Showing posts with label தமிழர் விடுதலைக் கூட்டணி. Show all posts
Showing posts with label தமிழர் விடுதலைக் கூட்டணி. Show all posts

Monday, September 05, 2016

ஆலாலசுந்தரம் முதல் அமிர்தலிங்கம் வரை : அரசியல் படுகொலைகளின் மர்மம்


நான் அப்போது யாழ் இந்துக் கல்லூரியில் மாணவனாக படித்துக் கொண்டிருந்தேன். எனது வகுப்புத் தோழன் ஒருவன், அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் ஆலால்சுந்தரத்தின் மகன். கைத்தொலைபேசி தொழில்நுட்பம் வளர்ந்திராத காலகட்டம் அது. இருப்பினும் யாழ்ப்பாணத்தில் எந்த அரசியல் கொலை நடந்தாலும், எமது கல்லூரிக்கு தகவல் கிடைத்து விடும்.

ஆகவே, 3 செப்டம்பர் 1985 நடந்த ஆலாலசுந்தரம் கொலையும் எமது கல்லூரிக்கு முதலில் தெரிந்ததில் வியப்பில்லை. மேலும் ஓர் உறவினர் வந்து ஆலாலசுந்தரத்தின் மகனை அழைத்துக் சென்ற பொழுது, அன்று அங்கு என்ன நடந்தது என்பதையும் அறிவிக்கத் தயங்கவில்லை. அன்று ஆலாலசுந்தரத்துடன், இன்னொரு கூட்டணி பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கமும் (இன்றைய புளொட் தலைவர் சித்தார்த்தனின் தந்தை) சுட்டுக் கொல்லப் பட்டனர். அதனால் இருவரின் மரண ஊர்வலமும் ஒன்றாக நடந்தது. இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஆயிரக் கணக்கான மக்களுக்குள், எமது பாடசாலை மாணவர்களும் சங்கமாகினர்.

அன்று நடந்த அரசியல் கொலைகளுக்குப் பின்னர், யார் அதைச் செய்திருப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், 1984 - 1985 காலப்பகுதியில், யாழ் குடாநாடு முழுவதும் ஈழ விடுதலை இயக்கங்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. அன்று செல்வாக்கு செலுத்தி வந்த ஐந்து பெரிய இயக்கங்களுக்கு தெரியாமல் எந்தவொரு கொலையும் நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆரம்பத்தில் புலிகள் மீதே சந்தேகம் விழுந்தது. ஏனெனில் 1982 ம் ஆண்டில், புலிகள் தான் பல கூட்டணி உறுப்பினர்களை கொன்றிருந்தனர்.

இருப்பினும், அன்று வரையில் பாராளுமன்ற உறுப்பினர் யாரும் கொல்லப் படவில்லை. டெலோ இயக்கமே அந்த அரசியல் படுகொலைகளுக்கு காரணம் என்பது சில நாட்களின் பின்னர் தெரிய வந்தது. ஆலாலசுந்தரத்தின் வீடு கல்வியங்காட்டில் இருந்தது. கல்வியங்காடு முழுவதும் டெலோவின் கோட்டையாக கருதப் பட்டது. ஆகவே டெலோவிற்கு தெரியாமல் அந்தக் கொலைகள் நடந்திருக்க வாய்ப்பில்லை. அடுத்த கேள்வி, அவர்கள் என்ன காரணத்திற்காக கொல்லப் பட்டனர்?

இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாதிரி, அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியும் மக்கள் மத்தியில் நற்பெயரை இழந்திருந்தது. இருப்பினும், பொது மக்களால் "திருடர்கள்" என்று அழைக்கப் பட்ட (அன்றைய தேசியத் தலைவர்) அமிர்தலிங்கம் போன்றோர் இந்தியாவில் (தமிழ்நாட்டில்) பாதுகாப்பாக வாழ்ந்து வந்தனர். யாழ்ப்பாணத்தில் தங்கி விட்ட, ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் போன்றோர் ஆயுதபாணி இயக்கங்களுக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டனர்.

கொலை செய்யப் பட்ட ஆலாலசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோர் புலிகளுடனும், டெலோவுடனும் (பெரும்பாலும் வலதுசாரிய கொள்கை காரணமாக) நெருங்கிய நட்புறவு பேணி வந்தனர். அந்தக் காலத்தில் அது பெருமைக்குரிய விடயம். மேலும் டெலோ மாதிரி, கூட்டணியும் இந்தியா ஆதரவுக் கட்சி தான். அதனால், கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்வதால், யாருக்கு என்ன என்ன நன்மை ஏற்பட முடியும்?

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடை காண நீண்ட காலம் எடுத்தது. இன்று வரையில் யாரும், அன்று நடந்த கொலைகளுக்கு உரிமை கோரவில்லை. இன்றுள்ள, டெலோவின் எஞ்சிய தலைவர்கள் கூட மௌனம் சாதிக்கின்றனர். ஆயினும், அன்றைய படுகொலைகள் இந்திய உளவுத்துறை RAW வினுடைய உத்தரவின் பேரில் நடந்ததாக சொல்கிறார்கள். அதற்கு என்ன காரணம்?

அந்த அரசியல் படுகொலைகள் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் திம்புப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. இந்தியாவின் அனுசரணையில், பூட்டானில் நடந்த பேச்சுவார்த்தைகளில், ஐந்து ஆயுதபாணி இயக்கங்களுடன், கூட்டணியும் கலந்து கொண்டது. இந்திய அரசு, "மிதவாதிகளான" கூட்டணி பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்வதை ஆதரித்தது. இருப்பினும், அன்று ஈழத் தமிழர்களின் ஏகபோக பிரதிநிதிகளாக கருதப் பட்ட கூட்டணியினர் தான், பலமான கோரிக்கைகளை முன்வைப்பார்கள் என்று இந்தியா அஞ்சியது, ஈழப் போர் தொடங்கிய 1983 ம் ஆண்டு வரையில், தமிழ்ப் பிரதேசங்களில் கூட்டணி தான் மிகப் பலமான அரசியல் சக்தியாக விளங்கியது.

ஜனநாயக வழியில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட கூட்டணியை விட, ஆயுதபாணி இயக்கங்களை இலகுவாக கட்டுப்படுத்தலாம் என்று இந்தியா நம்பியது. பலமான கூட்டணியை விட, பலவீனமான கூட்டணி தனது சொல்லுக்கு அடிபணிந்து நடக்கும் என்று கணக்குப் போட்டது. கொலை நடந்த நேரம், யாழ்ப்பாணத்தில் இருந்த அத்தனை கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்களையும் கொல்வதற்கு திட்டம் தீட்டப் பட்டதாம். ஆயினும், டெலோவின் வடமராட்சிப் பொறுப்பாளர் தாஸ் மறுத்து விட்டதால், அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் பிழைத்தனர்.

ஈழத் தமிழர்களின் பிரதிநிதிகளை தனக்கு சாதகமாக வளைக்கும் நோக்கில், சிலரை பலப்படுத்துவதும், வேறு சிலரை பலவீனப் படுத்துவதுமாக, இந்தியா பல சூழ்ச்சிகளை செய்து வந்துள்ளது. அண்மையில், ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக வெளியான நூலில் கூட (The Assassination Of Rajiv Gandhi; Neena Gopal), RAW உளவாளிகள், விடுதலைப் புலிகளின் தலைமை வரையில் ஊடுருவி இருந்ததை நிச்சயப் படுத்துகின்றது. புலிகள் மட்டுமல்லாது, ஒவ்வொரு ஈழ விடுதலை இயக்கத்திலும், தலைமையில் ஒரு RAW உளவாளி இருந்துள்ளார்.

1987 ம் ஆண்டு, இந்திய இராணுவம் ஈழப் பகுதிகளை ஆக்கிரமித்திருந்த காலத்தில் கூட, தமிழர் விடுதலைக் கூட்டணியை தனியாக இயங்க அனுமதிக்கவில்லை. இந்தியா வெளிப்படையாகவே தனக்கு விசுவாசமாக இருந்த EPRLF, ENDLF ஆகியவற்றை ஆதரித்தது. இந்தியா புதிதாக உருவாக்கிய ENDLF, பகிரங்கமாகவே இந்திய இராணுவத்தின் துணைப் படையாக இயங்கியது. இருப்பினும், அவர்களுக்கு ஈழத் தமிழரின் ஆதரவு பூஜ்ஜியமாக இருந்தது. ஆகவே, இந்தியா ஆயுதங்களை வழங்கி, EPRLF இணை முன்னுக்கு கொண்டு வந்தது.

இந்திய- இலங்கை ஒப்பந்தம் உருவாக்கிய வடக்கு-கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலிலும், அதற்குப் பிறகான தேர்தல்களிலும், தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரின் கீழ், முன்னாள் ஆயுதபாணி இயக்கங்களை சேர்த்துக் கொள்ளப் பட்டனர். அதாவது, பிற்காலத்தில் புலிகள் உருவாக்கிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னோடியாக அது இருந்தது. இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்திய இராணுவக் காலத்தில் EPRLF இன் யாழ் பிரதேசத் தலைவராக பல அடாவடித்தனங்களை புரிந்தவர். மண்டையன் குழு என்ற பெயரில் பல புலி உறுப்பினர்களை கொன்றவர்.

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவனும் இல்லை. ஆரம்ப காலத்தில், விடுதலைப் புலிகள் இயக்கம், தம்மை கூட்டணியின் இராணுவப் பிரிவு மாதிரி காட்டிக் கொண்டனர். பிற்காலத்தில், அவர்களாகவே தமது "தமிழ்த் தேசிய தலைவர்களுக்கு" எதிராகத் துப்பாக்கியைத் திருப்பினார்கள். சிங்கள இராணுவத்திற்கு எதிராக போரிட்டு வந்த புலிகள், இந்திய இராணுவத்தை விரட்டுவதற்காக சிங்கள இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்தனர்.

பிரேமதாச ஜனாதிபதியாக இருந்த காலம், புலிகளுக்கும், அரசுக்கும் இடையிலான தேனிலவுக் காலம் என்று அழைக்கப் படுகின்றது. ஒரு காலத்தில் "பயங்கரவாதிகளாக" கருதியவர்களை, சிறிலங்கா அரசே அழைத்து அரவணைத்தது. இந்திய இராணுவத்துடன் போரிட்டுக் கொண்டிருந்த புலிகளுக்கு, தென்னிலங்கையில் அடைக்கலம் கொடுத்தது. அந்த நேரத்தில் தான் தமிழர் விடுதலைக் கூட்டணி முற்றாக அழித்தொழிக்கப் பட்டது.

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்: முன்னொரு காலத்தில், ஈழத் தமிழ் தேசியவாதிகளின் தேசியத் தலைவராக போற்றப் பட்டவர். பின்னொரு காலத்தில், அதே தமிழ்த் தேசியவாதிகளால் துரோகியாக தூற்றப் பட்டவர்!

எண்பதுகளின் தொடக்கத்தில், தமிழ் தேசியர்கள் அனைவரும், மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டாகப் பிளவு பட்டனர். அமிர்தலிங்கம் வெளியே தன்னை ஒரு மிதவாதத் தலைவராக காட்டிக் கொண்டாலும், அவரும் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தவர் தான். ஏற்கனவே ஒரு தடவை, தனது கட்டுப்பாட்டின் கீழ் தனியாக ஆயுதபாணி இயக்கம் வைத்திருக்கும் முயற்சி தோல்வியில் முடிந்திருந்தது.

ஈழப்போர் தொடங்கியதும், அமிர்தலிங்கம் தலைமை தாங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஆயுதபாணி இயக்கங்களால் துரோகிகளாக தூற்றப் பட்டனர். யாழ்ப்பாணத்தில் பல கூட்டணி உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப் பட்டதால், தலைவர்கள் கொழும்பில் இருந்து கொண்டு அரசியல் நடத்தி வந்தனர்.

1989 ம் ஆண்டு, பிரேமதாச ஆட்சிக் காலத்தில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கொழும்பு வந்த புலிகள், அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகிய இரண்டு கூட்டணி தலைவர்களையும் சுட்டுக் கொன்றனர். இந்திய இராணுவம் இருந்த காலத்தில் நடந்த அந்தக் கொலைகளுக்கு அரசும் உடந்தையாக இருந்தது. ஏனெனில், தீர்வுத் திட்டங்களில் இந்தியாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான தலைவராக என்றென்றும் அமிர்தலிங்கமே இருந்தார்.

அந்தக் காலத்தில் கூட்டணி ஒரு "புலி எதிர்ப்புக் கட்சியாக" இயங்கி வந்தாலும், தமது தலைவரின் மரணத்தை நினைவுகூர முடியாத அளவிற்கு அடங்கிக் கிடந்தனர். 2001 ம் ஆண்டு, "புலி எதிர்ப்புக் கட்சிகளை" ஒன்று சேர்ந்த புலிகள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற புதிய கட்சியை உருவாக்கினார்கள். அதற்குப் பிறகு, சம்பந்தன் போன்ற கூட்டணியினர், தமது தலைவர் அமிர்தலிங்கத்தின் பெயரையும் மறந்து விட்டனர்.

தற்போது புலிகள் இல்லாத வெற்றிடத்தில், கூட்டமைப்பு தன்னை பழைய கூட்டணியின் தொடர்ச்சியாக காட்டிக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது. அன்றைய கூட்டணி அரசியலுக்கும், இன்றைய கூட்டமைப்பு அரசியலுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இல்லை என்பது ஒரு காரணம். அதே நேரம், ஒரு காலத்தில் துரோகிகளாக தூற்றப் பட்ட மிதவாதிகள், தமிழர்களின் தலைமையை கைப்பற்றிக் கொண்டதை பிரகடனம் செய்ய வேண்டி இருப்பது இன்னொரு காரணம். 


Monday, April 15, 2013

ஈழத் தமிழரின் தாகம் "தமிழீழ சோஷலிசக் குடியரசு"!



முதலாளிய சார்பு, வலதுசாரி தமிழ்த் தேசியவாதிகளால், காலங்காலமாக மறைக்கப் பட்டு வரும், "இருட்டடிப்பு செய்யப்பட்டு வரும், ஈழத் தமிழரின் வரலாறு" இது.  1977 பொதுத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் தமக்கு  "சோஷலிசத் தமிழீழம்" வேண்டுமென வாக்களித்தார்கள். விஞ்ஞான சோஷலிச அடிப்படையில் அமையப் போகும் தமிழீழக் குடியரசு, பல முற்போக்கான சட்டங்களை இயற்றி இருந்தது. நாட்டின் பொருளாதாரமும், பிரதானமான உற்பத்தி சாதனங்களும் அரசுடைமையாக இருக்கும். மனிதனை மனிதன் சுரண்டுவதும், சாதிப் பாகுபாடும் ஒழித்துக் கட்டப்படும். முஸ்லிம்களுக்கு பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையோடு கூடிய தன்னாட்சிப் பிரதேசம். சிங்களவர்களுக்கும் தமது மொழியில் கல்வி கற்கும் உரிமை. சர்வதேச மட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுடனும், சிங்கள முற்போக்கு சக்திகளுடனும் நட்புறவு பேணப்படும். 

" 1977 ம் ஆண்டு, இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் தமக்கு தமிழீழம் வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானித்து விட்டார்கள்..."  இவ்வாறு இன்றைக்கு பல தமிழீழ ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.  தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் போட்டியிட்ட, தமிழர் விடுதலைக் கூட்டணி, அந்தத் தேர்தலில் மொத்தம் 18 ஆசனங்களை வென்றிருந்தது. அதனால், இலங்கையில் இரண்டாவது பெரிய கட்சியாக மாறி, எதிர்க்கட்சியாக பாராளுமன்றத்தில் அமர்ந்திருந்தது. அந்தளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில், தமிழ் மக்கள் எத்தகைய தமிழீழத்திற்காக வாக்களித்து இருந்தார்கள்? வெறும் தமிழீழத்திற்கா? முதலாளித்துவ தமிழீழத்திற்கா? அல்லது சோஷலிசத் தமிழீழத்திற்கா? இன்றைய தமிழ் தேசியவாதிகளிடம் கேட்கப்படும், அந்த ஒரேயொரு கேள்விக்கு மட்டும், எந்தப் பதிலும் கூறாமல் ஓடி ஒளிக்கின்றனர்.

நிச்சயமாக, முதலாளித்துவ பொருளாதார கட்டமைப்பை ஆதரிக்கும், வலதுசாரி தமிழ் தேசியவாதிகளுக்கு, இந்தக் கேள்வி கசக்கவே செய்யும். ஏனென்றால், அவர்கள் ஒரு வரலாற்றுத் திரிபை செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது முதலாளிய கொள்கைகளை, தமிழ் மக்கள் மேல் திணிப்பதற்காக, அன்று தமிழர் விடுதலைக் கூட்டணியும், தமிழீழ விடுதலைப் புலிகளும் முன்மொழிந்த "சோஷலிசத் தமிழீழம்" என்ற கருத்தியலை மறுத்தும், மறைத்தும் பேசி வருகின்றனர். 1977 க்குப் பின்னர் பிறந்த தலைமுறையை சேர்ந்தவர்களுக்கு, அந்த வரலாறு தெரிந்திருக்கப் போவதில்லை. அதனால், அவர்களின் மூளைக்குள் "தமிழரின் தாகம் முதலாளித்துவ தமிழீழம்" என்ற கருத்தியலை இலகுவாக திணிக்க முடிகின்றது. 

1977 பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, அன்று மக்களுக்கு விநியோகித்த தேர்தல் விஞ்ஞாபனத்தை இங்கே தருகிறேன். அதில் தமிழீழம் பற்றி என்ன எழுதியிருக்கிறது என்பதை, மிகவும் கவனமாக வாசிக்கவும். "1977 இலேயே,  ஈழத் தமிழர்கள், தமிழீழம் வேண்டுமென்று தீர்மானித்து விட்டார்கள்," என்ற கூறுபவர்கள்; அந்தத் தீர்மானம் சோஷலிசத் தமிழீழத்திற்கானது என்ற உண்மையையும் தெரிந்து கொள்ள  வேண்டும். அதாவது, வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலைக் கூட்டணி மகாநாட்டில், தமிழீழமே முடிந்த முடிவு என்று தீர்மானிக்கப் பட்டிருந்தாலும், அதனை தமிழ் மக்கள் முன்னால் எடுத்துச் செல்லும் பொழுது, தமது இலட்சியம் ஒரு "சோஷலிசத் தமிழீழம்" என்று கூறினார்கள். ஏனெனில், சோஷலிசத்திற்கு மாற்றான எந்த அரசியல்-பொருளாதார கட்டமைப்பையும், தமிழ் மக்கள் அன்று ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்கவில்லை. 

*********

1977 ம் ஆண்டு, தமிழர் விடுதலைக் கூட்டணி (TULF) வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் இருந்து சில பகுதிகள்:

தமிழீழம் - ஒரு மதச்சார்பற்ற சோஷலிச நாடு 

முற்று முழுதான முடிவுடன் அறிவிக்கக் கூடிய, ஒரேயொரு மாற்று மட்டுமே உண்டு. எமது முன்னோரின் மண்ணை, நாம் மட்டுமே ஆள வேண்டும். சிங்கள ஏகாதிபத்தியம் எமது தாயகத்தில் இருந்து வெளியேற வேண்டும். தமிழர் விடுதலை கூட்டணியானது, 1977 பொதுத் தேர்தலை, சிங்கள அரசுக்கு தமிழ் தேசத்தை அறிவிப்பதற்கு கிடைத்த சந்தர்ப்பமாக பார்க்கின்றது. நீங்கள் கூட்டணிக்கு போடும் ஒவ்வொரு வாக்கும், சிங்கள மேலாதிக்கத்தில் இருந்து தமிழர் தேசத்தை விடுதலை செய்வதற்கானது என கருதப்படும். 

அதிலிருந்து, தமிழர் விடுதலைக் கூட்டணி இந்தத் தேர்தலில், தமிழர்களுக்கான தேசத்தை உருவாக்குவதற்கான கோரிக்கையை முன்வைக்கின்றது. ஒரு சுதந்திரமான, மதச் சார்பற்ற, சோஷலிசத் தமிழீழம், பூகோளரீதியாக தமிழ் பேசும் மக்களின் பூர்வீக மண்ணை உள்ளடக்கி இருக்கும். 

அதே நேரத்தில், தமிழீழத்தின் பின்வரும் அரசியல், சமூக, பொருளாதார கட்டமைப்புகள் பாதுகாக்கப்படும் என்பதை தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவிக்கின்றது. தமிழரின் தேசமான ஈழம் பின்வரும் நிபந்தனைகளின் கீழ் அமைக்கப்படும். 

1. தமிழீழத்தின் பிரஜைகளாக அங்கீகரிக்கப் படுவோர்: 
  • (அ) தமிழீழப் பிரதேசத்திற்குள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும்          அனைத்து மக்களும்.
  • (ஆ) இலங்கையில் எந்தப் பகுதியிலும் வாழும் தமிழ் பேசும் நபர், தமிழீழத்தின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். 
  • (இ) இலங்கை வம்சாவளியினரான தமிழ் பேசும் மக்கள், உலகில் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும், தமிழீழத்திற்கான குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். 

2. அரசியல் அதிகாரம் பரவலாக்கப்படும். ஆகவே, எந்தவொரு பிரதேசமும் அல்லது மதமும், இன்னொரு பிரதேசம், அல்லது மதத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு இடமளிக்கப் பட மாட்டாது. சுவிட்சர்லாந்தில் உள்ள சமஷ்டி அமைப்பு போல, பல்வேறு பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு, பிராந்திய தன்னாட்சி அதிகாரம் உறுதிப் படுத்தப்படும். விசேடமாக, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழீழத்தின் பகுதியில், ஒரு தன்னாட்சிப் பிரதேசம் அமைக்கப்படும். அவர்களது சுயநிர்ணய உரிமையும், பிரிந்து செல்லும் உரிமையும் மதிக்கப்படும். 

3. ஒன்றில் தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமோ, அல்லது முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசமோ, ஒன்றை மற்றது காலனிப் படுத்தவோ, அந்தப் பிரதேச மக்களை சிறுபான்மையினர் ஆக்கவோ  அனுமதிக்கப் பட மாட்டாது. 

4. தீண்டாமைக் கொடுமை, சமூக அந்தஸ்து அல்லது பிறப்பால் தாழ்ந்தவராக கருதப்படும் அநீதி முற்றாக ஒழிக்கப் படும். அந்தக் குற்றங்களை புரிவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும். 

5. தமிழீழ அரசு மதச் சார்பற்றது. அதே நேரத்தில் அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் சமமான அரச பாதுகாப்பும், உதவியும் வழங்கப்படும். 

6. தமிழீழ அரசின் உத்தியோகபூர்வ மொழியாக, தமிழ் மொழி இருக்கும். அதே நேரம், நாட்டில் வாழும்  சிங்களவர்கள் தமது மொழியில் கல்வி கற்பதற்கும், தமது சொந்த மொழியிலேயே அரசுடன் தொடர்பு கொள்ளவும் சுதந்திரம் வழங்கப்படும். சிங்கள நாட்டினுள் வசிக்கும் தமிழர்களின் மொழி உரிமையை மதிக்க வேண்டுமென சிங்கள அரசிடம் வேண்டப் படும்.

7. தமிழீழம் ஒரு விஞ்ஞான சோஷலிச நாடாக இருக்கும்.
  • (அ) மனிதனை மனிதன் சுரண்டுவது சட்டத்தால் தடை செய்யப்படும்.  
  • (ஆ) உழைப்பின் மேன்மை பாதுகாக்கப்படும். 
  • (இ) தனியார் துறை சட்ட வரையறைக்குள் அனுமதிக்கப்பட்டாலும், உற்பத்தி சாதனங்களும், விநியோகங்களும்  அரச உடைமைகளாக இருக்கும் அல்லது அரசினால் கட்டுப்படுத்தப் படும். 
  • (ஈ)குத்தகை விவசாயிகளுக்கும், தனியார் காணிகளில் குடியிருப்போருக்கும் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். 
  • (உ)தமிழ் தேசமான ஈழத்தின் பொருளாதார அபிவிருத்தி, சோஷலிச திட்டமிடல் அடிப்படையில் இருக்கும்.
  • (ஊ) ஒரு தனிநபரோ, அல்லது குடும்பமோ சேர்க்கக் கூடிய அளவு செல்வத்தின் உச்ச வரம்பு தீர்மானிக்கப்படும். 

8. தமிழீழ சோஷலிசக் குடியரசானது அணி சேராக் கொள்கையை பின்பற்றும்.  அதே நேரத்தில், சர்வதேச மட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுக்கும், ஜனநாயக விடுதலை இயக்கங்களுக்கும் தனது ஆதரவை வழங்கும். 

9. தமிழீழ அரசானது, சிங்கள நாட்டில் உள்ள முற்போக்குச் சக்திகளுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ளும்.  இரண்டு தேசங்களும் எதிர்நோக்கும் பரஸ்பர பிரச்சினைகள், சகோதரதத்துவ அடிப்படையில் தீர்த்து வைக்கப்படும். 

விடுதலை - எவ்வாறு அடையப்படும்? 

சுயநிர்ணய அடிப்படையின் கீழ், இறைமையுள்ள தாயகத்தை அமைக்கும் பணியை தமிழ் தேசம் பொறுப்பெடுத்துக் கொள்ளும். இதனை சிங்கள அரசுக்கும், உலகிற்கும் அறிவிப்பதற்கான ஒரே வழி, தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வாக்களிப்பது ஆகும். இந்த வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள், இலங்கை தேசிய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அதே நேரம், "தமிழீழ தேசிய பேரவை" ஒன்றையும் அமைத்துக் கொள்வார்கள். அந்த அமைப்பு, தமிழீழ அரசமைப்பு சட்டத்தை எழுதுவதுடன், அதனை நடைமுறைப் படுத்துவதன் மூலம் தமிழீழத்தின் சுதந்திரத்தை உருவாக்கிக் கொள்ளும். அதனை சாத்வீகமான வழியிலோ, அல்லது போராட்டம் ஒன்றின் மூலமோ அமைத்துக் கொள்ளும். தமிழீழ தேசியப் பேரவையானது, பொருளாதார அபிவிருத்தி, சமூக நலன், பிரதேச பாதுகாப்பு, கல்வி போன்றவற்றை எழுதி அமுல் படுத்தும். தமிழீழத்தின் சுதந்திரத்திற்கு சர்வதேச அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

-Tamil United Liberation Front
General Election Manifesto (July 1977)

முழுமையான ஆவணத்தை வாசிப்பதற்கு:
Tamil United Liberation Front General Election Manifesto 1977