Sunday, August 06, 2023

ஈழப்போரில் "உரிமை கோரப் படாத" குண்டுவெடிப்புகள்!

ஈழப்போர் தொடங்கிய காலங்களில் வடக்கு கிழக்குக்கு வெளியே குறிப்பாக கொழும்பு நகரில் வெடி குண்டுத் தாக்குதல்கள் நடத்தியது புலிகள் அல்ல. அது ஈழப் புரட்சி அமைப்பு(EROS) எனும் இன்னொரு இயக்கம். 1984 ம் ஆண்டு ஒபரோய் ஹொட்டேல் தொடங்கி பல குண்டு வெடிப்புகளை நடத்தினார்கள். அவை யாவும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். கொழும்பு மத்திய தபால் நிலைய குண்டுவெடிப்பில் குறிப்பிட்ட அளவு பொது மக்களும் பலியாகி இருந்த போதிலும், EROS தான் செய்த எல்லா குண்டுவெடிப்புகளுக்கும் பொறுப்பேற்று உரிமை கோரி வந்தது. 


அப்போது புலிகள் இது போன்ற தாக்குதல்களை முற்றாக நிராகரித்து வந்தனர். "நீங்கள் இலங்கை முழுவதையும் தறிழீழமாக கேட்கிறீர்களா?" என்று கிண்டல் அடித்தார்கள். அந்த காலகட்டத்தில் இயக்கங்களுக்கு ஏதாவதொரு திரைப்படத்தின் பெயர் பட்டப்பெயராக வைக்கப் பட்டது. அவ்வாறு EROS இயக்கத்தை "தூரத்து இடிமுழக்கம்" என்று அழைத்தனர். அதாவது தமிழ் மக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லாத, அதே நேரம் எந்த பாதிப்பும் இல்லாத இடத்தில் யுத்தம் செய்கிறார்களாம். அதை அன்று புலிகளும் வழிமொழிந்தனர்.
 

பல வருடங்களுக்கு பின்னர், குறிப்பாக 1991 இலிருந்து புலிகளும் கொழும்பில் குண்டுவெடிப்புகள் நடத்த தொடங்கினார்கள். ஆனால் அதற்கு முன்னர் ஒரு தடவை 1987 ம் ஆண்டு கொழும்பு கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் பகல் நேரத்தில் குண்டு வெடித்தது. பொது மக்கள் 100 பேரளவில் பலியாகினர். அன்று யாரும் அந்த குண்டுவெடிப்புக்கு உரிமை கோரவில்லை. இருப்பினும் அதை புலிகளே செய்ததாக நம்பப் படுகிறது. EROS தான் செய்யவில்லை என்று உடனடியாக மறுத்திருந்தது. 1987 ம் ஆண்டு வடக்கில் பிற இயக்கங்களை தடைசெய்து விட்டு புலிகள் மட்டுமே போரிட்டுக் கொண்டிருந்த காலகட்டம். EROS மீது தடை இல்லாத போதிலும் அவர்கள் தமது இராணுவ நடவடிக்கைகளை வெகுவாக குறைத்து விட்டிருந்தனர்.

Friday, August 04, 2023

நோர்வேயில் புலிகளுக்கு இராணுவப் பயிற்சி வழங்கப் பட்டதா?

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், வன்னியில் இருந்து நோர்வே சென்ற புலிகளின் பிரதிநிதிகளுக்கு அங்குள்ள இராணுவ முகாமொன்றில் பயிற்சி அளிக்கும் வீடியோ பார்க்க கிடைத்தது. எப்படியான பயிற்சிகள் என்பதை நோர்வீஜிய படையினர் வீடியோவில் பதிவு செய்துள்ளனர். அதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், அது கலவரங்களை தடுப்பதற்கான காவல்துறை (மிலிட்டரி பொலிஸ்) பயிற்சி.

அதாவது, சமாதான உடன்படிக்கையின் பின்னர் ஒரு தீர்வு எட்டப்பட்டால் புலிகள் இராணுவ ரீதியாக இயங்க முடியாது. ஆயுதங்களையும் ஒப்படைக்க வேண்டி இருக்கும். அதற்குப் பின்னர் ஒரு அரசியல் கட்சியாக மட்டுமே இயங்கலாம். முன்னாள் போராளிகள் புதிதாக உருவாகப் போகும் வட - கிழக்கு மாகாண பொலிஸ் படையில் சேர்த்துக் கொள்ளப் படுவர். தற்போதைய நிலையில் இது அனுமானமாக தெரியலாம். ஆனால் அது மட்டும் தான் நடைமுறைச் சாத்தியமான விடயம். அதை நிரூபிக்கும் வகையில் பயிற்சியில் ஈடுபட்ட பொலிசாரின் கைகளில் இருந்த கவசங்களில் "KFOR" என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது நேட்டோவின் கொசோவோ சமாதானப் படையின் குறியீடு.

உண்மையில் புலிகள் அல்லது தமிழர்களுக்கு பூரண திருப்தி அளிக்கக் கூடிய ஒரு தீர்வு எட்டப் பட்டாலும், பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்று அர்த்தம் அல்ல. இங்கு தீர்க்கப் பட்டது இனப் பிரச்சினை மட்டுமே. ஏனைய பிரச்சினைகள் அப்படியே இருக்க போகின்றன. அவற்றுக்காக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து போராட்டங்கள் வெடிக்கலாம். ஏன் கலவரங்கள் கூட நடக்கலாம். அவற்றை அடக்கும் பொறுப்பு புலிகளின் அரசாங்கத்திற்கு உள்ளது. அவர்கள் தமது பொலிஸ் படையை அனுப்பி மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும். சுருக்கமாக சொன்னால் சிங்கள பொலிஸ் செய்த அதே வேலையை இனி தமிழ்ப் பொலிஸ் செய்ய வேண்டும். அதற்கான பயிற்சி தான் நோர்வேயில் அளிக்க பட்டது.

நோர்வேயில் மட்டுமல்ல, பிற மேற்கத்திய நாடுகளிலும் மக்கள் போராட்டங்களை அடக்குவதற்கு பொலிஸ் கையாண்ட வன்முறை நடவடிக்கைகள் உலகறிந்த விடயம். இதனால் பலர் காயமடைந்த, கொல்லப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

இதிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், தமிழீழமே வந்தாலும் அது ஏகாதிபத்திய நலன் காக்கும் இன்னொரு சிறிலங்காவாகத் தான் இருக்கும். 100%. தமிழர்களின் அரசாக இருந்தாலும், அதுவும் ஒரு அரசு தான். அரசு என்பதே ஒரு அடக்குமுறை இயந்திரம் தான். 



நோர்வேயில் இராணுவப் பயிற்சி வீடியோ:

Sunday, July 30, 2023

வட இலங்கையில் தொடரும் வர்க்கப் படுகொலைகள்!

 


யாழ்ப்பாணம், கல்வியங்காட்டில் ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்து வந்த ஒரு 17 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்துள்ளார். பொலிஸ் இதை தற்கொலை என்று பதிவு செய்தாலும், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மரணமடைந்த சிறுமியை வேலைக்கு வைத்திருந்தவர்கள், அவர் தனது குடும்பத்தினருடன் தொடர்பு வைக்க அனுமதிக்கவில்லை. மாதம் 25000 ரூபாய் சம்பளம் பேசி விட்டு 5000 மட்டும் கொடுத்திருக்கிறார்கள். வேலை வழங்குநர் மீது பல விதமான குற்றச்சாட்டுகளை சுமத்தும் வாய்ப்பிருந்தும், சிறுமியின் குடும்பத்தினர் இரத்தப் பணத்தை வாங்கிக் கொண்டு வாயை மூடியுள்ளனர். ஏனென்றால் சக்தி வாய்ந்த பணக்காரர்களை ஏழைகளால் எதிர்த்து நிற்க முடியாது. அதிகார வர்க்கம் எப்போதும் பணக்காரர்கள் பக்கமே நிற்கும்.

இதை தற்கொலை என்று பார்த்தாலும், அந்த வீட்டில் வேலைக்கு சேர்ந்து 4 மாதங்களில் ஒரு பணிப்பெண் தற்கொலை செய்கிறாள் என்றால், அந்தளவுக்கு கொடுமைகள் நடந்திருக்க வேண்டும். அதுவும் ஒரு கொலை தான். அப்படி இருந்தும் பொலிஸ் அந்த பணக்காரர் மீது வழக்கு பதிவு செய்யப் படவில்லை.

இலங்கையில் பல இடங்களில் பணக்கார வீடுகளில் வேலை செய்யும் பணிப்பெண்கள் மர்மமான முறையில் இறப்பதும் அதை தற்கொலை என்று சொல்லி மறைப்பதும் நடந்து கொண்டிருக்கின்றன. இரு வருடங்களுக்கு முன்னர் கூட ஒரு அமைச்சர் வீட்டில் வேலை செய்த சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அது ஒரு முஸ்லிம் அமைச்சர் என்பதாலும், இறந்தது மலையக தமிழ்ச் சிறுமி என்பதாலும், அப்போது இந்த விடயம் பரபரப்பாக பேசப்பட்டது. ஏனைய மரணங்கள் ஊடக கவனத்தை பெறுவதில்லை.

யாழ்ப்பாணத்தில் நடந்த (தற்)கொலை சம்பவத்தின் பின்னர் பொலிஸ் அதனை மேற்கொண்டு விசாரிக்காமல் வழக்கை முடித்துக் கொண்டுள்ளது. அந்த சம்பவத்தில் பலியானது ஓர் ஏழைச் சிறுமி. குற்றம்சாட்டப்பட்டவர்கள் பணக்காரர்கள். எப்போதும் பொலிஸும், நீதித் துறையும் பணக்காரர் பக்கமே நிற்கும்.

அது போகட்டும். சிங்கள பேரினவாத அரசின் கொடுமைகளுக்கு எதிராக தைரியமாக பேசக் கூடிய தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் இதைக் கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதேன்? பாதிக்கப்பட்ட தமிழ்ச் சிறுமிக்காக நீதி கோரிப் போராடாதது ஏன்? குற்றவாளியும் ஒரு தமிழர் என்பதாலா? பணக்கார வீடென்றால் "தமிழ் வீரம்" புற்றுக்குள் பதுங்கிக் கொள்ளும்.

சிங்கள இராணுவத்துடன் நேருக்கு நேர் மோதும் துணிச்சல் மிக்க தமிழ்தேசிய ஊடகவியலாளர் யாரும் இப்படியான விடயங்களை பற்றி பேசாமல் இருப்பது ஏன்? குறைந்த பட்சம் அங்கு என்ன நடந்தது என்று ஆராய்ந்து மக்களுக்கு அறியத் தர வேண்டாமா?

ஏனென்றால் இவர்கள் எல்லோரும் பணக்கார வர்க்க அடிவருடிகள். இலங்கையில் இருப்பதும் வர்க்கப் பிரச்சினை தான். அதாவது பணக்கார வர்க்கமும், அதன் அடிவருடிகளும் ஏழைகள் மீதான ஒடுக்குமுறைகளை மறைப்பதற்காக இனம், தேசியம் என்று பிதற்றிக் கொண்டிருப்பார்கள். ஆனால் தப்பித்தவறி ஒருபோதும் ஒரே தேசியத்தின் உள்ளே நடக்கும் வர்க்கப் படுகொலைகள் பற்றி வாயே திறக்க மாட்டார்கள். ஏன் என்று கேட்டால் பதில் வராது. பணக்கார அடிவருடித்தனத்தை வெளியே சொல்ல முடியுமா?

Friday, July 28, 2023

கொழும்பு இடதுசாரிகளின் கறுப்பு ஜூலை நினைவுகூரலில் குழப்பம்

 


கொழும்பு நகரில் ஜூலை 83 படுகொலைகளின் 40வது ஆண்டு நினைவு தினத்தன்று நடந்த ஆர்ப்பாட்டம் கலவரப் பொலிசால் தடுக்கப்பட்டது. வலதுசாரி சிங்கள இனவாத அமைப்பினர் "புலிகள் வந்து விட்டனர்" என்று கோஷமிட்டு குழப்பத்தை உண்டாக்கினார்கள். (https://twitter.com/Rajeevkanth14/status/1683139031352344578?s=20)

இதில் முக்கியமான விடயம் என்னவெனில் பல்வேறு சிங்கள இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து இந்த நினைவுதின பேரணியை ஒழுங்கு படுத்தி இருந்தன. நினைவுகூரலை தடுத்த ராவண பலய போன்ற இனவாத அமைப்பினரின் இடையூறானது, தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அங்கு சிங்கள இடதுசாரிகளுக்கும், சிங்கள வலதுசாரிகளுக்கும் இடையிலான பகை முரண்பாடு கூர்மையடைந்து வருவதையும் வெளிப்படுத்தியது.

இந்த இடத்தில் தமிழ் ஊடகங்கள், தமிழ்த்தேசிய அரசியல் ஆர்வலர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? சிங்கள இடதுசாரிக் கட்சிகள் நடத்திய நினைவுகூரல் என்பதை அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டிருக்க வேண்டாமா? அந்த விடயத்தை இருட்டடிப்பு செய்ய வேண்டிய அவசியம் என்ன?

இது தான் தமிழ்த்தேசிய வலதுசாரிகளின் அயோக்கிய அரசியல். அன்று முதல் இன்று வரை இலங்கையின் இனப்பிரச்சினையை இனவாத கண்ணோட்டத்தில் மட்டுமே சித்தரித்து வருகின்றனர். அவர்கள் ஒருபோதும் சிங்கள இடதுசாரிகளுடன் கைகோர்க்க விரும்பியிருக்கவில்லை. காலங்காலமாக இடதுசாரிகளை தமிழர்களுக்கு எதிரானவர்களாக சித்தரித்து அவதூறு பிரச்சாரங்கள் செய்து வந்தனர். இன்றும் அத்தகைய அவதூறுகளுக்கு குறைவில்லை.

ஆனால் இதே தமிழ்த்தேசியவாதிகள், தமிழினப்படுகொலைக்கு காரணமான சிங்கள வலதுசாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து இயங்குவார்கள். மக்கள் மத்தியில் எதிரிகள் போன்று காட்டிக் கொள்வார்கள். உள்ளுக்குள் பல "டீல்"கள் நடக்கும். இந்த விடயத்தில் புலிகள் ஒன்றும் நாணயமாக நடந்து கொள்ளவில்லை. எல்லா வலதுசாரிகளும் கபடவேடதாரிகள் தான். இவர்களால் ஒரு நாளும் தமிழ் மக்களின் விடுதலையை பெற்றுத் தர முடியாது.

Wednesday, July 26, 2023

கறுப்பு ஜூலை 83: வெளிவராத தகவல்கள்

 


அன்றும் கொழும்பு நகரம் வழமை போல இயல்பாகக் தான் இருந்தது. முதல் நாள் யாழ்ப்பாணத்தில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 13 இராணுவ வீரர்களின் உடல்கள் பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்தனர். அங்கு கூடியிருந்த சிங்களவர்கள் மத்தியில் தமிழர்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரம் செய்யப்பட்டது. யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்டவர்கள் ஆயுதமேந்திய படையினராக இருந்தாலும், இனவாதிகளின் பார்வையில் அவர்கள் சிங்களவர்கள். அதற்கு பழிக்குப்பழியாக தமிழர்களை கொல்ல வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

அடுத்த சில மணித்தியாலங்களில் கத்தி, பொல்லுகளுடன் குண்டர்கள் தயார்படுத்தப் பட்டனர். பொரளை மயானத்தின் அருகிலேயே சேரிகளும் இருந்த படியால் உடனடியாக காடையர்களை அணிதிரட்டுவது சிரமமாக இருக்கவில்லை. அந்த குழுவுக்கு தலைமை தாங்கியவர்கள் ஆளும் கட்சியான UNP அரசியல்வாதிகள். தமது அரச அதிகாரத்தை பயன்படுத்தி தமிழர்களின் வீடுகள், வணிக நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை எடுத்து வந்திருந்தனர்.

பொரளைக்கு அருகில் அரச அலுவலர்களின் குடியிருப்புகள், மற்றும் மேல் தட்டு மத்திய தர வர்க்க குடியிருப்புகளும் இருந்தன. அதனால் அந்த பகுதிகளில் தமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று அங்கு வாழ்ந்த தமிழர்களும் நம்பி இருந்தனர். ஆனால் அவர்கள் தான் முதலில் தாக்கப் பட்டனர். அதனால் முன்னெச்சரிக்கையாக எங்கேயும் தப்பி ஓட முடியவில்லை. பலர் உயிரோடு வீட்டுக்குள் வைத்து கொளுத்தப் பட்டனர். வாகனங்கள் எரிக்கப்பட்டன. நிறைய பெண்கள் வன்புணர்வுக்கு ஆளானார்கள். கொல்லப்பட்டவர்களில் வயதானவர்கள், பெண்கள், சிறுவர்களும் அடங்குவார்கள்.

பல வருட காலம் நட்போடு பழகிய சிங்களவர்கள் தம்மிடம் அடைக்கலம் கோரிய தமிழர்களுக்கு உதவ மறுத்து கதவைச் சாத்தினார்கள். சிலர் அடைக்கலம் தருவதாக ஏமாற்றி காடையர்களிடம் பிடித்துக் கொடுத்தனர். இருப்பினும் துணிந்து அடைக்கலம் கொடுத்த சிங்களவர்களும் உண்டு. உண்மையான நண்பனை ஆபத்துக் காலத்தில் தான் அறியலாம்.

அன்று நடந்த படுகொலைகளை அரச படைகள் வேடிக்கை பார்த்தன. அவர்களிலும் உதவ மறுத்தவர்கள் தான் பெரும்பான்மை. இருப்பினும் சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.

அன்றைய நாட்களில் தமிழர்களுக்கு எல்லா இடங்களிலும் ஆபத்து காத்திருந்தது. வீட்டுக்குள் இருப்பது ஆபத்து. ஆனால் வெளியேறி வாகனத்தில் சென்றால் வழியில் மறிக்கப் படலாம். அவ்வாறு வாகனத்தில் இருந்து இறக்கப் பட்டு தெருவிலேயே அடித்துக் கொல்லப் பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

அன்றைய கலவரத்தில் 3000 பேரளவில் கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக வடக்கு கிழக்கிற்கு இடம்பெயர்ந்து சென்றனர். ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் நிலைமை சீரடைந்த பின்னர் பெரும்பாலானவர்கள் கொழும்புக்கு திரும்பிச் சென்றனர். கணிசமான அளவில் வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர்.

ஜூலை படுகொலையின் விளைவாக, வடக்கு கிழக்கில் இருந்து இளைஞர்கள் பெருந்தொகையாக போராளிக் குழுக்களில் இணைந்து கொண்டனர். அது வரை காலமும் சில பத்துப் பேர்களுடன் இயங்கி வந்த இயக்கங்களின் உறுப்பினர் எண்ணிக்கை ஆயிரக்கணக்காக உயர்ந்தது. ஏனைய இயக்கங்களை விட தமிழீழ விடுதலை இயக்கம் என்ற TELO வில் உறுப்பினர்கள், குறிப்பாக ஆயுதமேந்திய போராளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்தளவு தூரம் பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் TELO வை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

ஜூலை படுகொலைகளின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்த கைதிகளும் கொல்லப்பட்டனர். இவர்களில் TELO இயக்க தலைவர்களான தங்கத்துரை, குட்டிமணி ஆகியோர் அப்போது நாடு முழுவதும் பிரபலமாக இருந்த அரசியல் கைதிகள். அவர்களது வழக்குகள் தொடர்பான விபரங்கள் தமிழ் பத்திரிகைகளில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்தன. அன்று அவர்களைப் பற்றி கேள்விப் பட்டிராத தமிழர்களே இல்லையெனலாம்.

அதனால் வெலிக்கடை சிறைக்குள் படுகொலை செய்யப் பட்டவர்களில் குட்டிமணி, தங்கத்துரை பெயர்கள் இருந்தமை மிகப் பெரிய அதிர்வலைகளை உண்டு பண்ணியது. அதனால் எழுந்த அனுதாபம் அல்லது கோபம், பெருமளவு இளைஞர்களை TELO வில் சேர வைத்தது. இதை யாரும் மறுக்க முடியாது.

ஏற்கனவே TELO தமிழ்நாட்டு/இந்திய அரசியல் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த படியால் திடீரென அதிகரித்த உறுப்பினர்களுக்கு பயிற்சியளிக்கும் வசதி, வாய்ப்புகளை கொண்டிருந்தது.

ஜூலை படுகொலைகளுக்கு வெறுமனே இனவாத சக்திகள் மட்டுமே காரணம் என்பது, படுகொலைகளுக்கு வெள்ளையடித்து உண்மையான குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் செயல். இதனை 99% வலதுசாரி தமிழ்த்தேசியவாதிகள் தெரிந்து கொண்டே செய்கிறார்கள்!

கறுப்பு ஜூலை குறித்து பக்கச்சார்பற்ற ஆய்வை செய்தால் சில உண்மைகள் தெரிய வரும். மிகக் கவனமாக திட்டமிட்டு தமிழர்களின் வணிக நிறுவனங்கள் அனைத்தும் எரிக்கப் பட்டுள்ளன. சிறிய கடைகள் முதல் பெரும் முதலாளிகளின் வர்த்தக நிறுவனங்கள் கொள்ளையடிக்கப் பட்டு, கொளுத்தப் பட்டுள்ளன. மில்லியன் கணக்கான விற்பனைச் சரக்குகள் நாசமாக்கப் பட்டன. இதன் மூலம் சிங்கள முதலாளிகள் தமது போட்டியாளர்களான தமிழ் முதலாளிகளை ஒரே அடியில் ஒழித்துக் கட்டினார்கள். அதற்கு இனக்கலவரம் உதவியிருக்கிறது. அன்றிருந்த EROS இயக்கம் ஜூலைப் படுகொலைகள் தொடர்பாக இதே போன்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தது.

ஜூலை 83 படுகொலைகளுக்கு முன்னர் கொழும்பில் மூன்றில் ஒரு பங்கு தமிழர்களின் முதலீடு இருந்தது. சில்லறை வணிகம், மொத்த வியாபார நிறுவனங்களில் அரை வாசி தமிழர்களுடையவை. முரண்நகையாக இவர்களில் பெரும்பாலானோர் ஜூலைப் படுகொலைகளுக்கு மூல காரணமாக இருந்த UNP அரசாங்கம் கொண்டு வந்த பொருளாதார கொள்கைகளால் நன்மை அடைந்தவர்கள்.

தமிழர்களின் வணிக நிறுவனங்கள் எரிக்கப் பட்டதால் முதலீட்டு இழப்பு, அந்நிய செலாவணி குறைவு, இவற்றுடன் சிங்கள முதலாளிய வர்க்கத்திற்கும் ஓரளவு பாதிப்பு உண்டானது. (உதாரணமாக கடன்கள் திரும்பி வராது.) இருப்பினும் தமிழ் முதலாளிகள் இல்லாத வெற்றிடத்தை சிங்கள முதலாளிகளும், வெளிநாட்டு முதலாளிகளும் ஈடுகட்டினார்கள். அமெரிக்க தூதுவராலயம் அன்றைய UNP அரசாங்கமும் மீது நம்பிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டது. எண்பதுகளின் கடைசில பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இன்றைக்கும் எல்லோரும் இதை சிங்களவர்கள் தமிழர்களை படுகொலை செய்தார்கள் என்று இனவாத கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறார்கள். இதற்கு பின்னால் உள்ள சின்ன மீனைப் பெரிய மீன் சாப்பிடும் காட்டுமிராண்டி முதலாளித்துவம் யார் கண்ணுக்கும் புலப்படாது. அது தெரியக் கூடாது என்பதற்கு தான் இனவாத பரப்புரைகள் செய்யப் படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களும் அதையே நம்பும் பொழுது அரசின் நிகழ்ச்சிநிரலுக்குள் வந்து விடுகின்றனர்.