Monday, September 24, 2012

சண்முகதாசனும், தமிழரின் சுய நிர்ணய உரிமையும் - சில குறிப்புகள்

எங்கள் ஊரில் எனது குடும்பம், ஒரு "தமிழ் தேசியக் குடும்பம்". தமிழ் தேசிய ஆதரவு என்பதை, முதலாளித்துவ ஆதரவு என்றும் வாசிக்க வேண்டும். அன்று எமது ஊரில் பல கட்சிகள் இயங்கிக் கொண்டிருந்தாலும், அவர்களது அரசியல் அபிலாஷைகளை பிரதிபலிக்கும், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தான் எப்போதும் ஓட்டுப் போடுவார்கள்.  எமது குடும்பம் மட்டுமல்ல, அயலில் வாழ்ந்த எமது உறவினர்களின் குடும்பங்களும் அப்படித் தான். இது ஒரு வகையில் அவர்களது  வர்க்க நிலைப்பாட்டையும் பிரதிபலித்தது. அவர்கள் தமது முதலாளித்துவ விசுவாசம் காரணமாக தமிழ் தேசியத்தை ஆதரித்தார்களா, அல்லது தமிழ் தேசிய உணர்வு காரணமாக முதலாளித்துவத்தை ஆதரித்தார்களா என்றெல்லாம் பகுத்தாராய்வது கடினமானது. கோழியில் இருந்து முட்டை வந்ததா, அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா, என்பது போல சிக்கலானது. 

நான் பருவமடையாத சிறுவனாக இருந்த காலங்களில், வீட்டுக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் அரசியல் பேசுவார்கள். அடிக்கடி எமது வீட்டில், அரசியல் ஆய்வுகள், கலந்துரையாடல்கள் நடக்கும். அடிக்கடி அவர்களது பேச்சில், கம்யூனிஸ்ட் சண்முகதாசனின் பெயர் அடிபடும். அன்று இலங்கை முழுவதுமிருந்த தேசியக் கட்சிகளை விமர்சிக்கும் பொழுது, சண்முகதாசன் என்ற பெயரையும் குறிப்பிடுவார்கள். தமிழர்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்ட, தமிழ் வாக்காளர்களின் ஓட்டுகளை மட்டுமே நம்பியிருந்த, தமிழர் விடுதலைக் கூட்டணியை விட்டு விடுவோம். அதைத் தவிர, அனைத்து தேசியக் கட்சிகளின் தலைவர்களாக சிங்களவர்களே இருந்தனர்/இருக்கின்றனர். விதிவிலக்காக சிலோன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக சண்முகதாசன் என்ற ஒரு தமிழ் பெயர் அடிபடுவதை என்னால் நம்ப முடியவில்லை. பல வருடங்களாக, அவர் "தமிழ்ப்பெயர் கொண்ட சிங்களவர்" என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். ("சிங்கள-தமிழ் இனவாதிகள்" ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், இன்றைக்கும் பல சிங்களவர்களுக்கு தமிழ் பெயர்களும், பல ஈழத் தமிழர்களுக்கு சிங்களப் பெயர்களும் உள்ளன. வீரவாகு, ஜெயக்கொடி போன்ற சிங்களப் பெயர்களை கொண்ட தமிழர்கள், எமது ஊரிலேயே இருந்தனர்.)

ஓரளவேனும் அரசியலை புரிந்து கொள்ளும் பக்கும் ஏற்பட்ட பின்னர் தான், சண்முகதாசன் ஒரு தமிழர் என்பது தெரிய வந்தது. இலங்கை முழுவதும் பிரதிநிதித்துவப் படுத்தும், சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட கட்சி ஒன்றில், ஒரு தமிழர் தலைவராக இருந்தார் என்பதை, இன்றைக்கும் பலர் நம்புவார்களா என்பது தெரியவில்லை. ஆனால், அந்த அதிசயம் நிஜத்தில் நிகழ்ந்திருந்தது. ஒரு வேளை, கம்யூனிஸ்ட் கட்சி என்பதால் தான் அது சாத்தியமானதா? பிற முதலாளித்துவக் கட்சியைப் போன்று, தமிழ் வாக்குகளை கவரும் தந்திரத்திற்காக, ஒரு தமிழரை தலைவராக்கியதாக கருத முடியாது. எமது ஊரிலேயே, சண்முகதாசனின் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு மிக மிகக் குறைவாக இருந்தது. வழக்கமாக தேர்தல் நடந்தால், தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு முதலிடமும், சுதந்திரக் கட்சி, ஐக்கிய  தேசியக் கட்சி போன்ற சிங்களப் பெரும்பான்மைக் கட்சிகளுக்கு  அடுத்தடுத்த இடங்களும் கிடைக்கும். கம்யூனிஸ்ட், சோஷலிசக் கட்சிகளுக்கு எமது தொகுதியில் வாக்குகள் குறையாகவே கிடைத்து வந்தது. இந்தளவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதித்துவப் படுத்த விரும்பிய, ஏழை விவசாயிகளும், தாழ்த்தப்பட்ட சாதியினரும், எமது தொகுதியில் தாராளமாகவே இருந்தனர். சாதி  ஒடுக்குமுறையும், அதற்கெதிரான சாதிய விடுதலைப் போராட்டமும் நடந்துள்ளது. எண்பதுகளில், நானே நேரடியாக கலந்து கொண்ட, எமது ஊரில் நடந்த போராட்டத்திற்கு, அறவழிப் போராட்டக் குழு என்ற என்.ஜி.ஒ. மட்டுமே வந்திருந்தது. அவர்களின் தயவில், சர்வதேச மன்னிப்புச் சபைக்கும் அறிவிக்கப் பட்டது. 

தோழர் சண்முகதாசன் பற்றிய கட்டுரையில், மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் தேவையற்றவையாக தோன்றலாம். தமிழ் தேசிய எழுச்சி அலைக்குப் பின்னர், இன்று ஒரு பாலர் பாடசாலை மாணவன் கூட, தோழர் சண்முகதாசன், அல்லது அவர் தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் "தவறுகள்" குறித்து விமர்சிக்கும் நிலைமை காணப்படுகின்றது. பெரும்பாலானோர் அதனை மார்க்சிய நிலைப்பாட்டில் இருந்து விமர்சிக்காமல், எதிர்ப்புரட்சி நடவடிக்கையாகவே செய்து வருகின்றனர். ஈழப் பிரச்சினையில், கம்யூனிஸ்டுகளின் தவறை விமர்சிக்கும் பலர், "தமிழ் தேசிய அரசியல் மட்டும் புனிதமானது" என்று வாதாடுவது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல.  அன்றைய ஈழத்து சமூகத்தை, வர்க்க நிலைப்பாட்டை ஆராயாமல், எழுந்தமானமாக கம்யூனிஸ்டுகள் மீது சேறள்ளிப் பூசுவது அபத்தமானது.  "குட்டி முதலாளிய வர்க்கப் பின்னணி கொண்ட, ஜே.வி.பி., புலிகள் போன்ற இயக்கங்கள் சாதித்துக் காட்டிய ஒன்றை, கம்யூனிஸ்டுகள் தவற விட்டிருந்தனர். இலங்கை முழுவதும், கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆயுதப் போராட்டம் நடந்திருந்தால், இன்று நிலைமை வேறு விதமாக இருந்திருக்கும்." இவ்வாறு சில கம்யூனிஸ்ட் அனுதாபிகளே குற்றஞ் சாட்டுகின்றனர். ஆயுதப் போராட்டம், எப்போது, எப்படி நடத்தப் பட வேண்டும் என்பது கட்சியின் முடிவு சார்ந்த விடயம். ஆயுதப் போராட்டம் நடத்த சாதகமான சூழ்நிலை, பின்னைடைவுகள் இவற்றை எல்லாம் சரியாகக் கணிக்காமல், வீணாக உயிர்களை பலி கொடுக்க முடியாது. 

தோழர் சண்முகதாசன் இன்றைக்கும் சர்வதேச மட்டத்தில் போற்றப்படும் ஒரு தலைவராக இருக்கிறார். அவரது எழுத்துக்கள் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு, இன்றைக்கும் வாசிக்கப் படுகின்றன. சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கம், அல்லது மூன்றாம் அகிலம் பற்றிய வரலாற்றில், தோழர்  சன்முகதாசனுக்கும் முக்கிய இடம் உண்டு. இருபதாம் நூற்றாண்டு உலக சரித்திரத்தில், ஒரு தமிழனின் பெயர் இடம்பெற்றிருக்கிறது என்றால், அது சண்முகதாசனின் பெயராக இருக்கும். செஞ்சீனா சென்று மாவோவை சந்தித்த முதலாவது தமிழரும் அவரே. அப்படிப்பட்ட தமிழரை நினைத்து தமிழ் தேசியவாதிகள் யாரும் பெருமைப் படுவதில்லை. அதற்குக் காரணம், சண்முகதாசன் ஒரு கம்யூனிஸ்ட் என்பது மட்டுமே. இதுவே ஒரு தமிழ்த் தலைவர், அமெரிக்கா சென்று கென்னடியை சந்தித்திருந்தால், அவரின் புகழ் இன்றைக்கும் பரப்பப் பட்டிருக்கும். (நேதாஜி ஹிட்லரை சந்தித்ததை நினைவுகூர்ந்து மகிழும் தமிழர்கள் பலரை நீங்களும் கண்டிருப்பீர்கள்.) 

இலங்கை வரலாற்றில், தமிழ்த் தேசியம், இரு மொழிக் கொள்கை போன்றவற்றை பற்றி முதன் முதலாக பேசத் தொடங்கியவர்கள் இடதுசாரிகள் தான். அப்போதெல்லாம், தமிழ் பூர்ஷுவாக் கட்சிகளுக்கு அந்த சிந்தனையே கிடையாது. தமிழ் பூர்ஷுவா வர்க்கம் கொழும்பு நகரில் உறுதியாக கால் பதித்து நின்ற காலத்தில், தமிழீழம் என்ற கோட்பாடு,  அவர்களின் இருப்பிற்கே உலை வைத்திருக்கும். பூதாகரமாக வளர்ந்து கொண்டிருந்த சிங்களப் பேரினவாதத்தின் மேலாதிக்கம், பூர்வீகத் தமிழர்களை வட-கிழக்கு மாகாண எல்லைகளுக்குள் முடங்கப் பண்ணியது. அதற்குப் பிறகு தான், அதாவது சிங்கள பேரினவாதம் ஒதுக்கித் தந்த பிரதேசங்களை முன் வைத்து, தமிழீழக் கோரிக்கை பிறந்தது. அதே போல, மொழிப்பிரச்சினை தோன்றிய காலத்தில், தமிழ் பூர்ஷுவா வர்க்கம் "ஆங்கில மொழியின் உரிமை" பற்றி பேசிக் கொண்டிருந்தது. இடதுசாரிகள் மட்டுமே, சிங்களம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளையும் உத்தியோகபூர்வ மொழிகளாக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தார்கள்.

தமிழ் பூர்ஷுவா வர்க்கத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய, இனவாரியான தரப்படுத்தல், தமிழீழ ஆயுதபோராட்டத்திற்கு வழிவகுத்தது. அதனால், இன ரீதியான தரப்படுத்தலே, இனப்பிரச்சினையின் தோற்றுவாய் என்பது போன்று, இன்றைக்கும் தமிழ் மத்திய தர வர்க்கம் பரப்புரை செய்து கொண்டிருக்கிறது. உள்ளூர் முதலாளிகளும், அரச முதலாளிகளும் சேர்ந்து அரசமைத்த சிறிமாவோவின் அரசாங்கத்தில், கம்யூனிச, சோஷலிச கட்சிகளும் அங்கம் வகித்தன. அதனால், "இடதுசாரிகளும் பேரினவாதத்திற்கு துணை போனார்கள்" என்பது ஒரு பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு. அநேகமாக, கம்யூனிச எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருந்தே, அனைத்து இடதுசாரிகளையும் ஓரங்கட்டும் நோக்கில் இவ்வாறான பிரச்சாரங்கள் நடத்தப் படுகின்றன. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் போன்ற தமிழ் தேசியக் கட்சிகளும், பேரினவாத அரசாங்கத்திற்கு துணை போயுள்ளன. அதே நேரம், ஈரோஸ், ஈபிஆர்எல்ப் போன்ற, மார்க்சிய லெனினிசத்தை அடிப்படை கொள்கையாக கொண்ட இயக்கங்கள், ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நடத்தியுள்ளன. ஆகவே, "இடதுசாரிகள் எல்லோரும் பேரினவாத அரசை ஆதரித்தார்கள்"  என்பது போல நடத்தப் படும் பரப்புரை உள்நோக்கம் கொண்டது. கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரங்களில் பிரதானமானது.

தோழர் சண்முகதாசன் பற்றியும், உட்கட்சி ஜனநாயகம் பற்றியும், கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களே விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். அதிலே தமிழரின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடும் ஒன்று. தமிழரை ஒரு தேசிய இனமாக வரையறுத்து, சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்ட பிரிவினர், இப்பொழுதும் தனிக் கம்யூனிஸ்ட் கட்சியாக இயங்கிக் கொண்டிருக்கின்றனர். இது பற்றிப் பின்னர் பார்ப்போம். இப்பொழுது, இனப்பிரச்சினையின் தோற்றுவாய் என்று, தமிழ் பூர்ஷுவா வர்க்கம் முதன்மைப் படுத்தும், தரப்படுத்தல் தோன்றிய காலத்தை மீளாய்வு செய்வோம். 1971 ம் ஆண்டு, ஜேவிபி கிளர்ச்சியுடன் அந்தப் பிரச்சினை ஆரம்பமாகியது. சிங்கள இளைஞர்களின் எழுச்சியும், அதன் பிறகு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளும் பிற்காலத்திய தமிழீழப் போராட்டத்திற்கு வித்திட்டது. 

அதாவது, ஒரு நோயை குணப்படுத்துவதற்காக கொடுத்த மருந்து, பக்க விளைவாக இன்னொரு நோயை ஏற்படுத்தி உள்ளது. ஒரு முதலாளித்துவ அரசினால், சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது. சிலோன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப் பட்டு, பிரிந்து சென்ற ரோகன விஜேவீர தலைமையிலான குழுவினர் ஒரு கிளர்ச்சியை வெற்றிகரமாக நடத்தி இருந்தனர் என்றால், அதற்கான சமூக அடித்தளம் அங்கே இருந்திருக்க வேண்டும். சிங்கள மொழியில் கல்வி கற்று, அதனால் வேலை வாய்ப்பில்லாமல் கஷ்டப்பட்ட இளைஞர்கள், ஜேவிபியின் புரட்சிக்கான அறைகூவலுக்கு செவி மடுத்ததில் வியப்பில்லை. ஜேவிபி மார்க்சிய லெனினிசம் பேசினாலும், அது விவசாயிகள், தொழிலாளர் மத்தியில் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை. ஆனால், குட்டி முதலாளித்துவ சிந்தனை கொண்ட, குறைந்தது பத்தாம் வகுப்பை பூர்த்தி செய்திருந்த இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது. 

ஸ்ரீலங்கா அரசு, தனது இருப்பை காப்பாற்றிக் கொள்வதற்காக, சிங்கள இளைஞர்களை திருப்திப் படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தது. அதற்காக இரண்டு தீர்வுத் திட்டங்களை முன்மொழிந்தது. ஒன்று, பல்கலைக்கழக நுழைவுக்கான தேர்வில் இனவாரியான தரப்படுத்தல். போட்டி நிறைந்த முதலாளித்துவ உலகில், உயர் கல்வி வாய்ப்புகளும் மட்டுப்படுத்தப் பட்டிருக்கும். அரசு தரப்படுத்தல் மூலம், பெருமளவு சிங்கள இளைஞர்கள் உயர் கல்வி பெறவும், அதனால் தொழிற் சந்தையில் இலகுவாக நுழையவும் வழியேற்படுத்திக் கொடுத்தது. சிங்கள குட்டி முதலாளித்துவ வர்க்கம், இதனை விரும்பி ஏற்றுக் கொண்டிருக்கும் என்பதை இங்கே விளக்கத் தேவையில்லை. ஆனால் அரசு, சிறுபான்மை இனமான தமிழ் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை பகைத்துக் கொண்டது. அவர்களது எதிர்ப்புணர்வு வளர்ச்சி அடைந்து, தனிநாடு கோரும் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது. 

எரியும் நெருப்பில் எண்ணை வார்ப்பது போல, அரசு இரண்டாவது தீர்வுத் திட்டத்தை கொண்டு வந்தது. பாதுகாப்புப் படைகளில் பெருமளவு சிங்கள வாலிபர்களை சேர்க்கத் தொடங்கியது. இதனால் இராணுவம் சிங்கள மயமாகியது. சிங்கள இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்குவது ஒரு நோக்கமாக இருந்தாலும், வருங்கால கிளர்ச்சியை நசுக்குவதற்கான முன்னேற்பாடாகவும் இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இடம்பெற்றது. மறு பக்கத்தில், தேசிய இனப்பிரச்சினை வளர்ச்சியடைந்த காலத்தில், சிங்கள இராணுவத்தை கொண்டு தமிழர்களை ஒடுக்குவது இலகுவாக இருந்தது. இந்தக் கட்டத்தில், சன்முகதாசனோ, அல்லது கம்யூனிஸ்ட் கட்சியோ எத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்? தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி இருக்க வேண்டுமா? அல்லது இலங்கை முழுவதற்குமான வர்க்கப் போராட்டத்தை நடத்தி இருக்க வேண்டுமா?

ஒரு கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ் தேசியவாத போராட்டத்தை முன்னின்று நடத்த வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கப் போவதில்லை. அப்படியே நடத்தி இருந்தாலும், தமிழ் தேசியத்திற்குப் பின்னால் அணிதிரண்ட அளவிற்கு மக்கள் வந்திருக்க மாட்டார்கள். ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நடந்த சாதிய விடுதலைப் போராட்டத்தில், கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு காரணமாக, உயர்சாதியை சேர்ந்த பலர் அந்தக் கட்சி மீது வெறுப்புக் கொண்டிருந்தனர். குறிப்பிட்டளவு ஏழை விவசாயிகள் ஆதரித்த போதிலும், "ஆண்ட பரம்பரை நாம்"  என்ற இனப் பெருமிதம், அவர்களை தமிழ் தேசியக் கட்சிகளின் பின்னால் அணி சேர்த்தது. இலங்கையில், பெரும்பான்மையான தமிழர்கள் யாழ் குடாநாட்டில் வாழ்கின்றனர். அந்தப் பிரதேசத்தில், உயர் சாதியான வெள்ளாளர்கள், 40% - 50% பெரும்பான்மையைக் கொண்டுள்ளனர். அப்படியான சமுதாயத்தில், அவர்களின் சாதிய, வர்க்க நலன்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சி அல்லது இயக்கம் பிரபல்யம் அடைவதில் வியப்பில்லை. தமிழ் சமூகம் பற்றி குறைந்த பட்ச ஆய்வு எதையும் செய்யாமல், "தேசிய இனப் பிரச்சினையில் இடதுசாரிகள் எதையும் செய்து கிழிக்கவில்லை"  என்று வெற்றுக் கூச்சல் போடுவதால் பயனேதும் இல்லை.  

தோழர் சண்முகதாசன், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்த காலத்தில், அவர் தமிழரை ஒரு தனியான தேசிய இனமாக ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழரின் சுய நிர்ணய உரிமை, அவரைப் பொறுத்த வரையில் ஒரு பேசுபொருளாக இருக்கவில்லை. (பிற்காலத்தில், காலவோட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது.) இதனை சண்முகதாசன் என்ற தனி மனிதனின் குறைபாடாக கருதலாமே தவிர, கட்சியின் நிலைப்பாடாக கருத முடியாது. ஏனெனில், தமிழரை தேசிய இனமாக வரையறுத்து, சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொண்ட தமிழ் உறுப்பினர்கள், கட்சியில் இருந்து பிரிந்து சென்றார்கள். அதுவும் 1978 ம் ஆண்டே அந்தப் பிளவு ஏற்பட்டது. ஆரம்பத்தில், சிலோன் கம்யூனிஸ்ட் கட்சி-இடது என்ற பெயரில் இயங்கி, பின்னர் புதிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் மாற்றம் செய்து கொண்டது. தற்பொழுது புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சி என்று இயங்கி வருகின்றது. அந்தக் கட்சியில் முழுக்க முழுக்க தமிழர்களே உறுப்பினர்களாக இருப்பது மட்டுமல்ல, தமிழ் பிரதேசங்களில் மட்டுமே செயற்பாடுகளை கொண்டுள்ளது. 

ஒரு நாட்டில்  இனப்பிரச்சினை கூர்மையடையும் பொழுது, முற்போக்காளர்களும், புத்திஜீவிகளும் கூட பிரிந்து செல்கின்றனர். இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. இதிலே வேடிக்கை என்னவென்றால், சண்முகதாசன் என்ற தமிழரை தலைவராக ஏற்றுக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சியின் பிரிவு, இன்று சிங்களப் பிரதேசங்களில் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்று, சிங்கள உறுப்பினர்களை மட்டுமே கொண்ட, சிலோன் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) என்ற பெயரில் இயங்கிக் கொண்டிருக்கும் கட்சி, தமிழரின் சுயநிர்ணய உரிமை விடயத்தில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. எனக்குத் தெரிந்த வரையில், யாழ்ப்பாணத்தில் அமைப்பாகாமல் உதிரிகளாக இருக்கும் முன்னாள் உறுப்பினர்கள் சிலர், அந்தக் கட்சியின் நிலைப்பாட்டை ஆதரிக்கின்றனர்.   

சண்முகதாசன் இறுதிக் காலத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து எழுதியதாகவும், ஒரு கட்டத்தில் புலிகளின் பங்களிப்பை கூட பாராட்டியதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.  தோழர் சண் அவர்களின் எழுத்துக்களில் இருந்து, சில மேற்கோள்களை எடுத்துக் காட்டலாம். தேசிய இனப்பிரச்சினை, ஆரம்பத்தில் சிங்கள-தமிழ் பூர்ஷுவாக்களின் முரண்பாடாக உருவான போதிலும், இன்று அது அனைத்துப் பிரஜைகளையும் பாதிக்கின்றது. முப்பது வருடங்களுக்கு முன்னர், பிரதேச வாரியாக பிரிந்திருந்த தமிழர்களை, தமிழ் தேசியம் ஒன்று சேர்த்திருப்பதை மறுக்க முடியாது. மலையக, கொழும்புத் தமிழர்களை புலிகள் தமது போராட்டத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. (அதாவது அவர்களது வாழ்விடம் தமிழீழத்திற்குள் அடங்கவில்லை.) இருந்தாலும், அந்த மக்கள் புலிகளையும், தமிழ் தேசிய ஆயுதப் போராட்டத்தையும் ஆதரிக்கின்றனர். (வன்னியில் வாழும் மலையகத் தமிழர்கள் புலி உறுப்பினர்களாக இருந்துள்ளமை வேறு விடயம். அவர்களை வன்னி மக்களாக கருதப்பட வேண்டும்.)

இலங்கையின் வரலாற்றில் என்றுமில்லாதவாறு, அதிகளவு தமிழர்கள் கொல்லப்பட்டதும், சொத்தழிவு ஏற்பட்டதும் 1983 கலவரத்தின் போது தான். 83 கலவரம் ஏற்படுத்திய அதிர்வலைகள் காரணமாக, தமிழ் தேசியப் போராட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. சிங்கள பேரினவாதத்தின் பயங்கரத்தை அனுபவித்த, கேள்விப்பட்ட மக்கள், ஈழத்தை ஆதரித்ததில் வியப்பில்லை. எனது அரசியல் வாழ்வு கூட, தமிழ் தேசியத்துடன் தான் ஆரம்பித்தது. கொழும்பு நகரில், 83 கலவரத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடத்தில் தான் எமது வீடும் இருந்தது. தோழர் சன்முகதாசனும், 83 கலவரத்தை நேரில் பார்த்திருந்ததால், ஈழ விடுதலைப் போராட்டத்தை நிபந்தனையுடன் அங்கீகரிக்கும் நிலைக்கு வந்திருந்தார்.

குறிப்பாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்குப் பிறகு தான், தோழர் சண்முகதாசன் தேசியவாதப் புலிகளை ஆதரித்து எழுதியுள்ளார். அதனை மேற்கோள் காட்டும் தமிழ் தேசியவாதிகள் சிலர், சண்முகதாசன் நிபந்தனையின்றி புலிகளை ஆதரித்தது போல திரித்துக் கூறுகின்றனர். ரவி வைதீஸ்பரா எழுதிய ஆய்வுக் கட்டுரை, சண்முகதாசனின் தமிழ் தேசியம் பற்றிய நிலைப்பாட்டை விரிவாக ஆராய்ந்துள்ளது. (Sanmugathasan, the Unrepentant Left and the Ethnic Crisis in Sri Lanka,  by Ravi Vaitheespara)  அந்தக் கட்டுரையாளரும், சண்முகதாசனின் மன மாற்றத்தை ஆச்சரியமாகப் பார்க்கின்றார். நான் முன்னர் குறிப்பிட்ட படி, "தமிழர் ஒரு தேசிய இனம், சுய நிர்ணய உரிமை" போன்றவற்றில் சண்முகதாசனின் நிலைப்பாடு மாறியிருக்கின்றதா என்பதே முக்கியமானது. 

இன்றைக்கும் பல சர்வதேச நாடுகளின் இடதுசாரிக் கட்சிகள், புலிகளை ஆதரிக்கின்றன. அதற்காக, புலிகள் செயல்களை எல்லாம் நிபந்தனை இன்றி ஆதரித்தார்கள் என்று பொருள் கொள்ள முடியாது. தோழர் சன்முகதாசனும், அவ்வாறான நிலைப்பாட்டில் இருந்து தான் எழுதியுள்ளார். இலங்கைப் பிரச்சினைகளில் இந்தியா தலையிடுவதையும், மேலாண்மை செலுத்துவதையும், அவர் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து வந்ததுடன், அதற்கு ஆதரவாக நடந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.  "இலங்கையின் திரிபுவாதிகள் போன்று, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஜேஆர்-ராஜீவ் ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளது மட்டுமல்ல, அதனை கடுமையாக அமுல்படுத்தக் கோருகின்றன. சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த தமிழ் மக்களின் நெருக்கடி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்ட அட்டூழியத்தை கண்டிக்கவுமில்லை." (இலங்கைப் பிரச்சினையும், இந்திய கம்யூனிஸ்டுகளும், பக்கம் 5 -6 )  

இந்திய இராணுவத்திற்கு எதிராக, விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதப் போராட்டம் நடத்தியதை, தோழர் சண்முகதாசன் வரவேற்றுள்ளார். அதே நேரம், ஈபிஆர்எல்எப், ஈஎன்டீஎல்எப் போன்ற இயக்கங்கள் இந்திய இராணுவத்தின் கூலிப்படையாக செயற்படுவதை கடுமையாக சாடி உள்ளார். சண்முகதாசன், "இடதுசாரி ஈபிஆர்எல்எப்" பினை நிராகரித்து, "தேசியவாத புலிகளை" தெரிவு செய்ததை, ஒரு ஆச்சரியத்திற்குரிய விடயமாகப் பார்க்கின்றனர். (புலி ஆதரவு தமிழ் தேசியவாதிகளும் அதனை மேற்கோள் காட்டுகின்றனர்.) ஈபிஆர்எல்எப் போன்ற, சில "இடதுசாரி" ஈழ விடுதலை இயக்கங்கள், மார்க்சியத்தை உதட்டளவில் பேசிக் கொண்டிருந்த குறுந்தேசியவாத இயக்கங்கள் என்பதை, தோழர் சண்முகதாசன் சரியாகக் கணித்து வைத்திருந்தார். (ஈஎன்டீஎல்எப்  க்கும் இடதுசாரியத்திற்கும் சம்பந்தமே கிடையாது.)

ஆரம்பத்தில் இருந்தே இந்தியாவின் தயவில் தங்கி இருந்த இயக்கங்கள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பின்னர், இந்திய இராணுவத்தின் கூலிப் படையாக மாறியதை புரிந்து கொள்வது கடினமானதல்ல. "நீங்கள் யார் கொடுத்த ரொட்டியை சாப்பிடுகிறீர்களோ, அவர்களது வார்த்தைகளை பேசுவீர்கள்"  என்பது ஒரு ஐரோப்பியப் பழமொழி. ஆகவே, "இடதுசாரி ஈழ விடுதலை இயக்கங்கள்", மார்க்ஸியம் பேசுவதாலேயே அவற்றை ஆதரிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பேதைமை. அதே நேரம், புலிகள் தேசியவாதம் பேசினாலும், இந்திய இராணுவத்தை எதிர்த்துப் போராடும் பொழுது முற்போக்கான பாத்திரம் வகிக்கின்றனர். இந்தியாவின் வல்லாதிக்கத்தை எதிர்ப்பதும், புலிகளின் போராட்டத்தை ஆதரிப்பதும், இரண்டும் ஒன்று தான். யாழ்ப்பாணத்தில் சாட்டர்டே ரிவியூ என்ற ஆங்கில வார இதழை நடத்திக் கொண்டிருந்த, சிங்கள இடதுசாரி பத்திரிகையாளர் காமினி நவரட்ன கூட, புலிகளின் போராட்டத்தை முழுமையாக ஆதரித்து எழுதி வந்தார். உலகம் முழுவதும், கம்யூனிச கட்சிகள் இஸ்லாமியவாத ஹமாசின் போராட்டத்தை ஆதரிக்கின்றன. அதற்காக, கம்யூனிசக் கட்சிகள் இஸ்லாமியவாதத்தை அங்கீகரித்து விட்டன என்று வாதிட முடியாது. 

ஈழ விடுதலைக்காக ஆயுதமேந்தி போராடிய இயக்கங்கள், முழுமையான விடுதலை இயக்கங்களாக மாற வேண்டுமென்ற அவாவை, தோழர் சண்முகதாசன் வெளிப்படுத்தி உள்ளார். "விடுதலை இயக்கங்கள்  ஆயுதம் தூக்கிய பின்னர் தான், மார்க்சியத்தை தேடிக் கற்றுக் கொண்டன." என்று தனது விமர்சனத்தை தொடங்குகிறார். "இந்தியாவின் உதவியில் தங்கியிருந்து போராடத் தொடங்குவது, இறுதியில் விடுதலை இயக்கங்களின் அழிவுக்கு வழிவகுக்கும். இந்தியா இலங்கையை சீரழித்து, அங்கு தனது மேலாண்மையை நிறுவத் துடிக்கின்றது." என்று தோழர் சண்முகதாசன் தீர்க்கதரிசனத்துடன் கூறிய வார்த்தைகளை, காலம் சரியென மெய்ப்பித்தது.

ஈழ விடுதலை இயக்கங்களின் தந்திரோபாய தவறுகள் குறித்து, சண்முகதாசன் தெரிவித்த கருத்துக்கள் : "ஆரம்பத்தில் இருந்தே ஆயுதமேந்திய போராளிக் குழுக்கள்  தந்திரோபாய தவறுகளை விட்டனர். முதலில் அவர்கள் ஐக்கியப் பட்டிருக்கவில்லை. ஐந்து பிரதானமான குழுக்கள் முளைத்ததுடன், அவை ஒன்றோடொன்று மோதிக் கொண்டன. இவர்களுக்கு இடையிலான ஐக்கியமின்மை காரணமாக, இந்தியப் புலனாய்வுத் துறை (RAW ) அவர்கள் மீது செல்வாக்கு செலுத்த முடிந்தது. ஒன்றை மற்றொன்றுக்கு எதிராக நிறுத்தி, எல்லாக் குழுக்களையும் பலவீனப் படுத்த முடிந்தது. இரண்டாவதாக, மக்கள் யுத்தம் எவ்வாறு நடத்தப் பட வேணுமென்று மாவோ போதித்த பாடங்களை கற்றுக் கொள்ளவில்லை. மக்களுக்கு ஆயுதங்களை வழங்கி, அவர்களையும் மக்கள் யுத்தத்தில் பங்கு பெற வைக்கவில்லை. ஒரு சிலர் வாயளவில் மார்க்சிய சுலோகங்களை உச்சரித்த போதிலும், போராளிகளின் அரசியல் அறிவு மிகவும் தாழ்வாக இருந்தது. துப்பாக்கி கட்சியை வழிநடாத்த அனுமதிக்கக் கூடாது. கட்சி எப்போதும் துப்பாக்கியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற மாவோவின் கூற்றை எதிர்மாறாக செயற்படுத்தினார்கள்." (N Sanmugathasan, ‘Get the Indian Troops Out of India! Recognise the Right of Self Determination of the Tamil People’, unpublished essay, pp 4-6.)

உழைக்கும் மக்களை சுரண்டும் போரானது, இறுதியில் சிங்கள, தமிழ் உழைக்கும் மக்களின் இணைவுக்கு வழிவகுக்கும் என்று தோழர் சண்முகதாசன் எதிர்வு கூறுகின்றார். ஏனென்றால், "கோடிக் கணக்கான பணத்தை வாரியிறைத்து, மக்களுக்கு எதிராக நடத்தப் படும் போருக்கான செலவு, ஜேஆரின், அல்லது லலித் அத்துலத்முதலியின் பாக்கெட்டில் இருந்து செலவிடப் படவில்லை. சிங்கள, தமிழ் உழைக்கும் மக்கள், போருக்கான விலையை செலுத்துகிறார்கள். இன்றுள்ள நவ-காலனிய ஆளும் கட்சிகளினால் ஒரு தீர்வைக் கொண்டு வர முடியாது. சிங்கள, தமிழ் உழைக்கும் வர்க்க மக்களை ஒன்று சேர்ப்பதன் மூலமே, இனப்பிரச்சினைக்கான தீர்வு சாத்தியமாகும். தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை, சிங்கள மக்கள் ஏற்றுக் கொண்டால், தனி நாடு பிரிவதற்கான தேவை இல்லாமல் போகும்."  சுய நிர்ணய உரிமைக்கான அங்கீகாரம், ஜனநாயகப் புரட்சியின் ஓரங்கமாக இருக்க வேண்டும். அதற்காக சிங்கள, தமிழ் உழைக்கும் மக்களையும், புத்திஜீவிகளையும் வென்றெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார். 

இனங்களின் சுயநிர்ணய உரிமை பற்றி பேசிய லெனின், ஸ்டாலின் ஆகிய மார்க்சிய ஆசான்கள் கூட, பாட்டாளிவர்க்க தலைமையின் முக்கியத்துவத்தை உணர்த்தி வந்துள்ளனர். கடந்த சில வருடங்களாக, உலகம் முழுவதும் மீண்டும் இடதுசாரி அலை வீசுவதால், தமிழ் மக்கள் மத்தியிலும் மார்க்ஸியம் குறித்த தேடுதல் அதிகரித்து வருகின்றது. இந்த தருணத்தில், தமிழ் குட்டி முதலாளித்துவ தேசியவாதிகள், மார்க்சியத்தை தமது வர்க்க நலன்களுக்காக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். நவ காலனிய ஆளும் கட்சிகளால் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்று, தோழர் சண் கூறினார். அதே போல, சிங்கள-தமிழ் பூர்ஷுவாக்களும்  பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை என்பதை, நாம் கடந்த கால அனுபவங்களின் ஊடாக கண்டுள்ளோம். சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை, ஈழத் தமிழ் உழைக்கும் வர்க்கம் தலைமை தாங்கி நடத்த வேண்டும். அப்பொழுது, சிங்கள உழைக்கும் வர்க்கமும் அவர்களின் போராட்டத்தை ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். 


(இந்தக் கட்டுரை எழுதத் தூண்டிய தோழர் பாலனுக்கும், தேவைப்பட்ட தகவல்களை தந்துதவிய தோழர் செந்தில்வேலுக்கும் எனது நன்றிகள்.)

5 comments:

Kaththukutti Communist said...

தமிழர் தன் நிர்ணயம் கேட்கவில்லையா? முதலித்துவ வர்க்கம் இலங்கை உடன் சேர்ந்து வாழ ஆசைபட்டர்களா? நீங்கள் குறிப்பிடு போல இடது சாரிகள் தான் தன் நிர்ணயம் முதலில் கேட்டர் எனில் இந்திய அல்லது சீன பொதுயுடைமை கட்சி உதவி கேட்கவில்லையா? அல்லது அவர்கள் உதவி செய்ய முற்படவில்லையா?
என் சிறிய சந்தேகம்

Kaththukutti Communist said...

விடுதலை புலி உறுப்பினர் உடன் முகநூலில் ஒரு முறை உரையாடினேன்.
தலைவர்(பிராபகரன்) அவர் விரும்பினார் என்றும், ஆனால் அது இப்போது சாத்தியம் இல்லை என்று கூறினார்.உங்கள் பார்வையில் ஈழம் பற்றி.......

Kalaiyarasan said...

Harigaran, இவை எல்லாம் வரலாற்றில் மறைக்கப் பட்ட உண்மைகள். இனப்பிரச்சினையின் ஒரு தீர்வாகத் தான் ஈழக் கோரிக்கை வந்தது. ஆனால், அது மட்டுமே இனப்பிரச்சினை அல்ல. ஈழம் கிடைத்து விட்டால், அதனுடன் இனப்பிரச்சினை தீரப் போவதுமில்லை. ஈழக் கோரிக்கையானது, தமிழ் மத்திய தர வர்க்கம் தமிழ் பிரதேசத்தின் அரசியல் அதிகாரத்தை தான் கையில் எடுக்க விரும்புகிறது என்பதன் அறிகுறி. அந்த ஈழம் இன்னொரு குட்டி சிறிலங்கா அரசாகத் தான் இருக்கும். தமிழரசுக் கட்சி முதல், புலிகள் வரை அதனை மறைக்கவில்லை. சிங்கள அரசு எந்தெந்த அதிகாரங்களை வைத்திருக்கின்றதோ, அதே போன்று தமிழ் அரசும் இருக்க வேண்டுமென விரும்பினார்கள். உதாரணத்திற்கு, சிங்கள பொலிஸ் = தமிழ் பொலிஸ், சிங்கள இராணுவம் = தமிழ் இராணுவம், சிங்கள கடற்படை = தமிழ்க் கடற்படை.... இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இலங்கை வரலாற்றில், கம்யூனிஸ்ட்/சோஷலிசக் கட்சிகள் தான் ஆரம்பத்தில் இரு மொழிக் கொள்கை தேவை என்று விரும்பினார்கள். அது ஏற்றுக் கொள்ளப் படா விட்டால், நாடு இரண்டாகப் பிரியும் என்றும் தீர்க்கதரிசனத்துடன் கூறினார்கள். ஆனால், பெரும்பான்மைக் கட்சிகளான, ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும், இனவாதக் கருத்துகளை பரப்பி சிங்கள மக்களை கவர்ந்தார்கள். ஒரு தடவை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர், இடதுசாரிகளையும் பயமுறுத்தி பணிய வைத்தார்கள். காலப்போக்கில் அவர்களும் இனவாத நீரோட்டத்தில் அள்ளுப்பட்டுப் போனார்கள். இதனால், அறிவுஜீவிகள் கூட இன அடிப்படையில் பிரிந்து நின்றனர். உள்நாட்டு முதலாளிகளால் ஆதரிக்கப் பட்ட சுதந்திரக் கட்சி, அன்றிருந்த சர்வதேச நிலைமைகளுக்கேற்ப நடந்து கொண்டது. தன்னை ஒரு முற்போக்கான அரசாகக் காட்டிக் கொண்டதன் மூலம், நேருவின் இந்தியாவுடன் கூட்டுச் சேர்ந்தது. இந்தியா மூலம் சோவியத் யூனியனின் உறவு கிட்டியது. சீனாவுடனும் உறவு ஏற்படுத்திக் கொண்டது. உள்நாட்டு முதலாளித்துவ வர்க்கம் தந்திரமாக காய் நகர்த்தியதால், கம்யூனிஸ்ட், சோஷலிசக் கட்சிகளுக்கான மக்கள் ஆதரவு கணிசமாகக் குறைந்தது.

மேலதிக விபரங்களுக்கு நான் ஏற்கனவே எழுதிய சிங்களப் பேரினவாதம் பற்றிய தொடரை வாசிக்கவும்:
சிங்கள பேரினவாதத்தின் தோற்றம், ஒரு காலனிய ஆட்சி மாற்றம்
http://kalaiy.blogspot.nl/2011/09/blog-post_08.html

Kalaiyarasan said...

ஈழம் சாத்தியமா, இல்லையா என்ற விவாதம், பொது அரங்கில் நடத்தப் பட்டது. ஈழப்போர் ஆரம்பிப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே, தமிழ் தேசியவாதிகளும், இடதுசாரிகளும் பொது மேடையில் விவாதம் செய்தனர். அன்று கூறப் பட்ட உண்மைகளை யாருமே கவனத்தில் எடுக்கவில்லை.

Php Mute said...

//ஆயுதப் போராட்டம் நடத்த சாதகமான சூழ்நிலை, பின்னைடைவுகள் இவற்றை எல்லாம் சரியாகக் கணிக்காமல், வீணாக உயிர்களை பலி கொடுக்க முடியாது.

நியாய மான கருத்துதான்