Showing posts with label பூர்வீக மக்கள். Show all posts
Showing posts with label பூர்வீக மக்கள். Show all posts

Wednesday, June 04, 2014

கனடா வரலாற்றில் மறைக்கப் பட்ட இனவழிப்பு குற்றங்கள்

அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் இனவழிப்பு செய்யப்பட்ட வரலாறு வெளியுலகில் தெரிந்த அளவிற்கு, கனடாவில் நடந்த பூர்வ குடி மக்களின் இனவழிப்பு பற்றி யாருக்கும் தெரியாது. நீண்ட காலமாக, கனடிய அரசு தனது கடந்த கால இனவெறிக் கொள்கையை, மூடி மறைத்து வந்தது. 

கனடா ஒரு குடியேற்ற நாடு என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள், தாம் குடியேறுவதற்கு முன்னர், அந்த மண் மனிதர்கள் வாழாத வனாந்தரமாக இருந்ததாக நினைத்துக் கொள்கின்றனர். அங்கு ஒரு காலத்தில், பல கோடி மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதையும், அவர்களில் பெரும்பான்மையானோர் இனவழிப்பு செய்யப் பட்டனர் என்பதையும், அறியாமல் இருக்கின்றனர்.


கனடாவின் பூர்வ குடி மக்கள் மூன்று வகையாக பிரிக்கப் பட்டுள்ளனர்:
1) First Nation : பல்வேறு செவ்விந்திய இனங்கள்.
2) Métis : கலப்பின வம்சாவளியினர்.
3) Inuït :  முன்பு எஸ்கிமோக்கள் என்று அழைக்கப் பட்ட துருவப் பகுதி மக்கள். 

மேற்குறிப்பிட்ட பூர்வகுடி மக்களைப் பாதுகாப்பதற்காக தனியான பிரதேசங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. ஆனால், இன்றைய கனடிய அரசு, அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி, மெல்ல மெல்ல ஒழித்துக் கட்டிக் கொண்டிருக்கிறது. வேலையற்றோர் எண்ணிக்கை பூர்வ குடியினர் மத்தியில் அதிகமாக காணப் படுகின்றது. அரச கொடுப்பனவுகளில் பெரும் பகுதி, மது பாவனைக்கு செலவாகின்றது. அவர்களது ஆயுட்காலமும் குறைவு. பருவ வயது இளைஞர்களில், பாடசாலைக்கு சென்று படிப்பவர்கள் குறைவு. ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்டு ஜெயிலுக்குள் இருப்பவர்கள் தான் அதிகம். இது ஒரு வகையில், மிகவும் நுணுக்கமாக நடந்து கொண்டிருக்கும்  இனப்படுகொலை.

கனடிய பூர்வகுடிகளின் இனவழிப்பு, 1844 ம் ஆண்டே ஆரம்பமாகி விட்டது. அன்றிருந்த கனடிய அரசு ஆணைக்குழு, சிறு குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து, விடுதிப் பாடசாலைகளில் தங்க வைக்கும் திட்டம் ஒன்றை கொண்டு வந்தது.  நாடு முழுவதும், 139 விடுதிப் பாடசாலைகள் இயங்கத் தொடங்கின. பூர்வ குடிகளின் வாழிடங்களில் இருந்து, தொலைதூரத்தில் அமைந்திருந்த படியால், அவற்றை தடுப்பு முகாம்களாகவே கருத வேண்டும். 

சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பூர்வகுடி குழந்தைகள், கதறக் கதற பெற்றோரிடம் இருந்து பிரித்தெடுத்து கொண்டு செல்லப் பட்டனர். அவர்களை தங்க வைத்த விடுதிப் பாடசாலைகளை, கத்தோலிக்க அல்லது புரட்டஸ்தாந்து திருச்சபைகள் நிர்வகித்து வந்தன என்பது தான் விசேஷம். கிறிஸ்தவ மதப் பாதிரிகளும், கன்னியாஸ்திரிகளும் பாடசாலை ஆசிரியர்களாக, ஆசிரியர்களாக இருந்தனர். 



கிறிஸ்தவ பாதிரிகள் நடத்திய பாடசாலைகள் என்பதால், அன்பாக கவனித்து இருப்பார்கள், என்று யாராவது நினைத்தால் ஏமாந்து போவீர்கள். விடுதிப் பாடசாலைகளுக்கு கொண்டு வரப் படும் குழந்தைகளை முதலில் குளிக்க வார்ப்பார்கள். அதற்குப் பிறகு பேன் தடுப்பு மருந்து போடுவார்கள். குழந்தைகளுக்கு புதிய ஆங்கில- கிறிஸ்தவ பெயர் சூட்டப் படும். அவர்கள் அங்கே ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும். பூர்வகுடிகளின் தாய்மொழியை பேசிய பிள்ளைகள் தண்டிக்கப் பட்டார்கள். "தாழ்வான" பூர்வக்குடிப் பிறப்பு குறித்த குற்றவுணர்வு, அவர்கள் மனதில் புகுத்தப் பட்டது. 

விடுதிப் பாடசாலைகளில் தங்கிப் படித்த பூர்வக்குடிப் பிள்ளைகளை, நிவாகிகளும், ஆசிரியர்களும், "குட்டிப் பிசாசுகள்" என்று ஏளனம் செய்தனர். அனாதரவான பிள்ளைகளை அடிப்பது, துன்புறுத்துவது மட்டுமல்ல, அவர்கள் மீதான பாலியல் பலாத்காரமும் தாராளமாக இடம்பெற்றது. பல குழந்தைகள், அங்கு நடந்த கொடுமை தாங்க முடியாமல், தப்பி ஓட முயன்றன. தப்பியோடும் முயற்சியில் ஆபத்திற்குள் மாட்டிக் கொண்டதால் பல குழந்தைகள் மரணத்தை தழுவியுள்ளன. பாலியல் அத்துமீறல்கள், சித்திரவதைகள் தாங்க முடியாமல் பல சிறுவர்கள் இறந்தனர், அல்லது கொலை செய்யப் பட்டனர்.  அந்தக் கணக்குகளில் சேர்க்கப் படாத, "வெளிப்படுத்த முடியாத" காரணங்களினால் இறந்து போன பிள்ளைகள், ஆயிரக் கணக்கில் இருக்கும். மொத்தமாக, திட்டமிட்ட வகையில் கொல்லப் பட்டவர்களையும் சேர்த்தால், எண்ணிக்கை ஐம்பதினாயிரத்தை தாண்டும். 

கடந்த நூற்றாண்டில், எண்பதுகளின் இறுதிக் காலத்திலும், இன ஒதுக்கல் கொள்கை கொண்ட விடுதிப் பாடசாலைகள் இயங்கி வந்துள்ளன என்பது ஒரு அதிர்ச்சியான செய்தி. கடைசிப் பாடசாலை 1996 ம் ஆண்டு மூடப் பட்டது. அந்தக் காலகட்டத்தில், கனடிய அரசும், கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து திருச்சபைகளும் நடந்த தவறை உணர்ந்து, பகிரங்கமாக மன்னிப்புக் கோரின. ஆயினும், அவர்கள் நடைமுறைப் படுத்திய இனவழிப்புத் திட்டங்கள், இன்று வரையும் ஆறாத வடுக்களாக காணப் படுகின்றன. 

விடுதிப் பாடசாலைகளில் தங்க வைக்கப் பட்ட பிள்ளைகள், தாய், தந்தை பாசத்தை அறியாமலே வளர்ந்து விட்டன. அவர்களது தாய், தந்தையர் யார்? எங்கே வசிக்கிறார்கள்? என்ற விபரம் எதுவுமே தெரியாது. அவர்களுக்கு "உயர்ந்த ஐரோப்பிய நாகரிகத்தை" கற்றுக் கொடுத்தாக, கனடிய அரசு நினைத்துக் கொண்டிருந்தது. ஆனால், அன்று பாதிக்கப்பட்ட பல பிள்ளைகளின் மனதில், அது வெறுப்பைத் தான் விதைத்து விட்டிருந்தது.    


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Sunday, May 18, 2008

அவதியறோவா(நியூசிலாந்து): பூர்வீக பயங்கரவாதம்

2007 ம் ஆண்டு, நியூசிலாந்து, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் 18 பூர்வீக குடிமக்கள், மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நியூசிலாந்து அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் நோக்கில், ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டதாகவும், சில ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வெளியிடப்பட்ட செய்தி உலகெங்கும் அதிர்ச்சியலைகளை தோற்றுவித்தது.

வழக்கமாகவே அந்த நாட்டில் இருந்து செய்திகள் எதுவும் வெளியுலகை எட்டுவதில்லை, என்ற அளவுக்கு பிரச்சினைகள் எதுவமற்ற நாடு என்று கருதப்படுகின்றது. அதுவும் பிற காலனிகளைப் போல் அல்லாது, ஆங்கிலேய குடியேற்றக்காரர்களும், உள்நாட்டு மவோரி மக்களும், ஒப்பந்தம் செய்து கொண்டு, சமாதானமாக வாழ்வதாக, நியூசிலாந்திலும் வெளியிலும் பெரும்பான்மையானோர் நினைத்துக்கொண்டிருக்கும் போது, சிறுபான்மை பூர்வீக மக்கள் பிரச்சினை அங்கேயும் தீரவில்லை, என்பதையே பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை எடுத்துக்காட்டுகின்றது.

19 ம் நூற்றாண்டில், ஹோலான்ட் நாட்டை சேர்ந்த தஸ்மன் என்ற மாலுமி, பசுபிக் சமுத்திரத்தில் ஆஸ்திரேலியாவிற்கு அருகில் "கண்டுபிடித்த" தீவிற்கு , தனது தாயகத்தில் உள்ள மாகாணம் ஸேலாந்து (Zeeland) என்ற பெயரை வழங்கியதில் இருந்து அந்நாட்டின் ஐரோப்பிய காலனிய சரித்திரம் தொடங்குகின்றது. அங்கே குடியேறிய ஆங்கிலேயர்களும், பிற ஐரோப்பியர்களும் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையினராக நியூசிலாந்தின் அரசியல்,பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் அதே வேளை, பூர்வீககுடிகளான மவோரி மக்கள், சிறுபான்மையினராக சில குறிப்பிட்ட பிரதேசங்களில், தமது கலாச்சாரத்தை பேணிக்கொண்டு வாழ்கின்றனர்.

இருப்பினும், அந்த மக்கள் ஆங்கிலேய கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். பாடசாலைகளில், ஆங்கில மொழியில் மட்டுமே கல்வி கற்பிக்கப்படுகின்றது. அங்கே பயிலும் மாணவர்கள் தமது சொந்த மவோரி மொழி பேசினால் தண்டிக்கப்படுகின்றனர். முதலில் "மவோரி" என்ற பெயர் கூட, பல்வேறு மொழிகள் பேசும் உள்நாட்டு மக்களுக்கு, ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகள் வழங்கிய பொதுப்பெயர் ஆகும். 1987 ம் ஆண்டில் இருந்து தான் மவோரி மொழிக்கு, ஆங்கிலத்துக்கு நிகரான உதிதியோகபூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டது. அவர்களின் மொழியிலேயே நியூசிலாந்துக்கு "அவோதியறோவா" என்ற நாமகரணம் சூட்டப்பட்டது.

காலனியாதிக்க காலகட்டத்தில் இருந்தே சில இனங்கள் ஆங்கிலேயருடன் ஒத்துழைத்தும், சில இனங்கள் எதிர்த்துப்போராடியும் வந்துள்ளன. ஆங்கிலேயர்கள் விவசாயநிலங்களை அபகரித்துக்கொண்டிருந்த காலத்தில், இந்த பூர்வீக மக்கள் காடுகளுக்குள் ஒளிந்துகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். காலனிய ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்வது என்பது, அன்னிய கலாச்சாரம் ஒன்றிற்கு அடிமையாதல், என்று கருதிய துஹோ இனம் தனது கடுமையான எதிர்ப்பை காலத்திற்கு காலம் காட்ட தவறவில்லை. 1975 ம் ஆண்டு நிலவுரிமை கோரி நடந்த ஊர்வலம் ஒன்றில், 40000 பேர் கலந்து கொண்டமை நியூசிலாந்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வு. கடந்த ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டவர்களும் அந்த இனத்தை சேர்ந்தவர்கள் தான்.

சர்ச்சைக்குரிய "வைதாங்கி ஒப்பந்தம்", இன்று வரை மவோரிகளின் கிளர்ச்சிகளை தூண்டிவிடும் காரணியாக உள்ளது. தேசியதினமாக அறிவிக்கப்பட்டுள்ள "வைதாங்கி தினம்" அன்று, மவோரி ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரிட்டிஷ் முடியை பிரதிநிதித்துவப்படுத்தும் நியூசிலாந்து தேசியக்கொடியை கிழிக்கும் போராட்டம் வருடாவருடம் நடக்கும். மவோரி மக்கள் வைதாங்கி ஒப்பந்தத்தை, நிலம் திருடுவதற்காக ஆங்கிலேயர் செய்த ஏமாற்று வேலை, என்றே கருதுகின்றனர்.

1840 ம் ஆண்டு, பெப்ருவரி 6 ம் திகதி, பிரிட்டிஷ் அரச பிரதிநிதியாலும், மவோரி தலைவர்களாலும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம், ஆங்கிலத்தில் ஒரு பிரதியும், மவோரி மொழியில் ஒரு பிரதியுமாக எழுதப்பட்டது. இந்த இரண்டு பிரதிகளும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றன. பிழையான மொழிபெயர்ப்பு குறித்த சர்ச்சை இன்றைக்கும் தொடர்கின்றது.

ஆங்கில மொழியில் உள்ள பிரதியில், நியூசிலாந்து நாட்டின் "இறைமை"(sovereignty) பிரிட்டிஷ் மகாராணிக்கு சொந்தமானது என்று எழுதியுள்ளது. ஆனால் மவோரி மொழியில் உள்ள பிரதியில் நியூசிலாந்து நிலங்களின் மீதான "ஆளுகை"(governorship) உள்நாட்டு இனக்குழுத் தலைவகளின் பொறுப்பில் உள்ளதாக எழுதியுள்ளது.

ஒப்பந்தத்தின் போது மவோரி தலைவர்கள் தாமே நியூசிலாந்தின் உரிமையாளர்கள் என்று ஆங்கிலேயர்கள் அங்கீகரித்து விட்டதாகவும், அவர்கள் விருந்தாளிகளாகவே அங்கே தங்கியிருப்பதாக கருதினர். அதற்குமாறாக நியூசிலாந்து ஆட்சியதிகாரத்தை மவோரிகள் தம்மிடம் ஒப்படைத்துவிட்டதாக, ஆங்கிலேயர் ஒப்பந்தம் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டனர்.

அடுத்து வந்த வருடங்களில் தாம் ஏமாற்றப்பட்டு விட்டதை மவோரி மக்கள் உணர்ந்து கொண்டனர். பெரும்பான்மை நியூசிலாந்து நிலங்களை ஆங்கிலேயர்கள் சொந்தமாக்கிக்கொண்டனர். நேர்மையற்ற வழியில் நிலங்களை அபகரித்த, ஆங்கிலேயரின் ஈனச்செயல், இரண்டு சொற்களின் பிழையான மொழிபெயர்ப்பால் சாத்தியமானது. "இறைமை", "ஆளுகை" போன்ற சொற்களுக்கு இடையில் உள்ள வித்தியாசம், அன்று மவோரிகளுக்கு தெரிந்திருக்கவில்லை.

இன்று அரசியல் அறிவு பெற்ற மவோரி மக்கள், தமக்கென சுயாட்சிப்பிரதேசங்களை கோருகின்றனர். தமது மொழி, பண்பாடு என்பன சுயநிர்ணய உரிமையை பெற்றுக்கொள்வதன் மூலமே சாத்தியமாகும் என நம்புவதால், அதற்கென அரசியல் வேலைப்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர். உலகை மாற்றிய 2001 செப்டம்பர் 11 க்கு பிறகான, "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" நியூசிலாந்தையும் பாதித்துள்ளது. அந்நாட்டு பயங்கரவாதிகள், சுயநிர்ணய உரிமை கோரும் பூர்வீக மவோரி மக்கள்.