Showing posts with label ஏழைகள். Show all posts
Showing posts with label ஏழைகள். Show all posts

Thursday, September 08, 2016

இனப்படுகொலையாளிகள், சர்வாதிகாரிகளுடன் கைகோர்த்த அன்னை தெரேசா!


"பரலோக இராஜ்யத்தில் ஒரு பணக்காரன் நுழைவதைக் காட்டிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது எளிது." மத்தேயு 19:24

ஏழைகளை சுரண்டிக் கொழுத்த, இனப்படுகொலைக்கும் அஞ்சாத சர்வாதிகாரிகளுடன் கைகோர்த்த அன்னை தெரேசா. ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிய பணத்தை நன்கொடை என்ற பெயரில் வாங்குவதற்கு கூச்சப் படாதவர். இவர் ஓர் உண்மையான கிறிஸ்தவர் என்றால், விவிலிய நூல் சொல்வதன் படி அவருக்கு பரலோகத்திலும் இடம் கிடைக்காது.

அன்னை தெரேசா 1981 ம் ஆண்டு, ஹைத்திக்கு சென்று “Légion d’Honneur” என்ற கௌரவப் பட்டத்தை வாங்கிக் கொண்டார். அதைக் கொடுத்தது, அப்போது ஹைத்தியை இரும்புக்கரம் கொண்டு ஆண்ட சர்வாதிகாரி டுவாலியர். ஹைத்தி இன்றைக்கும் உலகிலேயே மிகவும் வறுமையான நாடாக உள்ளது. அன்று கோடிக்கணக்கான ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிய இரத்தக் காட்டேரி தான் இந்த டுவாலியர். தனது அதிகாரத்தை நிலைநாட்ட படுகொலைகளுக்கு அஞ்சாத கொடுங்கோலன். இவர் தான் அன்னை தெரேசாவின் நண்பர்!

1979 ம் ஆண்டு, அன்னை தெரேசா குவாத்தமாலாவிற்கு விஜயம் செய்தார். அப்போது அங்கு இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தது. குவாத்தமாலா ஏழைகள் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். "பயங்கரவாத ஒழிப்பு" என்ற பெயரில், குவாத்தமாலா படையினர் ஏழை மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். அது குறித்து குவாத்தமாலா சென்ற அன்னை தெரேசாவிடம் கேட்கப் பட்ட பொழுது, தான் அப்படி எதையும் பார்க்கவில்லை என்று பதிலளித்தார்.

முப்பது வருடங்களுக்குப் பிறகு, அன்று நடந்த போர்க்குற்றங்கள் குவாத்தமாலா நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டன. அப்போது அங்கு நடந்தது இனப்படுகொலை தான் என்பதும் நிரூபிக்கப் பட்டது. இனப்படுகொலையாளிகளுடன் கைகோர்த்து, அவர்கள் கொடுத்த பணத்தை மனவுவந்து ஏற்றுக் கொண்ட அன்னை தெரேசா ஒரு புனிதரா?

அமெரிக்காவில் ஊழல் செய்வதில் பேர் போன நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள், அன்னை தெரெசாவுக்கு கோடிக் கணக்கான டாலர்கள் பணத்தை அள்ளிக் கொடுத்தனர். முதலாளித்துவ சுரண்டலுக்கு தாராளமாக அனுமதி வழங்கிய அன்றைய ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் கௌரவிக்கப் பட்டார். ரீகனின் ஆட்சிக் காலத்தில் உலகம் முழுவதும் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏழைகளுக்காக சேவை செய்யக் கிளம்பிய அன்னை தெரேசா, ஏழைகளை உருவாக்கும் பிசாசுகளுடன் கூடிக் குலாவினார். இது அவரது இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகின்றது.

உலகம் முழுவதும் கிடைத்த கோடிக் கணக்கான நிதி, இந்திய ஏழைகளுக்காவது போய்ச் சேர்ந்ததா? அதுவும் இல்லை. அவரால் நிர்வகிக்கப் பட்ட கிளினிக்குகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன. அன்னை தெரெசாவின் தொண்டு நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் யாருக்கும் தெரியாது. ஒரு தடவை இந்திய ஊடகவியலாளர்கள், கணக்குகளை ஆராயக் கேட்ட நேரம் மறுத்து விட்டார். அப்படிப் பட்ட அயோக்கியர் எப்படிப் புனிதராக முடியும்?

மேற்குறிப்பிட்ட தகவல்கள் எல்லாம், அன்னை தெரேசா உயிரோடு இருக்கும் காலத்தில், எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள் தான். ஆனால், அவை மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு தெரிய விடாமல் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன. மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த இனப்படுகொலையாளிகள், சர்வாதிகாரிகள், எந்தத் தயக்கமும் இன்றி குற்றங்களை புரிவதற்கு, அன்னை தெரேசா போன்றவர்களும் காரணம்.

கீழே உள்ள குறிப்புகள் நெதர்லாந்து பத்திரிகையில் வந்த கட்டுரை ஒன்றில் இருந்து எடுக்கப் பட்டன. Anton Mullink ஒரு முன்னாள் பாதிரியார். தற்போது நாஸ்திக‌ எழுத்தாள‌ர். புனித‌ர் என்று அழைப்ப‌த‌ற்கு த‌குதிய‌ற்ற‌ அன்னை தெரேசாவை, வ‌த்திகான் புனித‌ராக‌ பிர‌க‌ட‌னப் ப‌டுத்தியுள்ள‌து தொடர்பாக எழுதப் பட்ட கட்டுரை அது.

அவ‌ர் எழுதிய‌ க‌ட்டுரையில் இருந்து சில‌ குறிப்புக‌ள்:

1. ஏழைக‌ளுக்கு உத‌வுவ‌தை விட‌ க‌த்தோலிக்க‌ ம‌த‌ம் ப‌ர‌ப்புவ‌தே அவ‌ர‌து நோக்க‌மாக‌ இருந்த‌து. 
2. ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில் நோயாளிக‌ள் மோச‌மாக‌ ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ன‌ர். ம‌ருந்துக்க‌ளுக்கு த‌ட்டுப்பாடு. எப்போதாவ‌து ஒரு நாள் வ‌ரும் வைத்திய‌ர். சுத்திக‌ரிக்க‌ப் ப‌டாத‌ ஊசிக‌ள். சுகாதார‌ம‌ற்ற‌ இட‌ம். இவை ச‌ர்வ‌சாதார‌ண‌ம். 
3. பெரும்பாலும் தொண்ட‌ர்க‌ளே நோயாளிக‌ளுக்கு உத‌வினார்க‌ள். ஒரு த‌ட‌வை நோயாளியை அவ‌ச‌ர‌ சிகிச்சைக்கு கொண்டு போக‌ டாக்சியை வ‌ர‌ச் சொன்னார்க‌ள். அன்னை தெரேசா த‌டுத்து விட்டார். கார‌ண‌ம்? பிற‌கு எல்லோரையும் டாக்சியில் கொண்டு போக‌ வேண்டி இருக்கும்! 
4. அன்னை தெரேசாவுக்கு நிதிப் பிர‌ச்சினை இருந்த‌தாக‌ சொல்ல‌ முடியாது. அமெரிக்காவில் உள்ள‌ க‌த்தோலிக்க கோடீஸ்வ‌ர‌ர்க‌ள் அள்ளிக் கொடுத்த‌ன‌ர். ஹைத்தி ச‌ர்வாதிகாரி டுவாலியேர் கூட‌ இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ டால‌ர் நிதி வ‌ழ‌ங்கினார். அந்த‌ப் பண‌ம் எல்லாம் எங்கே போன‌து? யாருக்கும் தெரியாது. 
5. போபால் Union Carbide நிறுவ‌ன‌த்தின் ந‌ச்சுவாயு க‌சிவில் 2500 பேர் ப‌லியானார்கள். பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் அமெரிக்காவிட‌ம் ந‌ஷ்ட‌ஈடு கோரினார்க‌ள். அன்னை தெரேசா அவ‌ர்க‌ளை "ம‌ன்னித்து விடுங்க‌ள்" என்று ம‌ன்றாடினார்! 
6. யூகோஸ்லேவிய‌ போர்க‌ள் ந‌ட‌ந்த‌ கால‌த்தில், வ‌ன்புண‌ர்ச்சிக்கு ப‌லியான‌ பெண்க‌ள் க‌ர்ப்ப‌மாக‌ இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் வேண்டாத‌ க‌ர்ப்ப‌த்தை க‌லைக்க‌ முய‌ன்ற‌ பொழுது அன்னை தெரேசா த‌டுத்தார். "க‌ருக்க‌லைப்பு ச‌மாதான‌த்திற்கு விரோத‌மான‌து. தாய்மாரே கொலை செய்கின்ற‌ன‌ர்....!" இது தான் "புனித‌ர்" தெரேசாவின் வாத‌ம்.
 (ந‌ன்றி: NRC Handelsblad, 6 sep. 2016)


Tuesday, August 11, 2015

இங்கிலாந்து ஏழை பாட்டாளி வர்க்கத்தின் அவலம் பற்றி எங்கெல்ஸ் எழுதிய நூல்


பிரெடெரிக் எங்கெல்ஸ் எழுதிய, "இங்கிலாந்து உழைக்கும் வர்க்க மக்களின் நிலைமை" : 19 ம் நூற்றாண்டில், இங்கிலாந்தின் நகரங்களில் இருந்த சேரிகளில் வாழ்ந்த ஏழை மக்களின் அவல வாழ்க்கை பற்றி, இதை விட சிறப்பாக வேறெந்த நூலிலும் பதிவு செய்யப் படவில்லை. அதனால் இன்று வரைக்கும் உலகப் புகழ் பெற்ற மாபெரும் இலக்கியங்களில் ஒன்றாக போற்றப் படுகின்றது.

19 ம் நூற்றாண்டில், தொழில் துறை வளர்ச்சி கண்ட ஐரோப்பிய நகரங்களில் சேரிகளும் பெருகின. தொழிற்சாலைகளில் வேலை செய்த தொழிலாளர்கள், எந்த வசதியுமற்ற வீடுகளில், கழிவுகள், குப்பைகளுக்கு நடுவில் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டனர். அது தொழிற் புரட்சியின் விளைவாக ஏற்பட்டது என்பதை, எங்கெல்ஸ் இந்த நூலில் விரிவாகக் கூறுகின்றார்.

இன்றைய காலகட்டத்தில் ஏழைகளின் வாழ்க்கையை சித்தரிக்கும், சினிமாக்கள், நாவல்கள் தாராளமாக வெளிவருகின்றன. ஆனால், 19 ம் நூற்றாண்டு வரையில் அது குறித்து அக்கறை கொண்டவர்கள் மிகக் குறைவு. பிரான்சில் விக்டர் ஹியூகோ Les Misérables (ஏழை படும் பாடு) என்ற நாவலை எழுதினார். இவ்வாறு குறிப்பிட்ட சில எழுத்தாளர்கள் மட்டுமே, ஏழைகளின் வாழ்க்கையையும் பதிவு செய்துள்ளனர்.

எங்கெல்ஸ் எழுதிய இந்த நூல், ஏழைகளின் அவல வாழ்க்கையை ஒரு ஆவணமாக பதிவு செய்துள்ளது. வாசிப்பதற்கு எளிமையாக, ஒரு நாவல் போன்று எழுதப் பட்டுள்ளது. இருப்பினும் இதிலே எதுவுமே கற்பனை அல்ல. அந்தக் காலங்களில் இருந்த இங்கிலாந்தின் நிலைமை, இன்றுள்ள வறிய நாடுகளின் நிலைமை மாதிரி, அல்லது அதை விட மோசமானதாக இருந்தது. 

நெருக்கமான குடியிருப்புகள். ஒடுக்கமான தெருக்கள். அகற்றப்படாத குப்பைகளும், மனிதக் கழிவுகளும். எங்கும் வியாபித்திருக்கும் துர் நாற்றம். எட்டுப், பத்துப் பிள்ளைகளை கொண்ட குடும்பம் முழுவதும் ஒரேயொரு அறைக்குள் அடங்கி வாழும் அவலம். இவையெல்லாம் மிகவும் தெளிவாகவும், விரிவாகவும் இந்த நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளன.

ஐரோப்பியர்கள் பல நூறாண்டுகளாக செல்வத்தில் வாழ்ந்து வந்ததாக, நம் மத்தியில் உள்ள படித்தவர்கள் கூட நினைக்கிறார்கள். குறிப்பாக முதலாளித்துவத்திற்கு வக்காலத்து வாங்கும் "அறிவுஜீவிகள்", 19 ம் நூற்றாண்டிலும் ஐரோப்பாவில் நிலவிய, வறுமையின் கொடுமைகளை காண மறுக்கிறார்கள். அவர்கள் அது குறித்து எங்கேயும் படிக்கவும் இல்லை, கேள்விப் படவுமில்லை. பூனை கண்களை மூடிக் கொண்டிருப்பதால் உலகம் இருண்டு விடுவதில்லை.

மேற்கத்திய முதலாளித்துவ அறிஞர்கள் சிலர், தமது அரசியல் பக்கச் சார்பு காரணமாக, இந்த நூலில் உள்ள தரவுகள் தவறானவை, கற்பனையானவை என்று கூறுகின்றனர். வரலாறு எப்போதும் மன்னர்களைப் பற்றி எழுதப் படுகின்றது. மக்களைப் பற்றிய வரலாறு அரிதாகவே எழுதப் படுகின்றது. அதற்காக, 19 ம் நூற்றாண்டு இங்கிலாந்தில் தேனும் பாலும் ஆறாக ஓடியதாக வரலாற்றை திரிக்க முடியாது.

மார்க்சியத்தின் மூலவர்கள் என்று கருதப்படும் பிரெடெரிக் எங்கெல்ஸ் ஒரு மேட்டுக்குடியில் பிறந்தவர் தான். பிற மேட்டுக்குடி பிறப்பாளர்கள் போன்று, அவரும் மது, மாது மயக்கத்தில், நரி வேட்டையாடி காலம் கழித்துக் கொண்டிருக்கலாம். ஆயினும் அவரது இதயம் ஏழைகளின் மேல் பரிவு காட்டியது. 

எங்கெல்ஸ் இருபதாண்டு காலம் குடித்தனம் நடத்திய ஐரிஷ் காதலியான மேரி பேர்ன்ஸ், எழுதப் படிக்கத் தெரியாத ஏழைப் பணிப்பெண் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றைக்கும், ஓரளவு வசதியான குடும்பத்தில் பிறந்த, ஒரு சாதாரண மத்தியதர இளைஞர் கூட, எழுதப் படிக்கத் தெரியாத பணிப் பெண்ணுடன் குடும்பம் நடத்துவதை எதிர்பார்க்க முடியாது. அந்தஸ்து குறைந்து விடும் என்று நினைப்பார்கள்.

எங்கெல்சின் காதலியான மேரி பேர்ன்ஸ், அவரை தனது குடும்பம் வாழும் சேரிப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அதனால், பிற மேட்டுக்குடியினர் எட்டியும் பார்க்காத சேரிகளின் மூலை முடுக்குகள் எல்லாம் எங்கெல்சுக்கு பரிச்சயமாகின. அங்கு ஏழை மக்கள் படும் துயரை நேரில் கண்டு அனுபவித்துள்ளார். ஆகையினால், எங்கெல்ஸ் கற்பனையான தரவுகளை கொண்டு இந்த நூலை எழுதியதாக வாதிடுவது அபத்தமானது.

கார்ல் மார்க்ஸ் மாதிரி, பிரடெரிக் எங்கெல்ஸ் கூட ஒரு ஜெர்மனியர் தான். நெதர்லாந்துக்கு அருகில் உள்ள, பார்மென் (Barmen) எனும் சிறிய நகரத்தில் பிறந்தார். ரைன் நதிக்கரை சார்ந்த அந்தப் பிரதேசம், 19 ம் நூற்றாண்டிலேயே தொழிற்துறை வளர்ச்சியால் முன்னேறி இருந்தது. எங்கெல்சின் தந்தை பார்மென் நகரிலும், இங்கிலாந்தில் மான்செஸ்டர் நகரிலும், பருத்தி நூல் நூற்கும் தொழிற்சாலைகளை வைத்திருந்தார். 

எங்கெல்ஸ் தனது தந்தையின் தொழிற்சாலையை நிர்வகிக்கும் முகாமையாளராக வேலை செய்துமிருக்கிறார். அதன் மூலம், பிற தொழிலதிபர்களுடன் தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் கிட்டியது. ஆகவே, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எந்தளவு மோசமாக சுரண்டப் படுகிறார்கள் என்பதை அவர் நேரடியாக கண்டுணர்ந்திருப்பார்.

ஏழைப் பெற்றோரும், சிலநேரம் அவர்களின் வயதுக்கு வராத பிள்ளைகளும் கூட, ஒரே தொழிற்சாலையில் தொழிலாளர்களாக வேலை செய்வது அந்தக் காலத்தில் சர்வசாதாரணம். ஒரு பக்கம், அவர்களின் உழைப்பு முதலாளிகளால் சுரண்டப் படுகின்றது. மறுபக்கம், ஓய்வு நேரத்தில் அவர்களது வாழ்க்கை அவலம் நிறைந்ததாக உள்ளது. எங்கெல்ஸ் இந்த நூலில், இவ்விரண்டு விடயங்களையும் தனித்தனியாக பதிவு செய்துள்ளதுடன், அவற்றுக்கு இடையிலான தொடர்பையும் தெளிவாக விளக்கி உள்ளார். அந்த வகையில் தான் இது உலகப் புகழ் பெற்ற கிளாசிக்கல் நூல்களில் ஒன்று என இன்றைக்கும் போற்றப் படுகின்றது.

"இங்கிலாந்து உழைக்கும் வர்க்க மக்களின் நிலைமை" நூல் எழுதிய காலத்தில், எங்கெல்ஸ் இன்னும் "மார்க்சிஸ்டாக" மாறி இருக்கவில்லை. அதாவது, மார்க்ஸ், எங்கெல்ஸ் சேர்ந்து, கம்யூனிசத்தை அடைவதற்கான "மார்க்சியம்" என்ற சமூக விஞ்ஞானத்தை அதற்குப் பின்னர் தான் கட்டமைத்தார்கள்.

இளம் பராயத்திலேயே எங்கெல்ஸ் ஒரு கம்யூனிஸ்டாக மாறி இருந்தார். ஆனால், அந்தக் காலத்தில் இருந்த கம்யூனிஸ்டுகள் எல்லோரும் மார்க்சிஸ்டுகள் அல்ல! 19 ம் நூற்றாண்டில், ஜெர்மனியிலும், பிரான்சிலும், பொதுவுடமைக் கருத்துக்கள் பரவி இருந்தன. எங்கெல்ஸ் வாழ்ந்த காலத்தில், ஜெர்மனியில் மூன்று புரட்சிகள் நடந்துள்ளன.

அப்போது தான் ஜெர்மனி என்ற தேசம் உருவாகிக் கொண்டிருந்தது. ஆனால், இடதுசாரிக் கொள்கைகளை பின்பற்றியவர்கள், அரச அடக்குமுறை காரணமாக பிரான்ஸில் அகதித் தஞ்சம் கோரி இருந்தனர். அப்போது பிரான்ஸிலும் பொதுவுடைமைக் கொள்கைகள் பிரபலமாக இருந்தன.

19 ம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த தத்துவ அறிஞரான ஹெகல், மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற முற்போக்கு இளைஞர்களின் வழிகாட்டியாக இருந்தார். அவரைப் பின்பற்றிய பல இளைஞர்கள், தம்மை "இடது ஹெகலியன்" என்று அழைத்துக் கொண்டனர். எங்கெல்ஸ் இளம் வயதில் ஒரு இடது ஹெகலியனாக இருந்தார். அதனால், அவரது தந்தை குடும்பத்தோடு இங்கிலாந்துக்கு, மான்செஸ்டர் நகருக்கு குடிபெயர்ந்திருக்கலாம். ஜெர்மனியில் இருந்தால், தனது பையன் "உதவாக்கரை பயல்களுடன் சேர்ந்து கெட்டு குட்டிச் சுவராகி விடுவான்..." என்று எங்கெல்சின் தந்தை நினைத்திருப்பார்.

அதே நேரம், எங்கெல்ஸ் மான்செஸ்டரில் குடியேறுவது தனது கொள்கைக்கு சாதகமான விடயமாக நினைத்திருப்பார். அதாவது, அன்றைய ஐரோப்பாவில் இங்கிலாந்தில் தான் தொழிற்புரட்சி காரணமாக மிகப் பெரியதொரு சமூக மாற்றம் நடந்திருந்தது. தொழிற்சாலைகளும், பாட்டாளி வர்க்கமும் இங்கிலாந்தில் தான் அதிகளவில் இருந்தன. லண்டன் போன்று, மான்செஸ்டரும், தொழிற்துறை வளர்ச்சி கண்ட நகரமாக இருந்தது. ஆகவே, முதலாளித்துவ பொருளுற்பத்தி உச்சத்தில் இருந்த இங்கிலாந்தில் தான், அதன் விளைவால் உருவான பாட்டாளி வர்க்கத்தை சிறப்பாக ஆய்வு செய்ய முடியும் என்று எங்கெல்ஸ் நினைத்திருப்பார்.

இன்று பல இளைஞர்கள் மத்தியில் முற்போக்கான நூல்களை தேடி வாசிக்கும் பழக்கம் பெருகி வருகின்றது. மார்க்சியம் பற்றிய தேடலும் அதிகரித்து வருகின்றது. அவர்களில் பலர் என்னை தொடர்பு கொண்டு சில நூல்களை பரிந்துரை செய்யுமாறு கேட்கின்றனர். அந்த இளைஞர்களுக்கு உதவும் வகையில், இந்த நூல் விமர்சனத்தை எழுதி உள்ளேன்.


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
"இடதுசாரியம் ஓர் இளம்பருவக் கோளாறு" - லெனின்
என்ன செய்ய வேண்டும்? சமூக- ஜனநாயக திருத்தல்வாதத்திற்கு எதிராக...

Saturday, March 21, 2015

அமெரிக்காவின் வர்க்க அநீதி : வெள்ளையின மேலாண்மைக்கு பலியாகும் கருப்பின ஏழைகள்


  • அமெரிக்கா என்றதும் அது பொன் விளையும் சொர்க்க பூமியாகத் தான் பலரின் கண்களுக்குத் தெரிகின்றது. சொர்க்கத்தின் மறுபக்கமாக நரகம் இருப்பதை பலர் அறிந்திருக்கவில்லை. "பணக்கார நாடான" அமெரிக்காவில் பல இலட்சம் ஏழைகள் வாழ்கின்றனர் என்பது பலருக்குத் தெரியாது. பெரும்பான்மை ஏழைகள், கறுப்பினச் சிறுபான்மையினராக இருப்பதால், அது நிறவாதப் பிரச்சினையாகவும் உள்ளது.
  •  
  • தமது அன்றாட வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட முடியாத ஆயிரக் கணக்கான ஏழைகள், சிறைகளில் அடைத்து வதைக்கப் படும் உண்மை எத்தனை பேருக்குத் தெரியும்?உதாரணத்திற்கு,போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அபராதம் கட்ட முடியாத ஏழைகள், எந்தக் குற்றச்சாட்டும் இன்றி மாதக் கணக்காக சிறைகளில் வாடுகின்றனர்.
  •  
  • ஒரு "நாகரிகமடைந்த ஜனநாயக" நாடான அமெரிக்காவிலும், சட்டங்கள் எழுத்தில் மட்டுமே உள்ளன. நடைமுறையில் அவை பின்பற்றப் படுவதில்லை அல்லது அந்தச் சட்டங்கள் ஏழைகளுக்கு உதவுவதில்லை. ஒரு சராசரி ஆப்பிரிக்க நாட்டில் நடப்பதைப் போன்ற சிறைச்சாலை அவலங்களும், காவலர்களின் அத்துமீறல்களும் அமெரிக்காவிலும் நடக்கின்றன என்று சொன்னால் நம்ப முடியுமா? நீங்கள் நம்பத் தான் வேண்டும்.
  •  
  • நெதர்லாந்தில் வெளியாகும் பிரபல தினசரிப் பத்திரிகை de Volkskrant ல் பிரசுரமான ஆய்வுக் கட்டுரையை இங்கே சுருக்கமாக மொழிபெயர்த்துத் தருகிறேன். அமெரிக்காவின் இருண்ட பக்கத்தை அறிந்து கொள்வதற்கு இது உதவும்.

Zwart, arm, dus een prooi voor de witte macht 
(கருப்பு, வறுமை, அதனால் வெள்ளை அதிகாரத்திற்கு இரை )


மனித மலமும், இரத்தக் கறைகளும் சுவர்களில் படிந்துள்ள சிறைச்சாலைகள். அங்கிருக்கும் மனநோயாளிகளுக்கும், வயோதிபர்களுக்கும் மருந்து கிடைப்பதில்லை. பேன் தொல்லையால் ஏற்படும் சொறி நோய். எந்தக் காலத்திலும் சுத்தம் செய்யப்படாத கழிப்பறை. பெண்களின் மாதவிடாய் பட்டிகள், பற்பசை, சவர்க்காரம் என்பன தடைசெய்யப் பட்ட பொருட்களுக்குள் அடங்கும். எப்போது விடுதலையாவோம் என்று தெரியாமல், நிலத்தில் படுத்துறங்கும் ஏழை கறுப்பினக் கைதிகள்.

இந்தக் காட்சிகள் ஆப்கானிஸ்தான் நிலைமையை நினைவுபடுத்தலாம். ஆனால், அமெரிக்காவின் மிசூரி மாநிலத்தில், இன்றைய சென் லூயிஸ் நகரில் இதெல்லாம் நடக்கின்றன. "சுழல் கதவுப் பொறிமுறை" (சிறையில் இருந்து போவதும், பின்னர் திரும்பி வருவதுமான நிலைமை) என்று அழைக்கப் படும் இரக்கமற்ற அமைப்பினால் பாதிக்கப் பட்டவர்கள். பணமில்லாத காரணத்தால், அபராதம் கட்ட முடியாத அவலம், அவர்களை இங்கே கொண்டு வந்து சேர்க்கும். ஒரு பிரஜை ஏழையாக இருக்கும் ஒரே காரணத்தால் அவரைக் கைது செய்ய முடியாது என்று அரசமைப்பு சட்டம் தடை செய்திருக்கிறது. ஆனால், கைதுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

சென் லூயிஸ் நகருக்கு அருகில் உள்ள பெர்குசன் நகரில், ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான ஏழைகள் கூண்டுகளுக்குள் அடைக்கப் படுகின்றனர் என்று நீதி அமைச்சின் அரச அறிக்கை தெரிவிக்கின்றது. இதெல்லாம், பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதற்கான பொலிசின் கடமையுணர்வு காரணமாக நடக்கவில்லை. ஏழைகளை அடைத்து வைப்பதன் முழு நோக்கமும் இலாபம் சம்பாதிப்பது தான். சந்தையில் மாட்டுக்கு விலை பேசுவது போன்று, கைது செய்யப் பட்டவர்களின் உறவினர்கள் விடுவிப்பதற்காக நீதித் துறையுடன் பேரம் பேசுகின்றார்கள். அதனால், நகர சபை பல கோடி பணத்தை சம்பாதித்துள்ளது. ஆனால், ஏழைகளின் வாழ்க்கையை நிர்மூலமாக்கியுள்ளது.

வெள்ளையின, கருப்பின மக்களுக்கு இடையிலான வருமான ஏற்றத்தாழ்வு காரணமாக, பெருமளவில் கருப்பின மக்கள் தான் பாதிக்கப் படுகின்றனர். அதை விட, நிறுவனமயப் படுத்தப் பட்ட நிறவாதமும் ஒரு காரணம். நீதிபதி, நீதிமன்ற அலுவலர், வக்கீல், பொலிஸ்காரர்கள், சிறைக் காவலர்கள் எல்லோரும் பெரும்பாலும் வெள்ளயினத்தை சேர்ந்தவர்கள். அப்படி இல்லாவிட்டாலும், வேண்டுமென்றே "கடமையுணர்வு" காரணமாக கருப்பின பிரஜைகளை குறிவைக்கிறார்கள். கடன் கட்ட முடியாதவர்களின் சிறைச்சாலைகளுக்கு ஒரு தீர்வு காண வேண்டுமென்று பாதிக்கப் பட்ட மக்கள் பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அவையெல்லாம் நகர சபையின் கவனத்தைக் கவரவில்லை.

இவையெல்லாம், மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்க்கைக் கதையை சித்தரிக்கும் "செல்மா" (Selma) எனும் ஹாலிவூட் திரைப்படக் காட்சிகளை நினைவூட்டுகின்றன. ஐம்பது வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் எல்லா வெள்ளையின அரச அலுவலர்களும், கருப்பின பிரஜைகளை தேவையற்ற குப்பைகள் போன்று நடத்த முடிந்தது.

ஐம்பது வருடங்களுக்கு முன்னர், செல்மா பாலத்தில் நடந்த கருப்பின மக்களின் உரிமைப் போராட்டத்தை நினைவுகூரும் முகமாக, ஜனாதிபதி ஒபாமா அங்கே சென்றிருந்தார். அவர் ஒரு தடவை அயலில் உள்ள பெர்குசன் நகருக்கு சென்றிருந்தால், நிலைமைகளை நேரில் கண்டறிந்திருக்கலாம். ஏனென்றால், இன்றைக்கும் அங்கேயுள்ள சிறைகளில், வெள்ளையின காவலர்கள் கருப்பின கைதிகளைப் பார்த்து, "ஊத்தை விபச்சாரிகள்", "நாற்றம் பிடித்தவர்கள்" என்றெல்லாம் தண்டனைக்கு பயமின்றி திட்ட முடிகின்றது.

கடந்த பெப்ரவரி மாதம், பெர்குசன், ஜென்னிங்க்ஸ் நகரங்களை சேர்ந்த இருபது சமூக ஆர்வலர்கள், "Class action complaint" என்ற பெயரில் நீதிமன்றத்தை நாடினார்கள். சட்டவிரோதமான சுழல் கதவு பொறிமுறைக்கு முடிவு கட்டுவதும், சிறைகளில் அடைக்கப்பட்ட அனைத்துக் கைதிகளுக்கும் நஷ்டஈடு பெற்றுக் கொடுப்பதும் அந்த அமைப்பின் நோக்கமாக இருந்தது. 

வாஷிங்டன் நகரில் உள்ள "Equal Justice unde Law" அமைப்பின் வழக்கறிஞர் Alec Karakatsanis மேற்படி அமைப்பில் பங்களித்து வருகின்றார். ஹார்வார்ட் சட்டக் கல்லூரி நிதியுதவியும், நலன்விரும்பிகள் பலரின் நன்கொடைகளும் அந்த அமைப்பிற்கு கிடைத்துள்ளன. "இங்கே சர்வசாதாரணமாகப் போய் விட்ட மிலேச்சத்தனமான அத்துமீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர விரும்புகின்றோம்." என்று கூறினார் Alec Karakatsanis

அமெரிக்காவின் சனத்தொகையில் நூறில் ஒருவர் சிறையில் தடுத்து வைக்கப் பட்டுள்ளார். உலகக் கைதிகளின் சனத்தொகையில், கால்வாசிப் பங்கு அமெரிக்காவில் உள்ளது! உலகில் வேறெந்த நாட்டிலும் இந்தளவு பெருந்தொகையான கைதிகள் இல்லை! அவர்கள் பெரும்பாலும் ஏழைகள், அல்லது சிறுபான்மை இனத்தவராக இருக்கின்றனர்.

"கருப்பின மக்களை தூள் தூளாக அரைத்துத் தள்ளும் அமைப்பு" என்று ஒரு பொறியியல் அறிஞர் கூறினார். அது எப்படி என்பது, பெர்குசன் நகரில் நீதித்துறை நடத்திய ஆய்வில் இருந்து தெரிய வருகின்றது. 37 வயதான Keilee Fant எனும் பெண்ணின் கதையை உதாரணமாகக் காட்டலாம். அவர் தாதி உதவியாளராக வேலை செய்வதுடன், தன்னந்தனியாக பிள்ளைகளை வளர்க்கும் தாயும் ஆவார். அந்தப் பெண் வருடக் கணக்காக பத்து தடவைகளுக்கு மேல் கைது செய்யப் பட்டுள்ளார். அவர் செய்த குற்றம், போக்குவரத்து விதிகளை மீறிய தண்டப் பணம் கட்டாதது. 

2013 அக்டோபர், Keilee Fant தனது பிள்ளைகளை பாடசாலைக்கு கூட்டிச் சென்ற சமயம் கைது செய்யப் பட்டார். 300 டாலர் கட்டினால் விடுதலை செய்யப் படுவதாக தெரிவிக்கப் பட்டது. அவரிடம் அந்தளவு பணம் இல்லை. பணம் அறவிட முடியாத கட்டத்தில் விடுதலை செய்யப் பட்டார். ஆனால், சில தினங்களுக்கு பின்னர், அயலில் உள்ள இன்னொரு நகரில், அதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இறுதியாக பெர்குசன் சிறையில் அடைக்கப் பட்டிருந்த நேரம், அவர் கட்ட வேண்டிய அபராதத் தொகை 1400 டாலர்களாக உயர்ந்து விட்டிருந்தது. 

அடிக்கடி கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப் பட்டிருந்த காரணத்தால், அந்த அபலைப் பெண்ணின் வேலை பறிபோனது. அரசு உதவித் தொகையில் வாழ்க்கை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஒரு தடவை, அவரது தந்தையாரின் மரணச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியாதவாறு 48 நாட்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

சமூகத்தில் எந்த ஆய்வும் நடக்காத காரணத்தால், எப்படி இந்த அநியாயங்கள் நடக்கின்றன என்ற விபரம் யாருக்கும் தெரியாது. "நான் எத்தனையோ நீதிமன்றங்களை பார்த்து விட்டேன். எல்லா இடங்களிலும் ஒரே கதை தான் நடக்கிறது. அதாவது, எழுதப் பட்ட சட்டத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது." என்றார் ஒரு வழக்கறிஞர். 

பொலிஸ் யாரையும் எந்தக் காரணமும் இன்றி தடுத்து வைக்கவோ, சோதனையிடவோ முடியாது. ஆனால், அது ஒவ்வொரு நாளும் ஆயிரம் தடவைகளுக்கு மேல் நடக்கிறது. குற்றஞ்சாடப்பட்டவர் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள உரிமையுண்டு என்று அரசமைப்பு சட்டம் கூறுகின்றது. ஆனால், அது இலட்சக் கணக்கான வழக்குகளில் நடப்பதில்லை. ஏனென்றால், ஒரு குற்றம் பல மடங்காக பெருகுகின்றது. 

உதாரணத்திற்கு, போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்தில் 150 டாலர் தண்டம் அறவிடப் படலாம். ஆனால், உங்களால் அதைக் கட்ட முடியா விட்டால், அந்தத் தொகை 500 டாலர், சிலநேரம் ஆயிரம் டாலர் வரை உயரும்.

பெர்குசன் நகர பொலிஸ்காரர்கள், எத்தனை பேரை தடுத்து வைத்தார்கள், எத்தனை பேருக்கு அபராதம் விதித்தார்கள் என்பதைப் பொறுத்து அவர்களது தகைமை மதிப்பிடப் படுகின்றது. ஆகையினால், பொலிஸ்காரர்கள் முடிந்தளவு அதிகமான அளவு தடுத்து வைக்கவும், அபராதம் விதிக்கவும் முயல்கின்றனர். இது அவர்களுக்கு ஒரு விளையாட்டுப் போட்டி மாதிரி. இதனால் பாதிக்கப் படுவோர் பெரும்பாலும் கருப்பின மக்கள் தான். 

காவலரிடம் உங்களது பெயரை சுருக்கமாக சொன்னீர்களா? பிழையான தகவல் கொடுத்தமைக்காக அபராதம். உங்கள் காரை தெருவில் ஓரிடத்தில் நிறுத்தி விட்டு ஓய்வெடுத்தீர்களா? பெல்ட் போடாத குற்றத்திற்காக அபராதம். அபராதத் தொகை இன்னும் கட்டவில்லையா? கைது செய்யப் படுவதுடன் மேலதிகமாக ஆயிரம் டாலர் அபரதாம் விதிக்கப் படும். வறுமை காரணமாக அபராதம் கட்டுவதற்கு பணம் இல்லையா? கைது செய்யப் படுவீர்கள். 

வீட்டு வன்முறை காரணமாக போலிசை கூப்பிட்டீர்களா? வன்முறையால் பாதிக்கப் பட்ட நீங்களும் கைது செய்யப் படலாம். காரணம்? நீங்கள் அந்த வீட்டில் பதிவு செய்யப்படாத ஒருவராக இருக்கலாம். பூங்காவில் ஒரு மறைவிடத்தில் உங்களது குழந்தையை சிறுநீர் கழிக்க விட்டீர்களா? அபராதம். குற்றம்? நிர்வாணமாக நடந்தது அல்லது பிள்ளைகளை கவனிக்காமல் திரிய விட்டது. இதெல்லாம் நீதித்துறை ஆய்வறிக்கையில் இருந்து கிடைத்த சில உதாரணங்கள்.

"இதைப் பற்றியெல்லாம் கேள்விப்படும் பொழுது, சுத்த பைத்தியக்காரத்தனம் என்று தோன்றுகிறதா?"  என்று கேட்கிறார் வழக்கறிஞர் Alec Karakatsanis. " இது தான் அமெரிக்கா!ஏராளமான மனிதத் தன்மையற்ற  கொடுமைகள் , இந்த நாட்டில் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. உங்களது காற்சட்டை இடுப்பில் எந்தளவு உயரத்தில் இருக்க வேண்டும் என்பதில் இருந்து, யார் உங்கள் வீட்டில் தங்கக் கூடாது என்பது வரையில் ஏராளமான விதிகள். அநேகமாக, அர்த்தமற்ற, சட்டத்திற்கு விரோதமான விதிகள். ஆனால், இவையெல்லாம் ஏழைகள் மீது தான் நடைமுறைப் படுத்தப் படுகின்றன. அவர்களுக்கு வழக்கறிஞர்களும் கிடையாது. ஒரு சில அதிகாரிகளை மாற்றுவதால் மட்டும், இந்த ஊழல் மய அமைப்பிற்கு தீர்வு கண்டு விட முடியாது. நாங்கள் வறுமையை கிரிமினல்மயப் படுத்தி வைத்திருக்கிறோம்."

"செல்மா நிகழ்வுகள் நடந்த காலத்தில் கருப்பின மக்களுக்கு உரிமைகள் மறுக்கப் பட்டதைப் போன்ற நிலைமை தான் தற்போதும் உள்ளது." என்கிறார் ஹார்வி என்ற வழக்கறிஞர். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவெனில், தற்போது நிறைய சட்ட வல்லுனர்கள் உதவி செய்ய முன்வருகிறார்கள். கருப்பின மக்கள், இப்போதும் வெள்ளையின பொலிஸ்காரர்களை கண்டு அஞ்சுகிறார்கள். நிறவாதத்தை இலகுவில் வேறு பிரித்து அறிய முடியாது.

1865 ம் ஆண்டு, அடிமை ஒழிப்பிற்குப் பின்னரே, கருப்பின மக்களை கிரிமினல் மயப் படுத்தும் போக்கு ஆரம்பமானது. அதற்கு முன்னர், மிக மிகக் குறைந்தளவு கருப்பின கைதிகள் தான் சிறைகளில் அடைக்கப் பட்டிருந்தனர். ஆனால், 1870 ம் ஆண்டு அலபமா மாநிலத்தில், கருப்பின கைதிகளின் எண்ணிக்கை திடீரென 74 சதவீதமாக உயர்ந்தது. அதற்கு என்ன காரணம்? 

பெருந்தோட்டங்களிலும், தொழிற்சாலைகளிலும் வேலையாட்களுக்கு நிலவிய தட்டுப்பாடு காரணமாக, சிலர் இதனை ஒரு வியாபாரமாக செய்து வந்தனர். வெள்ளையின அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் கருப்பினத்தவர்களை பிடித்து கைதிகளாக அடைத்து வைத்து, பின்னர் தொழிலாளர்களாக விற்று வந்தனர். 

இந்த வணிகத்தை விரிவு படுத்தி இலாபகரமாக்கும் நோக்கில், பல தடைச் சட்டங்கள் கொண்டு வரப் பட்டன. அரசு அதிகாரிகளும், தொழிலதிபர்களும் கைதிகளின் இலவச உழைப்பினால் பெருமளவு இலாபம் சம்பாதித்தனர். அன்று அலபமா மாநிலம் தனது வருமானத்தில் பன்னிரண்டு சதவீதத்தை, சிறைக் கைதிகள் எனும் நவீன அடிமைகளிடம் இருந்து ஈட்டி வந்தது. 

Doughlas Blackmon எனும் ஊடகவியலாளர் எழுதிய "Slavery by Another Name" என்ற நூலில் அது குறித்த பல வரலாற்றுத் தகவல்கள் எழுதப் பட்டுள்ளன.

(நன்றி: de Volkskrant, 14-3-2015, மூலப் பிரதியின் தலைப்பு : "Zwart, arm, dus een prooi voor de witte macht")

Friday, January 15, 2010

ஏழைகளை சுரண்டி லாபமடைவது எப்படி? -JP Morgan

அமெரிக்க ஏழைகளுக்கு வழங்கப்படும் உணவு முத்திரைகளால் நன்மையடைவது யார்? உணவு முத்திரைகளை அச்சடித்து வழங்கும் JP Morgan வங்கி, பணப் புழக்கத்தை உருவாக்குகின்றது.

Food Stamp Profits?
Audio Report By Stacy Herbert & Max Keiser
How JP Morgan gets rich with increased poverty.

Wednesday, February 25, 2009

தென் அமெரிக்க ஏழைகளின் விடுதலை போராளிகள் FARC

கொலம்பியா நாட்டின் FARC போராளிகள் பயங்கரவாதிகளல்லர், அவர்கள் ஏழைகளின் விடுதலைப் போராளிகள். Al Jazeera ஊடகவியலாளர் Phil Rees, FARC இயக்கத்தினுள் இருந்து வழங்கும் உள்ளக அறிக்கை. சி.ஐ.ஏ. ஒரு காலத்தில் பயங்கரவாதிகள் கையேடு ஒன்றை பிரசுரித்ததை நினைவு கூறுகின்றார். ஒருவரின் பயங்கரவாதி இன்னொருவரின் விடுதலைப் போராளி எனற தத்துவத்தை நினைவு கூறுகின்றார்.


America's Backyard. 17 Feb 09 - Pt 1


Part 2: