமாக ஆங்கிலம் பேசி, மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றத் தொடங்கியவுடன், ஐரோப்பியரை விட மேலான ஐரோப்பியராக காட்டிக் கொள்வார்கள்.

அப்படியானவர்கள் நம்பி பொறுப்புக் கொடுத்தால், ஜோர்ஜிய பிரச்சினையை சரியாகக் கையாள மாட்டார்கள் என்ற எண்ணத்தில், லெனின் ட்ராஸ்கியை அணுகி இருக்கிறார். அதாவது, ஸ்டாலினை கீழிறக்கி விட்டு, ட்ராஸ்கியை உயர்த்துவதற்காக லெனின் அதைச் செய்யவில்லை. ட்ராஸ்கியின் இராணுவவாத போக்கு, ஏற்கனவே லெனினால் கண்டிக்கப் பட்டிருந்தது. சுருக்கமாக சொன்னால், ஸ்டாலினுக்கு பதிலாக ட்ராஸ்கி வந்திருந்தால், ஸ்டாலினை விட மோசமானதொரு இராணுவ சர்வாதிகாரியாக இருந்திருப்பார். ட்ராஸ்கி எப்படிப் பட்டவர் என்பது லெனினுக்கும் தெரிந்திருந்தது.

லெனின் வாழ்ந்த காலத்திலேயே, போல்ஷெவிக் கட்சிக்குள் ட்ராஸ்கியை விட ஸ்டாலினுக்கு தான் அதிக ஆதரவு இருந்தது. கட்சிக்குள் ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகி வருவதையும், இது அளவுகடந்த அதிகாரத்தை வழங்கி விடும் என்ற லெனினின் அச்சத்தை குருப்ஸ்கயா தெரிவித்து இருக்கிறார். இருப்பினும், ட்ராஸ்கியின் மென்ஷெவிக் கடந்த காலம் காரணமாக, கட்சிக்குள் யாரும் அவரை நம்பத் தயாராக இருக்கவில்லை.

1923 ம் ஆண்டு, போல்ஷெவிக் கட்சிக்குள் ட்ராஸ்கிக்கு மிகக் குறைந்த அளவு ஆதரவு தான் இருந்தது. அதனால், தான் ஸ்டாலினின் இடத்தை பிடிப்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்ற உண்மை ட்ராஸ்கிக்கு தெரிந்தே இருந்தது. கட்சிக்குள் பெருமளவு ஆதரவு பெற்றிருந்த ஸ்டாலினை ட்ராஸ்கி குறைத்து மதிப்பிட்டு இருந்தார். அன்று ட்ராஸ்கிக்கு ஒரேயொரு வழி மட்டுமே இருந்தது. செம்படையின் தலைமைத் தளபதியாக இருந்த படியால், இராணுவ சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கலாம். இருப்பினும், இது கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும் அபாயத்தையும் ட்ராஸ்கி உணராமல் இல்லை.

(தொடரும்) 


ட்ராஸ்கிசம் தொடர்பான இன்னொரு பதிவு:

2 comments:

Murali said...

ட்ராட்ஸ்கி பற்றி மீண்டும் மீண்டும் எழுதவேண்டியுள்ளது ஏனெனில் ட்ராட்ஸ்கியும் சரி அவரது அடிவருடிகளும் அந்த சித்தாந்தமும் பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்கு எதிரான துரோகமானது...இது வரலாற்று உண்மை

Murali said...

ட்ராட்ஸ்கி பற்றி மீண்டும் மீண்டும் எழுதவேண்டியுள்ளது ஏனெனில் ட்ராட்ஸ்கியும் சரி அவரது அடிவருடிகளும் அந்த சித்தாந்தமும் பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்கு எதிரான துரோகமானது...இது வரலாற்று உண்மை