Monday, January 09, 2012

மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்

சிங்கள இனவாதிகளுக்கும், தமிழ் இனவாதிகளுக்கும் பொதுவான "புனித நூல்" ஒன்று இருக்குமானால், அது மகாவம்சம் தான். இவ்விரண்டு மொழித் தேசிய இனவாதிகளும், அடிக்கடி மகாவம்சத்தை உதாரணமாகக் காட்டிப் பேசுவார்கள். அதிலும் குறிப்பாக துட்டகைமுனுவின் கதை, அதில் அவன் தமிழர்களைப் பற்றிக் கூறும் வாசகம், அளவுக்கு அதிகமாகவே மேற்கோள் காட்டப் படுகின்றது. ("கங்காவுக்கு அப்பால் தமிழர்களும், இந்தப் பக்கம் கோதா கடலும் இருக்கும் போது, நான் எப்படி கை, கால்களை நீட்டி சுகமாகப் படுக்க முடியும்?" - துட்டகைமுனு) எல்லாளனை வென்று இலங்கைத் தீவை ஒரே குடையின் கீழ் ஆட்சி செய்த துட்டகைமுனு வாழ்ந்த காலத்திற்கும், மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையில் குறைந்தது 500 வருடங்கள் இடைவெளி காணப்படுகின்றது. இத்தனை வருடங்களுக்குள் ஆயிரம் மாற்றங்கள் நடந்திருக்கலாம். அதை எல்லாம் கவனத்தில் எடுக்காமல், மகாவம்சத்தில் எழுதப் பட்டவற்றை உண்மை என்று நம்புவதால், அது ஒரு புனித நூல் தானா, என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

கி.பி. 400 ம் நூற்றாண்டளவில் மகாவம்சம் எழுதப் படுவதற்கு முன்னர், தீபவம்சம் என்றொரு நூல் இருந்தது. அந்த நூல் குறித்து, வெளியில் அறிந்தவர்கள் குறைவு. தீபவம்சத்தில் எழுதப் பட்ட சரித்திரக் குறிப்புகள், மகாவம்சத்தில் பிரதி செய்யப்பட்டுள்ளன. மகாவாம்சம் எழுதிய மகாசேன தேரர், அந்தக் காலத்திய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப எழுதியுள்ளார். அவரது அரசியல் நிலைப்பாட்டில் இருந்து, துட்டகைமுனு அரசனை நாயகனாக சித்தரிக்கின்றார். மகாவம்சத்தில் வேறெந்த அரசனுக்கும் கொடுக்கப்படாத முக்கியத்துவம், துட்ட கைமுனுவுக்கு கிடைத்துள்ளது. நூலில் கிட்டத்தட்ட அரைவாசிப் பகுதி, அந்த மன்னனின் சரித்திரத்தைக் கூறுவதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது.

இலங்கையில் துட்டகைமுனு என்ற மன்னன் வாழ்ந்த காலம் கி.மு. 161 - 137. இதற்கும் மகாவம்சம் எழுதப்பட்ட காலத்திற்கும் இடையிலான இடைவெளியைக் கவனிக்கவும். சுமார் 500 ஆண்டு இடைவெளிக்குள், இலங்கைத் தீவில் பல்வேறு அரசியல்/பொருளாதார/சமுதாய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். நமது காலத்தில் சில சரித்திர நாயகர்களை போற்றி, அவர்களைப் பற்றிய இலக்கியங்களைப் படைப்பது போன்று தான், மகாவம்ச காலத்திலும் நடந்திருக்கும். மகாவம்சம் எழுதப் பட்ட காலத்தில் இடம்பெற்ற, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மாற்றங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இலங்கையின் தலைவிதி, அந்தக் காலத்திலும் இந்தியாவில் நடக்கும் மாற்றங்களுடன் பின்னிப் பிணைந்திருந்தது.

அசோக சக்கரவர்த்தி காலத்தில், இந்தியா முழுவதும் பரவியிருந்த பௌத்த மதம் பிற்காலத்தில் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. தமிழகத்தில் பக்தி மார்க்கம் என்ற பெயரில், சைவ சமய மறுமலர்ச்சி ஏற்பட்டது. ஒரு காலத்தில் கவனிக்கப் படாத குறுநில மன்னர்களாக இருந்த சோழர்கள், வட நாட்டு பார்ப்பனர்கள் உதவியுடன் ஆட்சியை ஸ்திரப் படுத்தினர். சோழ சாம்ராஜ்யம் விஸ்தரிக்கப் பட்ட காலத்தில், பிராமணீயத்தை ஏற்றுக் கொண்ட சைவ சமயம் அரசு மதமாக அங்கீகரிக்கப் பட்டிருந்தது. சைவ சமயம் ஆட்சியாளர்களின் மதமாக ஆதிக்கம் செலுத்திய காலத்தில், பிற மதங்கள் ஒடுக்கப் பட்டன. பௌத்த, சமண மதங்கள் மட்டுமல்ல, இந்து மதத்தின் பிரிவாக கருதப்படும் வைஷ்ணவமும் அடக்குமுறைக்கு உள்ளானது.

சோழர்களின் காலத்திற்கு முன்னரே, தமிழகத்தில் பௌத்த மதம் ஏறக்குறைய அழிந்து விட்டிருந்தது. அந்த இடத்தை சமண மதம் பிடித்திருந்தது. அதனால், சைவ மத ஆதிக்க சக்திகள், சமண மதத்தை அழிப்பதிலேயே அதிக கவனம் செலுத்தின. பௌத்த மதத்தை சேர்ந்த தமிழர்கள், ஏற்கனவே இலங்கைக்கு தப்பியோடி புகலிடம் கோரியிருந்தனர். இவர்களில் பல பௌத்த துறவிகளும் அடக்கம். இன்றைக்கு அகதிகளாக புலம்பெயரும் மக்கள், எத்தகைய கோரமான கதைகளை காவிக் கொண்டு வருவார்கள், என்பதை நான் விளக்கத் தேவையில்லை. அது போன்று தான், அந்தக் காலத்தில் இலங்கைக்கு புலம்பெயர்ந்த தமிழக பௌத்த அகதிகள், சோழர்களின் கொடுமைகளை கூறும் கதைகளை காவிச் சென்றிருப்பார்கள்.

பிற்காலத்தில் சோழர்கள் இலங்கையையும் கைப்பற்றி தமது சாம்ராஜ்யத்துடன் இணைப்பதற்கு முயற்சித்தனர். இராஜேந்திர சோழன் காலத்தில் அந்த எண்ணம் நிறைவேறியது. இலங்கையும் சோழ சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகியது. இத்தகைய சரித்திரப் பின்னணியில் தான் மகாவம்சம் எழுதப் பட்டது. அதாவது, சோழ ஏகாதிபத்தியம், பிராமணிய-சைவ மத ஆதிக்கம், இவற்றிற்கு எதிரான, ஒரு வகை "பௌத்த மத தேசியவாதத்தை" உருவாக்குவதே, மகாவம்சம் எழுதியவர்களின் நோக்கமாக இருந்திருக்கும். நமது காலத்திற்கு முந்திய நூல்களையும், நாயகர்களையும் அந்தக் காலத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும். இல்லாவிட்டால், வரலாற்றுத் திரிபுகளும், தவறான கருத்துகளும் நமது கால அரசியலை தீர்மானிக்க வைத்து விடும்.

இலங்கை மீதான சோழர்களின் படையெடுப்பு கூட, அவர்களின் தமிழக எதிரியான பாண்டிய மன்னனின், இரத்தினக் கற்கள் பதித்த முடியை அபகரிப்பதற்காகவே நிகழ்ந்துள்ளது. அதாவது, அன்று இலங்கையை ஆண்ட சிங்கள மன்னர்களுக்கும், பாண்டியர்களுக்கும் இடையில் நெருங்கிய ராஜதந்திர உறவு காணப்பட்டது. பல சிங்கள மன்னர்களும், பிரபுக்களும், பாண்டிய நாட்டு உயர்குல தமிழ் பெண்களை மணம் முடித்திருந்தனர். இத்தகைய நெருங்கிய உறவின் நிமித்தம் தான், சோழர்களால் ஒடுக்கப்பட்ட பாண்டிய மன்னன், தனது பொன்முடியை பாதுகாப்பாக இலங்கைக்கு அனுப்பி வைத்திருந்தான். ஆகவே, அன்றைய போர்களை சிங்கள-தமிழ் முரண்பாடாக கருதுவது அறியாமையின் பாற்பட்டது. சைவ- பௌத்த முரண்பாடு கூட, சில வேளை ஆட்சியாளர்களின் ஆதிக்க வெறிக்கு பயன்படுத்தப் பட்டிருக்கலாம். ஆனால், அது அன்றைய அரசியலில் பெருமளவு தாக்கம் செலுத்தவில்லை. ஏனெனில், இலங்கை முழுவதையும் கைப்பற்றி ஆண்ட சோழர்கள், சைவக் கோயில்களை மட்டும் கட்டவில்லை. உதாரணத்திற்கு, தமிழ் பௌத்தர்கள் வழிபடுவதற்காக, சோழர்கள் கட்டிக் கொடுத்த பௌத்த ஆலயம், இன்றைக்கும் திருகோணமலையில் இடிபாடுகளுடன் காணப் படுகின்றது.

எல்லாளன், துட்டகைமுனு வாழ்ந்த காலம், சோழர்களின் வருகைக்கு முந்தியது. குறைந்தது 500 வருடங்கள் இடைவெளி காணப்படுகின்றது. எல்லாளனின் வருகைக்கு பல வருடங்களுக்கு முன்னர், சேனன், கூத்திகன் என்ற இரு குதிரை வியாபாரிகள் இலங்கையின் ஆட்சியை கைப்பற்றினார்கள். இவர்களும் தமிழர்கள் என்றே, இன்று பலர் கருதிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் குஜராத்திகளாக இருக்கலாம் என்றும் ஒரு அபிப்பிராயம் உண்டு. எல்லாளன் சோழர் வம்சத்தை சேர்ந்ததாக சில வரலாற்று அறிஞர்கள் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. எல்லாளன் தென்னிந்தியாவில் இருந்து படையெடுத்து வந்ததாக, பண்டைய சரித்திர ஆவணங்கள் கூறுகின்றன. எல்லாளன் ஒரு தமிழனா, கன்னடனா, மலையாளியா, என்பது யாருக்கும் தெரியாது. (சேனன், கூத்திகன், எல்லாளன் ஆகியோரை "மலபாரிகள்" என்றே சரித்திர ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.) எல்லாளனின் பூர்வீகம் பற்றி அதிகம் தெரியா விட்டாலும், மகாவம்சத்தில் எழுதியதை வைத்து தான், எல்லாளனை சோழனாகவும், தமிழனாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். மகாவம்சத்தில் எழுதியுள்ளதை எல்லாம் உண்மை என்று நம்பினால், நாம் அதற்கு புனித நூல் அந்தஸ்து கொடுக்கிறோம் என்று தான் அர்த்தம்.

நமது காலத்தில், வரலாற்று உண்மைகளையும், கற்பனையும் கலந்து, சரித்திர நாவல்கள் எழுதுவதைப் போன்று தான், மகாவம்சமும் எழுதப் பட்டிருக்கலாம். இருப்பினும், மகாவம்சம் தனது இனத்தின் எதிரிகள் யார் என்று வரையறை செய்கின்றது. பிராமணீய ஆதிக்கத்தை நிலைநாட்டிய சோழர்களை மட்டுமே, இனவிரோதிகளாக சித்தரிக்கின்றது. மகாவம்சம் தமிழர்களை எதிரிகளாக சித்தரிப்பதாக சில இடங்களில் தோன்றலாம். ஆனால், அதே மகாவம்சம், தமிழர்களான பாண்டியர்களை எதிரிகளாக காட்டவில்லை. "சிங்கள" மன்னர்கள் வசமிருந்த தமிழ்ப் படையினர் பற்றிய குறிப்புகள் ஆங்காங்கே வருகின்றன. அப்படியானால், மகாவம்சம் எதிரியாக சித்தரிக்கும் "அந்தத் தமிழர்கள் யார்?" சந்தேகத்திற்கிடமின்றி, ஒரு இந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய சோழர்கள் தான். மகாவம்சம் எழுதப்பட்ட காலத்தின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு, எல்லாளன்- துட்டகைமுனு போர் பல வரலாற்றுத் திரிபுகளுடன் எழுதப் பட்டது.

எது எப்படி இருப்பினும், துட்டகைமுனு ஒரு சிங்கள மன்னன் என்று மகாவம்சம் எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. துட்டகைமுனு வாழ்ந்த காலத்தில், சிங்களவர்கள் என்று அடையாளம் காணக் கூடிய இனம், வரலாற்றில் தோன்றியிருக்கவில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு பின்னர் தான் சிங்கள மொழி, அரசவை மொழியாகியது. அப்போதும், சிங்கள மன்னர்களினால் ஆளப்பட்ட குடிமக்கள் எல்லோரும் சிங்களவர்களாக இருக்கவில்லை. டச்சு காலனிய ஆட்சி நடந்த 17 ம் நூற்றாண்டில் கூட, அனுராதபுரத்தில் வாழ்ந்த மக்கள் தமிழ் மொழி பேசினார்கள். இதனை, கண்டி மன்னனின் சிறையில் இருந்து தப்பியோடிய ஆங்கிலேய மாலுமியான ரொபேர்ட்ஸ் நொக்ஸ் பதிவு செய்துள்ளார்.
“The people stood amazed as soon as they saw us, being originally Malabars, though subjects of Kandy. Nor could they understand the Sinhalese language in which we spake to them, and we stood looking one upon another until there came one that could speak the Sinhalese tongue who asked us, from whence we came? We told them from Kandy, but they believed us not, supposing that we came up from the Dutch from Mannar. So they brought us before their Governor. He not speaking Sinhalese spake to us by an interpreter.” (Robert Knox in the Kandyan Kingdom, Ed. E.F.C.Ludowyk, p 50).

அனுராதபுரத்தில் வாழ்ந்த தமிழர்கள், காலச் சுழற்சியில் சிங்களவர்களாக மாறியிருக்கிறார்கள். இருப்பினும் அனுராதபுரத் தமிழர்களில் ஒரு பிரிவினர் முஸ்லிம்களாக, இன்றைக்கும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். எல்லாளன் சமாதி இருந்த இடம், இஸ்லாமிய தர்க்காவாக அண்மைக் காலம் வரையில் வழிபடப் பட்டு வந்தமை, அதற்கு சான்றாகும். சில மாதங்களுக்கு முன்னர், பௌத்த மத அடிப்படைவாதிகள் அந்த தர்க்காவை இடித்து தரைமட்டமாக்கினார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம், "அந்த இடத்தில் துட்டகைமுனுவின் சமாதி இருந்தது" என்பது தான். (இந்தியாவில் இடம்பெற்ற பாபர் மசூதி இடிப்பு ஞாபகத்திற்கு வருகின்றதல்லவா?) எல்லாளனை போரில் வென்ற துட்டகைமுனு, எல்லாளனுக்கு சமாதி கட்டினான். அந்த வழியாக பயணம் செய்பவர்கள் சமாதிக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று ஆணையிட்டான்.

ஆயிரக் கணக்கான வருடங்கள் உருண்டோடிய பிறகு, எல்லாளன் சமாதியின் முக்கியத்துவம் குறைந்து கொண்டு போனது. இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில், எல்லாளன் சமாதி என்ற ஒன்று இருப்பதையே, மக்கள் மறந்து விட்டார்கள். சிங்கள-பௌத்த பேரினவாதிகள் அந்த இடத்தில் துட்டகைமுனு சமாதி இருந்ததாக உரிமை கோரினார்கள். உண்மையில் துட்டகைமுனுவின் சமாதி எங்காவது கட்டப்பட்டதாக வரலாற்றுக் குறிப்பு எதுவும் இல்லை. இத்தனை காலமாக, ஒரு தமிழ் தேசியவாதி கூட, எல்லாளன் சமாதிக்கு உரிமை கோராதது ஆச்சரியத்திற்குரியது! சிங்கள- பௌத்த பேரினவாதிகள், எல்லாளன் சமாதியை தகர்த்த செய்திக்கு கூட, எந்தவொரு தமிழ்த் தேசிய ஊடகமும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

எல்லாளன் மீது துட்டகைமுனு போர் தொடுக்க காரணம் என்ன? மகாவம்சம் கூற விளைவதைப் போல, துட்டகைமுனுவின் மனதில் தமிழின வெறுப்பு காணப்பட்டதா? மகாவம்சம் தனது அரசியல் நோக்கங்களுக்காக வரலாற்றை திரித்தது என்றால், நமது கால இனவாதிகள் மகாவம்சத்தையே தவறாக மொழிபெயர்த்தார்கள். (மகாவம்சத்தின் மூலம் பாளி மொழியாகும்) "எல்லாளனைப் போன்று, துட்டகைமுனுவும் ஒரு தமிழன். எல்லாளன் ஒரு இந்து மத நம்பிக்கையாளன். துட்டகைமுனு ஒரு பௌத்த மத நம்பிக்கையாளன். அது மட்டுமே வேறுபாடாக இருந்திருக்க வேண்டும். ஒரு பௌத்தனான துட்டகைமுனு, இந்து மத வழிபாட்டையும் கடைப்பிடித்தமை குறிப்பிடத் தக்கது. எல்லாளனை போரில் தோற்கடிக்க கதிர்காமக் கந்தனை வழிபட்டுள்ளான்." தமிழ்த் தேசிய இணையத்தளமான, Tamil Canadian இல், Dr. S. K. வடிவேல் எழுதிய கட்டுரையில் பின்வருமாறு குறிப்பிடப் பட்டுள்ளது.
The wars fought by Gemunu and Elara were not Sinhala-Tamil wars as maliciously projected by Mahanama. A careful examination of Gemunu’s pedigree will reveal that he was as much a Tamil as Elara, with the difference being that Gemunu was a Buddhist, while Elara was a Hindu. Elara was no enemy of the Buddhists. He was in fact, loved by the Buddhists. The strong hereditary Hindu element in Gemunu (present even today in all Sri Lankan Buddhists) made him a devotee of the Dravidian God Murukan at Kathirkamam. It is said in the Mahawamsa that Gemunu invoked the blessings of the Lord Murukan to endow him with strength to defeat King Elara in battle.
அது சரி, இந்த உண்மைகளை எல்லாம் எதற்காக ஆங்கிலத்தில் மட்டும் எழுத வேண்டும்? தமிழர்கள் தெரிந்து கொள்வதற்காக தமிழில் எழுதக் கூடாதா?


(தொடரும்)

6 comments:

Anonymous said...

indhukalin thayagam china la iruku andha squel nenga inum mudikalaye

Kalaiyarasan said...

புதிய பாதை, அந்த தொடர் சிறிய இடைவெளி விட்டு தொடர்ந்து வரும்.

suvanappiriyan said...

Best Article.

Mohamed Haneef said...

மகாவம்சம் நூலை தொகுத்தவர் மகாசேனன் அல்ல. மகாநாம தேரர் (பிக்கு) வரலாறுகளை எழுதும் மிகுந்த கவனம் வேண்டும்.

Mohamed Haneef said...

மகாவம்சத்தை பாளி மொழியில் தொகுத்தவர் மகாநாம தேரர் (பிக்கு) ஆகும். மகாசேனன் என்பவனது பாத்திரம் வேறானது. வரலாற்றுக்கு விளக்கம் கொடுக்கும் போது அதனை சரியாக பார்த்துவிட்டு விளக்கம் அளிப்பது நல்லது.

Mohamed Haneef said...

Don't follow S. Sangaran's Tamil translated Mahawamsa. here the original copy available in google book site: books.google.com./books?id=nX2af3kcregC&printsec=frontcover&hl=zh-TW&source=gbs_ge_summary_r&cad=0#v=onepage&q&f=false