Monday, August 16, 2010

வார்சோ ஒப்பந்த அகதிகள்


போலந்து போகலாம் வாங்க! - பயணக் கதை
Part 2
போலந்து நாட்டினருக்கு அகதித் தஞ்சம் கோருவது புதிய விடயமல்ல. இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் ஹிட்லர் போலந்தை ஜெர்மனியுடன் இணைத்த பொழுது, போலிஷ் அரசு பிரிட்டனில் அகதியாக தஞ்சம் கோரியது. கம்யூனிஸ்ட்கள் மொஸ்கோவில் தஞ்சம் கோரினார்கள். நாஸிகளின் இன அழிப்புக்கு தப்பிய யூதர்கள் அகதியாக அமெரிக்கா வரை சென்றார்கள். நாஸிப் படைகளை தோற்கடித்த சோவியத் செம்படையுடன் கம்யூனிஸ்ட்கள் திரும்பி வந்து சோஷலிச ஆட்சி அமைத்தார்கள். சோஷலிச போலந்தில் அதிருப்தியடைந்த ஒரு கூட்டம் மேற்குலக நாடுகளை நோக்கி அகதிகளாக ஓடினார்கள். கத்தோலிக்க தேவாலயங்கள், தொழிற்சங்கங்களின் இடையறாத போராட்டம் காரணமாக, கம்யூனிஸ்ட்கள் விட்டுக் கொடுத்தார்கள். முன்னாள் சோஷலிச நாடுகளில், முதன் முதலாக போலந்தில் தான் அனைத்துக் கட்சிகளும் பங்குபற்றிய பொதுத்தேர்தல் நடைபெற்றது. மேற்குலகில் அடைக்கலம் கோரிய போலிஷ் புத்திஜீவிகள் நாடு திரும்பினார்கள். சுபம்.
கதை அத்துடன் முடியவில்லை. அதுவரை அகதிகளை அனுப்பிக் கொண்டிருந்த போலந்து, 20 ம் நூற்றாண்டின் இறுதியில், அகதிகளை பொறுப்பேற்க வேண்டிய கடமைக்குள்ளானது. சோஷலிசத்தின் வீழ்ச்சியில் இரும்புத்திரை கிழிந்தது என்று சந்தோஷப்பட்டார்கள். ஆனால் கிழிந்த திரையூடாக வேற்றின அகதிகள் வருகை தந்தார்கள். ரஷ்யர்கள், தெற்காசிய, ஆப்பிரிக்க அகதிகளின் புகலிடமாக போலந்து மாறியது.

போருக்குப் பின்னர், கம்யூனிஸ்ட்கள் எழுத்தறிவற்ற மக்களின் தேசத்தை பொறுப்பேற்றார்கள். அனைத்து பிரஜைகளுக்கும் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி அளித்தார்கள். இதனால் புதிதாக தோன்றிய நடுத்தர வர்க்கம் ஒன்று, மேலதிக உரிமைகளைக் கோரியது. தொன்னூறுகளில் நான் சந்திந்த போலந்து மாணவி ஒருவர் பின்வருமாறு கூறினார். "கம்யூனிஸ்ட்களின் காலத்தில் ஜனாதிபதியை ...... மகன் என்றெல்லாம் திட்ட முடியாது. பிடித்து ஜெயிலில் போட்டு விடுவார்கள். இப்போது தாராளமாக திட்டலாம். யாரும் தண்டிக்கப்படமாட்டார்கள்." நடுத்தர வர்க்கம் போராடிப் பெற்ற பேச்சு சுதந்திரம் அது. இன்று அதே போலந்தில் பாதுகாப்புப் படையினர் அகதிகளை நடத்தும் விதம் குறித்து விமர்சிப்பவர்களை விரட்டுகிறார்கள். பொதுவாகவே அகதிகள் எதிர்ப்புப் குரல் கொடுக்க தைரியமற்றவர்கள். அவர்கள் சார்பாக சிறிய இடதுசாரிக் குழுக்களை சேர்ந்த போலிஷ்காரரே விமர்சனங்களை முன்வைக்கின்றனர். நான் இங்கே எழுதப் போகும் அகதிகளின் நிலை பற்றிய செய்திகளை எந்த ஊடகமும் வெளியிடவில்லை. அதிலிருந்து யாருக்கான கருத்துச் சுதந்திரம் குறித்து உலகம் அக்கறை கொள்கிறது எனப் புரிந்து கொள்ளலாம்.

ஆரம்ப காலங்களில், அதாவது போலந்து முதலாளித்துவ - ஜனநாயக நாடாக மாறிய தொன்னூறுகளில், ஆட்கடத்தல்காரர்களே அகதிகளை போலந்து கூட்டி வந்தார்கள். ஏற்கனவே விசா வழங்கும் நடைமுறையை மேற்கு ஐரோப்பிய நாடுகள் இருக்கியிருந்தன. போலந்துக்கு வருவது அவ்வளவு கஷ்டமல்ல. போலந்து விசா கிடைக்காவிட்டாலும், அருகில் இருக்கும் உக்ரைன், பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு விசா எடுத்து விட்டு, பின்னர் எல்லை கடக்கலாம். போலந்தின் மேற்கு புற எல்லையில் ஜெர்மனி இருப்பது குறிப்பிடத்தக்கது. அதையும் கடந்து விட்டால் மேற்கைரோப்பாவில் அகதித் தஞ்சம் கோரலாம். மெல்ல மெல்ல போலந்திற்குள் வரும் அகதிகளின் நடமாட்டம் குறித்து எல்லைக்காவல் படை விழிப்புற்றது. இதனால் எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. பல அகதிகள் எல்லை கடக்கும் பொழுது சிக்கிக் கொண்டார்கள். ஐ.நா.அகதிகள் உயர் ஸ்தானிகராலய நெறிப்படுத்தலின் கீழ், போலந்து அரசு அகதிகளைப் பதியும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அப்படி இருந்தும் பலர் அங்கே தங்கவில்லை. சந்தர்ப்பம் பார்த்து மீண்டும் எல்லை கடந்து ஓடினார்கள்.

போலந்தில் பதிந்த அகதிகள் சரிவர பராமரிக்கப்படாதது, அவர்கள் ஓடுவதற்கு ஒரு காரணம். ஒரு ஐரோப்பிய நாட்டில் நுழைந்தால், அங்கே தான் முதலில் அகதித் தஞ்சம் கோர வேண்டும் என்ற சட்டம் அப்போதே வந்து விட்டது. மேற்கு ஐரோப்பாவில் தஞ்சம் கோரியவர்களிடம், போலந்தில் தஞ்சம் கோராதமைக்கு, அல்லது அங்கே நிரந்தரமாக தங்காமைக்கு காரணம் கேட்கப்பட்டது. அபோதெல்லாம் போலந்து அரசின் குறைபாடுகளை எடுத்துச் சொன்னார்கள். இந்த விஷயம் குறிப்பாக ஜெர்மனிக்கு பெரிய தலையிடியாக இருந்தது. ஏனெனில் போலந்து ஊடாக வந்த அகதிகளில் பெரும்பான்மையானோர் ஜெர்மனியில் அகதித் தஞ்சம் கோரியிருந்தார்கள். இந்தப் பிரச்சினையை தீர்க்க ஜெர்மனி ஒரு வழி கண்டுபிடித்தது.

போலந்தில் அகதிகளைப் பராமரிக்கும் அரச திணைக்களம் ஒன்றை உருவாக்க ஜெர்மனி அழுத்தம் கொடுத்தது. போலந்திற்கு வரும் அகதிகளைப் பதிவது மட்டுமல்ல, உணவு, உறைவிடம் வழங்குவதும் அந்தத் திணைக்களத்தின் பொறுப்பு. விசாரணை நடத்தி தகுதியான அகதிகள் அங்கீகரிக்கப்பட வேண்டும், அல்லது வதிவிட அனுமதி வழங்க வேண்டும். இதிலே குறிப்பிட வேண்டியது என்னவெனில், எத்தனையோ வருடங்களாக UNHCR எடுத்துக் கூறியும் கேட்காத போலந்து அரசு, ஜெர்மனி சொன்னதும் கேட்டது. அதற்குக் காரணம் அகதிகளை போலந்தில் வைத்து பராமரிக்கும் செலவை ஜெர்மனி பொறுபேற்றுக் கொண்டது. உண்மையில் அதற்காக நிதி ஒதுக்குவதன் மூலம், பல மில்லியன் யூரோக்களை ஜெர்மனி மிச்சம் பிடிக்கின்றது. போலந்தில் இருக்கும் அத்தனை அகதிகளும் ஜெர்மனி வந்தால்? இதைவிட அதிகமாக செலவிட வேண்டியிருக்கும்.

போலந்தில் பதியப்பட்ட அகதிகளில் பெரும்பான்மையோனோர் செச்னியர்கள் (ரஷ்யா). அதை விட அல்ஜீரியா, பங்களாதேஷ், சில ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களும், தஞ்சம் கோருகின்றனர். வருடந்தோறும் சில நூறு இலங்கை (தமிழ்) அகதிகள் தஞ்சம் கோரியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. ஆனால் போலந்து முழுவதும் நூறு தமிழ் அகதிகள் இருந்தாலே அதிகம். வார்சோ நகரில் எப்படியும் நாற்பது, ஐம்பது பேர் ஆவது வசிக்கலாம். வார்சோ நகரில் வசிக்கும் தமிழர்களில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வந்து தங்கி விட்டவர்களும் உண்டு. சிலர் ஆட்கடத்தல் வேளைகளில் ஈடுபட்டவர்கள். சிலர் உள்ளூர் பெண்களை மணந்து கொண்டு போலந்துவாசியானவர்கள்.

போலந்தில் அகதியாக பதிவதற்கென்று ஒரேயொரு நிலையம் மட்டுமே உள்ளது. உக்ரைன் நாட்டு எல்லைக்கருகில், Debak எனுமிடத்தில் மட்டுமே புதிய அகதிகளை பதிவார்கள். போலந்தில் அகதிகளுக்கான முகாம்கள் உள்ளன. அனேகமாக எங்கோ தொலைதூர நாட்டுப்புறத்தில், காட்டுக்கு மத்தியில் அந்த முகாம் இருக்கும். சுற்றிவர பாதுகாப்பு போடப்பட்டிருக்கும். வெளியார் யாரும் செல்ல முடியாது. மூன்று வேளை சாப்பாடு கொடுத்து, சிறிதளவு பணம் செலவுக்கு கொடுப்பார்கள். போக்குவரத்துக்கு, தொலைபேசுவதற்கு அதெல்லாம் போதாது. முகாமில் வசதிக் குறைபாடுகள் இருப்பதால், பலர் வெளியே வாழ்கின்றனர். அதற்கு அவர்களுக்கு சுதந்திரம் உண்டு. நகரங்களில் இருக்கும் நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் வீடுகளில் வசிக்க முடியும். அப்படி வசிப்பவர்களுக்கு 750 ஸ்லொட்டி (200 யூரோ) வழங்கப்படும். வீட்டு வாடகை, சாப்பாட்டுச் செலவு எல்லாம் அதற்குள் தான் சமாளிக்க வேண்டும். அவர்கள் மாதமொரு தடவை உதவிப்பணம் எடுப்பதற்காக ஒரு காரியாலயம் செல்ல வேண்டும்.

வார்சோ புறநகர்ப் பகுதி ஒன்றில் (விமான நிலையம் அருகில்) அகதிகள் உதவிப்பணம் பெரும் காரியாலயம் அமைந்துள்ளது. விசா காட் புதிப்பிக்க வேண்டுமானாலும் அங்கே செல்ல வேண்டும். வார்சோ மத்தியில் இருந்து மெட்ரோ எடுத்து சென்று, அதன் பிறகு 45 நிமிடம் பஸ்ஸில் அந்த இடத்திற்கு போக வேண்டும். அப்படியும் சுமார் ஒரு கி.மி. பஸ் தரிப்பிடத்தில் இருந்து நடந்து செல்ல வேண்டும். அகதிகளுக்கான அரசுக் காரியாலயம் அமைந்துள்ள கட்டிடத்தை சுற்றி மரங்கள் மறைத்திருக்கின்றன. உள்ளே நுழைய முன்னர் பாதுகாப்பு உத்தியோகத்தரின் ஸ்கேன் மெஷின் ஊடாக செல்ல வேண்டும். அதே அலுவலகத்திற்கு மேலே ஒரு சிறைச்சாலை இயங்குகின்றது. அனேகமாக நாடுகடத்தப்பட வேண்டிய அகதிகளை அங்கே அடைத்து வைத்திருக்கலாம். தஞ்ச மனு நிராகரிக்கப்பட்ட சிலரை, அங்கே விசா புதுக்க வரும் போதே தடுத்து வைத்து விடுவதாக அறிந்தேன். அலுவலகப் பணியாளர்கள், ஆங்கில, ரஷ்ய மொழிகளை இரண்டாம் மொழியாகப் பேசுகின்றனர். சுவரில் அகதிகளை திருப்பியனுப்புவதை பொறுபேற்கும் IOM, மற்றும் UNHCR பிரசுரங்கள் சில காணப்பட்டன. அகதிகள் என்றால் நோய்க்காவிகள் என்று கருதினார்களோ என்னவோ, UNHCR பிரசுரம் எய்ட்ஸ் நோயை தடுப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்தது.

போலந்தில் அகதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதால், விதிவிட அனுமதி பத்திரம் அதிகமாக வழங்கப் படுகின்றது. ஒரு வருடத்திற்கு மேலாக தஞ்ச வழக்கு நடந்து கொண்டிருந்தால், "Okrana " என்ற வதிவிட அனுமதி வழங்குகிறார்கள். அதன் கால எல்லை ஒரு வருடம், சில நேரம் இரண்டு வருடங்கள். ஒவ்வொரு வருடமும் புதுப்பிக்க வேண்டியிருப்பதுடன், அதனை நிரந்தர வதிவிட அனுமதியாக வழங்குவது குறைவாகவே உள்ளது. Okrana அனுமதிப் பத்திரம் பெற்றவர்கள் சட்டப்படி வேலை செய்யலாம். வார்சோ நகரில் தான் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் பலதரப் பட்ட வேலைகளை செய்கிறார்கள். உதவிப்பணம் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே வழங்கப்படுவதால், வேலை தேட வேண்டிய நிர்ப்பந்தம். பல வருடங்களாக போலந்தில் வாழும் தமிழர்கள் சிறு வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். ஒன்றில் ரெஸ்டாரன்ட், அல்லது கடை வைத்துள்ளனர். இவர்ளை விட பலர் தற்போது கல்லூரிகளில் படிப்பதற்கென்று வருகிறார்கள். அவர்களில் சிலர், போலந்தில் அகதித் தஞ்சம் கோரியுள்ளனர்.

முதலாவது பகுதியை வாசிக்க:
போலந்து போகலாம் வாங்க! - பயணக் கதை

1 comment:

Mohamed Faaique said...

டாக்டர் படிப்புக்காகவும் அங்கு நிறைய பேர் செல்கின்றனர் என்று நினைக்கிறேன்..