Showing posts with label வட மாகாண சபை. Show all posts
Showing posts with label வட மாகாண சபை. Show all posts

Monday, October 14, 2013

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஒரு திறந்த மடல்


மேன்மை தங்கிய முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு,

தாங்கள் முதலமைச்சராக பதவியேற்ற தருணம் பார்த்து, வட மாகாண தமிழ்ப் பெண்களின் அவல நிலை குறித்த அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. (Turning to sex work in Sri Lanka’s north; http://www.irinnews.org/report/98919/turning-to-sex-work-in-sri-lanka-s-north) அதனை தொகுத்து வெளியிட்ட அரசு சாரா தொண்டு நிறுவனம், முதலமைச்சரான தங்கள் கடமையை உணர்த்துவதற்காகவே, தக்க தருணம் பார்த்து வெளியிட்டிருப்பதாகத் தெரிகின்றது. இன்று வட மாகாணத்தில் வாழும் ஆயிரக் கணக்கான இளம் பெண்கள், குடும்ப வறுமை காரணமாக பாலியல் தொழில் செய்து பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

"சமூகத்தில் இழிவாக கருதப் படும்", பாலியல் தொழில் செய்வோரின் எண்ணிக்கை பெருகுவதற்காக, அந்த சமூகம் தான் வெட்கப் பட வேண்டும். மாறாக, அபலைப் பெண்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முடியாது. ஈழத்தில் கடந்த முப்பதாண்டு காலமாக நடந்த போரின் விளைவாக, பல்லாயிரக் கணக்கான பெண்கள் விதவைகளாகி உள்ளனர். அதனால், பல சமூகப் பிரச்சினைகள் எழுவது இயல்பு. உள்நாட்டுப் போர் நடந்த அனைத்து உலக நாடுகளுக்கும் பொதுவான பிரச்சினை அது. ஈழப்போர் முடிந்த பின்னர் நடைபெறும் வட மாகாண சபைத் தேர்தலில், தங்களையும், தங்கள் கட்சியையும் வாக்காளப் பெருமக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவு செய்துள்ளனர். அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தாங்கள் காப்பாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

தங்களது மாகாண சபையில், ஆனந்தி சசிதரன் என்ற பெண் உறுப்பினரும் இடம்பெற்றுள்ளார். போரினால் பாதிக்கப் பட்ட பெண்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக, "பெண்கள் நலத்துறை அமைச்சு" ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு ஆனந்தியை அமைச்சராக்கலாம். ஆனந்தி கூட போரினால் பாதிக்கப் பட்ட ஒருவர் என்பது கூடுதல் தகுதியாக கொள்ளப்படும். அதன் மூலம், வட மாகாணப் பெண்களை பாலியல் தொழில் என்ற நரகத்தில் இருந்து மீட்டெடுக்கும் வழி வகைகளை ஆராயலாம். கொடூரமான போர் காரணமாக, கணவரை, அல்லது தகப்பனை இழந்த பெண்களே, குடும்பச் சுமையை தாங்க முடியாமல் பாலியல் தொழிலுக்கு செல்கின்றனர்.

யாழ்ப்பாண பழைமைவாத சமூகத்தில், பொதுவாக ஒரு ஆண் தான் வேலைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமப்பது வழக்கம் என்பது தாங்கள் அறிந்ததே. குடும்பத்திற்காக உழைத்து வருமானத்தை ஈட்டித் தந்த, ஆண் துணையை இழந்த பெண்கள், குழந்தைகளை பராமரிக்க வசதியின்றி, பாலியல் தொழில் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். கணவன் போரில் மரணமடைந்ததால், அல்லது கானாமல்போனதால் பல பெண்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். வறுமையும், குழந்தைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பும், அவர்கள் பாலியல் தொழிலை தெரிவு செய்யத் தூண்டிய காரணிகளாக உள்ளன.

வட மாகாணத்தில் நிலவும், அரை நிலப்பிரபுத்துவ, அரை முதலாளிய சமுதாயம், ஆண்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முனைப்புக் காட்டுகின்றது. அது சமூகத்தில் அரைவாசிப் பங்கினரான பெண்களை அடுப்படிக்குள் தள்ளுகின்றது. பெண்கள் வேலைக்கு போவதை தடுத்து, அவர்கள் வீட்டில் இருந்து குடும்பத்தை பராமரிப்பதற்காக படைக்கப் பட்டவர்களென போதிக்கின்றது. பெண்ணை வேலைக்கு அனுப்பாத மரபு, இன்றைக்கும் ஒரு சிறந்த சமூக விழுமியமாக பின்பற்றப் படுகின்றது. ஆகவே, தாங்கள் அமைக்கப் போகும் பெண்கள் நலத்துறை அமைச்சு இது போன்ற தடைகளை தகர்த்தெறியும் என்று நம்புகிறேன்.

மேலும், ஊருக்கு ஊர் முகாம்களை போட்டு தங்கியுள்ள சிங்கள படையினர், வட மாகாணத்தில் பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் காரணியாக உள்ளனர். அதனை அம்பலப் படுத்துவதன் மூலம், படை முகாம்களை அகற்றுமாறு அரசை நிர்ப்பந்திக்க முடியும். வட மாகாணத்தில் இருந்து இராணுவத்தை அகற்றுவது, உங்களது குறிக்கோளாக இருந்ததை தேர்தல் கால பிரச்சாரங்களின் போது அறிய முடிந்தது. கூடவே, "இராஜதந்திர போர்" பற்றியும் குறிப்பிட்டிருந்தீர்கள். நல்லது. உலகில் பிற நாடுகளில், அன்னிய நாட்டுப் படைகள் முகாமிட்டிருப்பதால், பாதிக்கப் பட்டிருக்கும் மக்களுடன் ஒன்று சேர்ந்து, தங்களது இராஜதந்திரப் போரை முன்னெடுக்கலாம். அதனால் தமிழர்களின் உரிமைப் போர் சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லப் படும் வாய்ப்புண்டு.

உதாரணத்திற்கு, ஜப்பானில் ஒகினாவா தீவில் இருக்கும் அமெரிக்க படையினரின் முகாம், அந்தத் தீவின் கலாச்சார-பொருளாதார சீர்கேடுகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பாக, ஈழத்திற்கும், ஜப்பானுக்கும் இடையிலான தொடர்பை பயன்படுத்திக் கொள்ளலாம். ஜப்பானில், இரண்டாம் உலகப் போர் முடிந்து அறுபதாண்டுகள் ஆகியும், அந்த நாட்டை ஆக்கிரமித்த அமெரிக்கப் படைகள், இன்னமும் அங்கு நிலை கொண்டுள்ளன. குறிப்பாக, ஒக்கினாவா தீவு அமெரிக்க படைகளின் மேலாண்மையின் கீழ் உள்ளது. அங்கிருக்கும் அமெரிக்கப் படை முகாமை அகற்ற வேண்டுமென்று கோரி, ஒக்கினாவா தீவு மக்கள் பல வருடங்களாக போராடி வருகின்றனர். ஜப்பான், இலங்கைக்கு கொடை வழங்கும் முக்கிய நாடென்பதால், தங்களது இராஜதந்திரப் போரை ஜப்பானில் இருந்து ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே பல தடவைகள், ஜப்பான் ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தமையும், தங்களுக்கு நினைவிருக்கலாம்.

வட மாகாணத்தில், முன்னொருபோதும் இல்லாத அளவு கட்டுமானப் பணிகள் நடக்கின்றன. அதற்காக தென்னிலங்கையில் இருந்து பெருமளவு சிங்களத் தொழிலாளர்கள் அழைத்து வரப் படுகின்றனர். இந்தத் தொழிலாளர்களும், பாலியல் தொழில் சந்தையில் நுகர்வோராக இருப்பதாக, தொண்டு நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. மாகாண சபை அதிகாரத்தை கைப்பற்றியவுடன், தொழில் முனைவோரை கட்டுப்படுத்தும் சட்டங்கள் கொண்டு வரலாம். அந்நிய அல்லது தென்னிலங்கை நிறுவனங்கள், குறிப்பிட்டளவு வட மாகாணத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றலாம். இதன் மூலம், வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன், பாலியல் தொழிலும் நலிவடையும்.

வட மாகாணத்தில் நிலை கொண்டுள்ள படையினரும், கட்டுமானத் தொழிலாளர்களும் சிங்களவர்கள் தான். அதை சுட்டிக் காட்டி,  "சிங்களவர்கள் எமது மண்ணை சுரண்டி, எமது மக்களை நாசமாக்குகிறார்கள்..." என்று இனவாதம் பேசலாம். ஆனால், பிரச்சினை அத்தோடு முடியப் போவதில்லை. கருப்பு-வெள்ளை அரசியல் தேர்தலில் வாக்குகளை பெற்றுக் கொடுக்கலாம். ஆனால், மக்களுக்கு எந்தத் தீர்வையும் கொண்டு வராது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து விடுமுறையை கழிக்க வரும் தமிழர்களும், வட மாகாணத்தில் பாலியல் தொழில் அதிகரிப்பதற்கு காரணம் என்று சொல்லப் படுகின்றது. துரதிர்ஷ்டவசமாக, எமது இனவாத கோஷங்களை அவர்களுக்கு எதிராக திருப்பி விட முடியாது.

புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும்பாலும் தமிழ் தேசியத்தில் தளராத பற்றுக் கொண்டவர்கள். தாங்கள் உறுப்பினராக உள்ள தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை ஆதரிப்பவர்கள். ஆகவே, "வழிதவறிய ஆடுகளை வழிக்கு கொண்டு வருவது" கடினமான காரியமல்ல. புலம்பெயர் தமிழர்களின் பணம் பாலியல் தொழிலை வளர்ப்பதற்குப் பதிலாக, ஆக்கபூர்வமான முயற்சிகளில் செலவிட வைக்கலாம். அவர்கள் தமது பணத்தை, வட மாகாணத்தில் பல்வேறு தொழிற்துறைகளில் முதலிட வேண்டும் என்று ஊக்குவிக்கலாம். புலம்பெயர் தமிழர்களின் முதலீட்டுக்கு, குறிப்பாக பெண்களை பணிக்கமர்த்தும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளிக்கலாம். மாகாண சபையால் இடம் ஒதுக்கிக் கொடுக்கலாம். இது போன்ற ஆக்கபூர்வமான முயற்சிகளின் மூலம், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும்.

வட மாகாண சபையில், கல்விக்கென ஒரு அமைச்சு உருவாக்கப் பட்டுள்ளதாக அறிகிறேன். யாழ்ப்பாணத்தில் புரையோடிப் போயுள்ள பழமைவாத சிந்தனைகளை, கல்வி அறிவு புகட்டுவதன் மூலம் களைய முடியும். "தமிழர் கலாச்சாரம்" என்ற பெயரில், பழைமைவாத பெருச்சாளிகளின் "தாலிபான் கலாச்சாரம்" கோலோச்சுவதை, உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

பெண் கல்வி ஊக்குவிக்கப் பட வேண்டும். விசேடமாக பெண்களுக்கென தொழிற்கல்வி வழங்கும் நிறுவனங்களை மாகாண சபையே உருவாக்கலாம். அதைத் தவிர, விதவைகள் மறுமணம் செய்து கொள்வதும் ஊக்குவிக்கப் பட வேண்டும். அதற்காக பொருளாதார கட்டமைப்பிலும், பண்பாட்டுத் தளத்திலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரம் என்று, கிடைக்காத உரிமைகளுக்காக ஏங்குவதை விட, கையில் இருக்கும் அதிகாரங்களை சரிவர பயன்படுத்துவது சாலச் சிறந்தது. அந்த சாதனையை விக்னேஸ்வரன் தலைமை தாங்கும் வட மாகாண சபை நிகழ்த்திக் காட்டும் என்று நம்புவோமாக.

இப்படிக்கு, 
- ஒரு வட மாகாண வாக்காளர்

*****************************

வட மாகாண சபை, முதலைமைச்சர் விக்னேஸ்வரன் தொடர்பான முன்னைய பதிவுகள்:
5."தமிழ் மேட்டுக்குடி தேசியக் கூட்டமைப்பு" விக்னேஸ்வரனின் உரை
4.விக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் போன தமிழர்கள் விரக்தி
3.தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு
2.மாகாண சபைத் தேர்தல் : வடக்கே வீசும் புயல்
1.வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்

Tuesday, October 08, 2013

விக்னேஸ்வரனின் வர்க்கப் புத்தி, தோற்றுப் போன தமிழர்கள் விரக்தி


வட மாகாண சபைத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற காலத்தில், யாழ்ப்பாணத்தில் இருந்த வாக்காளப் பெருமக்களிடம் கருத்துக் கேட்டிருந்தேன். அவர்களில் பலர் தெரிவித்த பொதுவான கருத்துகளை, அப்படியே இங்கே தருகிறேன்:
"இந்தத் தேர்தல்களில் எமக்கு நம்பிக்கை இல்லை. அரசியல் கட்சிகளின் தலைவர்களும், போட்டியிடும் வேட்பாளர்களும், தேர்தல் காலங்களில் மட்டும் தான் மக்களை சந்திக்க வருகிறார்கள். தேர்தல் முடிந்த பின்னர் யாருமே இந்தப் பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. நாமாக தேடிச் சென்றாலும் அவர்களை சந்திக்க முடியாது. ஆனாலும், வாக்களிக்க வேண்டிய கடமை எமக்குண்டு. நாங்கள் ஓட்டுப் போடா விட்டால், எமது வாக்குகளை வேறு யாராவது போட்டு விடுவார்கள். அதற்காகத் தான் நாம் வாக்களிக்கச் செல்கிறோம்."
வீட்டுக்கு வீடு வாசல் படி. எல்லா நாடுகளிலும், தேர்தல் காலங்களில் மக்களின் மனநிலை ஒன்றாகத் தான் இருக்கின்றது.

இந்த தடவை நடந்த வட மாகாண சபைத் தேர்தலிலும், தமிழ் மக்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். வழமை போல சிங்கள முதலாளித்துவத்தின் பிரதிநிதியான ராஜபக்சவும், தமிழ் முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளான தமிழ் தேசியக் கூட்டமைப்பும் வெற்றி பெற்றுள்ளனர். ஒரே முதலாளித்துவ வர்க்கத்தின், இரண்டு வேறு மொழிகளைப் பேசும் இரு பிரிவினர், தமக்குள் முரண்பாடுகள் இருப்பதாக காட்டிக் கொள்வதற்கு தேர்தல் எனும் நாடகம் உதவுகின்றது. அதிலே சிங்கள வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு சிங்கள தேசியமும், தமிழ் வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு தமிழ் தேசியமும் பயன்படும்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் இரண்டு தரப்பினரும் எதிரிகளாக காட்டிக் கொள்வார்கள். தேர்தல் முடிந்தவுடன் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இலங்கை பிரிட்டிஷ் காலனியாகவிருந்து, சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து இந்த நாடகம் மீண்டும் மீண்டும் அரங்கேற்றப் படுகின்றது. இதைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள் ஜனங்கள், ஒருவரை ஒருவர் வெறுப்பார்கள். இனப்பகை கொண்டு ஒருவரை ஒருவர் கொன்று குவிப்பார்கள். இறுதியில் அதனால் இலாபமடையும் முதலாளித்துவத்திற்கு, தேசியவாத முகமூடி தேவைப் படுகின்றது. ஈழப்போரில் தோற்கடிக்கப் பட்ட தமிழ் மக்கள், மீண்டும் வட மாகாண சபைத் தேர்தலிலும் தோற்கடிக்கப் பட்டுள்ளனர். எப்போதும் இறுதி வெற்றி சிங்கள-தமிழ் தரகு முதலாளிகளுக்கானது, என்ற விதியை மட்டும் யாராலும் மாற்ற முடியவில்லை.

இந்தத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்கள் உண்மையில் தோற்றவர்கள் அல்ல, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உண்மையில் வென்றவர்களும் அல்ல. அவரவருக்கு ஏற்ற இடங்களில் இருக்கின்றனர். தேர்தல் தோல்வியால் டக்ளஸ், அங்கஜனின் வர்த்தகத் துறைக்கு, அரசியல் அதிகாரத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எல்லாமே வழமை போல நடந்து கொண்டிருக்கிறது. வெற்றி பெற்ற கூட்டமைப்பு உறுப்பினர்கள் ஏற்கனவே நிறைய வருமானம் தரும் வேலை பார்த்தவர்கள். அதற்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. இப்போது மேலதிகமாக அரசாங்க ஊதியம், சலுகைகள் வேறு கிடைத்து வருகின்றது. தமிழ் மக்கள் தான் பாவம், அவர்களுக்குத் தான் ஒன்றுமேயில்லை.

விக்னேஸ்வரன், மகிந்த ராஜபக்ச முன்னியிலையில் முதலமைச்சராக சத்தியப் பிரமாணம் எடுத்த சம்பவம் முற்றிலும் எதிர்பாராத ஒன்றல்ல. கடைசியில் விக்னேஸ்வரனும் தனது "வர்க்கப் புத்தியை" காட்டி விட்டார், என்று வேண்டுமானால் திட்டலாம். விக்னேஸ்வரன் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், கொழும்பு மேட்டுக்குடி சமூகத்தின் அங்கத்தவர். கூட்டமைப்பு, விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யும் பொழுதே, அவரது வர்க்கப் பின்னணியும் பகிரங்கமாகியது. அதற்குப் பிறகு, "அவரை நோவானேன், கவலைப் படுவானேன்?" இனம் இனத்தோடு தானே சேரும்?

கொழும்பில் வாழும் மேட்டுக்குடித் தமிழர்கள், எல்லாக் காலங்களிலும் தமிழ் இன உணர்வு அற்று வாழ்ந்தவர்கள். (தனிப்பட முறையில் எனக்கு சிலரைத் தெரியும். அவர்கள் வீட்டில் ஆங்கிலம் மட்டுமே பேசுவார்கள்.) அவர்களுக்கு, தமது வர்க்க அடையாளம் மட்டுமே முக்கியமாகப் படுவதுண்டு. அதனால் தான், தீவிர வலதுசாரி தமிழ் தேசியவாதிகளால் வெறுக்கப்படும், "சிங்களவரும், இடதுசாரியும், அமைச்சருமான" வாசுதேவ நாணயக்கார குடும்பத்துடன் விக்னேஸ்வரன் சொந்தம் கொண்டாட முடிந்தது. ஏனெனில், இருவரும் ஒரே வர்க்கத்தை சேர்ந்தவர்கள். அது தான் முக்கியம்.

இதெல்லாம் சாதாரண தமிழ் மக்களால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விடயங்கள். அதற்குக் காரணம் இன முரண்பாடல்ல, வர்க்க முரண்பாடு. "சிங்களவர்களோடு சொந்தம் கொண்டாடுவதில், விக்னேஸ்வரன் குடும்பம் மட்டும் விதிவிலக்கல்ல. சந்திரிகா குமாரதுங்கவின் மகளும் ஒரு தமிழரை மணந்து கொண்டார். பண்டாரநாயக்க குடும்பத்தில் பல தமிழர்கள் சம்பந்தம் செய்துள்ளனர். இவர்கள் எல்லாம் சாதாரண தமிழர்கள் அல்ல. வசதி படைத்த, உயர்சாதியில் பிறந்த, மேட்டுக்குடித் தமிழர்கள். அவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது.

தென்னிலங்கையில் உள்ள சிங்கள சுதந்திரக் கட்சியின் மறு வார்ப்புத் தான், வட இலங்கையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பும். இரண்டுமே ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள். அது சிங்கள இனவாதம் பேசி வாக்கு சேகரித்தால், இது தமிழ் இனவாதம் பேசி வாக்குச் சேகரிக்கின்றது. அதனை சிங்கள முதலாளிகள் ஆதரித்தால், இதனை தமிழ் முதலாளிகள் ஆதரிக்கின்றனர். இரண்டுமே அடிப்படையில் முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் தான். அதனால் தான் எப்போதும் மக்கள் ஏமாற்றப் படுகின்றனர். அதனால் தான் எல்லாத் தேர்தல்களிலும் மக்கள் தோற்றுப் போகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தமிழ் மக்கள் விழிப்புணர்வு பெறப் போவதில்லை. "எத்தனை தவறுகள் விட்டாலும், கூட்டமைப்புக்கு மாற்று கிடையாது" என்ற கருத்து, அடுத்த தேர்தலிலும் முன் வைக்கப் படும். உண்மையில் அது மக்களின் கருத்தல்ல. தமிழ் முதலாளிய வர்க்கத்தினால் திட்டமிட்டு நடத்தப் படும் பிரச்சாரம். ஏனென்றால், பாமர மக்களால் தேர்தலில் போட்டியிட்டு வெல்ல முடியாது. அவர்களிடம் அந்தளவு பணபலம் கிடையாது.

கடந்த முப்பதாண்டு காலம் நடந்த ஈழப்போரில் மட்டுமே, அந்த நிலைமை தலைகீழாக மாறியது. அரை நிலப்பிரபுத்துவ சமூகத்தில், அதுவோர் புரட்சிகர மாற்றம். அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூட, அரசியலில் தலைமைப் பதவிகளுக்கு வந்தார்கள். உதாரணத்திற்கு, தமிழ்ச் செல்வனை குறிப்பிடலாம். ஆனால், புலிகளின் அழிவுடன், தமிழ் உழைக்கும் மக்களுக்கு கிடைத்த வாய்ப்புகளும் பறிக்கப் பட்டு விட்டன. இன்று மாகாண சபையில் மெத்தப் படித்தவர்களையே அமைச்சர்களாக்குவேன் என்று விக்னேஸ்வரன் அடம்பிடிக்கிறார். இது பெரும்பான்மை உழைக்கும் வர்க்கத் தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய தோல்வி.

(தேர்தல் பிரச்சாரத்திற்காக கூட்டமைப்பு வெளியிட்ட துண்டுப்பிரசுரம்.  தென்மராட்சிப் பகுதியில் இதனை விநியோகித்துக் கொண்டிருந்த நான்கு கட்சித் தொண்டர்களை இராணுவம் கைது செய்து அடைத்து வைத்துள்ளது.)
"பிரபாகரன் ஒரு மாவீரன். மகிந்தவுக்கும் அது தெரியும்." என்று வல்வெட்டித்துறையில் நடந்த கூட்டம் ஒன்றில் விக்னேஸ்வரன் பேசினார். அந்த உரையை துண்டுப்பிரசுரமாக அடித்து விநியோகித்த கூட்டமைப்பு தொண்டர்களை கைது செய்த இராணுவம், விக்னேஸ்வரனுக்கு கிட்டவும் நெருங்கவில்லை. அந்த உரையை, முதன் முதலாக வெளியிட்ட உதயன் பத்திரிகை நிறுவன முதலாளி கைது செய்யப் படவில்லை. இதனை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டி எழுதி இருந்தேன். அந்தளவுக்கு, இலங்கையில் இன்றைக்கும், சிங்கள-தமிழ் மேட்டுக்குடியினருக்கு இடையிலான வர்க்க ஒற்றுமை, இறுக்கமாக உள்ளது.

விக்னேஸ்வரனின் "புலி ஆதரவு உரை", அடித்தட்டு மக்களையும், குறிப்பாக வல்வெட்டித்துறை வாசிகளையும் கவர்வதற்காக நிகழ்த்தப் பட்டது. உண்மையில், உயிரோடு இருக்கும் புலிகளை விட, இறந்த புலிகள் தனக்குப் பயனுள்ளதாக இருப்பார்கள் என்பது விக்னேஸ்வரனுக்கும் தெரியும். ஆனால், இனி வருங்காலத்தில் புலிகள் போன்ற ஆயுதபாணி இயக்கம் தோன்றுவதை, விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மேட்டுக்குடிக் கும்பல் அனுமதிக்கப் போவதில்லை.

தமது வர்க்க நலன்களுக்கு ஆபத்து வருமென்றால், ஸ்ரீலங்கா அரசுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, "தீவிரவாதிகளை" ஒடுக்கவும் தயங்க மாட்டார்கள். இதெல்லாம் ஈழ வரலாற்றில் ஏற்கனவே நடந்துள்ளன. ஈழத் தமிழர்களின் அரசியல் மீண்டும் எழுபதுகளை நோக்கிப் பயணிக்கின்றது.

__________________________

வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பான முன்னைய பதிவுகள்:

3.தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு
2.மாகாண சபைத் தேர்தல் : வடக்கே வீசும் புயல்
1.வட மாகாண சபைத் தேர்தல் - ஒரு முன்னோட்டம்