Monday, April 04, 2011

அந்நிய இராணுவத்தின் முற்றுகைக்குள் யாழ் குடாநாடு


[இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்] (பகுதி - 9)

யுத்தப் பிரதேசம் முழுவதும் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பகுதியில் கடுமையான சண்டை நடக்கும் அதே நேரம், இன்னொரு பகுதி அமைதியாகக் காட்சியளிக்கும். ஒரு பக்கம் மக்கள் செத்துக் கொண்டிருப்பார்கள். மற்ற பகுதிகளில் மக்கள் சிறிது பதற்றத்துடன் இயல்பு வாழ்க்கையில் ஈடுபடுவார்கள். யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியில், இந்திய இராணுவத்துடன் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்தது. கிழக்குப் பகுதியில் ஒரு துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கூட கேட்கவில்லை. மக்கள் தமது வழமையான கடமைகளில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும் அது ஒன்றும் சாதாரண இயல்பு வாழ்க்கை அல்ல. அமைதி காக்க வந்த இந்தியப்படை பொருளாதாரத் தடை விதித்து தமிழ் மக்களை நசுக்கியது. கொழும்பில் இருந்து வந்த விநியோகம் தடைப்பட்டதால், உள்ளூரில் இருந்த பாவனைப் பொருட்கள் தீர்ந்து கொண்டிருந்தன. வியாபாரிகள் மட்டுமல்ல, அரசு நடத்தும் கூட்டுறவு சங்கக் கடைகளையும் இழுத்து மூடி விட்டார்கள். எமது ஊர் மக்கள் வேறு வழியின்றி, சங்கக் கடையை உடைத்து திறந்து, அங்கிருந்த பாவனைப் பொருட்களை தமக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.

சாவகச்சேரி நகர சந்தை வழமை போல கூடியது. உள்ளூரில் விளையும் காய்கறியின் விலை சரிந்து கொண்டிருந்தது. வழக்கமான வியாபாரிகளை விட புதிதாக சிலர் வந்திருந்தனர். வசதியற்றவர்கள் சந்தையில் எதையாவது விற்று பணம் புரட்டலாம் என நினைத்தார்கள். வாங்கும் திறன் படைத்த மத்திய தர வர்க்கத்தினரின் சேமிப்புப் பணமும் கரைந்து கொண்டிருந்தது. இதற்கிடையே, யுத்தம் நடைபெறும், யாழ் நகர், வலிகாமம் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் உணவு கொடுக்க வேண்டிய தேவையிருந்தது. அன்று ஒவ்வொரு வீடும் குட்டி அகதி முகாமாக மாறியிருந்தது. பொதுவாகவே சனத்தொகை அடர்த்தி குறைந்த, நிலப்பரப்பால் விரிந்த தென்மராட்சிப் பிரதேசம், இடம்பெயர்ந்த அகதிகளை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டவில்லை. தென்மராட்சி பிரதேசம், காடுகளும், சோலைகளும், தென்னந் தோப்புகளும் கொண்டது. நகரமயமாக்கலில் வளர்ச்சி அடைந்த, யாழ் நகர், வலிகாமம் பகுதிகளை சேர்ந்த மக்கள், தென்மராட்சியை "குழைக் காடு" என்று தாழ்வாகக் குறிப்பிட்டு பேசுவது வழக்கம். அத்தகைய நகர மாந்தர், தற்போது குழைக் காட்டில் அடைக்கலம் கோர நேரிட்டதை எண்ணி, தென்மராட்சி மக்கள் பெருமிதம் கொண்டனர்.

சாவகச்சேரி நகரில் போர் வருவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. ஆயுதமேந்திய புலி உறுப்பினர்களும் மிகக் குறைவாகவே நடமாடினார்கள். சாவகச்சேரி நகர சந்தை கூடிய பகற்பொழுதில், திடீரென ஆகாயத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தோன்றியது. நகரை சுற்றி வட்டமிட்டு விட்டு, சந்தையை நோக்கி சிறிய ரக எறிகணைகளை வீசியது. எறிகணைகள் ஹெலியின் இரண்டு பக்கமும் உள்ள இறகுகளில் பொருத்தப் பட்டிருந்தன. ரஷ்யத் தயாரிப்பான MI -24 சுடும் பொழுது, அது நெருப்பைக் கக்குவது போலிருந்தது. அதைக் கண்டதும், சிறுவர் கதைப் புத்தகத்தில் படித்த நெருப்பைக் கக்கும் டிராகன் நினைவுக்கு வந்தது. இதற்கு முன்னர், தொலைக்காட்சியில் ஆப்கானிஸ்தானில் நடந்த போரைக் காட்டும் படங்களில் அந்தக் ஹெலிகாப்டர் வரும். அப்போது தான் கண்ணெதிரே பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. சாமானியரின் நாவில் அது "முதலைக் ஹெலி" என்று அழைக்கப் பட்டது. நான் கண்ட காட்சியை, ரம்போ சினிமா போன்று இரசிக்க முடியவில்லை. ஹெலிகாப்டர் தாக்குதலில் சந்தையில் இருந்த பத்துக்கும் குறையாத பொது மக்கள் கொல்லப்பட்டனர். சந்தை வளாகத்தில் மரண ஓலம் கேட்டது. மக்கள் அன்றைய கருமங்களை அப்படியே போட்டு விட்டு வீடுகளுக்குள் சென்று மறைந்து கொண்டனர். சாவகச்சேரி நகரம், ஒரு சில மணிநேரத்தில் வெறிச்சோடியது. அன்றிரவே நாவற்குழி முகாமில் இருந்து புறப்பட்ட இராணுவம், சாவகச்சேரி நகர மத்தியில் இருந்த பாடசாலைகளில் முகாமிட்டது. அடுத்து வந்த சில நாட்களுக்கு மக்களுக்கு தடை செய்யப்பட்ட பிரதேசமாகியது.

நாவற்குழி முகாமிலிருந்து, ஆனையிறவு முகாம் வரையிலான கண்டி வீதி இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்து விட்டது. தற்போது கிராமப் பகுதிகளில் மட்டும் புலி உறுப்பினர்கள் நடமாடினார்கள். அவர்களைக் கேட்டால், "இந்தியப் படையினர் கண்டி வீதியை பயன்படுத்துவதற்கு தாம் அனுமதி வழங்கியுள்ளதாக," கூறினார்கள். அடுத்து வந்த சில நாட்களில், இந்தியப் படையினர் கிராமங்களுக்குள் ஊடுருவினார்கள். இந்தியப் படைகள் வருவதைக் கண்காணிப்பதற்கென்று, ஒவ்வொரு சந்தியிலும் இவ்விரண்டு புலி உறுப்பினர்கள் காவலுக்கு நின்றனர். ஒரு சந்திக்கருகில் பட்டப் பகலில் இராணுவம் ஜீப் வண்டியில் வந்ததைக் புலிகள் கிரனேட் அடித்து விட்டு தப்பியோடினார்கள். இன்னொரு சந்தியில் கும்மிருட்டில் சத்தமின்றி வந்த படையினர், காவலுக்கு நின்ற புலிகளை பிடித்து விட்டார்கள். சில வாரங்களில், சந்தியில் தற்காலிக முகாம் அமைத்திருந்த இராணுவம் பின் வாங்கிய பிறகு, அவர்களின் உயிரற்ற உடல்கள் கண்டெடுக்கப் பட்டன.

இந்திய இராணுவத்துடன் போர் தொடங்கி ஒரு மாதம் கழிந்த பின்னர், யாழ் குடா நாடு முழுவதும் இராணுவமயமாக காட்சியளித்தது. இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு இராணுவ முகாம் காணப்பட்டது. இராணுவம் நிலை கொண்டிராத சந்தியைக் கடந்து செல்வது கஷ்டம். ஒவ்வொரு முகாமிலும், போவோர் வருவோரை நிறுத்தி அடையாள அட்டை பார்த்து தான் விட்டார்கள். "கொல்லைப் புற வழியாக நமது நாட்டினுள் புகுந்த அந்நிய இராணுவம், எம்மிடம் அடையாள அட்டை கேட்கின்றது..." என்று மக்கள் மனதுக்குள் புழுங்கினார்கள்.

பெரும்பாலான முகாம்களில், ஏற்கனவே பிடிபட்ட புலி உறுப்பினர் "தலையாட்டியாக" நிறுத்தி வைக்கப்பட்டார். தனக்கு தெரிந்த புலி உறுப்பினர்களை தலையாட்டி காட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் நிராயுதபாணிகளான முன்னாள், இந்நாள் புலி உறுப்பினர்கள் மட்டுமல்லாது, சில அப்பாவிகளும் தடுத்து நிறுத்தி கைது செய்யப் பட்டனர். யாழ் குடா நாடு முழுவதும், இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த போதிலும், புலிகளும் மறைந்திருந்தனர். அவர்கள் அடிக்கடி தமது மறைவிடங்களை மாற்றிக் கொண்டிருந்தனர். ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்கையில் இராணுவ முகாம்களை தவிர்க்க வேண்டியிருந்தது. குறுக்கு வழிகளை, ஒழுங்கைகளை பாவித்து கடந்து சென்றனர். இருந்த போதிலும், எதிர்பாராத விதமாக சந்திக்கும் இந்தியப் படைகளுடன் மோதல்கள் ஏற்படுவதுண்டு.

யாழ் குடாநாட்டிற்குள் பதுங்கியிருந்த புலி உறுப்பினர்கள், பொது மக்களின் ஆதரவில் தங்கியிருக்க வேண்டியிருந்தது. பெரும்பாலான பொது மக்கள், "எங்கட பெடியள்" என்ற எண்ணத்தில் அனுதாபம் காட்டினார்கள். எந்தப் பாதையில், எந்த திசையில் இராணுவம் போகின்றது, என்பன போன்ற தகவல்களை வழங்கினார்கள். பொதுவாக ஊர் விட்டு ஊர் இடம்பெயரும் புலிகள், சிறுவர்களை முதலில் அனுப்பி உளவு பார்த்து விட்டு வரச் சொல்வார்கள். "பாதையில் தடங்கல் இல்லை" என்ற சமிக்ஞை கிடைத்ததும் புறப்படுவார்கள். மக்கள் அனைவரும் புலிகளுக்கு ஆதரவளித்தார்கள் என்று கூற முடியாது. ஒரு சிலர், புலிகளின் நடமாட்டம் குறித்து இந்திய இராணுவத்திற்கு தகவல்களை வழங்கினார்கள். சில நாட்களில் மோப்பம் பிடித்து விடும் புலிகள், காட்டிக் கொடுத்தவரை தெருவோரமாக சுட்டுப் போட்டு விட்டுப் போவார்கள். அவ்வாறு சுட்டுக் கொல்லப் பட்டவர்களில், காட்டிக் கொடுத்ததாக நிரூபிக்கப் படாதவர்களும் இருந்தனர். அவர்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களான உணவுக்கு வழியற்ற ஏழைகள். போரினால் ஏற்பட்ட பொருளாதார தடையினால் அதிகமாக பாதிக்கப் பட்டவர்கள். இந்திய இராணுவ முகாமில் இலவசமாக கொடுத்த அரிசியை வாங்கிக் கொண்டு வந்த காரணத்திற்காக கொலை செய்யப் பட்டனர்.

யாழ் குடாநாட்டை கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததும், இந்தியப் படையினர் ஊர் ஊராக சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். குறிப்பிட்ட ஒரு நாளில் திடீரென ஒரு ஊரை சுற்றி வளைப்பார்கள். அந்த ஊரில் வீடு வீடாக சென்று, ஆண்கள் எல்லோரையும் அழைத்து வந்து தெருவில் உட்கார வைப்பார்கள். பின்னர் அவர்கள் எல்லோரையும் முகமூடி அணிந்த நபரின் முன்னால் வரிசையாகப் போகச் சொல்வார்கள். மக்கள் என்ற தண்ணீரை வடி கட்டி, புலிகள் என்ற மீன்களை பிடிக்கும் நடவடிக்கை அது என்று எல்லோருக்கும் தெரியும். இதிலே அதிசயம் என்னவென்றால், இராணுவ சுற்றி வளைப்புக்கு ஒரு நல்ல முன்னதாகக் கூட, அந்த ஊரில் புலிகள் நடமாடி இருப்பார்கள். ஆனால் முற்றுகைக்குள் எவரும் அகப்பட மாட்டார்கள். முகமூடி அணிந்த நபர் யாரையாவது காட்டிக் கொடுத்தாலும், அது முன்னர் ஒரு நேரம் இயக்கத்தை விட்டு விலகியவராக இருப்பார். எமதூரில் நிலை கொண்டிருந்த இந்திய இராணுவத்தில், முத்து என்றொரு தமிழ்நாட்டை சேர்ந்த சிப்பாய் இருந்தார். சிடு சிடுப்பான மூஞ்சியைக் கொண்ட படைவீரர்களிடையே வித்தியாசமானவர். மக்களுடன் கடுமையாக நடந்து கொள்வதில்லை. இராணுவ நடவடிக்கை தொடர்பாக முத்து வழங்கிய தகவல்கள் காரணமாகவே புலிகள் தப்ப முடிந்தது என்பது பின்னர் தெரிய வந்தது. சில மாதங்களில் அவரை இடம் மாற்றி விட்டார்கள்.

ஆரம்ப காலத்தில், இந்தியப் படையினர் புலி உறுப்பினர்களை மட்டுமே குறி வைத்து தேடிக் கொண்டிருந்தார்கள். இதனால் புலிகளுடன் தொடர்பற்ற பெரும்பான்மை மக்கள் படையினருடன் ஒத்துழைத்தனர். அல்லது ஒத்துழைக்க வேண்டிய கட்டாயம். எங்கேயும் ஓடி ஒளிக்க முடியாது. ஒரு முறை, பல கிராமங்களை ஒரே நாளில் சுற்றி வளைத்து, ஆண்கள் எல்லோரையும் நகரில் இருந்த பாடசாலை முகாமில் ஒரு நாள் வைத்திருந்தார்கள். அன்றிரவு சாப்பிட ஆளுக்கொரு சப்பாத்தியும், சாம்பாரும் தந்தார்கள். இரவு படுக்கும் பொழுது நுளம்புத் தொல்லையை சமாளிக்க ஒரு எண்ணை கொடுத்தார்கள். அடுத்த நாள் காலை, அனைவரையும் வீட்டுக்கு அனுப்பினார்கள். ஆனால் இந்தக் கவனிப்பு எல்லாம் ஒரு சில வாரங்கள் மட்டும் தான். ரோந்து செல்லும் இந்தியப் படை வாகனங்கள், புலிகளின் கண்ணி வெடிக்கு இலக்காகி பல வீரர்கள் கொல்லப் பட்டனர். இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு படையினரின் நடவடிக்கைகளில் மூர்க்கம் தெரிந்தது. தாக்குதல் நடந்த இடத்தில் அகப்பட்ட பொது மக்கள் படையினரின் பழிவாங்கும் நடவடிக்கையால் கொல்லப்பட்டனர். கைது செய்யப்பட்டால், கடுமையாக அடித்து நொறுக்கினார்கள். சந்தேக நபர்களை சித்திரவதை செய்வதும் வழக்கமான சமாச்சாரங்களாகி விட்டன. ஒரு நாள் புலி உறுப்பினர்களை பிடிப்பதற்காக, வீதியோரம் மறைந்திருந்த படையினர் விரித்த வலையில் நானும் அகப்பட்டேன்.


(தொடரும்...)

தொடரின் முன்னைய பதிவுகளை வாசிக்க:
8.ஆக்கிரமிப்புப் படையாக மாறிய அமைதிப் படை
7.ஆயுதக் குழுக்களுடன் அமைதி காத்த இந்திய இராணுவம்
6.இந்தியத் தலையீடுகளும், ஜேவிபி யின் ஐயப்பாடுகளும்
5.யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய இந்தியப் படைகள்
4.சென்னையில் அடைக்கலமான அகதிகளும், போராளிகளும்
3.தமிழகத்தில் ஈழ அகதிகளின் வர்க்கப் பிரச்சினை
2.ஈழ அகதிகளை ஆயுதபாணிகளாக்கிய இந்தியா
1.இந்தியாவின் சூழ்நிலைக் கைதியான ஈழம்

No comments: