Monday, September 04, 2023

முல்லா வேலனின் "சாதியமும் தேசியமும்" பிரார்த்தனைக் கூட்டம்

 

கிளப் ஹவுசில் முல்லா வேலன் (தோழர் என்ற அடைமொழி அவருக்கு பொருந்தாது. அவர் ஒன்றில் Dogmatist அல்லது Fundamentalist.) தலைமையில் சாதியமும் தேசியமும் என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில் மீண்டும் யாழ்ப்பாணத்தில் நிலவும் சாதிப் பிரச்சினைகளை பற்றி பேசினார்கள். வழமை போல இனவாத- பாஸிஸத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மட்டுமே பேச அழைக்கப் பட்டிருந்தனர். இருப்பினும் சிலர் தமது அறிவுக்கு எட்டிய வரையில் நியாயமாகப் பேசினார்கள். அதை முதலில் பாராட்ட வேண்டும்.

அவர்களது பேச்சுகளில் இருந்து தெரிய வந்ததாவது, அருண் சித்தார்த் தான் இவர்களை இந்தளவு தூரம் கொண்டு வந்து விட்டிருக்கிறார். அதாவது, இவர்கள் பல வருட காலமாக அருண் சித்தார்த் மீது "கஞ்சா வியாபாரி, அரச கைக்கூலி" போன்ற பல்வேறு வகையான அவதூறுகள் செய்து, குற்றச்சாட்டுகள் சுமத்தி புறக்கணித்து வந்துள்ளனர். அருண் சித்தார்த்தை ஓரம் கட்டலாம் என நினைத்து மாறாக அவனை வளர்த்து விட்டிருக்கிறார்கள். இதை அங்கு உரையாற்றிய பலர் எதிரொலித்தனர்.

இது தொடர்பாக பாரதி எழுப்பிய கேள்விகள் நியாயமானவை. "அருண் சித்தார்த் ஒரு முக்கியமில்லாத, சாதாரண நபர் என்றால் எதற்காக மூச்சுக்கு முன்னூறு தடவை அவனைப் பற்றி பேசுகிறீர்கள்?" என்றார். அதையே செண்பகம் பறவை (முன்பு இசைவேந்தன் என்ற பெயரில் இருந்தவர்) என்பவரும் கூறினார். "அருண் சித்தார்த்தின் கொள்கையுடன் எமக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், அங்கு இருக்கும் சாதிப் பிரச்சினையை அரசியல்வாதிகள் பேசத் தவறியதை, அவர் பேசுகிறார். நாளைக்கு இன்னொரு அருண் சித்தார்த் வரலாம்." என்றார்.

ஆயினும் அவரும் தற்போது அங்கே சாதி ஒடுக்குமுறை இல்லை என்றே வாதிட்டார். (இதே மாதிரி ஒரு சராசரி சிங்களவரைக் கேட்டால் இலங்கையில் இன ஒடுக்குமுறை இல்லை என்பார்.) அவர் "ஒடுக்கப்படுத்தப் பட்டவர்கள்" என்று புதிய கலைச் சொல்லை உருவாக்கி கொடுத்தார். அதாவது அது இறந்த காலம். இப்போது இல்லை என நாம் நினைத்துக் கொள்ள வேண்டுமாம்.

ஆனால், அவர் அறியாமலே முன்னுக்குப் பின் முரண்பாடாகப் பேசினார். ஒரு தடவை ஒடுக்குமுறை இல்லை என்றவர் மறு தடவை ஒடுக்குமுறையை விபரித்து பேசினார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை பாராளுமன்ற பிரதிநிதி ஆக்காதது ஒரு குறைபாடு என்றார். அது தானே ஒடுக்குமுறை? சிறிலங்கா அரசாங்கத்தில் தமிழர்களுக்கு சமமான பிரதிநிதித்துவம் இல்லை என்பதால் தானே ஈழப்போர் தொடங்கியது? சிங்களப் பேரினவாதிகளின் அதே ஒடுக்குமுறை கொள்கையைத் தானே, தமிழ்ப் பேரினவாதிகளும் பின்பற்றுகிறார்கள்? இருவருக்கும் என்ன வித்தியாசம்?

இசைவேந்தன் (செண்பகம் பறவை) அவர் அறியாமலே இன்றைய சமூகத்தில் உள்ள இன்னொரு பிரதானமான சாதிய ஒடுக்குமுறையை வெளிக் கொணர்ந்தார். குறிப்பாக அரச நிறுவனங்களில் பெரும்பாலான வேலைகள் ஒருவர் ஓய்வுபெற்ற பின்னர் அவரது மகனுக்கு கொடுக்கும் வழக்கம் காரணமாக முன்னேறிய சாதியினர் ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக உள்ளது என்றார். உண்மை தான். அரசு வேலைவாய்ப்புகளில் சிங்களவர்களை போட்டு விட்டு தமிழர்களைப் புறக்கணித்த படியால் தானே ஈழப் போராட்டம் தொடங்கியது? அதே பிரச்சினை, அதே ஒடுக்குமுறை, வடக்கில் சாதியின் பெயரால் நடைமுறையில் உள்ளது. அது மட்டுமே வித்தியாசம்.

முந்திய காலங்களில் ஒடுக்குபவன் தன்னை சாதி அடையாளத்துடன் வெளிப்படுத்திக் கொள்வான். இன்றைய காலத்தில் இன அடையாளத்தை போர்வையாக மூடிக் கொள்கிறான். அவ்வளவு தான் வித்தியாசம். அன்றும், இன்றும் ஒடுக்குபவனும், ஒடுக்குமுறையும் ஒன்று. தெற்கில் சிங்கள இனப் போர்வைக்கு உள்ளே இருப்பது கொவிகம சாதிய மேலாதிக்கவாதிகள். அதே மாதிரி வடக்கில் தமிழ் இனப் போர்வைக்கு உள்ளே இருப்பது வெள்ளாள சாதிய மேலாதிக்கவாதிகள். மேலதிக விளக்கம் தேவையில்லை.

தெற்கில் சிங்கள மேலாதிக்கம் என்றால் வடக்கில் வெள்ளாள மேலாதிக்கம் உள்ளது. இரண்டும் ஒடுக்குமுறை சக்திகள் தானே? நிச்சயமாக இந்த இடத்தில் சாதிப் பிரச்சினையின் மூலக்கருவுக்கு கிட்ட வந்து விட்டோம். ஆனால் கேட்பவர்கள் மனதில் விழிப்புணர்வு ஏற்பட முன்னர் முல்லா வேலன் விழித்துக் கொண்டார். இடையில் குறுக்கிட்டு பேச விடாமல் தடுத்தார். "இது வேறொரு தளத்திற்கு போகிறது.... அது இலங்கை அரசின் திணைக்களத்திற்குள் உள்ள பிரச்சினை... நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது..." என்று பேசி மழுப்பினார். இப்படித் தான் உண்மையான பிரச்சினைகள் மக்களுக்கு தெரிய விடாமல் திசைதிருப்பப் படுகின்றன. 
 

Saturday, September 02, 2023

தர்மன் சண்முகரட்னம்- ஒரு "சிங்கப்பூர் கதிர்காமர்"!

 Image

தர்மன் சண்முகரட்னம் என்ற "யாழ்ப்பாணத் தமிழன்"(?) சிங்கப்பூர் ஜனாதிபதியாக வந்து விட்டார் என்று மோட்டுத் தமிழ்த்தேசியவாதிகள் துள்ளிக் குதிக்கிறார்கள். ஒருவேளை இலங்கையில் யுத்தம் நடந்திரா விட்டால், புலிகள் இருந்திரா விட்டால், கதிர்காமர் வெளிவிவகார அமைச்சரான நேரம் இதே மோட்டுத் தமிழ்த்தேசியவாதிகள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்பார்கள். ஒருவேளை கதிர்காமரை புலிகள் சுட்டுக் கொல்லாமல் விட்டிருந்தால் அவர் ஜனாதிபதியாக கூட வந்திருப்பார்.

கதிர்காமருக்கும், தர்மனுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பீர்கள். இருவருக்கும் இடையிலான நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

1. கதிர்காமர், இலங்கையில் ஆளும் கட்சியான SLFP தலைமைக்கு மிக விசுவாசமான முக்கிய உறுப்பினர். பண்டாரநாயக்க குடும்பத்தின் நெருங்கிய நண்பர். அதன் விளைவாக SLFP கட்சியில் அதியுயர் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஒரு தமிழன். அதிலும் "யாழ்ப்பாணத் தமிழன்". ஆனால் உண்மையில் யாழ்ப்பாணம் தெரியாத கொழும்பு தமிழன்.

2. தர்மன் சண்முகரட்னம், சிங்கப்பூரில் ஆளும் கட்சியான PAP தலைமைக்கு விசுவாசமான முக்கிய உறுப்பினர். லீ குவான்யூ குடும்பத்தின் நெருங்கிய நண்பர். அதன் விளைவாக கட்சியின் அதியுயர் தலைமைப் பொறுப்புக்கு வந்த ஒரு தமிழன். அதிலும் "யாழ்ப்பாணத் தமிழன்". உண்மையில் யாழ்ப்பாணம் தெரியாத சிங்கப்பூர் தமிழன்.

Srilanka Freedom Party (SLFP), People's Action Party (PAP) ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கூட நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இரண்டும் ஒரே காலகட்டத்தில் உருவாக்கப் பட்டவை. ஆரம்பத்தில் தங்களை மத்திய- இடது கொள்கை சார்ந்ததாக காட்டிக் கொண்டாலும், பிற்காலத்தில் மத்திய- வலது கொள்கையை பின்பற்றின. மக்கள் நலன் சார்ந்த Populist அரசியல் பேசிக் கொண்டே இடதுசாரிகளை ஒழித்துக் கட்டியதில் இரண்டும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல.

அவ்வாறான அரசியல் பின்னணியில் வந்தவர்கள் தான் இலங்கைக் கதிர்காமரும், சிங்கப்பூர் தர்மனும். இருவரும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். இதை எல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கு, நமது மோட்டுத் தமிழ்த்தேசியவாதிகளுக்கு அறிவும் கிடையாது, பக்குவமும் கிடையாது.

லக்ஷ்மன் கதிர்காமர் மானிப்பாயில் பிறந்த ஒரு யாழ்ப்பாணத் தமிழர். அவர் வீட்டில் ஆங்கிலம் பேசி தமிழை மறந்திருக்கலாம். யாழ்ப்பாணத்திற்கு சென்று வாக்கரசியல் செய்திராத விட்டால் ஜி.ஜி.பொன்னம்பலம், தந்தை செல்வா போன்ற "தமிழ்த்தேசிய" தலைவர்களும் கதிர்காமர் மாதிரி ஆங்கிலம் மட்டுமே பேசிக் கொண்டு தமிழை மறந்து விட்டிருப்பார்கள். பிரிட்டிஷ் காலனிய காலத்தில் பிறந்து வளர்ந்த மேட்டுக்குடித் "தமிழ்" குடும்பங்களில் இது சாதாரணமான விடயம்.

அதே மாதிரி சிங்கப்பூரில் பிறந்த "தர்மன் சண்முகரட்னம் ஒரு தமிழரா?" என்றும் கேட்கலாம். அவரும் வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுகிறவர் தான். கதிர்காமர் திருமணம் முடித்தது ஒரு பிரெஞ்சு- பாகிஸ்தான் கலப்பின பெண்ணை. அதே மாதிரி தர்மன் திருமணம் முடித்தது ஒரு சீன- ஜப்பானிய கலப்பின பெண்ணை. இவர்கள் வீட்டில் தமிழில் பேசி இருப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்? மேலும் தமிழ் அடையாளத்தை துறந்தவர்கள் என்பதால் தான் நாட்டின் அதியுயர் பதவிக்கு வர முடிந்தது. கதிர்காமர் தன்னை ஒரு சிறிலங்கன் என்று அடையாளப் படுத்தியவர். அதே மாதிரி தர்மன் தன்னை ஒரு சிங்கப்பூரியன் என்று அடையாளப் படுத்தியவர்.

அது போகட்டும். உங்களுக்கு ஓர் உண்மை சொல்லவா? இலங்கை மாதிரி சிங்கப்பூரில் "தமிழ்த்தேசியம்" என்று அடையாள அரசியல் செய்யக் கிளம்பினால் முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவார்கள்! "சிங்கப்பூர் தமிழரசுக் கட்சி", "சிங்கப்பூர் விடுதலைப் புலிகள்" இப்படி எல்லாம் தொடங்கலாம் என்று கனவிலும் நினைத்து விடாதீர்கள். அப்படியான எண்ணம் கொண்ட அத்தனை பேரையும் ஒரே நாளில் கைது செய்து ஜெயிலுக்குள் போட்டு விடுவார்கள். சிங்கப்பூர் வெளிப் பார்வைக்கு தான் அழகாக இருக்கும். உள்ளே மிகக் கொடூரமான சர்வாதிகார ஆட்சி நடக்கும் நாடு.

Sunday, August 27, 2023

சாதியால் பிரிந்த முன்னாள் போராளிக் குடும்பம்

 

இது ஓர் உண்மைக்கதை

யாழ்ப்பாணத்தில் ஒரு புலிப் போராளிகள் குடும்பத்தின் கதை. கணவன், மனைவி இருவரும் முன்பு போராளிகளாக இருந்த காலத்தில் இயக்கத்திற்குள்ளே சாதி கடந்த கலப்பு மணம் செய்து கொண்டவர்கள். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளன. கணவன் உயர்த்தப்பட்ட சாதியையும், மனைவி தாழ்த்தப்பட்ட சாதியையும் சேர்ந்தவர்கள்.

யுத்தம் முடிந்த பின்னரான காலத்தில் குடும்பம் வறுமையில் வாடியது. மனைவி தன்னிடமிருந்த நகைகளை விற்று அல்லது அடைவு வைத்து கணவனை சவூதி அரேபியாவுக்கு வேலை செய்ய அனுப்பி வைத்தார்.

கணவன் விடுமுறைக்கு வந்த காலத்தில், அவரது பெற்றோர் சாதியை காரணமாக காட்டி பிரித்து விட்டனர். அவருக்கு உடனடியாக தமது சாதிக்குள் ஒரு பெண்ணை பார்த்து மறுமணம் செய்து வைத்து சுவிட்சர்லாந்துக்கு அனுப்பி விட்டனர். இந்த விடயங்கள் யாவும் மனைவிக்கு தெரியாமல் மறைக்கப் பட்டன. தற்போது அவர் கணவரது உதவியுமின்றி தனியாக இரண்டு பிள்ளைகளையும் வளர்க்க கஷ்டப் படுகிறார்.

யாழ்ப்பாணத்தில் இது போன்று நூற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்துள்ளன. நமது தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளும், ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை. இது தான் புலிகள் சாதியை ஒழித்த (ஒளித்த) இலட்சணம். சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வராமல், புலிப் போராளிகளுக்கு மட்டும் கலப்பு மணம் செய்து வைப்பதால் சாதி ஒழியப் போவதில்லை. உண்மையில் தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்னும் தொடங்கவேயில்லை.

Saturday, August 26, 2023

இராணுவ முகாமை அகற்றாதே! யாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்!!

  Aug 15, 2023

யாழ் குடாநாட்டில், பிரபாகரன் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள, பருத்தித்துறையை சேர்ந்த கற்கோவளம் எனும் இடத்தில் இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் என் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். (15-8-2023) அந்த பகுதியில் திருட்டுகள், போதைவஸ்து பாவனை அதிகரித்துள்ள நேரத்தில் தமக்கு பொலிஸ் மீது நம்பிக்கை இல்லையென்றும், இராணுவம் இருந்தால் பாதுகாப்பு என்றும் அந்த மக்கள் தெரிவித்தனர். உண்மையில் லஞ்சம், ஊழலில் ஊறிய, கையாலாகாத காவல்துறை மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதன் பிரதிபலிப்பு.

இது இப்படி இருக்கையில், இவ்வளவு காலமும் "சிங்கள இராணுவம் தமிழர்களின் எதிரி" என்றே அரசியல் செய்து வந்த elite தமிழ்த்தேசியவாதிகளுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. "ஆட்டு மந்தைகள்... போதைவஸ்துக்கு அடிமையானவர்கள்... விலை மாதர்கள் (ஆர்ப்பாட்டத்தில் பெண்களும், சிறுமிகளும் இருந்தனர்.)" என்றெல்லாம் ஏசத் தொடங்கி விட்டனர். அடித்தட்டு தமிழ் மக்கள் மீது, மேட்டுக்குடி தமிழ்த்தேசிய போலிகள் கொண்டிருக்கும் வன்மம் நன்றாக வெளிப்பட்டது.

அது சரி, சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு அச்சுவேலி பிள்ளையார் கோயில் திருவிழாவில் சிங்கள இராணுவம் வந்து தேரிழுத்த நேரம் இவர்கள் எங்கே போனார்கள்? அந்த நேரம் அழகான ஆதிக்க சாதிப் பெண்கள் சட்டை போடாத சிங்கள இராணுவ வீரர்களுடன் உரசிக் கொண்டு தேரிழுத்தார்கள். பருத்தித்துறை ஆர்பாட்டத்தில் பங்கெடுத்த பெண்களை நாக்கூசாமல் "விலை மாதர்" தூற்றிய வாய்கள், அந்நேரம் என்ன சொல்லி இருக்க வேண்டும்? அச்சச்சோ... மேல் சாதி, மேல்தட்டு வர்க்கம் பற்றி ஒரு வார்த்தை கூட குறை சொல்ல மாட்டோம்! அந்தளவு வர்க்க பாசம்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு பொன்னாலையில் மாட்டு வண்டில் சவாரியில் நடந்த கைகலப்பு காரணமாக, ஆதிக்க சாதியினர் அழைப்பின் பேரில் வந்த சிங்கள இராணுவம் ஒடுக்கப்பட்ட சாதியினர் வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. நம்ம தமிழ் உணர்வாளர்களை இப்போது கேட்டாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நடிப்பார்கள்.

அது போகட்டும். 1987 முதல் 1990 வரை, தொடர்ச்சியாக 3 வருடங்கள் விடுதலைப் புலிகளும், சிங்களப் படையினரும் இணைபிரியாத நண்பர்களாக நட்பு பாராட்டியதை எப்படி பார்க்கிறீங்க? ஆங்... அது மேட்டுக்குடி நலன் சார்ந்த "சாணக்கியம்" இல்லே? அந்த நேரம் நம்ம elite- தமிழ்த்தேசியவாதிகள் எல்லாம் செவ்வாய்க் கிரக சுற்றுலா சென்றிருந்தனர். பாவம், அவர்களுக்கு ஒன்றும் தெரியாது.

இது தான் மேட்டுக்குடி கனவான்களின் எலைட்- தமிழ்த்தேசியம். அவர்களுக்கு தேவைப்படும் போதெல்லாம் இராணுவத்தை பயன்படுத்திக் கொள்வார்கள். மற்றைய நேரங்களில் "சிங்கள இராணுவம் தமிழர்களின் எதிரி" என்று தமக்கு கீழே உள்ள அடித்தட்டு மக்களுக்கு வகுப்பெடுப்பார்கள். 
Déjà vu.

முதலாம் உலகப் போர் காலம் முதல் தேசியவாதிகள் செய்து வரும் பிரச்சாரம். தேசியவாதம் என்ற சொல்லுக்கு முன்னுக்கு தமிழ் என்ற அடைமொழியை போட்டு விட்டால் கொள்கை மாறி விடுமா? 
c'est la même chose
 

Thursday, August 24, 2023

கிளப் ஹவுசில் நடந்த சாதி ஒளிப்பு 🤡 நாடகம் ⁉️

 

கிளப் ஹவுசில் இனவாத- பாஸிஸ்டுகள் ஒன்று சேர்ந்து "சாதி ஒழிப்பு மகாநாடு" நடத்தினார்கள். அங்கே இரண்டு கோமாளி "மார்க்சியர்களும்"(?) சிறப்பு விருந்தினர்களாக பங்குபற்றினார்கள். அவர்கள் தமது வழக்கமான இனவாதத்திற்கு வெள்ளையடிக்கும் வேலையை திறம்பட செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது எதுவும் புரியா விட்டாலும் இனவாத தற்குறிகள் "ஆஹா... ஓஹோ..." என்று புகழ்ந்து "மார்க்சிய"(?) கோமாளிகளை பப்பாசி மரத்தில் ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

"அடடே... என்ன இது இனவாதிகள், அதிலும் சிலர் தீவிர சாதிவெறியர்கள், திடீரென சமூக அக்கறையுடன் பேசுகிறார்களே!" என்று எட்டிப் பார்த்தால் ஒரே வழ வழா, கொள கொளா பாணியில் பேசிக் கொண்டிருந்தார்கள். மகாநாட்டில் கலந்து கொண்ட "அறிவுஜீவிகள்" சாதி ஒழிப்புக்கு (திருத்தம்: ஒளிப்புக்கு) முன்மொழிந்த தீர்வுகள்: 
- எல்லோருக்கும் கல்வி அறிவூட்டி சாதியை ஒழித்து விடுவார்களாம். ஏற்கனவே இலங்கையில் 95% எழுத்தறிவு இருப்பதை இவர்களுக்கு யாராவது சொல்லி விடுங்கள்.

- பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு நன்னெறி போதித்து சாதி தவறு என்று உணர வைத்து விடுவார்களாம். பாலர் வகுப்பில் இருந்தே ஆத்திசூடி சொல்லிக் கொடுக்கிறார்கள். :""சாதி இரண்டொழிய வேறில்லை" என்றும் கற்பிக்கிறார்கள். அட போங்கப்பா... நன்னெறி போதிக்கும் ஆசிரியரே தனிப்பட்ட வாழ்வில் சாதி பார்ப்பார். இங்கே ஊருக்கு தான் உபதேசம்.

இனவாத- பாஸிஸ்டுகள் திடீரென சமூக அக்கறை கொள்வது ஒன்றும் புதிய விடயமல்ல. ஒரு தடவை சாதியே இல்லை என்பார்கள். இன்னொரு தடவை அதே வாயால் சாதிப் பிரச்சினை பற்றி உரையாடுவோம் என்பார்கள். அதற்கு காரணம் உள்ளது. சமுதாயத்தில் உள்ள மிக முக்கியமான பகை முரண்பாடுகளான சாதிய/வர்க்க பிரச்சினைகள் மேலெழும் போதெல்லாம் அதை தணிப்பதற்கு, மறுபடியும் கிடப்பில் போடுவதற்கான நாடகம்.

உலகில் உள்ள எல்லா பாஸிஸ்டுகளும் ஒரே மாதிரியான சிந்தனைப் போக்கு கொண்டவர்கள். ஹிட்லரின் கட்சியின் பெயர் "ஜெர்மன் தேசிய சோஷலிச தொழிலாளர் கட்சி". அந்த கட்சிக்கும் சோஷலிசத்திற்கும், தொழிலாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால் சுருக்கமாக நாஸி (தேசியம்) என்ற சொல்லை மட்டும் பயன்பாட்டில் வைத்திருந்தார்கள்.

"அந்த கூட்டத்திற்கு உங்களையும் அழைத்தார்கள் தானே? அப்போது (சாதி ஒழிப்புக்கான) தீர்வையும் சொல்லி இருக்கலாமே?" என்று கடிந்து கொண்டார் ஒரு நண்பர். வாஸ்தவம் தான். ஆனால் முதலில் என்னை பேச விட்டால் தானே? ஏற்கனவே அழைத்து விட்டு அடித்து துவைக்க காத்திருந்த இனவாத- பாஸிஸ்டுகள் நடத்திய கூட்டத்தில் நான் எந்த கருத்தை வைத்திருந்தாலும் பாய்ந்து பிடுங்கி இருப்பார்கள். உண்மையில் அது தான் நடந்தது.

"சிங்களவர்களிடம் சாதி இல்லை என்று டிவிட்டரில் எழுதினீர்களாமே?" என்று புலனாய்வுத்துறை அதிகாரி போன்றிருந்த ஒருவர் விசாரணையை ஆரம்பித்தார். உடல் ரீதியாக சித்திரவதை செய்யாத குறை. (ஆனால் உளவியல் சித்திரவதைக்கு குறைவில்லை) "சிங்களவர்கள் மத்தியில் சாதி இல்லை என்று எப்போது சொன்னேன்?" நான் கேட்டதற்கு எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை.

அட தற்குறிகளே! சிங்களவர் மட்டுமல்ல, பாகிஸ்தானியர் மத்தியிலும் கூட சாதிகள் உள்ளன. "என்னால் ஜப்பானில் உள்ள சாதியம் பற்றியும் கூற முடியும். ஆனால் அதைப் பற்றி இவர்களுக்கென்ன கவலை?" - இதை அங்கே நேரடியாக கேட்டிருந்தேன்.

சிங்களவர்கள் மட்டுமல்ல, மட்டக்களப்பு, திருகோணமலையில் வாழும் தமிழர்களும் தீண்டாமை கடைப்பிடிப்பதில்லை என்று அழுத்தம் திருத்தமாக சொன்னேன். என்னை விசாரணைக்கு அழைத்த புலனாய்வுத்துறை அதிகாரிக்கு ஒரு காது மட்டுமே கேட்கும் போலிருக்கிறது. மட்டக்களப்பு, திருகோணமலை தமிழர்களை மட்டும் விட்டு விட்டு, சிங்களவர்களை மட்டும் தூக்கிப் பிடித்தார். (அட... அப்போது தானே இனத்துரோகி பட்டம் சூட்டலாம்? புலனாய்வுத்துறை மூளை என்றால் சும்மாவா?)

ஆகவே, அவர் என்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி விட்டாராம். குற்றப் பத்திரிகை வாசித்தார். "கனம் கோட்டார் அவர்களே, குற்றம் சாட்டப்பட்ட நபர் சிங்களவர்களுக்கு ஆதரவாக பேசி விட்டதால் அவரை தமிழினத்தில் இருந்தே ஒதுக்கி வைக்கிறேன். அவர் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக வாழ வேண்டும். அவருக்கு எந்த தமிழனும் சோறு, தண்ணி கொடுக்க கூடாது." என்று வழக்காடினார்.

என்ன கொடுமை இது? சாதி ஒளிப்பு, ஸாரி மழுப்பு, ச்சே ஒழிப்பு மகாநாட்டில் பேச வந்த என்னையே தீண்டத்தகாதவன் ஆக்கி விட்டார்களே? ஒருவேளை காலச்சக்கரத்தில் ஏறி 17ம் நூற்றாண்டுக்கு வந்து விட்டேனோ? எதற்கும் ஒரு தடவை மொபைல் நாட்காட்டியை தட்டிப் பார்த்தேன். ஆண்டு 2023 எனக் காட்டியது. அப்பாடா... இப்போது நடப்பது 21ம் நூற்றாண்டு தான்.

கிளப் ஹவுஸில் கைகோர்ட் நீதிபதி மாதிரி இருந்த ஒருவர் தீர்ப்பளிக்க முன்னர் ஒரு கேள்வி கேட்டார்: "நீவிர் யாழ்ப்பாணத்தில் மட்டும் சாதிய- தீண்டாமை இருப்பதாக சொல்கிறீர். யாழ்ப்பாணத்தார் மீது அப்படி என்ன வன்மம்?" என்று ஒரே போடாகப் போட்டார்.

ஐயயோ, இனி நீதிபதி ஷரியா சட்டத்தின் படி அல்லாவின் நாமத்தால் கல்லால் அடிக்கும் தண்டனை கொடுக்கப் போகிறார். அல்லாவே, ஆட்டுக்குட்டியே என்னை காப்பாற்ற வேண்டுமென மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

யோவ், மூளையை தலைப்பாகை சுருட்டி வைத்திருக்கும் அநீதிபதி! - அப்படி சொல்ல வந்ததை வாய்க்குள் வைத்துக் கொண்டு, "அடக்குமுறையை எதிர்த்தால் அது வன்மமா... சமூக ஒடுக்குமுறை பற்றி பேசினால் வன்மம் என்பீர்களா? இது என்ன நியாயம்?" என்று கேட்டு விட்டேன்.

நான் அப்படி கேட்பேன் என்று நீதிபதி எதிர்பார்த்திருக்கவில்லை போலிருக்கு. ஒரு நொடி வாயடைத்து போனவர் சுதாகரித்துக் கொண்டே "அது வந்து... போயி... சிங்களவர்களிடமுள்ள தீண்டாமையை பற்றி பேச மட்டும் அனுமதிக்கப் படும். யாழ்ப்பாணத்தில் உள்ள தீண்டாமையை பற்றி பேசக் கூடாதென ஆயத்துல்லா பாணியில் ஃபத்வா உத்தரவு போட்டார்.

என்னடா இது? தப்பித் தவறி ஒருவேளை ஆப்கான் தாலிபான்களின் கிளப் ஹவுஸுக்கு வந்து விட்டேனோ? நான் யோசிக்க கொண்டிருக்கும் பொழுதே ரூமை விட்டு ரிமூவ் பண்ணி விட்டார்கள். அப்பாடா, மறுபடியும் நிஜ உலகிற்கு வந்து விட்டேன்.